-தஞ்சை வெ.கோபாலன்
(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு)
இன்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வுலக வாழ்வை நீத்து அமரரானார் மகாகவி பாரதியார். இளமையின் உச்சத்தில் இன்னும் எவ்வளவோ அரிய கவிதைகளைக் கவி காளிதாசன் போல், கவியரசர் கம்பன் போல் அளிக்க வாய்ப்பிருந்த நிலையில் தன் முப்பத்தி ஒன்பதாம் அகவையில் அமரர் ஆனார் அவர். அவரது நினைவுகள் என்றென்றும் மக்கள் மனங்களில் கோலோச்சிக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.சொற்களைக் கோர்த்து பொழுதுபோக்காகக் கவிதைகள் புனைந்தவனில்லை மகாகவி. ஒவ்வொரு கவிதையின் பின்னாலும் ஒரு பெருங்கதை மறைந்து கொண்டிருப்பதைப் புரிந்து கொண்டு அந்தக் கவிதைகளைப் படிக்கும்போதுதான் அதன் சிறப்பினை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
புதுச்சேரியில் அந்தக் காலத்தில் புழக்கத்திலிருந்தது புஷ் வண்டி எனப்படும் பயண சாதனம். அதில் புதுவை உப்பளம் பகுதியைச் சேர்ந்த ஒரு புஷ்வண்டியோட்டி மகாகவிக்கு அடிக்கடி சவாரி வருவது வழக்கம். அப்படியொரு நாள் அந்த மனிதர் பாரதியிடம், “ஐயா நான் உப்பளம் பகுதியில் வசிக்கிறேன். தாங்கள் ஒருநாள் எங்கள் பகுதிக்கு வர வேண்டும். வந்து, அங்கு கோயில் கொண்டிருக்கும் முத்துமாரியம்மனைத் தரிசித்து அங்கு ஒரு பாட்டுப் பாட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான்.