நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

20.1.11

ஜோதியில் கலந்த வள்ளலார்

 
 
 
வள்ளலார் 
குருபூஜை: தைப்பூசம் - தை  6 
(ஜன. 20)
 
கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம்,  மருதூர் கிராமத்தில் 5-10-1823-ம் ஆண்டு அவதரித்தவர்தான் வள்ளலார் என்றழைக்கப்படும் ராமலிங்க அடிகளார். தகப்பனார் ராமையா பிள்ளை, தாயார் சின்னம்மையார்.
 
 வடலூர் வள்ளலார் தெய்வநிலையம் என்பது அவர் உருவாக்கிய ஞானசபை, தருமச்சாலை, ஜோதியாய் மறைந்த சித்தி வளாகம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். சத்திய ஞானசபையில் வள்ளலார் 18-7-1872 அன்று ஏற்படுத்திய வழிமுறைகளின்படி ஜோதிவழிபாடு இன்றும் நடைபெறுகிறது.
 
 வள்ளலார் தான் கண்ட சுத்த சன்மார்க்கத்துக்குத் தனிப்பெயர், தனிக்கொள்கை, தனிக்கொடி, தனிஇடம் ஏற்படுத்தி அவற்றுக்கு திருமந்திரம், சபை, சாலை, வழிபாட்டு விதிகள், கட்டளைகள், நூல்கள், உரைகள், பாடல்கள் முதலியவற்றை வழங்கியுள்ளார்.
 வள்ளலாரின் கருத்துகள் அனைத்து நாட்டவர்களிடமும் மிகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, உலகத்தார் அனைவரையுமே ஒருகுடையின்கீழ் ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை கொண்டு வாழ வழிவகை செய்கிறது.
 
 வள்ளலார் தன் கைப்பட எழுதிய அருட்பெருஞ்சோதி அகவல் மூலப்பிரதி இன்றும் வடலூர் தருமச்சாலையில் உள்ளது. வள்ளலார் சமரச வேத சன்மார்க்க சங்கத்தை 1865-ம் ஆண்டில் நிறுவினார். பின்னர் 1872-ல் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்தார்.
 
 சத்திய ஞானசபை கட்டடம் கட்டும்பணி 1871-ல் தொடங்கப்பட்டு 1872-ல் முடிவடைந்துள்ளது. ஞானசபையில் முதல் தைப்பூச விழா 25-1-1872 அன்று நடைபெற்றிருக்கிறது. 18.4.1872 அன்று அருட்பெருஞ்சோதி அகவலை அடிகளார் அருளினார்.
 
 அவர் ஜாதி வேற்றுமையைக் கண்டித்துப் பேசியதால் அனைவரது பெரும் பாராட்டுக்கு உரியவராக இல்லை. ஆயினும், எல்லா ஜாதியினரும் பெருந்திரளாக அவரைச் சூழ்ந்திருந்தனர். ஜோதிதீபம் தகரக்கண்ணாடியில் தான் காட்ட வேண்டும் என்றும், எண்ணெய் ஊற்றி மட்டுமே தீபம் ஏற்றிக் காட்ட வேண்டும் என்றும், மக்கள் அமைதியாக நின்று சப்தம் செய்யாமல் அருட்பெருஞ்ஜோதி தாரக மந்திரத்தை ஓதவேண்டும் என வள்ளலார் கூறியுள்ளார்.
 
 வள்ளலார் சிறுவயதில் சென்னைக்கு பெற்றோர்களுடன் சென்றார். தனது 9-வது வயதில் பல தெய்வப் புலவர்கள் எழுதிய பாடல்களை மனப்பாடமாகப் பாடும் ஆற்றல் பெற்று இருந்தார். 12 வயதிலேயே தனது இறைப்பணி வாழ்வைத் தொடங்கினார்.
 
அன்று சென்னையில் பெரும்புலவராக விளங்கிய தொழுவூர் வேலாயுதனார் 1849-ம் ஆண்டு வள்ளலாரின் மாணவரானார். 1850-ம் ஆண்டு தனது உறவினர்களின் வற்புறுத்தலால் தனது சகோதரியின் மகளான தனம் அம்மாளைத் திருமணம் செய்துகொண்டார்.
 
 தனது வாழ்வில் மாமிச உணவை வெறுத்தார். 1858-ம் ஆண்டு வள்ளலார் தனது வாழ்க்கையைத் துறந்து இறைப்பணி யாத்திரையைத் தொடங்கினார்.
 அப்போது சிதம்பரம் வந்தார். அதன்பிறகு வடலூர் அருகே உள்ள கருங்குழி கிராமத்தில் மணியக்காரர் இல்லத்தில் தங்கினார். 1867-ம் ஆண்டு வரை வடலூரில் தர்மசாலையை நிறுவும்வரை கருங்குழி கிராமத்தில் இருந்தார்.
 
 வள்ளலார் என்ற புரட்சித்துறவி செய்த புதுமைகள் பல. அவர் மடத்தைச் சங்கமாக்கினார். சத்திரத்தை தர்மச்சாலையாக்கினார். கோயிலை ஞானசபையாக்கினார்.
 
 முதல் திருக்குறள் வகுப்பு, முதல் முதியோர் கல்வி, முதல் மும்மொழிப் பாடசாலை, முதல் ஆன்மிகக் கொடி, முதல் ஜோதி வழிபாடு செய்தவர் ராமலிங்க அடிகளார்.
 
 மனத்தூய்மையும், தீய குணங்களும் நீங்கிய மனிதன் ஜீவகாருண்யச் செயல்களால் இறை நிலை அடைய வேண்டும் என்பதே வள்ளலாரின் கோட்பாடு.
 
 ஜாதிமத பேதமின்றி, ஏற்றத்தாழ்வு இல்லாது, எல்லா உயிர்களிடத்தும் அன்பை முன்னிலைப்படுத்திய ஒரு கொள்கையை அடிப்படையாக வைத்து அதனையே தனது அமைப்பாக அறிவித்தார்.
 
 ஞானசபையானது ஜாதி மதம் கடந்த உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற ஏற்றத்தாழ்வு அற்ற கொலை, புலால் தவிர்த்தவர்கள், மனிதநேயமும், அன்பு உள்ளமும் கொண்டவர்கள் கூடி உருவம் இல்லாத ஜோதி தீப வடிவமாக இருக்கிற இறைவனைத் தரிசிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இடமாகும்.
 
  வள்ளலார் வடலூரில் ஏற்படுத்திய சத்திய ஞானசபையில் தம் கைப்பட ஒரு திருவிளக்கை ஏற்றி அதற்கு முன்பாக ஐந்தடி உயரமுள்ள ஒரு கண்ணாடியையும் அமைத்தார். கண்ணாடிக்கு முன்னால் 7 திரைகள் உள்ளன. அவை: 1. கருப்பு 2. நீலம் 3. பச்சை 4. சிவப்பு 5. பொன்மை 6. வெண்மை 7. கலப்பு நிறம் கொண்டவை.  தைப்பூசத் திருவிழாவின்போது 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது.
 
  வள்ளலார் பதிப்பித்த நூல்கள் ஒழிவிலொடுக்கம் (1851) தொண்டைமண்டல சதகம் (1855) சின்மய தீபிகை (1857) மனுமுறை கண்டவாசகம்.  வள்ளலார் நடத்திய பத்திரிகை சன்மார்க்க விவேக விருத்தி.
 
 அன்னதானத்துக்காக அமைக்கப்பட்ட நெருப்பு அணையாமல் எரிவதை வடலூர் தருமச்சாலையில் காணலாம். வருகிறவர்களுக்கெல்லாம் இல்லையென்று கூறாது பசிபோக்கும் தாய்வீடாக வடலூர் தருமச்சாலை இயங்குவதையும் காணலாம்.
 
 1867-ம் ஆண்டு மே மாதம் 23-ம் நாள் வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையைத் தொடங்கினார். அன்று  வள்ளலார் திருக்கரத்தால் ஏற்றப்பட்ட அடுப்பு இன்றுவரை தொடர்ந்து எரிந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
 
 ஞானசபையைச் சுற்றி இரும்புச் சங்கிலி ஒன்று கட்டப்பட்டுள்ளது. 137 ஆண்டுகளாக அந்தச் சங்கிலி மழை, வெயில் என இயற்கைச் சீற்றங்களைச் சந்தித்து வருகிறது. ஆனால், அது துருப்பிடிக்காமல் இன்றுவரை உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 மேட்டுக்குப்பம் சித்தி வளாகத் திருமாளிகையில் சத்திய ஞான தீப வழிபாட்டுக்கு 1873-ம் ஆண்டு கார்த்திகை மாதம் திருவண்ணாமலை தீபதினத்தன்று உள்ளிருந்த விளக்கைத் திருமாளிகைபுறத்தில் வைத்து தடைபடாது ஆராதியுங்கள் எனக் கூறினார்.
 
 அந்த விளக்கு இன்றுவரை எரிந்து கொண்டிருக்கிறது.  வள்ளலார் இம்மண்ணுலகில் 50 ஆண்டுகள் 3 மாதங்கள் 25 நாள்கள் வாழ்ந்தார்.
 
30-1-1874 அன்று தைப்பூசத் திருநாளில் அன்பர்களிடம் இன்று உங்கள் கண்களுக்குத் தெரியாமல் சிறிது நேரத்தில் இறைவன் அருளால் அருட்பெருஞ்சோதியாக விளங்கும் அச்சோதியில் கலந்துவிடப் போகிறேன் என்று கூறி அறைக்குள் நுழைந்து சென்றார். அவர் கேட்டபடி அறை பூட்டப்பட்டது வள்ளலார் ஜோதியில் கலந்தார்.

- எம்.டி.வேதசிகாமணி
 
காண்க:
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக