நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்
ராஜேஸ்வரி ஜெயகுமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராஜேஸ்வரி ஜெயகுமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13.10.11

சிரத்தையின் தீவிர வடிவம்

உருத்திரபசுபதி நாயனார்

(திருநட்சத்திரம்: புரட்டாசி- 26 -அஸ்வினி)
(அக். 13)

காவிரி பாயும் சோழ நன்னாட்டில் மறையவர் வளர்க்கும் சிவவேள்வியின் பயனாக மாதம் மும்மாரி பொழிந்தது. அம் மறைக்குலத்தில் பசுபதி நாயனார் அவதரித்தார். வேதவிற்பனர்கள் கண்மலரென நினைக்கும் திருஉருத்திர மந்திரத்தினைத் தூய அன்புடன் பசுபதி நாயனார் நியமத்துடன் ஓதி வந்தார்.

இறைஅருளைப் பெற அவசியம் தேவை சிரத்தை. இந்தச் சிரத்தையினால்தான் நசிகேதன் மரணத்தை வென்றவனானான்; இந்தச் சிரத்தையினால்தான் மார்கண்டேயன் சிரஞ்சீவியானான்; பல ஞானிகள் முக்தியை அடைந்தது இந்தச் சிரத்தையினால்தான். தொடர்ந்து ஒரு நற்செயலை விடாமல் செய்து வரும்பொழுது அச்செயலே முக்திகான வழிக்காட்டியாகி விடுகின்றது என்பதை பாரத நாட்டில் வாழ்ந்து மறைந்த ஞானிகளும், மகாத்மாக்களும் நிரூபித்துள்ளனர். அவ்வகையில் உருத்திரபசுபதி நாயனார் உருத்திர ஜபம் செய்து இறைவனை அடைந்தார். உருத்திர ஜபம் செய்வது அவர் எடுத்துக்கொண்ட நியமம்.

நாயன்மார்களின் வரலாறு மானுடர்கள் முக்தியை அடைய பல வழிகளை எடுத்துக்காட்டுகிறது. எவ்வாறெல்லாம் நாயன்மார்கள் முக்தியை அடைந்தனர் என்பதை நோக்கும்போது, பிள்ளைக் கறி சமைத்து சிவத்தொண்டு செய்தவரும் உண்டு; உடலை உருக்கி பேய் உரு எடுத்து இறைவனை அடைந்தவரும் உண்டு; கண்களைப் பிடுங்கி இறைவனுக்குச் சமர்ப்பித்து முக்தி அடைந்தவரும் உண்டு; இதைப் போல எத்தனையோ கதைகள் உண்டு. நமக்கு இக்கதைகள் ஒன்றைத்தான் உணர்த்துகின்றன. அது சிரத்தையோடும், அர்ப்பண உணர்வோடும், உண்மையோடும் செய்யும் எச்செயலும் இறைவனை அடையும் வழியாகும் என்பதே.

நமக்குத் தெரிந்த நாயன்மார்கள், ஆழ்வார்கள் தவிர சமகாலத்திலும் சத்தியப் பாதையில் சிரத்தையோடு இறையனுபூதி பெற செயல்படும் சிரோன்மணிகள் நம் பாரதநாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால்தான் சத்தியத் தேடலும், பக்தியின்பால் ஈடுபாடும் மக்களிடையே அதிகரித்து வருகிறது.
அப்பாதையில் செல்லும் போது, அப்பாதையில் சென்ற முன்னோரின் வரலாறு பல தடைகளைக் கடந்து போக நமக்கு உதவும். எனவே, நாயன்மார்களின் வரலாறும், ஆழ்வார்களின் வரலாறும், மேலும் பாரத நாட்டில் தோன்றிய ஞானிகளின் வரலாறும் தெரிந்து கொள்வது ஆன்மிகப் பயணத்திற்கு அடிப்படையாக அமையும்.

உருத்திரம் என்பதன் விளக்கம்:  யஜுர்வேதம் ஏழு காண்டங்களை உடையது. இடையில் உள்ள காண்டத்தினுள் பதினோரு அநுவாகங்களை உடையது திருவுருத்திரம். இதன் இடையில் பஞ்சாக்கிரமும், அதன் இடையில் சிகாரமும் விளங்குகின்றது. வேத இதயம் சிவபஞ்சாக்கிரமாகும். வேதத்தின் கண் திருவுருத்திரம்; கண்மணி திருஐந்தெழுத்து என்பார்கள். உருத்திரன் என்ற சொல் ‘துன்பத்தினின்றும் விடுவிப்பவர்’ என்ற பொருளைத் தருகிறது.

- ராஜேஸ்வரி ஜெயகுமார்
காண்க:


உருத்திர பசுபதியார் (விக்கி)

URUTTIRA  PASUPATHI NAYANAR (saivam.org)

உருத்திர பசுபதி நாயனார் (பேரூர் ஆதீனம்)

உருத்திர பசுபதி நாயனார் புராணம்

உருத்திர பசுபதி நாயனார் (தமிழ்க் களஞ்சியம்)

உருத்திர பசுபதியார் (தினமலர்)
 
திருத்தலையூர்

உருத்திர பசுபதி நாயனார் (பெரியபுராண சொற்பொழிவு)

உருத்திர பசுபதியார் (திண்ணை)

உருத்திர பசுபதியார் (ஆறுமுக நாவலர்)

8.10.11

திருநீற்றுக்கு அடியார்

 
நரசிங்க முனையரைய நாயனார்
(திரு நட்சத்திரம்: புரட்டாசி - 21 - அவிட்டம்)

சோழநாட்டிற்கும் தொண்டைநாட்டிற்கும் இடையில் உள்ள நாட்டிற்கு நடுநாடு என்று பெயர். அந்நாட்டின் ஒரு பகுதியாக விளங்குவது திருமுனைப்பாடி நாடு. இந்நாட்டில் தான் சமயக்குரவர்களாகிய நால்வர்களில் திருநாவுக்கரசர் சுவாமிகளும்,  சுந்தரமூர்த்தி நாயனாரும் அவதரித்தனர்.
திருமுனைப்பாடி மன்னர் மரபில் நரசிங்க முனையரைய நாயனார் அவதரித்தார். இவர் திருநீற்றின் மீது அளவற்ற அன்பு பூண்டிருந்தார். சிவபெருமானுடைய கோயில்தோறும் வழிபாடுகள் வழுவாது நடைபெறுமாறு செய்தார். திருவாதிரை தோறும் சிவமூர்த்தியை மிகவும் சிறப்பாக வழிபாடு செய்வதோடு அடியவர்களுக்கு அன்னமளித்து ஒவ்வோர்  அடியவருக்கும் ஒரு நூறு பொன் கொடுத்து வணங்குவார்.
ஒரு நாள் திருவாதிரை நாளில் வழக்கம் போல அடியார்கள் வந்தார்கள். ஒருவர் தீய எண்ணம் கொண்டவராகவும், காமக்குறியுடனும் காணப்பட்டார். அவரைக் கண்டு மற்ற அடியவர்கள் ஒதுங்கினர். அதைப் பார்த்த நரசிங்க முனையரையர் அடியவர்களை நோக்கி, “நீங்கள் இவ்வாறு இகழக் கூடாது. தீயவராக இருந்தாலும் திருநீறு பூசியவர்களை இகழ்ந்தால்  நரகம் அடைவது நிச்சயம். எனவே, எவராக இருந்தாலும் திருநீறு பூசியவரைப் பூசிக்க வேண்டும்என்று கூறினார். அதோடு மட்டுமின்றி அவருக்கு இரட்டிப்பாக இருநூறு பொன் கொடுத்து, கனியமுதன்ன இனிய மொழி கூறி விடைகொடுத்தனுப்பினார்.
இந்தக் கதையில் தீயவராக இருந்தவருக்கு திருநீறு  அணிந்த காரணத்தினால் மன்னன் இருநூறு பொன்கொடுத்து, மதித்த செயல் பல கேள்விகளுக்கு இடமளிக்கிறது. இந்நிகழ்விற்கு திருமுருக கிருபானந்த வாரியார் தரும் விளக்கம் பொருத்தமானதாக அமைந்துள்ளது.
“திருநீறு பூசினால் யாவராயினும் அவரை வணங்கி வழிபட வேண்டும் என்பதை நரசிங்க முனையரைய நாயனார் உலகமறியக் காட்டியருளினார். அது சரிதானா? என்று ஐயுறுவாரும் உளர். அரசாங்கத்தில் வேலை பார்ப்போரில் ஒழுக்கமில்லாதவர், அரசாங்க உடையுடுத்து வருவாராயின் அவரை ஏனைய குற்றங் குறைகளைக் கவனியாது, அந்த உத்யோக உடை கண்டு அவரை மதிக்கின்றோமல்லவா? அதேபோல நீறணிந்தார்,  அந்தரங்கத்தில் தவறுளராயினும் அவர் அணிந்த திருநீற்றை மதித்து வணங்குதல் வேண்டும் என உணர்க என்று கூறுகின்றார்.
திருநீறு அணிந்தவரை மதிக்கும் பழக்கம் குற்றம் குறைகளை காணும் குணத்திலிருந்து நம்மை விடுதலை செய்கின்றது என்பது இவரது புராணத்தின் மூலமும், வாரியாரின் விளக்கத்தின் மூலமும் உணர முடிகின்றது. 

நரசிங்கமுனையரையர் ஒரு நாள் வீதிவலம் வரும் பொழுது வீதியில் தேருருட்டி விளையாடும் நம்பியாரூரரைக் கண்டார். அவர்தம் அழகில் பெரிதும் ஈடுபட்ட அரசர், சடையனாரிடம் சென்று அவரிடம் தாம் கொண்ட நட்புரிமையினால் நம்பியை வளர்த்தற்குத் தருமாறு வேண்டினார். சடையனாரும் அவர் வேண்டுதலுக்கு இணங்கி நம்பியை அளித்தார்.
நம்பியைச் பெருஞ் செல்வமெனக் கொண்ட நரசிங்க முனையரையர்   அவரை அரசத்  திருவெலாம் பொருந்த திருமணப் பருவம் அடையும்வரை வளர்த்தார். இவ்வாறு அன்பர் பணிசெய்து நம்பியை வளர்க்கும் பேறு பெற்றமையாலே இறைவரது திருவடி நீழலில் சேர்ந்து மீளாத நிலைபெற்றார்.

-ராஜேஸ்வரி ஜெயகுமார்
காண்க:
நரசிங்க முனையரைய நாயனார் (தினமலர்)

நரசிங்க முனையரைய நாயனார் புராணம்

NARASINGA MUNAIYARAYA NAIYANAR

பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம் (வினவு)

.
 

6.10.11

துவைதம் கண்ட மகான்

ஸ்ரீ மத்வர்
மத்வ ஜெயந்தி
(விஜயதசமி,  புரட்டாசி 19)

இயந்திரமயமான இவ்வுலகில் மனிதர்களும் கொஞ்சம் கொஞ்சமாக மனிதநேயத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். பொருளைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். அதன் காரணமாக எங்கும் துன்பமயமாகவும்,  போராட்டமாகவும் வாழ்க்கைச் சூழல் அமைந்திருப்பதை உணராமல் இருக்கிறோம்.
பாரதநாடு உலகினுக்கு மனிதத்தை,  தத்துவத்தை, அன்பை, அமைதியை சொல்லிக் கொடுத்தது. இன்று நாம் பாரத நாட்டில் இருந்து கொண்டு எளிமையாக உணர வேண்டியதை, மேலைநாட்டு மோகத்தால், பணம் சம்பாதிக்கும் பேராசையால் உணராமல் இருக்கிறோம்.
நம் நாட்டில் எத்தனையோ மகான்கள் தோன்றி ஞானத்தேடலில் ஈடுபட்டு தத்துவ விளக்கங்களை அளித்துள்ளனர். அவர்களில் மூவர் மிகவும் முக்கியமானவர்கள். ஆதிசங்கரர் – அத்வைதம், ராமானுஜர் – விசிஷ்டாத்வைதம்,  மத்துவர் - துவைதம். 
பாரதநாட்டின் அரிய பொக்கிஷங்களாக விளங்குபவை வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவாகும். அவற்றுக்கான விளக்கங்களையும், தத்துவங்களையும் ஆதிசங்கரர், ராமானுஜர், மத்துவர் ஆகியோர் அளித்துள்ளனர்.
ஆச்சாரியர் மத்துவரின் காலம் பொது யுகத்துக்குப் பின்  (கி.பி) 1238 முதல் 1317. இவர் உடுப்பியிலிருந்து 8 மைல் தொலைவிலுள்ள  பாஜகஎனும் மலைசூழ் சிற்றூரில், தந்தை மத்யகேஹ பட்டர்தாய் வேதவதிக்கும் மகனாக அவதரித்தார். இவருக்குக் கல்யாணி தேவி என்ற மூத்த சகோதரியும் ஒரு தம்பியும் உண்டு. இவருடைய தம்பி பின்னாளில் ஸ்ரீ மத்வரால் சந்யாச தீட்சை கொடுக்கப்பட்டு விஷ்ணு தீர்த்தராக மாற்றம் கண்டவர்.
தாய் தந்தையர் இவருக்கு வைத்த பெயர் வாசுதேவன்என்பதாகும். சந்யாசம் கிடைத்தபோது வைத்த பெயர் பூர்ணப்நர். வேதாந்த ஸாம்ராஜ்ய பீடத்தில் குருவினால் அமர்த்தப்பட்டபோது பெற்ற பெயர் ஆனந்த தீர்த்தர்’. இது தவிர, ‘மத்வ’ , தஸப்ரமதிபோன்ற பெயர்களை வேத மந்திரங்களில் இவரைக் குறிக்கின்றன. ஸ்ரீமத் விஜயம் எனும் காவியத்தில் நாராயண பண்டிதர் இவரை நூற்றுக் கணக்கான பொருள் பொதிந்த பெயர்களால் கவிநயத்துடன் குறிப்பிடுகிறார்.
ஒரு சமயம் உடுப்பிக்கு அருகில்  கடலில் ஒரு கப்பல் சென்று கொண்டிருந்தபோது புயலில் சிக்கி ஆபத்துக்குள்ளானது. கடற்கரையில் நின்று கொண்டிருந்த மத்வர் தன் மேல் துணியைக் காற்றில் வீசிக் காட்டினார் கப்பல் ஆபத்திலிருந்து மீண்டு கரைவந்து சேர்ந்தது.
கப்பலின் தலைவர் அவரை வணங்கி நின்றார். தன்னிடமிருந்து ஒரு பரிசு பொருளை வாங்கி கொள்ளும்படி வற்புறுத்தினார். கப்பலின் அடித்தளத்தில் கோபி சந்தனத்தில் ஒரு பாறை இருப்பதாகவும், அது தனக்கு வேண்டும் என்றும் கூறினார் மத்வர். இவ்விதம் ஓர் அற்பமான கற்பாறையைக் கேட்கிறாரே என்று வியந்தவாறே கப்பல் தலைவர் அதை எடுத்துக் கொடுத்தார். அதனுள் தன் கையைவிட்டு சாலிக்கிராமத்தைத் தானே தூக்கிக் கொண்டுசென்றார். அதுதான் இன்றும் உடுப்பிக்   கோயிலில் மூலவிக்ரகமாக உள்ளது.
அவ்விக்ரகம் குறித்த அற்புதமான செய்தியையும் அவர் வெளியிட்டார். விசுவகர்மா என்ற தேவச்சிற்பியால் செய்யப்பட்டு, துவாரகையில் துவாபராயுகத்தில் ஸ்ரீ ருக்மணி தேவியால் பூஜிக்கப்பட்டு வந்த விக்கிரகம்,  துவாரகை மூழ்கியபோது அதுவும் மூழ்கிவிட்டது. அவ்விக்கிரகம் தான் மத்துவரால் வெளிக்கொண்டு வரப்பட்டது.
ஒரு நாள் மத்துவர் மீது வானிலிருந்து மலர்மாரி பொழிந்ததாம். மலர்க்  குவியலை விலக்கிப் பார்த்த போது அவரைக் காணவில்லை; மறைந்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது.
பிரபஞ்சம் என்பது ஒரு மாயத்தோற்றமல்ல. உண்மை. அந்த உண்மை உருவாவதற்கான கருத்தாகவும் விதிகளாகவும் உள்ளதே பிரபஞ்ச சாரமான பிரம்மம். அது எந்த வகையிலும் மானுடனின் தர்கத்தால் அறிந்துவிடக்கூடிய ஒன்றல்ல. ஆனால் அப்படி ஒன்று உள்ளது என்பதற்கு இந்தப் பிரபஞ்சத்தின் செய்லமுறையே சான்றாகும்'' - இதுவே மத்வரின் வாதம்.
 
-ராஜேஸ்வரி ஜெயகுமார் 
 
காண்க:
 
 
 
 
 
 
 
 
 
 
.

5.10.11

சன்மார்க்கம் கண்ட அருளாளர்


ராமலிங்க வள்ளலார்
(திருநட்சத்திரம்: புரட்டாசி - 18 - பூராடம்)  
(அக். 5)

மக்களை அறியாமைப் பிடியிலிருந்து மீட்டெடுக்கப் பல அருளாளர்கள் நம் தமிழ் மண்ணில் அவதாரம் எடுத்துள்ளனர். அவர்களின் வாழ்வும் தவமும் படைப்பும் புவியுள்ளளவும் மக்களுக்கு வழிக்காட்டக் கூடியவை.
சென்ற நூற்றாண்டில் தமிழ்நாட்டில் தென்னாற்காடு மாவட்டத்தில் சிதம்பரத்திற்கு வடமேற்கே சுமார் 16 கி.மீ. தூரத்தில் உள்ள மருதூர் என்ற கிராமத்தில் 1823, அக்டோபர்,  5ம் நாள், ஞாயிற்றுகிழமை ராமலிங்க அடிகள் அவதரித்தார். தந்தையார் ராமையா பிள்ளை, தாயார் சின்னம்மை. அருட்பிரகாச வள்ளலார் இவர்களுக்கு ஐந்தாவது பிள்ளை.
சிறு வயதில் ராமலிங்கம் தமையன் சபாபதியிடம் ஆரம்ப கல்வி கற்றார். உலகியல் கல்வியில் வள்ளலாருக்கு நாட்டம் இல்லை. இறைவனைப் பற்றிப் பாடுவதிலேயே ஈடுபட்டார். கற்க வேண்டியவற்றை இறைவனிடமே  கற்றார்.
ஏழு, எட்டு வயதான போது சென்னை கந்தகோட்டத்து முருகனிடம் ஈடுபாடு உண்டானது. அந்த வயதிலேயே தெய்வ மணிமாலை’, ‘ கந்தர் சரணப்பத்துமுதலிய பாடல்களை இவர் பாடியதாகக்  கூறுவர்.  சின்ன வயதிலேயே பெரும்புலமைப் பெற்று விளங்கினார்.
தமையனார் பெரியபுராணக் கதை சொல்லச் சோமு செட்டியார் என்பவர் இல்லத்திற்குச் செல்ல முடியாமல் போனதாம். அப்பொழுது சிறுபிள்ளையாக இருந்த ராமலிங்க வள்ளலாரைத் தமையனார் சோமு செட்டியார் இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். ராமலிங்க வள்ளலார் ஒரே ஒரு பாடலுக்கு விடிய விடிய சொன்ன விரிவுரை கேட்டு மக்கள் வியந்து போனார்கள் என்று சொல்லப்படுகிறது.
நகரச் சந்தடிகளை விரும்பாத ராமலிங்கர் தனிமையை நாடிச் செல்லத் தொடங்கினார். இவர் திருவொற்றியூர் செல்லத் தொடங்கியபோது பன்னிரண்டு வயதாக இருந்திருக்கலாம்.
திருவொற்றியூருக்கு நடந்தே செல்லும் பழக்கமுடைய அடிகளார் ஒரு சமயம் வழக்கமாய்ச் செல்லும் நெல்லிக்காய்ப் பண்டாரச் சந்து வழியே செல்லாமல் தேரடித் தெரு வழியே ஆலயம் நோக்கிச் சென்ற போது, நிகழ்ந்த ஒரு பெருந்துறவி அங்கு நடமாடும் மனிதர்களை நாய் போகிறது; நரி போகிறது; மாடு போகிறதுஎன்று குறிப்பிட்டுச் சொல்லிக் கொண்டே இருப்பாராம். அடிகளார் சென்ற அன்று அந்தத் துறவி, ‘இதோ ஒரு உத்தம மனிதன் போகிறான்என்று வியந்து கூறினாராம்.
வாலிப வயதில் ராமலிங்க அடிகளுக்குத் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின்னரும் அடிகள் இல்லறத்தில் ஈடுபடாது இறைவன் நெறியிலேயே ஈடுபட்டு வந்தார்.
மாநிலக்கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் தொழுவூர் வேலாயுத முதலியார் அவருக்குத் தலைமைச் சீடரானார். அவர்தான் வாழ்க்கைக் குறிப்பையும், ஐந்து திருமுறைகளாகத் திருவருட்பாப் பாடல்களையும் வெளியிட்டார்.
ஒளி வழிபாடு, உயிர்ப்பலி மறுப்பு, சாதி சமய எதிர்ப்பு ஆகிய கோட்பாடுகளைத் தீவிரமாக முன்மொழிந்தார். மரணத்தை வெல்லுதல் மனிதர்களுக்குச் சாத்தியப்படும் என்று கருதினார். இவற்றையெல்லாம் எடுத்து மொழியவும், சமரச சுத்த சன்மாக்க சத்திய சங்கத்தை நிறுவினார்.
தில்லைக்கு வடக்கே பார்வதிபுரம் என்கிற வடலூரைத் தெர்ந்தெடுத்துப் பசிப்பிணி தீர்க்கும் மையமாகச் சத்திய தர்மச் சாலையை 1867 இல் தோற்றுவித்தார்.  தருமச்சாலையில் மக்கள் கூட்டம் நிரம்பியது.
தனிமையை விரும்பிய அடிகளார் மேட்டுக்குப்பம் என்ற இடத்திற்குச் சென்று தங்கலானார்.(1870) அவ்விடத்திற்குச் 'சித்தி வளாகம்' என்று பெயர் சூட்டினார்.
ஒளிவழிபாட்டை உலகுக்கு உணர்த்தும் பொருட்டு வடலூரில் 1872ல் 'சத்திய ஞான சபை' என்ற வழிபாட்டுத் திருமாளிகையை அமைத்தார். அருட்பெருஞ்சோதி வழிபாடு அந்த ஆண்டு தைபூச் நன்னாளில் தொடங்கியது.
சித்தி வளாகத்தில் தங்கியிருந்த வள்ளல் பெருமான் 1873 ம் ஆண்டில் சன்மார்க்கக் கொடி ஒன்றை (மஞ்சளும் வெள்ளையும் கலந்தது) ஏற்றி அரிய அறிவுரைகள் நல்கி வந்தார்.
 சகாத மேல்நிலைகுறித்து பலகாலமாக சொல்லி வந்த ராமலிங்க வள்ளல் சித்திவளாகத் திருமாளிகையில் 30.1.1874 அன்று (தைப்பூச  நன்னாளன்று)  அறைக்குள் சென்று திருக்காப்பிட்டுக் கொண்டார். ஒளியுடம்பு பெற்று அருள்வெளியோடு ஒன்றினார் வள்ளல் பெருமான்.
ராமலிங்க வள்ளலார் சமயம், சமுதாயம் இரண்டையும் ஒன்றாக்கி உயிர்கருனை தத்துவத்தைச் செயல்படுத்த பல அமைப்புகளை உருவாக்கினார். உலக மக்களை ஒருமை தன்மையோடு ஒரே வழி அன்புசெய்வது தான்.
மனிதர்களிடம் புரிதல் மேம்படும் போது அன்பு தழைக்கிறது. அன்பு தழைத்த இடத்தில் வேற்றுமை என்பதற்கு இடமிருப்பதில்லை. இதை மானிடர்கள் உணரும்போது எங்கும் அமைதி, எதிலும் இன்பம் என மானிட வாழ்வு மேன்மையுறும். மானிட வாழ்வை மேம்படுத்தவே வள்ளலார் போன்ற ஞானிகள் பாரத மண்ணில் தோன்றி வருகின்றனர்.
பாரத திருநாட்டில் பிறந்த நாம் ஒவ்வொருவரும் உலகிற்கு அன்பைப் பரப்ப உறுதி பூணுவோம்; செயல்படுவோம். 
வந்தேமாதரம்! வாழிய பாரத மணிதிருநாடு!
-ராஜேஸ்வரி ஜெயகுமார்
காண்க:
ஜோதியில் கலந்த வள்ளலார் 

.