நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்
நட்புப் பூக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நட்புப் பூக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15.12.16

சோவுக்கு அஞ்சலி

 
சோ ராமசாமி  (அக்டோபர் 5, 1934 - டிசம்பர் 7, 2016)


பிரபல பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகரும், நடிகருமான ‘சோ’ ராமசாமி (Cho Ramaswamy) கடந்த டிச. 7-ம் தேதி காலை காலமானார். அவருக்கு வயது 82.

கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சோ, சுவாசக் கோளாறு காரணமாக ஒரு சில முறை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், கடந்த வாரம் சுவாசப் பிரச்சினையினாலும், உணவு உட்கொள்ள முடியவில்லை என்பதாலும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அதிகாலை அவரது உயிர் பிரிந்தது.

*சென்னை மயிலாப்பூரில் (1934) பிறந்தவர். பி.எஸ். உயர் நிலைப் பள்ளியில் பயின்றார். விவேகா னந்தா கல்லூரியில் பி.எஸ்சி. பட்டம் பெற்றார். இளம் வயதில் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆட்ட நுணுக்கங் கள் பற்றி நன்கு அறிந்திருந்தார். பத்திரிகைகளில் விளையாட்டு விமர்சனங்களும் எழுதியுள்ளார்.

*சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். பட்டம் பெற்றார். உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பல நிறுவனங்களின் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

*20 வயதில் ஒரு நாடகம் பார்த்தபோது நடிப்பில் ஆர்வம் பிறந்தது. முதன்முதலாக ‘கல்யாணி’ என்ற நாடகத்தில் நடித்தார். ‘தேன்மொழியாள்’ என்ற நாடகத்தில் ‘சோ’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். பிறகு, அதுவே இவரது பெயராக நிலைத்துவிட்டது.

*நாடகங்கள் எழுதி, இயக்கி முக்கிய வேடத்தில் நடித்தார். இவரது ‘ஜட்ஜ்மென்ட் ரிசர்வ்டு’, ‘முகமது பின் துக்ளக்’, ‘சரஸ்வதி சபதம்’ உள்ளிட்ட நாடகங்கள் நாடு முழுவதும் 1,500 தடவைக்குமேல் மேடையேறின. ‘விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்’ என்ற நாடக நிறுவனத்தை 1954-ல் தொடங்கினார்.

*திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக அடியெடுத்து வைத்தார். நாகேஷ், எம்ஜிஆர், ஜெயலலிதா, ஆர்.எஸ்.மனோகர், எஸ்.ஏ.அசோகன், எம்.என்.நம்பியார் ஆகியோர் தனது நெருங்கிய நண்பர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். ‘நாடகம் எனது மேடைக் கூச்சத்தைப் போக்கியது. என் எழுத்தாற்றலை பட்டை தீட்டியது. ஆண்டுக்கணக்கில் தொடரும் பல நட்புகளை எனக்கு பெற்றுத் தந்துள்ளது’ என்று பெருமையுடன் கூறுவார்.

*‘துக்ளக்’ வார இதழை 1970-ம் ஆண்டும், ‘பிக்விக்’ என்ற ஆங்கில இதழை 1976-ம் ஆண்டும் தொடங்கினார். அனைத்து அரசியல் தலைவர்களுடன் நீண்டகால நட்புடன் இருந்தாலும், யாரைக் குறித்தும் விமர்சனம் செய்ய இவர் தயங்கியதே இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள், இல்லாதவர்கள், நண்பர்கள், நட்புறவு இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் துணிச்சலுடன் அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்டுவார்.

*தமிழக அரசியல், இந்திய அரசியல் மட்டுமல்லாமல் உலக அரசியல் ஞானமும் கொண்டவர். தமிழகம் மற்றும் இந்திய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த பல மாற்றங்களுக்குக் காரணமாக இருந்துள்ளார்.

*20-க்கும் மேற்பட்ட நாடகங்கள், நாவல்கள் எழுதியுள்ளார். இவரது ‘இந்து மகா சமுத்திரம்’ நூல் 6 தொகுதிகளாக வெளிவந்தது. நாடகம், நாவல், அரசியல், கலை, சமூகம் என பல்வேறு துறைகள் குறித்து ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.

*பல திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளார். ‘யாருக் கும் வெட்கமில்லை’, ‘உண்மையே உன் விலை என்ன’ உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். 4 தொலைக்காட்சிப் படங்களுக்கு கதை எழுதி, இயக்கி, நடித்துள்ளார். பேச்சிலும் எழுத்திலும், நையாண்டியும், நகைச்சுவையும் இரண்டறக் கலந்திருப்பது இவரது தனிச்சிறப்பு.

*மாநிலங்களவை உறுப்பினராக 1999-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். கோயங்கா விருது, நச்சிகேதஸ் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். பத்திரிகையாளர், நாடக ஆசிரியர், நடிகர், அரசியல் விமர்சகர் என பன்முகப் பரிமாணம் கொண்டவர் ‘சோ’ ராமசாமி.

தகவல்: தி இந்து

***

திரு. வண்ண நிலவனின் அஞ்சலி:

 ‘சோ’-கூர்மதியாளர்; ஆழ்ந்த மனிதாபிமானி


 சோவுடன் 1976-ம் ஆண்டு, ஜூன் மாதம் அவரது துக்ளக் பத்திரிகையில் பணிக்குச் சேர்ந்தேன். ஒரு பத்திரிகையாளனின் பணிகள் மற்றும் பொறுப்புகளை சோவுடன் பணியாற்றும்போதுதான் புரிந்து கொண்டேன்.

துக்ளக்கில் 1990-ம் ஆண்டு வரை நிரந்தரப் பணியாளனாக இருந்தேன். அதற்குப் பிறகு விலகி, வெளியிலிருந்து துக்ளக் பத்திரி கைக்கு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

சோ, முப்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி உள்ளார். சினி மாவில் முன்னணி கலைஞர்களுடன் நடித்தவர். எழுத்தாளர், விமர்சகர், சட்ட நிபுணர், சினிமா இயக்குநர் என பலப் பரிமாணங்கள் கொண்டவர். அபாரமான நகைச்சுவைத்திறன் உள்ளவர். சோவின் நகைச்சுவை யாரையும் புண்படுத்தாது. எந்த அரசியல் தலைவர்களை அவர் கிண்டல் செய்தாலும், அவர்களே அதை ரசிப்பதாக அவரது எழுத்து இருக்கும்.

துக்ளக்கில் வெளிவரும் கேள்வி- பதில் தொடங்கி ஒவ்வொரு கட்டு ரையையும் கண்ணில் விளக்கெண் ணெய் விட்டுப் பார்ப்பார்கள். அந்த மாதிரியான காலகட்டத்தில் அபாரமான துணிச்சலுடன் செயல் பட்டவராக சோ இருந்தார். ஏனெ னில் எந்த அரசியல்வாதியின் தய வையும் நாடாதவராக இருந்தார்.

மு.க.ஸ்டாலினுக்கு ஆறுதல்

1970-களின் ஆரம்பத்தில் திராவிடர் கழக மாநாடு நடைபெற்றது. அதையொட்டி சென்ற ஊர்வலத் தில், இந்துக்கள் வணங்கும் ராமன், கிருஷ்ணன் போன்ற தெய்வங்களை கேலிச்சித்திரங்களாக வரைந்து எடுத்துச் சென்றனர். அந்த ஊர் வலத்தைப் பற்றிய செய்தியுடன் புகைப்படங்களையும் துக்ளக் பத்திரிகையில் சோ விமர்சித்து வெளியிட்டிருந்தார்.

அப்போது கருணாநிதி தலைமையிலான அரசால், துக்ளக் பத்திரிகைப் பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதே நேரத்தில் அவசரநிலைக் காலகட்டத்தில் கருணாநிதியின் மகன் ஸ்டாலின் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சித்திர வதைக்கு உள்ளாக்கப்பட்டபோது நேரடியாக போய் பார்த்து ஆறுதல் சொன்னவரும் அவர்தான். அந்த சமயத்தில் திமுக அரசு கலைக்கப்பட்டதையும் அவர் எதிர்த்தார்.

கருணாநிதிக்கு பேச்சுரிமை யும் எழுத்துரிமையும் மறுக்கப் பட்டதால், அவரை இனி விமர்சிக்க மாட்டேன் என்ற நிலைப்பாட்டை எடுத்தார்.

காமராஜர், மொரார்ஜி தேசாய், கருணாநிதி தொடங்கி ஜெயலலிதா வரை அவருக்கு நல்ல நட்பு இருந்தது. அவர்களது செயல்பாடு களில் ஏதாவது குறைபாடோ விமர்சனமோ இருந்தால் அதை காட்டமாக விமர்சிப்பார். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, அவர் தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு கொடுத்த ஒரே நேர்காணல் துக்ளக் பத்திரிகைக்குத்தான். மொரார்ஜி தேசாய், ராஜீவ் காந்தி, ஜெயவர்த் தனே என பல அரசியல் தலைவர் களின் விரிவான நேர்காணலைச் செய்தவர்.

தனிப்பட்ட முறையில் அவருக்கு எவர் மீதும் காழ்ப்புணர்ச்சி இருந்த தில்லை. அரசியல் தலைவர்களின் குடும்ப விவகாரங்களையோ, தனிப் பட்ட விஷயங்களைப் பற்றியோ இதுவரை ஒரு செய்திகூட வெளி யிட்டதில்லை.

தடைகளைத் தகர்த்த படம்

துக்ளக் வந்த காலகட்டத்தில் புலனாய்வு பத்திரிகைகள் இல்லை. சமூக அரசியல் இதழாக வெளி வந்த ஒரே இதழ் அப்போது துக்ளக் தான். கூவத்தைச் சீரமைக்கப் போவதாக திமுக அரசு அறிவித்த போது, அதுதொடர்பான ஆய்வுக் கட்டுரைகளையெல்லாம் முதல் முதலாக வெளியிட்ட இதழ் துக்ளக் தான்.

சோ எழுதிய ‘முகமது பின் துக்ளக்’ நாடகத்தை சினிமாவாக எடுத்தனர். அந்தச் செய்தி தெரிந்த வுடன், திமுக ஆட்சியாளர்களால் படத்தில் வேலைசெய்த தொழில் நுட்பக் கலைஞர்கள் அச்சுறுத்தப் பட்டனர். அத்தனை இடைஞ்சல் களையும் மீறி படம் வெளியானது.

இலங்கைத் தமிழர் பிரச்சினை உட்பட பல்வேறு அரசியல் விவ காரங்களில் அவர் சொன்ன வார்த் தைகள் தீர்க்கதரிசனமானவை.

1977-ல் அவசரநிலைக் காலகட்டத்துக்குப் பிறகு ஜனதா ஆட்சி மத்தியில் வந்தபோது, அந்த ஆட்சி நிலைப்பட வேண்டுமென்று மிகவும் உழைத்தவர்களில் ஒருவர் சோ. ஆனால் சரண்சிங் போன்ற வர்களின் செயல்பாடுகளைப் பார்த்து சீக்கிரமே இந்த அரசு கவிழ்ந்துவிடும் என்பதைக் கணித்த வரும் அவர்தான்.

கர்னாடக இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அருமையான புகைப்படக்கலைஞர் அவர். துக்ளக் கில் வெளிவரும் கார்ட்டூன் களுக்காக அவர் ஓவியர்களுக்கு கொடுக்கும் ஐடியாக்கள் வெவ் வேறு கோணத்தில் ஆச்சரியப் படும்படியாக இருக்கும்.

அரசியல் தலைவர்கள் குறித்து எத்தனையோ விமர்சனங்களை வைத்திருந்தாலும் அவர்களுடன் தனிப்பட்ட நட்பையும் அக்கறை யையும் பேணி வந்தவர். எல்லா வற்றையும்விட அவர் பெரிய மனிதாபிமானி. அதனால் தான் அவரது விமர்சனங்களை யாரும் தவறாக எண்ணியதே இல்லை.

***

 திரு. வ.ரங்காச்சாரியின் கட்டுரை:
 
தமிழ் இதழியலின் அங்கதக் குரல்! 


தமிழ்ப் பத்திரிகையுலகில் ஒரு நபர் ராணுவம்போல ஆசிரியர்கள் செயல்பட்டு, நடத்தப்பட்ட பத்திரிகைகள் குறைவு. அதில் வெற்றிகரமான வெகுஜனப் பத்திரிகை 'துக்ளக்' மட்டுமே. அரசியல் என்றால் வெறும் அரசியல் மட்டுமே. நடுப்பக்கத்திலே, கடைசிப் பக்கத்திலே என்றுகூட சினிமா கவர்ச்சியைத் தொடாமல் பத்திரிகையைக் கொண்டுவர முடியும் என்று நிரூபித்தவர் சோ. லட்சக்கணக்கில் விற்பனையாகவில்லை என்றாலும், விசுவாசமான வாசகர்களை ஆயிரக்கணக்கில் தக்கவைத்துக் கொண்டது 'துக்ளக்'.

அங்கதச் சுவையைக் குழைத்து அவர் எழுதிய கட்டுரைகளை ஏற்காதவர்கள்கூட, நமட்டுச் சிரிப்போடு படித்துக் கடப்பதுண்டு. சோ இப்படித்தான் எழுதுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், அதை எப்படித் தர்க்கரீதியாகச் சொல்கிறார் என்று பார்ப்பதற்காகவே படிப்பார்கள். அவருடைய வாசகர்களில் சரிபாதிக்கும் மேல் அவர் கருத்தை ஏற்றவர்கள் அல்ல; என்றாலும் அந்நாட்களில் 'ஜெலுசில்', 'கேஸக்ஸ்', 'பைலக்ஸ்', 'டயானில்' மாத்திரைகளோடு பல பெரியவர்களுக்கு வாரந்தோறும் தேவைப்பட்டது 'துக்ளக்'.

தேர்தல் நடப்பதற்கு முன்னால், சோவின் கணிப்பு என்ன என்று அறிய வாங்கிப் படிப்பார்கள். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, தேர்தல் முடிவுகளுக்கு அவர் என்ன வியாக்கியானம் சொல்கிறார் என்று படிப்பார்கள். ஜெயேந்திரர் கைதா, ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்கா, நரேந்திர மோடியை நீக்கக் கோரி எதிர்க்கட்சிகள் போராட்டமா சோ இதில் கூறும் அரசியல் வாதம் என்ன, சட்டப்பூர்வமான கணிப்பு என்ன என்று ஆர்வமாகப் படிப்பார்கள்.

தமிழ்நாட்டில் தேசியக் கட்சிகள் வளர வேண்டும், அதிமுக தவிர மற்றவை செல்வாக் கிழக்க வேண்டும் என்று சோ மனதார விரும்பினார் என்றே தோன்றுகிறது. அதை அவர் மறைத்ததே இல்லை. காமராஜரின் பெருந்தன்மையை, நிர்வாகத் திறமையைக் காங்கிரஸ்காரர்களைவிட அதிகம் எழுதிக் குவித்தார். நேரு, காந்தி மீது மரியாதை கொண்டிருந்தார். ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய் மீது நன்மதிப்பை வாசகர்களிடையே ஏற்படுத்தினார். கம்யூனிஸ்ட் தலைவர்களைத் தனிப்பட்ட வகையில் பாராட்டிக்கொண்டே கம்யூனிஸக் கொள்கைகளைத் தாக்கி எழுதினார்.

எப்பேர்ப்பட்ட தலைவரையும் கேலிசெய்ய 'துக்ளக்' தயங்கியதே இல்லை. தலையங்கம், கட்டுரைகளில் சொல்ல முடியாதவற்றைக் கேள்வி - பதிலில் அல்லது எச்சரிக்கையில் தெரிவித்துவிடுவார். 'துக்ளக்' விலை உயர்கிறது என்று அறிவிக்காமல், நல்ல தரத்துக்கேற்ப மதிப்பை அதிகம் பெறுகிறது என்று ஊசியைச் செருகுவார். 'துக்ளக்' வாசகர்கள் விழாவில் எல்லோரையும் கேள்வி கேட்க அனுமதிப்பார். ஆனால், தருமசங்கடமான கேள்விகள் என்றால் தொடங்கும்போதே, 'கடைசியில் பதில் சொல்கிறேன்' என்பார் அல்லது அந்தக் கேள்வி கேட்கும் வாசகரையே பகடித்து காலிசெய்துவிடுவார்.

அவருடைய கேள்வி பதில் பகுதி 'துக்ளக்' பத்திரிகையில் பிரசித்தி பெற்றது. "சிக்கு மங்கு, சிக்கு மங்கு செச்ச பப்பா என்றால் என்ன?" என்று ஒரு கேள்வி. "சிக்கு என்ற அம்மாவுக்கும் மங்கு என்ற அப்பாவுக்கும் பிறந்த குழந்தை" என்று பதில் எழுதினார் சோ. "இந்த நேரத்தில் ராஜாஜி இருந்திருந்தால் என்ன கூறியிருப்பார்?" என்று ஒருவர் கேட்க, "குசே பசே தசே" என்று அர்த்தமற்ற கேள்விக்கு அர்த்தமற்ற பதிலைப் பொருத்தமாகத் தந்திருப்பார். "சுமை தாங்கி சாய்ந்தால் சுமை என்ன ஆகும்?" என்று ஒரு கேள்வி. "அதுவும் கொஞ்சம் சாயும்" என்பது பதில்.

ஆளும்கட்சியின் வட்ட, மாவட்டச் செயலர்கள் அதிகார மையங்களாக அரசு நிர்வாகத்தை ஆட்டிப்படைத்தபோது அவர் களுடைய அரசியல், பொருளாதார அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் வட்டமும் மாவட்டமும் பேசிக் கொள்கிறார்போல குறுங்கட்டுரைகளை வெளி யிட்டார். "பணவீக்கத்தைப் போக்க என்ன செய்யலாம்?" என்று வட்டம் கேட்க, "அமிர் தாஞ்சனம் தடவலாம்" என்று பதில் தருவார் மாவட்டம். "ஏன் தவிட்டு ஒத்தடம் கொடுக்கக் கூடாதா?" என்று வட்டம் கேட்டதும், "நல்ல யோசனை தவிட்டு ஒத்தட வாரியம் தொடங்கலாம்" என்று பரபரப்பார் மாவட்டம்.

வெறும் அரசியல் மட்டுமல்லாமல் உலக நடப்புகளையும் சுருக்கமான செய்திகளாகத் தந்தது 'துக்ளக்'. உலக சினிமாவில் ஏற்பட்டுவரும் மாற்றங்களையோ நல்ல திரைப்படங்கள் எது என்றோ அடையாளம் காட்டாவிட்டாலும் தமிழ்த் திரைப்படங்களை 'போஸ்ட்மார்ட்டம்' என்ற தலைப்பில் அலசினார். கூடவே இயக்குநரின் பதிலையும் வாங்கிப்போட்டார். ஒரு இயக்குநர் அவருடைய விமர்சனத்துக்குப் பதிலாக, "உங்களுடைய போஸ்ட்மார்ட்டம் என்ற பிணப் பரிசோதனைக்கு நான் பதில் தர விரும்பவில்லை" என்று தன்னுடைய ஆங்கிலப் புலமையை அப்பட்டமாக வெளிப்படுத்த, அதையும் ரசித்து அடுத்த வாரம் செய்தியாக்கினார் சோ.

வழக்கமான நகைச்சுவை போதாது என்று கருதியபோது சிறப்பு நிகழ்வாக 'ஒண்ணரை பக்க நாளேடு, ஓசியில் படிக்க வேண்டிய ஒரே பத்திரிகை டூப் … கப்சா…' என்று போட்டுக் கலக்கினார். 'ஆனந்த விகடன்' அலுவலகத்திலிருந்துதான் 'துக்ளக்' வெளிவந்தது என்றாலும் 'ஆனந்த விகட'னையே கேலிசெய்து ஒண்ணரைப் பக்க நாளேட்டை வெளியிட்டு கலாய்த்தார். 'கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்திலிருந்து சம்ஸ்கிருத சுலோகங்கள்' என்று தொடர்ந்து வெளியிட்டுவிட்டு, கடைசியில், "அதெல்லாம் உண்மையல்ல" என்ற குண்டு போட்டார். எழுதுவது யார் என்று தெரிவிக்காமல் உலக நடப்புகளை எழுத வைத்து, அவற்றை எழுதியது ஜெயலலிதா என்று பிறகு அறிவித்தார். விளையாட்டாக பத்திரிகையைத் தொடங்கியிருந்தாலும் எந்தவிதச் சமரசங்களையும் செய்துகொள்ளாமல் அதைத் தொடர்ந்ததுடன் மாதம் இரு முறை என்பதை வாராந்தரியாக மாற்றினார். 'பிக்விக் பேப்பர்ஸ்' என்ற ஆங்கில சஞ்சிகையைத் தொடங்கினாலும் அது கையைக் கடிக்கும் என்று தெரிந்ததுடன் நிறுத்திக்கொண்டார்.

தன்னுடைய வலிமை, வலிமையின்மை இரண்டையும் உணர்ந்து செயல்பட்டதும் அவருடைய வெற்றிக்கு ஒரு காரணம். அதிகம் அலட்டிக்கொள்ளாத வாழ்க்கைபோலத் தோன்றினாலும், அலட்டிக்கொள்ளாத மனம் அது என்று அவருடைய பணிகளைச் செய்யும் விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்களுக்குப் புரியும். தமிழ்ப் பத்திரிகையுலகில் மிகுந்த செல்வாக்கு மிக்க குரல் அது. சம்பிரதாயமான சொற் களாக இருக்கலாம்; உண்மையாகவே சோவின் குரல் யாராலும் பூர்த்திசெய்ய இயலாதது!

***

திரு. அரவிந்தனின் கட்டுரை:

சோ என்னும் ஒற்றைச் சொல்லின் இரட்டை அடையாளம்!



 சோ 'வந்தே மாதரம்' என்ற தொடர்கதையை 'துக்ளக்'கில் எழுதிவந்தார். ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் அதில் 'கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்திலிருந்து' என்று குறிப்பிடப்பட்டு ஒரு மேற்கோள் சம்ஸ்கிருதத்தில் தரப்பட்டு, அதன் தமிழாக்கமும் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த வாரத்தின் கதையோட்டத்தில் இந்த மேற்கோள் தகுந்த இடத்தில் எடுத்தாளப்பட்டிருக்கும். வாசகர்களைப் பெரிதும் கவர்ந்த இந்த மேற்கோள்களை எழுதியவர் சாணக்கியர் அல்ல என்பதையும் அவர் பெயரில் தானே எழுதியதையும் தொடர் முடிந்த பிறகு தெரிவித்து, வாசகர்களை அசடுகளாக்கி அழகு பார்த்தார் சோ.

வேடிக்கையைத் தாண்டி, இந்தச் சம்பவத்தில் முக்கியமான ஒரு செய்தி உண்டு. சாணக்கியர், அரிஸ்டாட்டில், காந்தி என்று பிரபலமானவர்களின் பெயர்களைப் பார்க்கும்போது, மக்கள் அவற்றைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்கிறார்கள். அதே சமயம், ஒரு சாதாரண மனிதர் எவ்வளவுதான் முக்கியமான விஷயங்களைச் சொன்னாலும் மக்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்பதை இதன் மூலம் அம்பலப்படுத்தினார் சோ.

தனித்துவமான சாதனைகள்

இப்படிக் கூர்மையும் விளையாட்டுத் தனமும் கொண்ட தண்டவாளங்களின் மீது தனது கருத்துலக இயக்கம் என்னும் வாகனத்தை வெற்றிகரமாக ஓட்டியவர் சோ. அவருடைய நாடகங்கள், திரைப்படங்கள், 'துக்ளக்' என எதுவும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த இரட்டை அடையாளமே அவரது ஆளுமை என்றுகூடச் சொல்லலாம்.

விளையாட்டுத்தனமான சாகசமாகத் தொடங்கப்பட்ட 'துக்ளக்' பத்திரிகையின் மூலம் சோ செய்த சாதனைகள் தனித்து வமானவை. அவரது அரசியல் விமர்சனங்கள் எள்ளலும் கூர்மையும் நிறைந்தவை. அரசியல்வாதிகளின் விவரங்கெட்ட தன்மை யையும் நேர்மையின்மையையும் அவரைப் போல அம்பலப்படுத்தியவர் யாருமில்லை. அதிகாரத்தில் இருப்பவர்களைப் பகைத்துக்கொள்வது பற்றிய கவலையே அவருக்கு இருந்ததில்லை. நெருக்கடிநிலைக் காலத்தில் 'துக்ளக்' செயல்பட்ட விதம் தமிழ் இதழியலில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது.

கருத்துலகின் மையம்

கருத்தளவில் மட்டுமல்லாது, இதழியலின் பிற பரிமாணங்களிலும் சோ கவனம் செலுத்தினார். நேரடியாகக் கள ஆய்வுசெய்து நிகழ்வுகளை அலசும் கட்டுரைகளை வெளியிட்டுவந்தார். கி.வீரமணி, ராஜீவ் காந்தி உள்ளிட்ட ஆளுமைகளுடனான விரிவான நேர்காணல்கள் ஒரு காலத்திய 'துக்ளக்' இதழின் சிறப்பம்சங்களில் ஒன்று. கறாரான திரை விமர்சனங்களை வெளியிட்டு, அந்த விமர்சனங்களுக்கு இயக்குநர்களின் பதில்களையும் கேட்டு வாங்கிப் பிரசுரித்தார். அதன் மூலம் ஆரோக்கியமான விவாதம் உருவாக வழி வகுத்தார். தீவிர இலக்கியப் பரப்பைச் சேர்ந்த ஆளுமைகளுக்கும் அவருடைய பத்திரிகையில் இடம் இருந்தது. அரசியல் பத்திரிகையாகவே அறியப்பட்டாலும் உடல் நலம், சட்டச் சிக்கல்கள் குறித்த கட்டுரைகளுக்கும் அதில் இடமுண்டு.

வெகுஜனச் சிந்தனைகளுக்கு முரணாக இருப்பதுபோலத் தோன்றினாலும் மைய நீரோட்டச் சிந்தனைகளை அடியொற்றியே சோவின் கருத்துலகம் அமைந்திருந்தது. பொது வாழ்வில் நேர்மை, நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, சட்டத்தின் ஆட்சி, தார்மிக உணர்வு ஆகியவையே அவரது கருத்துலகின் மையம். அவருடைய கருத்துக்களின் அடிப்படையை அனைவரும் அறிந்திருந்தாலும், அதை முன்வைக்க அவர் பயன்படுத்தும் வாதங்கள், ஆதாரங்கள் ஆகியவை வாசகர்களிடத்தில் அவருக்குத் தனி மதிப்பை ஏற்படுத்தித் தந்தன.

விமர்சனப் பார்வை

விமர்சனங்களில் சமரசமற்ற கடுமையும் யாருக்கும் சலுகை அளிக்காத போக்கும் அவரது கருத்துக்களுக்கு நம்பகத்தன்மையை அளித்தன. தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சிப்பதை முற்றாகத் தவிர்த்துவந்தார். பலருடன் நட்புப் பேணிவந்த அவர், விமர்சனம் என்று வரும்போது நட்பைக் குறுக்கே வர அனுமதிக்க மாட்டார். அதேசமயம், நட்பையும் அவர் இழந்ததாகத் தெரியவில்லை. அவரால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியுடனான நட்பை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

சோ மரபுவாதி. தேசியவாதி. இந்திய மரபைப் போற்றியவர். அவரது சிந்தனைகள் என்று புதிதாக எதையும் சொல்லிவிட முடியாது. தொடக்கத்தில் மனித உரிமைக் குழுவில் தீவிரமாகச் செயல்பட்டுவந்த சோ, பின்னாளில் காவல் நிலைய மரணங்கள், போலி மோதல் கொலைகள், ராணுவ, காவல் துறைகளின் அத்துமீறல்கள் ஆகிய பிரச்சினைகளில் மனித உரிமைகளின் பக்கம் நிற்காமல், அமைப்பின் சார்பில் நின்று வாதிடு பவராக மாறினார். அவரது மைய நீரோட்டச் சிந்தனை, நடுத்தர வர்க்கச் சார்பு ஆகியவற் றின் பின்னணியில் வைத்துத்தான் இந்தப் போக்கினைப் புரிந்துகொள்ள முடியும். இந்திய மரபைப் போற்றிய அவர் அதன் ஞான மரபை முன்னிறுத்தாமல், அதன் சமூகக் கட்டமைப்பு, சமயச் சடங்குகள், வாழ்வியல் அணுகுமுறை முதலானவற்றுக்கே அதிக முக்கியத்துவம் அளித்தார்.

பாதை மாறிய பார்வை

தொண்ணூறுகளிலும் அதற்குப் பின்னும் அவரது விமர்சனக் கத்தியின் கூர்மை மழுங்கத் தொடங்கியது. விமர்சனங்களில் சார்பு நிலைகள் முளைத்துவிட்டன. பொது வாழ்வில் நேர்மை என்பதற்கு அதீத முக்கியத்துவம் கொடுத்த அவர், மைய நீரோட்ட தேசியவாதத்தை அந்த இடத்தில் வைத்து ஆராதிக்கத் தொடங்கினார். மாநில உணர்வுகள், உரிமைகள் ஆகியவற்றின் நியாயங்களை அவர் பேசவில்லை. விளிம்பு நிலைகளின் நியாயங்களைப் பேசவில்லை. திராவிட இயக்கத்தின் நாத்திகவாதத்தோடு, அவ்வியக்கம் முன்னிறுத்திய மாநில உரிமைக் குரலையும் புறமொதுக்கினார். மார்க்ஸியச் சித்தாந்தங்களைக் கொள்கை அளவில் எதிர்த்த அவர், மார்க்ஸிய இயக்கங்களின் மக்கள் சார்பு அரசியலுக்கான மரியாதையைக் கொடுக்கத் தவறினார். ஒரு கட்டத்துக்குப் பிறகு, தேசியவாதத்தை ஒரு மதமாகவே முன்னிறுத்தினார், பிற விழுமியங்களில் சமரசம் செய்துகொள்ளவும் தலைப்பட்டார். கறாரான அரசியல் விமர்சக ராக இந்திய அளவில் புகழ்பெற்ற அவர், ஒரு கட்டத்தில் அரசியல் பேரங்களை நடத்தித் தருவதில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

எனினும் தமிழ் இதழியலில் சோ ஆற்றிய பங்கு மிகவும் முக்கியமானது. பொழுதுபோக் கையே முதன்மைப்படுத்திய வெகுஜன இதழியலில் மாற்றுப் போக்குகளுக்கும் இடமுண்டு என்பதை நிரூபித்தவர் சோ. எம்.ஜி.ஆர்., கருணாநிதி முதலான சில ஆளுமைகளைப் பற்றி நடுத்தர வர்க்கத்தின் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் சில பிம்பங்களைக் கட்டமைத்ததில் அவரது எழுத்துகளுக்கு முக்கியமான பங்கு உண்டு. லட்சங்களில் விற்கும் பல இதழ் களுக்குச் சாத்தியமாகாத சாதனை இது. புதிய சிந்தனைகளை முன்வைத்ததன் மூலம் அவர் இதைச் சாதிக்கவில்லை. நடுத்தர வர்க்கத்தினரின் ஆழ்மன அபிலாஷைகளையும் கருத்துக்களையும் அழுத்தமான மொழியில் தர்க்கபூர்வமாக முன்வைத்ததன் மூலம் சாதித்தார். ஒரு தலைமுறையின் அறிவார்த்த அடையாளமாக 'துக்ளக்' பத்திரிகையை வளர்த்தெடுத்தார். தன் கருத்துக்களுக்கு அழுத்தம் தந்த அதே வேளையில், பல்வேறு விதங்களில் இதழியலின் வரையறைகளை விரிவுபடுத்தினார். விமர்சனங்களைத் தாண்டி அவரை வரலாற்றில் நிலைபெறச் செய்யும் அம்சமாக இது இருக்கும்!

***
 திரு. மணாவின் கட்டுரை:

 சோ என்கிற மனிதர்


 "எந்த ஒரு மனிதரையும் நான் பார்த்ததும் நம்பிவிட மாட்டேன். அவரைத் தொடர்ந்து கவனிப்பேன். எந்தெந்தச் சமயங்களில் எப்படி நடந்துகொண்டிருக்கிறார் என்பதையெல்லாம் பார்த்து, அவரைப் பற்றி நான் ஒரு முடிவுக்கு வருவேன். அப்படியொரு முடிவுக்கு நான் வர ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடங்களோகூட ஆகலாம். ஆனால், அவரைப் பற்றி நானே சொந்த அனுபவத்தின் அடிப்படையில் ஒரு முடிவுக்கு வந்த பிறகு, அதை மாற்றிக்கொள்ள மாட்டேன். யார் வந்து அவரைப் பற்றி என்ன சொன்னாலும், சட்டென்று என்னுடைய முடிவை மாற்றிக்கொள்ள மாட்டேன். பெரும்பாலும் என்னுடைய இந்தக் கணிப்பு பொய்த்ததில்லை" - இது அவருடைய நண்பர்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது துக்ளக் ஆசிரியரான சோ சொன்னவை.

அவருடைய உலகத்தில் நண்பர்களுக்குத் தனியிடம் இருப்பதைப் பார்க்க முடியும். சென்னை விவேகானந்தா கல்லூரியில் படித்தபோது, அவருக்குப் பழக்கமான நண்பர்கள் அவருடைய இறுதிக்காலம் வரை அதே நெருக்கம் மாறாமல் அவரைத் தொடர்ந்து வந்திருக்கிறார்கள். நண்பர்கள் ஒன்றுசேர்ந்தால் போதும் கேலி, கிண்டல் ரகளைதான்!

நண்பர்களுக்கு முதலிடம்

துக்ளக் அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த போது, அதில் பப்ளிஷராக இருந்தவர் சோவுக்கு மிகவும் நெருங்கிய நண்பரான ரெங்காச்சாரி. ஒளிவு மறைவில்லாத அன்பான மனிதர்.

ஒருமுறை துக்ளக் ஆண்டு விழா சென்னையில் நடந்தபோது, அதன் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தவர் சோவுக்கு நெருக்கமானவரான பிரதமர் சந்திரசேகர். மேடையில் விழா முடிந்து தேசியகீதம் இசைக்கப்பட்ட பிறகு, சந்திரசேகர் மேடையைவிட்டு இறங்கிக்கொண்டிருந்த சமயத்தில், உரத்த குரலில் சத்தம் போட்டுக் கூப்பிட்டார் ரெங்காச்சாரி.

"டேய் சோ.. இங்கே பார்றா.."

அவர் கவனிக்காததால் திரும்பவும் கூடுதல் சத்தத்துடன் கத்தினார்.

அருகில் இருந்த நான் ரெங்காச்சாரியிடம் சொன்னேன்.. "என்னதான் பழக்கமாக இருந்தாலும், பொது இடத்தில் 'வாடா.. போடா' என்று கூப்பிடுவது நன்றாக இருக்கிறதா? அதிலும் சத்தம் போட்டு இப்படிக் கத்துகிறீர்களே?"

கேட்டவுடன் 'சுருக்'கென்று கோபம் வந்துவிட்டது ரெங்காச்சாரிக்கு. மடமடவென்று என்னுடைய கையைப் பிடித்து மேடைக்கு அழைத்துப்போனார். அதற்குள் மேடையைவிட்டுக் கீழே இறங்கிச் சென்றிருந்தார் பிரதமர் சந்திரசேகர்.

போனவுடன் "நான் உன்னை 'வாடா'ன்னு கூப்பிடுறதை, அதிலும் பொது இடத்தில் கூப்பிடுறதை 'அப்ஜெக்ட்' பண்றதை என்னால் தாங்க முடியலை. உன்னை எந்த இடத்திலும் அப்படிக் கூப்பிட எனக்கு உரிமை இருக்கா.. இல்லையா? நீ சொல்லு" என்று சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு ரெங்காச்சாரி சொன்னதும்... வழக்கமான குபீர் சிரிப்புடன் என்னைப் பார்த்துச் சொன்னார் சோ.

"இவன்கிட்ட போய் ஏன் அப்படிக் கேட்டீங்க? இவனால் தாங்கிக்க முடியுமா? இங்கே மட்டுமில்லை.. எந்த இடத்தில், எங்கே இருந்தாலும் என்னோட ஃப்ரெண்ட்ஸ் 'வாடா.. போடா'ன்னு கூப்பிடுறதுக்கு அவங்களுக்கு முழு உரிமை இருக்கு. என்னப்பா.. போதுமா? இன்னும் ஏதாவது சொல்லணுமா?" என்று சொன்னபடி உதட்டைச் சுழித்ததும் ரெங்காச்சாரி முகத்தில் அப்படியொரு ஆனந்தம்!

சோவின் குரு

"உங்க குருன்னு யாரையாவது சொல்வீங்களா?"

"இருக்கான். அவன் பெயர் நானி. பெங்களூர்ல இருக் கான். அவனோட முழுப் பெயர் நாராயணசாமி" - இப்படி சோவால் குருபக்தியுடன் வர்ணிக்கப்பட்ட நானியை.. குமுதம் இதழில் நான் தொகுத்து எழுதிவந்த 'ஒசாமஅசா' தொடருக்காக பெங்களூரிலிருந்து வரவழைத்திருந்தார் சோ.

நானியைப் பார்த்ததும் ஏக சந்தோஷம் அவருக்கு. மருத்துவமனையில் இருந்து திரும்பிய நிலையிலும், குஷியாகத் தானே காரை ஓட்டிக்கொண்டு வந்தார் சோ. பின் ஸீட்டில் நானியும் நானும். கடலோரத்தில் இருக்கிற வீட்டுக்கு நகர்ந்தது கார்.

"டேய்.. நிஜமாவா சொல்றே. உன்னைப் பற்றி என் மனசில் இருக்கிறதெல்லாம் சொல்லிறவா? இவர் வேற டேப்ரெக்கார்டைக் கையில் வெச்சிருக்கார். அப்புறம் எல்லாம் ரெக்கார்டு ஆயிடும். சொல்லிறவா?" என்றார் நானி.

அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த சில குறியீட்டுச் சொற்களைச் சொல்லி, "எல்லாத்தையும் சொல்லிறவா?" என்று பீடிகையும் போட்டார்.

"நீ என்ன சொல்வேன்னு எனக்குத் தெரியாதா? எல்லாத்தையும் சொல்லிட்டு வா. இவர் ரெக்கார்டு பண்ணிப்பார். அப்புறம் அதை எடிட் பண்ணிக்கலாம். சரி.. ஆரம்பிப்பா" என்று சிரிப்பு பொங்க காரை ஓட்டியபடி சொன்னார் சோ.

தேன் பாய்ந்த அனுபவம்

சோவின் குசும்புகள், சேட்டைகள் எல்லாவற்றையும் அவிழ்த்துவிட்டு, "இவன் அப்படி.. இப்படி" என்று அமர்க்களமாகப் போட்டுக் காய்ச்ச, காதில் தேன் பாய்ந்த அனுபவத்துடன் ஏகானந்தமாக அதை ரசித்துக்கொண்டே வந்தார் சோ.

அப்புறம் அதை ஒருவழியாக 'எடிட்' பண்ணி, அந்த அனுபவங்கள் இரண்டு வாரங்கள் வெளியானது.

இப்படிப்பட்ட நண்பர்கள் கிடைத்தது அவருக்குப் பெரும் பாக்கியம்! கிண்டலும், குத்தலும் அவருக்கு இயல்பின் ஒரு பகுதியைப் போலவே மாறிவிட்டிருந்தன. அலுவலகத்தில் வேலை பார்க்கிறவர்களிடமும் அது அடிக்கடி பீறிட்டபடி இருக்கும்.

இலவச இணைப்பும் சோவும்

ஒரு சமயம், துக்ளக் ஆபீஸில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர், ஒரு வாரத் தாடியுடன் சோகமாக உட்கார்ந்திருந்தார். மதிய நேரத்தில் அவருக்குச் சின்ன பேப்பர். அதனுடன் ஓர் இலவச இணைப்பு.

இணைப்பைப் பிரித்துப் பார்த்தால், பாதியாக ஒடிக்கப்பட்ட துண்டு பிளேடு. அந்த ஊழியர் பரபரப்புடன் பேப்பரைப் பிரித்தபோது, சிறு கோடுகள் ஒடிந்த மாதிரியான கையெழுத்தில் இப்படி எழுதியிருந்தார் சோ.

'முகம் பார்க்கச் சகிக்கவில்லை. இத்துடன் இணைக்கப்பட்டிருக்கிற பிளேடால் நாளைக்கு மழுங்கச் சிரைத்துக்கொண்டு வரவும்.'

ஜூவுக்குப் போனா விதவிதமாப் பார்க்கலாம்

துக்ளக் ஆபீஸில் ஒரு சமயம் பத்திரிகை வேலைகளில் சோ மும்முரமாக இருந்த சமயம் பார்த்து, யாரோ ஒருவர் வெளியூரிலிருந்து வந்திருக்கிறார்.

எழுதிக்கொண்டிருந்த சோ நிமிர்ந்து பார்த்திருக்கிறார். உட்காரச் சொல்லியிருக்கிறார்.

"என்ன விஷயம்?"

"மெட்ராஸுக்கு வேலையா வந்தேன். அப்படியே உங்களைப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்" என்று இழுத்ததும்… சோவிடமிருந்து சுள்ளென்று பதில் வந்திருக்கிறது.

"மெட்ராஸுக்கு வந்து என்னைப் பார்க்கிறதைவிட இங்கே உள்ள ஜூவுக்குப் போனீங்கன்னா விதவிதமாகப் பார்க்கலாம். உங்களுக்கும் நல்லாப் பொழுதுபோகும். சரி.. நான் என் வேலையைப் பார்க்கட்டுமா?"

வந்தவருக்கு முகம் எந்தக் கோணத்தில் போயிருக்கும்?

எல்லாம் ஒரே கப்சா

துக்ளக்கில் வெளியான என்னுடைய கட்டுரைகளைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட நான் முடிவெடுத்ததும் சோவிடம் சொன்னேன்.

"அதுக்கென்று தனியாக விழா நடத்திச் செலவழிக்காதீங்க. பேசாம துக்ளக் ஆண்டு விழாவிலேயே அதை வெளியிட லாம். நம்ம நாராயணன் சார் (பரந்தாமன் என்கிற பெயரில் நிறையக் கட்டுரைகள் எழுதியிருக்கிற இவர், கலைவாணருக்கு உதவியாளராகவும் இருந்தவர்) முதல் காப்பியை வாங்கிக்கட்டும்" - இப்படிச் சொல்லிவிட்டு, அந்தப் புத்தகத்துக்கு ஒரு முன்னுரையையும் கைப்பட எழுதித் தந்தார். முன்னுரையில் கட்டுரைகளுக்குப் பின்னால் இருக்கிற உழைப்பைப் பாராட்டியிருந்தவர், அந்தக் காகிதத்தை மடித்து மேலே சிறு பேப்பரை பேஸ்ட் பண்ணியிருந்தார்.

அதில் இப்படி எழுதியிருந்தார், 'உள்ளே எழுதியிருப்பதெல்லாம் ஒரே கப்சா.'

சோ பாடிய பாடல்

சீரியஸாக அவர் இருந்ததில்லையா என்கிற கேள்வி இந்த நேரத்தில் எழலாம். இருந்தாலும், அவர் அந்த நிலையிலேயே தொடர்ந்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

துக்ளக்குக்கு ஒரு கட்டுரையை மதுரையிலிருந்து கூரியரில் அனுப்பியிருந்தேன். அது கிடைக்கச் சற்றுத் தாமதமாகியிருக்கிறது. போனில் அழைத்தவர் வழக்கத்தைவிட உரத்த குரலில் கத்தியபோது மனதுக்கு நெருடலாக இருந்தது.

மறுநாள் காலை நேரம். வீட்டுத் தொலைபேசி அடித்தது. எடுத்தால் கர்னாடக இசையில் ஒரு பாடல். சோ சார்தான் பாடிக்கொண்டிருந்தார்.

கொஞ்சம் கேட்டதும் பாடல் நின்றது.

"நேத்து கூரியர் லேட்டா கிடைச்சது. ஆனா, அதுக்கு முன்னாடி உங்களைக் கூப்பிட்டு டோஸ் விட்டுட்டேன். மனசுல வெச்சுக்காதீங்க.. என்ன?"

திரும்பவும் அந்தப் பாடலைத் தொடர்ச்சியாகப் பாடி முடித்தபோது காது குறுகுறுத்தது.

கட்டுரைகளுக்காக 


வேறுவேறு ஊர்களுக்குப் போய், அதற்கான பில் தொகையை அனுப்பியபோது ஒருசமயம் பார்த்தவர் போனில் கூப்பிட்டார்.

"என்ன.. இப்படிப் பில் அனுப்பியிருக்கீங்க?"

"ஏன்.. என்ன சார்?"

"ஊருக்குப் போறப்போ நீங்க தங்கின ஹோட்டல் பில்லைப் பார்த்தேன். இவ்வளவு கம்மியான ரேட்டில் இருக்கிற ஹோட்டல்களில் இனி தங்காதீங்க. நல்ல ஹோட்டல்களில் தங்குங்க. அதுதான் உங்களுக்கும் நல்லது, நம்ம நிறுவனத்துக்கும் நல்லது. பணத்தை நான்தாங்க கொடுக்கப்போறேன்" - போனை வைத்துவிட்டார்.

நம்பிக்கையின் பெருமிதம்


ராஜீவ் காந்தி கொலை நடந்த சமயம்.. மதுரையிலிருந்து சென்னை வந்திருந்த நான் ஸ்ரீபெரும்புதூருக்கு துக்ளக் கவரேஜுக்காகப் போனேன்.

சென்னை துவங்கி, தமிழகத்தின் பல பகுதிகளில் கலவரச் சூழல், "கார்ல போனாலும் பார்த்துப் போங்க" - சொல்லியனுப்பினார் சோ.

ராஜீவ் கொலையில், கைது செய்யப்பட்ட போட்டோகிராபர் சுபா சுந்தரத்தின் அலுவலகத்திலிருந்துதான் ஒரு போட்டோகிராபர் என்னுடன் காரில் வந்தார். சுபா சுந்தரம் தாங்கள் சென்ற காரில் 'பிரஸ்' ஸ்டிக்கரை ஒட்டி அனுப்பிவைத்தார்.

நான் ஸ்ரீபெரும்புதூருக்குச் சென்று திரும்பியவுடன், கட்டுரை எழுதிவிட்டு மதுரைக்குச் சென்ற இரண்டு நாட்களில், சுபா சுந்தரம் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

துக்ளக் இதழில் கட்டுரை வெளியானதும் ராஜீவ் கொலை பற்றி விசாரணை நடத்தி வந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவில் உள்ள ஒரு அதிகாரி துக்ளக் அலுவலகம் வந்திருக்கிறார்.

துக்ளக் இதழில் வெளியான என்னுடைய கட்டுரையில் 'படங்கள்: சுபா' என்று வெளியானது குறித்த விசாரணைக்கு அந்தக் கட்டுரையை எழுதியவரை விசாரிக்க வேண்டும் என்று கேட்டபோது, அதற்குப் பதில் சொல்லி யிருக்கிறார் சோ.

"நான்தான் அவரைக் கட்டுரைக்காக அனுப்பினேன். முடித்துக் கொடுத்துவிட்டு அவர் கிளம்பிவிட்டார். தேவையில்லாமல் அவரை விசாரணைக்கு அழைத்து பீதி ஏற்படுத்துவது சரியில்லை. அவரை அனுப்பியவன் என்கிற முறையில் அவரிடம் என்ன கேட்க வேண்டுமோ, அதை என்னிடம் கேளுங்கள். நானே பதில் சொல்கிறேன்" என்று ஆசிரியரான சோ பதில் அளித்திருப்பதை துக்ளக் அலுவலகப் பொறுப்பில் இருந்தவர் சொன்னபோது, அவருடைய நம்பிக்கையின்மீது பெருமிதம் ஏற்பட்டது.

ஒசாமஅசா…

மிகவும் தயங்கித் தயங்கித் தொடர்ந்து முயற்சித்து, அவருடைய வாழ்க்கை அனுபவங்களைத் தொகுத்து குமுதம் இதழில் வெளியான 'ஒசாமஅசா' தொடரைத் துவக்குவதற்கு சோ ஒப்புக்கொண்டதும் அவர் போட்ட கண்டிஷன், "நான் சொல்றேன்.. நீங்க எழுதுங்க. ஆனால், 'எழுத்தும் தொகுப்பும்' என்று உங்க பெயர்தான் வரணும்."

அதன்படியே 76 வாரங்கள் வரை குமுதத்தில் வெளியான தொடருக்குப் பெரும் வரவேற்பு. அதற்காகவே அவரை நூறு தடவைக்கு மேல் சந்தித்தேன்.

துக்ளக்கில் ஏற்கெனவே பதினான்கு ஆண்டுகள் நான் பணியாற்றியிருந்தாலும் அவருடைய அந்திமக் காலத்தில் நிகழ்ந்த இந்தச் சந்திப்புகள் மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்தின. கேலியும் கிண்டலுமாகப் பல்வேறு இடங்களில் நகர்ந்த அந்தச் சந்திப்புகள், அவருடைய மனதில் உறைந்திருந்த பல நினைவுகளை அந்தரங்க சுத்தியுடன் வெளிப்படுத்தின.

"இதுதான் கடைசியாகக் கொடுக்கிற தொடர்னு வெச்சுக்குங்க. நான் எல்லாத்தையும் கொட்டிடுறேன். எது தேவையோ அதைப் பிறகு எடிட் பண்ணிக்கலாம். சில சென்ஸிட்டிவ்வான விஷயங்களை நான் பேசி நீங்க டேப் பண்ணியிருந்தாலும், அவை இந்தச் சமயத்தில் வெளியாவதை நான் விரும்பலை. ஒருவேளை, நான் இல்லாமல் போனபிறகு, அதை நீங்க வெளியிடணும்னு நினைச்சா வெளியிடலாம்" என்று மிகுந்த உரிமையுடனும் நம்பிக்கையுடனும் அவர் குரல் பிசிறச் சொன்னார். மிகுந்த நெகிழ்வுடன் நான் மென்மையாக அவர் காதோரம் பதில் சொன்னபோது, என்னுடைய குரலும் தாழ்ந்திருந்தது.

"ரொம்பவும் நம்பிக்கையோடு என்கிட்டே பகிர்ந்திருக்கீங்க.. நீங்க விரும்பாத எதையும் நான் எப்போதும் வெளியிட மாட்டேன் சார்.."

சொன்னதும் சாய்வான படுக்கைக்கு அருகில் அழைத்து, மிகவும் மெலிந்து போயிருந்த உறைந்த மெழுகைப் போன்ற கை விரல்களால் என்னுடைய கையை அழுத்தியபோது, அவருடைய கண்களிலும் உதட்டோரத்திலும் சிறு புன்னகை ஒட்டியிருந்தது.

அந்த அழுத்தமான நம்பிக்கை வெளிப்பட்ட தொடுதல் என்றைக்கும் உயிர்ப்புடன் உடனிருக்கும்!

- மணா, முப்பத்தாறு நூல்களை எழுதியிருக்கிறார். 'துக்ளக்'கில் பதினான்கு வருடங்கள் பணியாற்றியிருக்கிறார். சோவின் வாழ்வனுபவங்களைத் தொகுத்துத் தொடராகவும் எழுதியிருக்கிறார்.

நன்றி: தி இந்து




21.8.16

புதிய கல்விக் கொள்கை மிக அவசியம்!


இன்றைய சூழலில் புதிய கல்விக் கொள்கை மிக அவசியம்
அண்ணா பல்கலைக்கழக 
முன்னாள் துணைவேந்தர்
ஏ.கலாநிதி திட்டவட்டம்


 
சென்னையில் நடந்த தேசிய கல்விக் கொள்கை -2016 குறித்த கருத்தரங்கில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஏ.கலாநிதி பேசுகிறார்


சென்னை, ஆக. 20: இன்றைய சூழலில் புதிய கல்விக் கொள்கை மிக அவசியம் என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஏ.கலாநிதி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி), வித்யா பாரதி, சம்ஸ்க்ருத பாரதி, காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி ஆராய்ச்சி மையம், தேசிய சிந்தனைக் கழகம் ஆகிய அமைப்புகளின் சார்பில், தேசிய கல்விக் கொள்கை -2016 குறித்த கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில் அண்ணா பல் கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், காமன்வெல்த் அறிவியல் தொழில்நுட்பக் கல்வி ஆராய்ச்சி மைய இயக்கு நருமான ஏ.கலாநிதி பேசியதாவது:

பண்டைய கல்விமுறையை ஒழித்தால்தான் இந்தியர்களை அடிமைகளாக்க முடியும் என்று கருதி, 1835-ம் ஆண்டு மெக்காலே வேறொரு கல்விக் கொள்கையை உருவாக்கினார். அதைத்தான் நாம், மாற்றியும் திருத்தியும் பின்பற்றி வருகிறோம். அதைக் கைவிட வேண்டிய நேரம் வந்துள்ளது.

இன்றைய சூழலில் புதிய கல்விக் கொள்கை மிகவும் அவசியமானது. 8-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெறலாம் என்பதை 5-ம் வகுப்பு வரை என்று மாற்றுவது நல்ல விஷயம். பொறியியல் கல்வி கற்பவர்களில் 87 சதவீதம் பேர்தான் வேலைக்கு செல்வதற்கு தகுதியான அளவுக்கு உள்ளனர். இதற்கு காரணம் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இல்லாததுதான். மாணவர்களுக்கு சிறந்த பண்பு நலன்களையும் கற்றுத்தர வேண்டும்.

-இவ்வாறு கலாநிதி கூறினார்.

வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன்:

இந்தியாவில் 35 கோடிக்கும் அதிகமானோர் படிக்கும் வயதில் உள்ளனர். எனவே, இந்தியாவுக்கு கல்வி என்பது மிக முக்கியமானது. பள்ளிக் கல்வி என்ற அஸ்திவாரம் சரியாக இருந்தால்தான் உயர்கல்வி தரமானதாக இருக்கும். ஆனால், நம் நாட்டில் பள்ளிக் கல்வி குறிப்பாக அரசுப் பள்ளிகள் கவலை அளிக்கும் வகையிலேயே செயல்படுகின்றன.

உலக அளவில் பள்ளிக் கல்வியில் சிறந்து விளங்கும் தென்கொரியா, பின்லாந்து நாடுகளில் வகுப்பறைகள் டிஜிட்டல் மயமாகிவிட்டன. வை-பை இணையதள வசதி இல்லாத வகுப்பறைகளே இல்லை என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில் அரசுப் பள்ளிகளில் நாற்காலிகள், தண்ணீர், கழிவறை, சுற்றுச்சுவர் போன்ற அடிப்படை வசதிகள்கூட இல்லை. கல்விக்காக அரசு அதிகமாக செலவு செய்ய வேண்டும். அப்போதுதான் பொதுமக்கள் கல்விக்காக செலவு செய்வது குறையும்.

நம் நாட்டில் ஒரு பல்கலைக்கழகத்தின் கீழ் நூற்றுக்கணக்கான கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் உயர் கல்வியின் தரம் குறைகிறது. பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி கற்பிக்கப்பட்டால்தான் தரமும், ஆராய்ச் சியும் அதிகரிக்கும். பல்கலைக்கழகங் கள் இல்லாவிட்டாலும் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அதிகாரமாவது வழங்க வேண்டும்.

அரசுப் பள்ளிகள், பள்ளிக் கல்வி, கல்லூரி கல்வியில் இருக்கும் பல்வேறு குறைபாடுகள் தேசிய கல்விக் கொள் கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. 8-ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி என்பது 5-ம் வகுப்பாக குறைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் மட்டுமே இருக்க நினைப்பவர்களுக்கு சமச்சீர் கல்வி இருக்கலாம், ஆனால், வெளிமாநிலங்கள், வெளிநாட்டுக்கு செல்ல வேண்டுமானால் சிபிஎஸ்இ போன்ற கல்வித் திட்டங்கள் வேண்டும்.

பின்லாந்து போன்ற நாடுகளில் கல்விக் கொள்கையில் தொடர்ச்சி இருக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சியுடன் கலந்து ஆலோசித்த பிறகே கல்விக் கொள்கையை உருவாக்குகிறார்கள். தரமான பள்ளிக் கல்வி, பல்கலைக்கழக கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும்.

ஐஐடி நுழைவுத் தேர்வு போன்ற அகில இந்திய நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள முடியாத நிலைக்கு தமிழக மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

கல்வி என்பது வெறும் படிப்பு, அறிவுக்காக மட்டுமாக இல்லாமல் நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாணவர்களை தயார்படுத்துவதாக இருக்க வேண்டும். அதற்கேற்ற மாற்றங்களுடன் புதிய கல்விக் கொள்கை இருக்க வேண்டும்.

மூத்த பத்திரிகையாளர் மாலன்:


புதிய கல்விக் கொள்கைக்கான எதிர்ப்புகள் அரசியல் தளத்தில் இருந்துதான் வருகிறது. அறிவார்ந்த தளத்தில் இருந்து வரவில்லை. கேள்வியே கேட்காமல் கீழ்படியச் செய்வது புதிய கல்விக் கொள்கையின் நோக்கம் என்று எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர். மாணவர்களை படைப்பாற்றல் மிக்கவர்களாகவும், கண்டுபிடிப்புகளை நிகழ்த்துபவர்களாகவும் உருவாக்க வேண்டும் என்பது புதிய கல்விக் கொள்கைக்கான நோக்கம் என்று கூறப்பட்டுள்ளது.

8-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்பதால் போட்டி மனப்பான்மை குறைந்துள்ளது. புதிய கல்விக் கொள்கைக்கான பரிந்துரையில், வேண்டுமென்றால் சமஸ்கிருதத்தை 3-வது மொழியாக கற்கலாம் என்று ஒரே ஒரு இடத்தில்தான் கூறப்பட்டுள்ளது. 10 லட்சம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்று பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது. அதை 50 லட்சம் மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

சென்னை விவேகானந்தா கல்லூரி தேர்வுகள் கட்டுப்பாட்டாளர் பேராசிரியர் ஆர்.ராமசந்திரன்:

புதிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதத்தைத் திணிப்பதாக எல்லோரும் கூறுகின்றனர். சமஸ்கிருதம் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்பது தவறான கருத்து. சமஸ்கிருதத்தில் 5 சதவீதம் அளவுக்குதான் ஆன்மிகக் கருத்துகள் உள்ளன. புதிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதத்தையும் படிக்கலாம் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.

விவேகானந்தா வித்யாலயா பள்ளியின் முதல்வர் பிரேமா மகாதேவன்:

தரமான கல்வியின் மூலமே இந்தியா சிறந்த நாடாக மாற முடியும். மெக்காலே கல்விக் கொள்கையின் தொடர்ச்சியாகவே தற்போதைய கல்விக் கொள்கை உள்ளது. மாணவர்கள் ஆசிரியர்களைத் தேடிச் சென்ற காலம் மாறி, தற்போது மாணவர்களைத் தேடி ஆசிரியர்கள் செல்கின்றனர். இந்தக் கல்வி முறை நிச்சயம் மாற்றப்பட வேண்டும்.

புதிய கல்விக் கொள்கை பற்றி பலரும் நிறை குறைகளைச் சொல்கின்றனர். அதில் எந்தக் குறையும் இல்லை. மனிதனை முழு மனிதனாக்கக் கூடிய அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன.

 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்வியியல் துறை முன்னாள் இயக்குநர் சதானந்தன், ஏபிவிபி துணைத் தலைவர் எஸ்.சுப்பையா, சாஸ்த்ரா பல்கலைக்கழக டீன் எஸ்.வைத்திய சுப்பிரமணியம், பேராசிரியர் பி.கனகசபாபதி உள்ளிட் டோரும் பேசினர். 

நன்றி: தி இந்து (21.08.2016)
.

17.1.15

ஆசான்களின் ஆசான், புலவர்களின் புலவர்…

 -வ.மு.முரளி


திரிசிரபுரம் மகாவித்துவான்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை


(பிறப்பு: 1815 ஏப். 6 – மறைவு: , 1876 பிப். 1)

.

இன்று
தமிழ் மொழிக்கு அணிகளாகக் கருதப்படும் பல காப்பியங்களை ஓலைச்சுவடிகளிலிருந்து நூல் வடிவுக்கு மாற்றியவர்  ‘தமிழ்த் தாத்தா’ எனப்படும் உ.வே.சாமிநாதையர். அவர் மட்டும் பாடுபட்டு, தேடிக் கண்டறிந்து அவற்றைப் பதிப்பித்திருக்காவிடில் நமக்கு மணிமேகலையும் சிலப்பதிகாரமும் கிடைக்காமலே கரையானுக்கு உணவாகி இருக்கும். எனவேதான்,

“பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
    காலமெல்லாம் புலவர் வாயில்
துதியறிவாய், அவர் நெஞ்சில் வாழ்த்தறிவாய், 
    இறப்பின்றித் துலங்குவாயே.”

 -என்று மகாகவி பாரதி, உ.வே.சாமிநாதையரைப் போற்றுகிறார்.

ஓலைச் சுவடிகளிலிருந்த பழந்தமிழ் நூல்களைத் தேடித் தொகுத்து அச்சிட்டுப் பெரும்புகழ் பெற்றார் உ.வே.சா. எனில், அத்தகைய உ.வே.சா.வுக்கு அருந்தமிழ் போதித்து அவரைக் கற்றோரவையில் முந்தியிருக்கச் செய்த பெருமைக்குரியவர் மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆவார்.

21.10.14

பட்டாசு வெடிப்போம் வாருங்கள்!




பட்டாசு வெடிப்போம் வாருங்கள் - தீய
பயங்கரவாதம் ஒழியட்டும்!
மத்தாப்பு கொளுத்திட வாருங்கள் - உலகில்
மகிழ்ச்சியே எங்கும் நிறையட்டும்!  
(பட்டாசு)

15.10.14

காந்திஜி காண விரும்பிய 'தூய்மை இந்தியா'!

-லா.சு.ரங்கராஜன்

“எனது பிறந்த தினத்தை விடுமுறை நாளாக அறிவிப்பது கடுந்தண்டனைக்குரிய குற்றமென விதி வகுக்கப்பட வேண்டும். முனைப்புடன் நூல் நூற்றல் அல்லது வேறு ஏதாகிலும் தேசப்பணி புரிதல் மட்டுமே அன்று அனுசரிக்கப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்.  அன்றைய தினம் முழுவதையும் நற்பணிக்கு அர்ப்பணிக்க வேண்டும். ஆட்டம் பாட்டம் கிஞ்சித்தும் வேண்டாம்”.

 - இவ்வாறு மகாத்மா காந்தி தமது ‘அரிஜன்’ (15.10.1938) இதழில் எழுதினார்.

2.10.14

காந்திஜி கண்ட சத்தியாக்கிரகம்!

-லா.சு.ரங்கராஜன்


 ‘உண்மையில் காந்தியிசம்' (காந்தியம்) என்றால் என்ன என்று எனக்கே தெரியாது. நாட்டிற்கு நான் புதிதாக ஏதும் வழங்கவில்லை. இந்தியாவின் பாரம்பரியம் மிக்க மெய்யறிவுக்கு ஒரு புது வடிவம் அளித்துள்ளேன். அவ்வளவு தான். ஆகவே, அதனை காந்தியம் என்று கூறுவது தவறு' - என்று 1940 பிப்ரவரி 20 அன்று மலிகண்டா (வங்க மாகாணம்)வில் காதி கண்காட்சியைத் திறந்துவைத்து ஆற்றிய உரையில் மகாத்மா காந்தி தன்னடக்கத்துடன் கூறியுள்ளார்.

24.6.14

பண்டைய இந்தியப் பொருளாதாரம்

சிந்தனைக்களம்                    

-பேராசிரியர் ப.கனகசபாபதி 

நமது நாட்டுக்கு என பொருளாதாரம் போன்ற மிகவும் அடிப்படையான துறையில் நல்ல பின்னணி எதுவும் இருக்க முடியாதென நாமே கருதிக் கொள்கிறோம். கடந்த இருநூறு வருடங்களாக உலகப் பொருளாதார அரங்கில் ஐரோப்பாவும், அதைத் தொடர்ந்து அமெரிக்காவும் முன்னிலையில் இருந்து வருகின்றன. ஆகையால், அதை வைத்துக் கொண்டு வரலாற்றுக்காலம் முழுவதும் அப்படியே இருந்திருக்கலாம் என எண்ணிக் கொள்கிறோம். ஏனெனில், நாம் படிக்கும் வரலாறு ஐரோப்பாவின் தொழிற் புரட்சியில் தொடங்கியே உலகில் பொருளாதார  வளர்ச்சி ஆரம்பித்ததாகப் போதிக்கிறது.

மேலும், நாம் சுதந்திரம் பெறும்போது இந்தியா ஏழை நாடாகவே இருந்தது. எனவே, நமது மனக் கண்ணில் அந்த வறுமையான சித்திரமே நம் முன் காட்டப்படுகிறது. அதற்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்தான் நமது பொருளாதாரம் சிதைக்கப்பட்டு வீழ்ச்சியடைந்தது. ஆனால் அது பற்றி நமக்கு விரிவாகப் போதிக்கப்படுவதில்லை.

இந்தியப் பொருளாதாரத்தின் முந்தைய நிலைகள் குறித்து பண்டைய காலம் தொடங்கி, தொடர்ந்து வெளிவந்த பல இலக்கியங்கள் பேசியுள்ளன. விவசாயம், தொழில்கள், வியாபாரம் பற்றிய பல விஷயங்களை அவை குறிப்பிடுகின்றன. உதாரணமாக "சிலப்பதிகாரம்' அப்போது தமிழ் நாட்டில் சர்வதேச வணிகம் எவ்வாறு சிறப்பாக நடைபெற்று வந்தது; எப்படி பல நாடுகளிலிருந்தும் வணிகர்கள் வந்து சென்றார்கள் என்பது பற்றியெல்லாம் விவரிக்கிறது.

உலகத்தின் முதல் பொருளாதார மற்றும் அரசியல் புத்தகமாக "அர்த்த சாஸ்திரம்' கருதப்படுகிறது. அது சுமார் 2,300 வருடங்களுக்கு முன்னால் மெளரிய சாம்ராஜ்ய காலத்தில் எழுதப்பட்டது. விவசாயம், ஜவுளி, பிற தொழில்கள், வியாபாரம், ஏற்றுமதி, இறக்குமதி, வரிக் கொள்கை, ஊதியம், நுகர்வோர் நலன் எனப் பல விஷயங்களைப் பற்றியும், அவற்றை முறைப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், அவற்றுக்குத் தேவையான நிர்வாக முறைகள் ஆகியவை பற்றியும் அந்த நூல் விவரிக்கின்றது.

பொருளாதாரம் பற்றிய சரியான அறிவும் அனுபவமும் இல்லாமல் அப்படிப்பட்ட ஒரு  நூல் எழுதப்பட்டிருக்க முடியாது. மேற்குலகத்தில் முதல் பொருளாதார நூல் பதினெட்டாம் நூற்றாண்டின் பின்பகுதியிலேயே வந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆயினும் அண்மைக்காலம் வரையிலும் உலக நாடுகளின் தொடர்ச்சியான பொருளாதாரப் பின்னணி குறித்து ஒரு சரியான வரலாற்றுப் பார்வை இல்லாமல் இருந்து வந்தது. ஆனால் 1980களில் தொடங்கி கடந்த முப்பது ஆண்டுகளாக மேற்கத்திய அறிஞர்கள் உலகப் பொருளாதாரம் குறித்து சில முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டு வந்துள்ளனர். அவை மேற்கு நாடுகளின் பொருளாதார வரலாற்றை மட்டுமின்றி, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பிற நாடுகளின் வரலாறு குறித்தும் முக்கியமான விஷயங்களைச் சொல்கின்றன.

அவை உலகப் பொருளாதாரம் என்பது ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆரம்பித்தது என்பதை மறுக்கின்றன. ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்துக்கான அடித்தளம் காலனியாதிக்க காலத்தில் அவை ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் மேற்கொண்ட சுரண்டல்கள் மூலமே என்பது குறித்து பல விவரங்கள் சொல்லப்பட்டுள்ளன. மேற்கண்ட ஆய்வுகள், உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவும் சீனாவுமே முதன்மையான பங்கு வகித்து வந்துள்ளன என்பதை நிறுவுகின்றன.

முக்கியமாக, உலகிலுள்ள பணக்கார நாடுகளின் கூட்டமைப்பான "பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் முன்னேற்றத்துக்கான அமைப்பு' (O‌r‌ga‌n‌i‌s​a‌t‌i‌o‌n​ ‌f‌o‌r​ Ec‌o‌n‌o‌m‌ic​ C‌o‌o‌p‌e‌r​a‌t‌i‌o‌n​ a‌n‌d​ D‌e‌v‌e‌l‌o‌p‌m‌e‌n‌t)வெளியிட்டுள்ள ஆய்வுகள் குறிப்பிடத் தக்கவையாகும். அவை பிரபல பொருளாதார வரலாற்றாசிரியரான ஆங்கஸ் மாடிசன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டவை.

உலகப் பொருளாதாரம் குறித்த கடந்த இரண்டாயிரம் வருட வரலாற்றை புள்ளி விவரங்களுடன் அவை முன்வைக்கின்றன. அது புத்தகமாக 2001ஆம் வருடம் வெளியிடப்பட்டது. இன்று வரை அந்த ஆய்வுகள் யாராலும் மறுக்கப்படவில்லை. அவற்றின் மூலம் உலகப் பொருளாதாரம் குறித்த ஒரு தெளிவான சிந்தனைக்கு வழி கோலப்பட்டுள்ளது.

அவை இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், உலகப் பொருளாதாரத்தின் முதன்மையான சக்தியாக இந்தியா விளங்கி வந்துள்ளதை எடுத்துச் சொல்கின்றன. அப்போது உலகின் ஒட்டு மொத்த பொருளாதார உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவிடம் இருந்துள்ளது.

இரண்டாவது நிலையில் சீனா 26.2 விழுக்காடு பங்குடன் இருந்துள்ளது. இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகள் மட்டும் சுமார் அறுபது விழுக்காடு அளவு பொருளாதார பலத்தை வைத்திருந்துள்ளன. அதே சமயம் மேற்கத்திய நாடுகள் அனைத்தும் சேர்ந்து மொத்தமாக 15 விழுக்காட்டுக்கும் குறைவான அளவே பங்களித்துக் கொண்டிருந்தன.

உலகப் பொருளாதாரத்திற்கு மூன்றில் ஒரு பங்கினை அப்போதே இந்தியா அளித்துக் கொண்டிருந்தது என்பது அசாத்தியமானது. அந்த அளவுக்கு பொருளாதார வரலாற்றில் உலகின் எந்த மேற்கத்திய நாடும் இன்று வரை பங்களித்ததில்லை. எந்த ஒரு நாடும் திடீரென உலகப் பொருளாதாரத்தின் முதல் நிலைக்கு செல்ல முடியாது.

அப்படியெனில், பொது யுகம் தொடங்குவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்னரே முன்னேற்றத்துக்கான அடித்தளங்கள் இந்தியாவில் போடப்பட்டிருக்க வேண்டும். மேலும் வளர்ச்சிக்கு ஏதுவான வழிமுறைகளும் இருந்திருக்க வேண்டும்.

சுமார் ஐயாயிரம் வருடங்களுக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரிக காலத்தை ஆய்வு செய்த நிபுணர்கள்கூட அப்போதிருந்த திட்டமிட்ட நகரமைப்பு, வளர்ச்சிக்கான அடையாளங்கள் குறித்து மிகவும் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளனர்.

பொது யுக காலத்துக்கு முந்தைய பல நூற்றாண்டுகளில் நிலவிய சர்வதேச வணிகம், வியாபாரம், தொழில்கள் உள்ளிட்டவை குறித்த விவரங்கள் உள்ளன. ஆனால் தொடர்ச்சியாக நாடு முழுமைக்கும் பொருந்தக்கூடிய அளவில் தற்போது கிடைத்துள்ளது போன்ற புள்ளி விவரங்கள் அப்போதைய காலங்களுக்கு இல்லை.

இந்தியப் பொருளாதாரத்தின் மற்றொரு தனிச் சிறப்பு அதன் நீடித்த தன்மையாகும். பொது யுகம் தொடங்கிய காலத்தில் இருந்து 1600ஆம் ஆண்டுவரை இந்தியாவே உலகப் பொருளாதாரத்தில் வல்லரசாக முதல் நிலையில் இருந்து வந்துள்ளது. சீனா தொடர்ந்து இரண்டாமிடத்தில் இருந்துள்ளது.

1600இல் சீனா முதலிடத்தை அடைய, பின்னர் 1700இல் மீண்டும் இந்தியா முதலிடத்தைப் பிடிக்கிறது. மறுபடியும் ஒரு முறை 1820இல் சீனா முதலிடத்தைப் பிடிக்க இந்தியா இரண்டாம் நிலையை அடைகிறது. எனவே, கடந்த இரண்டாயிரமாண்டு கால பொருளாதார வரலாற்றில் மிகப் பெரும்பான்மையான காலம் இந்தியாவே முதலிடத்தில் இருந்துள்ளது. இந்தியாவும் சீனாவுமே உலகப் பொருளாதாரத்தின் இரண்டு வலுவான சக்திகளாக இருந்து வந்துள்ளன.

பின்னர் அவை இரண்டும் வலுவிழந்ததற்கு முக்கியக் காரணமே காலனி ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட சிதைவுகளாகும். ஐரோப்பியர்களின் ஆட்சிக் காலத்தில் உலக வரலாறே கண்டிராத கொடுமைகளை இந்தியா எதிர் கொண்டது என அமெரிக்க வரலாற்றாசிரியர் வில் துரந்த் விவரித்துள்ளார்.

அப்போதுதான் முதல்தரமான பொருளாதாரமாக விளங்கி வந்த இந்தியா, வறுமையும் பிணிகளும் நிறைந்த ஏழை நாடாக மாறிப் போனது. ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்ட பஞ்சங்கள் பல லட்சக்கணக்கானோரின் உயிரைப் பறித்துக் கொண்டன. தொன்றுதொட்டு ஏற்றுமதிக்குப் பெயர் பெற்றிருந்த நாடு, இறக்குமதியைச் சார்ந்திருக்க வேண்டிய நிலைக்குத்  தள்ளப்பட்டது.

1750இல் உற்பத்தித் துறைக்கு உலக அளவில் கால் பகுதியைக் கொடுத்துக் கொண்டிருந்த இந்தியா, 1900ஆம் வருடத்தில் வெறும் 1.7 விழுக்காடு மட்டுமே கொடுக்கக் கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டது. 1800 முதல் 1850 வரைக்குமான ஐம்பது வருட காலத்தில் சென்னை பிரசிடென்சியில் மூன்றில் ஒரு பங்கு விவசாயிகள் அரசாங்கத்தின் கொடுமையான வரிகளால் தொழிலை விட்டுச் சென்று விட்டனர் என பொருளாதார நிபுணர் ரமேஷ் தத் தெரிவிக்கிறார். எனவே, பத்தொன்பதாம் நூற்றாண்டில் தனிநபர் ஆண்டு வருமானம் மிகவும் குறைவாகப் போனதாக தாதாபாய் நெüரோஜி குறிப்பிட்டுள்ளார்.

உலகப் பொருளாதார வரலாற்றின் முக்கியமான கால கட்டத்தில் நாம் இப்போது இருந்து வருகிறோம். மேற்கத்திய சித்தாந்தங்கள் பெருமளவு தோற்று வருகின்றன. அதே சமயம், நமது நாட்டுக்கென வலிமைகளும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளதை ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

இந்த சமயத்தில் நமது பொருளாதார வரலாறு, அதன் அடிப்படைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த  சரியான உண்மைகளைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. இதில் குறிப்பாக நமது நிபுணர்கள், பல்கலைக் கழகங்கள் மற்றும் அறிவு ஜீவிகளின் பங்கு அதிகமாக உள்ளது.

வரலாறு குறித்த தெளிவான பார்வையில்லாத சமூகத்தைக் கொண்ட எந்த நாடும் எதிர் காலத்துக்கான கொள்கைகளை உறுதியாக வகுக்க இயலாது.

நன்றி: தினமணி (17.06.2014)

22.6.14

தமிழில்தான் பேசுவோம் எனச் சூளுரைப்போம்!

தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் பேச்சு 



சென்னை, ஜூன் 21: தமிழில் பேசுவோம், தமிழில்தான் பேசுவோம் எனத் தமிழர்கள் சூளுரைப்போம் என்றார் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தினமணி, சென்னைப் பல்கலைக்கழகம் சார்பில் சனிக்கிழமை (ஜூன் 21) காலை நடைபெற்ற இரு நாள் இலக்கியத் திருவிழாவின் தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியது:

இலக்கிய அமைப்புகளை ஒருங்கிணைப்பதாலோ, தீர்மானங்கள் போடுவதாலோ, போராட்டம் நடத்துவதாலோ எதையுமே சாதித்துவிட முடியாது. முதலில் நாம் தமிழை வளர்ப்பதிலும், பாதுகாப்பதிலும் அக்கறை செலுத்துகிறோமா என்பதை, நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.

தமிழைப் பாடமொழியாகக் கொண்ட பள்ளிகளுக்கு எத்தனை பேர் தங்கள் குழந்தைகளை அனுப்புகின்றனர்? நமது குழந்தைகள் நம்மை அப்பா, அம்மா என அழைக்காமல், டாடி, மம்மி என அழைப்பதில் பெருமைப்படுகிறவர்கள்தான் அதிகம். அப்படி யார் வீட்டிலாவது குழந்தைகள் அழைத்தால், அப்பா, அம்மா என அழைக்க வேண்டும் எனச் சம்பந்தப்பட்ட பெற்றோர்களுக்கு வழிகாட்ட நம்மில் எத்தனை பேர் முன் வருகிறோம்?

அப்பா, அம்மா மட்டுமா சித்தி, சித்தப்பா, மாமன், மாமி, அத்தை என ஒவ்வொரு உறவுக்கும் ஒரு பெயர் சூட்டி மகிழ்ந்த சமூகம் அல்லவா நமது இந்திய சமூகம். இப்போது யாரைப் பார்த்தாலும் அங்கிள், ஆன்ட்டி என்றாகிவிட்டது.

செல்பேசி எண் என்ன எனக் கேட்டால், நம்மில் எத்தனை பேர் தமிழில் எண்களைக் கூறுகிறோம் ?

இதனால், என்ன ஆபத்து எனக் கேட்கலாம். எந்தவொரு மொழியும் வழக்கொழிந்து போவதற்கு மூல முதல் காரணம், அளவுக்கு அதிகமான அன்னிய மொழிக் கலப்புதான். சற்று யோசித்துப் பார்த்தால் இன்னொரு உண்மையும் புரியும்.

இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வடமொழி இருந்திருக்கிறது. 1100 ஆண்டுகளாக உருது இங்கே பேசப்பட்டு வருகிறது. 700 ஆண்டுகளாக தெலுங்கு பரவலாகவே வழக்கத்தில் இருந்து வருகிறது. 500 ஆண்டுகளாக மராட்டியம் தமிழகத்தில் நுழைந்து அரசவை மொழியாகவே இருந்திருக்கிறது.

ஆனால், இந்தக் காலகட்டத்தில் தமிழ் அழிந்துவிடவில்லை. மாறாகத் தழைத்தோங்கி இருக்கிறது. சமய இலக்கியங்கள், தோன்றின. சிலம்பும், மேகலையும், சீவக சிந்தாமணியும், ராமகாதையும், வில்லி பாரதமும், அருணகிரியாரும், குமரகுருபரரும் இயற்றிய அற்புதமான படைப்புகளும் இந்தக் காலகட்டத்தில்தான் தமிழுக்கு உரமூட்டின.

வெறும் 250 ஆண்டுகள்தான் ஆங்கிலேயர் நம்மை ஆண்டனர். தமிழ் தன் அடையாளத்தையே இழந்துவிட்டது. வடமொழிக் கலப்பில்லாத, உருது கலப்பில்லாத, தெலுங்கின் தாக்கமில்லாத, மராட்டியத்தின் வாடையே இல்லாத தமிழை நாம் பேசிவிட முடியும். ஆங்கிலக் கலப்பில்லாத தமிழை நம்மில் எத்தனை பேரால் பேச முடியும்? இந்த உண்மைதான் பயமுறுத்துகிறது. இப்படிப்பட்ட மொழிக் கலப்புதான் மெல்ல, மெல்லப் புற்றுநோயாகத் தமிழை அழித்து அடையாளம் தெரியாமல் சிதைத்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

ஆங்கில வழிக் கல்வி கூடாது என்பதல்ல நமது கருத்து. ஆனால், தமிழின் அழிவில் ஆங்கில வழிக் கல்வி தேவையில்லை என்பதுதான் நமது வாதம். உலகமே வியக்கும் வகையில் விஞ்ஞான சாதனை படைத்திருக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தாய்மொழியில் தமது பள்ளிக் கல்வியைப் பயின்றவர். தாய் மொழிக் கல்விதான் அவரது அறிவியல் மேல்படிப்புக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது என்பதே உண்மை.

ஆங்கிலேயர்களும், அமெரிக்கர்களும் அறிவியல் சாதனைகளைப் படைத்திருக்கின்றனர் என்றால் அவர்கள் அவர்களுடைய தாய்மொழியிலான ஆங்கிலத்தில் பயில்கின்றனர். சாதனை படைக்கின்றனர். ஜெர்மானியர்கள், ஜப்பானியர்கள், பிரெஞ்சு நாட்டவர், ரஷியர்கள் என யாரை எடுத்துக் கொண்டாலும், அவர்களும் அமெரிக்காவுக்கு நிகரான முன்னேற்றம் கண்டவர்கள்தான். காரணம், அவர்கள் தாய் மொழியில்தான் படிக்கின்றனர்.

சின்ன நாடான சிங்கப்பூரில் பாட மொழியாக ஆங்கிலம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, சீனப் பெற்றோர்கள் அதற்கு எதிராகப் போராடி வெற்றி கண்டனர். அடிப்படைக் கல்வி சீன மொழியில்தான் இருக்க வேண்டும் என்றும், எங்களது குழந்தைகள் தாய்மொழியான சீனம் தெரியாத குழந்தைகளாக வளரக்கூடாது எனவும் பிடிவாதமாக இருந்தனர்.

இங்கே தமிழில் பேசினால் தரக்குறைவு, அவமானம் எனக் கருதும் மனநிலை மாற வேண்டும், மாற்றப்பட வேண்டும். மொழியை வளர்ப்பது பத்திரிகைகளின் கடமை. தமிழ் வாழ்ந்தால்தான் தமிழ்ப் பத்திரிகைகள் வளர முடியும். ஊடகங்கள்தான் ஒரு மொழியின் வளர்ச்சிக்கும், மொழியின் சிதைவுக்கும் காரணமாக அமையும். ஊடகங்கள் மொழியைக் கொச்சைப்படுத்தினால், அதுவே மொழியின் வீழ்ச்சிக்கு மேலதிகமான காரணமாகிவிடும். இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் அதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

கலப்படத் தமிழை நல்ல தமிழாக மாற்றியாக வேண்டும். அதற்காகத்தான் இந்த விழா. தமிழில் பேசுவோம். தமிழில்தான் பேசுவோம் எனச் சூளுரைப்போம். இந்த விழாவில் பங்கேற்றுச் செல்லும் ஒவ்வொருவரும் தமிழில்தான் பேசுவோம் என்ற இயக்கத்தை அந்தந்த ஊருக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றார் வைத்தியநாதன்.

நன்றி: தினமணி (22.06.2014)

17.6.14

ரத்த தானத்தில் சதமடித்த சீனிவாச தாதம்- 65 வயதில் 146 முறை தானம்



ஜூன் 14-ம் தேதி உலக ரத்த தான தினம். இந்த தினத்தைக் கொண்டாடியவர்கள் இனி நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு பிரமுகர் திருச்சியில் இருக்கிறார். 

ரத்த தானம் செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தை இவர் மனதில் உருவாக்கியவர் ஒரு சிறுமி. திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த சீனிவாச தாதத்துக்கு 25 வயது இருக்கும்போது அவர் வீட்டின் அருகே வசிக்கும் ஒரு சிறுமி கீழே விழுந்து படுகாயம் அடைந்து அதிக ரத்த இழப்பால் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்தக் குழந்தையைக் காப்பாற்ற ரத்தம் தேவை, உடனே ஏ ஒன் பாசிட்டிவ் குரூப் ரத்தம் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றார் மருத்துவர். அந்தக் குழந்தையின் நெருங்கிய உறவினர்கள்கூட ரத்த தானம் என்கிற வார்த்தையைக் கேட்டதும் தெறித்து ஓடினர். 

ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற நாம் ஏன் ரத்தம் வழங்கக் கூடாது என யோசித்தார் தாதம். உடனே முடிவெடுத்து ரத்தம் வழங்கி அந்த குழந்தையைக் காப்பாற்ற உதவினார். இது நடந்தது 1975-ம் ஆண்டில்.
 .
பிறகு 3 மாதங்களுக்கு ஒரு முறை (ரத்த தானம் வழங்க மருத்துவ உலகம் சொல்லும் இடைவெளி விட்டு) தொடர்ந்து ரத்த தானம் வழங்கி பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார். இப்போது தாதத்துக்கு வயது 65. மருத்துவ உலகம் 65 வயதுக்கு மேல் ரத்ததானம் செய்வது உகந்தது அல்ல என தெரிவித்துள்ளதால் கடந்த 6 மாதத்துக்கு முன்பு கடைசியாக 146-வது முறை ரத்த தானத்துடன் தனது ரத்த தான பயணத்தை நிறைவு செய்தார். 

தற்போது திருச்சி சங்கம் ஹோட்டலில் நிர்வாகப் பிரிவு அலுவலராக இருக்கும் தாதம் வாய்ப்பு கிடைக்கும்போது சந்திக்கிற நபர்களிடம் ரத்த தானம் செய்வதன் அவசியத்தை வலியுறுத்த மறப்பதே இல்லை.
 .
“என்னால் செய்ய இயலா ததை என்னைப் போன்றவர்களைக் கொண்டு செய்ய வைப்பேன்” என்பதை லட்சியமாகக் கொண்டு இயங்கி வருகிறார் தாதம். கல்லூரிகள், தொண்டு நிறுவனங் கள், சமூக நல அமைப்புகள், ரசிகர் மன்றத்தினரைச் சந்தித்து ரத்த தானம் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார். 

இவரால் திருச்சியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு தோற்று விக்கப்பட்ட தன்னார்வ ரத்த தானம் வழங்குவோர் சங்கம் பல ஆயிரம் உயிர்களைக் காப்பாற்றி யிருக்கிறது. பல நூறு தன்னார்வ ரத்த தான வழங்குநர்களை உருவாக்கியுள்ளது. தொடரட்டும் இந்த அரிய பணி. 
- அ.சாதிக் பாட்சா

நன்றி: தி இந்து (14.06.2014)

6.6.14

காந்தியை மறந்தனர்; கைவிடப்பட்டனர்


சிந்தனைக்களம்

-லா.சு.ரங்கராஜன்


 

அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததற்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏல முறைகேடு, கோல்கேட், ஆதர்ஷ் என்று அடுத்தடுத்து நிகழ்ந்த பல ஊழல் விவகாரங்கள் காரணமாக இருக்கலாம்தான். ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம். காந்திஜியிடமிருந்து காங்கிரஸ் என்று விலகத் தொடங்கிற்றோ அன்றிலிருந்தே காங்கிரஸ் ஸ்தாபன அஸ்திவாரமும் செல்லரிக்கத் தொடங்கிவிட்டது.

1947 டிசம்பர் 11, 12 தேதிகளில் காங்கிரஸ் நிர்மாணத் திட்டக் குழுவினருடன் கலந்துரையாடியபோது காந்திஜி அறிவுறுத்தினார்:  ‘இன்று அரசியலில் ஊழல் ஊடுருவிவிட்டது. அரசியலில் எவர் புகுந்தாலும் தூய்மை கெட்டுக் கறைபடும் அவலநிலைக்கு ஆட்படுகிறார். நிர்மாணத் திட்ட ஊழியர்களாகிய நாம் அரசியலினின்றும் அறவே விலகி நிற்க வேண்டும். அப்போதுதான் நமது செல்வாக்கு உயரும்.

நமது அகத் தூய்மை எவ்வளவுக்கெவ்வளவு அதிகரிக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு எவ்வித முயற்சியுமின்றி நாம் மக்களை வசப்படுத்திக் கொள்ள முடியும். வயது வந்தோர் அனைவர்க்கும் வோட்டுரிமை கிடைத்திருக்கும் இன்றைய சூழலில் நாம் மட்டும் சமூகத் திட்டங்களில் கண்ணுங் கருத்தும் செலுத்தி நேர்மையுடன் செயலாற்றி, சாமான்ய மக்களின் நன் மதிப்பைப் பெற்றோமானால், நாம் எவரை வேட்பாளராக நிறுத்தி வைக்கிறோமோ அல்லது ஆதரிக்கறோமோ அவரே தேர்தலில் அமோக வெற்றி பெறுவார்...

லஞ்ச ஊழலை, நடைமுறைச் சீரழிவை, அவை எங்கிருந்தாலும் சரி ஒழித்துக் கட்டக் கங்கணம் கட்டிக் கொள்ள வேண்டும். அதன் பொருட்டு நீங்கள் எந்தக் கமிட்டியிலும் சேர வேண்டியதில்லை; ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொள்ளத் தேவை இல்லை. பாமர மக்களிடையேதான் உங்கள் பணி காத்துக் கிடக்கிறது'.

1947 ஜூன் 22 அன்று தில்லி அகதிகள் முகாமில் பணியாற்றி வந்த சமூக சேவகிகளுடன் காந்திஜி உரையாடியபோது, அரசியல் அரங்கில் மலிந்து வரும் லஞ்ச ஊழல்கள், உறவினர்க்கு சலுகை, நேர்மைக்குப் புறம்பான செயல் பற்றி முதன் முதலாகப் பிரஸ்தாபித்து மனம் வருந்தினார்:

 ‘பிரபல தலைவர்கள் என்று கருதப்படும் பல நபர்கள் கூட அரசியலில் ஆதாயம் தேட முனைந்து விட்டார்கள் என்று என்னிடம் புகார்கள் வந்தவண்ணமிருக்கின்றன (அப்போது நேரு தலைமையிலான இடைக்கால அரசாங்கம் இயங்கிவந்தது).

காங்கிரஸ்காரர்கள் எவ்வாறெல்லாம் நாணயமற்ற வழிகளில் இறங்கிவிட்டார்கள் என்று விவரிக்கும் கடிதங்கள் வரப்பெற்றுள்ளேன். இவ்வாறு தொடர்ந்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்தால் ஒரு நாள் அவர்கள் கொதித்தெழுவதை நம்மால் தடுக்க முடியாது' என்று எச்சரித்தார்.

ஊழல் விவகாரங்களினின்று காங்கிரஸ் ஸ்தாபனத்தை மீட்டு, நேர்மைமிக்க ஆட்சிமுறையைக் கடைப்பிடிக்கச் செய்யும் முயற்சியாகவே மகாத்மா காந்தி 29.1.1948 அன்று பிற்பகலில் அவசர அவசரமாக ஒரு சாசனம் வரைந்தார்:

 ‘இன்று வரையிலுள்ள காங்கிரஸ் ஸ்தாபனத்தைக் கலைத்துவிட்டு,  ‘லோக் சேவக் சங்கம்' என்ற பெயரில் புதிதாய் மலரச் செய்ய வேண்டும்' என்ற தொடக்கத்துடன் அப்புதிய அமைப்புக்கான விதிமுறைகளையும் மேலோட்டமாகப் பட்டியலிட்டார். ஆனால் அச் சாசனத்தைத் திருத்தமாய் அமைத்து விளக்கங்களுடன் வெளியிட அவகாசமின்றி விதி குறுக்கிட்டு விட்டது. மறுநாள் (30.1.1948) மாலையில் காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்டார்.

லோக் சேவக் சங்கப் பணிகள் கிராமப்புறங்களிலிருந்து தொடங்கி மாநில அளவில் விரிந்து சமூக, பொருளாதார, அரசியல், கல்வி தளங்களில் மக்களுக்குச் சேவை புரியும். அரசியலில் ஆர்வமுள்ள, நேர்மைமிக்க சங்க உறுப்பினர்களை தேர்தலில் வேட்பாளராகக் களமிறக்கி அவர்களுக்கு லோக் சேவக் சங்கம் முழு ஆதரவு அளிக்கும் என்பதே காந்திஜியின் நோக்கம் என்று அவர் கடைசி வாரத்தில் பேசி, எழுதிய வாசகங்களிலிருந்து ஊகிக்க முடிகிறது. இது கிட்டத்தட்ட ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்கம் - பாரதிய ஜனதா கட்சி உறவு முறை போன்றது எனலாம்.

நரேந்திர மோடி ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்  ‘நான் ஒரு ஹிந்து தேசியவாதி' என்று கூறியதைக் கேட்டு பார்த்தீர்களா? ஹிந்து தேசியவாதி, முஸ்லிம் தேசியவாதி என்றெல்லாம் இப்போதே வகுப்புவாதம் பேசக் கிளம்பிவிட்டார்' என்று காங்கிரஸ் பத்திரிகைத் தொடர்பாளர் அறிக்கை விடுத்தார்.

ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட மகாத்மா காந்தி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? "நான் முதலாவதாக ஓர் ஹிந்து; அதன் பின்னரே தேசியவாதி' என்று தமது "யங் இந்தியா' வார இதழில் 1922ஆம் ஆண்டிலேயே அறிவித்துள்ளார்.

அதனை மேலும் விளக்குகையில்,  ‘நான் இவ்வாறு கூறுவதால் தேசப்பற்றில் எந்த ஒரு மிகச்சிறந்த தேசியவாதிக்கும் சளைத்தவன் அல்ல. நான் சொல்லவருவதின் தாத்பரியம் என்னவென்றால், நம் நாட்டின் நலனும் எனது மதமும் இரண்டறக் கலந்த ஒன்றே ஆகும் என்பதே'.

அயோத்திக்கு அருகிலுள்ள ஃபெயிஸாபாத் நகரில் நடந்த நரேந்திர மோடியின் தேர்தல் பிரசார மேடையின் பின்புறம் ஸ்ரீராமர் உருவப்படம் தாங்கிய பெரிய "பேனர்' வைக்கப்பட்டிருந்தது.

காங்கிரஸ் தேர்தல் கமிஷனிடம் ஒரு புகார் மனு கொடுத்தது. "மதச் சின்னங்களை தேர்தல் பிரசாரத்தின்போது பயன்படுத்துவது கமிஷனின் விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணானது. ஆகவே பா.ஜ.கவின் கட்சி அருகதையை ரத்து செய்ய வேண்டும்' என்று காங்கிரஸ் சட்ட இலாக்கா செயலர் முறையீடு செய்தார்.

ஆனால், ராமர் இந்திய மக்கள் அனைவரின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரித்தானவர் என்று காந்திஜி 1909ஆம் ஆண்டிலேயே கூறியுள்ளார். தென்னாப்பிரிக்க இந்திய சமூகத்தினரின் பிரதிநிதியாக பாரிஸ்டர் காந்தி லண்டனில் நான்கு மாத காலம் தங்கியிருந்தபோது அங்குள்ள இந்தியர்கள் விஜயதசமி தினத்தையொட்டி அக்டோபர் 24 (1909) அன்று லண்டனில் உள்ள ஓர் இந்திய உணவு விடுதியில் விருந்துக்கு ஏற்பாடு செய்தனர். பணம் செலுத்திப் பங்கு கொள்ளும் நிகழ்ச்சி அது. இந்துக்கள், முஸ்லிம்கள், பார்ஸிகள், கிறித்தவர்கள் எல்லோருமாக சுமார் 70 பேர் கூடியிருந்தனர். அழைப்பின்பேரில் சில ஆங்கிலேயர்களும் வந்திருந்தனர். பாரிஸ்டர் காந்தி அந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க அழைக்கப்பட்டிருந்தார். காந்திஜி தமது தலைமை உரையில் பின்வருமாறு கூறினார்:

 ‘ஸ்ரீராமச்சந்திரர் ஓர் சரித்திர மகா புருஷர்' என்ற நோக்கில் ஒவ்வொரு இந்தியனின் மதிப்புக்கும் கெüரவத்துக்கும் உரித்தானவர். இந்துக்கள், முஸ்லிம்கள், பார்ஸிகள் யாராகட்டும், அனைவரும் தாம் "ஸ்ரீராமச்சந்திர பிரபுவைப் போன்ற மாமனிதரைத் தோற்றுவித்த தேசத்தின் பிரஜை' என்பதில் பெருமிதம் கொள்ள வேண்டும். மகத்தான இந்திய புண்ணிய புருஷர் என்கிற வகையில் ஸ்ரீ ராமனுக்கு மட்டிலா மரியாதை செலுத்த ஒவ்வொரு இந்தியனும் கடமைப்பட்டவர்.

இந்துக்களைப் பொறுத்தவரை அவர் ஒரு கடவுள். ராமச்சந்திரனையும், சீதா தேவியையும், லட்சுமணனையும் பரதனையும் இந்தியா திரும்பவும் தோற்றுவித்தால் பாரத தேசம் விரைவில் வளம் கொழிக்கும் நாடாகப் பரிணமிக்கும்'.

 ‘வந்தே மாதரம்' எனும் தேசிய எழுச்சி கோஷம் 1904-5இல் வங்க மாகாணப் பிரிவினையின் போது உதித்து இந்தியா பூராவும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான முழக்கமாக ஒலிக்கத் தொடங்கியது. தேசிய தாரக மந்திரமாக மலர்ந்தது.

அப்பாடல் முழுவதும் தேசிய கீதமாகக் காங்கிரஸ் மாநாடுகளிலும், கூட்டங்களிலும் இசைக்கப்படலாயிற்று. ஆனால் அது ஹிந்து உருவ வழிபாட்டுப் பாடல் என்று முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். மகாத்மா காந்தியோ அத் தேசிய கீதம் எல்லோராலும் பாடத்தக்கது என்றார்.

வந்தே மாதரம் பாடலே சுதந்திர இந்தியக் குடியரசின் தேசிய கீதமாக ஏற்கப்படும் என்று காந்தி வெகுவாக எதிர்பார்த்தார். ஆனால் 1950 ஜனவரி 24 அன்று நடைபெற்ற தாற்காலிக பார்லிமெண்டில் விவாதிக்கப்பட்டபோது, முஸ்லிம்களைத் திருப்தி செய்வதற்காக, வந்தே மாதரம் பாடலுக்கு பதிலாக தாகூர் இயற்றிய  ‘ஜன கண மன' பாடலை தேசிய கீதமாக ஏற்கலாம் என நேரு சிபாரிசு செய்தார்.

 ‘ஜன கண மன இசையமைப்பு நமது தேசிய கீதமாக ஏற்கப்படுகிறது; அதே சமயம்,  ‘வந்தே மாதரம்' பாடலும் அதற்கு சரிநிகரான அந்தஸ்துடன் போற்றப்படும்' என்று சபைத் தலைவர் ராஜேந்திரப் பிரசாத் அறிவித்து, அத்தீர்மானம் வோட்டெடுக்கப்படாமலேயே ஏற்கப்படுவதாகக் கூறி கூட்டத்தைச் சட்டென முடித்தார்.

இவ்வாறு தேசியத்தையோ, பாரதப் பண்பாட்டின் மாண்பையோ, நீர் - நிலவளங்களையோ போற்றி ஒரு அட்சரங்கூட இல்லாத ஜன கண மன பாடல் ‘தேசிய கீதமாக' நம் மீது திணிக்கப்பட்டது.

இந்தியாவின் தேசியக் கொடியிலும், கைராட்டைச் சின்னம் இருந்து வரும் என்று மகாத்மா காந்தி எதிர்பார்த்தார்.  ‘கைராட்டை வெறும் மரக்கட்டை அல்ல';  ‘அது அகிம்சையின் குறியீடு';  ‘போற்றலின் படிமம்; வீரத்தின் அடையாளம்';  ‘நம்மையும் எளிய மக்களையும் இணைக்கும் உயிர்ப்புள்ள பிணைப்பு' என்றெல்லாம் அறிவுறுத்தி வந்தார்.

ஆனால், அந்தோ, காங்கிரஸ் தனது கட்சிக் கொடியிலும் கூட கைராட்டைச் சின்னத்தை அகற்றி, கைச் சின்னத்தைப் பதித்து அழகு பார்த்தது. அவ்வெறுங் கை அவர்களுக்குக் கை கொடுக்காமல் அவர்களைக் கைவிட்டு விட்டது!

நன்றி: தினமணி (03.06.2014)
.




13.4.14

புத்தாண்டு கணக்கீட்டில் வானியல் கண்ணோட்டம்




தினமணியில் வெளியான பத்திரிகையாளர் வ.மு.முரளியின் கட்டுரை, தமிழ்ப் புத்தாணடை ஒட்டி இங்கு மீள்பிரசுரம் செய்யப்படுகிறது.

***

உலகம் முழுவதிலுமே புத்தாண்டுக் கொண்டாட்டங்களை அனுசரிப்பது வழக்கமாக உள்ளது. இதில் பலவித காலக் கணக்கீடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக காலனி ஆதிக்கம் மூலமாக உலகம் முழுவதும் பரவலான ரோமானிய காலண்டர் முறை பொதுவான காலமுறையாகக் கருதப்படுகிறது.

இதற்கு மாறாக, இயற்கையோடு இயைந்ததாக இந்து காலக் கணக்கீடு முறை காணப்படுகிறது. பெரும்பாலான ஆசிய நாடுகளில் இதன் தாக்கம் உள்ளது. தவிர, இந்தியாவின் வானியல் கோட்பாடுகளே, கிழமைகள், மாதங்களை உலகம் முழுவதும் பரவலாக்கின என்பதை மேலைநாட்டு அறிஞர்களே ஒப்புக்கொள்கின்றனர்.

இந்தியாவில் தான் காலத்தின் மிகச் சிறிய கூறான  ‘மாத்திரை’ முதற்கொண்டு, மிகப் பெரும் அளவான  ‘கல்பம்’ வரை கணக்கிடப்பட்டு முறைப்படுத்தப்பட்டுள்ளன. நாம் வாழும் உலகம் மாபெரும் பிரபஞ்சத்தின் சிறிய அலகே என்பது நமது முன்னோரின் நம்பிக்கை. காலவெள்ளத்தில் பல்வேறு யுகங்கள், மன்வந்திரங்களைக் கடந்து பிரபஞ்சம் உயிர்த்திருக்கிறது.

இவ்வாறிருக்கையில் ஓராண்டின் துவக்கம் இதுதான் என்று எதன் அடிப்படையில் கூறுவது? மாபெரும் காலச்சுழலில் சிறு அலகான ஆண்டை எப்படிக் கணக்கிடுவது? இதில் தான் நமது முன்னோரின் கணித ஞானமும் வானியல் அறிவும் நம்மை வியக்கச் செய்கின்றன.

தலைமுறைகள் தாண்டி வாழும் மனிதன், தான் வாழும் உலகில் நியதிகளை உருவாக்கத் துவங்கியபோது முதலில் கவனத்தில் கொண்டது காலக் கணக்கீடே. ஏனெனில் பருவச் சுழற்சியே வாழ்வின் ஆதாரமாக இருப்பதால், அதனை பக்குவமாகப் பயன்படுத்த காலக் கணக்கீடு தேவையானது. அதற்காக உருவாக்கப்பட்டதே, பாரதத்தின் பாரம்பரிய ஞானக் கருவூலமான பஞ்சாங்கம்.

இப்பூவுலகின் அடிப்படை சூரியனே என்பதில் நமது முன்னோருக்கு தெளிவான பார்வை இருந்தது. எனவே தான் தமிழின் முதன்மைக் காப்பியமான சிலப்பதிகாரம் 'ஞாயிறு போற்றுதும்’ என்று துவங்கியது. நமது வாரத் துவக்கம் ஞாயிற்றுக் கிழமையாக அமைந்ததும் தற்செயல் அல்ல.

ஆகவே, சூரியனின் பயணத்தை பூமியின் தளத்தில் இருந்தபடி கிரகித்து, வான மண்டலத்தை தலா 30 பாகைகள் கொண்ட 12 ராசிகளாக நமது முன்னோர் பிரித்தனர். சூரிய மண்டலத்திலுள்ள பிற கோள்களின் இயக்கத்தையும் இந்த அடிப்படையில் தான் அவர்கள் கணக்கிட்டனர்.

இந்த ராசி மண்டலம், பூமியிலிருந்து பார்க்கும்போது வானில் தென்படும் விண்மீன்களின் தொகுப்புகளின் வடிவங்களின் அடிப்படையில் பெயரிடப்பட்டது. உதாரணமாக, ஆட்டின் தலை வடிவில் உள்ள விண்மீன் கூட்டத் தொகுப்பு மேஷம் (ஆடு) எனப்பட்டது. இதுவே ரோம காலக்கணிதத்தில் “ஏரிஸ்’ எனப்படுகிறது. இதுபோலவே, ரிஷபம் (எருமைத்தலை), மிதுனம் (இரட்டையர்), கடகம் (நண்டு), சிம்மம் (சிங்கத் தலை), கன்னி (பெண்), துலாம் (தராசு), விருச்சிகம் (தேள்), தனுசு (வில்), மகரம் (முதலை), கும்பம் (பானை), மீனம் (மீன்) ஆகிய ராசிகள் உருவாக்கப்பட்டன.

பூமி சூரியனைச் சுற்றிவர ஆகும் கால அளவு தோராயமாக 365.25 நாட்கள். இதனை எந்த நவீனக் கருவியும் இல்லாத 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே நமது முன்னோர் துல்லியமாகக் கணித்துள்ளனர். இதையே ஓர் ஆண்டு என்று குறிப்பிட்டனர். வான மண்டலத்தில் கற்பனையாகப் பகுக்கப்பட்ட 12 ராசிகளில் ஒவ்வொரு ராசியிலும் சூரியன் கடந்து செல்லும் கால அளவை 12 மாதங்களாகப் பகுத்தனர்.

இந்தக் கணக்கீடுகள் அனைத்தும் 'சூரியமானம்’ என்ற முறையில் அமைந்தவை. பிற்காலத்தில் இம்மாதங்களுக்கு சித்திரை முதலாய் பங்குனி வரையிலான பெயர்கள் சூட்டப்பட்டன. அதற்கு  ‘சந்திரமானம்’ என்ற மற்றொரு முறை காரணமானது.

வானிலுள்ள நட்சத்திரத் தொகுப்புகளை 27 ஆகப் பகுப்பது வானியல் மரபு. அஸ்வினி முதலாக ரேவதி வரையிலான 27 நட்சத்திரக் கூட்டங்களே 12 ராசிகளாகவும் பிரிக்கப்பட்டன. தவிர, பூமியின் துணைக் கோளான சந்திரனும் பூமியின் இயக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதை நமது முன்னோர் அறிந்திருந்தனர். சந்திரன் பூமியைச் சுற்றிவர 30 நாட்கள் ஆகின்றன. இதில் சந்திரனின் தேய்பிறை நாட்கள் 15; வளர்பிறை நாட்கள் 15. இவையே திதிகள் எனப்படுகின்றன.

ஒவ்வொரு மாதமும் சந்திரன் முழுமையாக மறையும் அமாவாசையும், முழுமையாக வெளிப்படும் பெüர்ணமியும் ஒருமுறை வருகின்றன. இதில் பெüர்ணமி எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரிலேயே மாதங்களுக்கு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. சித்திரை நட்சத்திரத்தில் பெüர்ணமி வரும் மாதமே சித்திரை மாதமாகியது. விசாக நட்சத்திரத்தில் பெüர்ணமி வரும் மாதமே வைகாசி ஆகியது. இவ்வாறே 12 மாதங்களும் பெயர் பெற்றன.

பூமி சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றுவதையும் நமது முன்னோர் கணித்துள்ளனர். அதன் காரணமாக, ஒவ்வொரு ராசியிலும் சூரியன் இருக்கும் காலம் மாறுபட்டு, மாதங்களின் மொத்த நாட்களை நிர்ணயிக்கின்றன. உதாரணமாக, சித்திரை, புரட்டாசி, பங்குனி மாதங்களின் நாட்கள் 30; வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி மாதங்களின் நாட்கள் 31; ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி மாதங்களின் நாட்கள் 29. உலகம் முழுவதும் புழக்கத்தில் உள்ள ரோமானிய ஆங்கில காலண்டர் முறையில் மாதங்களின் நாள் பகுப்பை ஒப்பிட்டால் நமது முன்னோரின் வானியல் அறிவு பிரமிப்பூட்டும்.

இவ்வாறு காலத்தை மாதங்களாகப் பிரித்த நமது முன்னோர், சூரியனுக்கு முதன்மை அளித்து, சூரியன் முதலில் கடந்துசெல்லும் மேஷ ராசியை முதல் மாதமாகக் கணக்கிட்டனர். அதுவே சித்திரை மாதமாக வழங்கப்படுகிறது.

சதுர் மகாயுகம் துவங்கியபோது அனைத்து கோள்களும் மேஷ ராசியில் பூஜ்ஜிய பாகையில் நிலைபெற்றிருந்தன என்பதே சோதிடக் கணக்காகும். அதுவே யுகாதி ஆகும்.  கால வெள்ளத்தில் கோள்களும் நட்சத்திரங்களும் சுழற்சி வேகத்தால் மாறி அமைந்தன.

இருப்பினும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வியாழன் கோள் பழைய நிலைக்கு வருகிறது. சனிக் கோள் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை பழைய நிலைக்கு வருகிறது. பூமியின் இயக்கத்திலும் மாந்தரின் வாழ்விலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் இக்கோள்கள் இரண்டும் ஒரே நேரத்தில் பழைய நிலைக்கு வர 60 ஆண்டுகள் ஆகின்றன. இந்த அடிப்படையில் தான் 'பிரபவ’ முதலாக 'துன்முகி’ வரையிலான 60 தமிழ் ஆண்டுகள் உருவாக்கப்பட்டன.

உலக உயிர்களை வாழ்விப்பவன் ஒளியும் வெம்மையும் நல்கும் சூரியன் தான். எனவே தான் கோடைக்காலம் துவங்கும் சித்திரையை தலைமாதமாகக் கொண்டு புத்தாண்டை நமது முன்னோர் அனுசரித்தனர். கோடைப் பருவம் 4 மாதங்களைத் தொடர்ந்து மழைப்பருவம் 4 மாதங்களும், பனிப்பருவம் 4 மாதங்களும் வருகின்றன. இந்தச் சுழற்சி தொடர்ந்து கொண்டே இருக்கும்.


நன்றி: தினமணி (சென்னை- 14.04.2013)
.
***

புத்தாண்டு வாழ்த்துக்கள்!


அனைவருக்கும் வணக்கம்!
வரும் ஜய வருடப் புத்தாண்டுக்காக,  நல்வாழ்த்துக்களை மகிழ்வுடன் தேசிய சிந்தனைக் கழகம் தெரிவித்துக் கொள்கிறது.

"இனி வரும் காலம் இந்திய இளைஞர்களின் கைகளில்" என்ற வாக்கினை மெய்ப்பிக்கும் வகையில், நமது வாக்கினை வருகின்ற தேர்தலில் நேர்மையும், ஆளுமைத்திறனும், தனிப்பட்ட வாழ்வில் ஒழுக்கமும் கொண்ட பிரதிநிதிகளுக்கு அளித்து நம் நாட்டு ஜனநாயகத்தை வலுபடுத்த தேசிய சிந்தனைக் கழகம் அன்புடன் வேண்டுகிறது.

-ம.கொ.சி.ராஜேந்திரன்,
மாநில அமைப்பாளர், தே.சி.க.

7.3.14

வரலாற்றில் வாழும் வள்ளியம்மை

 -லா.சு.ரங்கராஜன்




 தில்லையாடி வள்ளியம்மை
(பிப்ரவரி 22, 1898 - பிப்ரவரி 22, 1914)

தென்னாப்பிரிக்க இந்தியர்களின் நலனுக்காக பாரிஸ்டர் மோகன்தாஸ் காந்தி அந்நாட்டின் வெள்ளையர் அரசுக்கு எதிராக நடத்திய அகிம்சாபூர்வமான சத்தியாக்கிரகங்கள் மூன்று கட்டங்களாக நிகழ்ந்தன.
அவ்வறப் போராட்டத்தில் உயிரைத் தியாகம் செய்தவர்கள் பற்பலர். ஆனாலும், இளம் வீராங்கனை வள்ளியம்மை போன்று அண்ணல் காந்தியின் உள்ளத்தை உருக்கியவர்கள் ஒரு சிலரே.

அரசு சட்ட விதிகளின்படி நடைபெற்ற திருமணங்கள் மற்றும் கிறிஸ்தவ திருமணங்கள் மட்டுமே செல்லுபடியாகும் என்று தென்னாப்பிரிக்க உச்சநீதிமன்றம் மார்ச் 13, 1913 அன்று தீர்ப்பளித்தது. அதன்படி, இந்தியாவிலோ தென்னாப்பிரிக்காவிலோ இந்து, முஸ்லிம், பார்ஸி முறைப்படி நடந்தேறிய திருமணங்கள் ஏதும் சட்டப்படி செல்லாது என்றானது.

மற்ற அநீதிகளுடன் இந்தத் தீர்ப்பையும் எதிர்த்து இறுதிக்கட்ட சத்தியாக்கிரகம் முடுக்கிவிடப்பட்டது. அதில் பெண்களும் பங்கேற்க வேண்டுமென காந்திஜி கூறினார்.

அதன்படி, அக்டோபர் 1913 இறுதியில் ஜோஹன்னஸ்பர்க் நகரிலிருந்து நியூகாஸிலுக்கு புறப்பட்ட பெண்கள் பேரணியில், வள்ளியம்மையும் அவரது தாயாரும் சேர்ந்து கொண்டனர். பெண்கள் கைது செய்யப்படாததால் அந்த அணி சட்டவிரோதமாக டிரான்ஸ்வால் மாகாணத்தை நோக்கிச் சென்றது. அதன் எல்லையில் அவர்கள் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டு டிசம்பர் 22, 1913 அன்று கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு மூன்று மாத கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அவர்கள் மாரிட்ஸ்பர்க் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறையில் படுமோசமான உணவு, கடுமையான வேலைகள், ஜெயில் துணிமணிகளை துவைத்தல், கட்டாந்தரையில் படுக்கை. அதனால் சிறையில் இருந்தபோதே வள்ளியம்மை நோய்வாய்ப்பட்டார். பின்னர், பாரிஸ்டர் காந்திக்கும் அரசு உள்விவகார மந்திரி ஜெனரல் ஸ்மட்ஸுக்கும் ஏற்பட்ட சமரச உடன்பாட்டிற்குப் பிறகு, தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாகவே (பிப்ரவரி 11, 1914இல்) பெண் சத்தியாக்கிரகிகள் விடுவிக்கப்பட்டனர்.

வள்ளியம்மையின் தந்தை ஆர். முனிசாமி முதலியாரின் பூர்வீகம் பாண்டிச்சேரி. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக குடியேறிய சிலருள் இவரும் ஒருவர். பாரிஸ்டர் காந்தியின் சாத்வீக எதிர்ப்பு இயக்கங்களில் கலந்துகொண்டு சிறை சென்றவர். உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருந்ததால் இவரால் 1913-இல் நடந்த இறுதிக்கட்டப் போராட்டத்தில் கலந்துகொள்ள இயலவில்லை.

இவரது மனைவி ஜானகியம்மை அன்றைய தஞ்சை ஜில்லாவின் (இப்போது நாகை மாவட்டம்) தில்லையாடி கிராமத்தைச் சேர்ந்தவர். மகள் வள்ளியம்மை பிறந்தது (1898) வளர்ந்தது எல்லாமே தென்னாப்பிரிக்காவில் தான். அரசுப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி. 1913 போராட்டத்தின்போது அவருக்கு வயது பதினாறு.

சிறை சென்ற அன்றே வள்ளியம்மையின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. சிறைச்சாலையில் படுத்த படுக்கையாகவே இருந்தார். பிப்ரவரி 11, 1914 அன்று விடுதலையானபோது அவருக்கு கடும் டைபாய்டு காய்ச்சல். விடுதலையான இடத்திலேயே சில நாள்கள் தங்கி சிகிச்சை பெற
நேர்ந்தது.

அண்ணல் காந்தி, தமது ஆங்கிலேய நண்பர் போலக்குடன் அங்கு சென்று பார்த்தார். எலும்பும் தோலுமாக படுத்துக்கிடந்த அப்பெண்ணைக் காண காந்திஜிக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது. அவர்களுக்கிடையே நடந்த குறுகிய உரையாடலை காந்திஜி தமது சுயசரிதையில் இவ்வாறு பதிந்துள்ளார்:

"வள்ளியம்மா, நீ ஜெயிலுக்குப் போனதற்காக வருந்துகிறாயா?' என்று கேட்டேன்.

"வருத்தமா? இப்போது என்னைக் கைது செய்தாலும் திரும்பவும் ஜெயிலுக்குப் போகத் தயாராக இருக்கிறேன்' என்றாள் ஈனக்குரலில்.

"ஆனால் அப்படிப் போனால் உனக்கு மரணமும் நேரிடலாமே?' என்றேன்.

"அதனால் என்ன? தாய் நாட்டிற்காக உயிரையும் தியாகம் செய்ய யாரேனும் தயங்குவார்களா?' என்று பதிலிறுத்தினாள். 

அதற்குச் சில நாட்களுக்குப் பின் (பிப்ரவரி 22, 1914 அன்று) வள்ளியம்மை இறந்து போய்விட்டார்' 

(சுயசரிதம், அத்தியாயம் 40).

வள்ளியம்மையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பாரிஸ்டர் காந்தி தமது  ‘இந்தியன் ஒபீனியன்' வார இதழில் (25-2-1914) வெளியிட்ட செய்தியில், "அவ்விளம் பெண்ணின் (வள்ளியம்மை) எதிர்பாரா திடீர் மரணம் ஓர் கடுந்துயர் நிகழ்வு. இந்தியாவின் மேதக்க உத்தம புத்திரியின் அகால மறைவு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டது. ஏன், எதற்கு என்றெல்லாம் கேள்வி எழுப்பாமல் அப்பெண் தனது கடமையைச் செய்தாள். மகளிர்க்குரிய மன உரம், பெருமிதம், சீரிய பண்பு ஆகியவற்றின் எடுத்துக்காட்டாகத் திகழும் அவளது நினைவை இந்திய சமூகத்தினர் அனைவரும் மனதில் பதிக்க வேண்டும். அவளது குடும்பத்தினர்க்கு எங்களது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என்று குறிப்பிட்டார். இவ்விரங்கல் செய்தியை அடுத்து வள்ளியம்மையின் வாழ்க்கைக் குறிப்பையும் காந்திஜி அவ்விதழில் வெளியிட்டார்.

காந்திஜியின் மூத்த சகோதரர் லக்ஷ்மிதாஸ் காந்தி மார்ச் 9, 1914 அன்று இந்தியாவில் காலமானார் என்ற செய்தி வந்தது. அதையொட்டி காந்திஜிக்கு தென்னாப்பிரிக்காவின் பல இடங்களிலிருந்து ஏராளமான அனுதாபத் தந்திகள் வந்து குவிந்தன.

அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் காந்திஜி  ‘இந்தியன் ஒபீனியன்' (18-3-1914) இதழில் இவ்வாறு எழுதினார்: "மறைந்த என் தமையனார் தான் தந்தையின் ஸ்தானத்திலிருந்து எனக்கு வாழ்வளித்தார். நான் லண்டனில் பாரிஸ்டர் படிப்பதற்கு பண உதவி புரிந்தார். அவர் மறைவு எனக்கு உண்மையிலேயே பேரிழப்பு. அவ்வாறாயினும், வள்ளியம்மையின் அகால மரணம் என் தமையனின் மறைவைக் காட்டிலும் எனக்குப் பேரிடியான செய்தி என்றே தோன்றுகிறது..”

தில்லையாடி வள்ளியம்மையின் அஞ்சா நெஞ்சத்தையும் தியாகத்தையும் நினைவுகூர்ந்து தென்னாப்பிரிக்காவில் பல்வேறு பொதுக்கூட்டங்களில் காந்திஜி மனமுருகிப் பேசியுள்ளார். 

இந்தியாவுக்கு திரும்பவிருந்த காந்திஜிக்கும் கஸ்தூர்பாவுக்கும் ஜோஹன்னஸ்பர்க் நகரில் 1914 ஜூலை அன்று கூட்டப்பட்ட ஓர் மாபெரும் பிரிவுபசாரப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் காந்திஜி உணர்ச்சி பொங்க, "இந்நகர், வள்ளியம்மாளை அர்ப்பணித்துப் பெருமை சேர்த்துள்ளது. ஓ, அந்த இளம் பெண்! நான் இப்போது பேசும்போது அவளது உருவம் என் கண்முன் நிற்கிறது. சத்தியத்துக்காக உயிர் நீத்தவள் அவள். தன்னம்பிக்கையே அவளது ஆயுதம். எனக்கிருக்கும் கல்வியறிவு அவளுக்கில்லைதான். சத்தியாக்கிரகம் என்பதன் தாத்பரியம்கூட அவளுக்குத் தெரிந்திருக்காது. சாத்விகப் போராட்டத்தினால் தென்னாப்பிரிக்க இந்தியர்களுக்கு என்ன நன்மை ஏற்படும் என்பதையும் அவள் அறியாள். ஆயினும், தனது நாட்டு மக்களுக்காக அவள் உத்வேகத்துடன் சிறை சென்றாள். பின்னர் தன் உடல்நலம் முற்றிலும் பாதிக்கப்பட்டு வெளியே வந்தாள். சில நாட்களில் இறந்து போனாள்...” என்று கூறினார்/
(‘இந்தியன் ஒபீனியன்' கோல்டன் நம்பர், 1914).

ஜோஹன்னஸ்பர்க்கில், ஜூலை 15, 1914 அன்று வள்ளியம்மைக்கும் நாகப்பனுக்கும் ஒரு நினைவுச் சின்னம் திறந்து வைக்கப்பட்டபோது பேசிய காந்திஜி, "வள்ளியம்மாவின் முகத்தைப் போன்று நாகப்பனின் முகம் எனக்கு அவ்வளவு தெளிவாக ஞாபகம் இல்லை (தென்னாப்பிரிக்க சாத்வீகப் போராட்டத்தில் சிறை சென்றவர்களில் நாகப்பனும் ஒருவர்; இளைஞன். கடுங்காவல் சிறைவாசத்தின்போது சரியான உணவும் கம்பளி உடையும் தராமல் சிறைக்காவலர்கள் அவரைத் திறந்த வெளியில் புல்வெட்டும் வேலை வாங்கியதால், நிமோனியாவால் பீடிக்கப்பட்டு ஜூலை 6, 1902 அன்று மரணமடைந்தார்). அவ்விருவரிடத்தும் துன்பங்களைச் சகித்துக்கொள்ளும் மன உறுதியும், பொறுமையும், நாட்டுப் பற்றும், சாவுக்கும் அஞ்சாத மனத் திண்ணமும் இருந்தன. இவற்றைவிட ஒரு மனிதனுக்கு வேறு என்னதான் வேண்டும்?' என்று புகழஞ்சலி செலுத்தினார்.

வள்ளியம்மையின் உயிர்த் தியாகத்தைப் போற்றும் வகையில்  ‘வள்ளியம்மாள் மண்டபம்' ஒன்றை தென்னாப்பிரிக்க இந்தியர்கள் நிறுவினர்.

இதுகுறித்து தனது  ‘தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம்' என்ற நூலில் காந்திஜி எழுதியதாவது: "வள்ளியம்மா அவளுடைய சேவையைக் கொண்டு ஓர் ஆலயத்தையே நிர்மாணித்துக் கொண்டு விட்டாள். அவளது கீர்த்தி மிகு புனித உருவம் அநேகர் உள்ளங்களில் இன்றுகூடப் பதிந்து நிற்கும். இந்தியா வாழும்வரை தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரக வரலாற்றில் வள்ளியம்மாளின் பெயரும் நிலைத்து நிற்கும்'.

ஆம்! அவர் மறைந்து நூறாண்டு கடந்த பின்பும் அது நிலைத்து நிற்கத்தான் செய்கிறது.

.

குறிப்பு: கட்டுரையாளர், காந்திய அறிஞர்.
இந்த ஆண்டு தில்லையாடி வள்ளியம்மையின் நூறாவது நினைவு ஆண்டு.

நன்றி: தினமணி (22.02.2014)

காண்க: தில்லையாடி வள்ளியம்மை (விக்கி)

இதையும் காண்க: காந்தியைக் காத்த தமிழ்ப்பெண் (தேசமே தெய்வம்)

 .

16.10.13

'பெண்கள் பங்குபெறாத சட்டசபையை பகிஷ்கரிப்பேன்'

சிந்தனைக்களம்                     -லா.சு.ரங்கராஜன்


"பெண்களுக்குப் போதிய பங்கு இல்லாத சட்டசபைகளை நான் பகிஷ்கரிப்பேன்' என்று 1931-இல் நடைபெற்ற இரண்டாம் வட்டமேஜை மாநாட்டில் காந்திஜி பகிரங்கமாக அறிவித்தார்.

இந்தியாவின் வருங்கால அரசியல் அமைப்பு பற்றி விவாதித்து முடிவு காண்பதற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் 1931 செப்டம்பர் மாதம் லண்டனில் இரண்டாம் வட்டமேஜை மாநாட்டைக் கூட்டியது. மாநாட்டில் மொத்தம் 112 பிரதிநிதிகள். அதில் கலந்துகொள்ள இந்திய தேசிய காங்கிரஸின் ஒரே பிரதிநிதியாக மகாத்மா காந்தி லண்டன் சென்றார்.

காந்திஜியைத் தவிர்த்து இந்திய தரப்பில் சென்ற மற்ற அனைவரும் வைஸ்ராயால் நியமனம் பெற்றவர்கள். சுமார் மூன்று மாத காலம் (1931 செப்டம்பர் 7 முதல் 1931 டிசம்பர் முதல் தேதி வரை) நடைபெற்ற அம் மாநாட்டிலும் அதன் தனிக் குழுக்களின் கூட்டங்களிலும் இழுபறி நிலைதான் மிஞ்சியது. இந்தியப் பிரதிநிதிகளிடையே சமரச முடிவுக்கோ, சமாதானப் பேச்சுவார்த்தைக்கோ இடமில்லாமற் போயிற்று. இந்தியப் பிரதிநிதிகள் அவரவர் சிறுபான்மையினரின் உரிமைக் கோரிக்கைகளை முன்வைப்பதிலேயே காலம் கடத்தினர்.

வட்டமேஜை மாநாட்டில் கூட்டாட்சி முறை பற்றி சாங்கி பிரபுவின் தலைமையில் நடந்த கமிட்டி விவாதத்தின்போது பேசிய காந்திஜி, "காங்கிரûஸப் பொறுத்தவரை அதன் வேட்பாளர் பட்டியலில் மாதர் உள்பட எல்லாப் பிரிவினருக்கும் கூடியவரை பிரதிநிதித்துவம் வழங்கப்படும்' என்று கூறினார். அதனைக் குறிப்பிட்டு, மாதர் பிரதிநிதிகளுள் ஒருவராக வந்திருந்த ராதாபாய் சுப்புராயன் (டாக்டர் பி. சுப்புராயனின் மனைவி) சில கேள்விகளை எழுப்பினார். மாநாட்டு நடவடிக்கை அறிக்கையில் அது பற்றிக் கண்டுள்ள அதிகாரபூர்வமான வாசகத்தின் தமிழாக்கம் பின்வருமாறு:

ராதாபாய் சுப்புராயன்: மகாத்மா காந்தியிடம் வினயத்தோடு ஒரு கேள்வி எழுப்பட்டுமா? மாதர்களின் நிலைபற்றி நீங்கள் குறிப்பிடுகையில், மத்திய சட்டசபையில் பெண் உறுப்பினர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்கிற நிலை ஏற்பட்டால் அப்போது தகுதி வாய்ந்த சில பெண்கள் நேரடியாக நியமனம் செய்யப்படுவதற்கான ஷரத்து வருங்கால சட்டமன்ற விதிப்பட்டியலில் இடம்பெறுமா?

காந்திஜி: மகளிர் யாருமே தேர்ந்தெடுக்கப்படாத அல்லது அவர்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் அற்ற சட்டசபையை நான் நிச்சயம் பகிஷ்கரிப்பேன். இந்திய தேசிய காங்கிரஸின் சார்பில் நான் இதை அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறேன். வருங்கால சட்டமன்றங்களில் மகளிருக்கு போதிய இடமளிக்க முழு ஆதரவும் காப்புறுதியும் தர தயங்க மாட்டோம். அதனை அமல் செய்வது மிக மிக எளிது. ஆனால் அதன் பொருட்டு மகளிர்க்காக ஒரு தனித் தேர்தல் தொகுதி அமைப்பதற்கு நான் ஒப்ப மாட்டேன்.

ராதாபாய் சுப்புராயன்: தனித் தொகுதி தேவையில்லைதான். ஆனாலும் பொதுத் தேர்தலில் ஓரளவுகூட பெண்கள் தேர்ந்தெடுக்கப்படாத நிலை ஏற்பட்டால், மத்திய சட்டமன்றமே சில மாதர்களைத் தேர்ந்தெடுத்து, கூட்டு உறுப்பினர்களாக நியமிக்க வழி வகுப்பீர்களா?

காந்திஜி: அப்படியேதான்! தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அந்த சட்டமன்றமே போதிய மாதர் பிரதிநிதிகளை வெளியிலிருந்து தேர்ந்தெடுத்து நியமிப்பதற்கான தனி அந்தஸ்தை மகளிர் பெறுவர். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படாத வரையில் சட்டமன்ற நடவடிக்கைகளை தொடர முடியாது என்கிற நிலை ஏற்பட வேண்டும்.

***

இந்தியா சுதந்திரம் பெறுவது நிச்சயமான 1946 இறுதியில் அண்ணல் காந்தி தமது வாராந்தர ’அரிஜன்' (7-4-1946) இதழின் கேள்வி - பதில் பகுதியில் மாதரின் சட்டமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி இவ்வாறு விளக்கியுள்ளார்:

வாசகர் கேள்வி: "தேர்தல் அமைப்புகளில் பெண்களை அதிக அளவில் தேர்வு செய்ய காங்கிரஸ் தயக்கம் காட்டுவதைக் காண்கிறேன். பல்வேறு அமைப்புகளிலும் பெண்கள் பங்கு பெறுவது மிக அவசியமும் நியாயமானதும் ஆகும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்றே நம்புகிறேன். இந்தப் பிரச்னையை நீங்கள் எவ்வாறு கையாளப் போகிறீர்கள்?''

பதில் (காந்திஜி): "சரிசமமான பிரதிநிதித்துவத்திலோ விகிதாசார நிர்ணயத்திலோ எனக்கு எவ்வித மோகமும் இல்லை. தகுதி ஒன்றே தேர்வின் உரைகல்லாக இருத்தல் வேண்டும். இருப்பினும், மாதரை இகழ்ச்சிக்கு உள்ளாக்கும் வழக்கம் இருந்துவருவதால் அதற்கு நேர்எதிர்மறையான வழக்கத்தைப் பழக்கத்தில் புகுத்த வேண்டியது அவசியமாகிறது. அதாவது, ஆண்களுக்கு நிகராகத் தகுதி படைத்த பெண்களுக்கே எந்த ஒரு தேர்தலிலும் காங்கிரஸ் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பேன். அதன் விளைவாக ஆண்களே இல்லாமல் முழுக்க முழுக்கப் பெண்களே சட்டமன்ற அமைப்புகளில் இடம்பெறுவதானாலும் கூட ஒன்றும் பாதகமில்லை. இருப்பினும், பெண் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே ஒரு அமைப்பின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று ஒரு பெண் வலியுறுத்துவது ஆபத்தான சமாசாரம்.

பெண்களாகட்டும், அல்லது வேறு எந்தப் பிரிவினராகட்டும், தனிச்சலுகைகள் பெறுவதை அவர்களே ஏளனமாகக் கருதி மறுக்க வேண்டும். அவர்கள் நியாயத்தை நாட வேண்டுமே தவிர, அனுகூலச் சலுகைகளை அல்ல. ஆகவே, பெண்கள் எடுக்க வேண்டிய முதல் நடவடிக்கை - ஏன்? ஆண்கள் கூடத் தான் - மகளிரிடையே அவரவர் தாய்மொழி வாயிலாய்ப் பொதுக் கல்வியறிவைப் புகட்டிப் பரப்பி, குடிமகளிருக்கான பல்வேறு கடமைகளை உணர்த்தி, பொதுவாழ்வில் பெண்கள் போதிய தகுதி பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

அத்தியாவசியமான இந்த பெண் நலச் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதில் ஆண்களே முதன்மை வகிக்க வேண்டும் என்று நான் கூறுவேன். அது ஆண்கள் பெண்களுக்கு அளிக்கும் ஆதரவுச் செயல் என்ற வகையில் நான் இவ்வாறு கூறவில்லை; மாறாக, பெண்களுக்கு என்றோ சேர்ந்திருக்க வேண்டிய நியாயத்தை இப்போது காலங்கடந்த நிலையிலாவது வழங்க ஆண்கள் முன்வர வேண்டும் என்பதே ஆகும்''.

***

இந்திய மாதரின் நிலைமையை உயர்த்துவதில் மகாத்மா காந்தியின் மகத்தான பங்களிப்பைப் பற்றி சொல்லவும் வேண்டுமா? தேசிய போராட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பங்கேற்பது காந்திய சத்தியாக்கிரக இயக்கத்தின் ஓர் அம்சம். 1930 மார்ச் 12 அன்று தொடக்கம் பெற்ற உப்பு சத்தியாக்கிரகத்தின்போது சட்டமீறல் நடவடிக்கையின் பெயரில் சுமார் 30,000 பேர்கள் கைது செய்யப்பட்டு வெவ்வேறு தண்டனைகளுக்கு உள்ளாகினர். அவர்களுள் 17,000 பேர்கள் பெண்கள் என்பது இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

சென்னையில் 1946 ஜனவரி 27 அன்று நடைபெற்ற நிர்மாணத்திட்ட ஊழியர் மாநாட்டில் காந்திஜி பேசியபோது ஒரு புதிய கருத்தை வெளியிட்டார். அதாவது, பஞ்சாயத்துத் தேர்தல்களிலோ சட்டமன்றத் தேர்தலிலோ நிற்கும் பெண் வேட்பாளர்கள், மக்களின் பொது நலனையே பொதுக் குறிக்கோளாக ஒருமித்து ஏற்று இணைந்து, கட்சி வேறுபாடுகளைத்  தவிர்த்து, மக்கள் நலனையே கருத்தில் இறுத்தி சட்டமன்றங்களுக்குச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

’பெண்களின் நிலை' என்ற தலைப்பில் அண்ணல் காந்தி 1929-ஆம் ஆண்டு எழுதிய கட்டுரையில், "பெண்கள் தியாகத்தின் வடிவம்; பொறுமையின் பெட்டகம். அவர்கள் அரசியல் வாழ்வில் ஈடுபடுகையில், தூய்மை மேலோங்கும். சொத்துக் குவிப்புப் பேராசையும், வரம்பு கடந்த புகழார்வத்தையும் கட்டுப்படுத்தும்'' என்றார்.

இறுதியாக, 1947 ஏப்ரல் 7 அன்று புது தில்லியில் அவரைச் சந்தித்த சாந்திநிகேதன் மாணவியருடன் உரையாடியபோது காந்திஜி கூறினார்: நமது சாத்திரங்கள் மாதரை ’அர்த்தாங்கினி’ (மானிடனின் சரிபாதி அங்கம்) என்று அர்த்தநாரீஸ்வரத் தத்துவத்தில் குறிப்பிடுகின்றன. ஆனால் ஆண்களோ பெண்ணை ஏதோ விளையாட்டுக் கருவியாகப் பாவிக்கின்றனர்; அடிமை போல நடத்த முற்படுகின்றனர். பெண் குழந்தை பிறந்தால் குடும்பம் சோகத்தில் ஆழ்கிறது; ஆண் மகவு பிறந்தாலோ வீடு பூராவும் விழாக் குதூகலிப்புத்தான்! இந்தத் தீங்கான மனப்பான்மை ஓயும்வரை முன்னேற்றம் ஏதும் காண்பது அரிது'' என்று சாடினார்.

அந்த உரையாடலின்போது காந்திஜி மேலும் கூறினார்: "பெண்களிடம் முறைகேடாக நடந்துகொள்வது, அவர்களை அவமானப்படுத்துவது போன்ற சம்பவங்களை நாள்தோறும் கேள்விப்படுகிறோம். அத்தகைய இழிவான நிகழ்வுகள், நாம் எவ்வளவு தூரம் வெட்கங்கெட்டு, கயமை தோய்ந்து, மிருகத்தினும் கேடு கெட்டவர்களாகிறோம் என்பதையே எடுத்துக் காட்டுகின்றன'' என்று கடிந்துரைத்தார்
(’கலக்டட் வொர்க்ஸ் ஆஃப் மகாத்மா காந்தி', நூல் 87 - பக். 229-230).

சுயராஜ்யம் என்றால் என்ன என்பதற்கான விளக்கத்தை காந்திஜி 1921-ஆம் ஆண்டிலேயே தமது ’நவஜீவன்' கட்டுரையொன்றில் பட்டியலிட்டுள்ளார். சுயராஜ்யத்திற்கான இரு முக்கிய நிபந்தனைகளாவன: "சுயராஜ்யம் என்றால் ஒவ்வொரு மாதரையும் தமது அன்னையாகவோ, சகோதரியாகவோ பாவித்துப் போற்றி மதிப்பளிக்க வேண்டும்; மேலும், என்றைக்கு ஓர் இளம் பெண் நள்ளிரவில் அச்சமேதுமின்றி தன்னந்தனியாக எங்கும் நடமாட முடிகிறதோ அன்றே பூரண சுயராஜ்யம் பெற்றவர்களாவோம்'', என்றும் விளக்கம் அளித்துள்ளார்..
(நவஜீவன்'; 14-8-1921).

சுதந்திர இந்தியாவின் சட்டசபைகளில் பெண்களுக்குப் போதிய இடம் அளிக்கப்பட வேண்டும். பெண்கள் தன்னந்தனியாக பயமின்றி நள்ளிரவிலும் செல்லும் நிலை ஏற்பட வேண்டும் என்கிற அண்ணல் காந்தியின் எதிர்பார்ப்புகள், இன்றைய இந்திய மகளிர் அனைவரின் அபிலாஷையும்கூட. அவை நிறைவுபெறும் பொன்நாள் எந்நாளோ?

நன்றி: தினமணி