நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

5.11.20

முருகா எனும் நாமம்!

-திருமுருக கிருபானந்த வாரியார் 



“ஊரிலான் குணங் குறியிலான் செயலின் உரைக்கும்
பேரிலான் ஒரு முன்னிலான் பின்னிலான் பிறிதோர்
சாரிலான் வரல் போக்கிலான் மேலிலான் தனக்கு
நேரிலான் உயிர்க் கடவுளாய் என்னுளே நின்றான்” 

என்பது கந்த புராணத் திருவாக்கு. இறைவனுக்கு ஊர், குணம், அடையாளம், செயல் பேர், காலம், பற்றுக்கோடு, போக்கு, வரவு, உயர்வு, ஒப்பு முதலிய ஒன்றும் இல்லை. 

பேரும் ஊரும் இல்லாத பெருமான் ஆன்மாக்களின் பொருட்டு – ஆன்மாக்களுக்கு அருள் செய்யும் பொருட்டு பேரும் உருவும் தாங்கி வருகின்றான். 

இத்திருவருளின் இயல்பை உள்ளவாறு உணராத புலவர்கள் இறைவனுக்கு நாம ரூபம் நம்மால் கற்பிக்கப்பட்டன என்பார்கள். 

மூவாண்டுடைய சீகாழிப்பிள்ளையார் அழுதலும் அவருடைய பண்டைத் தவ வலிமையால் இறைவன் திருவுருவுடன் காட்சி தருகின்றான். வெள்ளை விடையும், பவளமலை போன்ற திருவுருவும், அருகில் மரகதக் கொடி போன்ற அம்பிகையும், பிறையணிந்த திருமுடியும், மான்மழு ஏந்திய திருக்கரங்களும், நீல கண்டமும், தோடணிந்த தாழ்செவியும், கருணை பொழியும் மலர்க் கண்களும், நீறணிந்த திருமேனியுங் கண்டு, அச்சிறியபெருந்தகையார் “தோடுடைய செவியன்” என்று பாடுகின்றார். அத்திருமேனியை மூவாண்டுக் குழந்தை கற்பனை புரியவில்லை. கண்ட காட்சியைக் கழறுகின்றது. 

சூரபன்மனுக்குச் சிங்கமுகன் கூறுகின்ற அறவுரையை கந்த புராணத்தில் காண்க: 

வாலிதா மதிச் சடிலமும் பவளமால் வரையே
போலு மேனியும் முக்கணும் நாற்பெரும் புயமும்
நீல மாமணிக் கண்டமும் கொண்டு நின்றனனால்
மூலகாரணம் இல்லதோர் பராபர முதல்வன்
தன்னை நேரிலாப் பரம் பொருள் தனியுருக்கொண்ட
தென்ன காரணம் என்றியேல் ஐந்தொழில் இயற்றி
முன்னை ஆருயிர்ப் பாசங்கள் முழுவதும் அகற்றிப்
பின்னை வீடுபேறருளுவான் நினைந்த பேரருளே.


இவ்வண்ணம் சிவமூர்த்தி ஆன்மாக்களின் நலன் கருதி எடுத்துக்கொண்ட திருவுருவங்கள் பல. அவற்றுள் மிகவும் தொன்மையானது ஆறுமுக வடிவம்.
“அந்திக்கு நிகழ்மெய்யண்ணல் அருள் புரிந்தறிஞராயோர்
சிந்திக்குந் தனது தொல்லைத் திருமுகம் ஆறுங்கொண்டான்”

-கந்தபுராணம். 

“பழைய வடிவாகிய வேலா”
-திருப்புகழ். 

தேவர்கள் துயர்தீர்க்கும் பொருட்டு, வடிவும் வண்ணமும் இல்லாத முடிவிலாப் பரம்பொருள், மூவிரு முகங்களும், ஆறிருபுயங்களும், மூவாறு நயனங்களும் அமைந்த திருமேனி கொண்டு அருள்புரிந்தார். 

“அருவமும் உருவும் ஆகி அனாதியாப் பலவாய் ஒன்றாய்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக்
கருணைகூர் முகங்களாறும் கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே
ஒரு திரு முருகன் வந்தாங் குதித்தனன் உலகம் உய்ய”


எம்பிரான் சரவணப் பொய்கையில் இத்திருமேனி கொண்டு உதிக்கு முன்னரேயே முருகன் என்ற திருநாமத்தை uடையவன் என்பதை
இப்பாடலால் அறிக. 

முருகன் வந்து உதித்தான்! 

“சாத்தான் வந்தான்” என்றால், வந்தது பின்னர், சாத்தான் என்ற பெயர் முன்னர் என்பது விளங்குந்தானே. மிகப் பழமையான் திருநாமம் முருகன் என்பது. முருகனுடைய திருநாமங்கட்கெல்லாம் சிவபெருமான் உமாதேவியிடம் காரணங்கள் கூறுகின்றார். “இன்ன காரணத்தால் இன்ன பெயர் அமைந்தது” என்று கூறுகின்றார். 

“ஆறுமுகங் கொண்டதால் சண்முகன்”
“கங்கையில் தவழ்ந்ததால் காங்கேயன்”
“கார்த்திகை மாதர் வளர்த்தனால் கார்த்திகேயன்”
“ஆறு திருவுருவும் ஒன்று கூடியதனால் கந்தன்”
“மயிலை வாகனமாக உடையவனாதலால் விசாகன்” 

இன்ன காரணத்தால் முருகன் என்ற நாமம் அமைந்தது என்று அந்த வரிசையில் கூறவில்லை. இதனால் அத்துணைத் தொன்மை வாய்ந்த திருநாமம் முருகன் என்பதைத் தெற்றென உணர்க. 

எம்மொழிக்கும் முதல்வனான முருகன் செம்மொழியான தமிழுக்குச் சிறப்புடைத் தலைவன் ஆவான். தமிழில் மூன்று இனம் உண்டு.

அவை வல்லினம், மெல்லினம், இடையினம் எனப்படும். இவற்றுள் மெல்லினம் மென்மையும், இனிமையும் உடையது. ஆதலால்-  மெல்லினத்தில் ஒரு எழுத்து ‘மு’இடையினத்தில் ஒரு எழுத்து ‘ரு’வல்லினத்தில் ஒரு எழுத்து ‘கு”’
-என ‘முருகு’ என்று மூவினத்தில் மூவெழுத்தைக்கொண்டு எந்தை கந்த வேளின் திருநாமம் அமைந்துளது. 

ஆண்டவன் ஆறு ஆகாரங்கட்கும் ஆறு சமயங்கட்கும் ஆறு அத்துவாக்களுக்கும், ஆறுபடை வீடுகட்கும் அதிபன். 

“முருகா” என்ற பெயரும் ஆறு பொருள்களைக் கொண்டது. தெய்வத்தன்மை, அழகு, இளமை, மகிழ்ச்சி, மணம், இனிமை என்ற ஆறு தன்மைகளையும் உடைய சொல் “முருகு”. 

“முருகுகள் இளமை நாற்றம்
முருகவேள் விழா வனப்பாம்” 

-என்று பிங்கள நிகண்டு கூறுகின்றது. 
 
இதனைப் புலப்படுத்தவே அருணகிரிநாதர், 

“மெய்மைகுன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்”

-என்று கூறுகின்றார். இப்பாடலில் முருகா என்பது ஒருமை. நாமங்கள் என்பது பன்மை. பல நாமங்களின் பொருள்களையுடையது “முருகா” என்ற நாமம் என்பதை இப்படி உணர்த்துகின்றார். 

இறைவன் பல்லாயிரம் நாமங்கள் கொண்டவன். அவற்றுள் சிறந்த நாமம் மூன்று – முருகன், குமரன், குகன் என்பவை. இம்மூன்றனுள்ளும் மிகச்சிறந்தது முருகன் என்ற நாமம். 

“முருகன் குமரன் குகன் என்று மொழிந்
துருகுஞ் செயல் தந்துணர் வென்றருள்வாய்” 

-என்று கந்தரநுபூதியில் கூறுகின்றார். 

உலகமெல்லாம் அஞ்சுகின்ற முகமாகிய கூற்றுவனுடைய கோர்முகந் தோன்றுகின்றபோது “முருகா” என்றால் அப்பனுடைய் ஈரமுகம்
ஆறுந்தோன்றும். 

அக்கூற்றுவனுக்கும் நமக்கும் ஒருவேளை போர் நிகழுமாயின் அப்போது “முருகா” என்று ஓதினால் அஞ்சேல் என அவனுடைய அயில்வேல் தோன்றும்.
ஒருகால் “முருகா” என நினைத்தாலும் போதும், அக்கருணாமூர்த்தியின் இருகாலும் தோன்றும். 

“முருகா முருகா” என்று ஓதினால் போதும். “முருகா” என்று கூறக் கூடாது; ஓத வேண்டும். கூறுவது வேறு; ஓதுவது வேறு. கூறுவது – வாக்கு மட்டும் தொழில் படுவது. ஓதுவது – உணர்வுடன் காதலாகி உள்ளங் கசிந்து கண்ணீர் மல்குவது.

“காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார்”
 
– ஞானசம்பந்தர். 

“அஞ்சு முகந்தோன்றில் ஆறுமுகந் தோன்றும்
வெஞ்சமரந் தோன்றில் வேல் தோன்றும்- நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலுந் தோன்றும்
முருகா என்றோதுவார் முன்” 

‘ஓம்’ என்ற பிரணவ எழுத்து ‘அ- உ- ம்’ என்ற மூன்று எழுத்துக்களின் சம்மேளனம். ‘அ’கரத்தில் தொடங்கி, ‘உ’கரத்தில் மடங்கி
‘ம’கரத்திலே ஒடுங்குகின்றது. 

அ – சிருஷ்டிக்கின்றது
உ – இரட்சிக்கின்றது
ம – சம்மரிக்கின்றது
(சம்ஹாரம் = ஒடுக்கம்) 

இந்த மூன்றில் சிருஷ்டி எழுத்தை பார்க்கிலும், சம்மார எழுத்தாகிய மகரத்தைப் பார்க்கிலும், ரக்ஷக எழுத்தாகிய உகரந்தான் உயர்ந்தது.
நாம் கடவுளை நோக்கி, “என்னை உண்டாக்குவாய். என்னை ஒடுக்கிக் கொள்வாய்” என்றா வேண்டுகின்றோம்? இல்லை; “இறைவனே என்னைக் காப்பாற்று” என்றுதானே வேண்டுகின்றோம்? 

எனவே காத்தலுக்கு உரிய எழுத்தாகிய உகரத்தையே பெரிதாகக் கொள்ள வேண்டும். 

குகையில் கற்முகி என்ற பூதத்தால் அடைப்பட்ட ஆயிரம் பேரையும் காப்பாற்று என்று பாடிய நக்கீரர், ரட்சக எழுத்தாகிய உகரத்தை முதலில் அமைத்து ‘உலகம் உவப்ப வலனேர்பு திரி தரு’ என்று தொடங்கினார். 

தனியடியார் அறுபத்து மூவர்களையும், தொகையடியார் ஒன்பதின்மார்களையும், சிவபெருமான் காத்தருளிய வரலாற்றைக் கூற வந்த கம்பநாடரும் உகரத்தை முதலில் அமைத்தே ‘உலகம் யாவையும் தாமுள வாக்கலும்’ என்று ஆரம்பிக்கின்றார். 

அ-உ-ம என்ற மூன்றில் ரக்ஷக எழுத்தை முதலில் வைத்துச் சொன்னால், உமஅ = உமா என்று ஆகின்றது. இது அம்பிகையினுடைய உயர்ந்த திருநாமம்.
இது காறும் கூறியவாற்றால் ஒருவாறு உகரத்தின் பெருமையை உணர்ந்திருப்பீர்கள். 

இனி முருகு என்ற திருநாமத்தைச் சிந்தியுங்கள்.
மகர மெய்யில் உகர உயிர் ஏறி ‘மு’
ரகர மெய்யில் உகர உயிர் ஏறி ‘ரு’
ககர மெய்யில் உகர உயிர் ஏறி ‘கு’ 

“முருகு” என்ற மூன்றெழுத்துக்களிலும் காத்தற்குரிய உகரமே ஊடுருவி நின்று இம்முருக மந்திரமே அகில உலகங்களை காத்தருளும் திருநாமம் என உணர்த்துகின்றது. 

இப்படி மூன்று உகர உயிர் அமைந்த வேறு மந்திரம் இல்லை என்பதும் ஒரு தலை. ஆதலால் முருகா என்று ஓதுவார் மும்மை நலங்களும் பெற்று உயர்வு பெறுவார்கள். 

ஒரு மன்னன் வேட்டையாடினான். விலங்கின் மீது விடுத்த கணை குறி தவறி ஒரு அந்தண முனிவரைக் கொன்றுவிட்டது. அதனால் பிரம்ம அத்தி தொடரப் பெற்ற மன்னன் பெருந்துயர் உழந்தான். இடர்களையும் சாதனத்தை நாடி கங்கைக் கரைக்கு வந்தான். கங்காநதி தீரத்தில் ஒரு மாதவ முனிவர் சிறந்த தவத்தில் இருந்தார். அரசன் அவரிடம் போனான். 

அரசன் வந்த சமயத்தில் ஆஸ்ரமத்தில் அருந்தவர் இல்லை. மாதவருடைய மைந்தன் இருந்தான். அச்சிறுவன் அரசனை வரவேற்று, “வேந்தே! எங்கு வந்தாய்? உனக்கு என்ன வேண்டும்?” என்று வினாவினான். 

“குழந்தாய், உன் பிதா எங்கே?” 

“அரசே! அவர் வெளியே சென்றிருக்கின்றார். நின் மனதில் என்ன குறை? உன் வாட்டத்திற்குரிய காரணத்தைக் கூறு”. 

“குழந்தாய்! நான் அபுத்தி பூர்வமாக் ஒரு முனிவரைக் கொன்றுவிட்டேன். பிரமகத்தி என்னைத் தொடர்ந்து வருத்துகின்றது. அது தீரும் சாதனத்தைக் கேட்க வந்தேன்”. 

“இவ்வளவு தானே? இதற்கென்ன பெரிய ஆலோசனை? நான் சொன்னபடி கேள். பிரமகத்தி தீரும். கங்கையில் நீராடு; வடதிசை நோக்கி நில்; முருகவேளை மனக் கண்ணால் கண்டு, காதலாகிக் கசிந்து, கண்ணீர் மல்கி, மூன்று முறை ‘முருகா’ ‘முருகா’ முருகா’ என்று ஓது. பிரமகத்தி நீங்கும்” என்று அம்மைந்தன் கூறினான். 

மன்னவன் அதுபடி ஓதி பிரமகத்தி நீங்கப் பெற்றான். முனி மகனை வணங்கி மகிழ்ச்சியுடன் சென்றான். 

பின்னர் முனிவர் பெருமான் வந்தார். தேரின் சக்கரங்கள் வந்துசென்ற சுவட்டினைக் கண்டார். 

“மகனே! இங்கே யார் வந்தது?” 

“அப்பா! இந்நாட்டினை ஆளும் வேந்தர் வந்தார்”.

“கண்ணே, எதன் பொருட்டு வந்தார்?” 

“தந்தையே! பிரமகத்தி தீர வழி கேட்டார். அதற்கு நான் நீராடி உள்ளம் உருகி மும்முறை முருக மந்திரத்தைக் கூறுமாறு உபதேசித்தேன். அவ்வண்ணமே செய்து அனுகூலம் அடைந்து அவர் அகன்றார்”. 

இதனைக் கேட்ட முனிவருக்கு விழி சிவந்தது. “மூடனே! நீ என் மகனா? என்ன காரியஞ் செய்தாய்? ஏன் உனக்கு இந்த மந்த புத்தி? உனக்கு ஒருசிறிதும் முருக பக்தியில்லையே. பெருந் தவறு செய்துவிட்டாயே” என்று கூறிக் கடிந்தார்.
 
அம்மைந்தன் நடுநடுங்கினான். தந்தையின் தாள் மலர்மீது பலகாலும் வீழ்ந்து பணிந்தான். “அப்பா! நான் என்ன பிழை செய்தேன்? நம் குலதெய்வம் குமாரக் கடவுளின் திருமந்திரத்தைத் தானே ஓதச் சொன்னேன்?” 

“மகனே, ஒரு முறை ‘முருகா’ என்றால் கோடி பிரமகத்திகள் தீருமே? நீ மூன்று முறை சொல்லச் சொன்னாயே. நீ முருக நாமத்தின் பெருமையையும் நன்மையையும் நன்கு உணரவில்லை. மூன்று முறை சொன்னால்தான் பிரமகத்தி நீங்குமா? அம்மந்திரத்தின் ஆற்றலை அறிந்தாயில்லை. இதனால் நீ வேடர் குலத்தில் பிறப்பாயாக” என மகனை அவர் சபித்தார். 

மகன் பதைபதைத்துப் பணிந்து பிழை பொறுக்குமாறு வேண்டினான்.
முனிவர் கருணைபுரிந்து, “மகனே! அஞ்சற்க. நீ இதே கங்கா தீரத்தில் வேடர்கட்கு அரசனாக பிறப்பாய். முருகன் நாமங்களில் ஒன்றாகிய ‘குகன்’ என்ற பெயரைத் தாங்கி, அன்புருவாக நிற்பாய். ஸ்ரீராமருக்கு நண்பனாய் வாழ்ந்து முடிவில் முருகபதம் பெருவாய்” என்று அருள் புரிந்தார். 

அம்முனிவர் மகன் குகனாகப் பிறந்தான். உத்தமனாக நின்று ஸ்ரீ ராமபிரானுடைய நட்பைப் பெற்று, இறுதியில் கந்தலோகம் பெற்றான்.
ஆதலால், ‘முருகா’ என்ற திருமந்திரம் சகல வினைகளையும் போக்கும்.
‘முருகா’ என்று ஒருமுறை கூறியவுடன் முருகம்மையாருக்கு கணவன் வெட்டிய கரமலர் வளர்ந்தது. 

“முருகா எனவோர் தரமோதடியார்
முடிமேல் இணைதாள் அருள்வோனே” 

என்று அருணகிரிநாதர் பாடி இதன் பெருமையை உணர்த்துகின்றார். 

“முருகா எனவுனை ஓதுந்தவத்தினர் மூதுலகில்
அருகாத செல்வம் அடைவர், வியாதியடைந்து நையார்
ஒருகாலமுந் துன்பம் எய்தார், பரக்தி உற்றிடுவார்
பொருகாலன் நாடுபுகார் சமராபுரிப் புண்ணியனே” 

-என்று சிதம்பர சுவாமிகள் ‘திருப்போரூர்ச் சந்நிதி’ முறையில் பாடியிருக்கின்றார். 

ஆதலால் கண்கண்ட தெய்வமாம் கலியுகவரதன் என்னப்பன், மூவர் தேவர் தொழும் முழுமுதற் கடவுளின் திருவடியைச் சிந்தித்து, வந்தித்து, முருகா என்ற இனிய கனியமுதம் அன்ன நாமத்தை உள்ளம் உருகி, ஓதி, அன்பர்கள் பெற்ற பிறவியின் பயனைப் பெற்று, இனிப் பிறவாப் பெற்றியைப் பெறுவார்களாக!
முருகா! முருகா!! முருகா!


குறிப்பு: 

 


மறைந்த பூஜ்யஸ்ரீ திருமுருக கிருபானந்த வாரியார், தமிழகத்தில் நாத்திகப் பிரசாரம் உச்சத்திலிருந்த தருணத்தில் அதை வென்ற ஆன்மிகப் பேரருளாளர். தற்போதைய காலச்சூழலை முன்னிட்டு இக்கட்டுரை இங்கு வெளியாகியுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக