நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

23.7.14

இப்படியும் இருந்தார்கள்...

 
கோபிநாத் பர்தோலாய் (06.06.1890 - 05.08.1950)

ஆகஸ்ட் 5, 1950. அப்போது பிரிக்கப்படாத அசாம் மாநில முதல்வர் கோபிநாத் பர்தோலாய் 60-ம் வயதில் திடீரென உயிர் நீத்தார். மாநில ஆளுநர் ஜயராம்தாஸ் தௌலத்ராம் துக்கம் விசாரிக்க அவரது வீட்டிற்குச் சென்றார்.

கட்டிட வேலைகள் பாதியிலேயே நிற்கின்ற வீடு. பர்தோலாய்க்கு ஐந்து மகள்கள். நான்கு மகன்கள். மூத்த இரு மகள்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது. மீதமுள்ள மகள்களும் கடைசி மகனைத் தவிர மற்ற மகன்களும் பள்ளிக்கும் கல்லூரிக்கும் சென்றுகொண்டிருந்தார்கள். கடைசி மகன் இனிமேல்தான் பள்ளிக்குச் செல்ல வேண்டும். ஒரு விதவைத் தங்கையும் மற்ற மூன்று சகோதரர்களும் ஒன்றாக வசிக்கும் கூட்டுக் குடும்பம். பர்தோலாய் இறக்கும்போது அவரிடம் எந்தவிதச் சேமிப்பும் இல்லை. துக்கம் விசாரிக்க வந்த ஆளுநர் மெதுவாகத் துக்கத்தில் ஆழ்ந்திருந்த சகோதரர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்ட தகவல் இது. அவரது இறுதிச் சடங்குகளுக்குக்கூடப் போதிய பணம் இல்லாத நிலை.