நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

23.7.12

வரலாற்று இரவு


 சிந்தனைக்களம்

வரலாறு மட்டும் பாடமல்ல; வரலாற்று நிகழ்வுகளை நடந்ததை நடந்தவாறு எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் என இலக்கணம் வகுக்கும் வரலாற்று வரைவியலும் ஒரு பாடமாகும்.

 மனிதகுலம் தோன்றிப் பயணித்த நீண்ட நெடிய காலப் பிரவாகத்தில், ஆறாயிரம் ஆண்டுகளை உள்ளடக்கிய ஆவணப்படுத்தப்பட்ட வரலாறே நம்மிடம் உள்ளது. இந்த வரலாற்றிலும் கூட சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவங்கள் குறித்த தடயங்களோ ஆவணங்களோ நம்மிடம் இல்லை. நாம் அறிந்திராத நமக்கு புலப்படாத இந்த நிலையை 'வரலாற்று இரவு'' என அழைக்கிறோம்.

 தடயங்களும் ஆவணங்களும் இருந்தும்கூட நூறு அல்லது இருநூறு ஆண்டுகளுக்கு முன் சில இடங்களில் நடந்த சம்பவங்களைச் சரியான முறையில் பதிவு செய்யாத, செய்ய விரும்பாதவர்கள் இழைத்த வரலாற்றுப் பிழையை என்னவென்று அழைப்பது?

 உதாரணமாக தென்னிந்தியாவில் தோன்றிய விடுதலைப் போராட்ட வீரர்களின் சேவை, தியாகம் இவர்கள் வாழ்வில் சந்தித்த இன்னல்கள், சோகங்கள், சுருக்கமாக இவர்களின் வீரவரலாறு சரியான முறையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா? இல்லை எனில் ஏன் இவ்வாறு நிகழ்ந்தது? இவர்களின் பங்களிப்பு வரலாற்று இரவாக்கப்பட்டிருப்பது ஒரு தற்செயல் நிகழ்வா அல்லது இதற்கு ஏதேனும் பின்னணி உள்ளதா என பல ஐயங்கள் நம் மனதில் தோன்றுகின்றன.

 நடந்த சம்பவங்களிலிருந்தும் விளைவுகளிலிருந்தும் காரணங்கள் அல்லது வினாக்கள் நோக்கிச் செல்வது சமூகவியலின் தன்மை. காரணங்கள் அல்லது வினாக்களிலிருந்து சம்பவங்கள் அல்லது விளைவுகள் நோக்கிப் பயணிப்பது வரலாறு. இங்கே வைக்கப்படும் விவாதம் வரலாறு பற்றியதாக இருந்தாலும் சமூகவியல் நோக்கில் சில வினாக்களை முன்னிறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

 எத்தனையோ இந்திய விடுதலை இயக்க வீரர்களின் வாழ்வு நமக்கெல்லாம் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது. இதயம் கனக்க கண்கள் கலங்க தொண்டையில் சோகப்பந்து உருள்வதைப் போன்ற உணர்வோடு பகத்சிங்கையும், உதம்சிங்கையும் நாம் படிக்கவில்லையா?

 சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன் என்ற திலகரின் சூளுரையைக்கேட்டு படித்தவர் மட்டுமல்ல, பாமரரும் பரவசமடையவில்லையா?

 லாலா லஜபதிராய், பாலகங்காதர திலகர், பிபின் சந்திரபால் ஆகிய மூவரை "லால், பால், பால்' என்று கொண்டாடவில்லையா? இதற்கெல்லாம் காரணம் மொழி, பண்பாடு மற்றும் வரலாறு போன்ற பன்முகத்தன்மைகளின் வேற்றுமைகளிலும் ஒற்றுமை பாராட்டிய நமது அருங்குணமேயாகும்.

 ஆனால், தென்னிந்தியாவில் சுதந்திரப் போராட்டத்துக்காக வாழ்வை அர்ப்பணித்தவர்களின் வரலாறு பெரிதாக எழுதப்படாததன் காரணம் என்ன? வடஇந்திய மூவரான லால், பால், பால் போல தமிழகத்தின் மூவர் சுப்பிரமணிய பாரதியார், வ. உ. சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா போற்றப்படாததன் காரணம் என்ன? தண்டி யாத்திரை முக்கியத்துவம் பெற்ற அளவுக்கு வேதாரண்ய உப்பு சத்தியாகிரகம் வரலாற்றில் இடம்பெற்றதா?

 பாரதியாரின் வாழ்க்கையை எடுத்துக்கொள்வோம். நாட்டுப்பற்றை எழுச்சிமிக்க பாடல்களால் உணர்த்திய கவிஞராக அறிமுகப்படுத்திய அளவுக்கு, விடுதலை இயக்க வீரராக அவரின் பங்களிப்பை எத்தனை வரலாற்றுப் புத்தகங்கள் பதிவு செய்திருக்கின்றன?

 ஒரு பத்திரிகையாளராக ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அவர் துணிச்சலுடன் போராடியதை இளைய தலைமுறையினருக்கு வரலாற்றுப் பதிவுகள் கொண்டு சேர்த்திருக்கின்றனவா? வரலாற்றுப் பேராசிரியர் பி.பி.கோபாலகிருஷ்ணனின் ஆய்வுக் கட்டுரை ஒன்றில் பாரதியார் பத்திரிகையாளராக நாட்டு விடுதலைக்குப் பங்களிப்பு செய்ததை நாம் அறிகிறோம்.

 'இந்தியா' எனும் இதழ் மூலமாக நாட்டு விடுதலைக்கான செய்திகளைக் கருத்துப்படங்களுடன் எடுத்துரைத்த பாரதியார் தொடர்பான இக்கட்டுரையின் தலைப்பு "இந்தியாவும் விடுதலை இயக்கமும்' என்பதாகும். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இக்கட்டுரையில் சுதேசமித்திரனில் பணியாற்றிய பாரதியார் தனது விடுதலை வேட்கைக்கான சரியான வடிகால் 'இந்தியா' இதழே என முடிவெடுத்து அதில் பணியமர்வதை அறிகிறோம். எழுச்சிமிக்க கட்டுரைகள் மூலம் தேசப்பற்றை ஊட்டி வளர்த்த பாரதியார் குறித்த சம்பவங்கள் தேசிய அளவில் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் வரலாறு பயிலும் மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளதா?

 எஸ்.என். திருமலாச்சாரி என்பவரால் தொடங்கப்பட்டு சென்னை பிராட்வேயிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த இந்த வார இதழ் ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிரான புரட்சிகரமான செய்திகளையும் கருத்துப்படங்களையும் வெளியிட்டு வந்தது. முதல் இதழிலிருந்தே பாலகங்காதர திலகர் மற்றும் விடுதலை இயக்கத்தில் தீவிர உணர்வு கொண்டவர்களின் கருத்துகளைத் தாங்கிவந்த 'இந்தியா' பிபின் சந்திரபால் 1907-இல் சென்னை வந்தபோது, அது தொடர்பான செய்திகளை விரிவாக வெளியிட்டதாக பேராசிரியர் கோபாலகிருஷ்ணன் தெரிவிக்கிறார்.

 விடுதலைப் போராட்டத்தின் முகத்தையும் முகவரியையும் சுட்டும் அடையாளங்களுள் ஒன்றாக என்றேனும் 'இந்தியா' எனும் இதழ் இனம் காணப்பட்டதா? இந்த இதழ் பற்றிய விளக்கம் மாணவர்களுக்குப் போதிக்கப்படும் வரலாற்றில் விரிவாக இடம் பெற்றிருக்கிறதா?

 அன்னியர்களுக்கு எதிரான அரசியல் போராட்டத்தில் அல்லும் பகலும் பாடுபட்டு அல்லலுற்ற பாரதியின் துயரங்களை 'பாரதிக்குத் தடை' எனும் புத்தகத்தின் வாயிலாக வரலாற்றுப் பேராசிரியரும் ஆய்வாளருமான முனைவர். வி.வெங்கட்ராமன் விளக்குகிறார். தேசிய மற்றும் மாநில ஆவணக்காப்பகங்களில் உள்ள அக்காலத்திய அரிய ஆவணங்கள் மற்றும் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை மேற்கோள்காட்டும் இந்த முழுமையான ஆய்வு நூலில் ஆங்கிலேய அரசுக்கு எதிரான அரசியல் வாழ்வில் பாரதி அடைந்த இன்னல்களைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்கிறோம்.

 பாரதி இயற்கை எய்தி ஆறு ஆண்டுகள் கழித்து அவரது புத்தகங்களை ஆங்கிலேய அரசு தடை செய்தது. இதைக் கண்டித்து சென்னை மாகாண சட்டமன்றத்தில் சத்தியமூர்த்தி குரலெழுப்பினார்.

 மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள், ரெüலட் சட்டம் இவற்றுக்கு எதிராக 1919-ஆம் ஆண்டு கூட்டு நாடாளுமன்றக் கமிட்டியின் பிரதிநிதியாக 32 வயதே நிரம்பிய சத்தியமூர்த்தி இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 சுதேசி இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்ட சத்தியமூர்த்தி 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின்போது தனி நபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் கைது செய்யப்பட்டு நாக்பூரில் உள்ள அமராவதி சிறையில் அடைக்கப்பட்டார். அச்சமயம் பயணத்தின்போது அவருக்கு தண்டு வடத்தில் அடிபட்டது. சென்னை பொது மருத்துவமனையில் காயங்கள் குணமாகாமல் 1943-ஆம் ஆண்டு தனது 56-வது வயதில் இன்னுயிரை நீத்த சத்தியமூர்த்தியை, 'இந்திய தேசிய இயக்கத்தின் குரல்' என புகழப்பட்டவரை எத்தனை வரலாற்றுப் புத்தகங்கள் நினைவு கூர்கின்றன?

 இந்தியாவின் வடக்குப் பகுதிகளில் இந்தியச் சுதந்திரப் போர் தொடங்குவதற்கு 60 ஆண்டுகளுக்கு முன்னரே ஆங்கிலேயரை எதிர்த்த முன்னோடி கட்டபொம்மன் என்ற கருத்து முன்னெடுத்துச் செல்லப்பட்டிருக்கிறதா?

 ஸ்ரீரங்கப்பட்டினம், சித்தேஸ்வரம் போன்ற பகுதிகளில் திப்புசுல்தான் ஆங்கிலேயருக்கு எதிராகப் பெற்ற வெற்றியில் பெரும் பங்காற்றிய தீரன் சின்னமலையின் வாழ்க்கை குறித்து இந்தியாவின் பிற பகுதிகளில் பயிலும் வரலாற்று மாணவர்கள் அறிவார்களா?

 வீரத்திலும் நிர்வாகத்திலும் சிறந்து விளங்கிய மருது சகோதரர்களையும் அவர்களின் வீர வரலாற்றையும் இந்தியர்களில் எத்தனை பேர் அறிவார்கள்?

 ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் தோன்றிய மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை, கட்டபொம்மன் போன்றோரின் வீரதீரச் செயல்களும் பல்வேறு காலகட்டங்களில் ஆங்கிலேய அரசை எதிர்த்துச் செயல்பட்ட தமிழகத்தின் விடுதலை இயக்க முன்னோடிகளின் தியாக வாழ்வும் இந்திய பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் பாடமாக அறிமுகமாகவில்லை எனில் கற்பிக்கப்படும் வரலாற்றுப் பாடத்தை முழுமையானதாக ஏற்றுக்கொள்ள முடியுமா?

 இந்தியாவின் விடுதலை வேள்வியில் தென்னிந்தியர்களின் பங்களிப்பு போதுமானதாக இல்லை எனும் மாயை உருவாக்கப்படுமேயானால், அதுவே உண்மை என எதிர்காலச் சந்ததியினரும், வெளிநாட்டினரும் நம்புவார்களேயாயின் அந்த வரலாற்றுப் பிழைக்குப் பொறுப்பேற்பது யார்? அந்தக் குறையைச் சரி செய்வது யார்?

 நடந்ததை நடந்தவாறு கூறாமல்போன இந்த நிலையை வலிந்து உருவாக்கப்பட்ட 'வரலாற்று இரவு' என அழைக்காமல் வேறு என்னென்பது?

- ஆர். கண்ணன்


நன்றி: தினமணி (21.07.2012)
.

16.7.12

தமிழகத்தின் உண்மையான பெரியார்

பெரியசாமி தூரன்

(1908 செப். 26 - 1987, ஜன.  20)

இசை மற்றும் இலக்கிய உலகில் பெரிதும் போற்றப்பட்ட திரு. பெரியசாமி தூரன்,  அவ்விரண்டின் வளர்ச்சிக்கும் மாபெரும் சேவை செய்துள்ளார். தன்னுடைய காலத்தை வென்ற படைப்புகளின் மூலம் இசை மற்றும் இலக்கியங்களுக்கு மெருகூட்டியிருக்கிறார்.  ''தூரன் என்றால் தமிழ்; தமிழ் என்றால் தூரன்'' என்று சொன்னால் அது மிகையாகாது.

தூரன் என்ற பெயர் சொன்னாலே அது “கலைக்களஞ்சியம்” என்று சொல்லப்பட்ட “தமிழ் அபிதான சிந்தாமணி”யைத்தான் (தமிழ் என்ஸைக்ளோபீடியா)  குறிக்கும். ஏனென்றால், கடுமையாக உழைத்து அதைப் பத்து தொகுதிகளாக தமிழுலகிற்கு அளித்த கொடை வள்ளல் அல்லவா அவர்? குழந்தை இலக்கியத்திற்குப் பங்காற்றியதன் மூலமும் நம்மால் நினைவுகூறத் தக்கவர் தூரன்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி என்ற ஊரில், பழனிவேலப்ப கவுண்டர் – பாவாத்தாள் தம்பதியருக்கு, 1908 செப்டம்பர் 26–ல் பிறந்த தூரன், சென்னை மாநிலக் கல்லூரியில் கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்று பின்னர், ஆசிரியர் பயிற்சியும் (L.T. – Licentiate in Teaching)  பெற்றார். தன்னுடைய இளைய பருவத்தில், தேசிய-மஹாகவி பாரதியான் பால் ஈர்க்கப்பட்டு, மஹாத்மா காந்தியினாலும் ஊக்கம் கொண்டார். சிறந்த தேசபக்தராக இருந்த காரணத்தால், ஆங்கிலேய அரசாங்கம் விடுதலை வீரர் பகத் சிங்கைத் தூக்கிலிட்டதைக் கண்டித்து, கல்லூரியில் இறுதியாண்டுத் தேர்வைப் புறக்கணித்தார்.

தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் அறிவியக்கத்திற்கு இவர் ஆற்றியுள்ள பங்கு ஒப்பிடலுக்கு அப்பாற்பட்டது. முக்கியமாக, ஐந்து கவிதை நூல்களும், ஏழு நாடக நூல்களும், ஐந்து கதைத் தொகுதிகளும், மூன்று கட்டுரைத் தொகுப்புகளும், ஆறு இசை நூல்களும், மூன்று மொழிபெயர்ப்பு நூல்களும், மற்றும் பல நூல்களும் படைத்து அளித்துள்ளார். உளவியல் துறையில் (Psychology) “குழந்தை உள்ளம்”, மரபணுவியல் துறையில் (Genetics) “பாரம்பரியம்”, கருத்தரித்தல் பற்றிய அறிவியல் துறையில் (Embryology) “கருவில் வளரும் குழந்தை” போன்ற அற்புத படைப்புகளும் வழங்கியுள்ளார் திரு தூரன். அவருடைய படைப்புகளில் இளந்தமிழன், மின்னல் பூ, தங்கச் சங்கிலி, பிள்ளை வரம், தேன் சிட்டு, பூவின் சிரிப்பு ஆகியவைக் குறிப்பிட்டுச் சொல்லும்படியானவை. பொன்னியின் தியாகம், அழகு மயக்கம் ஆகியவை அருமையாகப் படைக்கப்பட்ட நாடகங்கள். குழந்தைகளுக்காகப் பல பாடல்கள், மிருகங்கள் பற்றிய கதைகள், மற்றும் பல புத்தகங்கள் எழுதியுள்ளார்.

பார்க்க:
பெ.தூரன் இயற்றிய கீர்த்தனைகள் (மின் நூல்)

திரு.தூரன் அவர்கள், நாட்டுபுறப் பாடல்களும், கர்னாடக இசைக் கீர்த்தனைகளும், ஸ்வரங்களும் இயற்றியுள்ளார். டி.கே.பட்டம்மாள், செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், என்.சி.வசந்தகோகிலம், டி.வி.சங்கரநாராயணன், டைகர் வரதாச்சாரியார், முசிறி சுப்ரமணிய ஐயர், போன்ற இசையுலக ஜாம்பவான்கள், இவருடைய இசையறிவை மெச்சி, இவர் இயற்றிய பாடல்களுக்கு அடிமைகளாகவே இருந்து, தங்கள் கச்சேரிகளில் அவற்றைப் பாடாமல் இருந்ததில்லை என்று சொல்லலாம். ’சாரங்கா’ ராகத்தில் அமைந்த “ஞானநாதனே”, ‘பிருந்தாவன சாரங்கா’வில் அமைந்த “கலியுக வரதன்”, ‘மாண்ட்’ ராகத்தில் அமைந்த “முரளீதரா கோபாலா”, ‘சாவேரி’யில் அமைந்த “முருகா முருகா”, ‘காபி’யில் பாடிய “பழனி நின்ற”, ‘கீரவாணி’யில் அமைந்த “புண்ணியம் ஒரு கோடி”, ‘சுத்த சாவேரி’ ராகத்தில் அமைந்த “தாயே திரிபுரசுந்தரி” ஆகியவை இவர் இயற்றியுள்ள மயங்கவைக்கும் கீர்த்தனைகளில் சில.

பெ.தூரன் இயற்றிய “எங்கு நான் செல்வேன் ஐயா” என்ற துவிஜாவந்தி ராகக் கீர்த்தனை, பாம்பே ஜெஸ்ரீ குரலில் (பாடலைக் கேட்க மேலே உள்ள பெட்டியில் அழுத்தவும்)

பெரியசாமி தூரன் அவர்கள் செய்துள்ள மொழியாக்கங்களில், ஜாக் லண்டன் அவர்களின் “Call of the Wild” (கானகத்தின் குரல்), நாவோமி மிட்சின்ஸனின் “Judy and Lakshmi” (காதல் கடந்த நட்பு) ஆகியவை குறிப்பிட்டுச் சொல்லப்படுபவை. இவர், “பாரதி தமிழ்” மற்றும் “தாகூரின் ஐம்பெரும் கட்டுரைகள்” ஆகிய நூல்களுக்கு தொகுப்பாசிரியராக (Editor)  இருந்து வெளியிட்டுள்ளார். மேலும் ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டிருந்த சில கவிதைகள் மற்றும் நாடகங்களையும் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். மஹாகவி பாரதியாரின் பன்முகத் தோற்றத்தையும் ஆளுமையையும், அருமையான முறையில் அலசி ஆராய்ந்து, இவர் வெளிக் கொணர்ந்த பத்து தொகுதிகள், நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு இவர் ஆற்றியுள்ள தொண்டுகளில் மிகச்சிறந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

1948-லிருந்து 1978 வரை தலைமைத் தொகுப்பாசிரியர் பொறுப்பில் கடுமையாக ஓய்வின்றி உழைத்து பத்து தொகுதிகள் கொண்ட தமிழ்க் கலைக் களஞ்சியத்தை இவர் தயாரித்தது மிகச் சீரிய பணியாகும். அதைத் தொடர்ந்து குழந்தைகளுக்கான ஒரு கலைக் களஞ்சியத்தையும் பத்து தொகுதிகளுடன் படைத்தார்.

டி.அவினாசிலிங்கம் செட்டியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தபோது, செட்டியார் மனமுவந்து அளித்த முப்பது ரூபாய் மாதச் சம்பளத்தை அதிகம் என்று மறுத்து வெரும் பதினைந்து ரூபாய் மட்டுமே பெற்றுக் கொண்டு பணியாற்றினார். இந்திய அரசு இவருக்கு 1968-ல் பத்ம பூஷண் விருதளித்துக் கௌரவித்தது. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் 1970-ல் கலைமாமனி விருதும், 1972-ல் தமிழ் இசை சங்கம் இசைப்பேறறிஞர் பட்டமும், 1978-ல் எம்.எ.சி.அறக்கட்டளைகள் அண்ணாமலை செட்டியார் விருதும் அளித்து கௌரவித்தன. பாரதீய வித்யா பவனும், சாகித்ய அகாதமியும் இணைந்து தொண்டில் கனிந்த தூரன் என்ற பெயரில் அவரின் வாழ்க்கை பற்றிய புத்தகத்தை அவருடைய நூற்றாண்டான சென்ற வருடத்தில் வெளியிட்டு கௌரவித்தன.

“தூரனும் அவருடைய குடும்பத்தாரும், திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் அவர்களின் பக்தர்களாவர். யோகியைப் போற்றி திரு.தூரன் அவர்கள் எழுதியுள்ள பாடல்கள் பல வித்வான்களால் பாடப் பெற்றுள்ளன. அப்பாடல்கள் புத்தகங்களாகவும் வந்துள்ளன. யோகி ராம்சுரத்குமார் அவர்கள் முன்னிலையில் தூரன் அவர்களிடமிருந்து பாடல்கள் மடை திறந்த வெள்ளம் போல் பெருகி வரும்” என்று பெங்களூரைச் சேர்ந்த  துறவியும், சமூக சேவகருமான சாது ரங்கராஜன் நெகிழ்ந்து கூறுகிறார்.

அன்னார் 1987 , ஜனவரி 20 ல் மறைந்தார். இவரது நூற்றாண்டு விழா 2008 ல் கொண்டாடப்பட்டது.

- பி.ஆர்.ஹரன்


காண்க:


தேமதுர தமிழிசை தெருவெங்கும் ஒலித்திட...

பெரியசாமி தூரன்

Periyasaamy Thooran (Wiki)

பெரியசாமி தூரன் - ஜெயமோகன் 

பெரியசாமி தூரன் - சிலிகான் ஷெல்ப்

.

13.7.12

வெற்றிக்கு வழி

சுவாமி சிவானந்தர்
(ஐம்பதாம் ஆண்டு நினைவுநாள்: ஜூலை 14)

இந்த உலகம் ஒரு வித்தியாசமான உலகம். இந்த மனமும் அதேபோல விசித்திரமானது. நெருங்கிய நண்பர்களிடையே கூட அவ்வப்போது சிறு சிறு வேற்றுமையும் மனக்கசப்பும் ஏற்படுவதுண்டு. சில சமயங்களில் அபிப்பிராய பேதம் எரியும் நெருப்பில் எண்ணெய் விட்டது போல ஆகிவிடும். பல்வேறு மனங்களோடு பழகும்போது நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நீங்கள் அனுசரணையும், பெருந்தன்மையும், புரிந்துகொள்ளக் கூடியதுமான இருதயத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அன்றாட வாழ்க்கைப் போராட்டத்திலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளும் படிப்பினையைக் கொண்டு மிகவும் ஜாக்கிரதையாக உங்களைத் திருத்தி அமைத்துக்கொள்ள வேண்டும்.

-சுவாமி சிவானந்தர்

காண்க:

தெய்வீக வாழ்க்கையை உபதேசித்தவர்

10.7.12

ஆக்கிரமிப்புக்கு எதிரான முதல் போர்க்குரல்


வேலூர் புரட்சியில் பலியான வீரர்கள் நினைவுச் சின்னம்
இன்று வேலூர் சிப்பாய் புரட்சி நாள்
(1806, ஜூலை 10)

சரித்திரம்


இன்றைய சுதந்திர இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்ட முதல் புரட்சி 1806-ம் ஆண்டில் ஜூலை 10-ம் தேதி நடைபெற்றது.

ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்ட இந்தியாவில், முதன்முதலாக கிழக்கிந்தியக் கம்பெனியில் இந்திய சிப்பாய்கள் மீரட் நகரில் 1857 மே 10-ம் தேதி செய்த கிளர்ச்சியை வரலாற்று ஆசிரியர்கள் சிப்பாய் புரட்சி என வர்ணிக்கின்றனர்.

உண்மையில், 51 ஆண்டுகளுக்கு முன்பே வேலூர் கோட்டையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்ததுதான் வேலூர் சிப்பாய் கலகம் என்பதை வரலாறு தன்னகத்தே பதிவு செய்து வைத்துள்ளது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முதல் வித்து இதுதான் என்பதையும், இதை வேலூர் சிப்பாய் புரட்சி என்றுதான் வர்ணிக்க வேண்டும் என்பதையும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் தொடர்ந்து சுட்டிக் காட்டி வருகின்றனர்.

புரட்சி வெடித்தது:

1805-ம் ஆண்டு, வேலூர் கோட்டையில் இருந்த மெட்ராஸ் ரெஜிமெண்டைச் சேர்ந்த தென்னிந்தியத் துருப்புகள் பாதுகாப்புப் பணியில் இருந்தனர். அந்த ஆண்டில், இந்தியப் படைகள் சமய அடையாளங்களை அணியக் கூடாது. தலையில் குடுமி வைக்கக் கூடாது. ஐரோப்பிய ராணுவ உடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்ற கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. சிப்பாய்கள் ஐரோப்பிய முறையில் தொப்பி அணிந்து, மாட்டுத் தோலால் ஆன பட்டையை வைக்க வேண்டும் என்ற உத்தரவால், இந்து, முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த 1,500 வீரர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது.

அதனால் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட முற்பட்டனர். கிளர்ச்சியில் ஈடுபட முயன்றவர்களுக்கு தலா 600 பிரம்படி தண்டனை வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கை இன்னும் கோபத்தை இந்திய துருப்புகளுக்கு ஏற்படுத்தின.

வேலூர் கோட்டையில் அப்போது சிறை வைக்கப்பட்டிருந்த திப்பு சுல்தான் மகன்கள்தான் இந்த கிளர்ச்சிக்கு காரணம் என குற்றம் சாட்டி கடுமையான சித்ரவதைகள் தொடர்ந்தன.

இந்நிலையில், ஆத்திரமடைந்த இந்திய சிப்பாய்கள் 1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி அதிகாலை உறக்கத்தில் இருந்த ஆங்கிலேய அதிகாரிகள் பலரைக் கொன்று குவித்தனர். 350 அதிகாரிகளில் 100 பேர் கொல்லப்பட்ட நிலையில், ஆங்கிலேயர் படைகள் சில மணி நேரத்தில் இந்திய சிப்பாய்கள் 350-க்கும் மேற்பட்டோரை கொன்று புரட்சியை அடக்கினர்.

இந்த புரட்சியில் கொல்லப்பட்ட வீரர்களை வேலூர் கோட்டைக்குள் இருந்த கிணறு ஒன்றில் வீசி அக்கிணற்றை மூடியதாகக் கூறப்படுகிறது. கொலையுண்ட ஆங்கிலேய அதிகாரிகளின் உடல்கள் மீட்கப்பட்டு, கோட்டையின் எதிரே அடக்கம் செய்யப்பட்டு கல்லறைகள் எழுப்பப்பட்டன. இன்றைக்கும் அந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட ஆங்கிலேய அதிகாரிகளின் பெயர்கள் தாங்கிய கல்லறைகளை பொதுமக்கள் காண முடியும்.

உயிர் நீத்த வீரர்களின் நினைவாக வேலூர் மக்கான் பகுதியில் நினைவுத் தூண் ஒன்று முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியால் திறக்கப்பட்டது. 2006-ம் ஆண்டில் வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு அஞ்சல் தலையும், அன்றைய முதல்வர் கருணாநிதியால் வெளியிடப்பட்டது. ஆண்டுதோறும் ஜூலை 10-ம் தேதி அரசு சார்பில் இந்த நினைவுத் தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

 
காண்க: 
 
  

 

.
.

7.7.12

இனம் காக்க வந்த மீட்பர்

திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன்
(ஜூலை 7, 1859 - செப்டம்பர் 18, 1945)

திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் (ஜூலை 7, 1859 - செப்டம்பர் 18, 1945),   அரசியல்வாதி, சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், வழக்குரைஞர், பத்திரிகையாளர்,  தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்தவர் எனப் பல முகங்களை உடையவர்.  பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்து, 'பறையன்' என்ற திங்கள் இதழையும் நடத்தியவர் இவர். சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1923 முதல் 1939 வரை இருந்திருக்கிறார்.  தான் சார்ந்த தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காக உழைத்த பெருந்தகை இவர்.

செங்கல்பட்டு  மாவட்டத்தில் மதுராந்தகம் அருகில் கோழியாலம் என்னும் கிராமத்தில் சடையன் என்பவருக்கு 7.7.1859 அன்று மகனாகப் பிறந்தார். அம் மாவட்டத்தில் நிலவிய தீண்டாமைக் கொடுமை தாங்கமாட்டாமல் தஞ்சைக்குக் குடிபெயர்ந்தது அக் குடும்பம். பின்னர் கோவை படிக்க தேர்ந்த போது படித்த 400 பிள்ளைகளில் 10 பேர் தவிர மற்றவர்கள் உயர்சாதியினர்.  சாதிகள் மிகத் கடினமாக கவனமாகக் கடைபிடிக்கப்பட்டதால், சாதி இந்து மாணவர்களுடன் பழகுவதால் சாதி, குடும்பம், இருப்பிடம் ஆகியவை தெரிந்துவிட்டால் என்ன நடக்குமோ என்று அஞ்சி படித்து வந்தார். இதை அவரே தனது சுயசரிதையில் எழுதி இருக்கிறார்.

படிப்பு முடித்தவுடன் நீலகிரியில் 1882 ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் வணிகப் பணிமனையில் வேலையில் சேர்ந்தார். பிளாவட்ஸ்கி அம்மையார் தியோசாபிகல் சொசைட்டி மூலம் வறுமையாலே வாடுகிற மக்களுக்கு வழி காட்டுகிறேன் என்று சொல்லி மதமாற்றம் செய்தார்கள். ஆனால் இரட்டை மலை சீனிவாசன், அதற்கு ‘நான் இந்துவாகப் பிறந்து விட்டதால் இந்து மதத்திலிருந்து கொண்டே உரிமைக்காகப் போராட வேண்டி கோருவேன்' என்றார்.

1884 ம் ஆண்டு சென்னை அடையாறில் தியோசோடிகல் சொசைட்டியின் ஆண்டு விழா நடைபெற்றது. அதில் வங்காள பாபுகளும், பம்பாய் பார்சிகளும், பிராமணர்களும், ஐரோப்பா, அமெரிக்கா, இலங்கை முதலான தேசங்களிலிருந்து கலந்து கொண்டனர். அப்போது அரசியல் இயக்கம் தோற்றுவிக்க முடிவெடுக்கப்பட்டது. இந்தியாவின் பிரச்சினைகள் இரண்டு. இந்தியர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து உரிமைக்காகவும், பூரண சுதந்திரமடைய வேண்டும். இந்தியாவில் பிறந்து வளர்ந்து பூர்வீகக் குடிமக்களாக வாழ்ந்து வரும் செட்யூல்டு இனமக்கள், இந்து மதத்தில் இருக்கும் தீண்டாமையை எதிர்த்து விடுதலை அடைய வேண்டும். இந்த இரண்டு பிரச்னைகளில் இரட்டைமலை சீனிவாசன் சமுதாய விடுதலைக்கே முக்கியத்துவம் கொடுத்தார்.

சீனிவாசன் 1980 ம் ஆண்டு சென்னையில் குடியேறினார். ஒரு வாரப் பத்திரிக்கையை உருவாக்கினார். அதற்குப்  'பறையன்'  என்று பெயர் வைத்தார்.

'பறையன்', 15 ரூபாய்  மூலதனத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. 1893 ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதன்முதலில் நான்கு பக்கங்கள் கொண்ட மாதாந்திரப் பத்திரிகையாக இரண்டு அணாவாக விலையில் வெளிவந்தது. இரண்டு நாட்களில் 400 பிரதிகள் விற்கப்பட்டன. ஈராண்டுகளுக்கு பிறகு அச்சு எந்திரசாலை நிறுவப்பட்டது. மூன்று மாதத்திற்குப் பின் வாரந்திரப் பத்திரிகையாக 7 ஆண்டுகள் வெளிவந்தது. 1891-ல்  'பறையர் மகாஜன சபை'யை  இரட்டை மலை சீனிவாசன் தோற்றுவித்தார். பி. ஆறுமுகம் என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1895 ஆம் ஆண்டு டிசம்பர் 6ந் தேதி சென்னைக்கு வருகை தந்த கவர்னர் ஜெனரல் எல்ஜின் பிரபுவுக்கு மிகப் பெரிய பந்தலிட்டுப் பறையர் மகாஜன சபை வரவேற்றது.  1898 ஆம் ஆண்டு மகாராணி விக்டோரியா சக்ரவர்த்தினியின் 60ஆவது ஆளுகை விழாவின் போது வாழ்த்துக் கூறி அனுப்பிய செய்தியைப் பார்த்து அகம் மகிழ்ந்து 1898 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ம் தேதி எழுதியிருக்கிறார்.

அக்காலத்தில் பெரும்பாலும் ஜாதி இந்துகளும், பிராமணர்களும் ஆசிரியர்களாக இருந்தனர். இந்த உயர் ஜாதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் செட்யூல்டு மக்களுக்குப் பாடம் சொல்லித்தர முன்வரமாட்டார்கள். இதனால் செட்யூல்டு மாணவர்கள் படிக்க வாய்ப்பில்லை.

1898 அக்டோபர் 21-ம் தேதி இக்கொடுமையைத் தெளிவாக எழுதி ஆங்கில அரசுக்குத் தெரிவித்தார். இதன் விளைவாகச் சென்னை முனிசிபாலிடி பள்ளிக்கூடம் கட்ட வேண்டி ஆங்கில அரசு உத்தரவு அளித்தது. அதனால் செட்யூல்டு மாணவர்கள் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 65 ஆண்டுக்காலம் கவனிக்க ஆட்கள் இல்லாமல் 1893-ம் ஆண்டு கல்வி கற்பிக்க அரசு முன்வந்தது. பலன் தரவில்லை. கிராம அதிகாரி, வருவாய்த்துறை தாசில்தார், துணை ஆட்சியாளர் போன்றவர்கள் முட்டுகட்டை போட்டனர்.

1893ஆம் ஆண்டு 'பறையன்' பத்திரிகையில் இக்கொடுமையை பற்றி விளக்கமாக எழுதிய காரணத்தால் வருடா வருடம்  30 லட்சம் ரூபாய் கல்விக்காகச் செலவு செய்ய அரசினர் தீர்மானித்தனர். அரசாங்கப் பள்ளிகளை சரிவர பராமரிக்க முடியாமல் சில பள்ளிகள் மூடப்பட்டன. ஆனால் கிறித்துவ மிஷனரி பள்ளிகள் ஏராளமாகத் திறக்கப்பட்டன. ஆனால் கல்வி வளர்ச்சி என்ற பெயரில் மதமாற்றமும் செய்யப்பட்டது.

1904-ல் தென் ஆப்பிரிக்காவின் நேட்டாலில் தங்கியிருந்தபோது பீட்டரின் உதவியால் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி வந்தார். அப்போது அங்கு காந்திக்கு மொழிபெயர்ப்பாளராக விளங்கினார். 1923ஆம் ஆண்டு சென்னை மாநிலத்தின் மேல்சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அப்பதவியில் இருந்தபோது ‘ரெவின்யூ இன்ஸ்பெக்டர்’ பதவி ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தரவேண்டும் என்று கோரினார்.

கிராமங்களில் படித்த, பணம் படைத்தவர்கள் படிக்காத அப்பாவி மக்கள் மீது தங்களது ஆட்சி அதிகாரத்தைச் செலுத்துபவர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் இவர்களையே ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாக நியமனம் செய்வது என்பது உரிமைக்காகக் குரல் கொடுக்காதவர்களாகத் தென்படுகிறது. எனவே தனி வாக்குரிமையின்படி ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளை அரசுக்குத் தெரிவிக்க ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளையே தேர்ந்தெடுப்பது நலம் என்று கருதினார்.

1926ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி 'ராவ்சாகிப்' பட்டம் அளிக்கப்பட்டது. 1930 ஜுன் மாதம் 6-ம் தேதி திவான்பகதூர் பட்டமும் திராவிடமணி என்ற பட்டமும் அளிக்கப்பட்டன. அதே ஆண்டு நவம்பர் 12-ம் தேதி லண்டன் மாநகரில் முதல் வட்டமேஜை மாநாடு கூடியது. இதில் இரட்டைமலை சீனிவாசன், ஜெயகர், அம்பேத்கர், ஆகாகான், ஹென்றிகிட்னி, க்யூபார்ட்கார், பன்னீர்செல்வம், ராமசாமி முதலியார், பாத்ரோ, முகமது அலி ஜின்னா, பிக்கானீர் மகாராஜா, சீனிவாச சாஸ்திரி ஆகியோர் கலந்து கொண்டனர். காந்தி சிறையில் இருந்ததால் காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை. இரண்டு வட்டமேஜை மாநாடுகள் முடிந்து 1932-ல் ஆகஸ்ட் 17-ல் Communal award வெளியிடப்பட்டது.

''செட்யூல்டு இன மக்கள் அரசியல் சுதந்திரம் கிடைப்பது பலன் தராது. தனி வாக்குரிமை மூலம் செட்யூல்டு இன வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு ஏற்படும். செட்யூல்டு மக்கள் இந்துக்கள் பட்டியலில் அடங்காது. பண்டிகை நாட்களில் சாராயக் கடைகளை மூட வேண்டும். வேலை செய்தால் தானியங்களுக்குப் பதிலாகப் பணமாகக் கொடுக்க வேண்டும்'' என்பதை முக்கிய கோரிக்கையாக வைத்தார்.

1939 செப்டம்பர் 17-ம் தேதி சென்னை சிந்தாதிரிப் பேட்டை, நேப்பியர் பூங்காவில் செட்யூல்டு மக்களைக் கூட்டி இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

“நாங்கள் கணக்கிட முடியாத வருடங்களாகக் கொடுமைக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றோம். எங்களுடைய கோரிக்கைகள் நியாயமானவை. எதிர்காலத்தில் எங்கள் இனம் சமத்துவமாகவும், சமாதானத்துடனும் வாழ எண்ணுகிறது. எங்களுடைய முன்னேற்றத்தில் மற்றவர்கள் குறுக்கிட்டால் நாங்கள் சகிக்கமாட்டோம். இனி மேலும் நாங்கள் எவ்விதக் கொடுமையையும் ஏற்கமாட்டோம். எங்களுடைய கீழான நிலைமைக்கு அவர்களிடம் உள்ள அமைதியும், அன்புக்குணமுமே காரணமாகும்” என 1895 அக்டோபர் 7-ல் சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் சூளுரைத்தார்.

இத்தகைய பெருமகனார் 1945 செப்டம்பர் 18, சென்னை, பெரியமேடு பகுதியில் உயிர்நீத்தார். தாழ்த்தப்பட்ட மக்களின் தற்போதைய உயர்வுக்கு முன்னோடியாக இருந்து செயல்பட்டவர் இரட்டைமலை சீனிவாசன். அவரது நினைவுகள் தீண்டாமையை ஒழிக்கும் வேகத்தை சமூக நீதியை விரும்புவோருக்கு என்றும் வழங்கிக் கொண்டிருக்கும்.

காண்க:

சம உரிமைக்கான முதல்குரல் 

தலித் இயக்க முன்னோடி ஹென்றி ஸ்டீல் ஆல்காட்

 .

6.7.12

உலகளந்தான்

ஆசாரிய வினோபா பாவே
(1895, செப். 11 - 1982, நவ. 15)
தம்மைக் காட்டிலும் காந்தியத்தை சிறப்பாக உள்வாங்கிக் கொண்டவர் என்று காந்தி இவரை பற்றி கூறியுள்ளார். அவரது வாழ்நாளில் 13 வருடங்களில் 34,000 கி,மீ.க்கு மேல் கால்நடையாக, கிராமம் கிராமமாக இந்திய நிலபரப்பு முழுவதும் நடந்தே கடந்தவர் .புரட்சிகரமான பூதான இயக்கத்தை தொடங்கி வழிநடத்தியவர்.சர்வோதயா இயக்கத்தின் ஆணி வேர்களில் ஒருவர். அவர் ஆச்சர்யா வினோபா பாவே.

1951 ஆம் ஆண்டில் சர்வோதயாவின் மாநாடு ஆந்திரத்தில் உள்ள சிவராம்பள்ளியில் நடந்தது. தனது வார்தா ஆசிரமத்திலிருந்து நடந்தே அங்கு வந்து சேர்கிறார். அப்பொழுது தெலுங்கானா பகுதியில் நக்சல் இயக்கத்தினர் பெறும் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். வன்முறையை பிரயோகித்து வறியவர்களிடத்திலிருந்து நிலங்களை பிடுங்கி எளியவர்களுக்கு வழங்கினர்.அவர்களது வன்முறையை ஒடுக்க அரசு காவல் துறையை அனுப்பியது. கிராமங்கள் பகலில் போலீஸ் பிடியிலும் இரவில் நக்சல் பிடியிலும் சிக்கி சிதைந்து கொண்டிருந்தன.

சுமார் இருநூறு கிராமங்கள் முழுமையாக நக்சல்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. அரசு தனது பலத்தை பிரயோகித்து ஓரளவு வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர முயன்றது, ஆனால் அங்கு நிலவிய அடிப்படை பிரச்னை தீர்ந்தபாடில்லை. மாநாடு முடிந்தது, வினோபா பதட்டத்துக்குரிய அப்பகுதிக்குள் பயணிக்க திட்டமிடுகிறார். சிறையில் உள்ள நக்சல் இயக்க தலைவர்களை சந்திக்க அனுமதி கோரி,  ராம நவமியன்று அவர்களை சந்தித்து பேசுகிறார். வினோபாவிடம் எந்தத் திட்டமும் இல்லை, ஆனால் மக்களோடு மக்களாக கலந்து நடந்து கீதை சொல்லும் செய்தியை எடுத்து செல்ல வேண்டும் என்ற ஒரே உள்ளுணர்வு அவரிடத்தில் இருக்கிறது. எதைப் பற்றியும் அவர் கவலைப்படவில்லை.

வினோபா அவரது குழுவோடு  ஏப்ரல் 18 அன்று போச்சம்பள்ளி எனும் கிராமத்தை அடைகிறார். அங்கு மக்களை சந்தித்து உரையாடும் பொழுது, அந்த ஊரில் வாழும் நிலமற்ற ஏழை அரிஜன மக்கள் வினோபாவிடம் தங்களுக்கு நாற்பது ஏக்கர் நஞ்சை நாற்பது ஏக்கர் புஞ்சை நிலம் வேண்டும், நக்சல்கள் கொடுக்கவேண்டாம், அரசிடம் கேட்டு வாங்கி கொடுங்கள் என்று முறையிடுகிறார்கள். வினோபா கிராம மக்களின் கூட்டத்தில் உரையாற்றுகிறார்,  இந்த பிரச்னைக்கு என்ன செய்வது ? எப்படி இதை தகர்ப்பது என்று கேள்வி எழுப்பினார்.  ஒருக்கால் அரசு நிலம் ஏற்பாடு செய்யவில்லை என்றால்,கிராமத்தினரே அவர்களுக்குள் எதுவும் செய்துகொள்ள முடியுமா என்று கேட்கிறார். பிரச்னைகளுக்கு தீர்வு எட்டப்படவில்லை, தான் சர்ச்சைக்குரிய பகுதிகளில் பயணம் மேற்கொள்வதால் ஒருவேளை இதுவே கடைசி சந்திப்பாக இருக்கக்கூடும் என்றார்.

அப்பொழுது அந்த கூட்டத்தில் அமர்ந்து இருந்த அதே கிராமத்தை சேர்ந்த ராமசந்திர ரெட்டி எழுந்தார்  "நான் அவர்களுக்கு எனது நிலம் 100 ஏக்கரை கொடுக்கிறேன் " என்றார். மீண்டும் மாலை நடந்த பிரார்த்தனை கூட்டத்திலும் உணர்ச்சி மிகுதியோடு அதையே கூறினார்,  இது யாரும் எதிர்பாராதது.  அஹிம்சையின் வழியில் அன்பின் வலிமை கொண்டு இந்தப் பிரச்னையை தீர்க்க முடியும் என்று வினோபா நம்பினார். நிலத்திற்காக ரத்தம் சிந்தி கொண்டிருக்கும் நிலபரப்பில் மனமுவந்து ஒருவர் நிலத்தை தானமாக கொடுப்பது மிகப் பெரிய செயலாகும்.  நிலத்தை பெற்றவர்களோ எங்களுக்கு என்பது ஏக்கர் போதுமானது அதை காட்டிலும் ஒரு ஏக்கர் கூட கூடுதலாக தேவையில்லை என்று உறுதியாக நின்றனர். இது மற்றுமொரு ஆச்சரியம். இது இறைவனின் திட்டமாக, ஓர் சமிக்ஞையாக உணர்ந்தார். எல்லாம் துலக்கம் பெற்றது. அங்கிருந்து தொடங்கியது தான் பூதான இயக்கம் .

வினோபாவும் அவரது சகாக்களும் அதிகாலை மூன்று மணிக்கு எழுவர். அவரது குழுவில் -  லட்சியவாதிகள்,  இளைஞர்கள், வெளிநாட்டு ஆர்வலர்கள் என்று பலதரப்பட்ட மக்கள் பொதுவாக இருப்பார்கள். காலை எழுந்து அவர்களுக்குள் ஓர் சிறிய பிரார்த்தனை கூட்டம் நடத்தி முடித்துவிட்டு நடக்க தொடங்குவார்கள். நாளுக்கு பனிரெண்டு மைல் கணக்கு. ஒவ்வொரு கிராமத்திலும் திரளாக மக்கள் வரவேற்றனர்,  உணவும் இருப்பிடமும் கொடுத்து உபசரித்தனர். வினோபா மக்களிடம் பூமிதானத்தின் முக்கியத்துவத்தை பற்றி ஊர் மக்களுக்கு உரை நிகழ்த்துவார். அவரது தொண்டர்கள் அங்கு கிராமத்தினரை சந்தித்து நிலங்களை பெற்று வந்தனர். தெலுங்கானா  முழுவதும் நடந்தார், மக்கள் சாரை சாரையாக திரண்டு நிலங்களை வழங்க முன்வந்தனர். உள்ளார்ந்த கருணையின் ஒரு சிறு தீப்பொறி இந்தியா முழுவதும் பற்றிக்கொண்டது.

நிலகிழார்களிடத்திலும் விவசாயிகளிடத்திலும், "நான் தங்களது கடைசி மகன், எனது பங்கு நிலங்களை பிரித்து தாருங்கள்" என்று போகுமிடமெல்லாம் கோரிக்கைகள் வைத்தார். இந்தியாவில் நிலமற்று வாழும் விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய ஐம்பது மில்லியன் ஏக்கர் நிலங்கள் வேண்டும் என்று கணக்கிட்டார். அதற்கான முயற்சிகளில் இறங்கினார். ஆனால் அவரால் ஒரு பனிரெண்டு வருட காலத்தில் இந்தியா முழுவதும் நான்கு மில்லியன் ஏக்கர் நிலத்தை மட்டுமே பூதான் இயக்கம் மூலம் பெற்றளிக்க முடிந்தது. ஆயினும் கூட இது ஓர் மகத்தான சாதனை தான்.

விநாயக் என்ற இயற்பெயருடைய வினோபா 1895 ம் ஆண்டு, செப்டம்பர் 11 அன்று மகாராஷ்டிரத்தின் கொலோபா மாவட்டத்திலுள்ள ககோடா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். அவரது தாயார் ருக்மிணி தேவி, அவரது சகோதரர் பாலகோபா சிவாஜி ஆகியவர்கள் வினாயக்கை வெகுவாக பாதித்தனர். அவரது சகோதரர் துறவு பூண்டு வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாக மக்களுக்கு தொண்டாற்றினார்.

தனது இளம் வயதிலேயே வினோபாவிற்கு அபாரமான ஆன்மீக முதிர்ச்சி சாத்தியமானது. இன்டர்மீடியட் பரீட்சைக்கு மும்பைக்கு செல்வதாக இருந்த அவர் அதை கைவிட்டு வாரணாசி புறப்படுகிறார். அங்கு சமஸ்க்ருத பாடங்களை ஊன்றி கற்று தேறுகிறார். அப்பொழுது பனராஸ் இந்து பல்கலைகழகத்தில் காந்தி உரையாற்றுகிறார், அதன்பால் ஈர்க்கப்பட்டு அவருக்கு கடிதங்கள் எழுதுகிறார். காந்தி அவரை தனது அகமதாபாத் ஆசிரமத்திற்கு சந்திக்க அழைக்கிறார்.

அவரது மனதில் ஆன்மீக தேடலுக்காக இமயத்திற்கு செல்வதா அல்லது சுதந்திர புரட்சி பற்றி எரிகிற வங்காளத்துக்கு செல்வதா என்று பெறும் குழப்பம் ஏற்பட்டது.  ஜூன் 1916 ல் காந்தியை சந்திக்கிறார் வினோபா,  அவரது அக கொந்தளிப்புகள் முடிவுக்கு வருகின்றன, பிற்காலத்தில் அந்த சந்திப்பை பற்றி சொல்லும் பொழுது "நான் காசியில் இருந்த காலத்தில் இமயத்திற்கு செல்வதே எனது லட்சியமாக இருந்தது, அதே சமயம் வங்காளம் செல்ல வேண்டும் என்று ஆத்மார்த்தமாக வேண்டினேன், எனது இந்த இரண்டு ஆசையும் நிராசையாகின, விதி என்னை காந்தியிடத்தில் இட்டுச் சென்றது, காந்தியிடம் நான் இமயத்தின் பேரமைதியை மட்டும் உணரவில்லை வங்காளத்தின் புரட்சியின் கனப்பையும் உணர்ந்தேன்".

வினோபா மூன்று விதமான மனிதர்களை தெலுங்கானாவில் சந்தித்ததாக எழுதுகிறார், எளிய பொதுமக்கள்,  ஊரிலிருந்து துரத்தப்பட்ட பெறும் செல்வந்தர்கள்,  மற்றும் கம்யுனிஸ்டுகள். இந்த மூன்று தரப்பினரிடத்திலும் வினோபா தொடர்ந்து உரையாடிக்கொண்டே இருந்தார் .கம்யுனிஸ்டுகளிடம் -  "உங்களது நோக்கம் எத்தனை உயர்வாக இருந்தாலும், உங்கள் சித்தாதம் முன்வைக்கும் லட்சிய சமூகத்தை இதுவரை எந்த தேசமும் உருவாக்க முடியவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும், அதுவும் அதற்கு வன்முறை வழியில்லை, அதுவும் தற்பொழுது தான் இந்தியா சுதந்திரம் அடைந்துள்ளது,இந்த நேரத்தில் வன்முறை பிரயோகிப்பது நிச்சயம் தவறாகும் " என்றார். இவ்விளக்கம் அவர்களை திருப்தி படுத்தியது என்றே சொல்ல வேண்டும். அதே போல் தலைமறைவு வாழ்க்கை வாழும் நிலக்கிழார்களை சந்தித்து துணிவுடன் ஊருக்கு சென்று ஏழை மக்களுக்கு சேவை செய்யுமாறு அறிவுறுத்தினார்.  ஒளிந்து வாழ்வதை காட்டிலும் மரணம் மேலானது என்றார்.

பூதானம் ஓர் வேள்வி என்றார் அவர். மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், கர்நாடகம், தமிழகம் என்று தொடர்ந்து பயணித்தார் வினோபா. முதல் ஏழு வருடங்கள், அதாவது 57 வரை வெகு முனைப்பாக இந்த பூதான இயக்கம் செயல்பட்டது. பூதானத்தின் அடுத்த பரிணாமம் கிராம தான திட்டம். மே 1952 ல் உத்தரப் பிரதேசத்தில் பயணிக்கும் பொழுது மன்க்ராத் எனும் ஒட்டுமொத்த கிராமமே தானமாக கொடுத்தனர். தங்களது தனி சொத்தான நிலங்களை கிராம பொது சபைக்கு மக்கள் எழுதி கொடுத்தனர். இதுவும் ஓர் மிகப் பெரிய லட்சிய கனவாகும்.

தனி நபர் பூமி தானத்தை காட்டிலும் ஊரே இயைந்து வாழும் கிராம்தான திட்டம் சிறப்பானதாகும். இந்தியா முழுவதும் அப்படி சுமார் ஒரு லட்சத்தி அறுபதாயிரம் கிராமங்கள் கிராம தான இயக்கத்திற்கு கீழ் வந்தன.  அதாவது இந்தியாவின் ஒட்டுமொத்த கிராமங்களில் மூன்றில் ஒரு பங்கு. இந்திய அரசு கொண்டு வந்த நில உச்சவரம்பு சட்டத்தைக் காட்டிலும் பூதான இயக்கம் செறிவாக செயல்பட்டது அப்பட்டமான உண்மை. அரை மில்லியன் குடும்பங்களேனும் இதில் பயன்பெற்றது என்று ஓர் கணக்கெடுப்பு சொல்கிறது.

காந்தியின் தீவிரமான சீடராக திகழ்ந்தார். அவருக்கும் இவருக்குமான உறவு இருவரும் வாழும் வரை சீராகவே இருந்தது. 1923 ல் நாக்பூரில் சத்யாக்ரகம் செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் காந்தி அவரை வைக்கம் போராட்டத்திற்கு அனுப்பினார். பின் மீண்டும் 1932 ல் சிறைவாசம். 1940 ல் காந்தி வினோபாவை முதல் தனிமனித சத்யாக்ராகியாக தேர்ந்தெடுத்தார். கிராமீய பொருளாதாரம் மற்றும் காதியின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர் என்று காந்தியால் பாராட்டப் பெற்றவர். பின்னர் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார்.

கீதை காட்டும் பாதையில் வாழ்ந்தார் வினோபா. தங்கத்தை துறந்து வாழ ஓர் இயக்கத்தை தொடங்கினார், அதே போல் பண்டைய காலத்து ரிஷிகள் போல் எருதுகளை பயன்படுத்தாமல் உழும் முறையை பிரபலபடுத்தினார்,  ஸ்ரமதானம்- பொது வேலையில் பங்கெடுப்பது,  சாந்தி சேனை, ஜீவ தானம் - தனது உயிரையே உயர்ந்த லட்சியத்திற்காக கொடுக்கத்  துணிவது போன்றவை அவர் தொடங்கிய முன்னோடி இயக்கங்கள்.

லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயணன் விநோபாவால் ஈர்க்கப்பட்டு ஜீவ தானம் செய்துகொண்டார். இத்தனையும் சாதித்தவர் அறுபது வயதை நெருங்கி கொண்டிருந்த வயிற்றுப்  புண், வயிற்றுப்  போக்கு மலேரியா போன்ற நோய்களால் நீண்டகாலமாக வாதனையில் உழன்ற எளிய மனிதர் . அவரது வயிற்றுப்  புண்ணின் காரணமாக அவரது உணவே தேன், தயிர், மற்றும் பால் ஆகியவை மட்டும் தான்.

பூதான இயக்கம் உலகமெங்கும் கவனம் பெற்றது, அமெரிக்காவின் லூயிஸ் பிஷர் ,"அண்மைய காலத்தில் கிழக்கிலிருந்து நமக்கு கிடைத்த மிக சிறந்த படைப்பூக்கம் மிக்க திட்டங்களில் ஒன்று கிராம தானம்" என்றார். ஹல்லாம் டென்னிசன், பிரபல ஆங்கில கவிஞர் ஆல்பிரெட் டென்னிசன் அவர்களின் பெயரன், வினோபாவுடன் தான் இந்திய கிராமங்களுக்கு ஊடாக பயணித்ததை 'தி செயின்ட் ஆன்  தி மார்ச்' எனும் பெயரில் புத்தகமாக வெளியிட்டார். இந்தியாவின் பூதான இயக்கம் கம்யூனிசத்திற்கு சிறந்த மாற்று என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செஸ்டர் போவ்லேஸ் அவரது புத்தகத்தில் குறிப்பிடுகிறார். பிரித்தானிய தொழிலதிபர் ஈர்நெஸ்ட் பார்டர் பூதான இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, காந்திய அரங்காவல முறையை ஏற்றுக்கொண்டு தனது நிறுவனத்தின் தொண்ணூறு பங்கு லாபத்தை தொழிற்சாலை தொழிலாளிகளுக்கு கொடுத்தார். 'டைம்' பத்திரிக்கை அட்டையில் வினோபா படத்தை போட்டு கௌரவித்தது .

சம்பல் பள்ளத்தாக்கில் பதுங்கி கொள்ளையடிக்கும் ஒரு கும்பல் ஆயுதங்களை துறந்து அவரிடம் சரணடைந்தது.உண்மையில் இது அஹிம்சையின் மாபெரும் வெற்றி. வாழ்க்கை முழுவதும் பயணித்தார், பல ஆயிரம் மேடைகளில் உரையாற்றினார்,  பதிமூன்று வருட சுற்று பயணங்களை முடித்துக்கொண்டு மீண்டும் ஊர் திரும்பினார். பின்னர் ஒரு நான்கு வருடம் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அதன் பின்பு பசுவதைக்கு எதிராக ஓர் இயக்கத்தை முன்னெடுத்தார். 74-75 வரை அவரது பௌனர் ஆசிரமத்தில் மௌன விரதத்தில் ஆழ்ந்தார். மெல்ல தனது வெளியுலக தொடர்புகளைத் துண்டித்துக் கொள்ளத் துவங்கினார். அவரது ஆன்மீக பசி அவரை ஆட்க்கொண்டது.

பூதான இயக்கம் மற்றும் வினோபாவின் மேல் பல குற்றசாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. கிராமதான இயக்கத்தில் அனேக கிராமங்கள் உறுதிமொழியில் எளிதாக கையெழுத்து இட்டனர்; ஆனால் நடைமுறையில் அத்தனை கிராமங்களும் அப்படி மாறிவிடவில்லை. 70 களில் வெகு சில ஆயிரம் சிறிய கிராமங்களே நிலத்தை கிராமசபைக்கு ஒப்படைத்தது. அதுவும் அநேகமாக ஓர் இனக்குழுவாக, ஒரே சாதியாக வாழ்ந்து வந்த கிராமத்தினரே அப்படி செய்தனர். நாலு லட்சம் ஏக்கர் நிலம் தானமாக அளிக்கப்பட்டாலும் சுமார் ஒன்றே முக்கால் லட்சம் ஏக்கர் நிலம் மட்டுமே உரியவர்களை சென்றடைந்தது. மீதி நிலங்கள் சட்ட சிக்கல்களாலோ அல்லது வேறு காரணங்களாலோ பயனற்றுப் போயின. நிலம் கொடுத்த நிலக்கிழார்கள் அனைவரும் வேண்டி விரும்பிக்  கொடுத்தனர் என்று சொல்ல முடியாது.  பலரும் நக்சல்களிடத்திளிருந்து பாதுக்காத்துகொள்ள பயந்து கொடுத்தனர். காந்தியை அதீதமாக நகலெடுக்கிறார் என்றும், காந்தி சொல்வதை எந்த ஓர் விவாதமும் இன்றி ஏற்றுகொள்வார் என்றும் வினோபா விமரிசிக்கப் பட்டார். அனைத்தையும் காட்டிலும், ஜெயபிரகாஷ் நாராயணன் இந்திரா அரசுக்கு எதிராக நடத்திய இயக்கத்தை அவர் ஆதரிக்கவில்லை,  இந்திரா கொண்டு வந்த அவசர கால சட்டத்தை, அது நாட்டிற்கு தற்பொழுதைய தேவை என்று ஆதரித்தது பலருக்கும் பெறும் அதிர்ச்சியை அளித்தது.

சில குறைகள் இருப்பினும் கூட, இந்தியாவில் காந்திக்குப் பிறகு , காந்திய வழிமுறைகளின் வலிமையை அதன் முக்கியத்துவத்தை உலக மக்களுக்கு வினோபா உணர்த்தினார்.அவரது அணுகுமுறையால் கவரப்பட்ட ஜெ.பி. தன் வாழ்நாள் முழுவதும் சர்வோதயா அமைப்புக்காக போராடுவேன் என்று உறுதி பூண்டார். காந்தியத்தை இன்றளவிலும் உயிர்ப்புடன் வைத்து இருக்க வினோபா ஓர் முக்கிய ஆளுமையாகும்.

உலக அளவில் பூதான இயக்கம் அஹிம்சை வழியில் முன்னெடுத்து செல்லப்பட்ட மிக சிறந்த இயக்கங்களில் ஒன்றாகும். அது ஓர் மிகப் பெரிய கனவு, நிறைவேறா கனவு தான்.  ஆனால் அர்த்தமற்ற கனவில்லை. நீர், சூரியன், வானம் மற்றும் காற்றை போல் நிலமும் இயற்கை ஒட்டுமொத்த உயிரினகளுக்கு கொடுத்த கொடை என்றே அவர் எண்ணினார். மக்கள் சக்தியே அரசின் சக்தியை காட்டிலும் மகத்தானது என்றார். காந்தியின் கனவுகளை சுமந்து திரிந்தார். கிராமம் கிராமமாக கால்நடையாக அன்பையும் கருணையும் அவரோடு கொண்டு சென்றார். 1982 ஆம் ஆண்டு நவம்பர் 15 அன்று உடல் உயிரை துறப்பதற்கு முன், ஒரு வார காலம் உபவாசமிருந்து அவரது உயிர் உடலை துறந்தது. மற்றும் ஒரு மகாத்மா நம் புலன்களுக்கு அப்பால் புறப்பட்டார்.

மேலதிகம் வாசிக்க:

http://www.mkgandhi.org/vinoba/vinoba.htm
http://www.markshep.com/peace/GT_Vinoba.html

-சுகி
 
 
காண்க: