நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

27.4.12

வழிகாட்டிய வரதன்!

 ஸ்ரீ ராமானுஜ ஜெயந்தி: ஏப். 27

.

மகான் ஸ்ரீராமானுஜர். 1017, சித்திரை 13ஆம் நாள் திருவாதிரை நட்சத்திரத்தில் ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார். காந்திமதியம்மாள் - கேசவசோமாயாஜியாண்டானின் திருக்குமாரர் இவர்.

 கேசவ சோமயாஜியார், ராமானுஜனுக்கு உபநயனம் செய்வித்தார். காஞ்சிக்கு அருகே திருப்புட்குழியில் யாதவப்ரகாசரிடம் ராமானுஜரும் அவரின் சித்தி மகன் கோவிந்தனும் கல்வி பயின்றனர். ஒருமுறை, யாதவப்ரகாசர் வேத அர்த்தத்திற்கு முரண்பட்ட விளக்கம் கூற, தன் அழகான வாதங்களால், அவரை மடக்கினார் ராமானுஜர். அதனால், யாதவப்ரகாசருக்கு தலைக்குனிவு ஏற்பட்டது. ராமானுஜர் மீது பகைமை ஏற்பட்டு, அவரைக் கொல்ல திட்டம் தீட்டினார்.

 வட தேச யாத்திரையாக யாதவப்ரகாசரும் அவரது சீடர்களும் ராமானுஜருடன் காசியை அடைந்தனர். அங்கே கங்கைக் கரையில் ராமானுஜர் இறங்கினார். அப்போது, கோவிந்தர் குருவின் திட்டத்தை ராமானுஜரிடம் கூறினார். அதுகேட்ட ராமானுஜர் குருவிடமிருந்து தப்பினார். கோவிந்தர், தன் குருவிடம் மிக்க வருத்தம் தோய்ந்தவாறு ராமானுஜன் காட்டில் கொல்லப்பட்டதாகக் கூறினார்.

 ராமானுஜர் நெடுந்தொலைவு நடந்தார். அந்தி சாயும் நேரம். இருள் கவ்வியது. வழி தெரியவில்லை. அப்போது, ஒரு வேடனும் அவனது மனைவியும் அந்த வழியில் செல்வதைக் கண்ட ராமானுஜர், "எங்குச் செல்கிறீர்கள்?' என்று கேட்டார். அவர்களும், காஞ்சிபுரம் செல்வதாக பதில் கூறினர். நள்ளிரவு, மூவரும் ஒரு மரத்தடியில் உறங்கினர். நடந்த களைப்பினால் நீர் வேட்கை ராமானுஜருக்கு ஏற்பட்டது. நீர் தருமாறு அவர் வேண்ட, வேடனும் நீரளித்து வேட்கையைத் தணித்தார்.

 பொழுது புலர்ந்தது. காஞ்சி எல்லைக்கு அருகில் தான் இருப்பதை உணர்ந்தார் ராமானுஜர். ஆனால் வேடனையும் அவனது மனைவியையும் காணவில்லை. தான் இருப்பது சாலைக்கிணறு என்பதையும், வழிதெரியாது தவித்த தன்னை அழைத்து வந்த வேடர் மக்கள் வரதராஜனும், பெருந்தேவித் தாயாருமே என்பதையும் நினைத்து ஆனந்தக் கண்ணீர் மல்கினார். அன்று முதல் வரதராஜப் பெருமானுக்கு சாலைக் கிணற்றிலிருந்து தீர்த்த கைங்கர்யம் செய்து வந்தார் ஸ்ரீராமானுஜர்.


- பிள்ளைலோகம் திருவேங்கடாசாரியார் 
நன்றி: வெள்ளிமணி - தினமணி (27 .04 .2012)


காண்க: ஸ்ரீ ராமானுஜர் (விக்கி)


  .

26.4.12

குருவிடம் கேட்ட வரம்!


 ஸ்ரீ சங்கர ஜெயந்தி: ஏப். 26 



கங்கைக் கரையில் பிரம்ம நிஷ்டையில் இருந்தார் ஸ்ரீசங்கர பகவத் பாதர். திடீரென அவரது தியானம் கலைந்தது. கண்களைத் திறந்து பார்த்தால், எதிரே ஒருவர் நின்றுகொண்டிருந்தார். பார்த்ததும் அவருக்குத் தெரிந்தது, அவர்தான் கெளட பாதர் என்பது.

உடனே ஆசனத்தில் இருந்து எழுந்தார். அவர் பாதம் பணிந்து அவரைப் போற்றி ஒரு துதியைச் சொன்னார்.

"சிவந்த மேனி கொண்டவர். தமது இடக்கையில், கவிழ்த்த வெண்தாமரை மொட்டுப் போன்று தோன்றும் கமண்டலத்தையும், வலக்கையில் கருவண்டுகள் போன்ற ருத்ராட்சத்தால் ஆன ஜெப மாலையையும் வைத்திருக்கிறார். வலக்கை கட்டை விரலால் ருத்ராட்சத்தை உருட்டிக் கொண்டிருக்கிறார். இது, கருவண்டுகள் அவரது கைகளாகிய தாமரை மலரைச் சூழ்ந்து கொண்டிருப்பதுபோல தோன்றுகிறது'' என்று கூறித் துதித்தார்.

கெளட பாதர், ஸ்ரீசங்கரரின் குருவான கோவிந்த பகவத்பாதருக்கும் குருவானவர். இருவரும் நல்ல ஞானம் பெற்றவர்கள். இருப்பினும், குரு-சிஷ்யன் என்ற முறையில், கௌட பாதர் சங்கரரிடம், "காமம் போன்ற விரோதிகளைக் களைந்தீர்களா, சாதனா சந்துஷ்டியை உணர்ந்தீர்களா, அஷ்டாங்க யோக சித்தி பெற்றீர்களா?'' என்றெல்லாம் கேள்விகளைக் கேட்கிறார்.

அதற்கு சங்கரர் அடக்கத்துடன், "வியாஸமுனியின் புதல்வரான சுகாசாரியரிடம் உபதேசம் பெற்ற உங்களது பாத தரிசனம் எனக்குக் கிடைத்ததே பெரும் பேறு. உங்களை ஒரு முறை தரிசித்தாலேயே வாய் பேச இயலாதவன் பேசவும், மூடன் அறிவாளியாகவும், பாவம் செய்தவன் தனது பாவங்கள் கழுவப் பெற்று தூயவனாகவும் ஆகிடுவர். எனவே உங்கள் தரிசனம் மூலம் இவை எல்லாவற்றையும் சிறிது காலத்தில் நான் அடைந்திடுவேன்'' என்று கூறி வணங்கினார்.

இந்த பதிலைக் கேட்ட கௌடபாதர் மிகவும் மகிழ்ந்து, ""உன் உயர்ந்த குணம், உனது பேச்சு மற்றும் பணிவின் மூலம் தெரிகிறது. உயர்ந்த விளக்கவுரைகளைச் செய்தும், நான் எழுதிய மாண்டூக்ய உபநிஷத விளக்கத்தை எளிமைப்படுத்தியதற்கும் உனக்கு ஆசி வழங்குகிறேன், ஏதேனும் வரம் கேள்'' என்றார்.

அதற்கு ஸ்ரீசங்கரர், "கலியுகம் மட்டுமல்லாது மற்ற மூன்று யுகங்களிலும் அவதாரம் செய்த பாக்யத்தை இன்று உங்கள் தரிசனத்தால் பெற்றேன். இதைவிடச் சிறந்ததாக நான் அடையவேண்டியது ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும் நான் வேண்டுவது ஒன்றுதான். அது, என் சித்தம் எப்போதும் பிரம்மத்திலேயே நிலைத்திருக்க அருள வேண்டும்'' என்றார்.

-ராமண்ணா 
நன்றி: வெள்ளிமணி - தினமணி (20.04.2012)
.
.

தமிழ்த் தாயின் தவப்புதல்வன்!



ஸ்ரீனிவாச ராமானுஜன் 

 (நினைவு நாள்: ஏப். 26)

 
இன்று ராமானுஜனின் நினைவு நாள்- இவ்வாண்டு ராமானுஜனின் 125-வது ஆண்டு. உலக சரித்திரத்தில் ஆர்யபட்டாவுக்கு எப்படி ஓர் இடமுண்டோ அதேபோலத் தனக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ள இன்னொரு மாமேதை ராமானுஜன். சிலர் தங்களது படிப்பாலும் உழைப்பாலும் மேதைகளாகிறார்கள். ஆனால் 'கணித மேதை' ராமானுஜன் பிறவியிலேயே மேதை.

இவர் விட்டுவிட்டுச் சென்றிருப்பது இரண்டு நோட்டுப் புத்தகங்கள் மட்டுமே. அதில் இருக்கும் கணித மேதைமை உலகளாவிய அளவில் தன்னிகரற்றது என்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. சிலர் வாழ்ந்து மறைகிறார்கள். ராமானுஜன் போன்ற ஒரு சிலர் மறைந்தும் வாழ்கிறார்கள்.

வறுமை ஒருவருடைய திறமையை முடக்கிப் போட்டுவிட முடியாது என்பதற்கு  'கணித மேதை'  ராமானுஜன் ஓர் உதாரணம். சிறுவன் ராமானுஜன் பள்ளிக்குச் செல்லப் புறப்பட்ட நிலையில் தரையில் அமர்ந்து சாப்பிடுவதற்கு ஆயத்தமானான். சமையலறையிலிருந்து மிகுந்த தயக்கத்துடன் மெதுவாக வெளியே வந்த ராமானுஜனின் தாயார் அன்று வீட்டில் சுத்தமாக ஒரு பிடி அரிசிகூட இல்லையென்றும் பக்கத்து வீடுகளில் பலமுறை வாங்கித் திருப்பித்தர இயலாததால் மீண்டும் அவர்களிடம் கேட்க முடியவில்லையென்றும் ராமானுஜனிடம் சோகத்துடன் தெரிவித்தார்.

மாலை வீட்டுக்கு வரவேண்டிய நேரத்துக்கு ராமானுஜன் வராததால் பதறிப்போன தாயார், ராமானுஜனின் நெருங்கிய நண்பனான வகுப்புத்தோழன் அனந்தராமனின் வீட்டுக்குச் சென்று விசாரித்தும் தகவல் ஏதும் கிடைக்காததால் ராமானுஜனைத் தேடுவதற்கு அனந்தராமனை அனுப்பினார். ராமானுஜன் அங்குள்ள பெருமாள் கோயில் ஒன்றில் உள் மண்டபத்தில் தலைக்குப் புத்தகப் பையை வைத்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நிலையில் அனந்தராமன் பார்த்தான். மண்டபத்தின் காரைத்தரை முழுக்க சாக்கட்டியால் கணக்குப் போடப்பட்டிருந்தது. 

முந்தைய நாள் வகுப்பறையில் தனது கணித ஆசிரியர் ஒரு சிக்கலான கணிதப் புதிரைக் கரும்பலகையில் போட்டுப் போட்டுப் பார்த்தும் உரிய விடை கிடைக்காமல் தொடர்ந்து முயற்சித்து வந்தார். காலையில் வகுப்பறையில் இருந்தபோதும் அந்தக் கணக்கு ராமானுஜனின் மனதைக் குடைந்து கொண்டேயிருந்தது. மதிய இடைவேளையில் வகுப்பைவிட்டு வெளியே வந்து சாக்கட்டியால் பெருமாள் கோயில் மண்டபத் தரையில் அந்தக் கணக்கை பல முறைகளில் போட்டுப் பார்த்துக் கொண்டேயிருந்தவன் பசியும் களைப்பும் சேர்ந்துகொள்ள அங்கேயே படுத்துத் தூங்கிவிட்டான். காலை முதல் உணவில்லை என்பதற்காகக்கூட கவலைப்படாத ராமானுஜன் கணக்குக்கு விடை கிடைக்கவில்லையே என்றுதான் கவலைப்பட்டான்.

ராமானுஜனின் தந்தையார் தனது ஊரான கும்பகோணத்தில் ஒரு ஜவுளிக் கடையின் குமாஸ்தாவாக மாதம் ரூ. 20 சம்பளத்துக்கு வேலையில் இருந்தார். இந்த மிகக்குறைந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்த இயலாத சூழல், வெளியூரிலிருந்து வந்த இரண்டு மாணவர்கள் மாதந்தோறும் தலா பத்து ரூபாய் வீதம் ராமானுஜனின் தாயார் கோமளத்தம்மாளிடம் உணவுக்கும் தங்குவதற்குமாகச் செலுத்தி கும்பகோணம் கல்லூரியில் படித்து வந்தனர். இவற்றையெல்லாம் வைத்துத்தான் அந்தக் குடும்பம் இயங்கி வந்தது.

ராமானுஜனின் வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் இருவரும் ஒரு நாள் தங்களது கணிதப் பேராசிரியர் வகுப்பில் நடத்திய கணிதச் சூத்திரம் குறித்து வீட்டுக்கு வந்த பிறகு தங்களுக்குள் சர்ச்சை செய்து கொண்டிருந்தனர். அப்போது இந்த வாதப் பிரதிவாதங்களைக் கவனித்துக் கொண்டிருந்த ராமானுஜன் அவர்களின் கணித நோட்டுப் புத்தகத்தை வாங்கிப் பார்த்தான். அந்த மாணவர்கள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடையும் வகையில், இரண்டு, மூன்று நிமிடங்களில் சர்ச்சைக்குரிய அந்தக் கணக்கின் சரியான வழிமுறைகளையும் விடையையும் எழுதிக் காட்டினான் ராமானுஜன்.

கும்பகோணம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவனான ராமானுஜன் மெட்ரிகுலேசன் தேர்வில் பள்ளியின் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றான். கும்பகோணம் அரசு கல்லூரியில் எப்ஏ வகுப்பில் சேர்ந்தான்.

கும்பகோணம் கல்லூரியில் ஜூனியர் சுப்பிரமணியம் ஸ்காலர்ஷிப் என்ற ஒரு உதவித்தொகையினை படிப்பில் சிறந்த மாணவனுக்கு வழங்கி வந்தனர். அந்த உதவித்தொகை கிடைத்தால்தான் கல்லூரியில் படிப்பைத் தொடர முடியும் என்ற நிலையிலிருந்த ராமானுஜன், அதற்குண்டான தேர்வுகளை எழுதினார். கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற ராமானுஜன் ஆங்கிலத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்குத் தேவையான மதிப்பெண்களைவிட மூன்று மதிப்பெண்கள் குறைவாகப் பெற்றுத் தோல்வியுற்றார்.

இரண்டாவது முறை எழுதி உதவித்தொகைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற ராமானுஜத்தால் எப்ஏவுக்கான இறுதித் தேர்வில் கணிதத்தில் நூற்றுக்கு நூறு வாங்கியும் பிற பாடங்களில் தேர்ச்சி பெற இயலவில்லை. தோல்வியடைந்த நிலையில் பெற்றோரின் வேண்டுகோளின் விளைவாகவும் கணிதப் பேராசிரியர் பி.வி. சேஷ ஐயரின் தூண்டுதலாலும் மீண்டும் எப்ஏ படிக்க எண்ணி சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்தார். திடீரென்று ஏற்பட்ட எதிர்பாராத உடல்நலக் கோளாறு காரணமாக இவர் எப்ஏ படிப்பையே பாதியில் விட்டுவிட்டு கும்பகோணம் திரும்பவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது.

பிறகு இடைவெளி விட்டு 1907-இல் மூன்றாவது முறையாக கல்லூரியில் சேராமல் நேரடியாக எப்ஏ தேர்வு எழுதி அதிலும் தோல்வியைத் தழுவினார்.

தனித்திறன் பெற்ற ராமானுஜன் வேலையில் சேர்ந்து முடங்கிவிடக்கூடாது என்று எண்ணியே சேஷ ஐயர் சென்னையில் சிறப்பாகச் செயல்பட்டு வந்த இந்தியக் கணிதச் சங்கத்துடன் ராமானுஜனுக்குத் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்ததோடு அதில் சேரப் பரிந்துரையும் செய்தார்.

அதிலிருந்து ராமானுஜன் மேற்கொண்ட கணித ஆய்வுகளை அச்சங்கத்துக்கு அனுப்பி வந்தார். கும்பகோணத்திலிருந்தவாறே கணித ஆய்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ராமானுஜன் ஒரு கட்டத்தில் 1911-இல் சென்னைக்கே சென்று முழு மூச்சாக ஆய்வுப் பணியில் ஈடுபட்டார்.

இந்தச் சூழலில்தான் சென்னையில் தங்கியிருப்பதற்கும் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுவதற்கும் தேவையான வருமானத்தை உருவாக்க எண்ணி சென்னையில் 1912-இல் அக்கெüண்டண்ட் ஜெனரல் அலுவலகத்தில் ஒரு குமாஸ்தாவாக வேலையில் சேர்ந்தார். இந்த வேலை பிடிக்காமல் ஒன்றரை மாதத்துக்குப் பிறகு சென்னை போர்ட் டிரஸ்ட்டில் ஆவணப் பிரிவு குமாஸ்தா வேலையில் மாதம் ரூ. 30 சம்பளத்துக்குச் சேர்ந்தார். தன் மனைவி மற்றும் தாயாரையும் சென்னைக்கே அழைத்து வந்தார் ராமானுஜன். தனது குடும்பப் பொருளாதாரப் பற்றாக்குறையை ஈடுசெய்ய கல்லூரி மாணவர்களுக்கு காலை, மாலை இரு வேளையும் தனி வகுப்பு நடத்தி வந்தார்.

ராமானுஜனின் அபாரக் கணிதத் திறமையை நன்கு உணர்ந்துகொண்ட போர்ட் டிரஸ்ட்டின் தலைவர் ஆங்கிலேய அதிகாரி சர்.பிரான்ஸிஸ் ஸ்பிரிங், மேலாளர் ராவ்பகதூர் எஸ். நாராயணய்யர் ஆகியோர் ராமானுஜனை நன்கு ஊக்குவித்தனர். ஒரு கட்டத்தில் அலுவலகத்திலேயே கணித ஆராய்ச்சியை மேற்கொள்ள மகிழ்வுடன் அனுமதித்தனர்.

இந்தக் காலகட்டத்தில்தான் லண்டன் மாநகரிலுள்ள உலகப் புகழ்மிக்க கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கணிதப் பேராசிரியரும், கணிதத்துறை வல்லுநருமான பேராசிரியர் ஜி.எச்.ஹார்டி சர்வதேச கணிதச் சஞ்சிகை ஒன்றில் ஒரு கடினமான கணிதப் புதிரை வெளியிட்டு அதற்கு உலகில் எப்பகுதியிலுள்ளவரும் தக்க பதிலளிக்கலாம் என்ற வேண்டுகோளையும் விட்டிருந்தார்.

இதற்கு முன்பே பல வெளிநாட்டு அறிஞர்களுக்கு தனது கணிதக் குறிப்புகளை அனுப்பியிருந்தும் எவ்விதப் பலனும் ஏற்படாத நிலையில், ராமானுஜன் பேராசிரியர் ஜி.எச். ஹார்டியின் கணிதப் புதிருக்கு உடனடியாக விடையை அனுப்பி வைத்தார்.

ராமானுஜனின் விடை ஹார்டியை வியப்பில் ஆழ்த்தியது. உலகெங்கும் இருந்து வந்து குவிந்துள்ள புதிருக்கான பதிலில் எந்தப் பேராசிரியரும் எழுதாத அளவில் கனகச்சிதமான புதிய முறையில் எழுதப்பட்டிருந்த வழிமுறைகளையும் விடையையும் பார்த்துப் புல்லரித்துப் போனார் ஹார்டி. ஹார்டி ராமானுஜத்தைப் பாராட்டி நெகிழ்ச்சியுடன் ஒரு கடிதம் எழுதினார்.

இந்தக் கடிதம் ராமானுஜத்தை ஆனந்தத்தின் எல்லைக்கே இட்டுச் சென்றது. இவரின் இதர கண்டுபிடிப்புகள் அனைத்தையும் ஹார்டிக்கு உடனே அனுப்பி வைத்தார். ஹார்டி அங்கிருந்தவாறே எடுத்த முயற்சியினாலும் சென்னையிலிருந்த ராமானுஜனின் கணிதத் திறமையை நன்கு உணர்ந்த பிரமுகர்களின் பரிந்துரையின் பேரிலும் சென்னைப் பல்கலைக் கழக கணித ஆராய்ச்சி மாணவராகச் சேர்க்கப்பட்டார் ராமானுஜன். இதற்கென உதவித்தொகையாக பல்கலைக் கழகம் மாதம் ரூ. 75 ராமானுஜனுக்கு அளித்தது.

பேராசிரியர் ஹார்டி இன்னும் பல முறைகளில் முயன்று ராமானுஜனை லண்டனிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு வந்து அங்கு கணித ஆராய்ச்சியைத் தொடர வழி ஏற்படுத்தித் தந்தார். அரசு அதிகாரிகளும் பல்கலைக் கழக உயர் மட்ட அலுவலர்களும் இதற்கு ழுழுமையாக ஒத்துழைத்தனர்.

ராமானுஜன் லண்டன் செல்வதற்கு அரசு ரூ. 10,000 ஒதுக்கீடு செய்ததோடு பல்கலைக்கழகம் ஆண்டுக்கு ரூ. 250 அளிக்க அனுமதிக்கப்படுவதாகவும் அரசே அறிவித்தது.

1914-இல் லண்டன் சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தோடு இணைந்த டிரினிடி காலேஜில் சேர ஹார்டியே உதவினார். அங்கும் அவருக்கு ஆண்டுதோறும் 60 பவுண்ட் உதவித்தொகை பெறுவதற்கு ஹார்டி வழி வகுத்தார்.

1916-ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் கணிதத்தில் இவருக்கிருந்த பாண்டித்தியத்தைப் பாராட்டி கெüரவ பி.ஏ பட்டம் அளித்து மிகச்சிறந்த கல்வியாளர்கள் முன்னிலையில் கெüரவித்தது. 1918-இல் லண்டன் ராயல் சொசைட்டி ராமானுஜத்துக்கு பெரும்புலவர் எனும் உலகின் மிக உயரிய அங்கீகாரத்தை அளித்து மகிழ்ந்தது. சிறுவயதிலிருந்தே உடல்நலம் பாதித்திருந்த ராமானுஜன் லண்டன் சென்ற பிறகு மோசமானது. அங்கு அளிக்கப்பட்ட உயர் சிகிச்சையும் பலனளிக்கவில்லை.

லண்டனில் ஐந்தாண்டுகால தீவிர கணித ஆய்வுக்குப் பிறகு 1919-இல் வேறு வழியின்றி ஓய்வுக்காகவும் சிகிச்சைக்காகவும் இந்தியா திரும்பினார் ராமானுஜன். லண்டனிலிருந்து பல வெற்றிகளைக் குவித்து இந்தியா திரும்பிய ராமானுஜனுக்கு சென்னையில் எழுச்சிகரமான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இந்தியா வந்த பிறகு எல்லாவித சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்ட பின்னரும் உடல் நலிவடைந்து கொண்டே சென்றது. தனது முப்பத்து மூன்றாவது வயதில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பே 1920 ஏப்ரல் 26-ஆம் தேதி ராமானுஜன் மரணமடைந்தார்.

கணிதம் வாழும் காலம்வரை ராமானுஜன் வாழ்வார். ராமானுஜனின் நினைவு வாழும் காலம்வரை இந்தியாவின் பெருமை பேசப்படும். இந்தியாவின் பெருமை பேசப்படும்போதெல்லாம் தமிழகம் ராமானுஜன் போன்றவர்களால் தலைநிமிர்ந்து நிற்கும். ராமானுஜன், தமிழ்த் தாயின் தவப்புதல்வன் என்பதில் நாம் பெருமை கொள்வோம். 

- த. ஸ்டாலின் குணசேகரன்
நன்றி: தினமணி  (26 .04 .2012)


 .
 

25.4.12

ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் அகல்விளக்கு



மு.வரதராசனார்
(பிறப்பு: 25 .04.1912  மறைவு: 10.10.1974 )

சென்ற நூற்றாண்டில் எத்தனையோ பேராசிரியர்கள் பணிபுரிந்தார்கள்; ஓய்வு பெற்றார்கள்; மறைந்தார்கள். அவர்கள் அத்தனை பேரும் இன்று நினைவுகூரப்பட்டுப் போற்றப்படவில்லை. ஒரு சிலரே மறைந்தும் மறையாமல் வாழ்கிறார்கள். அவர்களில் சிலரை மாணவர்கள் மட்டும் நினைவுகூர்கிறார்கள்; மிகச் சிலரையே எல்லோரும் நினைந்து போற்றுகிறார்கள். அத்தகைய மிகச் சிலருள் ஒருவரே பேராசிரியர் மு.வ.

இருபதாம் நூற்றாண்டு கண்ட நிகரற்ற பேராசிரியர் டாக்டர் மு.வ. என்பது வரலாற்று உண்மை. கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் மு.வ. என்னும் இரண்டெழுத்து, தமிழ் மக்களிடையே, குறிப்பாக மாணவர்களிடையே ஒலித்த இரண்டெழுத்து மந்திரம் ஆகும். வட ஆர்க்காடு மாவட்டத் திருப்பத்தூரில் பிறந்த மு.வ. பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு அங்கேயே வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியைத் தொடங்கினார். தனியே படித்துப் புலவர் தேர்வில் மாநிலத்தில் முதல்வராகத் தேர்ச்சி பெற்று, அவ்வூர் நகராட்சி உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகி, பின் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்து, பேராசிரியராக உயர்ந்து, சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியராகத் திகழ்ந்து, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஒளிர்ந்து புகழின் உச்சியில் மறைந்தார். அவரது வாழ்வு எளிய குடும்பத்தில் பிறந்து ஆர்வத்தாலும் உழைப்பாலும் படிப்படியாக உயர்ந்து முன்னேற்றம் கண்ட பெருவாழ்வு நேரிய வாழ்வு.

ஆசிரியர்கள் மூன்று வகை. சிலர் மாணவர்களைப் பகைவர்களைப்போல் நினைப்பார்கள். இவர்கள் மாணவர்கள் செய்யும் சிறு தவறுகளைக்கூடத் தாங்கிக்கொள்ளாமல் தண்டிப்பார்கள். சிலர், மாணவர்களைத் தங்களிடம் பாடம் கற்க வந்தவர்களாக மட்டும் கருதுவார்கள். இவர்கள் பாடத்தை மட்டும் கற்பித்து மாணவர்களைத் தேர்வுக்கு ஆயத்தம் செய்வார்கள். சிலர் மாணவர்களைத் தங்கள் மக்களாகக் கருதி, எல்லா வகையிலும் துணை நிற்பார்கள். இவர்களே மாணவர்களை வாழ்வாங்கு வாழத்தக்கவர்களாக உருவாக்குபவர்கள். இவற்றில் இறுதிவகையைச் சேர்ந்தவர் பெருந்தகை மு.வ.

அவர் மாணவர்களுக்குப் பாடம்சொல்லும் ஆசிரியராக மட்டுமன்றி ஆதரவு நல்கும் தந்தையாகவும் திகழ்ந்துள்ளார். அவர்கள் குடும்பச் சூழல்நிலையை அறிந்து அதற்கேற்ப அவர்களுக்குத் தேவையான உதவிகளைப் புரிந்துள்ளார். மறைந்த பேராசிரியர் பொன். செüரிராசன் போன்ற எளிய மாணவர்களைத் தம் வீட்டிலேயே தங்கச்செய்து உணவும் தந்து படிக்க வைத்துள்ளார். மறைந்த பேராசிரியர் ப. இராமன் போன்ற சிலருக்கு விடுதிக்கட்டணமும் வேறு சிலருக்குக் கல்லூரிக் கட்டணமும் கட்டி உதவி புரிந்துள்ளார். இவ்வுதவிகளை எல்லாம் அடுத்தவருக்குத் தெரியாமலே செய்துள்ளார். மாணவர்கள் நல்வாழ்வுக்காகப் பல்கலைக்கழகத்தோடு போராடியுள்ளார். அவர் ஆசிரியப் பணியைத் தாம் வாழ்வதற்கான பணியாக மட்டும் கருதாமல் மாணவர்களை வாழ்விக்கும் பணியாகக் கருதி அரும்பாடுபட்டுள்ளார்.

பெரும்பாலும் கல்லூரி முடிந்ததோடு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே இருந்த தொடர்பு அறுந்து போய்விடுகிறது. அதன்பின்பு அவர்கள் யாரோ, இவர்கள் யாரோ. ஆனால் மு.வ. மாணவர்களோடு கொண்டிருந்த தொடர்பு கல்லூரிப் படிப்பு முடிந்த பின்பும் வளர்ந்து, வாழ்நாள் உறவாக நிலைபெற்றுள்ளது. அவர் பலருக்கு வேலை தேடும் முயற்சியில் உதவியுள்ளார்; வீடு கட்டுவதற்குப் பணம் கொடுத்து உதவியுள்ளார்; பலரை நூல்கள் எழுதச் செய்து, அவற்றைப் பாடநூல்களாக வைத்து வருவாய்க்கு வழிசெய்துள்ளார். வாழ்க்கைச் சிக்கல்களுக்குக் கடிதங்கள் எழுதி வழிகாட்டியுள்ளார். அவர் அளவுக்குத் தம் மாணவர்களுக்குக் கடிதம் எழுதிய பேராசிரியர் மற்றொருவர் இல்லை என்றே சொல்லலாம்.

அவர் மாணவர்களை மதிப்போடு நடத்தியவர். தம் நாவல்கள் குறித்து மாணவர்கள் சிலரிடம் விவாதம் செய்துள்ளார். படிக்கக் கொடுத்துக் கருத்துக் கேட்டுள்ளார். தம் முதலணி மாணவர் ம.ரா.போ. குருசாமியின் கருத்தை ஏற்று, நாவலுக்கு வைத்திருந்த முருங்கைமரம் என்ற பெயரைச் "செந்தாமரை' என்று மாற்றிக்கொண்டார். ஒரு சிறுகதைக்கு அவர் தெரிவித்த "விடுதலை' என்னும் தலைப்பையொட்டி "விடுதலையா?' என்று பெயர் சூட்டியுள்ளார். மேலும், நான்கு நாவல்களுக்குத் தம் முதல்அணி மாணவர்கள் நால்வரையும் ஒவ்வொரு நாவலுக்கு அணிந்துரை எழுதச் சொல்லி அவர்களைப் பெருமைப்படுத்தியுள்ளார்.

மற்றப் பேராசிரியர்களெல்லாம் தமிழைப்பற்றி மட்டும் சிந்தித்துக்கொண்டிருந்தபோது அவர் ஒரு படி மேலே சென்று தமிழர்களைப் பற்றியும் சிந்தித்தார். அதன் விளைவே அவர் எழுதிய நண்பர்க்கு, தம்பிக்கு, தங்கைக்கு, அன்னைக்கு ஆகிய கடித இலக்கியங்கள். தமிழர்கள் நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது, வல்லவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது அவற்றின் உள்ளடக்கமாக அமைந்தது. இந்தச் சமுதாய அக்கறை அவரை ஏனைய தமிழாசிரியர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது.

மாணவர்கள் மட்டுமன்றிப் பிறரும் அவர் அறிவுரைகளால் வாழ்ந்துள்ளார்கள். தங்கள் குடும்பச் சிக்கலைத் தெரிவித்து வழிகேட்டுக் கடிதம் எழுதியவர்கள் பலர். ஒருமுறை சூழ்நிலையால் வாழ்க்கையில் தவறிவிட்ட தன் மனைவியைக் கொன்றுவிடலாமா என்று தோன்றுவதாக ஒருவர் கடிதம் எழுதி அவருடைய அறிவுரையை நாடினாராம். அதற்கு மு.வ., அப் பெண்ணை மனைவியாக ஏற்க முடியாவிட்டாலும், இரக்கங்காட்டி வீட்டு வேலைக்காரி போலவாவது இருந்துவிட்டுப்போக அனுமதிக்கலாம் என்று பதில் எழுதினாராம். மு.வ.வின் எழுத்து வாழ்விக்கும் எழுத்து என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்?

அவருடைய தமிழ்ப்பணிகள் எல்லாம் காலத்திற்கு ஏற்பத் தமிழை வளர்க்கும் பணிகளாக அமைந்தன. திரு.வி.க.வால் எளிமைக் கோலம் பூண்ட தமிழ்நடையை எளிமையின் எல்லைக்குக் கொண்டுசென்றவர் மு.வ. எளிதில் புரியும் திருக்குறளுக்கு விளங்காத நடையில் உரைகண்டு பொதுமக்களுக்கு எட்டாத உயரத்தில் உரையாசிரியர்கள் அதனை ஏற்றி வைத்திருந்தார்கள். அவர் குறளுக்கு எளிய உரைகண்டு கையடக்கப் பதிப்பாக வெளியிட்டு அதனை எளியவரும் கற்கும்படி ஆக்கினார். சராசரித் தமிழ் மக்களுக்குப் புரியாமல் இருந்த சங்கப்பாடல்களை விளக்கிப் புரியும் தமிழில் கட்டுரைகளாக வடித்து, விருந்து என்ற பெயரிலும், செல்வம் என்ற பெயரிலும் வழங்கினார். அவர் காலத்தில் வளர்நிலையில் இருந்த இலக்கியத் திறனாய்வுப் போக்கில் சிலப்பதிகாரம் குறித்து, இளங்கோவடிகள், கண்ணகி, மாதவி ஆகிய நூல்களை எழுதினார். இவை பண்டை இலக்கியங்களைப் பரப்புதற்கு மேற்கொண்ட ஆக்கப் பணிகள்.

இலக்கியத் திறனாய்வும் மொழியியலும் அவர் காலத்தில்தான் தமிழில் புதிய துறைகளாகத் தோற்றம் கொண்டன. அவற்றின் வளர்ச்சிக்காக. இலக்கியத் திறன், இலக்கிய மரபு, இலக்கிய ஆராய்ச்சி, எழுத்தின் கதை, மொழியின் கதை, மொழி வரலாறு, மொழிநூல், மொழியியற் கட்டுரைகள் முதலியவற்றை எழுதினார். இவை புதிய துறைகளில் தமிழ் வளர்வதற்கு ஆற்றிய அரும்பணிகள்.

இலக்கிய உலகில் மு.வ. பெற்ற தனிச் சிறப்புக்குக் காரணம் அவரது படைப்பிலக்கியத் திறனே. ஆங்கில இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தவர் மு.வ. அதன் பயனாக ஆங்கில இலக்கியப் போக்குகளைத் தமிழில் புகுத்தும் முயற்சியிலும் தலைப்பட்டார். நாவல், சிறுகதை, நாடகம் போன்ற இலக்கிய வகைகளில் தம் படைப்பாற்றலைச் செலுத்தினார். சிறுகதையில் பெரிய வெற்றியைப் பெறமுடியவில்லை. நாடகத்தில் ஓரளவே வெற்றி கண்டார். ஆனால், நாவல் இலக்கியத்தில் தனித்தடம் பதித்தார்.

அவரைத் தமிழ் வகுப்பறைகளிலிருந்து தமிழர் வீடுகளுக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியவை அவருடைய நாவல்களே. பொதுவாக ஆசிரியர் கூற்றாகவே நாவல்கள் அமையும். ஆங்கில நாவல்களில் பாத்திரங்களே கதை சொல்லுவதாக அமைந்திருப்பது கண்ட மு.வ., "கள்ளோ காவியமோ' என்னும் நாவலை மங்கையும் அருளப்பரும் மாறி மாறிச் சொல்வதாகப் படைத்தார். கதைத் தலைவனின் நண்பன் வேலய்யன் கதையைச் சொல்வதாக அகல்விளக்கினைப் படைத்தார். ஆசிரியர் கூற்றாகக் "கயமை' நாவலை அமைத்தார். கள்ளோ காவியமோ, நெஞ்சில் ஒரு முள், அகல் விளக்கு, வாடா மலர், அல்லி, கயமை, கரித்துண்டு முதலிய நாவல்களைப் படிக்காத தமிழ் மாணவர்களோ, சுவைஞர்களோ சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் இல்லை என்றே சொல்லலாம். அந்த நாளில் இந்த நாவல்களைப் பலர் திருமணங்களில் பரிசாக வழங்கி வந்தனர்.

சிலர் சொல்வதுபோல் அவருடைய படைப்புகள் நாவல் இலக்கணத்திற்கு முற்றிலும் பொருந்தாமல் இருக்கலாம். ஆனால் அவை நன்னெறி காட்டி இளைஞர்களைத் திருத்துவன; சமுதாயச் சிக்கல்களுக்குத் தீர்வுகாட்டுவன. இல்லறத்தைத் தொடங்கும் காதலர்கள் பிறர் என்ன கருதுவார்களோ என்று எண்ணாமல், ஒருவர்க்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ்தல் வேண்டும், இல்லையென்றால் பிரிந்து தொல்லைப்பட நேரிடும் என்னும் அறிவுரையை வழங்குவது கள்ளோ காவியமோ. உணர்ச்சிக்கு முதன்மை தாராமல் அறிவு வழி வாழ்ந்தால் வாழ்க்கை முற்றும் துளசியைப்போல் மணமுடையதாக அமையும், உணர்ச்சி வயப்பட்டு வாழ்ந்தால் ஒருபகுதி அழகாக அமைய, ஏனைய பகுதிகள் வெறுக்கத்தக்கனவாய் அரளிச் செடிபோல் ஆகிவிடும் என்று இளைஞர்களுக்கு எச்சரிக்கையூட்டுவது அகல்விளக்கு. முறையற்ற வேகம் வாழ்க்கையைக் கெடுத்துவிடும் என்னும் உண்மையை உணர்த்துவது வாடாமலர். ஒருவனோடு வாழும்போது மற்றொருவனை எண்ணாமல் அவனுக்கு நேர்மையாக நடந்துகொண்டால் அதுவே "கற்பு' என்று வாழ்க்கையை இழந்தவர்களுக்கும் வாழ வழி காட்டுவது கரித்துண்டு. அவர் நாவல்கள் பொழுதுபோக்கு நாவல்கள் மட்டுமல்ல பழுதுபார்க்கும் நாவல்கள். அவர் கலை கலைக்காகவே என்று கருதாமல் கலை வாழ்க்கைக்காகவே என்னும் கருத்தில் வேரூன்றி நின்றவர். அவர் எழுத்துகளில் உருவான அல்லி, மங்கை, பாவை, தேன்மொழி, வளவன், எழில், நம்பி போன்ற பெயர்களை அன்றைய பெற்றோர்கள் பலர் தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டி மகிழ்ந்ததே அவர் நாவல்கள் பெற்ற வெற்றிக்குச் சான்றாகும்.

அவர் நாவல்களின் சிறப்பை விளக்கும் நிகழ்ச்சி ஒன்று. மு.வ., மயிலை மாணிக்கஞ்செட்டியார், அவர் மைந்தர் மா. சம்பந்தம் போன்றவர்களோடு வடநாட்டுச் சுற்றுலா மேற்கொண்டார். அப்போது காஷ்மீரில் நடைப்பயிற்சி மேற்கொண்ட அவரும் மா. சம்பந்தமும் அறியாமல் ராணுவப் பாதுகாப்பு எல்லைக்குள் சென்றுவிட்டனர். உடனே காவலர்கள் இருவரையும் ராணுவ அதிகாரிமுன் அழைத்துச் சென்று நிறுத்திவிட்டார்கள்.

தமிழரான ராணுவ அதிகாரி பெயரைக் கேட்டுள்ளார். மு.வரதராசன் என்று தெரிவித்தவுடன் இருக்கையிலிருந்து எழுந்து, நாவல்கள் எழுதும் மு.வ.வா? என்றவாறு வணங்கினாராம். பின்னர் சிற்றுண்டி அளித்து வண்டியில் ஏற்றி அவர்கள் இருந்த இடத்திற்கு அனுப்பிவைத்தாராம். அவர் எழுத்து அவரைக் காத்ததோடு சில நாள்களாய்த் தமிழ்நாட்டு இட்லியைக் காணாமல் இளைத்துப் போயிருந்த வாய்க்கு இனிய உணவையும் ஈட்டித் தந்துவிட்டது.

வள்ளுவமும் காந்தியமும் அவர் கைக்கொண்ட நெறிகள். அவர் பகவத் கீதையை தூற்றாமலே திருக்குறளைப் போற்றியவர். அவர் திருக்குறளை நடத்தியவர் மட்டுமல்லர், அதன்வழி நடந்தவர். அவரைக் குறை சொன்னவர்கள் உண்டு. அவர் யாரைப் பற்றியும் குறை சொன்னதே இல்லை. மாணிக்கவாசகரிடத்தும் தாயுமானவரிடத்தும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஆழ்வார்கள் நாயன்மார்கள் அருளிய பாடல்களைப் பலகால் ஓதி ஓதி உள்ளத்தைப் பண்படுத்திக்கொள்ள வேண்டும் என்றவர். ஆனால், திருத்தலங்களுக்குச் செல்வதிலோ, சமயச் சின்னங்களை அணிந்துகொள்வதிலோ விருப்பம் இல்லாதவர். தேசியத்தை மறவாத தமிழ்ப்பற்றும், இறைப்பற்றை இகழாத சீர்திருத்தமும், பிறர் மனதைக் காயப்படுத்தாத எழுத்தாற்றலும் அவருடைய சிறப்பு இயல்புகள்.

தம் புகழ்கேட்க நாணிய சான்றோர் அவர். முனைவர் பட்டம் பெற்றபோது, திருப்பத்தூரில் பாராட்டு விழா எடுக்க முயன்றனர். தாம் அப் பட்டம் பெற்றது "நான்காம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புக்குப் போவது போன்ற ஒரு செயல்தான்' என்று தெரிவித்து அதனைத் தவிர்த்தார். தமிழக அரசு இயல்தமிழ் விருது வழங்கியபோது அவரிடம் மாணவர்கள் கூட்டமாகச் சென்று பாராட்டு விழா எடுக்க இசைவு கேட்க, "இத்தனை பேர் வந்து பாராட்டியதே போதும், காலத்தை வீணாக்க வேண்டா' என்று கூறி மறுத்துவிட்டார். அவ்வாறே மணிவிழா எடுக்க மாணவர்கள் முயன்றபோதும் கண்டிப்போடு கடிதம் எழுதித் தடுத்துவிட்டார்.

அவர் தூய வாழ்வு வாழ்ந்த கொள்கைவாதி. வாழ்நாள் முழுவதும் வெந்நீர் பருகாதவர். ரஷியா சென்றிருந்தபோது குளிர் தாங்காமல் வாடினார். அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்தவர்கள் குளிரைத் தாங்க மது அருந்துமாறு வற்புறுத்தினார்கள். மறுத்துவிட்டார். தேநீர் அருந்துமாறு வேண்டினார்கள். வேண்டா என்று ஒதுக்கிவிட்டார். வெந்நீராவது பருகுங்கள் என்றார்கள். தாம் வெந்நீர் அருந்துவதில்லை என்று தம் கொள்கையைத் தெரிவித்தார். அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தபோது, ""எனக்கு உதவுவதாயின், இன்னும் ஒரு போர்வை கொடுங்கள்'' என்று கூறிப் பெற்று அதனைப் போர்த்திக்கொண்டு உறங்கினார். இந்தக் கொள்கை உறுதியோடு அவர் தம் வாழ்க்கை முடிவினை எதிர்கொண்டார். அவர் இயற்கை மருத்துவத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார். அதனால் தம் பிள்ளைகள் மூவரும் ஆங்கில மருத்துவம் பயின்றிருந்தும் அவர் அதனை ஏற்க மறுத்தார். அவர் அதனை ஏற்றிருந்தால் ஒருவேளை இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம் என்பது பலரது கருத்து.

அவர் கால்கள் எந்த அரசியல் தலைவர் வீட்டையும் நோக்கி நடந்ததில்லை. ஆனால், அவரை நாடி அவர் வீட்டுக்கு எல்லாக் கட்சித் தலைவர்களும் வந்தார்கள். அவர் பெரும்பதவிகளை நாடிச் செல்லவில்லை. பதவிகளே அவரை நாடி வந்தன. அவர் இறுதிச் சடங்கில் காமராஜர், அன்பழகன், எம்.ஜி.ஆர். போன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர் என்பதே அவர் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட அறிஞர் என்பதனைக் காட்டும்.

வேண்டாதான் தன்னையே தான் வேண்டும் செல்வம்போல் புகழையும் கொண்டாட்டத்தையும் வேண்டாத அவரை நாடிப் புகழ் குவிந்தது. உலகம் நூற்றாண்டு விழாக் கொண்டாடி அவரை நினைவுகூர்கிறது. இராமன் சொல்லையும் மீறி அவனுக்குத் தொண்டு செய்த இலக்குவன் செயல் அவன் அண்ணன்மீது கொண்ட அளவற்ற அன்பினைக் காட்டுவதுபோல், மு.வ.வின் கருத்துக்கு மாறாக எடுக்கப்படும் இந்த விழாக்கள் தங்கள் ஆசிரியர்மீது மாணவர்கள் கொண்ட அளவற்ற அன்பினை வெளிப்படுத்துகின்றன. அகல் விளக்கு எழுதிய மு.வ.வும் ஓர் அகல்விளக்கே. அன்பே தகளியாக ஆர்வமே நெய்யாக உழைப்பே திரியாக ஒளி தந்த விளக்கு அது. அதன் ஒளி எங்கும் பரவட்டும்.


 
(இன்று மு.வ. நூற்றாண்டு நிறைவு தினம்)

- தெ.ஞானசுந்தரம் 

.
 நன்றி: தினமணி (25.04.2012)

காண்க: தமிழ் வளர்த்த பேராசிரியர்  


.


6.4.12

சக்கரவர்த்தியின் மனைவி


 அலர்மேலு மங்கம்மாள் (எ) திருமதி மங்கா ராஜாஜி
(1887 – 1916)


பெங்களூரில் இருந்து மெட்ராஸ் போகிற வழியில் சித்தூர் மாவட்டத்தில் குப்பம் என்கிற ஊர் ஒன்று இருக்கிறது. இப்போதும் ரயிலில் பிரயாணம் செய்யும் போது இந்த ஊரில் சில வினாடிகள் ரயில் நின்று விட்டுச்  செல்லும் போது பார்க்கலாம். இந்த ஊருக்கு அருகே உள்ள லட்சுமிபுரம் என்கிற கிராமத்தில் பிறந்தவள் அவள். பெயர் அலர்மேலு மங்கம்மாள் (1887 – 1916). சுருக்கமாக அலமேலு என்றோ மங்கா என்றோ அழைப்பார்கள். பெயரும் ஊரும் லட்சுமிகரமாக இருந்தாலும் அவள் பிறந்த குடும்பம் என்னவோ ஏழைக் குடும்பம்.

ங்காவின் தந்தையார் திருமலை சம்பங்கி அய்யங்கார் ஊர் ஊராகச் சென்று ஹரி கதைகள் சொல்லுபவர். இப்படிப் பட்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்த மங்கா தான் ராஜாஜி என்று நாடே புகழும் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் அவர்களின் மனைவி....

ராஜாஜியின் சகதர்மிணியும் அவரது நிழலுமான திருமதி மங்காவின் வாழ்க்கை குறித்த அறியப்படாத தகவல்களைக் கூறுகிறது தமிழ்  ஹிந்துவில் வெளியான இக்கட்டுரை.  



இதையும் காண்க:

ராஜாஜி 

.