நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

19.12.14

தே.சி.க. மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம்



 மாநில  துணைத்தலைவர்  .திரு.சா.சிவானந்தம்,அகில பாரத அமைப்பாளர் திரு. பேரா.சதானந்த சப்ரே, மாநிலத் தலைவர்  திரு ம.வே.பசுபதி, மாநில துணைத் தலைவர் திரு.தஞ்சை வெ.கோபாலன்   ஆகியோர் அமர்ந்திருக்கும் காட்சி .

தமிழத்தில் தேசிய, தெய்வீக சிந்தனைகளைப் பரப்பும் பணியில் சங்க குடும்ப அமைப்புகளில் ஒன்றான 'தேசிய சிந்தனை கழகம்' செயல்பட்டு வருகிறது. தேசிய சிந்தனைக்  கழகத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் கடந்த கார்த்திகை மாதம் 28-ம் தேதி (2014, டிசம்பர் 14) ஞாயிற்றுக் கிழமை அன்று  சென்னை, சேத்துப்பட்டு, மகரிஷி வித்யாமந்திர் பள்ளி அரங்கில் நடைபெற்றது.

15.12.14

ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் எது?




2014 ஜூலை மாதம் 24, 25-ம் தேதிகளில் மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழன் பேரரசராக முடிசூடிய ஆயிரமாவது ஆண்டையும், அவர் பிறந்த ஆடி மாதத்துத் திருவாதிரை நாளையும் ‘கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம்’ மிகச் சிறப்பாகக் கொண்டாடி உலகத் தமிழ் மக்களையும் வரலாற்று ஆர்வலர்களின் கவனத்தையும் கங்கை கொண்ட சோழ புரத்தின்பால் ஈர்த்தனர்.

விழா நடந்து முடிந்த பிறகு, சில வரலாற்று ஆர்வலர்கள் ‘சோழர் வரலாறு’என்ற நூலை எழுதிய கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியும், ‘பிற்காலச் சோழர் வரலாறு’ என்ற நூலை எழுதிய சதாசிவப் பண்டாரத்தாரும் முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் மார்கழி மாதத்து ஆதிரை என்று கூறியிருக்கும்போது, இவர்கள் எப்படி ஆடி மாதத்துத் திருவாதிரை நாளை அவருடைய பிறந்த நாள் விழாவாகக் கொண்டாடலாம் எனக் குற்றம் கூறுவதோடு, அது வரலாற்றுப் பிழை என்றும் சாட முற்பட்டுள்ளனர்.

வரலாறு என்பது எழுதி முடிக்கப்பெற்ற ஒன்று அல்ல. இந்தியத் தொல்லியல் துறையால் படி எடுத்துப் பதிவு செய்யப்பட்ட கல்வெட்டுகள் அத்தனையும் இதுவரை அச்சில் வெளிவரவில்லை. மேலும், ஆண்டுதோறும் பல நூற்றுக் கணக்கான கல்வெட்டுச் சாசனங்களும் சில செப்பேட்டுச் சாசனங்களும் கண்டுபிடிக்கப்பட்டு வெளிவந்துகொண்டிருக்கின்றன. புதிய தரவுகள் கிடைக்கும்போது பழைய கருத்துக்களும் முடிவுகளும் நிச்சயம் மாற்றம் பெறும்.