நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்
ஞானிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞானிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13.7.12

வெற்றிக்கு வழி

சுவாமி சிவானந்தர்
(ஐம்பதாம் ஆண்டு நினைவுநாள்: ஜூலை 14)

இந்த உலகம் ஒரு வித்தியாசமான உலகம். இந்த மனமும் அதேபோல விசித்திரமானது. நெருங்கிய நண்பர்களிடையே கூட அவ்வப்போது சிறு சிறு வேற்றுமையும் மனக்கசப்பும் ஏற்படுவதுண்டு. சில சமயங்களில் அபிப்பிராய பேதம் எரியும் நெருப்பில் எண்ணெய் விட்டது போல ஆகிவிடும். பல்வேறு மனங்களோடு பழகும்போது நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நீங்கள் அனுசரணையும், பெருந்தன்மையும், புரிந்துகொள்ளக் கூடியதுமான இருதயத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அன்றாட வாழ்க்கைப் போராட்டத்திலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளும் படிப்பினையைக் கொண்டு மிகவும் ஜாக்கிரதையாக உங்களைத் திருத்தி அமைத்துக்கொள்ள வேண்டும்.

-சுவாமி சிவானந்தர்

காண்க:

தெய்வீக வாழ்க்கையை உபதேசித்தவர்

27.4.12

வழிகாட்டிய வரதன்!

 ஸ்ரீ ராமானுஜ ஜெயந்தி: ஏப். 27

.

மகான் ஸ்ரீராமானுஜர். 1017, சித்திரை 13ஆம் நாள் திருவாதிரை நட்சத்திரத்தில் ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார். காந்திமதியம்மாள் - கேசவசோமாயாஜியாண்டானின் திருக்குமாரர் இவர்.

 கேசவ சோமயாஜியார், ராமானுஜனுக்கு உபநயனம் செய்வித்தார். காஞ்சிக்கு அருகே திருப்புட்குழியில் யாதவப்ரகாசரிடம் ராமானுஜரும் அவரின் சித்தி மகன் கோவிந்தனும் கல்வி பயின்றனர். ஒருமுறை, யாதவப்ரகாசர் வேத அர்த்தத்திற்கு முரண்பட்ட விளக்கம் கூற, தன் அழகான வாதங்களால், அவரை மடக்கினார் ராமானுஜர். அதனால், யாதவப்ரகாசருக்கு தலைக்குனிவு ஏற்பட்டது. ராமானுஜர் மீது பகைமை ஏற்பட்டு, அவரைக் கொல்ல திட்டம் தீட்டினார்.

 வட தேச யாத்திரையாக யாதவப்ரகாசரும் அவரது சீடர்களும் ராமானுஜருடன் காசியை அடைந்தனர். அங்கே கங்கைக் கரையில் ராமானுஜர் இறங்கினார். அப்போது, கோவிந்தர் குருவின் திட்டத்தை ராமானுஜரிடம் கூறினார். அதுகேட்ட ராமானுஜர் குருவிடமிருந்து தப்பினார். கோவிந்தர், தன் குருவிடம் மிக்க வருத்தம் தோய்ந்தவாறு ராமானுஜன் காட்டில் கொல்லப்பட்டதாகக் கூறினார்.

 ராமானுஜர் நெடுந்தொலைவு நடந்தார். அந்தி சாயும் நேரம். இருள் கவ்வியது. வழி தெரியவில்லை. அப்போது, ஒரு வேடனும் அவனது மனைவியும் அந்த வழியில் செல்வதைக் கண்ட ராமானுஜர், "எங்குச் செல்கிறீர்கள்?' என்று கேட்டார். அவர்களும், காஞ்சிபுரம் செல்வதாக பதில் கூறினர். நள்ளிரவு, மூவரும் ஒரு மரத்தடியில் உறங்கினர். நடந்த களைப்பினால் நீர் வேட்கை ராமானுஜருக்கு ஏற்பட்டது. நீர் தருமாறு அவர் வேண்ட, வேடனும் நீரளித்து வேட்கையைத் தணித்தார்.

 பொழுது புலர்ந்தது. காஞ்சி எல்லைக்கு அருகில் தான் இருப்பதை உணர்ந்தார் ராமானுஜர். ஆனால் வேடனையும் அவனது மனைவியையும் காணவில்லை. தான் இருப்பது சாலைக்கிணறு என்பதையும், வழிதெரியாது தவித்த தன்னை அழைத்து வந்த வேடர் மக்கள் வரதராஜனும், பெருந்தேவித் தாயாருமே என்பதையும் நினைத்து ஆனந்தக் கண்ணீர் மல்கினார். அன்று முதல் வரதராஜப் பெருமானுக்கு சாலைக் கிணற்றிலிருந்து தீர்த்த கைங்கர்யம் செய்து வந்தார் ஸ்ரீராமானுஜர்.


- பிள்ளைலோகம் திருவேங்கடாசாரியார் 
நன்றி: வெள்ளிமணி - தினமணி (27 .04 .2012)


காண்க: ஸ்ரீ ராமானுஜர் (விக்கி)


  .

26.4.12

குருவிடம் கேட்ட வரம்!


 ஸ்ரீ சங்கர ஜெயந்தி: ஏப். 26 



கங்கைக் கரையில் பிரம்ம நிஷ்டையில் இருந்தார் ஸ்ரீசங்கர பகவத் பாதர். திடீரென அவரது தியானம் கலைந்தது. கண்களைத் திறந்து பார்த்தால், எதிரே ஒருவர் நின்றுகொண்டிருந்தார். பார்த்ததும் அவருக்குத் தெரிந்தது, அவர்தான் கெளட பாதர் என்பது.

உடனே ஆசனத்தில் இருந்து எழுந்தார். அவர் பாதம் பணிந்து அவரைப் போற்றி ஒரு துதியைச் சொன்னார்.

"சிவந்த மேனி கொண்டவர். தமது இடக்கையில், கவிழ்த்த வெண்தாமரை மொட்டுப் போன்று தோன்றும் கமண்டலத்தையும், வலக்கையில் கருவண்டுகள் போன்ற ருத்ராட்சத்தால் ஆன ஜெப மாலையையும் வைத்திருக்கிறார். வலக்கை கட்டை விரலால் ருத்ராட்சத்தை உருட்டிக் கொண்டிருக்கிறார். இது, கருவண்டுகள் அவரது கைகளாகிய தாமரை மலரைச் சூழ்ந்து கொண்டிருப்பதுபோல தோன்றுகிறது'' என்று கூறித் துதித்தார்.

கெளட பாதர், ஸ்ரீசங்கரரின் குருவான கோவிந்த பகவத்பாதருக்கும் குருவானவர். இருவரும் நல்ல ஞானம் பெற்றவர்கள். இருப்பினும், குரு-சிஷ்யன் என்ற முறையில், கௌட பாதர் சங்கரரிடம், "காமம் போன்ற விரோதிகளைக் களைந்தீர்களா, சாதனா சந்துஷ்டியை உணர்ந்தீர்களா, அஷ்டாங்க யோக சித்தி பெற்றீர்களா?'' என்றெல்லாம் கேள்விகளைக் கேட்கிறார்.

அதற்கு சங்கரர் அடக்கத்துடன், "வியாஸமுனியின் புதல்வரான சுகாசாரியரிடம் உபதேசம் பெற்ற உங்களது பாத தரிசனம் எனக்குக் கிடைத்ததே பெரும் பேறு. உங்களை ஒரு முறை தரிசித்தாலேயே வாய் பேச இயலாதவன் பேசவும், மூடன் அறிவாளியாகவும், பாவம் செய்தவன் தனது பாவங்கள் கழுவப் பெற்று தூயவனாகவும் ஆகிடுவர். எனவே உங்கள் தரிசனம் மூலம் இவை எல்லாவற்றையும் சிறிது காலத்தில் நான் அடைந்திடுவேன்'' என்று கூறி வணங்கினார்.

இந்த பதிலைக் கேட்ட கௌடபாதர் மிகவும் மகிழ்ந்து, ""உன் உயர்ந்த குணம், உனது பேச்சு மற்றும் பணிவின் மூலம் தெரிகிறது. உயர்ந்த விளக்கவுரைகளைச் செய்தும், நான் எழுதிய மாண்டூக்ய உபநிஷத விளக்கத்தை எளிமைப்படுத்தியதற்கும் உனக்கு ஆசி வழங்குகிறேன், ஏதேனும் வரம் கேள்'' என்றார்.

அதற்கு ஸ்ரீசங்கரர், "கலியுகம் மட்டுமல்லாது மற்ற மூன்று யுகங்களிலும் அவதாரம் செய்த பாக்யத்தை இன்று உங்கள் தரிசனத்தால் பெற்றேன். இதைவிடச் சிறந்ததாக நான் அடையவேண்டியது ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும் நான் வேண்டுவது ஒன்றுதான். அது, என் சித்தம் எப்போதும் பிரம்மத்திலேயே நிலைத்திருக்க அருள வேண்டும்'' என்றார்.

-ராமண்ணா 
நன்றி: வெள்ளிமணி - தினமணி (20.04.2012)
.
.

தமிழ்த் தாயின் தவப்புதல்வன்!



ஸ்ரீனிவாச ராமானுஜன் 

 (நினைவு நாள்: ஏப். 26)

 
இன்று ராமானுஜனின் நினைவு நாள்- இவ்வாண்டு ராமானுஜனின் 125-வது ஆண்டு. உலக சரித்திரத்தில் ஆர்யபட்டாவுக்கு எப்படி ஓர் இடமுண்டோ அதேபோலத் தனக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ள இன்னொரு மாமேதை ராமானுஜன். சிலர் தங்களது படிப்பாலும் உழைப்பாலும் மேதைகளாகிறார்கள். ஆனால் 'கணித மேதை' ராமானுஜன் பிறவியிலேயே மேதை.

இவர் விட்டுவிட்டுச் சென்றிருப்பது இரண்டு நோட்டுப் புத்தகங்கள் மட்டுமே. அதில் இருக்கும் கணித மேதைமை உலகளாவிய அளவில் தன்னிகரற்றது என்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. சிலர் வாழ்ந்து மறைகிறார்கள். ராமானுஜன் போன்ற ஒரு சிலர் மறைந்தும் வாழ்கிறார்கள்.

வறுமை ஒருவருடைய திறமையை முடக்கிப் போட்டுவிட முடியாது என்பதற்கு  'கணித மேதை'  ராமானுஜன் ஓர் உதாரணம். சிறுவன் ராமானுஜன் பள்ளிக்குச் செல்லப் புறப்பட்ட நிலையில் தரையில் அமர்ந்து சாப்பிடுவதற்கு ஆயத்தமானான். சமையலறையிலிருந்து மிகுந்த தயக்கத்துடன் மெதுவாக வெளியே வந்த ராமானுஜனின் தாயார் அன்று வீட்டில் சுத்தமாக ஒரு பிடி அரிசிகூட இல்லையென்றும் பக்கத்து வீடுகளில் பலமுறை வாங்கித் திருப்பித்தர இயலாததால் மீண்டும் அவர்களிடம் கேட்க முடியவில்லையென்றும் ராமானுஜனிடம் சோகத்துடன் தெரிவித்தார்.

மாலை வீட்டுக்கு வரவேண்டிய நேரத்துக்கு ராமானுஜன் வராததால் பதறிப்போன தாயார், ராமானுஜனின் நெருங்கிய நண்பனான வகுப்புத்தோழன் அனந்தராமனின் வீட்டுக்குச் சென்று விசாரித்தும் தகவல் ஏதும் கிடைக்காததால் ராமானுஜனைத் தேடுவதற்கு அனந்தராமனை அனுப்பினார். ராமானுஜன் அங்குள்ள பெருமாள் கோயில் ஒன்றில் உள் மண்டபத்தில் தலைக்குப் புத்தகப் பையை வைத்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நிலையில் அனந்தராமன் பார்த்தான். மண்டபத்தின் காரைத்தரை முழுக்க சாக்கட்டியால் கணக்குப் போடப்பட்டிருந்தது. 

முந்தைய நாள் வகுப்பறையில் தனது கணித ஆசிரியர் ஒரு சிக்கலான கணிதப் புதிரைக் கரும்பலகையில் போட்டுப் போட்டுப் பார்த்தும் உரிய விடை கிடைக்காமல் தொடர்ந்து முயற்சித்து வந்தார். காலையில் வகுப்பறையில் இருந்தபோதும் அந்தக் கணக்கு ராமானுஜனின் மனதைக் குடைந்து கொண்டேயிருந்தது. மதிய இடைவேளையில் வகுப்பைவிட்டு வெளியே வந்து சாக்கட்டியால் பெருமாள் கோயில் மண்டபத் தரையில் அந்தக் கணக்கை பல முறைகளில் போட்டுப் பார்த்துக் கொண்டேயிருந்தவன் பசியும் களைப்பும் சேர்ந்துகொள்ள அங்கேயே படுத்துத் தூங்கிவிட்டான். காலை முதல் உணவில்லை என்பதற்காகக்கூட கவலைப்படாத ராமானுஜன் கணக்குக்கு விடை கிடைக்கவில்லையே என்றுதான் கவலைப்பட்டான்.

ராமானுஜனின் தந்தையார் தனது ஊரான கும்பகோணத்தில் ஒரு ஜவுளிக் கடையின் குமாஸ்தாவாக மாதம் ரூ. 20 சம்பளத்துக்கு வேலையில் இருந்தார். இந்த மிகக்குறைந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்த இயலாத சூழல், வெளியூரிலிருந்து வந்த இரண்டு மாணவர்கள் மாதந்தோறும் தலா பத்து ரூபாய் வீதம் ராமானுஜனின் தாயார் கோமளத்தம்மாளிடம் உணவுக்கும் தங்குவதற்குமாகச் செலுத்தி கும்பகோணம் கல்லூரியில் படித்து வந்தனர். இவற்றையெல்லாம் வைத்துத்தான் அந்தக் குடும்பம் இயங்கி வந்தது.

ராமானுஜனின் வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் இருவரும் ஒரு நாள் தங்களது கணிதப் பேராசிரியர் வகுப்பில் நடத்திய கணிதச் சூத்திரம் குறித்து வீட்டுக்கு வந்த பிறகு தங்களுக்குள் சர்ச்சை செய்து கொண்டிருந்தனர். அப்போது இந்த வாதப் பிரதிவாதங்களைக் கவனித்துக் கொண்டிருந்த ராமானுஜன் அவர்களின் கணித நோட்டுப் புத்தகத்தை வாங்கிப் பார்த்தான். அந்த மாணவர்கள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடையும் வகையில், இரண்டு, மூன்று நிமிடங்களில் சர்ச்சைக்குரிய அந்தக் கணக்கின் சரியான வழிமுறைகளையும் விடையையும் எழுதிக் காட்டினான் ராமானுஜன்.

கும்பகோணம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவனான ராமானுஜன் மெட்ரிகுலேசன் தேர்வில் பள்ளியின் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றான். கும்பகோணம் அரசு கல்லூரியில் எப்ஏ வகுப்பில் சேர்ந்தான்.

கும்பகோணம் கல்லூரியில் ஜூனியர் சுப்பிரமணியம் ஸ்காலர்ஷிப் என்ற ஒரு உதவித்தொகையினை படிப்பில் சிறந்த மாணவனுக்கு வழங்கி வந்தனர். அந்த உதவித்தொகை கிடைத்தால்தான் கல்லூரியில் படிப்பைத் தொடர முடியும் என்ற நிலையிலிருந்த ராமானுஜன், அதற்குண்டான தேர்வுகளை எழுதினார். கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற ராமானுஜன் ஆங்கிலத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்குத் தேவையான மதிப்பெண்களைவிட மூன்று மதிப்பெண்கள் குறைவாகப் பெற்றுத் தோல்வியுற்றார்.

இரண்டாவது முறை எழுதி உதவித்தொகைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற ராமானுஜத்தால் எப்ஏவுக்கான இறுதித் தேர்வில் கணிதத்தில் நூற்றுக்கு நூறு வாங்கியும் பிற பாடங்களில் தேர்ச்சி பெற இயலவில்லை. தோல்வியடைந்த நிலையில் பெற்றோரின் வேண்டுகோளின் விளைவாகவும் கணிதப் பேராசிரியர் பி.வி. சேஷ ஐயரின் தூண்டுதலாலும் மீண்டும் எப்ஏ படிக்க எண்ணி சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்தார். திடீரென்று ஏற்பட்ட எதிர்பாராத உடல்நலக் கோளாறு காரணமாக இவர் எப்ஏ படிப்பையே பாதியில் விட்டுவிட்டு கும்பகோணம் திரும்பவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது.

பிறகு இடைவெளி விட்டு 1907-இல் மூன்றாவது முறையாக கல்லூரியில் சேராமல் நேரடியாக எப்ஏ தேர்வு எழுதி அதிலும் தோல்வியைத் தழுவினார்.

தனித்திறன் பெற்ற ராமானுஜன் வேலையில் சேர்ந்து முடங்கிவிடக்கூடாது என்று எண்ணியே சேஷ ஐயர் சென்னையில் சிறப்பாகச் செயல்பட்டு வந்த இந்தியக் கணிதச் சங்கத்துடன் ராமானுஜனுக்குத் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்ததோடு அதில் சேரப் பரிந்துரையும் செய்தார்.

அதிலிருந்து ராமானுஜன் மேற்கொண்ட கணித ஆய்வுகளை அச்சங்கத்துக்கு அனுப்பி வந்தார். கும்பகோணத்திலிருந்தவாறே கணித ஆய்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ராமானுஜன் ஒரு கட்டத்தில் 1911-இல் சென்னைக்கே சென்று முழு மூச்சாக ஆய்வுப் பணியில் ஈடுபட்டார்.

இந்தச் சூழலில்தான் சென்னையில் தங்கியிருப்பதற்கும் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுவதற்கும் தேவையான வருமானத்தை உருவாக்க எண்ணி சென்னையில் 1912-இல் அக்கெüண்டண்ட் ஜெனரல் அலுவலகத்தில் ஒரு குமாஸ்தாவாக வேலையில் சேர்ந்தார். இந்த வேலை பிடிக்காமல் ஒன்றரை மாதத்துக்குப் பிறகு சென்னை போர்ட் டிரஸ்ட்டில் ஆவணப் பிரிவு குமாஸ்தா வேலையில் மாதம் ரூ. 30 சம்பளத்துக்குச் சேர்ந்தார். தன் மனைவி மற்றும் தாயாரையும் சென்னைக்கே அழைத்து வந்தார் ராமானுஜன். தனது குடும்பப் பொருளாதாரப் பற்றாக்குறையை ஈடுசெய்ய கல்லூரி மாணவர்களுக்கு காலை, மாலை இரு வேளையும் தனி வகுப்பு நடத்தி வந்தார்.

ராமானுஜனின் அபாரக் கணிதத் திறமையை நன்கு உணர்ந்துகொண்ட போர்ட் டிரஸ்ட்டின் தலைவர் ஆங்கிலேய அதிகாரி சர்.பிரான்ஸிஸ் ஸ்பிரிங், மேலாளர் ராவ்பகதூர் எஸ். நாராயணய்யர் ஆகியோர் ராமானுஜனை நன்கு ஊக்குவித்தனர். ஒரு கட்டத்தில் அலுவலகத்திலேயே கணித ஆராய்ச்சியை மேற்கொள்ள மகிழ்வுடன் அனுமதித்தனர்.

இந்தக் காலகட்டத்தில்தான் லண்டன் மாநகரிலுள்ள உலகப் புகழ்மிக்க கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கணிதப் பேராசிரியரும், கணிதத்துறை வல்லுநருமான பேராசிரியர் ஜி.எச்.ஹார்டி சர்வதேச கணிதச் சஞ்சிகை ஒன்றில் ஒரு கடினமான கணிதப் புதிரை வெளியிட்டு அதற்கு உலகில் எப்பகுதியிலுள்ளவரும் தக்க பதிலளிக்கலாம் என்ற வேண்டுகோளையும் விட்டிருந்தார்.

இதற்கு முன்பே பல வெளிநாட்டு அறிஞர்களுக்கு தனது கணிதக் குறிப்புகளை அனுப்பியிருந்தும் எவ்விதப் பலனும் ஏற்படாத நிலையில், ராமானுஜன் பேராசிரியர் ஜி.எச். ஹார்டியின் கணிதப் புதிருக்கு உடனடியாக விடையை அனுப்பி வைத்தார்.

ராமானுஜனின் விடை ஹார்டியை வியப்பில் ஆழ்த்தியது. உலகெங்கும் இருந்து வந்து குவிந்துள்ள புதிருக்கான பதிலில் எந்தப் பேராசிரியரும் எழுதாத அளவில் கனகச்சிதமான புதிய முறையில் எழுதப்பட்டிருந்த வழிமுறைகளையும் விடையையும் பார்த்துப் புல்லரித்துப் போனார் ஹார்டி. ஹார்டி ராமானுஜத்தைப் பாராட்டி நெகிழ்ச்சியுடன் ஒரு கடிதம் எழுதினார்.

இந்தக் கடிதம் ராமானுஜத்தை ஆனந்தத்தின் எல்லைக்கே இட்டுச் சென்றது. இவரின் இதர கண்டுபிடிப்புகள் அனைத்தையும் ஹார்டிக்கு உடனே அனுப்பி வைத்தார். ஹார்டி அங்கிருந்தவாறே எடுத்த முயற்சியினாலும் சென்னையிலிருந்த ராமானுஜனின் கணிதத் திறமையை நன்கு உணர்ந்த பிரமுகர்களின் பரிந்துரையின் பேரிலும் சென்னைப் பல்கலைக் கழக கணித ஆராய்ச்சி மாணவராகச் சேர்க்கப்பட்டார் ராமானுஜன். இதற்கென உதவித்தொகையாக பல்கலைக் கழகம் மாதம் ரூ. 75 ராமானுஜனுக்கு அளித்தது.

பேராசிரியர் ஹார்டி இன்னும் பல முறைகளில் முயன்று ராமானுஜனை லண்டனிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு வந்து அங்கு கணித ஆராய்ச்சியைத் தொடர வழி ஏற்படுத்தித் தந்தார். அரசு அதிகாரிகளும் பல்கலைக் கழக உயர் மட்ட அலுவலர்களும் இதற்கு ழுழுமையாக ஒத்துழைத்தனர்.

ராமானுஜன் லண்டன் செல்வதற்கு அரசு ரூ. 10,000 ஒதுக்கீடு செய்ததோடு பல்கலைக்கழகம் ஆண்டுக்கு ரூ. 250 அளிக்க அனுமதிக்கப்படுவதாகவும் அரசே அறிவித்தது.

1914-இல் லண்டன் சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தோடு இணைந்த டிரினிடி காலேஜில் சேர ஹார்டியே உதவினார். அங்கும் அவருக்கு ஆண்டுதோறும் 60 பவுண்ட் உதவித்தொகை பெறுவதற்கு ஹார்டி வழி வகுத்தார்.

1916-ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் கணிதத்தில் இவருக்கிருந்த பாண்டித்தியத்தைப் பாராட்டி கெüரவ பி.ஏ பட்டம் அளித்து மிகச்சிறந்த கல்வியாளர்கள் முன்னிலையில் கெüரவித்தது. 1918-இல் லண்டன் ராயல் சொசைட்டி ராமானுஜத்துக்கு பெரும்புலவர் எனும் உலகின் மிக உயரிய அங்கீகாரத்தை அளித்து மகிழ்ந்தது. சிறுவயதிலிருந்தே உடல்நலம் பாதித்திருந்த ராமானுஜன் லண்டன் சென்ற பிறகு மோசமானது. அங்கு அளிக்கப்பட்ட உயர் சிகிச்சையும் பலனளிக்கவில்லை.

லண்டனில் ஐந்தாண்டுகால தீவிர கணித ஆய்வுக்குப் பிறகு 1919-இல் வேறு வழியின்றி ஓய்வுக்காகவும் சிகிச்சைக்காகவும் இந்தியா திரும்பினார் ராமானுஜன். லண்டனிலிருந்து பல வெற்றிகளைக் குவித்து இந்தியா திரும்பிய ராமானுஜனுக்கு சென்னையில் எழுச்சிகரமான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இந்தியா வந்த பிறகு எல்லாவித சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்ட பின்னரும் உடல் நலிவடைந்து கொண்டே சென்றது. தனது முப்பத்து மூன்றாவது வயதில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பே 1920 ஏப்ரல் 26-ஆம் தேதி ராமானுஜன் மரணமடைந்தார்.

கணிதம் வாழும் காலம்வரை ராமானுஜன் வாழ்வார். ராமானுஜனின் நினைவு வாழும் காலம்வரை இந்தியாவின் பெருமை பேசப்படும். இந்தியாவின் பெருமை பேசப்படும்போதெல்லாம் தமிழகம் ராமானுஜன் போன்றவர்களால் தலைநிமிர்ந்து நிற்கும். ராமானுஜன், தமிழ்த் தாயின் தவப்புதல்வன் என்பதில் நாம் பெருமை கொள்வோம். 

- த. ஸ்டாலின் குணசேகரன்
நன்றி: தினமணி  (26 .04 .2012)


 .
 

11.10.11

நமது பண்பாட்டின் ஊற்றுமுகம்


வால்மீகி முனிவர்
(வால்மீகி ஜெயந்தி: புரட்டாசி- 24-பௌர்ணமி)
(அக். 11)
அன்பில் கட்டுண்ட அன்றில் பறவைகளின் துயரத்தைக் கண்டு மனமுருகிய வால்மீகி என்கிற மகரிஷியின், மகா கவிஞனின் வாக்கிலிருந்து மானிட குலத்தின் ஆதிகாவியம் நம் மண்ணில் உதித்தது.  பின்னர் அந்த தெய்வீகக் கவிதை நம் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும், பல்வேறு மகா கவிகளாலும், மக்களாலும் பல்வேறு விதங்களில் மீண்டும் மீண்டும் பாடப் பட்டுள்ளது.
”இந்தியாவில் ஏராளமான வேறுபட்ட மொழிகள் பேசப் படுகின்றன. ஆனால் எல்லாருக்கும் புரியக் கூடிய இரண்டு மொழிகள் உண்டு – அவை ராமாயணமும், மகாபாரதமும் ஆகும்” என்று கன்னட இலக்கிய எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி ஒரு கட்டுரையில் சொல்வார். எவ்வளவு உண்மையான விஷயம்!  கவிச்சக்கரவர்த்தி கம்பன்  தமிழ் மொழியில் தனது  மகோன்னத பேரிலக்கியமான கம்பராமாயணத்தை இயற்றினான், ஆனால் அதற்கு வெகுகாலம் முன்பே தமிழகத்தில் ராமகாதை வேரூன்றியிருந்தது. பெரும்பாலான இந்தியமொழிகளின் இலக்கிய வரலாறு என்பதே அம்மொழிகளில் எழுதப் பட்ட ராமாயண நூலில் தான் தொடங்குகிறது.
மலையாளத்தில் துஞ்சத்து எழுத்தச்சனும், அஸ்ஸாமிய மொழியில் மாதவ கந்தாலியும், வங்க மொழியில் கிருத்திவாசரும் எழுதிய ராமாயண காவியங்களும்,  தெலுங்கின் மொல்ல ராமாயணம், கன்னட தொரவே ராமாயணம் ஆகியவையும் இவ்வகையிலானவை.  பண்டிதர்களின் சம்ஸ்கிருத மொழியை விடுத்து, பொதுமக்களின் “அவதீ” மொழியில் பக்திரசம் ததும்பும் ராமசரிதமானஸ் என்ற காவியத்தை துளசிதாசர் எழுதினார்; அதற்குப் பின்னர் தான் இந்தப் பேச்சுமொழி வளர்ச்சி பெற்று, இன்று நாம் கச்சிதமான வடிவில் காணும் ஹிந்தி மொழியாயிற்று.
கம்பராமாயணத்தின்  பாயிரப் பாடல் ஒன்று மொழிகளை இணைக்கும் இராமகாதையின் இந்தப் பாங்கினை அழகாகக் கூறுகிறது -
வடகலை, தென்கலை, வடுகு, கன்னடம்,
இடம் உள பாடை யாதுஒன்றின் ஆயினும்,
திடம் உள ரகு குலத்து இராமன் தன் கதை
அடைவுடன் கேட்பவர் அமரர் ஆவரே
(வடகலை – சம்ஸ்கிருதம், தென்கலை – தமிழ், வடுகு – தெலுங்கு, பாடை – பாஷை, அடைவுடன் – பக்தியுடன்)
இந்திய தேசிய உருவாக்கத்தில் ராமாயணத்தின் பங்கு மகத்தானது. அயோத்தியையும், ராமேஸ்வரத்தையும், இலங்கையையும், கங்கையையும், கோதாவரியையும் உணர்வுபூர்வமாக இணைக்கும் சரடு ராமாயணத்தில் உள்ளது.  இந்தியப் பண்பாட்டின் அடிநாதமான குரல் என்று சொல்லத் தக்க ஒன்று இருக்குமானால் அது ராமாயணம் தான்.
இன்றைய இந்தியாவிற்கு வெளியே, நேபாளம், இலங்கை, தாய்லாந்து, கம்போடியா, மலேசியா, இந்தோனேசியா என்று ஆசியக் கண்டம் முழுவதும் ராமகாதை பரவியுள்ளது. ராமகாதை பரவிய ஒவ்வொரு பகுதியிலும்  வாழும் கலாசாரத்தின் குறியீடாகவும், எண்ணற்ற பழம்பெரும் கலை வடிவங்களின் அங்கமாகவும் உள்ளது. அது மட்டுமல்ல, வாழ்க்கை நெறிகளை உணர்த்தும் அற நூலாகவும், வழிபாட்டுக்குரிய புனித நூலாகவும் உள்ளது.
நூற்றாண்டுகளாக ஆபிரகாமிய மதங்கள் இந்தப் பகுதிகளை ஆக்கிரமித்திருந்த போதிலும், இந்து, பௌத்த மத அடையாளங்கள் தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில் ஒரேயடியாக மறைந்து விட்ட போதும், இன்னும் ராமாயணம் மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கிறது என்பது சிலிர்ப்பூட்டும் விஷயம்!
- ஜடாயு
முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து
 காண்க:

6.10.11

துவைதம் கண்ட மகான்

ஸ்ரீ மத்வர்
மத்வ ஜெயந்தி
(விஜயதசமி,  புரட்டாசி 19)

இயந்திரமயமான இவ்வுலகில் மனிதர்களும் கொஞ்சம் கொஞ்சமாக மனிதநேயத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். பொருளைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். அதன் காரணமாக எங்கும் துன்பமயமாகவும்,  போராட்டமாகவும் வாழ்க்கைச் சூழல் அமைந்திருப்பதை உணராமல் இருக்கிறோம்.
பாரதநாடு உலகினுக்கு மனிதத்தை,  தத்துவத்தை, அன்பை, அமைதியை சொல்லிக் கொடுத்தது. இன்று நாம் பாரத நாட்டில் இருந்து கொண்டு எளிமையாக உணர வேண்டியதை, மேலைநாட்டு மோகத்தால், பணம் சம்பாதிக்கும் பேராசையால் உணராமல் இருக்கிறோம்.
நம் நாட்டில் எத்தனையோ மகான்கள் தோன்றி ஞானத்தேடலில் ஈடுபட்டு தத்துவ விளக்கங்களை அளித்துள்ளனர். அவர்களில் மூவர் மிகவும் முக்கியமானவர்கள். ஆதிசங்கரர் – அத்வைதம், ராமானுஜர் – விசிஷ்டாத்வைதம்,  மத்துவர் - துவைதம். 
பாரதநாட்டின் அரிய பொக்கிஷங்களாக விளங்குபவை வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவாகும். அவற்றுக்கான விளக்கங்களையும், தத்துவங்களையும் ஆதிசங்கரர், ராமானுஜர், மத்துவர் ஆகியோர் அளித்துள்ளனர்.
ஆச்சாரியர் மத்துவரின் காலம் பொது யுகத்துக்குப் பின்  (கி.பி) 1238 முதல் 1317. இவர் உடுப்பியிலிருந்து 8 மைல் தொலைவிலுள்ள  பாஜகஎனும் மலைசூழ் சிற்றூரில், தந்தை மத்யகேஹ பட்டர்தாய் வேதவதிக்கும் மகனாக அவதரித்தார். இவருக்குக் கல்யாணி தேவி என்ற மூத்த சகோதரியும் ஒரு தம்பியும் உண்டு. இவருடைய தம்பி பின்னாளில் ஸ்ரீ மத்வரால் சந்யாச தீட்சை கொடுக்கப்பட்டு விஷ்ணு தீர்த்தராக மாற்றம் கண்டவர்.
தாய் தந்தையர் இவருக்கு வைத்த பெயர் வாசுதேவன்என்பதாகும். சந்யாசம் கிடைத்தபோது வைத்த பெயர் பூர்ணப்நர். வேதாந்த ஸாம்ராஜ்ய பீடத்தில் குருவினால் அமர்த்தப்பட்டபோது பெற்ற பெயர் ஆனந்த தீர்த்தர்’. இது தவிர, ‘மத்வ’ , தஸப்ரமதிபோன்ற பெயர்களை வேத மந்திரங்களில் இவரைக் குறிக்கின்றன. ஸ்ரீமத் விஜயம் எனும் காவியத்தில் நாராயண பண்டிதர் இவரை நூற்றுக் கணக்கான பொருள் பொதிந்த பெயர்களால் கவிநயத்துடன் குறிப்பிடுகிறார்.
ஒரு சமயம் உடுப்பிக்கு அருகில்  கடலில் ஒரு கப்பல் சென்று கொண்டிருந்தபோது புயலில் சிக்கி ஆபத்துக்குள்ளானது. கடற்கரையில் நின்று கொண்டிருந்த மத்வர் தன் மேல் துணியைக் காற்றில் வீசிக் காட்டினார் கப்பல் ஆபத்திலிருந்து மீண்டு கரைவந்து சேர்ந்தது.
கப்பலின் தலைவர் அவரை வணங்கி நின்றார். தன்னிடமிருந்து ஒரு பரிசு பொருளை வாங்கி கொள்ளும்படி வற்புறுத்தினார். கப்பலின் அடித்தளத்தில் கோபி சந்தனத்தில் ஒரு பாறை இருப்பதாகவும், அது தனக்கு வேண்டும் என்றும் கூறினார் மத்வர். இவ்விதம் ஓர் அற்பமான கற்பாறையைக் கேட்கிறாரே என்று வியந்தவாறே கப்பல் தலைவர் அதை எடுத்துக் கொடுத்தார். அதனுள் தன் கையைவிட்டு சாலிக்கிராமத்தைத் தானே தூக்கிக் கொண்டுசென்றார். அதுதான் இன்றும் உடுப்பிக்   கோயிலில் மூலவிக்ரகமாக உள்ளது.
அவ்விக்ரகம் குறித்த அற்புதமான செய்தியையும் அவர் வெளியிட்டார். விசுவகர்மா என்ற தேவச்சிற்பியால் செய்யப்பட்டு, துவாரகையில் துவாபராயுகத்தில் ஸ்ரீ ருக்மணி தேவியால் பூஜிக்கப்பட்டு வந்த விக்கிரகம்,  துவாரகை மூழ்கியபோது அதுவும் மூழ்கிவிட்டது. அவ்விக்கிரகம் தான் மத்துவரால் வெளிக்கொண்டு வரப்பட்டது.
ஒரு நாள் மத்துவர் மீது வானிலிருந்து மலர்மாரி பொழிந்ததாம். மலர்க்  குவியலை விலக்கிப் பார்த்த போது அவரைக் காணவில்லை; மறைந்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது.
பிரபஞ்சம் என்பது ஒரு மாயத்தோற்றமல்ல. உண்மை. அந்த உண்மை உருவாவதற்கான கருத்தாகவும் விதிகளாகவும் உள்ளதே பிரபஞ்ச சாரமான பிரம்மம். அது எந்த வகையிலும் மானுடனின் தர்கத்தால் அறிந்துவிடக்கூடிய ஒன்றல்ல. ஆனால் அப்படி ஒன்று உள்ளது என்பதற்கு இந்தப் பிரபஞ்சத்தின் செய்லமுறையே சான்றாகும்'' - இதுவே மத்வரின் வாதம்.
 
-ராஜேஸ்வரி ஜெயகுமார் 
 
காண்க:
 
 
 
 
 
 
 
 
 
 
.

5.10.11

சன்மார்க்கம் கண்ட அருளாளர்


ராமலிங்க வள்ளலார்
(திருநட்சத்திரம்: புரட்டாசி - 18 - பூராடம்)  
(அக். 5)

மக்களை அறியாமைப் பிடியிலிருந்து மீட்டெடுக்கப் பல அருளாளர்கள் நம் தமிழ் மண்ணில் அவதாரம் எடுத்துள்ளனர். அவர்களின் வாழ்வும் தவமும் படைப்பும் புவியுள்ளளவும் மக்களுக்கு வழிக்காட்டக் கூடியவை.
சென்ற நூற்றாண்டில் தமிழ்நாட்டில் தென்னாற்காடு மாவட்டத்தில் சிதம்பரத்திற்கு வடமேற்கே சுமார் 16 கி.மீ. தூரத்தில் உள்ள மருதூர் என்ற கிராமத்தில் 1823, அக்டோபர்,  5ம் நாள், ஞாயிற்றுகிழமை ராமலிங்க அடிகள் அவதரித்தார். தந்தையார் ராமையா பிள்ளை, தாயார் சின்னம்மை. அருட்பிரகாச வள்ளலார் இவர்களுக்கு ஐந்தாவது பிள்ளை.
சிறு வயதில் ராமலிங்கம் தமையன் சபாபதியிடம் ஆரம்ப கல்வி கற்றார். உலகியல் கல்வியில் வள்ளலாருக்கு நாட்டம் இல்லை. இறைவனைப் பற்றிப் பாடுவதிலேயே ஈடுபட்டார். கற்க வேண்டியவற்றை இறைவனிடமே  கற்றார்.
ஏழு, எட்டு வயதான போது சென்னை கந்தகோட்டத்து முருகனிடம் ஈடுபாடு உண்டானது. அந்த வயதிலேயே தெய்வ மணிமாலை’, ‘ கந்தர் சரணப்பத்துமுதலிய பாடல்களை இவர் பாடியதாகக்  கூறுவர்.  சின்ன வயதிலேயே பெரும்புலமைப் பெற்று விளங்கினார்.
தமையனார் பெரியபுராணக் கதை சொல்லச் சோமு செட்டியார் என்பவர் இல்லத்திற்குச் செல்ல முடியாமல் போனதாம். அப்பொழுது சிறுபிள்ளையாக இருந்த ராமலிங்க வள்ளலாரைத் தமையனார் சோமு செட்டியார் இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். ராமலிங்க வள்ளலார் ஒரே ஒரு பாடலுக்கு விடிய விடிய சொன்ன விரிவுரை கேட்டு மக்கள் வியந்து போனார்கள் என்று சொல்லப்படுகிறது.
நகரச் சந்தடிகளை விரும்பாத ராமலிங்கர் தனிமையை நாடிச் செல்லத் தொடங்கினார். இவர் திருவொற்றியூர் செல்லத் தொடங்கியபோது பன்னிரண்டு வயதாக இருந்திருக்கலாம்.
திருவொற்றியூருக்கு நடந்தே செல்லும் பழக்கமுடைய அடிகளார் ஒரு சமயம் வழக்கமாய்ச் செல்லும் நெல்லிக்காய்ப் பண்டாரச் சந்து வழியே செல்லாமல் தேரடித் தெரு வழியே ஆலயம் நோக்கிச் சென்ற போது, நிகழ்ந்த ஒரு பெருந்துறவி அங்கு நடமாடும் மனிதர்களை நாய் போகிறது; நரி போகிறது; மாடு போகிறதுஎன்று குறிப்பிட்டுச் சொல்லிக் கொண்டே இருப்பாராம். அடிகளார் சென்ற அன்று அந்தத் துறவி, ‘இதோ ஒரு உத்தம மனிதன் போகிறான்என்று வியந்து கூறினாராம்.
வாலிப வயதில் ராமலிங்க அடிகளுக்குத் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின்னரும் அடிகள் இல்லறத்தில் ஈடுபடாது இறைவன் நெறியிலேயே ஈடுபட்டு வந்தார்.
மாநிலக்கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் தொழுவூர் வேலாயுத முதலியார் அவருக்குத் தலைமைச் சீடரானார். அவர்தான் வாழ்க்கைக் குறிப்பையும், ஐந்து திருமுறைகளாகத் திருவருட்பாப் பாடல்களையும் வெளியிட்டார்.
ஒளி வழிபாடு, உயிர்ப்பலி மறுப்பு, சாதி சமய எதிர்ப்பு ஆகிய கோட்பாடுகளைத் தீவிரமாக முன்மொழிந்தார். மரணத்தை வெல்லுதல் மனிதர்களுக்குச் சாத்தியப்படும் என்று கருதினார். இவற்றையெல்லாம் எடுத்து மொழியவும், சமரச சுத்த சன்மாக்க சத்திய சங்கத்தை நிறுவினார்.
தில்லைக்கு வடக்கே பார்வதிபுரம் என்கிற வடலூரைத் தெர்ந்தெடுத்துப் பசிப்பிணி தீர்க்கும் மையமாகச் சத்திய தர்மச் சாலையை 1867 இல் தோற்றுவித்தார்.  தருமச்சாலையில் மக்கள் கூட்டம் நிரம்பியது.
தனிமையை விரும்பிய அடிகளார் மேட்டுக்குப்பம் என்ற இடத்திற்குச் சென்று தங்கலானார்.(1870) அவ்விடத்திற்குச் 'சித்தி வளாகம்' என்று பெயர் சூட்டினார்.
ஒளிவழிபாட்டை உலகுக்கு உணர்த்தும் பொருட்டு வடலூரில் 1872ல் 'சத்திய ஞான சபை' என்ற வழிபாட்டுத் திருமாளிகையை அமைத்தார். அருட்பெருஞ்சோதி வழிபாடு அந்த ஆண்டு தைபூச் நன்னாளில் தொடங்கியது.
சித்தி வளாகத்தில் தங்கியிருந்த வள்ளல் பெருமான் 1873 ம் ஆண்டில் சன்மார்க்கக் கொடி ஒன்றை (மஞ்சளும் வெள்ளையும் கலந்தது) ஏற்றி அரிய அறிவுரைகள் நல்கி வந்தார்.
 சகாத மேல்நிலைகுறித்து பலகாலமாக சொல்லி வந்த ராமலிங்க வள்ளல் சித்திவளாகத் திருமாளிகையில் 30.1.1874 அன்று (தைப்பூச  நன்னாளன்று)  அறைக்குள் சென்று திருக்காப்பிட்டுக் கொண்டார். ஒளியுடம்பு பெற்று அருள்வெளியோடு ஒன்றினார் வள்ளல் பெருமான்.
ராமலிங்க வள்ளலார் சமயம், சமுதாயம் இரண்டையும் ஒன்றாக்கி உயிர்கருனை தத்துவத்தைச் செயல்படுத்த பல அமைப்புகளை உருவாக்கினார். உலக மக்களை ஒருமை தன்மையோடு ஒரே வழி அன்புசெய்வது தான்.
மனிதர்களிடம் புரிதல் மேம்படும் போது அன்பு தழைக்கிறது. அன்பு தழைத்த இடத்தில் வேற்றுமை என்பதற்கு இடமிருப்பதில்லை. இதை மானிடர்கள் உணரும்போது எங்கும் அமைதி, எதிலும் இன்பம் என மானிட வாழ்வு மேன்மையுறும். மானிட வாழ்வை மேம்படுத்தவே வள்ளலார் போன்ற ஞானிகள் பாரத மண்ணில் தோன்றி வருகின்றனர்.
பாரத திருநாட்டில் பிறந்த நாம் ஒவ்வொருவரும் உலகிற்கு அன்பைப் பரப்ப உறுதி பூணுவோம்; செயல்படுவோம். 
வந்தேமாதரம்! வாழிய பாரத மணிதிருநாடு!
-ராஜேஸ்வரி ஜெயகுமார்
காண்க:
ஜோதியில் கலந்த வள்ளலார் 

.

15.8.11

மகரிஷியின் அருள்வாக்கு


மகரிஷி அரவிந்தர்
(பிறப்பு: ஆக. 15)

எந்த தேசத்தின் இளைஞர்கள் மனதில்
கடந்தகாலம் குறித்த பெருமிதம்,
நிகழ்காலம் குறித்த வேதனை,
எதிர்காலம் குறித்த போர்கனவுகள் நிறைந்துள்ளதோ,
அந்த தேசம்தான் முன்னேற்றமடையும்.

-மகரிஷி அரவிந்தர்

காண்க:


 
 

 
 





22.7.11

இந்திய தேசமே ஒரு வாழும் அருங்காட்சியகம்


சுவாமி தயானந்த சரஸ்வதி
நிறுவனர், ஆர்ஷ வித்யா குருகுலம்

 "இந்த தேசம் தொன்மையின் அடையாளம்; காலங்களைக் கடந்து வாழ்கிற நமது கலாசாரமும் தொன்மையானது. ஆக, ஒட்டுமொத்த இந்திய தேசமே, வாழும் அருங்காட்சியகமாக காட்சி தருகிறது; இதை பாதுகாப்பது நமது கடமை,'' என, சுவாமி தயானந்த சரஸ்வதி பேசினார்.

சுவாமி தயானந்த சரஸ்வதியின் சதாபிஷேக விழா, கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில் புதனன்று (20.07.2011) துவங்கியது.  இதில்  சுவாமி தயானந்த சரஸ்வதி பேசியதாவது:

நம்மால் பிரச்னைகளைத் தீர்க்க முடியவில்லை; நம்மால் என்ன செய்ய முடியும்...' என, யாரும் வருத்தப்படத் தேவையில்லை. கிருஷ்ணர், ராமர் போன்ற அவதாரங்களால் கூட, பிரச்னைகளை முற்றிலும் துடைத்தெறிய இயலவில்லை. குறிப்பிட்ட காலத்தில் பிரச்னைகள் தானாகவே தீர்ந்துவிடும்.

இந்து தர்மங்கள், பத்மநாப சுவாமி கோவிலின் செல்வங்களைப் போல் அளவிட முடியாதவை; தோண்டத் தோண்ட நம்மை ஆச்சரியப்படுத்தும் ஏராளமான செய்திகள் இதில் உண்டு. வீடு, லட்சுமியின் அம்சம்; அதன் முன் இடும் கோலமும், லட்சுமியின் அம்சம்; இப்படி நம்முடைய கலாசாரத்தில், ஒவ்வொரு பொருளும் லட்சுமின் அம்சமாகவே பார்க்கப்படுகிறது.

ரங்கோலி எனப்படும் கோலமிடும் பழக்கம், உலகின் எந்த மூலையிலும் இல்லை. அதிகாலையில், சாலைகளில் கோலமிட்ட வீடு,கோலமிடாத வீடு இரண்டையும் கடக்க நேர்கையில் ஏற்படும் உணர்வுகள் வேறு வேறானவை. கோலம் நமது கலாசாரத்தின் மிகப் பெரிய அடையாளம்.

இதை அரிசி மாவால் தான் போட வேண்டும் என்பதும், அதன் மூலம் சிறு பறவைகள், எறும்புகள் போன்றவற்றுக்கு உணவளிக்கும் வாழ்க்கை முறையும், இந்த கலாசாரத்தின் அங்கமே. கோலமிடுவதை, யாரும் கற்றுக் கொடுத்து, எவரும் கற்றுக் கொள்வதில்லை. இது வழிவழியாக பார்த்தே கற்றுக் கொள்கிற ஒன்று. இமயம் முதல் குமரி வரை வாழும் நம் மக்கள் பின்பற்றுகிற கலாசார பழக்க வழக்கங்கள் அனைத்துமே, இப்படி கற்றுக் கொள்ளப்பட்டவை தான்.

இவை, எங்கு, எப்படி, யாரால் விதைக்கப்பட்டதென்று தெரியாமல், தொன்று தொட்டு நம் வாழ்வியலோடு இணைந்து பயணிக்கின்றன. வடிவங்களில் சில மாற்றங்கள் இருந்தாலும், இதன் மைய அமைப்பு மாறுவதில்லை. இன்றைக்கு உலகம் முழுக்க வாழும், "மாடர்ன் மக்கள்' அனைவரும், பழமையான பொருட்களை ஆர்வத்துடன் சேகரித்து பாதுகாக்கின்றனர். இந்த தேசம், தொன்மையின் அடையாளம்; காலங்களைக் கடந்து வாழுகிற நமது கலாசாரமும் தொன்மையானது. ஒட்டுமொத்த இந்திய தேசமே, வாழும் அருங்காட்சியகமாக காட்சி தருகிறது; இதை நாம் பாதுகாக்க வேண்டாமா?

இந்த மண்ணும், மலையும், நதிகளும் ஆசிர்வதிக்கப்பட்டவை. நம் அன்னை தேசம், சொர்க்கத்தை விட புனிதமானது. பணம், வீடு, திருமணம் உள்ளிட்ட அனைத்தையுமே, திருமகளின் மறு உருவமாகப் பார்க்கக் கற்றுக் கொடுத்தது, இந்த தேசத்தின் கலாசாரம் தான்.

இன்றைக்கு இன்டர்நெட்டில், திருமணம் பற்றிய ஏராளமான, "ஜோக்'குகள் காணக் கிடைக்கின்றன. நமக்கு திருமணம் என்பது வெறும் விளையாட்டல்ல;  அது யோகா; கர்ம யோகா. இதற்கு இணையான, மாற்று என்பதே இல்லாத ஒரு வாழ்வியல் கட்டமைப்பு. இந்த தேசத்தின் அன்னை போன்ற கலாசாரத்தை, இந்த கலாசாரத்தின் ஆணி வேராக இருக்கக் கூடிய மதத்தை, இந்த மதத்தின் ஊற்றுக் கண்ணாக விளங்குகிற ஆன்ம ஞானத்தை, நாம் உணர வேண்டும்.

இந்து தர்மம் என்பது பெரிய மரம்; பல கிளைகளும், விழுதுகளும் விட்டு வளர்ந்து நிற்கிற இதன் பூக்களில், பல்வேறு வண்ணங்கள் இருக்கலாம்; கிளைகள் பலவாய் இருக்கலாம். ஆனால், வேதம் என்னும் ஒற்றை வேரால் உயிர்த்திருக்கிறது, இந்த மரம். இதைப் பாதுகாப்பது நம்முடைய கடமை.

இவ்வாறு, சுவாமி தயானந்த சரஸ்வதி பேசினார்.

நன்றி: தினமலர் (21.07.2011)


காண்க:





குறிப்பு:
இன்று கோவையில் சுவாமி தயானந்தருக்கு சதாபிஷேக விழா நடக்கிறது. 

.

14.7.11

தெய்வீக வாழ்க்கையை உபதேசித்தவர்


சுவாமி சிவானந்தர்

(மறைவு: ஆனி 29)

(ஜூலை 14)

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம். மலேசியாவில் பணியாற்றிய மருத்துவர் ஒருவர் குறித்து, அந்த நாட்டு மக்கள் அதிசயத்துடன் பேசிக்கொண்டனர். அந்த மருத்துவர் பொருளீட்டியதை விட, ஏழைகளுக்கு இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த கட்டணம் வாங்கிக்கொண்டோ செய்த மருத்துவச் சேவையே அதிகம் ! வியாதியுடன் அவரிடம் வந்த அனைவருமே நோயிலிருந்து விடுபட்டுள்ளனர். அத்தனை கைராசியுள்ள மருத்துவர் அவர். ஆனால், மக்கள் அதிசயிக்க இவை எதுவும் காரணமல்ல!

மருத்துவத்தைச் சேவையாகப் பார்த்த அதே வேளையில், அவரது உள்ளத்தில் வேறொரு விநோத சிந்தனை குடி கொண்டிருந்தது. மக்களின் உடல் உபாதைகளை என்னால் தீர்த்து வைக்க முடிகிறது. ஆனால், இதனால் மட்டுமே அவர்களின் துயரங்கள் அனைத்தும் மறைந்துவிடவில்லை. வாழ்வில், நிம்மதியும் ஆனந்தமும் அவர்கள் அடைவதில்லை. ஆக வியாதிகளைக் குணமாக்குவது மேம்போக்கான தீர்வு. உலக பந்தங்களில் கட்டுண்டு உழலும் அவர்கள் உண்மையிலேயே விடுதலை பெறவும், ஆனந்த வாழ்வும் அவர்களின் ஆன்ம நலத்தைப் பேணுவதே சிறந்த வழி எனத் தீர்மானித்தார். இந்தச் சிந்தனையே, தமிழ் மண்ணில் தோன்றிய அந்த மருத்துவ நிபுணரை, மனித குலத்துக்கு நல்வழி காட்டிய மகானாக உயர்த்தியது. அவர்தான் சிவானந்த சரஸ்வதி.

திருநெல்வேலி மாவட்டத்தில், பத்தமடை எனும் ஊரில் வருவாய்த்துறை அதிகாரியாகப் பணிபுரிந்த வேம்பு ஐயருக்கு, 1877ம் வருடம், செப். 8-ஆம் தேதியன்று ஆண் குழந்தை பிறந்தது. குப்புஸ்வாமி என்று குழந்தைக்குப் பெயர் சூட்டி, அன்புடன் வளர்த்து வந்தார், வேம்பு ஐயர். எட்டயபுரம் ராஜா உயர்நிலைப்பள்ளியில் பயின்ற குப்புஸ்வாமி, கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்தவனாகத் திகழ்ந்தான்.

1903-ஆம் வருடம், மெட்ரிகுலேஷன் தேர்வில் சிறப்புறத் தேறினான். பிறகு, திருச்சியில் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்து, 1905ம் வருடம், தஞ்சை மருத்துவக் கழகத்தில் பயின்று மருத்துவரானார். இந்தக் கால கட்டத்தில், அவரின் தந்தை இறந்துபோனார். குடும்பத்தில் நிதி நெருக்கடி ஏற்படவே, 1913ம் வருடம், மருத்துவப் பணி செய்து சம்பாதிக்கலாம் என மலேசியா சென்றார் குப்புஸ்வாமி.  வறுமை காரணமாக வேலையில் சேர்ந்தாலும், எளியோரின் துயர் போக்கும் பணியாகவே மருத்துவத் துறையைப் பார்த்தார் அவர்.  ஐரோப்பிய மருத்துவர்கள் சிலருடன் இணைந்து, மருத்துவமனை ஒன்றை நிர்வாகித்தார். பயனுள்ள மருத்துவ நூல்களையும் எழுதி வெளியிட்டார்.

இவரின் மருத்துவச் சேவையைப் பாராட்டி, லண்டனில் ராயல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பப்ளிக் ஹெல்த், ராயல் ஏஷியாடிக் கழகம் முதலான புகழ்மிக்க சங்கங்கள், அவரை உறுப்பினராக நியமித்துக் கௌரவித்தன. உடல் பிணி தீர்க்கும் மருத்துவம் பார்த்து வந்தவருக்கு, மக்களின் மன ஆரோக்கியம், ஆன்ம பலம் குறித்த சிந்தனை எழுந்தது. யோகா, தியானம் என இறைநிலையை நோக்கிய பயணத்தைத் துவக்கினார்.

1923ம் வருடம், இந்தியா திரும்பி,  காசி,  நாசிக்,  பண்டரிபுரம்,  ஹரித்வார் ஆகிய தலங்களில் அலைந்து திரிந்தார். பிறர் கொடுப்பதை உண்பது,  கிடைத்த இடத்தில் உறங்குவது எனப் பற்றற்ற வாழ்க்கை நடத்தியவர்,  ரிஷிகேஷ் தலத்தில்,  சுவாமி விஸ்வானந்த சரஸ்வதி என்ற மகானிடம் உபதேசம் பெற்று, 1924-ம் வருடம் ஜூன் 1ம் தேதி,  'சுவாமி சிவானந்த சரஸ்வதி' எனும் திருநாமத்துடன் துறவறம் பூண்டார். இமயமலை அடிவாரத்தில், கங்கைக் கரையில் உள்ள ரிஷிகேஷில் பல வருடங்கள் தங்கி, ஆன்மிகப் பயிற்சிகளை மேற்கொண்டார்.

அவர் எடுத்திருந்த இன்ஷூரன்ஸ் பாலிசி ஒன்று முதிர்ச்சி அடைய, அதிலிருந்து வந்த பணத்தைக் கொண்டு, 1927ம் வருடம், கங்கைக் கரையிலேயே மருத்துவ சேவை மையம் ஒன்றைத் துவங்கி, ஏழைகள், யாத்ரீகர்கள், சாதுக்கள் ஆகியோருக்கு இலவச சிகிச்சை அளிக்கத் தொடங்கினார். பிறகு, தாம் அறிந்து உணர்ந்த உண்மைகளை, ஆன்மிகப் பயிற்சிகளின் மூலம் மக்களுக்கு எடுத்துரைத்தார்.

வட யாத்திரையை முடித்தவர், ராமேஸ்வரம், புதுச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமம், திருவண்ணாமலை ஸ்ரீரமணாஸ்ரமம் ஆகிய தலங்களுக்கு விஜயம் செய்தார். பிறகு, மீண்டும் ரிஷிகேஷ் வந்தவர், 1934-ம் வருடம், மார்ச் மாதம், உபயோகிக்கப்படாத மாட்டுக் கொட்டகை ஒன்றில், ஆனந்தக் குடிசை எனும் பொருள்படும் ஆனந்தக் குடிர் எனும் எளிய ஆஸ்ரமத்தைத் துவக்கினார். பிறகு, மெள்ள மெள்ள சிகிச்சைகள், மருந்தகங்கள், ஆலயங்கள், தியான மையங்கள், ஆன்மிகப் பத்திரிகை அச்சகங்கள், புத்தக வெளியீட்டு மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய 'தெய்வீக வாழ்க்கை சங்கம்' எனும் (THE DEVINE LIFE SOCIETY) மிகப் பெரிய ஆன்மிகத் தொண்டு நிறுவனமாக அது வளர்ந்தது.

சுவாமி சிவானந்தர் எழுதிய சுமார் 296 நூல்கள்,  பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு,  உலக மக்களுக்கு வழிகாட்டுகின்றன. ஆஸ்ரமத்துக்குக் கிடைக்கிற நன்கொடைகளை, மருத்துவச் சேவை, அன்னதானம் போன்ற தர்ம காரியங்களில் ஈடுபடுத்தி, பொருளாசையின்றி வாழ்வது குறித்து வாழ்ந்து காட்டினார். 

சுவாமிகள்,  ''தன்னை அறிந்துகொண்டு  விடுதலை பெறு,  நல்லதைச் செய், அதை உடனே செய்'' எனும் எளிய போதனைகளால் மக்களின் மணம் கவர்ந்தார். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த சுவாமி சிவானந்த சரஸ்வதி,  1963ம் வருடம், ஜூலை 14-ம் தேதி (ஆனி 29)  , கங்கைக் கரையில்,  இறைவனுடன் இரண்டறக் கலந்தார்.

நன்றி: தினமலர்

காண்க:

THE DEVINE LIFE SOCIETY

சிவானந்தர் (விக்கி)

Swami Sivananda Saraswati 
.
இயற்கை மருத்துவம்

நெல்லையின் இமயஜோதி

.

17.5.11

பாரதத்தின் ஆன்மிக தூதுவர்


மகான் புத்தர் 
(புத்த ஜெயந்தி: மே 17) 

பாரதம் தந்த ஆன்மிக அருளாளர்களில் மகான் புத்தருக்கு தலையாய இடமுண்டு. பாரதத்தின் ஆன்மிகத் தத்துவங்களை உட்கிரகித்து புத்தர் ஏற்படுத்திய புத்த மதம், எல்லை கடந்து ஆசிய நாடுகள் பலவற்றில் பரவியது. இன்று உலகின் பெரிய மதங்களுள் ஒன்றாகத் திகழும் புத்த மதத்தின் நிறுவனரான புத்தர், பாரதத்தின் உலகளாவிய ஆன்மிக தூதுவர் என்று சொன்னால் மிகையாகாது.

புத்தர் புத்த மதத்தின் நிறுவனராக மட்டுமல்லாது, பாரதத்தின் வைதிக மதங்களில் நிலவிய மூட நம்பிக்கைகளைப் போக்கைய சீர்திருத்தவாதியாகவும் திகழ்கிறார். புத்தரின் தத்துவங்களுக்கு உலகளாவிய அஹிம்சைக் கோட்பாடுகளில் மிகுந்த செல்வாக்குண்டு.

பொது யுகத்திற்கு  முந்தைய 623  ம் ஆண்டில்,  நேபாளத்திலுள்ள (கபிலவஸ்து என்ற நாட்டில்) லும்பினி என்ற இடத்தில், சுச்சோதனர் என்ற மன்னருக்கும் மாயா என்ற அன்னைக்கும் மகனாகத் தோன்றினார் கௌதம சித்தார்த்தர். வைகாசி மாதம், முழுநிலவு நாளில் அவதரித்த அவர் பின்னாளில் மாபெரும் உலக ஞானியாவார் என்று ஜோதிடர்கள் கூறினர். ஆனால், நாட்டை ஆழ வேண்டிய தனது மகன் ஞானியாவதை விரும்பாத மன்னர் சுச்சோதனர், மகன் சித்தார்த்தனை உலக துயரங்கள் குறித்த எந்த தகவலும் அறியாத வண்ணம் தனி அரண்மனையில் பாதுகாப்பாக வளர்த்துவந்தார்.

தனது 16  வது வயதில் யசோதரையை மணந்தார் சித்தார்த்தர். இவர்களுக்கு பிறந்த மகன் பெயர் ராகுலன். உலக இன்பங்கள் அனைத்தும் காலடியில் கிடைத்தாலும் சித்தார்த்தரின் மனம் நிம்மதி அடையவில்லை. அரண்மனை சுகபோக வாழ்க்கை அவரை திசை திருப்பிவிடவில்லை. ஏதோ ஒரு இனம் தெரியாத காரணத்தால் அவர் தவித்தார். நாட்டின் அரசாட்சியில் அவர் மனம் ஆர்வம் கொள்ளவில்லை.

இந்நிலையில் ஒருநாள், அரண்மனையை  விட்டு உதவியாளருடன் தேரில் உலவப்போன சித்தார்த்தர் நான்கு காட்சிகளைக் கண்டார். ஊனமுற்ற மனிதன் ஒருவன் நடமாட முடியாமல் தவித்த காட்சி சித்தார்த்தரின் மனதை கவலை கொள்ளச் செய்தது. அடுத்து ஒரு நோயாளி வாழ்க்கையின் அல்லலை அவருக்கு நினைவு படுத்தினான். மூன்றாவதாக நாகுபேர் சுமந்து சென்ற பிணத்தையும் கண்டார் சித்தார்த்தர். பிணி, மூப்பு, மரணம் ஆகியவை மனிதன் சந்தித்தே  ஆக வேண்டியவை என்பதை சித்தார்த்தர் உணர்ந்தபோது, எந்தக் கவலையும் இன்றி சஞ்சாரம் செய்த துறவி ஒருவரையும் சித்தார்த்தர் கண்டார். அவர் மனம் தான் என்ன செய்ய வேண்டும் என்று அவருக்கு கட்டளை இட்டுவிட்டது.

எந்தக் காரணத்திற்காக தந்தையால் உலக கஷ்டம் தெரியாமல் வளர்க்கப்பட்டரோ, அதே காரணத்தை சித்தார்த்தர் தானே நேரடியாகக் கண்டுபிடித்துவிட்டார். அவர் மனம் அமைதி இழந்தது. மனிதனின் துயரத்திற்கு   பரிகாரம் என்ன? துன்பமற்ற வாழ்க்கை வாழ முடியாதா? வாழ்க்கையின் பொருளென்ன? போன்ற கேள்விகள் சித்தார்த்தரின் மனதில் எழுந்தன. அதன்  விளைவாக கட்டிய மனைவி, பெற்ற பிள்ளை, அரண்மனை சுகபோகம், ஆட்சி அதிகாரம் அனைத்தையும் துறந்து நள்ளிரவில் நாட்டைவிட்டு வெளியேறினார் சித்தார்த்தர்.

அதன் பிறகு ஆறு ஆண்டுகள் துறவியாக பல இடங்களுக்கு சென்றார். தன்னை கடுமையாக வருத்திக்கொண்டு ஞானம் தேட முயன்றார். ஆயினும் அவர் மனம் அந்த மகத்தான உண்மையை நெருங்கவில்லை. அதற்கான நேரம் கூடாமல் இருந்தது.  யோக நெறியில்  கடும் தவம்  புரிந்த சித்தார்த்தர் அதனால் உயர்ந்த  யோக நிலைகளை அடைந்தாலும், உலகின் துயரத்திற்கு காரணம் என்ன என்ற கேள்விக்கு விடையின்றித் தவித்தார்.

தனது 35  வது வயதில், பிகாரின் கயா  என்ற இடத்தில் பொதி மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்த சித்தார்த்தர், ஒருவார காலத்தில் புதிய ஞானம் பெற்றார். ஆசியே துன்பத்திற்கெல்லாம் காரணம் என்ற பெருஞானத்தை அறிந்த சித்தார்த்தர், தன்னை 'ததாகதர்' என்று அறிவித்துக் கொண்டார். அதன் பொருள், எது உண்மையில் அதுவாக உள்ளதோ, அந்த நிலையை அடைந்தவர் என்பதாகும்.

தான் பெற்ற ஞானத்தை உலகிற்கு வழங்க ஐந்து சீடர்களுடன் சாரநாத் என்ற இடத்தில் தனது பணியைத் துவங்கினார் ததாகதர். அவரை புத்தர் என்று மக்கள் போற்றத் துவங்கினர். அதன் பொருள் ஞானம் அடைந்தவர் என்பதாகும். சாரநாத்தில் அவர் நிகழ்த்திய ஞான விளக்கம், 'தம்ம சக்கரப் பிரவர்த்தனம்' என்று அழைக்கப்படுகிறது. அன்று முதல் தனது 80  வது வயதில் குசினாரா என்ற இடத்தில் மரணிக்கும் வரை, நாடு முழுவதும் ஓயாமல் தனது கருத்துகளைப் பரப்பினார் புத்தர்.

புத்தர் ஒருபோதும் தன்னை கடவுள் என்றோ, கடவுளின் தூதர் என்றோ சொல்லிக் கொண்டதில்லை. தான் புத்த நிலையை (ஞான நிலையை) அடைந்த ஒரு சாதாரண மனிதன்; இந்நிலையை ஒவ்வொரு மனிதனும் அடைய முடியும் என்பதே புத்தரின் போதனை. ஆசையே துயரங்களுக்கு எல்லாம் காரணம். ஆசையை விடுத்தால் மோட்சம் பெறலாம் என்பது புத்தரின் முக்கியமான அறிவுரை.

தனது போதனைகளைப் பரப்ப புத்த சங்கங்களை புத்தர் நிறுவினார். மிகக் குறுகிய காலத்தில் புத்த சங்கங்கள் நாடு முழுவதும் பரவின. பின்னாளில் புத்த மதமாக அவை நிலை கொண்டன.  புதுமையானதாகவும், எளிமையானதாகவும், சடங்குகள் அற்றதாகவும் இருந்த புத்தரின் போதனைகள் நாட்டு மக்களிடையே செல்வாக்கு பெற்றன. புத்தரின் சீடர்கள் பாரத எல்லை கடந்து சீனா, இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட பிற ஆசிய நாடுகளுக்கு புத்த மதத்தைக் கொண்டுசென்றனர். பேரரசர் அசோகர், கனிஷ்கர், ஹர்ஷர் போன்ற மன்னர்கள் புத்த மதத்தை நேசித்தனர். அதன் விளைவாக நாடு முழுவதிலும் புத்தரின் போதனைகள் பரவின. புத்த சங்கங்களில் இளம் துறவியர் படை பெருகியது.

'புத்தம் சரணம் கச்சாமி; சங்கம் சரணம் கச்சாமி; தர்மம் சரணம் கச்சாமி' என்பதே புத்த சங்கத்தின் முழக்கம். ஞானம் பெற வேண்டும்; அதனை மக்களுக்கு போதிக்க வேண்டும்; தர்மம் காக்க வேண்டும் என்பதே அதன் அடிப்படையான கருப்பொருள்.

போலியான சடங்குகளை புத்தர் கண்டித்தார். உயிர்க்கொலை புரியும் விளப்கு பலியிடல்களை புத்தர் தடுத்தார். வேத சமயத்தில் நிலவிய தவறான பழக்கங்களை மாற்றுமாறு அவர் அறைகூவல் விடுத்தார். வாழ்க்கைக்கடலைக் கடக்க, துறவறம் மட்டுமே போதுமானதல்ல என்றும் அவர் சொன்னார். தன்னைப் பின்பற்றும் துறவிகளுக்கு செம்மையான  துறவற  விதிகளை நிர்மாணித்தார். பின்னாளில் அவரது புத்த சங்க விதிகளும் போதனைகளும் தொகுக்கப்பட்டு 'திரிபிடகம்' என்ற புத்த சமய நூலாக உருவானது.

பின்னாளில் பகவான் புத்தராக அவர் வழிபடப்பட்டார். வழிபாட்டு சடங்குகளுக்கு எதிராக புதிய சமயத்தை நிறுவிய புத்தரையும் கடவுளாகவே வழிபடத் துவங்கினர் மக்கள். அவரை விஷ்ணுவின் பத்தாவது அவதாரமாக போற்றினர் பக்தர்கள். அதன் விளைவாக, புத்த மதம் சனாதன மதத்தின் கிளையாக (இந்தியாவில் மட்டும்) உரு மாறியது. ஆயினும் பாரதம் கடந்த பகுதிகளில் அது தனது ஞானச் சிறகுகளை விரியவிட்டு தனி மதமாகவே இன்றும் தொடர்கிறது.

பாரதத்தின் கயா, சாரநாத், குசினாரா, காஞ்சிபுரம், நேபாளத்தின் லும்பினி ஆகியவை புத்த மதத்தினரின் புனிதத் தலங்கள். கயாவில் புத்தர் தவம் செய்த போதி மரம் இன்றும் உள்ளது. அதனை மிகப் புனிதமானதாக புத்த மதத்தினர் கருதி வணகுகின்றனர். புத்த மதத்தைப் பொருத்த அளவில், கௌதம புத்தர் புத்தர்களின் தொடர் அவதாரத்தில் 28  வது புத்தராவார். புத்த மதத்தின் இரு பெரும் பிரிவுகளாக ஹீனயானம், மஹாயானம்  ஆகியவை உள்ளன.

புத்தர் பாரதத்தால் ஆசியாவுக்கு வழங்கப்பட்ட ஞானஒளியாகப் போற்றப்படுகிறார். வன்முறையை வேரறுக்கும் அன்பும் அஹிம்சையும் புத்த மதத்தின் அடிநாதம் ஆகும். பாரதம் உலகிற்கு வழங்கிய மாபெரும் கொடை பௌத்த மதம். பாரதத்தின் ஞான வடிவை  புத்தர் மூலமாகவே உலகம் தரித்திருக்கிறது. 

-குழலேந்தி

காண்க: