நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

17.6.12

தன்னைத் தந்து நம்மை உணர்த்தியவன்

வீரன் வாஞ்சிநாதன்
(பலிதானம்: ஜூன் 17)

'இந்திய
சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர்கள்' ' என்று ஒரு நீண்ட பட்டியல் உண்டு. இந்தப் பட்டியலில் உள்ளவர்களில் ஒருவராகத் தான் வாஞ்சிநாதன் சித்தரிக்கப் பட்டிருக்கிறார். உண்மையில் இவர் இதற்கும் மிக மேலே. இவர் வரலாற்று நாயகன். ஆனால், அவரது தீரச் செயலின் கன பரிமாணம் தனித்தன்மை வரலாற்று முக்கியத்துவம் சரியாக உணரப்படவில்லை.

1. இவர்தான் ஆங்கிலேயரிடம் கணக்குத் தீர்த்தவர்.

ஆங்கிலேயர்கள் நாடு விட்டு நாடு வந்து இந்த மண்ணை ஆக்கிரமித்து இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்களையே அடிமைப் படுத்திக் கொண்டவர்கள். தமிழகத்தில் தங்களை எதிர்த்துப் போராடிய புலித்தேவன், சின்னமலை, கட்டபொம்மன், ஊமைத்துரை, அழகு முத்துக்கோன், மருது சகோதரர்கள் ஆகியோரை இந்த மண்ணிலேயே தூக்கிலிட்டுக் கொன்றவர்கள்.

கட்டபொம்மன் வாழ்ந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைத் தகர்த்து தரைமட்டம் ஆக்கியதுடன் அந்த மண்ணில் தங்களுக்கு எதிராக மீண்டும் ஒரு போராட்டம் உருவாகிவிடக் கூடாது என்பதற்காக அந்த ஊரையே ஏர் கொண்டு உழுது விட்டார்கள்.
வேலூர்ப் புரட்சியின் முடிவில் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட பின் அவர்களது வாரிசுகள் மீண்டும் தங்களுக்கு எதிராகத் தலை எடுத்து விடக் கூடாது என்பதற்காக இளம் சிறார்களாயிருந்த அவர்களது மகன்களையும் மருதுபாண்டி யருக்குத் துணை நின்ற புரட்சிக் காரர்களையும் மலேயாவுக்கு நாடு கடத்தி அங்குள்ள சிறையில் அடைத்தவர்கள்.

பிற்காலத்தில் ஆஷ்துரை கூடத் தன் பங்கிற்குத் தூத்துக்குடியில் ஊர்வலமாக வந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் சிலரைச் சுட்டு வீழ்த்தியிருக்கிறார். இத்தகைய கொடுமைக்கார ஆங்கிலேயரை எதிர்த்துப் பிற்காலத்தில் தமிழகத்தில் தமிழர்கள் கொடி பிடித்திருக் கிறார்கள். சிறை சென்றிருக்கிறார்கள். சிறை சென்றிருக்கிறார்களே தவிர, யாரும் ஆயுதம் ஏந்தவில்லை 1806 இல் குறுநில மன்னர்களும் பாளையக்காரர்களும் நடத்திய வேலூர்ப் புரட்சிக்குப் பின் 105 ஆண்டுகள் கழித்து அந்தக் குறையைப் போக்கி அவர்களிடம் கணக்குத் தீர்த்தவர் வாஞ்சிநாதன் தான்.

2.  இவர் தான் தனது தீரச் செயலின் மூலம் இங்கிலாந்து நாடாளுமன்றத்திலும் பேசப் பட்டவர்.


இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் ஆங்கிலேய அரசை எதிர்த்து தமிழகத்தில் நடந்த போராட்டங்களின் பாதிப்புகள் எல்லாம் தமிழக எல்லையைத் தாண்டவில்லை. ஆனால், வாஞ்சிநாதன் நிகழ்த்திய தீரச் செயல்தான் இந்திய எல்லையையும் தாண்டி நம்மைப் பாதித்துக் கொண்டிருந்த இங்கிலாந்து நாட்டையே உலுக்கியது. ஆங்கிலேயரிடம் பாதிப்பை ஏற்படுத்தியது. தகவல் தொடர்பு, போக்குவரத்து ஆகிய துறைகளில் மிகவும் பின் தங்கியிருந்த அக்காலத்திலேயே வாஞ்சிநாதன் 1911, ஜுன் 17 ல் ஆங்கிலேயப் பேரரசின் பிரதிநிதியான கலெக்டர் ஆஷ்துரையைச் சுட்டது பற்றி 1911 ஜுன் 19 ம் தேதி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

3. இவர் தான் வெளிநாட்டுப் பத்திரிகையின் தலையங்கத்தில் புகழப் பட்டவர்.


இந்திய விடுதலையில் மிகவும் அக்கறை கொண்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுக்குப் பக்கபலமாகத் திகழ்ந்த மேடம் காமா அவர்கள் அப்போது பாரீஸ் நகரிலிருந்து வெளியான தனது 'வந்தே மாதரம்' பத்திரிகையின் தலையங்கத்தில் வாஞ்சிநாதன் தீரச் செயலைப் புகழ்ந்து இவ்வாறு எழுதினார்:  "திருநெல்வேலி கலெக்டர் ராபர்ட் வில்லியம் டி எஸ்கார்ட் ஆஷ் என்பவரை வாஞ்சிநாதன் என்ற இளைஞர் பட்டப் பகலில் சுட்டுக் கொன்ற நிகழ்ச்சி இந்திய மக்கள் உறங்கவில்லை என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. வடக்கோ, தெற்கோ, கிழக்கோ இந்தியாவின் எந்தப் பகுதியுமே இனிமேல் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குப் பாதுகாப்பான பகுதிகள் இல்லை என்பதை எச்சரிக்கும் அபாயச் சங்கு ஊதப்பட்டு விட்டது. இதுவரை மிதவாத அரசியலின் தொட்டிலாக விளங்கி வந்த தென்னாட்டிலும் புரட்சிக் கனல் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கி விட்டது. இனிமேல் இந்தியாவில் பணியாற்ற வரும் பிரிட்டிஷ் அதிகாரிகள் இங்கிலாந்திலிருந்து புறப்படும்போதே தங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தான் வர வேண்டியிருக்கும்''.

வாஞ்சிநாதனும் வ.உ.சியும்:

வ.உ.சி. மென்மையான மேன்மையான பண்புக்குச் சொந்தக்காரர். ஈ, எறும்புக்குக் கூடத் துன்பம் விளைவிக்காதவர். இத்தகைய வ.உ.சியே கூட, சிறையிலிருந்த தன்னிடம் சிறைக்காவலன் கலெக்டர் ஆஷ்துரையை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்ற செய்தியைக் கூறியதும், ஆஷ்துரை கொல்லப் பட்டதற்காகக் கொஞ்சமும் இரக்கப்பட வில்லை. மாறாக, "நல்ல செய்தியைச் சொன்னாய். நீ நலம் பெறுவாய்'' என்று அவனை வாழ்த்தினார். அத்துடன் அவனிடம் தான் சிறைவாசம் அனுபவிப்பதற்கும், தனது கப்பல் கம்பெனி நசிந்து போனதற்கும் இந்த ஆஷ்துரைதான் காரணம் என்றும் விளக்கினார்.

ஆங்கிலேயர் காலத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களின் சிறைவாசம் என்பது கடுமையானது; கொடுமையானது. இந்தச் சூழ்நிலையில், "இங்கிலாந்து சக்கரவர்த்தியின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு சிறைக் கைதிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் தண்டனைக் குறைப்பு இந்த ஆண்டு வ.உ.சிக்கு கிடையாது'' என்று அந்த சிறைக் காவலன் கூறிய போது, "இப்பொழுது மட்டுமல்ல, இனி எப பொழுதுமே எனக்கு விடுதலை இல்லா விட்டாலும் கூடப் பரவாயில்லை'' என்று அலட்சியமாக அவர் பதில் கூறினார் என்றால், ஆஷ்துரை கொல்லப்பட்டது அவருக்கு எத்தகைய மகிழ்ச்சியை அளித்திருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

முத்துராமலிங்கத் தேவர் வாஞ்சிநாதனிடம் கொண்டிருந்த மரியாதை. "சூரரைப் போற்று'' என்பார் பாரதி. யாருக்கும் தலைவணங்காத தன்மானச் சிங்கம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். இவர் ஒவவோர்  ஆண்டும் தீபாவளிக்குச் சில நாட்களுக்கு முன் அப்போது சென்னையில் வசித்து வந்த வாஞ்சிநாதனின் மனைவி பொன்னம்மாள் அம்மையாரைச் சந்தித்து அவருடைய காலில் விழுந்து வணங்கி அவருக்கு ஒரு புடவை வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். இது அவர் வாஞ்சிநாதனிடம் கொண்டிருந்த மரியா தைக்கு ஒரு எடுத்துக்காட்டு.



.
 


1 கருத்து:

sakthi சொன்னது…

நல்ல வரலாற்று பதிவு சார் .நன்றி .நம் முன்னோரின் தேச தியாகம் நம் சுதந்திரத்தின் மகத்துவத்தை காட்டுகிறது .

கருத்துரையிடுக