நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

19.11.11

பூ ஒன்று புயலானது!


ஜான்சி ராணி லட்சுமிபாய்

(பிறப்பு: நவ. 19)
“இந்தப் பூமி இறைவனுக்குச் சொந்தம்; இந்த நாடு சக்கரவர்த்திக்குச் சொந்தம்; இந்த ராஜ்யம் ராணி லட்சுமிபாயின் அதிகாரத்துக்கு உட்பட்டது” என்று பிரகடனம் செய்தார்கள் தேசிய வீரர்கள்.
தேசிய சிந்தனையால் எழுந்த சுதந்திரப் போராட்டமான 1857ல் புரட்சிக் கனல் தெறித்தது; பாரத மக்களின் வீர உணர்வு சிலிர்த்தது.
மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரரான வீர சாவர்க்கர் தனது எரிமலை (அ) முதலாவது இந்திய சுதந்திர யுத்தத்தில் ஜான்சி ராணி லட்சுமிபாயை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்:
“உண்மை சரித்திராசிரியர்களே! தேச பக்தர்களே! உங்களுடைய வீர சங்குகளை வானளாவ முழக்குங்கள்! ஏனெனில், மிகக் கீர்த்தி வாய்ந்த இரண்டு வீரர்கள் சரித்திர மேடைக்கு வருகின்றனர். அதிருப்தி, அமைதி-யின்மை என்னும் கருமேகங்களால் பரத கண்டம் முழுவ-தும் இருண்டு கிடந்த சமயத்-தில் இந்தியா முழுவதும் மங்காத நட்சத்திரங்களாக ஒளி வீசத் திகழ்ந்தவர்கள் அந்த இருவரும் தாம். அவர்கள் பாரத அன்னை-யின் ஆரத்தில் இணையற்றுப் பிரகாசிக்கும் ஆழி முத்துக்கள்; இந்தியாவிற்காகத் தங்கள் உயிர்களையும், அர்ப்பணம் செய்த உத்தமர்கள்.
சிவாஜி போன்ற வீர திலகங்களை உற்பத்தி செய்யும் இந்துஸ்தான் ஊற்று வற்றி விடவில்லை என்பதை உலகம் அறியக் காட்டியவர்கள். பரதக் கண்டத்தின் சரித்திரத்தில் கலங்கரை விளக்கமாக விளங்கும் சீலர்கள்; தர்ம யுத்தத்தில் வாள் ஏந்தி, தோல்வியிலும் பெருமை குன்றாத பாரத திலகங்கள்; இவர்கள் தாம் நானாசாஹிப் பேஷ்வாவும், வீர தீர ரமணியான ராணி லட்சுமி பாயும்.”
மக்களின் விருப்பத்தின்படி ஜான்சியின் சிம்மா-சனத்தை அலங்கரித்த லட்சுமிபாய் தனது 11 மாத கால ஆட்சியில் - ஆம், வெறும் 11 மாதம் தான் அரசாட்சியில் வீற்றிருந்த ஜான்சிராணி ஜனங்களின் மனங்கவர்ந்த ராணியாகவே விளங்கினாள்.
எல்லாத் துறைகளிலும் சிறந்த நிர்வாகிகளை நியமித்தாள். கடுமையான சட்டங்கள் மூலம் மக்களின் மனத்தில் அச்சத்தைப் போக்கினாள். கோயில்களுக்கான மானியங்கள் மீண்டும் வழங்கப்பட்டன. மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களது குறைகளைப் போக்கினாள். மிகப்பெரிய நூலகத்தை கட்டிய ஜான்சிராணி, பல மொழிகளிலுள்ள நூல்களை மொழி-பெயர்க்க வழி செய்தாள். மொத்தத்தில் ஜான்சியை ஆண்ட மன்னர்களை விட - மங்கையர்க்கரசியாய் விளங்கினாள் லட்சுமிபாய்.
1858, பிப்ரவரி  22ஆம் தேதி, ஆங்கிலேய ஜெனரல் ஷியூ ரோஸின் வெள்ளைப்படைகள் ஜான்சியின் மீதான முற்றுகைப் போரை துவக்கின. வெறித்தாக்குத-லுடன் ஜான்சி கோட்டையின் மதில்களைச் சிதைக்க முயன்றார்கள்.
உயர்ந்த மலைப்பாதைகளுக்கு மேல் கருங்கற்களால் கட்டப்பட்ட 10 அடி அகலமும், 20 அடி உயரமும் கொண்ட ஜான்சி கோட்டையை லட்சுமிபாய், மேலும் பலப்படுத்தி யுத்தத்திற்கான வசதிகளுடன் நிர்மாணித்திருந்தாள். காவல், பீரங்கி அறைகள் உட்பட.....
ஜான்சியின் படைபலம் குறைவு. எனினும் சுதந்திர வேட்கையுடன், வீறு கொண்டு ஆவேசத்துடன் ஜான்சி வீரர்கள் வெள்ளைச் சிப்பாய்களை எதிர்த்தனர்.
“மேரா  ஜான்சி நஹீன் டெங்கே!”
(என் ஜான்சியை நான் ஒருபோதும் விட்டுத் தர மாட்டேன்)
ஆங்கிலேயர்கள் ஆண்மையுள்ளவர்களாக இருந்தால் என் வாளுக்குப் பதில் சொல்லட்டும் என அறைகூவல் விடுத்தாள். படை முழுவதற்கும் பொறுப்-பேற்று, தலைமை வகித்து, தாக்குதல், வியூகங்கள் போன்றவற்றை மேற்பார்வையிட்டாள். ஒவ்வொரு வீரனிடமும் சென்று உற்சாகப்படுத்தினாள்; உத்வேகமூட்டினாள்.
இருபதே வயதான லட்சுமிபாய், ஆணுடை தரித்து, வளர்ப்பு மகன் தாமோதரனை முதுகில் வைத்துக் கட்டிக் கொண்டு குதிரையில் வீற்றிருந்து வீரச்சமர் புரிந்த அவள் ஆங்கிலேயருக்கு பெண்புலியாய் தென்பட்டாள்.
அவளது வாள் வீச்சில் பறங்கியர்களின் தலைகள் பனங்காய்களாய் பந்தாடப்பட்டன;  ஆவேசத்துடனும், ஆத்திரத்துடனும் தன்னை நெருங்கிய படைத்தளபதி பௌகரை தனது வாளால் வீழ்த்தினாள். மிரண்டு போய் நின்றனர் ஆங்கிலேயர்கள்.
தேசபக்தர்களின் பீரங்கிகள் வாயடைத்துப் போயின. முக்கியப் படைப்பிரிவு சிதறுண்டது. வெள்ளையர்கள், நான்கு புறமும் சூழ்ந்து கொண்டு தாக்கினர்.
அந்த நிலையிலும், லட்சுமிபாய் தம்முடன் இருந்த 20 குதிரை வீரர்களுடன், தோழிகளுடன் பகைவர்களைப் பிளந்து கொண்டு, மற்றொரு புறத்தில் இருந்த தம் சகாக்கள் இருக்கும் இடத்துக்குப் போய் சேர முயன்றார். தன் தோழி மந்தரையைக் கொன்ற ஆங்கிலச் சிப்பாயை ஒரு வீச்சில் வெட்டிச் சாய்த்தார். அதே சமயம் அவருடைய முகத்தில் ஒரு குண்டு பாய்ந்தது.
தம் இரு புறத்திலும் வந்து கொண்டிருந்த தோழிகளையும், ராமச்சந்திர ராவ், ரகுநாத சிங் முதலிய மெய்க் காவலர்களையும் நோக்கி, “யுத்த களத்தில் நான் வீழ்ந்தால், என் உடலை வெள்ளையர்கள் தீண்டாமல் பாதுகாக்க வேண்டியது உங்களுடைய கடமை. உங்களிடம் கடைசியாக, நான் எதிர்பார்க்கும் உதவியும் அதுதான்” என்றாள்.
தாம் பட்ட காயத்தையும் லட்சியம் செய்யாமல் பகைவர்களை வீழ்த்தியபடி முன்னேறிக் கொண்டிருக்கையில் வழியே ஒரு கால்வாய். துரதிருஷ்டவசமாய், புதிய குதிரையால் கால்வாயைத் தாண்ட முடியவில்லை. சூழ்ந்து கொண்டனர் ஆங்கிலேயர்கள்.
ஆங்கிலேயன் ஒருவன் தன் கத்தியால் வெட்டியதால், லட்சுமிபாயின் தலையின் வலதுபுறம் சிதைந்தது; ரத்தவெள்ளம். வலது கண் அதிர்ச்சியால் தெறித்தது. மற்றொருவன் மார்பில் வெட்ட மகாராணி, வீரமங்கை படுகாயம் அடைந்தாள். இருவரையும் ஒரே மூச்சில் வெட்டில் வீழ்த்தினாள்.
ராமச்சந்திர ராவும், மற்றவர்களும் ராணியைத் தாங்கி, அருகிலுள்ள கூரைக் குடிசைக்கு  கொண்டு சென்றனர். தண்ணீர் பருகச் செய்தனர். உடல் முழுவதும் ரத்தமயம். மெது-வாய் கண்ணைத் திறந்தார். வெள்ளையர்களின் தீண்டலுக்கு ஆளாகாத பெருமித உணர்வுடன் புன்முறுவல் செய்தாள். தம் சுவீகாரப் புதல்வரான தாமோதர ராவை அன்புடன் நோக்கினாள்; ஆண்டவனைப் பிரார்த்தித்தாள்; அழியாப் புகழுடம்பைப் பெற்றாள்.
வீர சாவர்க்கரின் வார்த்தைகள் இதுதான்:
“ஒரு பெண் - இருபத்து மூன்று வயது கூட நிரம்ப-வில்லை - ரோஜா புஷ்பம் போன்ற அழகு - மனத்தைக் கொள்ளை கொள்ளும் உயரிய குணங்கள் - பரிசுத்த வாழ்க்கை - இணையற்ற தைரியம் - உவமையற்ற போர்த்திறன் - இவை வேறு எவரிடத்தும், ஒருங்கு வாய்க்கப் பெற்றதில்லை. இவருடைய இதயத்தில் என்றும் அழியாத தேசபக்திச் சுடர் பிரகாசித்துக் கொண்டிருந்தது.”
அந்த தேசபக்திச் சுடர் இன்றும், என்றும் நம் பாரதியர்களின் வாழ்வில் தேசபக்திச் சுடரை ஏற்றிக் கொண்டிருக்கும் - வெளிச்சம் தரும் விளக்காக சுடர்விடும்.       

000000000000000000000000000000 

இங்கிலாந்து நூலகத்தில் ஜான்சி கடிதம்!
ஜான்சி ராணி, தனது கணவரது மறைவிற்குப் பிறகு எழுதிய கடிதம் ஒன்று இங்கிலாந்து நூலகத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதலாம் சுதந்திரப் போர் துவங்குவதற்கு முன்பாக, அதாவது 1857ஆம் ஆண்டு ஜான்சி பகுதியை ஆட்சி செய்த மன்னர் மரணம் அடைந்தார். மன்னருக்கு வாரிசு இல்லாததால் ஜான்சிப் பகுதியைக் கைப்பற்ற கிழக்கிந்திய கம்பெனியினர் முயற்சி செய்தனர். இதை அறிந்த லட்சுமிபாய் அப்போதைய கிழக்கிந்திய கம்பெனி-யின் கவர்னர் ஜெனரல் டல்ஹவுசி பிரபுவுக்கு பாரசீக மொழியில் எழுதிய கடிதம் தான் தற்போது இங்கிலாந்து நூலகத்தில் உள்ள ஆவண காப்பகத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கணவனை இழந்த துயரத்துடன் லட்சுமிபாய் எழுதிய இந்தக் கடிதத்தில், “எனது கணவர் ஜான்சியை ஆட்சி செய்வதற்கு வசதியாக தாமோதர் ராவ் என்ற குழந்தையை தத்து எடுத்து இருக்கிறார். எனவே வாரிசு இல்லாத ராஜ்ஜியம் என்று கருதி ஜான்சியை உங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
எனினும் இந்த சுவீகாரப் புத்திரனை வாரிசாக ஏற்றுக் கொள்ளாத டல்ஹவுசி பிரபு, ஜான்சியைக் கைப்பற்றத் திட்டமிட்டார். இதனால் வெள்ளையர்-களை எதிர்த்து ஜான்சிராணி 1857 ல் தனது படைகளை திரட்டி போரில் குதித்தார் என்பது வரலாறு.
வெள்ளையர்களின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் அரசு ஊழியராக பணியாற்றிய லிவின் பென்தாம் போரிங் என்பவர் சேகரித்த முக்கிய ஆவணங்களில் இந்த கடிதம் இருந்ததாக லண்டன் நூலக ஆராய்ச்சியாளர் தீபிகா அலாவத் தெரிவித்தார்.          
- ம.கொ.சி. ராஜேந்திரன்
காண்க:

5.11.11

நமது வேரைக் காட்டிய மாதரசி

 
அன்னிபெசன்ட் அம்மையார்  
(பிறப்பு: அக். 1 - மறைவு: செப். 20) 
 
‘இன்று உலகின் எந்தப் பகுதியை நோக்கினாலும் அங்கெல்லாம் தனியரசு காணவேண்டுமென்கிற தவிப்பும்  துடிப்பும் அதற்கான போராட்டங்களும் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன. எந்த நாடும், அது எவ்வளவு சிறிதானாலும் இன்னொருவரின் ஆதிக்கத்தின்கீழ் இருக்க விரும்பாமல், உள்ள உரம் பெற்று, தங்கள் நாட்டின் பரப்புக் குறைவையோ  பலத்தின் மெலிவையோ எண்ணி ஏங்கிக்கொண்டிராமல், உறுதியுடன் போராடி வெற்றியும் பெற்று வருகின்றன.

அப்படி அன்னியரின் ஆதிக்கத்தை எதிர்த்து விடுதலைப்போர் நடத்தி, வெற்றி கண்டு, உலகிற்கே வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்கிறது இந்தியத் திருநாடு.  நம்மைத் தொடர்ந்தே பற்பல நாடுகளும் தங்களைப் பிறரின் அதிகாரப் பிடியிலிருந்தும் அடிமைத்தளையிலிருந்தும் விடுவித்துக் கொண்டன  தொடர்ச்சியான கிளர்ச்சிகளால்!

இந்திய விடுதலைக்காகத் தங்கள் வாழ்வைத் தியாகம் செய்துகொண்ட, உழைப்பையும் உதிரத்தையும், ஏன் தங்களின் இன்னுயிரையும் ஈந்த வீரர்கள் எத்தனை எத்தனை பேர்!  இந்தியர்கள் தங்கள் சொந்த நாட்டின் விடுதலைக்காகக் களமிறங்கிப் போராடியதில் வியப்பில்லை. அது அவர்களின் கடமை; தேவை; கட்டாயம்!  ஆனால் எங்கிருந்தோ அன்னிய மண்ணிலிருந்து இங்கே வந்து குடியேறி, சுதந்திரக் காற்றை சுவாசிக்க இயலாமல் அடிமை இருளில் அவதிப்பட்டுக் கிடந்த நமது மக்களை, ஆங்கிலேயரின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கவும், அவர்களின் குடைகவிழ்ந்து, கோல் சாய்ந்து, கொடியும் வீழ்ந்து, கோட்டை கொத்தளங்களை விட்டுத் தங்கள் குடிபடைகளோடு நாட்டைவிட்டு வெளியேறச் செய்த போராளிகளும் உண்டு.

அப்படி அயர்லாந்து நாட்டிலிருந்து இந்திய மக்களுக்குத் தொண்டு செய்ய வந்து, நமது நாட்டு விடுதலைக்கும், இந்தியப் பெண்களின் வீட்டு விடுதலைக்கும் துணைநின்ற மாதரசிகளில் ஒருவர்  அன்னிபெசன்ட் அம்மையார்!

அன்னி பிறந்தது லண்டனில், 1.10.1847  ல்! ‘‘நான் முக்கால் ஐரிஷ்காரி, கால்வாசி இங்கிலீஷ்காரி’’ என்பார்.  தாய் ஐரிஷ்;  தந்தையைப் பெற்ற பாட்டி ஐரிஷ். தந்தை இங்கிலீஷ்காரர். முன்னோர்களில் ஒருவர் மந்திரியாகவும், இன்னொருவர் லண்டன் மேயராகவும் இருந்திருக்கிறார்கள்.

ஏழைகளுக்குக் கட்டணமில்லாமல் வழக்காடி வந்த வக்கீல் ராபர்ட்ஸ், ‘‘ஏழைகளே வேலை செய்யும் தேனீக்கள். செல்வத்தை உற்பத்தி செய்கிறவர்கள். நியாயம் கோர அவர்களுக்கு உரிமை உண்டு. கருணையின்பேரில் தானம் தரவேண்டியதில்லை’’ என்று சொல்லிவந்த உபதேசம், இளம் வயதிலேயே அன்னியின் மனதில் ஆழப் பதிந்தது.

ஏழைகளுக்கு எவ்வழியிலேனும் தொண்டாற்றத் துடித்த அன்னியை, அவரது அழகில் மயங்கிய பிராஸ்பர்ட் பெசன்ட் என்ற பாதிரியார் காதலித்தார். பாதிரியின் மனைவியானால் அவர் துணையோடு எளியோர்க்கு சேவை செய்ய நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்றார்கள். அன்னியும் அவரை மணக்கச் சம்மதித்தார்.

ஆனால், மணவாழ்க்கையோ அவரது சொந்த வாழ்க்கையிலும் சோகத்தை நிரப்பியது. அன்னிக்கு ஒரு மகனும், மகளும் பிறந்தார்கள்.  மகள், கக்குவான் என்கிற தொடர் இருமலால் துவண்டாள். எத்தனையோ மருத்துவங்கள் செய்தும் குழந்தைக்கு அந்த நோய் குணமானபாடில்லை. மகள்படும் அவதியைக் கண்டு அன்னி தினம் தினம் ரத்தக் கண்ணீர் வடித்தார்.

‘குழந்தை என்ன பாவம் செய்தது? ஏன் இந்தத் துன்பம்? கடவுள் இந்தக் கொடுமையைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாரா? அப்படியானால் அவருக்குக் கருணை என்பதே இல்லையா? ஒருவேளை கடவுள் என்பதெல்லாம் நமது கற்பனைதானா? அப்படி ஒருவர் கிடையவே கிடையாதா?’ _ இப்படியெல்லாம் எண்ண அலைகள் அவர் இதயத்தில் ஆர்ப்பரித்தன. உள்ளம் கடவுள் சிந்தனையில் ஒருமுகப்பட மறுத்தது.

இந்தத் துன்பங்களோடு ஒருநாள் கணவனின் தூஷணையும் துணைசேர்ந்தது. விரக்தியும், வெறுப்பும் அன்னியை வாழ்க்கையின் விளிம்பிற்கே விரட்டின... உடம்பிலிருந்து உயிருக்கு விடுதலை... அது ஒன்றுதான் இந்த உலகியல் துன்பங்களிலிருந்து நிரந்தரமாக விடுபட ஒரேவழி என்கிற விபரீத முடிவிற்கு வந்தார் அன்னி! ஆம்... தற்கொலைக்குத் துணிந்தார்!

கொடிய தூக்க மருந்தான குளோரோஃபார்ம் சீசாவை எடுத்தார். அதை முகர்ந்து முழுதாக மூச்சை இரண்டுமுறை உள்ளிழுத்தால் போதும்... மீளாத் தூக்கம் தூக்கம்தான்...

சீசாவையும் திறந்துவிட்டார்... ஆனால் அவரது அந்தராத்மா இடித்துரைத்தது. ‘அன்னி! ஏனிந்த கோழைத்தனம்! உனது சொந்தத் துன்பத்தைத் தாங்கிக்கொள்ள நெஞ்சில் உரமற்ற நீயா, ஏழைகளின் துன்பத்தைத் துடைக்க ஆசைப்பட்டாய்? முடியுமா உன்னால்...?’ எள்ளலும் ஏகடியமுமாக அவரை ஏசியது அந்த மனக்குரல்.

சீசாவை வீசி எறிந்தார் வெளியே! வாழ்க்கைப் பாதையில் இனி தன் பயணத்தைப் பாதியில் நிறுத்துவதில்லை என்று உறுதிகொண்டார்.

ஆனாலும் இத்தனை நாள் கொண்டிருந்த இறை நம்பிக்கையின் மீது அவருக்கு சந்தேகம் மேலும் மேலும் வலுத்தது...  கிறிஸ்தவ மதத்தில் தனக்கு ஏற்பட்ட அவநம்பிக்கையை புத்தகமாக எழுதினார். அச்சிட்டு வெளியிட்டார். ஆனால் அதில் தனது பெயரைப் போட்டுக்கொள்ளவில்லை.

புத்தகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லண்டன் நகர பாதிரியார்கள் பதறினர்... ‘யார் செய்த வேலை இது?’ என்று ஆளைத் தேடும் முயற்சியில் அலைந்தனர்.  இறுதியில் இது அன்னியின் கைங்கர்யம்தான் என்பதைக் கண்டுபிடித்தபோது, கணவரான பாதிரியார் வெகுண்டார். ‘‘வீட்டை விட்டு வெளியே போ’’ என்று அன்னியை விரட்டினார்...

தன் இரு குழந்தைகளோடு வெளியேறிய அன்னி, குடும்பம் நடத்தவும் குழந்தைகளை வளர்க்கவும் படாதபாடுபட்டார்.  கைப்பொருளை விற்றார். தையல் வேலை செய்தார்... சமையல்காரியாக இருந்தார்... ஒரு மருத்துவமனையில் தாதியாகப் பணிபுரிந்தார். அப்போது அவருக்கு வயது 26தான்.

பல புத்தகங்களை அவர் எழுதியும், அடிமை நாடுகளுக்கு இங்கிலாந்து அரசு சுதந்திரம் வழங்க வேண்டும் என்று பேசியும் வந்த நாட்களில், ‘நேஷனல் ரீஃபார்மர்’ என்ற பத்திரிகையிலும் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போதுதான் பிரம்மஞான சங்கத்தின் தலைவி பிளாவட்ஸ்கி அம்மையாரின் அறிமுகம் கிடைத்தது. அந்த சங்கத்தில் சேர்ந்து, பின்னாளில் அந்த இயக்கத்தின் தலைமைப்பொறுப்பையும் அன்னி ஏற்றார்.

1893  ல் அவர் இந்தியாவுக்கு முதன்முதலாக வந்தபோது, ‘‘புண்ணிய பூமிக்கு வந்தேன்’’ என்றார்.  கங்கையில் நீராடி, தனது ஐரோப்பிய உடையைத் துறந்துவிட்டு, அன்று முதல் புடவை உடுத்தலானார். ‘‘பழைய வேதத்தையும், இந்து மதக் கோட்பாடுகளையும் மீண்டும் இந்திய மக்கள் மதித்துக் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் இந்தியா பழைய மகோன்னத நிலையை அடையும்’’ என்றார் இந்த ஐரோப்பியப் பெண்மணி.

அன்னி ஈடுபட்ட நான்கு துறைகள்: மதம், மதத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வி,  சமூக சீர்திருத்தம்,  அரசியல்.

1898  ல் காசியில் அவர் துவக்கிய மத்திய ஹிந்து கல்லூரிக்கு காசி மன்னர் மனை வழங்கினார். 1904 ல் பெண்கள் பள்ளியைத் துவக்கினார். சென்னை அடையாறு உள்பட நாடெங்கும் பல ஊர்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் பள்ளிகளை ஆரம்பித்தார்.

பிரம்மஞான சபையைச் சேர்ந்தவர்கள் (பிரம்மஞானிகள்), ‘ஜாதி வேறுபாடு பார்க்க மாட்டேன். பெண் குழந்தைக்கும் மனைவிக்கும் கல்வி போதிப்பேன். பெண்களுக்கு 21 வயதுக்குள் திருமணம் செய்துவைக்கமாட்டேன். விதவை மறுமணத்தை ஆதரிப்பேன்’ ஆகிய விதிகளை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டுக் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனைவிதித்தார்.

இந்தியாவுக்கு பிரிட்டிஷ் காமன்வெல்த்துக்குள் சுயாட்சி வேண்டும் என்று கிளர்ச்சி நடத்தினார். அதற்காக ‘ஹோம் ரூல் லீக்’ என்ற இயக்கத்தைத் தொடங்கி, தனது ஆங்கில நாளேடு ‘நியூ இந்தியா’வில் காரசாரமாக எழுதி வந்தார்.

இது ஆங்கிலேய அதிகாரிகளை ஆத்திரமூட்டியது. இதன் விளைவாக, ‘உதகையை விட்டு வெளியேறக் கூடாது’ என்று அன்னிக்கு உத்தரவிட்டார்கள் 1917 ல்!

அப்போதைய நீதிபதி மணி ஐயர், ‘‘இந்த அநீதியைக் கண்டிக்க உலகில் யாருமில்லையா?’’ என்று அமெரிக்க ஜனாதிபதி வில்சனுக்குக் கடிதம் எழுதினார்.

வில்சன், பிரிட்டன் பிரதம மந்திரியை இது சம்பந்தமாகக் கேட்க, அவர் அதிகாரிகளைக் கூப்பிட்டு, அன்னி மீதிருந்த தடை உத்தரவை நீக்க உத்தரவிட்டார்.

அடுத்த ஆண்டில் நடந்த கல்கத்தா காங்கிரசுக்கு அன்னிபெசன்ட் தான் தலைமை ஏற்றார்.

மகாத்மா காந்தியும் நேருவும் ஒத்துழையாமை போராட்டத்தைத் தொடங்கியபோது, அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டு அன்னிபெசன்ட் காங்கிரசிலிருந்து வெளியேறினார். ‘பரிபூரண சுதந்திரம் என்பது மாயை!  கானல்நீர்!  பரஸ்பர ஒத்துழைப்பும் கூட்டுறவுமே நாட்டு வளர்ச்சிக்கு நல்லது’ என்றார். அவர் விருப்பம்போலவே இந்தியா இப்போதும் காமன்வெல்த் அமைப்பில் அங்கம் வகிக்கிறது.

ஐம்பது ஆண்டுகள் இந்திய மக்களுக்காகவே உழைத்த அன்னிபெசன்ட், 20.9.1933 அன்று இயற்கை எய்தினார்.  ஒரு தீர்க்கதரிசியைப் போல அவர் சொல்லிய பல திட்டங்கள் இன்று அமலில் உள்ளதைக் காண்கிறோம்.

ஏழைக் குழந்தைகளுக்கு பள்ளியிலேயே இலவச உணவு அளித்து மருத்துவ வசதியும் செய்துதர வேண்டும். பசித்த குழந்தைகளுக்கு பாடம் மட்டும் சொல்லித்தருவது பயனற்றது. வயிற்றுக்கும் சோறிடல் வேண்டும்’ என்று வலியுறுத்தியது அவர்தான்.  ஆனால் அவர் மறைந்து பல ஆண்டுகள் கழித்துத்தான் பள்ளியில் மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது.

கிராமப் பஞ்சாயத்துகள் தோன்றி, பள்ளிகள், கிராமத் தொழிற்கூடங்கள், துப்புரவு, மருத்துவம், சிவில் துறைகளில் நீதி வழங்குவது போன்றவற்றை அவை நிர்வகிக்க வேண்டும் என்று அவர் அன்று வலியுறுத்திப் பிரசாரம் செய்தார். பின்னாளில் கிராமப் பஞ்சாயத்து போர்டுகள் தொடங்கப்பட்டன.

அன்னிபெசன்ட் மறைந்தபோது மகாத்மா காந்தி...

‘‘1888 க்குப் பிறகு, நான் லண்டனில் படித்துக்கொண்டிருந்தபோது, மற்ற பலரைப்போல நானும் பிராட்லாவையும் அன்னிபெசன்ட்டையும் போற்றிப் புகழ்ந்தேன். அப்போது நான் யாருக்குமே தெரியாத சாதாரணப் பையன். பிளாவட்ஸ்கி, அன்னிபெசன்ட் ஆகியோரின் பக்கத்தில் நான் நிற்பதையே பெரும் பாக்கியமாகக் கருதியிருந்தேன்.  அவர் இந்தியா வந்து இந்திய மக்களின் இதயங்களில் இடம்பெற்றதும் அவரை அடிக்கடி சந்தித்து உரையாடினேன். எங்களுக்குள் அரசியல் வேற்றுமைகள் இருந்தபோதிலும்கூட அவரிடம் எனக்கிருந்த மரியாதை ஒருபோதும் குறைந்ததில்லை’’ என்றார்.

நன்றி: Erodeit.com
காண்க:

அன்னிபெசன்ட் அம்மையார் (விக்கி)

Annie  Besant 

Indian Home Rule Movement 

The Theosophical Network

Dr. Annie  Besant  (I Love India)

The Theosopical Society  - Adayar
.
Theosophical  Society