நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

23.11.12

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க!


ஆச்சாரிய வினோபா பாவே அவர்கள் காந்தியை பற்றி எழுதிய கட்டுரை இது. 
'காந்தி இன்று' தளத்தில் இருந்து நன்றியுடன் மீள்பிரசுரம் செய்யப்படுகிறது.

***
வினோபாவுடன் காந்தி

என் சிறுவயதிலிருந்தே இமயமும், வங்கமும் என்னை கவர்ந்திழுக்கும் இடங்களாக இருந்தன. அங்கு செல்லும் கனவுகளில் திளைத்திருந்தேன் - வந்தேமாதரம் என்னும் எழுச்சி முழக்கம் என்னை வங்கத்தை நோக்கிக் கவர்ந்ததென்றால், இமயத்தின் ஞான யோகம் என்னை ஈர்த்தது. 1916ல் வீட்டை விட்டு வெளியேறிய சமயம் இவ்விரண்டு  இடங்களுக்கும்  செல்ல நினைத்தேன். காசி இவ்விரண்டு இடங்களுக்கும் இடையில் இருந்ததால் சந்தர்ப்பம் என்னை அங்கு அழைத்துச் சென்றது. 

காந்தி அன்று பனாரஸ் இந்து பல்கலைகழகத்தின் துவக்க விழாவில் இருந்தார். புகழ்பெற்ற பண்டிதர்களும், அரசர்களும், மகாராஜாக்களும், இவர்களை அனைவருக்கும் மேல், வைஸ்ராயும் இருந்த அவையில் அவர் ஆற்றிய எழுச்சி உரையை செய்தித்தாளில் வாசித்து அறிந்தேன். அது என் மனதில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. நாட்டின் அரசியல் விடுதலையையும், ஆன்மீக மலர்ச்சியையும் ஒரு சேர அடைய விரும்பும் மனிதர் இங்கே இருக்கிறார், என என் மனம் உணர்ந்தது. இதுவே என் விருப்பமாகவும் இருந்தது.

சில வினாக்களை எழுப்பும் விதமாக அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன்.. அதற்கு அவர் பதிலளித்ததும் மேலும் பல கேள்விகள் கேட்டு இன்னொரு கடிதம் அனுப்பினேன், இம்முறை காந்திஜி ஆசிரம விதிகளை இணைத்து "வெறும் கடிதங்கள் மூலம் ஒன்றும் அடைய முடியாது, இங்கு வருவதே உங்களுக்கு நன்மை தரும்," என்று எழுதினார்.

என் பாதங்கள் காந்தியை நோக்கித் திரும்பின. நான் இமயத்திற்கோ, வங்கத்திற்கோ செல்லவில்லைதான் - ஆனால் அவ்விரண்டு இடங்களையும் நான் ஏககாலத்தில் அடைந்துவிட்டேன் என்று என் மனம் உணர்ந்தது. காந்தியில் நான் இமயத்தின் அமைதியையும் வங்கத்தின் புத்தெழுச்சியையும் கண்டுவிட்டேன்.

நான் காந்தியை ஜூன் 7, 1916-ல் கொச்ராப் ஆசிரமத்தில்தான் முதன்முறையாகப் பார்த்தேன். கடவுள்தான் தனது எல்லையில்லா கருணையினால் என்னை காந்தியின் பாதங்களில் சேர்ப்பித்திருக்கிறார். இன்று என் மனதையும் வாழ்க்கையையும் பரிசீலிக்கும்போது, அவையிரண்டுமே காந்தியின் பாதங்களில் நிலைபெற்றுள்ளதைக் காண்கிறேன்.

என்னால் அவரது போதனைகளையும் படிப்பினைகளையும் எந்த அளவுக்கு பின்பற்ற முடிந்ததென்று சொல்ல முடியாது,  அதை அவரோ வேறு எவரோ தெரிந்துகொள்ள வழியில்லை, கடவுளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை இது.. ஆனால் இதை மட்டும் என்னால் தயக்கமின்றி சொல்ல முடியும் -  அவரது போதனைகளில் சிறிதளவேனும் எனக்கானதாய் எதை உணர்கிறேனோ, எது என்னை ஈர்க்கிறதோ அதை தொடர்ந்த கவனத்துடன்  பின்பற்ற முயற்சி செய்திருக்கிறேன் - சொல்லப் போனால் அவர் உயிருடன் இருந்தபோது செய்ததைவிட இப்போது இன்னும் அதிக கவனத்துடன் இதைச் செய்கிறேன் . என் முன்னும் பின்னும், என்னைச் சுற்றிலும் எங்கும் நான் காந்தி என்னோடு இருப்பதாகவே உணர்கிறேன்.

சங்கரர், ஒரு மனிதன் பெறக்கூடிய மிகப் பெரிய வரங்கள் மூன்று : மனிதனாய் பிறத்தல், முக்தியை நாடுதல், ஒரு மகாத்மாவை வழிகாட்டியாகப் பெறுதல், என்று கூறியதை நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு.

சங்கரரின் இக்கூற்றை நினைத்துப் பார்க்கும்போதெல்லாம் என் மனம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது. உண்மையில் நான் வரம் அருளப்பட்டவன்தான் - மனிதனாய் பிறந்தேன், முக்தி நாட்டத்தால் தீண்டப்பட்டேன், காந்தியைப் போன்ற ஒரு மாபெரும் மனிதருடன் இணைந்திருக்கும் பாக்கியமும் பெற்றேன். முனிவர்களின், மகாத்மாகளின் சொற்களை புத்தகங்களைக் கொண்டு அறிவது வேறு, அவர்களுடன்  வாழ்வதும், அவர்களின் வழிகாட்டுதலில் பணியாற்றுவதும், அவர்கள் வாழ்வதை கவனித்து கற்றுக்கொள்வது வேறு. இப்பெரும் பேறு கிடைத்தது என் பாக்கியமே.

காந்தி எனக்கு ஏதும் சோதனை வைத்தாரா என்று சொல்ல முடியாது, ஆனால் நான் அவரை சோதனை செய்தேன், அவர் அறியாமல். முழுமையான சோதனை, அதில் அவர் தோற்றால் அங்கிருந்து கிளம்பிவிடவேண்டும்  என்ற எண்ணத்துடன்.  ஆனால் அவர் என்னைச் சோதித்திருந்தால்? என்னிடம்  என்ன குறை கண்டாரோ? தெரியவில்லை, என்னைத் தன்னுடனேயே தங்க வைத்துக் கொண்டார்.

பாபு தன்னை குறைபட்டவராகவும், முழுமையற்றவராகவும் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டேயிருந்தார்.. அவர் சொன்னதும் உண்மைதான். அவருக்கு உண்மையல்லாத ஒன்றை அவரால் சொல்ல முடியாது. அவர் உண்மையின் பக்தர். தங்களை பூரண மனிதர்களாகவும், முக்தி பெற்றவர்களாகவும் நினைத்துக் கொண்ட  பலரைச் சந்தித்துள்ளேன். அவர்கள் எவராலும் நான் கவரப்படவில்லை. ஆனால் தன்னை முழுமையற்றவராகச் சொல்லி கொண்ட பாபுவின்பால் எனக்கு ஏற்பட்ட  ஈர்ப்பு தனித்துவமான ஒன்று. என் மீது வேறு எவரும் அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை.

நான் பாபுவைப் பார்த்த மாத்திரத்தில் அவரிடம் பற்று ஏற்பட்டு விட்டது.  அவரின் உள்ளும் புறமும் இருந்த ஒத்திசைவே அதற்குக் காரணம். பாபுவே எனக்கு கர்மயோக தத்துவத்தை அறிமுகம் செய்தார். ஆம், அது பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ளது, ஆனால் அதன் செயல் வடிவத்தை பாபுவின் வாழ்கையில்தான்  பார்த்தேன். இங்குதான் கீதையின் கர்ம யோகம் சிறப்பாக விளக்கப்படுகிறது.  திடசித்தனிடம் நாம் காணக்கூடிய குறிகளைக் கீதை பட்டியலிடுகிறது. எத்தனை பேருக்கு அந்த விவரணை பொருத்தமாக இருக்கும்? அப்படிப்பட்ட ஒருவனிடம் இருக்கக்கூடிய அத்தனை இயல்புகளையும் கொண்டவராக இருந்தார் பாபு.

அப்படிப்பட்ட ஒருவருடன் வாழவும் அவருடன் பணியாற்றவும் முடிந்தது என்பது எனக்கு ஒரு பெரிய கவுரவமாக இருக்கிறது. பெரிய மரங்களின் கீழ் இருக்கும் செடிகள் சத்தற்று வளர்ச்சி குன்றுவதைப் போல மிகப் பெரும் ஆளுமைகளுடன் இருப்பவர்களின் வளர்ச்சி குறைபடும் என்று சொல்கிறார்கள்,. ஆனால் மரத்துடனான ஒப்புமை மகாத்மாக்களுக்குப் பொருந்தாது. அவர்களின் அணைப்பின்கீழ் வாழ்பவர்கள் தொழுவத்தில் இருக்கும் கன்றுகளைப் போன்றவர்கள். மரமோ தனக்குச் கீழே இருக்கும் செடிகளுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்தை தான் எடுத்துக் கொள்ளும். ஆனால் பசு, தான் புற்களை உண்டு தன் கன்றுகளுக்குப் பாலுட்டி அவைகளை பாசத்துடன் வளர்த்துத் தழைக்கச் செய்யும்.  இதுவே தன்னை பாபுவின் அணைப்பில் உணரும் ஒருவரின் அனுபவமாகும்.

ஒருவர் மோசமானவராக இருந்தால், அவரிடம் வந்ததும் நல்லவராகவும், கோழை அவரிடம் வந்தால் பயமற்றவராக மாறுகின்றனர். அவரால் ஆயிரக்கணக்கான பேர் புகழ் அடைந்துள்ளனர், இருந்தாலும் காந்தி அனைவரைவிடவும் தாழ்ந்தவராகவே தன்னைக் கருதினார்.

1916 ல் அவரைக் காணும்போது நான்  முதிர்ச்சியற்ற 21 வயது இளைஞன். கற்றுக் கொள்ளும் ஆர்வம் மிக்கவனாக அங்கு சென்றேன். என்னைச் சுற்றி இருந்தவர்களுக்குத் தெரியும், அவ்வயதில் எனக்கு இங்கிதமோ, பண்பான நடத்தையோ சிறிதும் கிடையாது. நான் ஒரு வன விலங்கின் இயல்பு கொண்டவனாக இருந்தேன். பாபுவே என் கோபக் கனலையும், என்னுள் தகித்திருந்த காமத்தையும் தணித்தார். மழையாய் அவர் எனக்கு அருளாசி பொழிந்து கொண்டே இருந்தார். நான் இன்று என்னவாக இருக்கிறேனோ, அது அனைத்திற்கும் பாபுவிற்கே கடமைப்பட்டுள்ளேன். என்னைப் போன்ற ஒரு பண்பற்றவனையும் மக்கள் சேவகனாக மாற்றினார்.

ஆசிரம வாழ்க்கை முறை எனக்கு பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது. வாழ்க்கை என்பது ஒன்றே, அது பகுக்க முடியாதது என்பதை உணர்ந்தேன்.  பாபு ஒருபோதும் தன்னை குருவாகவோ எவரையும் தன் சீடராகவோ உருவகித்ததில்லை. குரு சீட அமைப்பில் எனக்கு பெரிய ஈடுபாடு உள்ளபோதும் நானும் அது போலவே யாருக்கும் குருவாகவோ, யாருடைய சீடனாகவோ இருந்ததில்லை, பார்வையாலோ, வார்த்தையாலோ, தொடுகையாலோ தன் சீடனின் வாழ்வை மாற்றும் குருவை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியும். ஆனால் அது ஒரு சாத்தியம் மட்டுமே.

உண்மையில் அப்படிப்பட்ட எந்த குருவையும் நான் அறிந்ததில்லை. குரு சீட உறவை பற்றி நீட்டிக்காமல் ஒன்று சொல்கிறேன், பாபுவின் காலடியில் நான் என்ன கற்று கொண்டேனோ அதுவே எனக்கு இன்றும் பயனளிக்கிறது. என்னுடைய கிராமதானம், பூதானம் நடைபயணங்களுக்குப் பின்னிருப்பது நெடு நாட்களுக்கு முன் ஆஸ்ரமத்தில் நான் மேற்கொண்ட தவமாகும்.  ஆசிரமத்தில் சேரும் முன் நான் செய்த தவம் முற்றிலும் உணர்ச்சிகரமானது, பிறகு ஆசிரமத்தில் செய்த தவத்தால்தான் புதிய பார்வை பெற்றேன். அது முற்றிலும் பாபுவின் ஆசியே.

நான் பாபுவிடம் சென்ற பிறகு 32 வருட காலத்தை தவத்தில் செலவிட்டுள்ளேன். என்னுடைய வாசிப்பும், எண்ணமும் தொடர்ந்து ஆன்மீகத்தை நோக்கியே இருந்தாலும், என்னுடைய தவம் செயல்பாட்டிலிருந்து விலகவில்லை. நான் அரசியல் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்துக் கொண்டிருகிறேன், சமூக தளங்களில் ஏற்படும் முன்னேற்றங்களைத் தெரிந்து கொள்கிறேன். என்னவெல்லாம் பாபு எழுதினாரோ அவையனைத்தும் எனக்கு வழி  காட்டியுள்ளன.   நான் அவரது கருத்துகளை நுண்கவனத்துடன் படித்தும், அவற்றின்படி வாழவும் என்னால் முடிந்த அளவு முயற்சி செய்துள்ளேன். அப்படிதான் அகிம்சை எனும் நுட்பமான வழியைக் கண்டு கொண்டேன்.

பாகவத தர்மத்தைப் பற்றிய அழகான சுலோகம் ஒன்று உள்ளது. அதையே பாபு கண்டறிந்த அகிம்சை வழிக்கும் கொள்ளலாம். சுலோகம் என்னவென்றால், "பாகவத தர்மத்தை ஒருவன் நம்பிக்கையுடன் பின்பற்றினால் ஒருபோதும் அவன்  தவறிழைக்க மாட்டான். கண்ணை மூடி கொண்டு ஓடினாலும் விழுந்து விடாத பாதை போன்றதாகும் அதன் இயல்பு".

இந்த அழகிய, எளிய வழியைதான் பாபு எங்களுக்குக் காட்டினார். சர்வோதய சமூகத்தை நிறுவ விரும்புகிறோமெனில் நாம் பின்பற்ற வேண்டிய வழி இதுவேயாகும்.
-ஆச்சர்ய  வினோபா பாவே 
தமிழில்: கார்த்திகேயன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக