நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

25.12.12

ஒரு பாறையின் மகத்தான சரித்திரம்


'சுவாமி விவேகானந்தர்- 150' ஆண்டு விழாவுக்காக, 
இன்று சங்கல்பம் மேற்கொள்வோம்!


 நாட்டின் சரித்திரத்தையே மாற்றி எழுதும் ஆற்றல் ஒரு பாறைக்கு உண்டா? உண்டு என்று நிரூபித்திருக்கிறார் ஒரு வீரத்துறவி. அதுவும் அந்தப் பாறை, நமது தமிழகத்தில் உள்ள பாறை என்றால் ஆச்சரியமாகத் தான் இருக்கும்.

தேசத்தின் தென்கோடியில் கன்னியாகுமரியில் கடலின் நடுவே உள்ள ஒரு சிறு பாறைத்தீவு இன்று நாட்டின் கௌரவச் சின்னமாகக் காட்சி தருகிறது. அங்கிருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தைத் தரிசிக்க நாடு  முழுவதிலுமிருந்து- ஏன் உலகம் முழுவதிலுமிருந்து- மக்கள் வந்து செல்கிறார்கள். அந்தப் பாறையில் அப்படி என்ன விசேஷம்?

இதைத் தெரிந்துகொள்ள 120 ஆண்டுகளுக்கு முந்தைய சரித்திரத்துக்கு பயணம் செய்ய வேண்டும்.

1892, டிசம்பர் 24-ஆம் தேதி, காவியுடை உடுத்த சந்நியாசி ஒருவர் கடல் நடுவே இருந்த இந்தப் பாறைக்குச் செல்ல உதவுமாறு அங்கிருந்த மீனவர்களை வேண்டினார். ஆனால் மீனவர்கள் யாரும் உதவவில்லை. அதனால் இளம் சந்நியாசி சலிப்படையவில்லை; கடலில் குதித்து நீத்தியே அந்தப் பாறையை அடைந்தார். அங்கு டிச. 24, 25, 26 ஆகிய தேதிகளில், மூன்று நாட்கள் அன்ன ஆகாரமின்றி தவத்தில் ஆழ்ந்தார்.

அந்தத் தவத்தின் இறுதியில், அவருக்குள் ஒரு புதிய ஞான ஒளி உதித்தது. புத்தருக்கு போதிமரம் போல, அந்த இளம் துறவிக்கு ஞானம் வாய்த்தது அந்தப் பாறையில். அவர்தான் பின்னாளில் ‘சுவாமி விவேகானந்தர்’ என்ற நாமகரணத்துடன் உலகையே தனது அறிவாலும் பேச்சாலும் வென்றவர்.

அவரது பெருமையை நினைவுகூரும் விதமாக பிரமாண்டமாக அங்கு நினைவாலயம் எழும்பி இருக்கிறது. அதன் நிழலில் விவேகானந்த கேந்திரம் என்ற அமைப்பு பல சேவைகளை ஆர்ப்பாட்டமின்றி நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. இந்தப் பாறை மகத்தான பாறையானதன் பின்னணியில் அந்த இளம் துறவியின் மாபெரும் தவ வாழ்க்கை புதைந்திருக்கிறது.

வரும் ஆண்டு, சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது ஆண்டு பிறந்த தின ஆண்டு. இந்த ஆண்டிலேயே இதற்கான கொண்டாட்டங்கள் துவங்கிவிட்டன. 1863, ஜனவரி 12-ஆம் தேதி புவனேஸ்வரி அம்மையாரின் கருவறையில் உதித்த நரேந்திரன் என்ற அந்த பாலன், அடிமைப்பட்டிருந்த தேசம் மீது படர்ந்திருந்த சாம்பலையும் சோம்பலையும் போக்க வந்த துறவியாக மலர்ந்தது நமது தேசத்தின் பெரும் பேறு.

நாடு விடுதலைக்காக தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டுவந்த அந்தக் காலகட்டத்தில், ஸ்ரீ ராமகிருஷ்ணரின் சீடராக, ஆன்மிக ஒளிவிளக்காக உதித்த சுவாமி விவேகானந்தரின் உபதேசங்கள் பல தலைவர்களை உருவாக்கின. அவர் வாழ்ந்த காலம் மிகவும் குறுகியது; ஆனால் தான் மறைவதற்குள், பல நூறு ஆண்டுகளில் சாதிக்க வேண்டியதை 39 ஆண்டுகளில் சாதித்துத் திரும்பினார்.

அவருக்கு அந்த உத்வேகத்தை அளித்தது எது? குமரிமுனையில் அவர் தவம் செய்த பாறையில் அவருக்கு ஞான ஒளி கிடைக்கக் காரணமானது எது?

1888-ஆம் ஆண்டு துவங்கி 1893 வரை நாட்டின் பல பகுதிகளிலும் அவர் நிகழ்த்திய ‘பரிவ்ராஜக’ சுற்றுப்பயணமே அந்த ஞானத்துக்குக் காரணம். நடந்தும், வண்டியிலும், ரயிலிலும் பல்லாயிரம் மைல்களைக் கடந்து தேசத்தை வலம் வந்தபோது, அவர் எண்ணற்ற மக்களைச் சந்தித்தார்; அவர்களது இன்ப துன்பங்களை நேரில் கண்டார்.

இடையே 1892, டிசம்பரில் குமரிமுனை வந்தார். அங்கு குமரிமுனை பாறையில் அவர் செய்த தவம் என்பது, மேற்படி பயணத்தில் பெற்ற அனுபவங்களை அசை போடுவதாகவே அமைந்தது. அப்போதுதான் நமது நாட்டின் வீழ்ச்சிக்கும் சீரழிவுக்கும் காரணம் புரிந்தது. அது மட்டுமல்ல, அந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் திட்டமும் மனதில் உதித்தது.

இதை அவரே தனது உரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

“குமரி முனையில், தென்கோடி முனையில் உள்ள பாறையில் தான் எனக்கு அந்த யோசனை உதித்தது. நம்மிடையே எண்ணற்ற துறவிகள் இருக்கின்றனர். அவர்கள் பல உபதேசங்களைச் செய்கின்றனர். இருந்தும் அனைத்தும் வீணாகின்றன. அப்போதுதான் எனது குருதேவரின் உபதேசம் நினைவில் வந்தது. பசியால் துடிப்பவனுக்கு மத போதனை தேவையில்லை என்பதுதான் அது. நாடு என்ற முறையில் நாம் நமது தனித்தன்மையை இழந்திருக்கிறோம். அதுவே இந்தியாவின் குளறுபடிகளுக்கெல்லாம் காரணம். நாம் மக்களை இணைத்தாக வேண்டும்”

இதுவே அந்தத் துறவி கண்டறிந்த உண்மை. நாட்டை உள்ளன்போடு வலம் வந்ததன் விளைவாகத் திரண்ட ஞானம் அது. அங்கிருந்து தான், அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற சர்வ சமயப் பேரவையில் வெற்றிக்கொடி நாட்டும் வேகத்துடன் அந்தப் புயல் கிளம்பிச் சென்றது. பின்னர் நடந்ததை சரித்திரம் பதிவு செய்திருக்கிறது.

இதுவே ‘விவேகானந்தர் பாறை’ என்று அழைக்கப்படும் பாறையின் வெற்றிக்கதை. நாட்டையும் மக்களையும் நம்மாலும் நேசிக்க முடிந்தால், கல்லும் கனியும்;  வெற்றுப் பாறையும் புனிதமாகும். சக மனிதனை நேசிக்கும் அன்பே மதத்தின் ஆணிவேர் என்பது புலப்பட்டுவிட்டால், நாம் அனைவரும் அந்த வீரத்துறவி கனவு கண்ட வீரர்களாக மாற முடியும்.

ஒரு மகத்தான சரித்திரத்தின் 120 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், விவேகானந்தரின் 150- ஆவது ஆண்டுக் கொண்டாட்டங்கள் நிகழ உள்ள நிலையில், அவரது அறைகூவலை கடலலைகளுக்கு நிகராக ஒலித்தபடி இருக்கிறது அந்தப் பாறை. அது உங்கள் காதுகளுக்குக் கேட்கிறதா?
 
 நன்றி: தினமணி (24.12.2012)


17.12.12

பெயரில் என்ன இருக்கிறது?



"காந்தியடிகள் வர்ணாசிரமத்தை ஆதரித்தவராயிற்றே, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர் 'ஹரிஜனங்கள்' என்று பெயர் சூட்டுவானேன்?'' என்று எழுப்பப்படும் கேள்விகளுக்கும், கண்டனங்களுக்கும் அண்ணல் காந்தியடிகளே, பல்வேறு சந்தர்ப்பங்களில் பதிலளித்திருக்கிறார்.

 வர்ணாசிரம தர்மத்தைப்பற்றி காந்திஜி எழுதிய கட்டுரைகள் அடங்கிய ;வர்ண வியவஸ்தா' என்ற சிறு புத்தகம் 1934-இல் வெளிவந்தது. அந்நூலுக்கு அளித்த நீண்ட முன்னுரையில் மகாத்மா காந்தி தமது நிலைபற்றிப் பின்வருமாறு விளக்கியுள்ளார்:

 "முற்காலத்தில் இந்து சமூகம் ஒத்திசைவாக இயங்கி வருவதற்கு நான்கு பிரிவினர் கொண்ட வர்ணாசிரம தர்மம் ஓர் மிகச் சிறந்த அமைப்பாக அனுசரிக்கப்பட்டு வந்தது என்பது முற்றிலும் உண்மையே. அதேசமயம் அக்காலத்தில் எந்தப் பிரிவினர் உயர்ந்தவர், எவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு எழவில்லை. நான்கு வர்ணத்தினரும் சரிநிகர் சமானமானவர்களாகவே கருதப்பட்டனர். ஏனெனில், ஒட்டுமொத்த சமூகத்திற்கு அந் நான்கு பிரிவினரின் சரிநிகரான பணியும் சார்பு நிலையும் அத்தியாவசியமாக இருந்தன. ஆனால், போகப்போகப் பின் நாட்களில் உயர்வு - தாழ்வு மனப்பான்மை தலைதூக்கியது. இந்த மாற்றம் வர்ணாசிரம தர்மத்தை சின்னாபின்னமாக்கத் தொடங்கிற்று.

 அந்தணர்கள்  பிரும்மச்சரியம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் அடங்கிய கட்டுப்பாடான வாழ்க்கை நெறிவழியைக் கடைப்பிடித்த காலம் என்றோ மங்கி மறைந்துவிட்டது. இன்றைய குடும்பஸ்தர்களுக்கு பொருள் ஈட்டுவதும், சுகபோகங்களில் ஈடுபடுவதுமே அனைத்துப் பிரிவினரின் வாழ்க்கைக் குறிக்கோளாகிவிட்டது''.

 காந்திஜி தமது முன்னுரையை இவ்வாறு முடிக்கின்றார்:

 "நவீன சகாப்தத்தில் ஒருவர்க்கொருவர் போட்டாபோட்டி போடுவதும், உலகாயத நாட்டங்களுமே வாழ்க்கையின் அம்சமாகிவிட்டன. எவரும் எந்தவிதமான வேலை வாய்ப்பையும் தேடிக் கொள்ளலாம் என்கிற தற்கால சூழ்நிலையில் வர்ணாசிரம முறை நடவாத காரியம்; சோம்பேறிகளின் பகற் கனவு. அந்நெறி முறையைத் திரும்பவும் உயிர்ப்பிக்கும் எண்ணம் குழந்தைத்தனமான மடமையே ஆகும்''.

 "ஜாதிப் பிரிவினைகளை அகற்ற வேண்டும்'' என்ற தலைப்பில் காந்தி மகான் தமது  'அரிஜன்' (16-11-1935) இதழில் எழுதியுள்ள கட்டுரையில், "இன்று நிலவிவரும் ஜாதி அமைப்புகள் பண்டைய  வர்ணாசிரம விதிமுறைகளுக்கு நேர்எதிரிடையான விகற்பங்களேயாம். அனைத்து மக்களும் ஒருமித்து, ஜாதிப் பிரிவினைகளை விலக்கிக்கொள்ளும் காலம் எவ்வளவுக்கெவ்வளவு துரிதமாக வருமோ அவ்வளவுக்கவ்வளவு நாட்டிற்கு நல்லது'' என்று ஐயந்திரிபற வலியுறுத்தியுள்ளார்.

 மற்றொரு கட்டுரையில் காந்திஜி, "பிறப்பின் காரணமாக ஜாதி வித்தியாசங்களைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது நெறிகெட்ட வழக்கு, ஒழுக்கக் கேடானது. இத்தகைய ஜாதிப் பிரிவினைகளால் நாம் அவதியுற்றுத் தீமைக்கு ஆளாகிவிட்டோம். உயர்ஜாதி - கீழ்ஜாதி என்கிற மனப்பான்மை நமது சமூக வாழ்வை இழிவுபடுத்திவிட்டது'', என்றெல்லாம் கடுமையாகச் சாடியுள்ளார். ('அரிஜன்', 2-5-1936).

 'பிறப்பினால் தீண்டத்தகாதோர் என்று சாத்திரங்களில் எங்கும் கூறப்படவில்லை. மேலும், பண்டைய வர்ணாசிரம தர்ம நியதிகளில் கலப்புத் திருமணத்திற்கும், சமபந்தி போஜனத்துக்கும் தடைகள் இருந்ததில்லை; ஸ்மிருதிகளிலும் வேறு நூல்களிலும் அவை குறித்துக் காணப்படும் தடைகள் மத்திய கால இடைச் செருகல்கள்' என்பதும் காந்திஜியின் கருத்து. ('அரிஜன்', 16-11-1935).

 சேவாகிராம ஆசிரமப் பொறுப்பாளர் நரஹரி பரீக் என்பாருக்கு 1945 மே 6 அன்று எழுதிய நீண்ட கடிதத்தில் காந்திஜி, "தற்போது நிலவும் ஜாதி, உட்-ஜாதிப் பிரிவுகள் அகன்றபின், நாம் சற்றும் தயங்காமல் அதி - சூத்திரர்களுக்கும் ஜாதி இந்துக்களுக்கும் இடையே கலப்புத் திருமணங்கள் நடைபெறுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதுவே எனது அண்மைக்கால இறுதியான எண்ணம்.  இது ஒரு முக்கியமான கடிதம் - பிரதியெடுத்து நமது அலுவலகப் பதிவேட்டில் குறித்து வைக்கவும்'' என்று முத்தாய்ப்பு வைக்கிறார் மகாத்மா காந்தி.

 தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 'ஹரிஜனங்கள்' என்று 1931-இல் காந்திஜி பெயரிட்டபோதே சர்ச்சைகள் எழுந்தன. அவற்றுக்குப் பதிலளிக்கும் வகையில் காந்திஜி இவ்வாறு விளக்கம் அளித்தார்:

 "தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒரு நபர் எனக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'எங்கள் குலத்தவர்களை  'அந்தியஜாஸ்' என்று குறிப்பிடுவது எங்களை அவமானப்படுத்துவதாக உள்ளது. மாறாக, நீங்கள் ஏதாகிலும் ஓர் புதிய பெயரை புனைந்தளியுங்களேன்' என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதற்கு முன்பாக வழக்கிலிருந்த பங்கிகள்', 'பறையர்கள்' பெயர்களும் தாழ்த்தப்பட்டோருக்குப் பிடித்தமில்லாமலிருந்தது! ஆகவே 'அந்தியஜாஸ்' (கடைசி மக்கள்) என்ற பெயரில் குறிப்பிடப்பட்டனர்.

 சுவாமி சிரத்தானந்தர் தான் முதன்முதலில் 'தலித்' என்ற பெயரை உபயோகித்தார் என்று நினைக்கிறேன். என்னைக் கேட்டால்,  தீண்டாமை எனும் கொடிய நச்சு நமது சமூகத்தில் புரையோடிக் கிடக்கும்வரை, எந்தப் புதுப் பெயரும் சில காலத்திற்குப் பிறகு வெறுக்கத்தக்கதாகிவிடும். எது எப்படியோ, அந்தியஜாஸ் அல்லது தலித் என்ற சொற்களுக்குப் பதிலாக வேறு தகுந்த பெயரை எவரேனும் சிபாரிசு செய்து எனக்கு எழுதுங்கள்' என்று 'நவஜீவன்' (7-6-1931) இதழில் கேட்டிருந்தேன். பலர் பல்வேறு பெயர்களைப் பரிந்துரைத்தனர்.  ராஜ்கோட்டைச் சேர்ந்த ஜகந்நாத் தேசாய் என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பினன், 'ஹரிஜன்' என்கிற பெயரைப் பிரஸ்தாபித்து எனக்கு எழுதிய கடிதத்தில், "பல கிராமங்களில் ஏற்கெனவே 'ஹரிஜனா' என்ற பெயர் வழக்கில் உள்ளது. மேலும், மிகச் சிறந்த குஜராத்தி பக்திக் கவிஞரான நரசிங் மேத்தா தமது அந்தியஜா பக்தர்களை ஹரிஜனங்கள் (திருமாலின் புத்திரர்கள் - கடவுளின் குழந்தைகள்) என்று குறிப்பிட்டு வந்தார்' என்று விளக்கமாக எழுதியிருந்தார்.

 ஆகவே, 'ஹரிஜன்' என்ற சொல் புதிதல்ல. குஜராத்தி பக்தி கீதங்களின் பிதாவாகக் கருதப்படும் நரசிங் மேத்தாவினால் ஏற்கெனவே புனையப்பட்டது. தவிர, 'சமூகத்தால் கைவிடப்பட்ட ஜனங்களும் ஹரியின் மக்களே' என்ற அர்த்தமும் அப்பெயரில் தொனிக்கிறது'' ('அரிஜன்' 7-6-1931).

 1946, பிப்ரவரி 4 அன்று உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் மகாத்மா காந்தி பேசுகையில், "ஹரிஜன சேவையில் நான் தொடர்ந்து ஈடுபட்டு வருவதன் பொருட்டு எனக்கு 125 வருட ஆயுசு அருளுங்கள் இறைவா', என்பதே எனது பிரார்த்தனை.

 நீங்களெல்லாம் தீண்டாமை எனும் பாவத்தைக் களைத்தெறியாத வரை நமக்கு மெய்யான சுயராஜ்யம் கிட்டாது; நமது மதமும் வெகுநாள் நீடிக்காது'' என்று அறிவுறுத்தினார். ("தி ஹிந்து' 4-2-1946).

 "பெயரில் என்ன இருக்கிறது?'' என்ற தலைப்பில் தமது 14-4-1946 தேதியிட்ட 'அரிஜன்' வார இதழில் மகாத்மா காந்தி இவ்வாறு முத்தாய்ப்பு வைக்கிறார்:

 "ஹரிஜன் என்ற பெயர் புனிதம் வாய்ந்தது. ஓர் தாழ்த்தப்பட்ட நபரால் பிரஸ்தாபிக்கப்பட்டது. சிறந்த பக்திக் கவிஞரால் ஏற்கெனவே ஏற்கப்பட்ட பெயர் அது. எப்பெயராயினும், தாழ்மை மனப்பான்மை அகல வேண்டும் என்பதே முக்கியம். அது இன்றுவரை மிகமிக மெதுவாகத்தான் அகன்று வருகின்றது.

 ஒவ்வொரு இந்துவும் உயர்வு - தாழ்வு மனப்பான்மையை உள்ளார்ந்த உணர்ச்சியுடன் அறவே விலக்கிக்கொண்டு நடைமுறையில் அனைவருமே ஹரிஜனங்களாக மாற வேண்டும். அப்போது நாம் எல்லோருமே கடவுளின் மெய்யான குழந்தைகளாகி விடுவோம். அதுவே 'ஹரிஜன்' என்பதன் மெய்ப்பொருள்.

- லா.சு.ரங்கராஜன்

- தினமணி (17.12.2012)



14.12.12

வெற்றியல்ல, தார்மிகத் தோல்வி!

சிந்தனைக்களம்

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிராக பாரதிய ஜனதா கொண்டு வந்த விவாதத்துடன் கூடிய வாக்கெடுப்பில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்றதில் வியப்பொன்றும் இல்லை. ஆனால், இந்த வெற்றி தார்மிக வெற்றியா என்று கேட்டால், இல்லை என்றுதான் கூறவேண்டும். மக்களவையில் ஒரு தீர்மானத்தின் மீது நடத்தப்படும் வாக்கெடுப்பில் 276 வாக்குகள் பெற்றிருந்தால் மட்டுமே அதை உண்மையான வெற்றியாகக் கருத முடியும். சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு தொடர்பான வாக்கெடுப்பில் மத்திய அரசுக்குக் கிடைத்திருப்பது 253 வாக்குகள் மட்டுமே. எதிர்ப்பான வாக்குகள் 218.

பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் 35 வாக்குகள் வித்தியாசத்தில் மத்திய அரசு வென்றுள்ளது. அன்னிய நேரடி முதலீட்டுக்கு முழுமூச்சில் எதிர்ப்பு தெரிவித்த 22 உறுப்பினர்கள் உள்ள சமாஜவாதி கட்சியும் மற்றும் 21 உறுப்பினர்களைக் கொண்ட பகுஜன் சமாஜ் கட்சியும், வெளிநடப்பு செய்து அரசை மறைமுகமாகக் காப்பாற்றி இருக்கின்றன. இந்த வாக்குகளையும் எதிர்ப்பு வாக்குகள் என்று கருத்தில் கொண்டால், அரசு தோல்வி கண்டிருக்கும்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் மாறுபட்ட முடிவால் (சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சி) இன்று இந்தியா முழுவதும் சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்குக் கதவுகள் திறக்கப்பட்டுவிட்டன. இதை மாநில அரசுகளின் தனிப்பட்ட முடிவுக்கு விடும்போது, குறிப்பாக, ஒரு மாநிலத்தைப் பற்றி அண்டை மாநிலம் அக்கறை கொள்ளாதபோது எத்தகைய மோசமான விளைவுகள் நேரிடும் என்பதை மத்திய அரசுக்கு யார் சொல்லி விளங்க வைப்பது?

மதுவிலக்கைப் போன்றதுதான் சில்லறை வணிகத்தின் அன்னிய முதலீடும். பக்கத்து மாநிலத்தில் போய் குடிப்பதால், நமது அரசு வருவாய் இழப்பானேன் என்று மதுவிலக்கை ரத்து செய்வதுபோல பக்கத்து மாநிலத்தில் வால்மார்ட்டும் ஏனைய பன்னாட்டு வணிகர் குழுமங்களும் செயல்படுவதுபோல, நமது மாநிலத்திலும் செயல்படட்டும் என்று அத்தனை மாநிலங்களும் கதவைத் திறந்துவிடத்தான் போகின்றன.

இதில், மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து தனித்து நிற்கலாம் என்பதே ஒரு தோற்றப்பிழை. மத்திய அரசு அனுமதித்துவிட்ட திட்டத்தில், அரசியல்வாதிகள் தங்களுக்கு லாபம் கிடைப்பதைத்தான் விரும்புவார்கள். அல்லது தங்கள் கட்சிக்கு நன்கொடை கிடைப்பதைத்தான் விரும்புவார்கள். ஆகவே, மக்களுக்காகக் கொஞ்சம் கூச்சப்பட்டு ""முடியாது'', ""வேண்டாம்'' என்றெல்லாம் சொன்னாலும், கடைசியில் எல்லா மாநிலங்களும் ஒன்றன் பின் ஒன்றாக அன்னிய நேரடி முதலீடுக்கு அடிபணியும், கடைவிரிக்க அனுமதிக்கும் என்பதுதான் நிஜம்.

ஒரு சில மாநில முதல்வர்கள் இந்தத் திட்டத்துக்கு உண்மையாகவே எதிர்ப்பு தெரிவித்தாலும்கூட அந்த மாநிலங்களுக்கு மறைமுகமான பாதிப்புகள் ஏற்பட்டு, இவர்களை அனுமதிக்கும் கட்டாய நிலைமை உண்டாகும். உதாரணமாக, தமிழ்நாடு, கேரளம் போன்ற மாநிலங்கள் வெங்காயத்துக்கு வடமாநிலங்களை நம்பியுள்ளன. குளிர்பதனக் கிடங்குகள் மற்றும் கொள்முதல்பலம் கொண்ட பன்னாட்டு நிறுவனங்கள் அந்த மாநிலங்களுக்கு வெங்காயம் வழங்குவதைத் தவிர்த்தால், இங்கே தட்டுப்பாடு ஏற்படும். விலை உயரும். மக்கள் ஆட்சியாளர்களை வசைபாடுவார்கள்.

மக்களிடம் "திட்டு' வாங்கி அனுமதிப்பதைக் காட்டிலும் "துட்டு' வாங்கி அனுமதிப்போம் என்ற முடிவுக்கு எல்லா மாநிலங்களும் தள்ளப்படும். அதனால் மாநிலங்களின் முடிவுக்கு விட்டுவிடுகிறோம் என்பது வெறும் சப்பைக்கட்டு மட்டுமே!

மக்களவை வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெற்றது போல, மாநிலங்களவை வாக்கெடுப்பிலும் அரசு வெற்றி பெற்றதில் வியப்பு ஏதுமில்லை. இது ஒன்றும் எதிர்பார்க்காததல்ல. கடந்த நவம்பர் 22-இல் வெளிவந்த "ஈயமும் பித்தளையும்' தலையங்கத்தில், '"விதி எண் 184-ன் படி விவாதத்துக்குப் பிறகு வாக்கெடுப்பு நடத்தினால், மத்திய அரசுக்கு தோல்வி ஏற்பட்டுவிடும் என்கிற நிலைமை இருப்பதுபோல ஒரு தோற்றம் காட்டப்படுகிறதே தவிர, நிலைமை அவ்வாறாக இல்லை. சிலருக்கு "விருந்தும்', சிலருக்கு "மருந்தும்' ஏற்கெனவே கொடுக்கப்பட்டுவிட்டன. ஆகவே, வாக்கெடுப்பின்போது அவையில் இல்லாமல் வெளியேறும் கட்சிகளும், அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கப் போகும் கட்சிகளும் இந்த வாக்கெடுப்பை அரசுக்குச் சாதகமாகவே அமையச் செய்யும். தனது பாசறையை முதலில் ஒருமுறை சோதித்துப் பார்த்துக் கொள்வதற்கான கால அவகாசம் பெறுவதற்காகவே, தற்போது வாக்கெடுப்புக்கு சம்மதம் தெரிவிக்காமல் அரசு இழுத்தடிக்கிறதே தவிர, வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்துக்கே கூட காங்கிரஸ் கட்சி நிச்சயம் சம்மதிக்கும் என்று நம்ப இடமிருக்கிறது'' என்று நாம் குறிப்பிட்டிருந்தோம். நாம் எதிர்பார்த்ததுதான் நடத்திருக்கிறது.

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்க்கிறோம் என்று வாய்கிழிய வெளியே பேசிவிட்டு, வாக்களிப்பில் ஆதரவாக வாக்களிப்பதும், வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்வதும் புத்திசாலித்தனமான அரசியல் முடிவாக இருக்கலாம். இதற்கு ஆட்சி கவிழ்ந்துவிடும், பாஜக ஆட்சிக்கு வந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டுவது வேடிக்கையாக இருக்கிறது. திமுகவும், பகுஜன் சமாஜ் கட்சியும் பாஜகவுடன் கொஞ்சிக் குலாவிக் கூட்டணி அமைத்து "ஆட்சி சுகம்' கண்ட கட்சிகள். மல்லாந்து படுத்து காறி உமிழ்ந்தால், அது மார்பில்தான் வந்து விழும் என்பதுகூட இவர்களுக்குப் புரியவில்லை.

சாம, தான, பேத, தண்டத்தைப் பயன்படுத்தித் தேர்தலிலும் வெற்றிபெற்ற பிறகு, அவைகளிலும் வெற்றி பெறுவது ஒரு கலை என்றால், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, குறிப்பாக காங்கிரஸ் கட்சி, அதைத் தெளிவாகவே கற்றுத் தேர்ந்திருக்கிறது. சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு வழிகோலி இருப்பதுபோல, நாடாளுமன்றத்திற்கே அன்னிய நேரடி முதலீடு வராமல் இருந்தால் சரி... நமது கவலை அதிகரிக்கிறது!