நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

18.1.11

பக்தியின் வைராக்கிய வடிவம்

அரிவாட்டாய நாயனார்
திரு நட்சத்திரம்:
தை- 4 - திருவாதிரை
(ஜன. 18)

சோழ நாட்டில் கணமங்கலம் என்னும் ஊரில் தாயனார் என்ற வேளாளர் வாழ்ந்து வந்தார். சிவனடியாரான அவர், அனுதினமும் சிவாலயங்களில் அன்னதானத்துக்குத் தேவையான நெல், காய்கறிகள், ஊறுகாய் போன்றவற்றை அளித்து வந்தார்.

நாளடைவில்  அவரது செல்வம் கரைந்து ஏழ்மை அடைந்தார். எனினும் சிவத்தொண்டைத் தொடர்ந்து புரிய வேண்டும் என்பதால், கூலி வேலை செய்து பொருளீட்டி, சிவ கைங்கர்யம் செய்து வந்தார். அவருக்கு ஏற்ற மனையாளாக விளங்கிய அவர்தம் மனைவியும் தாயனாரின் சிவப்பணியில் மனமொப்பி உடன் சேவை செய்து வந்தார்.

ஒருநாள், கூலிவேலையில் கிடைத்த   வருமானத்தில் ஆலயத்திற்குத் தேவையான பொருட்களை தண்டலைச்சேரி சிவன் கோயிலுக்கு சுமந்து வந்தபோது, உடல் மயங்கி நிலை தடுமாறி கீழே விழுந்தார் தாயனார். அவர் சுமந்துவந்த  பொருட்கள் மண்ணில் விழுந்து  நாசமாயின.  வெறும் கையுடன் ஈசனின் ஆலயத்திற்குச் செல்ல விரும்பாத அவர்,  அரிவாளால் தன்னை மாய்த்துக்கொள்ள முயன்றபோது ஈசன்  தடுத்தாட்கொண்டார்.

தனது பக்தனின் மன உறுதியால் மகிழ்ந்த இறைவன் தாயனாருக்கும் அவர்தம் மனையாளுக்கும் அம்மையுடன் தரிசனம் கொடுத்து அருளினார். அதன் பயனாக இருவரும் முக்தி பெற்றனர். சிவ கைங்கர்யத்திற்கு இடையூறு ஏற்பட்டதற்காக தன்னையே அரிவாளால் வெட்டிக்கொல்லத்  துணிந்ததால், அவர் அரிவாட்டாய நாயனார் என்ற சிறப்புப்பெயர் பெற்றார். வைராக்கிய பக்திக்கு என்றும் உதாரணமாக புகழப்படும் பேறினைப்  பெற்றார் அரிவாட்டாயர்.

காண்க:
அரிவாட்டாய நாயனார் (விக்கி)
கணமங்கலம்- அரிவாட்டாயர் அவதாரத் தலம்
தண்டலைச்சேரி தலவரலாறு
திருத்தொண்டர் புராணம்
பெரியபுராணச் சொற்பொழிவு
பெரிய புராணம் (திண்ணை)
அரிவாட்டாய நாயனார் புராணம்
நாயன்மார் வாழ்க்கை வரலாறு (ஒலி-ஒளி)
தேவாரம் (ஒலிபெயர்ப்பு)
ARIVATTAYAR
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக