நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

20.5.14

திருநாவுக்கரசர் காட்டும் வாழ்வியல் நெறி


- முனைவர் மா.சற்குணம்

 
தமிழ்நாட்டு வரலாற்றில் பல்வேறு காலங்களில் மக்கள் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய வாழ்வியல் நெறிகளை தம் வார்த்தைகளால் மட்டுமன்றி வாழ்வாலும் உணர்த்திச் சென்ற சான்றோர் சிலருள், சமயக்குரவர் நால்வருள் ஒருவராகிய திருநாவுக்கரசரும் ஒருவர்..

மனம் என்பது ஒரு நிலையில் நிற்காமல் எப்போதும் அலைபாய்ந்துகொண்டே இருக்கக் கூடியது. செய்தற்கு அரியவற்றையெல்லாம்கூட செய்து விடலாம். ஆனால் மனத்தை அடக்கிச் சும்மாயிருக்கும் திறம் அரிது என்கிறார் தாயுமானவர். இறையுணர்வு வாய்க்கப் பெற்றவர்கள்  தம் மனத்தை அடக்கக் கற்றுக் கொள்கிறார்கள்.

தனிமனிதர் ஒவ்வொருவரும் இறைநம்பிக்கையில் ஆகட்டும், வேறு வாழ்வியல் நடைமுறைகளில் ஆகட்டும் மன உறுதி உடையவர்களாகத் திகழ்தல் வேண்டும் அப்போதுதான் இன்பம் வந்தாலும், துன்பம் வந்தாலும் இரண்டையும் சரிசமமாகப் பார்க்கும் பழக்கம் ஏற்படும்

உலகியல் இன்பங்களிலும், ஆசைகளிலும் செல்லும் மனத்தை அவற்றின்பால் செல்லாமல் அடக்குதல் என்பது வேறு, மனத்தை ஏதோ ஒன்றன்பால் உறுதியாக வைத்துக் கொள்ளுதல் என்பது வேறு.      மனவுறுதி உடையவர்கள் இயற்கையாகவோ, அன்றிச் செயற்கையாகவோ துன்பங்கள் வருகிறபோது அவற்றைத் துணிச்சலுடன் எதிர்கொள்கின்றனர். இதனை மருள்நீக்கியார், 

மண்பாதலம் புக்கு மால்கடல் மூடி மற்றே ழுலகும்
விண்பால் திசைகெட்டு இருசுடர் வீழினும் அஞ்சல் நெஞ்சே

என நான்காம் திருமுறையில் நவில்கிறார்.

சூலைநோய்க்கு ஆட்பட்டு தமக்கையாரால் தம் சமய வாழ்வில் மாற்றத்திற்கு உள்ளான நிலையில் இருந்த திருநாவுக்கரசரை, பல்லவ  அரசர் அழைத்த போதும், மனவுறுதி உடையவராய்
           
நாமார்க்கும் குடியல்லோம்,நமனையஞ்சோம்
நரகத்தில்  இடர்ப்படோம் நடலை யல்லோம்

எனத் துணிச்சலாகத் தம் கருத்தினை வெளிப்படுத்துகிறார்..

எந்த ஒரு செயலைச் செய்வதற்கும் முன்பாகவே, இதனை நாம் செய்ய வேண்டுமா, செய்ய இயலுமா என நன்கு யோசித்துத் தொடங்க வேண்டும். செய்யத் தொடங்கியபின் யோசிப்பதோ, தளர்ச்சியுறுவதோ கூடாது.  

அந்தவகையில் திருநாவுக்கரசர் திருக்கயிலாயம் சென்று காண்பதற்காகப் புறப்பட்டுச் செல்கிறார். கால்நடையாகவே வழியில் உள்ள திருத்தலங்களை வணங்கியவாறு காளத்திக்குச் செல்கிறார். பின்பு அங்கிருந்து பயணித்து ஒருவாறு கயிலாயத்தின் அடிப்பகுதியை அடைந்தார். இறைவன் இருக்குமிட்த்தைக் கால்களால் நடக்கவொண்ணாதென்று தம் கைகளால் ஊர்ந்தும், மார்பினால் தவழ்ந்தும் செல்கிறார். உடல் முழுவதும் புண்ணானபோதும் தம்சிந்தை சிறிதும் கலங்காமல் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.  

அப்போது முதிய அந்தண வடிவத்துடன் இறைவன் அவர் எதிரில் தோன்றி கயிலையைச் சென்று காண்பது அரிது என்கிறார். அதற்கு நெஞ்சுறுதி தளராத நாவுக்கரசர்,

ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டல்லால்
மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்        

என விடைபகர்ந்தார். தளராத நெஞ்சுறுதியுடன் அவர் இருப்பதைக் கண்ட இறைவன் மகிழ்ந்து, அவரை அங்கிருந்த குளத்து நீரில் மூழ்கச் செய்து, பின் திருவைஆற்றில் காட்சி கொடுத்து அருளினார்

எத்தகு நிலையிலும் முன்வைத்த காலைப் பின்வாங்காமல்  தாம் ஈடுபடும் செயல்களில்  நெஞ்சுறுதியோடு செயல்படுவோர் அவற்றில் வாகை சூடுவர் என்பதைத் திருநாவுக்கரசர் காட்டும் வாழ்வியல் நெறியாகக் கொள்ளலாம்.


குறிப்பு: முனைவர் திரு. மா.சற்குணம் மயிலம் தமிழ்க் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராகவும், கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியவர். பல நூல்களை எழுதியுள்ளார்.
 .