நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

23.11.12

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க!


ஆச்சாரிய வினோபா பாவே அவர்கள் காந்தியை பற்றி எழுதிய கட்டுரை இது. 
'காந்தி இன்று' தளத்தில் இருந்து நன்றியுடன் மீள்பிரசுரம் செய்யப்படுகிறது.

***
வினோபாவுடன் காந்தி

என் சிறுவயதிலிருந்தே இமயமும், வங்கமும் என்னை கவர்ந்திழுக்கும் இடங்களாக இருந்தன. அங்கு செல்லும் கனவுகளில் திளைத்திருந்தேன் - வந்தேமாதரம் என்னும் எழுச்சி முழக்கம் என்னை வங்கத்தை நோக்கிக் கவர்ந்ததென்றால், இமயத்தின் ஞான யோகம் என்னை ஈர்த்தது. 1916ல் வீட்டை விட்டு வெளியேறிய சமயம் இவ்விரண்டு  இடங்களுக்கும்  செல்ல நினைத்தேன். காசி இவ்விரண்டு இடங்களுக்கும் இடையில் இருந்ததால் சந்தர்ப்பம் என்னை அங்கு அழைத்துச் சென்றது. 

காந்தி அன்று பனாரஸ் இந்து பல்கலைகழகத்தின் துவக்க விழாவில் இருந்தார். புகழ்பெற்ற பண்டிதர்களும், அரசர்களும், மகாராஜாக்களும், இவர்களை அனைவருக்கும் மேல், வைஸ்ராயும் இருந்த அவையில் அவர் ஆற்றிய எழுச்சி உரையை செய்தித்தாளில் வாசித்து அறிந்தேன். அது என் மனதில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. நாட்டின் அரசியல் விடுதலையையும், ஆன்மீக மலர்ச்சியையும் ஒரு சேர அடைய விரும்பும் மனிதர் இங்கே இருக்கிறார், என என் மனம் உணர்ந்தது. இதுவே என் விருப்பமாகவும் இருந்தது.

சில வினாக்களை எழுப்பும் விதமாக அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன்.. அதற்கு அவர் பதிலளித்ததும் மேலும் பல கேள்விகள் கேட்டு இன்னொரு கடிதம் அனுப்பினேன், இம்முறை காந்திஜி ஆசிரம விதிகளை இணைத்து "வெறும் கடிதங்கள் மூலம் ஒன்றும் அடைய முடியாது, இங்கு வருவதே உங்களுக்கு நன்மை தரும்," என்று எழுதினார்.

என் பாதங்கள் காந்தியை நோக்கித் திரும்பின. நான் இமயத்திற்கோ, வங்கத்திற்கோ செல்லவில்லைதான் - ஆனால் அவ்விரண்டு இடங்களையும் நான் ஏககாலத்தில் அடைந்துவிட்டேன் என்று என் மனம் உணர்ந்தது. காந்தியில் நான் இமயத்தின் அமைதியையும் வங்கத்தின் புத்தெழுச்சியையும் கண்டுவிட்டேன்.

நான் காந்தியை ஜூன் 7, 1916-ல் கொச்ராப் ஆசிரமத்தில்தான் முதன்முறையாகப் பார்த்தேன். கடவுள்தான் தனது எல்லையில்லா கருணையினால் என்னை காந்தியின் பாதங்களில் சேர்ப்பித்திருக்கிறார். இன்று என் மனதையும் வாழ்க்கையையும் பரிசீலிக்கும்போது, அவையிரண்டுமே காந்தியின் பாதங்களில் நிலைபெற்றுள்ளதைக் காண்கிறேன்.

என்னால் அவரது போதனைகளையும் படிப்பினைகளையும் எந்த அளவுக்கு பின்பற்ற முடிந்ததென்று சொல்ல முடியாது,  அதை அவரோ வேறு எவரோ தெரிந்துகொள்ள வழியில்லை, கடவுளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை இது.. ஆனால் இதை மட்டும் என்னால் தயக்கமின்றி சொல்ல முடியும் -  அவரது போதனைகளில் சிறிதளவேனும் எனக்கானதாய் எதை உணர்கிறேனோ, எது என்னை ஈர்க்கிறதோ அதை தொடர்ந்த கவனத்துடன்  பின்பற்ற முயற்சி செய்திருக்கிறேன் - சொல்லப் போனால் அவர் உயிருடன் இருந்தபோது செய்ததைவிட இப்போது இன்னும் அதிக கவனத்துடன் இதைச் செய்கிறேன் . என் முன்னும் பின்னும், என்னைச் சுற்றிலும் எங்கும் நான் காந்தி என்னோடு இருப்பதாகவே உணர்கிறேன்.

சங்கரர், ஒரு மனிதன் பெறக்கூடிய மிகப் பெரிய வரங்கள் மூன்று : மனிதனாய் பிறத்தல், முக்தியை நாடுதல், ஒரு மகாத்மாவை வழிகாட்டியாகப் பெறுதல், என்று கூறியதை நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு.

சங்கரரின் இக்கூற்றை நினைத்துப் பார்க்கும்போதெல்லாம் என் மனம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது. உண்மையில் நான் வரம் அருளப்பட்டவன்தான் - மனிதனாய் பிறந்தேன், முக்தி நாட்டத்தால் தீண்டப்பட்டேன், காந்தியைப் போன்ற ஒரு மாபெரும் மனிதருடன் இணைந்திருக்கும் பாக்கியமும் பெற்றேன். முனிவர்களின், மகாத்மாகளின் சொற்களை புத்தகங்களைக் கொண்டு அறிவது வேறு, அவர்களுடன்  வாழ்வதும், அவர்களின் வழிகாட்டுதலில் பணியாற்றுவதும், அவர்கள் வாழ்வதை கவனித்து கற்றுக்கொள்வது வேறு. இப்பெரும் பேறு கிடைத்தது என் பாக்கியமே.

காந்தி எனக்கு ஏதும் சோதனை வைத்தாரா என்று சொல்ல முடியாது, ஆனால் நான் அவரை சோதனை செய்தேன், அவர் அறியாமல். முழுமையான சோதனை, அதில் அவர் தோற்றால் அங்கிருந்து கிளம்பிவிடவேண்டும்  என்ற எண்ணத்துடன்.  ஆனால் அவர் என்னைச் சோதித்திருந்தால்? என்னிடம்  என்ன குறை கண்டாரோ? தெரியவில்லை, என்னைத் தன்னுடனேயே தங்க வைத்துக் கொண்டார்.

பாபு தன்னை குறைபட்டவராகவும், முழுமையற்றவராகவும் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டேயிருந்தார்.. அவர் சொன்னதும் உண்மைதான். அவருக்கு உண்மையல்லாத ஒன்றை அவரால் சொல்ல முடியாது. அவர் உண்மையின் பக்தர். தங்களை பூரண மனிதர்களாகவும், முக்தி பெற்றவர்களாகவும் நினைத்துக் கொண்ட  பலரைச் சந்தித்துள்ளேன். அவர்கள் எவராலும் நான் கவரப்படவில்லை. ஆனால் தன்னை முழுமையற்றவராகச் சொல்லி கொண்ட பாபுவின்பால் எனக்கு ஏற்பட்ட  ஈர்ப்பு தனித்துவமான ஒன்று. என் மீது வேறு எவரும் அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை.

நான் பாபுவைப் பார்த்த மாத்திரத்தில் அவரிடம் பற்று ஏற்பட்டு விட்டது.  அவரின் உள்ளும் புறமும் இருந்த ஒத்திசைவே அதற்குக் காரணம். பாபுவே எனக்கு கர்மயோக தத்துவத்தை அறிமுகம் செய்தார். ஆம், அது பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ளது, ஆனால் அதன் செயல் வடிவத்தை பாபுவின் வாழ்கையில்தான்  பார்த்தேன். இங்குதான் கீதையின் கர்ம யோகம் சிறப்பாக விளக்கப்படுகிறது.  திடசித்தனிடம் நாம் காணக்கூடிய குறிகளைக் கீதை பட்டியலிடுகிறது. எத்தனை பேருக்கு அந்த விவரணை பொருத்தமாக இருக்கும்? அப்படிப்பட்ட ஒருவனிடம் இருக்கக்கூடிய அத்தனை இயல்புகளையும் கொண்டவராக இருந்தார் பாபு.

அப்படிப்பட்ட ஒருவருடன் வாழவும் அவருடன் பணியாற்றவும் முடிந்தது என்பது எனக்கு ஒரு பெரிய கவுரவமாக இருக்கிறது. பெரிய மரங்களின் கீழ் இருக்கும் செடிகள் சத்தற்று வளர்ச்சி குன்றுவதைப் போல மிகப் பெரும் ஆளுமைகளுடன் இருப்பவர்களின் வளர்ச்சி குறைபடும் என்று சொல்கிறார்கள்,. ஆனால் மரத்துடனான ஒப்புமை மகாத்மாக்களுக்குப் பொருந்தாது. அவர்களின் அணைப்பின்கீழ் வாழ்பவர்கள் தொழுவத்தில் இருக்கும் கன்றுகளைப் போன்றவர்கள். மரமோ தனக்குச் கீழே இருக்கும் செடிகளுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்தை தான் எடுத்துக் கொள்ளும். ஆனால் பசு, தான் புற்களை உண்டு தன் கன்றுகளுக்குப் பாலுட்டி அவைகளை பாசத்துடன் வளர்த்துத் தழைக்கச் செய்யும்.  இதுவே தன்னை பாபுவின் அணைப்பில் உணரும் ஒருவரின் அனுபவமாகும்.

ஒருவர் மோசமானவராக இருந்தால், அவரிடம் வந்ததும் நல்லவராகவும், கோழை அவரிடம் வந்தால் பயமற்றவராக மாறுகின்றனர். அவரால் ஆயிரக்கணக்கான பேர் புகழ் அடைந்துள்ளனர், இருந்தாலும் காந்தி அனைவரைவிடவும் தாழ்ந்தவராகவே தன்னைக் கருதினார்.

1916 ல் அவரைக் காணும்போது நான்  முதிர்ச்சியற்ற 21 வயது இளைஞன். கற்றுக் கொள்ளும் ஆர்வம் மிக்கவனாக அங்கு சென்றேன். என்னைச் சுற்றி இருந்தவர்களுக்குத் தெரியும், அவ்வயதில் எனக்கு இங்கிதமோ, பண்பான நடத்தையோ சிறிதும் கிடையாது. நான் ஒரு வன விலங்கின் இயல்பு கொண்டவனாக இருந்தேன். பாபுவே என் கோபக் கனலையும், என்னுள் தகித்திருந்த காமத்தையும் தணித்தார். மழையாய் அவர் எனக்கு அருளாசி பொழிந்து கொண்டே இருந்தார். நான் இன்று என்னவாக இருக்கிறேனோ, அது அனைத்திற்கும் பாபுவிற்கே கடமைப்பட்டுள்ளேன். என்னைப் போன்ற ஒரு பண்பற்றவனையும் மக்கள் சேவகனாக மாற்றினார்.

ஆசிரம வாழ்க்கை முறை எனக்கு பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது. வாழ்க்கை என்பது ஒன்றே, அது பகுக்க முடியாதது என்பதை உணர்ந்தேன்.  பாபு ஒருபோதும் தன்னை குருவாகவோ எவரையும் தன் சீடராகவோ உருவகித்ததில்லை. குரு சீட அமைப்பில் எனக்கு பெரிய ஈடுபாடு உள்ளபோதும் நானும் அது போலவே யாருக்கும் குருவாகவோ, யாருடைய சீடனாகவோ இருந்ததில்லை, பார்வையாலோ, வார்த்தையாலோ, தொடுகையாலோ தன் சீடனின் வாழ்வை மாற்றும் குருவை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியும். ஆனால் அது ஒரு சாத்தியம் மட்டுமே.

உண்மையில் அப்படிப்பட்ட எந்த குருவையும் நான் அறிந்ததில்லை. குரு சீட உறவை பற்றி நீட்டிக்காமல் ஒன்று சொல்கிறேன், பாபுவின் காலடியில் நான் என்ன கற்று கொண்டேனோ அதுவே எனக்கு இன்றும் பயனளிக்கிறது. என்னுடைய கிராமதானம், பூதானம் நடைபயணங்களுக்குப் பின்னிருப்பது நெடு நாட்களுக்கு முன் ஆஸ்ரமத்தில் நான் மேற்கொண்ட தவமாகும்.  ஆசிரமத்தில் சேரும் முன் நான் செய்த தவம் முற்றிலும் உணர்ச்சிகரமானது, பிறகு ஆசிரமத்தில் செய்த தவத்தால்தான் புதிய பார்வை பெற்றேன். அது முற்றிலும் பாபுவின் ஆசியே.

நான் பாபுவிடம் சென்ற பிறகு 32 வருட காலத்தை தவத்தில் செலவிட்டுள்ளேன். என்னுடைய வாசிப்பும், எண்ணமும் தொடர்ந்து ஆன்மீகத்தை நோக்கியே இருந்தாலும், என்னுடைய தவம் செயல்பாட்டிலிருந்து விலகவில்லை. நான் அரசியல் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்துக் கொண்டிருகிறேன், சமூக தளங்களில் ஏற்படும் முன்னேற்றங்களைத் தெரிந்து கொள்கிறேன். என்னவெல்லாம் பாபு எழுதினாரோ அவையனைத்தும் எனக்கு வழி  காட்டியுள்ளன.   நான் அவரது கருத்துகளை நுண்கவனத்துடன் படித்தும், அவற்றின்படி வாழவும் என்னால் முடிந்த அளவு முயற்சி செய்துள்ளேன். அப்படிதான் அகிம்சை எனும் நுட்பமான வழியைக் கண்டு கொண்டேன்.

பாகவத தர்மத்தைப் பற்றிய அழகான சுலோகம் ஒன்று உள்ளது. அதையே பாபு கண்டறிந்த அகிம்சை வழிக்கும் கொள்ளலாம். சுலோகம் என்னவென்றால், "பாகவத தர்மத்தை ஒருவன் நம்பிக்கையுடன் பின்பற்றினால் ஒருபோதும் அவன்  தவறிழைக்க மாட்டான். கண்ணை மூடி கொண்டு ஓடினாலும் விழுந்து விடாத பாதை போன்றதாகும் அதன் இயல்பு".

இந்த அழகிய, எளிய வழியைதான் பாபு எங்களுக்குக் காட்டினார். சர்வோதய சமூகத்தை நிறுவ விரும்புகிறோமெனில் நாம் பின்பற்ற வேண்டிய வழி இதுவேயாகும்.
-ஆச்சர்ய  வினோபா பாவே 
தமிழில்: கார்த்திகேயன்

4.11.12

பெரோஸ் காந்தி முதல் வதேரா வரை...

 
 பெரோஸ் காந்தி

மன்னராட்சி முறையில் கொடுங்கோல் ஆட்சி பெருகியதால், அல்லற்பட்ட மக்கள் தம்மால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பெரும்பான்மை ஆதரவைப் பெறுபவர் ஆட்சித் தலைவராகும் வகையில் குறிப்பிட்ட காலவரையறையில் தேர்தல்கள் மூலம், மக்களாட்சி முறையை அமைத்துக்கொண்டனர்.

அதிகாரம் குவிந்துவிட்டால், ஆட்சிக்கு வருகிற அனைவரும் நல்லவர்களாக நாட்டு மக்களுக்கு நல்வாழ்வு தருபவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆட்சிக்கு வந்ததும், ஆணவம், அடக்குமுறை, எதேச்சாதிகாரம் ஆகியவை வளரும். தடியெடுத்தவன் தாண்டவராயன் என்பதுபோல், கட்டுப்பாடற்ற தடியாட்சி முறை வந்துவிடும்.

முடியாட்சி, குடியாட்சி, தடியாட்சி ஆகியவற்றில் ஒன்றுக்குள் மற்றொரு முறை கலந்துவிடுவதை பல நாடுகளில் தவிர்க்க முடியவில்லை. இருபதாம் நூற்றாண்டில் முதலாவது உலகப் போருக்குப் பிறகு மக்களாட்சி முறையில்தான் ஜெர்மன் நாட்டில் அரசாங்கம் உருவானது.

ஆயினும் 1930-இல் அதே மக்களாட்சி அடிப்படைச் சட்டத்தின்கீழ் ஹிட்லரால் கொடூரமான சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த முடிந்தது.

ஏன், இந்தியாவில்கூட டாக்டர் அம்பேத்கர் தலைமையில் சட்டத்துறையில் மேதாவிகள் என்று கருதப்பட்ட பலர் மூன்றாண்டு காலம் அரும்பாடுபட்டு 1950-இல் அமைத்த ஜனநாயக ஆட்சிக்கான இந்திய அரசமைப்புச் சட்டம் என்ன ஆயிற்று? அதே சட்டத்தின்கீழ் 1975 ஜூன் 25 நள்ளிரவில் ஒரு இருண்டகால எதேச்சாதிகாரம் தலையெடுக்கவில்லையா?

மன்னராட்சிகளில் குடும்பப் பாரம்பரியம் என்பது வெளிப்படையாகப் பின்பற்றப்பட்டது. ஆயினும் சுதந்திர ஜனநாயக நாடான இந்தியாவில் குடும்பப் பாரம்பரிய ஆட்சிமுறை மறைமுகமாக நிலவி வருகிறது.

அதிலும் ஒரு குடும்ப அளவில் பார்த்தால், ஜவாஹர்லால் நேரு, (1947-64), இந்திரா காந்தி (1966-77, 1980-84) ராஜீவ் காந்தி (1984-89) ஆகியவர்கள் பிரதமர்களாக இருந்தனர்.

இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்ற முறையைப் பின்பற்றித்தான் இந்தியாவின் அரசியல் அமைப்பும் உருவாக்கப்பட்டது. இன்றும் இங்கிலாந்தில் மன்னர் பரம்பரை இருந்தாலும், கடந்த நானூறு ஆண்டுகளில் தேர்தெடுக்கப்பட்ட மக்கள் சபைக்கு முழுமையாகக் கட்டுப்பட்ட நிலைமையில்தான் ஆட்சிமுறை அங்கு நிலவுகிறது.

மேலும் தேர்தலில் போட்டியிட்டு "காமன்ஸ்' (மக்கள்சபை) உறுப்பினராக இருப்பவர் மட்டுமே பிரதமராகப் பொறுப்பேற்க முடியும். இங்கிலாந்து நாடாளுமன்ற முறையைப் பின்பற்றும் இந்தியாவில் பிரதமராக ஆகும் தகுதி மன்மோகன் சிங்குக்குத் துளியும் இல்லை. காரணம், மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர் அங்கே பிரதமராக முடியாது.

மன்மோகன் சிங் 'பெயரளவில்' பிரதமராக இருந்தாலும், நடைமுறையில் காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைமையிலுள்ள அரசாங்கத்தையும் நடத்திச் செல்பவர் சோனியா காந்திதான். 1999 முதல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக அவர் பதவி வகிக்கிறார்.

127 ஆண்டுகால தேசிய காங்கிரஸ் கட்சியில் நீண்டகாலம் தொடர்ந்து தலைவராக இருப்பவர் அவர்தான். சுதந்திர இந்தியாவின் 65 ஆண்டுகளில் 47 ஆண்டுகள் நேரு பரம்பரைக்குத்தான் இந்தியாவை ஆட்சி செலுத்தும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

'குடும்பப் பாரம்பரியம்' என்ற அளவில் இதுவரை விரிவாக இங்கு ஆராய்வதற்கான காரணம் இந்தியாவில் இருந்துவந்த 'பாரம்பரிய ஆட்சிமுறை' அண்மைக் காலத்தில் விரிவடைந்துவிட்டது.

ஜவாஹர்லால் நேரு காலத்தில் அவரின் மருமகன் பெரோஸ் காந்தி இருந்தார். தற்பொழுது இந்திரா காந்தியின் மருமகளின் மருமகன் ராபர்ட் வதேரா என்பவர் குறுகிய காலத்தில் பெரும் செல்வாக்குடையவராக ஆகிவிட்டார். இந்த இரு மருமகன்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் காங்கிரஸ் அரசியல் எவ்வாறு மாறிவிட்டது என்பதைப் பார்த்தால் அதிர்ச்சிதான் மிஞ்சுகிறது.

காந்தி, குஜராத் என்ற இரு பெயர்களைச் சொன்னதும், மகாத்மா காந்தி நினைவுக்கு வந்து, அவருக்கு பெரோஸ் காந்தி உறவினர் என்ற எண்ணம் பலருக்கு ஏற்படக் கூடும். பெரோஸ் காந்தி பார்சி வகுப்பைச் சேர்ந்தவர். நெருப்பை வழிபடும் ஸௌராஸ்ட்ரியர்.

மகாத்மா காந்தி இந்து மதத்தைச் சேர்ந்தவர். குஜராத்தில் பார்சிகளுக்கும் இந்துக்களுக்கும் பொதுவான குடும்பப் பெயராக 'காந்தி' என்பது நீண்டகாலமாக இருந்து வருகிறது.

பெரோஸ் காந்தியின் தந்தை இறந்த பிறகு, அவரும் அவர் தாயாரும் அலாகாபாத் வந்துவிட்டனர். 1930-இல் இர்விங் கிறிஸ்தவக் கல்லூரியில் பெரோஸ் படிக்கும்பொழுது, ஆங்கில ஆட்சியை எதிர்த்து சுதந்திரப் போராட்டம் அலாகாபாதிலும் நடைபெற்றது. அதில் ஜவாஹர்லால் நேருவின் மனைவி கமலா நேருவும், 13 வயதான மகள் இந்திரா பிரியதர்சினியும் கலந்துகொண்டனர். கடும் வெயிலில் கமலா நேரு மயக்கமடைந்து விழுந்துவிட்டார். அதைக் கவனித்த பெரோஸ் ஓடிவந்து தண்ணீர் தெளித்து, அவரை ஆனந்த பவன் மாளிகையில் சேர்த்தார்.

கல்லூரிப் படிப்பை விட்டு சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டார் பெரோஸ். 1930-இல் கைது செய்யப்பட்டு லால் பகதூர் சாஸ்திரியுடன் சிறையில் இருந்தார். கமலா நேரு எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபொழுது அவருடன் பெரோஸ் இருந்து உதவினார். நோய் முற்றிய நிலையில் கமலா நேரு மருத்துவச் சிகிச்சைக்காக ஐரோப்பா சென்றபொழுது பெரோஸ் காந்தியும் அவருடன் சென்றார். கமலா நேரு 1936 பிப்ரவரியில் இறந்தபொழுது பெரோஸ் உடனிருந்தார்.

அந்த அளவுக்கு நேரு குடும்பத்தினருடன் நெருங்கி இருந்த பெரோஸ் மீது இந்திராவுக்கு நம்பிக்கையும் நட்பும் நாளடைவில் காதலும் உண்டானதில் ஆச்சரியமில்லை. முதலில் பெரோஸ் - இந்திரா திருமணத்துக்கு ஜவாஹர்லால் நேரு சம்மதிக்கவில்லை.

மகாத்மா காந்தி இடையிட்டு இந்திராவுடன் பேசி சமாதானப்படுத்த முயற்சி செய்தார். கடைசியில் ஜவாஹர்லால் நேரு உடன்பட்டு 1942 மார்ச் மாதத்தில் இருவருக்கும் திருமணத்தை நடத்திவைத்தார். திருமணத்துக்குப் பிறகுதான் கணவன் பெயரை இணைத்து 'இந்திரா காந்தி' என்று இந்திரா அழைக்கப்பட்டார்.

திருமணமான ஆறு மாதத்திற்குள் இருவரும் 1942 ஆகஸ்ட் போராட்டத்தில் சிறைக்குச் சென்றனர். பின்பு வெளிவந்ததும் 1944-இல் ராஜீவ் காந்தியும் 1946-இல் சஞ்சய் காந்தியும் பிறந்தனர்.

1947-இல் ஜவாஹர்லால் நேரு, பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டதும் இந்திரா காந்தி தந்தையுடன் பெரும்பாலும் இருக்கவேண்டி வந்தது.

பிரதமர் மாளிகையில் இருப்பது பிடிக்காமல் பெரோஸ் தம் அளவில் தில்லியில் வேறொரு இடத்தில் தங்கிவிட்டார்.

1950-52-இல் இந்திய அரசியல் நிர்ணய சபையில் பெரோஸ் காந்தி உறுப்பினராக இருந்தார், பிறகு 1952 பொதுத்தேர்தலில் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு மக்கள் சபை உறுப்பினராக ஆனார். மாமனார் ஜவாஹர்லால் நேரு பிரதமராக இருந்தாலும், பெரோஸ் காந்தி தமது தன்மானத்தையும் அரசியல் கொள்கைகளையும் விட்டுக்கொடுக்கவே இல்லை. முக்கிய பிரச்னைகள் எழும்பொழுது அரசாங்கத்தில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்ட ஆரம்பித்தார்.

குறிப்பாக 1955 டிசம்பர் மாதத்தில் பிரபல செல்வந்தரான ராமகிருஷ்ண டால்மியாவின் வங்கி-இன்சூரன்ஸ் அமைப்புகளில் செய்த ஊழல்களைத் தக்க ஆதாரங்களுடன் மக்கள் சபையில் பெரோஸ் எழுப்பினார்.

எதிர்க்கட்சியினரைவிட அதிகமாக அவர் எழுப்பிய குரலும் ஊழலை எதிர்த்த கண்டனமும் பத்திரிகைகளில் முக்கிய செய்திகளாயின. அவருடைய கண்டனத்தின் விளைவாக, டால்மியா மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்குச் சிறைத் தண்டனை கிடைத்தது. மக்கள் பணத்தில் இயங்கும் இன்சூரன்ஸ் துறையை தேசியமயமாக்கும் சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றியது பெரோஸ் காந்தி அந்தப் பிரச்னையை எழுப்பியதால்தான்.

1957 பொதுத்தேர்தலில் பெரோஸ் காந்தி மீண்டும் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு மக்கள் சபைக்கு வந்தார். 1958-இல் முந்திரா ஊழல் என்பதை பெரோஸ் அம்பலப்படுத்த முன்வந்தார்.

ஹரிதாஸ் முந்திரா என்னும் முதலாளிக்குச் சொந்தமான சில கம்பெனிகளின் பங்குகளை ஆயுள் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.1.54 கோடி கொடுத்து வாங்கியது. அந்தப் பங்குகளின் உண்மையான மதிப்பீட்டைவிட அதிகமான விலைக்கு அரசாங்க ஆதரவினால் வாங்கப்பட்டுவிட்டன என்பதற்கான விவரங்களை பெரோஸ், மக்கள் சபையில் 1957 டிசம்பர் 16 அன்று வெளிப்படுத்தினார். அவருடைய ஊழல் எதிர்ப்பினால் இரண்டாவது புயல் கிளம்பியது.

பெரோஸ் காந்தியின் குற்றச்சாட்டு நேரடியாக அப்பொழுதைய நிதி அமைச்சர் டி.டி. கிருஷ்ணாமாச்சாரியாரைத் தாக்கியது. முந்திரா விவகாரத்தை விசாரணை செய்ய பம்பாய் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம்.சி. சாக்ளா தலைமையில் விசாரணைக் குழுவை நேரு அரசாங்கம் அமைத்தது.

சாக்ளா குழுவின் பரிந்துரைக்குப் பிறகு, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி விவியன் போஸ் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, நிதி அமைச்சர் மீது முழு குற்றச்சாட்டையும் போட்டது. கடைசியில் நிதியமைச்சர் டி.டி. கிருஷ்ணாமாச்சாரி பதவியிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. முதலாளி முந்திரா குற்றவாளியாகச் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

முந்திரா ஊழலைப் பற்றி மக்கள்சபையில் பேசும்பொழுது பெரோஸ் காந்தி உணர்ச்சிபூர்வமாக ஒரு கருத்தை வலியுறுத்தினார். "நான் மிகவும் உறுதியுடன் இந்த விவாதத்தைத் துவக்குகிறேன். இப்பொழுது ஒன்றை மட்டும் நான் குறிப்பிட விரும்புகிறேன். பொதுமக்களின் நிதி தனிப்பட்ட ஒருவரின் தேவைகளுக்காகப் பயன்படுவது தவறானது, குற்றமானது. ஒரு குற்றம் நிகழும்பொழுது அதைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருப்பது பெரிய குற்றமாகும்''.

மற்றொரு வகையில் முற்போக்கான ஒரு சட்டத்தை உருவாக்குவதில் பெரோஸ் காந்தி வெற்றிபெற்றார். அவருடைய முயற்சியினால், நாடாளுமன்ற நடவடிக்கைகள் பற்றிய சட்டம் 1956-இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி தவறுகள் எதுவும் இல்லாமல் நாடாளுமன்ற நடவடிக்கைகளை வெளியிடுபவர் மீது எந்த நீதிமன்றத்திலும் எந்த வகையிலும் குற்றம் சாட்டப்படக்கூடாது என்று சட்டபூர்வமான பாதுகாப்பு செய்தியாளர்களுக்குத் தரப்பட்டது.

1956-இல் பத்திரிகையாளர் பாதுகாப்புச் சட்டம் பெரோஸ் காந்தியால் நிறைவேற்றப்பட்டது. 20 ஆண்டுகள் கழித்து அந்தச் சட்டத்தை இந்திய அரசாங்கம் மற்றொரு சட்டம் போட்டு நீக்கிவிட்டது. அதாவது, 1975-76 நெருக்கடி காலத்தில் அந்தச் சட்டத்தை நீக்கியவர் வேறு யாருமில்லை பெரோஸ் காந்தியின் மனைவி பிரதமர் இந்திரா காந்தி அவர்கள்தாம். நெருக்கடிகாலம் நீங்கியதும், ஜனதா ஆட்சியில் பத்திரிகையாளர் சட்டம் மீண்டும் உயிர் பெற்றது என்பதும் இங்கே குறிப்பிடத் தகுந்தது.

முற்போக்கான சட்டத்தை முன்மொழியும் துணிவும், கடமை உணர்வும் பெரோஸ் காந்திக்கு இருந்தது, அதை ஏற்றுக்கொள்ளும் பெருந்தன்மையும், ஜனநாயகப் பண்பும் ஜவாஹர்லால் நேருவுக்கு இருந்தது. ஆனால், அதை நீக்கிடும் எதேச்சாதிகார உணர்வு இந்திரா காந்திக்கு 1975-76-இல் ஏற்பட்டது. இருபது ஆண்டுகளில் காங்கிரஸ் குடும்பப் பாரம்பரிய அரசியல் அந்த அளவு மாறி மாசு படிந்துவிட்டது.

நாள்தோறும் காலையில் மக்களைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் மீது தகுந்த நடவடிக்கைகளை எடுப்பார் பெரோஸ். 1958 செப்டம்பர் மாதத்தில் இதயநோய் அவரைத் தாக்கியது. இந்திரா காந்தி உடனடியாக வந்து அவரைக் கவனித்து உடல் நலம் பெறும்வரை உடனிருந்தார்.

இரண்டு ஆண்டுகள் கழித்து 1960 செப்டம்பர் 8 இரண்டாவது முறையாக இதயத் தாக்குதல் வந்தது, அதிலிருந்து மீளமுடியாமல், 48-வது வயது நிறைவு பெறுவதற்கு நான்கு நாள்கள் முன்னதாக பெரோஸ் காந்தி இறந்தார்.

அரசியல் நண்பர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியவர்களின் கூட்டத்தைவிட பெரிய அளவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பெரோஸ் காந்தி இல்லத்தின் முன் திரண்டு அவருக்கு அஞ்சலி செய்யக் காத்திருந்தனர். அந்தக் கூட்டத்தைக் கண்ணுற்ற ஜவாஹர்லால் நேரு கூறினாராம், "இந்த அளவுக்கு மக்களுடைய பாசமும் செல்வாக்கும் பெரோஸு  க்கு இருக்கும் என்பது எனக்குத் தெரியாது'' என்று. ஒரு மனிதனின் பெருமை அவன் மறைந்த பிறகுதான் அவனுடைய நெருங்கிய உறவினர்களுக்கே கூடத் தெரியவருகிறது.

பெரோஸ் காந்தி பிறந்த நாள் 1912 செப்டம்பர் 12; அவரின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு 2012-இல் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். அதற்கான அவசியம் தற்கால காங்கிரஸ் தலைவர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இல்லை என்றாலும், பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்புத் தரும் சட்டத்தை உருவாக்கியவருக்கு நூற்றாண்டு விழா எடுக்காமற் போனாலும், தனிப்பட்ட முறையில் செய்தித் துறையும் வாசகர் வட்டங்களும் அவரை நினைவில் வைத்து அஞ்சலி செலுத்த வேண்டும்.

பிரதமர் நேருவின் மருமகன் பெரோஸ் காந்தி ஊழல் பெருச்சாளிகளைத் தண்டிக்க, தமது பதவியை முழுமையாகப் பயன்படுத்தினார். அது 1950-60 வரை இருந்த குடும்ப அரசியல் நிலவரம். தற்பொழுதைய காங்கிரஸ் அரசியல் பாரம்பரியத்தில், பிரதமர் பதவிக்கும் மேலாக உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தமது மருமகன் ராபர்ட் வதேரா மீது கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளை அலட்சியப்படுத்துவதுடன், "வதேரா மீது நடத்தப்படும் தாக்குதல் காங்கிரஸ் மீது போடப்படும் தாக்குதல்'' என்கிறார்.

என்ன கொடுமை இது? "வதேரா என்றால் காங்கிரஸ் கட்சி'' என்று ஆகிவிட்டது! நல்லவேளை, இதையெல்லாம் பார்த்துக் கொதித்து எழ பெரோஸ் காந்தி உயிருடன் இல்லை!
- இரா.செழியன்

- தினமணி-  31.10.2012


காண்க: 
Feroze Gandhi (Wiki)

பெரோஸ் காந்தி