நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

30.6.13

பணம் தேவையில்லை; மனம் தான் தேவை!

முதியோர் இல்லத்தில் உள்ள ஒரு மூதாட்டியுடன் ஈரநெஞ்சம் மகேந்திரன்.
முதியோர் இல்லத்தில் உள்ள ஒரு மூதாட்டியுடன் ஈரநெஞ்சம் மகேந்திரன்.

மதுரை
யைச் சேர்ந்தவர் முத்துகுமார் (28). வீட்டில் ஏதோ பிரச்னை; கோபித்துக் கொண்டு வெளியேறிவிட்டார். இவருக்கு மறதிநோயும் உண்டு. வீடு திரும்பத் தெரியாமல் எங்கெங்கோ அலைந்து கடைசியில் கோவை வந்து சேர்ந்தார். கண்கள் மிரள, சவரம் செய்யப்படாத பல மாதத் தாடியுடன், கந்தல் உடையுடன் தெருக்களில் பைத்தியமாக அலைந்துகொண்டிருந்தார்…
திருவள்ளூரைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (80); ரயிலில் பழவியாபாரம் செய்து வந்தவரை மடக்கிய சிலர் அவரது நகைகளைப் பறித்துக்கொண்டு துரத்திவிட்டனர். இதில் மனநிலை பாதிக்கப்பட்ட ராஜம்மாள் மனம் போன போக்கில் அலைந்து கோவை வந்தார்; நகரத் தெருக்களில் பிச்சைக்காரியாகத் திரிந்துகொண்டிருந்தார்…
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் அசோகன் (42); 18 ஆண்டுகளுக்கு முன் மனநிலை பிறழ்ந்து வீட்டைவிட்டுப் போனவர். இறந்துவிட்டதாக குடும்பத்தினரே மறந்திருந்த வேளை. கோவையில் பரிதாபமான தோற்றத்தில் பேருந்து நிறுத்தத்தில் கிடந்தார்…
கோவை, சரவணம்பட்டியைச் சேர்ந்தவர் நிர்மலா (29), மனநிலை பாதிக்கப்பட்டவர்; யாரிடமும் பேசமாட்டார். 4 ஆண்டுகளுக்கு முன் வீட்டைவிட்டு வெளியேறியவரை குடும்பத்தினர் தேடி அலுத்துவிட்டனர். அலங்கோலமான ஆடைகளுடன் பூங்கா அருகே படுத்துக் கிடந்தார்…
- நீங்களும் இத்தகைய பரிதாபத்திற்குரிய மனிதர்களை தெருவில் சந்தித்திருக்கலாம். பார்த்தவுடன் ஒரு நிமிடம் மனம் துணுக்குறலாம். அடுத்த நிமிடம் சுதாரித்துக் கொண்டு, அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவோம். கொஞ்சம் இரக்கம் உள்ளவராக இருந்தால் சில்லறைக் காசுகளைப் போட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடையைக் கட்டுவோம். அவரவர் வேலையே அவரவருக்கு பெரும் சுமை.  இது ஒரு பொதுவான மனநிலை.
eeranenjam08
ஆனால், கோவை, காந்திபுரத்தில் குடியிருக்கும் மகேந்திரனுக்கு இத்தகைய மனிதர்களை மீட்பதே வாழ்க்கை லட்சியம். தெருவில் திரியும் ஆதரவற்ற, மனநிலை பிறழ்ந்த மனிதர்களை மீட்டு, முடி வெட்டி, அவர்களைக் குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து, அருகிலுள்ள காப்பகங்களில் சேர்ப்பதை தனது கடமையாகவே செய்து வருகிறார்.
.
அதுமட்டுமல்ல, கோவையிலுள்ள 15 ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் அவ்வப்போது சென்று அங்குள்ள ஆதரவற்றோருடன் கனிவுடன் உரையாடி, நகம் வெட்டி, உணவு வழங்கி, தோழமை காட்டுவதும் இவரது பணி.
.
இவருடன் ஒரு இளைஞர் பட்டாளமே பணிபுரிவது மகிழ்ச்சி அளிக்கும் கூடுதல் தகவல்.அவ்வாறு நட்புடன் பழகி, அவர்கள் அளிக்கும் தகவல்களை முகநூலிலும் வலைப்பூக்களிலும் படத்துடன் வெளியிட்டு, பாதிக்கப்பட்ட பலரை அவர்களது குடும்பத்துடன் சேர்த்துவைத்திருக்கிறார்கள். முத்துகுமார், ராஜம்மாள், அசோகன், நிர்மலா ஆகியோர், அவ்வாறு பிரிந்த குடும்பத்தில் சேர்த்து வைக்கப்பட்டவர்கள் தான்.
eeranenjam07
கோவையில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களிலும் காவல் நிலையங்களிலும் ‘ஈரநெஞ்சம் மகி’ என்றால் தெரியாதவர் இருக்க முடியாது. சுமார் ஐந்தாண்டுகளாக இந்த சேவைப்பணியில் மகேந்திரன் ஈடுபட்டிருக்கிறார். இதற்கென, ஒத்த கருத்துள்ள பரிமளா வாகீசன், சுரேஷ் கணபதி, தபசுராஜ், குமார் கணேஷ் ஆகியோருடன் இணைந்து ஈரநெஞ்சம் அறக்கட்டளையைத் துவக்கி இருக்கிறார். ‘ஈகை விலக்கேல்’ என்பது இவர்களது அமைப்பின் முத்திரை வாக்கியம்.
இவர்களது சேவையால் இதுவரை கோவை தெருக்களில் திரிந்த நூற்றுக்கு மேற்பட்ட மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர்கள் மீட்கப்பட்டு காப்பகங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்; காப்பகங்களில் இருந்து 25க்கு மேற்பட்டவர்கள் தங்கள் குடும்பத்துடன் இணையவும் ஈரநெஞ்சம் உதவி இருக்கிறது. அதுமட்டுமல்ல, தெருக்களில் திரியும் நோயாளிகளை அரசு மருத்துவமனையில் சேர்ப்பதும், அநாதையாக இறப்போரின் சடலங்களுக்கு இறுதிச்சடங்கு செய்வதும் இவர்களின் அற்புதமான பணிகளில் சில.
eeranenjam09
இத்தனைக்கும் மகேந்திரன் (35) வசதியானவர் அல்ல; ஆட்டோ உதிரி பாகங்களைத் தயாரிக்கும் குறுந்தொழிலதிபர் மட்டுமே. மனைவி, மகள் என்று சிறு குடும்பம். வரும் வருமானத்தில் ஒரு பகுதியை சேவைக்கெனவே ஒதுக்கிவிடுகிறார். குடும்பமும் அவருக்கு ஒத்துழைக்கிறது. அவரது தொழில் தொடர்புள்ள நிறுவனங்களும் மனமுவந்து ஆதரவளிக்கின்றன. நல்லது செய்ய முன்வருவோருக்கு உதவ நல்ல உள்ளங்களும் இருக்கவே செய்கிறார்கள்.
இவ்வாறு சேவை செய்யும் ஆர்வம் எப்படி வந்தது? சொந்தக் குழந்தை மலஜலம் கழித்தால் கூட மனைவியைக் கூப்பிடும் கணவர்கள் மிகுந்த உலகத்தில், முகமறியாத பலருக்கு முடிவெட்டி, குளிப்பாட்டி சேவை செய்யும் மனம் எங்கிருந்து வந்தது?
eeranenjam05
இதோ மகேந்திரனே பேசுகிறார்…
நானும் நடுத்தரவர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவன் தான். மனநிலை பாதிப்பின் கொடுமை எனக்கு அனுபவப்பூர்வமாகவே தெரியும். எனது சகோதரியின் மனநிலைப் பிறழ்வால் அவர் அடைந்த கஷ்டங்கள் கொஞ்சமல்ல. அப்போதே, இதுபோல பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்துவிட்டேன்.
தெருவில் திரியும் பைத்தியகாரர்களைக் கண்டு நாம் பொதுவாக மிரள்கிறோம். ஆனால், அவர்கள் தான் நம்மைக் கண்டு அஞ்சுகிறார்கள். தெருக்களில் பலவாறாக அலைக்கழிக்கப்பட்ட அவர்களின் துயரக் கதைகளைக் கேட்டால் நெஞ்சம் வெடித்துவிடும்.
மனநிலைப் பிறழ்வுக்கு காரணங்கள் பல இருக்கலாம். அவர்கள் அப்படி இருக்க வேண்டும் என்று விரும்பி வந்தவர்களல்ல. அவர்களின் விதி அப்படி ஆக்கியிருக்கிறது. நம்மால் முடிந்தால் அந்த விதியில் சிறிது மாற்றம் செய்ய முடியும்.
காப்பகங்களில் எங்கோ வெறித்தபடி வாழ்க்கையே சுமையாக இருக்கும் மனிதர்களுக்கு நம்மாலான சிறு உதவி ஆறுதலான பணிவிடைகள் தான். இதற்கு பெரிய அளவில் பணம் தேவையில்லை; மனம் தான் தேவை. எங்களைப் பொருத்த வரை, நாங்கள் ஆதரவற்றோருக்கு உதவ முற்படும்போது, சம்பந்தமில்லாத பலர் எங்களுடன் கைகோர்த்துப் பணிபுரிவதைக் கண்டிருக்கிறேன். சமுதாயத்தில் ஈரநெஞ்சம் இல்லாமல் போய்விடவில்லை.
நமது குழந்தை அழுதுகொண்டிருக்கும்போது நம்மால் நிம்மதியாகச் சாப்பிட முடியுமா? மனநிலை பாதிக்கப்பட்ட இவர்கள் இறைவனின் குழந்தைகள். இவர்களுக்கு நாங்கள் செய்வது சேவையல்ல; கடமை. ஓர் உயிரை, ஒரு மனிதரின் வாழ்க்கையைக் காப்பதைவிட திருப்தி அளிக்கும் பணி வேறென்ன?
இந்த வேலையில் இறங்குவதால் சுயதொழிலில் சாதனை படைக்க முடியாமல் போகலாம். இன்று எங்களுக்குக் கிடைப்பது குறைவாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு கிடைக்கும் மனநிம்மதி அளவற்றது…
- சொல்லிக்கொண்டே போகிறார் ஈரநெஞ்சம் மகேந்திரன்.
eeranenjam03
வீட்டைவிட்டு வெளியேறி பைத்தியமான நிர்மலா யாரிடமும் பேசாமல் இருந்தவர், மகேந்திரனின் முயற்சியால் குடும்பத்துடன் சேர்க்கப்பட்டபோது கண்ட உருக்கமான காட்சி மகத்தானது. 4 ஆண்டுகளாகப் பேசாமல் இருந்த நிர்மலா குடும்பத்தாருடன் சேர்ந்த ஆனந்த அதிர்ச்சியில் பேசத் துவங்கிவிட்டார்; இப்போது நலமாக இருக்கிறார்.
ஒரு நிர்மலா காப்பாற்றப்பட்டுவிட்டார். இன்னும் பல நிர்மலமான ஜீவன்கள் தெருக்களில் அலைந்துகொண்டிருக்கிறார்கள். உங்களிடமும் இருக்கிறதா இந்த ஈரநெஞ்சமும் துடிப்பும்?
- தினமணி- ஞாயிறு கொண்டாட்டம் (30.06.2013)
.
தொடர்புக்கு:  
P.மகேந்திரன்,
நிர்வாக அறங்காவலர்,
ஈரநெஞ்சம் (பதிவு எண்: BK4 193/2012)
406, ஏழாவது வீதி, காந்திபுரம்,
கோயம்புத்தூர்- 641 012.
.
அலைபேசி: 90801 31500
மின்னஞ்சல்: eeram.magi@gmail.com
இணையதளம்: http://www.eeranenjam.org
.