நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

24.6.12

இவன் நிரந்தரமானவன்

கண்ணதாசன்
(பிறந்த தினம்: ஜூன் 24)

காரைக்குடி அருகிலுள்ள சிறுகூடல்பட்டியில் 1927 ஜூன் 24 இல் பிறந்தான் முத்தையா. நாட்டுக் கோட்டை நகரத்தார் சமுதாய வழக்கத்தின்படி, உடலெங்கும் திருநீறு பூசி சைவ நெறியில் வளர்ந்தான். எட்டாவது வரை மட்டுமே படித்த முத்தையாவை காலம் கவிஞனாக்கியது. சைவத்தில் வாழ்ந்த முத்தையா, பகவான் கண்ணனிடம் மனதை பறிகொடுத்ததால் கண்ணதாசனானார்.

ஸ்ரீ கிருஷ்ண கவசம், கிருஷ்ண அந்தாதி, கிருஷ்ண கானம் என கவிதை நூல்களை படைத்தார். கடைசிப் பக்கம், போய் வருகிறேன், வனவாசம், மனவாசம் என தன் வாழ்க்கையை வரைந்தார். பகவத்கீதையையும் அபிராமி அந்தாதியையும் எளிய தமிழில் விளக்கினார்.

திரையிசைப் பாடல்கள் அள்ளிக் கொடுத்தார். இவரை தமிழக அரசின் ஆஸ்தான கவிஞனாக அமரவைத்தார் எம்.ஜி.ஆர். சாகித்ய அகாடமி விருது இவரை அலங்கரித்தது. அமெரிக்க சிகாகோ நகர மருத்துவமனையில் 17-10-1981இல் மறைந்தார்.
இவன் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் இவனுக்கு மரணமில்லை.

அர்த்தமுள்ள வாழ்க்கை


சேலம் நகரில் திராவிட கழகத்தினர் ஸ்ரீராமன் படத்திற்கு செருப்புமாலை அணிவித்தும், வினாயகர் சிலைகளை செருப்பால் அடித்தும், உடைத்தும் நடத்திய ஊர்வலம் ஹிந்துக்களின் மனதை நோகடித்தது. நாத்திக கண்ணதாசன் இந்த ஆபாச ஊர்வலத்தை அறிந்து துடித்தார். துக்ளக் பத்திரிகையில் ‘நமது மூதாதையர் முட்டாள்களல்லர்’ என்ற தலைப்பில், ஹிந்து மத எதிர்ப்பாளர்களுக்கு எச்சரிக்கை செய்தார். மீண்டும் அதே பத்திரிகையில் ‘நான் ஒரு ஹிந்து’ என்று தலைப்பிட்டு தன்னிலை விளக்கக் கட்டுரை வடித்தார்.

அப்போது, தினமணிக் கதிர் ஆசிரியர் ‘சாவி’ அவர்கள், எங்கள் பத்திரிகைக்கெல்லாம் எழுத மாட்டீர்களா" என்று கேட்க, ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ உருவானது. உலகெங்கும் வாழும் தமிழர் உள்ளமெல்லாம் குளிர்ந்தது. நாத்திக நாற்றத்தை விரட்டியடித்தது கவியரசு கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம். இப்புத்தகத்தின் வெளிச்சத்தில் பாமர மக்களை கும்பல்களின் இருட்டுச் சிந்தனைகள் சிதறிப் போயின.

எரித்ததும் எறிந்ததும்

தி.மு.க. கம்ப ராமாயணம் எரிப்புப் போராட்டம் நடத்தியபோது ஓரிடத்தில் கவிஞரும் கலந்து கொண்டார். பகவான் கண்ணன் தன் தாசன் மனதில் புகுந்து என்ன லீலை செய்தானோ தெரியவில்லை. திடீரென கவிஞர் தன் போராட்டத்தை ரத்து செய்துவிட்டு கம்ப ராமாயணத்தை கட்டியணைத்து வீட்டுக்கு எடுத்துச் சென்றார். அதனை முழுவதுமாக படித்து முடித்தார். கம்பனின் கவிச்சொற்கள் கவிஞரின் நாத்திக அறிவை எரித்தது; அப்பொழுதே தி.மு.கவை தூக்கி எறிந்தார்.

கவிஞனின் கனிவு


ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் கவிஞர் வாலி. கண்ணதாசன் இரவு பதினோரு மணியாகியும் வரவில்லை. நள்ளிரவு நேரத்தில் அரங்கில் நுழைந்தார் கண்ணதாசன். கோபத்திலிருந்த வாலி, அவரை வரவேற்றார். செய்தித்தாள் ஒன்றை வாலியிடம் நீட்டிய கண்ணதாசன் ‘நாளைக்கு வாலிக்கு பிறந்தநாள், அதனால் வாலி பற்றி கவிதை எழுதி பேப்பரில் போடச்சொல்லி அச்சானதும் எடுத்து வந்தேன்’ என்று அறிவித்தார். வாலி தேம்பித் தேம்பி அழுதார்.


நன்றி: விஜயபாரதம்
.
காண்க:

காவியத்தாயின் இளைய மகன்

.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக