நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்
சீர்திருத்த செம்மல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சீர்திருத்த செம்மல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

7.7.12

இனம் காக்க வந்த மீட்பர்

திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன்
(ஜூலை 7, 1859 - செப்டம்பர் 18, 1945)

திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் (ஜூலை 7, 1859 - செப்டம்பர் 18, 1945),   அரசியல்வாதி, சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், வழக்குரைஞர், பத்திரிகையாளர்,  தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்தவர் எனப் பல முகங்களை உடையவர்.  பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்து, 'பறையன்' என்ற திங்கள் இதழையும் நடத்தியவர் இவர். சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1923 முதல் 1939 வரை இருந்திருக்கிறார்.  தான் சார்ந்த தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காக உழைத்த பெருந்தகை இவர்.

செங்கல்பட்டு  மாவட்டத்தில் மதுராந்தகம் அருகில் கோழியாலம் என்னும் கிராமத்தில் சடையன் என்பவருக்கு 7.7.1859 அன்று மகனாகப் பிறந்தார். அம் மாவட்டத்தில் நிலவிய தீண்டாமைக் கொடுமை தாங்கமாட்டாமல் தஞ்சைக்குக் குடிபெயர்ந்தது அக் குடும்பம். பின்னர் கோவை படிக்க தேர்ந்த போது படித்த 400 பிள்ளைகளில் 10 பேர் தவிர மற்றவர்கள் உயர்சாதியினர்.  சாதிகள் மிகத் கடினமாக கவனமாகக் கடைபிடிக்கப்பட்டதால், சாதி இந்து மாணவர்களுடன் பழகுவதால் சாதி, குடும்பம், இருப்பிடம் ஆகியவை தெரிந்துவிட்டால் என்ன நடக்குமோ என்று அஞ்சி படித்து வந்தார். இதை அவரே தனது சுயசரிதையில் எழுதி இருக்கிறார்.

படிப்பு முடித்தவுடன் நீலகிரியில் 1882 ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் வணிகப் பணிமனையில் வேலையில் சேர்ந்தார். பிளாவட்ஸ்கி அம்மையார் தியோசாபிகல் சொசைட்டி மூலம் வறுமையாலே வாடுகிற மக்களுக்கு வழி காட்டுகிறேன் என்று சொல்லி மதமாற்றம் செய்தார்கள். ஆனால் இரட்டை மலை சீனிவாசன், அதற்கு ‘நான் இந்துவாகப் பிறந்து விட்டதால் இந்து மதத்திலிருந்து கொண்டே உரிமைக்காகப் போராட வேண்டி கோருவேன்' என்றார்.

1884 ம் ஆண்டு சென்னை அடையாறில் தியோசோடிகல் சொசைட்டியின் ஆண்டு விழா நடைபெற்றது. அதில் வங்காள பாபுகளும், பம்பாய் பார்சிகளும், பிராமணர்களும், ஐரோப்பா, அமெரிக்கா, இலங்கை முதலான தேசங்களிலிருந்து கலந்து கொண்டனர். அப்போது அரசியல் இயக்கம் தோற்றுவிக்க முடிவெடுக்கப்பட்டது. இந்தியாவின் பிரச்சினைகள் இரண்டு. இந்தியர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து உரிமைக்காகவும், பூரண சுதந்திரமடைய வேண்டும். இந்தியாவில் பிறந்து வளர்ந்து பூர்வீகக் குடிமக்களாக வாழ்ந்து வரும் செட்யூல்டு இனமக்கள், இந்து மதத்தில் இருக்கும் தீண்டாமையை எதிர்த்து விடுதலை அடைய வேண்டும். இந்த இரண்டு பிரச்னைகளில் இரட்டைமலை சீனிவாசன் சமுதாய விடுதலைக்கே முக்கியத்துவம் கொடுத்தார்.

சீனிவாசன் 1980 ம் ஆண்டு சென்னையில் குடியேறினார். ஒரு வாரப் பத்திரிக்கையை உருவாக்கினார். அதற்குப்  'பறையன்'  என்று பெயர் வைத்தார்.

'பறையன்', 15 ரூபாய்  மூலதனத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. 1893 ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதன்முதலில் நான்கு பக்கங்கள் கொண்ட மாதாந்திரப் பத்திரிகையாக இரண்டு அணாவாக விலையில் வெளிவந்தது. இரண்டு நாட்களில் 400 பிரதிகள் விற்கப்பட்டன. ஈராண்டுகளுக்கு பிறகு அச்சு எந்திரசாலை நிறுவப்பட்டது. மூன்று மாதத்திற்குப் பின் வாரந்திரப் பத்திரிகையாக 7 ஆண்டுகள் வெளிவந்தது. 1891-ல்  'பறையர் மகாஜன சபை'யை  இரட்டை மலை சீனிவாசன் தோற்றுவித்தார். பி. ஆறுமுகம் என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1895 ஆம் ஆண்டு டிசம்பர் 6ந் தேதி சென்னைக்கு வருகை தந்த கவர்னர் ஜெனரல் எல்ஜின் பிரபுவுக்கு மிகப் பெரிய பந்தலிட்டுப் பறையர் மகாஜன சபை வரவேற்றது.  1898 ஆம் ஆண்டு மகாராணி விக்டோரியா சக்ரவர்த்தினியின் 60ஆவது ஆளுகை விழாவின் போது வாழ்த்துக் கூறி அனுப்பிய செய்தியைப் பார்த்து அகம் மகிழ்ந்து 1898 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ம் தேதி எழுதியிருக்கிறார்.

அக்காலத்தில் பெரும்பாலும் ஜாதி இந்துகளும், பிராமணர்களும் ஆசிரியர்களாக இருந்தனர். இந்த உயர் ஜாதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் செட்யூல்டு மக்களுக்குப் பாடம் சொல்லித்தர முன்வரமாட்டார்கள். இதனால் செட்யூல்டு மாணவர்கள் படிக்க வாய்ப்பில்லை.

1898 அக்டோபர் 21-ம் தேதி இக்கொடுமையைத் தெளிவாக எழுதி ஆங்கில அரசுக்குத் தெரிவித்தார். இதன் விளைவாகச் சென்னை முனிசிபாலிடி பள்ளிக்கூடம் கட்ட வேண்டி ஆங்கில அரசு உத்தரவு அளித்தது. அதனால் செட்யூல்டு மாணவர்கள் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 65 ஆண்டுக்காலம் கவனிக்க ஆட்கள் இல்லாமல் 1893-ம் ஆண்டு கல்வி கற்பிக்க அரசு முன்வந்தது. பலன் தரவில்லை. கிராம அதிகாரி, வருவாய்த்துறை தாசில்தார், துணை ஆட்சியாளர் போன்றவர்கள் முட்டுகட்டை போட்டனர்.

1893ஆம் ஆண்டு 'பறையன்' பத்திரிகையில் இக்கொடுமையை பற்றி விளக்கமாக எழுதிய காரணத்தால் வருடா வருடம்  30 லட்சம் ரூபாய் கல்விக்காகச் செலவு செய்ய அரசினர் தீர்மானித்தனர். அரசாங்கப் பள்ளிகளை சரிவர பராமரிக்க முடியாமல் சில பள்ளிகள் மூடப்பட்டன. ஆனால் கிறித்துவ மிஷனரி பள்ளிகள் ஏராளமாகத் திறக்கப்பட்டன. ஆனால் கல்வி வளர்ச்சி என்ற பெயரில் மதமாற்றமும் செய்யப்பட்டது.

1904-ல் தென் ஆப்பிரிக்காவின் நேட்டாலில் தங்கியிருந்தபோது பீட்டரின் உதவியால் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி வந்தார். அப்போது அங்கு காந்திக்கு மொழிபெயர்ப்பாளராக விளங்கினார். 1923ஆம் ஆண்டு சென்னை மாநிலத்தின் மேல்சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அப்பதவியில் இருந்தபோது ‘ரெவின்யூ இன்ஸ்பெக்டர்’ பதவி ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தரவேண்டும் என்று கோரினார்.

கிராமங்களில் படித்த, பணம் படைத்தவர்கள் படிக்காத அப்பாவி மக்கள் மீது தங்களது ஆட்சி அதிகாரத்தைச் செலுத்துபவர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் இவர்களையே ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாக நியமனம் செய்வது என்பது உரிமைக்காகக் குரல் கொடுக்காதவர்களாகத் தென்படுகிறது. எனவே தனி வாக்குரிமையின்படி ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளை அரசுக்குத் தெரிவிக்க ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளையே தேர்ந்தெடுப்பது நலம் என்று கருதினார்.

1926ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி 'ராவ்சாகிப்' பட்டம் அளிக்கப்பட்டது. 1930 ஜுன் மாதம் 6-ம் தேதி திவான்பகதூர் பட்டமும் திராவிடமணி என்ற பட்டமும் அளிக்கப்பட்டன. அதே ஆண்டு நவம்பர் 12-ம் தேதி லண்டன் மாநகரில் முதல் வட்டமேஜை மாநாடு கூடியது. இதில் இரட்டைமலை சீனிவாசன், ஜெயகர், அம்பேத்கர், ஆகாகான், ஹென்றிகிட்னி, க்யூபார்ட்கார், பன்னீர்செல்வம், ராமசாமி முதலியார், பாத்ரோ, முகமது அலி ஜின்னா, பிக்கானீர் மகாராஜா, சீனிவாச சாஸ்திரி ஆகியோர் கலந்து கொண்டனர். காந்தி சிறையில் இருந்ததால் காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை. இரண்டு வட்டமேஜை மாநாடுகள் முடிந்து 1932-ல் ஆகஸ்ட் 17-ல் Communal award வெளியிடப்பட்டது.

''செட்யூல்டு இன மக்கள் அரசியல் சுதந்திரம் கிடைப்பது பலன் தராது. தனி வாக்குரிமை மூலம் செட்யூல்டு இன வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு ஏற்படும். செட்யூல்டு மக்கள் இந்துக்கள் பட்டியலில் அடங்காது. பண்டிகை நாட்களில் சாராயக் கடைகளை மூட வேண்டும். வேலை செய்தால் தானியங்களுக்குப் பதிலாகப் பணமாகக் கொடுக்க வேண்டும்'' என்பதை முக்கிய கோரிக்கையாக வைத்தார்.

1939 செப்டம்பர் 17-ம் தேதி சென்னை சிந்தாதிரிப் பேட்டை, நேப்பியர் பூங்காவில் செட்யூல்டு மக்களைக் கூட்டி இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

“நாங்கள் கணக்கிட முடியாத வருடங்களாகக் கொடுமைக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றோம். எங்களுடைய கோரிக்கைகள் நியாயமானவை. எதிர்காலத்தில் எங்கள் இனம் சமத்துவமாகவும், சமாதானத்துடனும் வாழ எண்ணுகிறது. எங்களுடைய முன்னேற்றத்தில் மற்றவர்கள் குறுக்கிட்டால் நாங்கள் சகிக்கமாட்டோம். இனி மேலும் நாங்கள் எவ்விதக் கொடுமையையும் ஏற்கமாட்டோம். எங்களுடைய கீழான நிலைமைக்கு அவர்களிடம் உள்ள அமைதியும், அன்புக்குணமுமே காரணமாகும்” என 1895 அக்டோபர் 7-ல் சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் சூளுரைத்தார்.

இத்தகைய பெருமகனார் 1945 செப்டம்பர் 18, சென்னை, பெரியமேடு பகுதியில் உயிர்நீத்தார். தாழ்த்தப்பட்ட மக்களின் தற்போதைய உயர்வுக்கு முன்னோடியாக இருந்து செயல்பட்டவர் இரட்டைமலை சீனிவாசன். அவரது நினைவுகள் தீண்டாமையை ஒழிக்கும் வேகத்தை சமூக நீதியை விரும்புவோருக்கு என்றும் வழங்கிக் கொண்டிருக்கும்.

காண்க:

சம உரிமைக்கான முதல்குரல் 

தலித் இயக்க முன்னோடி ஹென்றி ஸ்டீல் ஆல்காட்

 .

4.6.12

பலர் அறியாத 'தியாகதீபம்'


 சேலம் டாக்டர் வரதராஜுலு நாயுடு
 (பிறப்பு: ஜூன் 4 )

 சுதந்திரப் போராட்டத்தில் தமிழகம் ஆற்றிய பங்களிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல. தென்னிந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தில் முன்னிலை வகித்தது தமிழகம் என்பது மட்டுமல்ல, தன்னிகரற்ற பல தலைவர்களை விடுதலை வேள்விக்கு அளித்ததும் தமிழகம்தான். தமிழக சுதந்திரப் போராட்ட வரலாற்றிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஆரம்பகால வரலாற்றிலும் தனித்துவமான தடம் பதித்த தலைவர்களில் ஒருவர் சேலம் டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு.

அக்காலத்தில் சேலத்தை அடுத்த ராசிபுரத்தில் 1887 ஜூன் 4 ஆம் தேதி பெருமாள் நாயுடு-குப்பம்மாள் தம்பதியருக்கு பிறந்த வரதராஜுலு நாயுடுவின் முன்னோர்கள் கிருஷ்ணதேவராயர் காலத்தில் விஜயநகர சேனைப்படையுடன் தமிழ்நாட்டில் குடியேறியவர்கள் என்பது சரித்திரம்.

வரதராஜுலு நாயுடு தமது பத்தொன்பதாம் வயதில் தீவிர அரசியல் வயப்பட்டார். மாணவப் பருவத்திலேயே விதேசிப்பொருள்களை வெறுத்து ஒதுக்குதல், அன்னியத் துணிகளை எரித்தல் போன்ற தீவிர நடவடிக்கைகள் அவரைக் கவர்ந்தன.

வங்காளப் பிரிவினையைத் தொடர்ந்து எழுந்த தேசிய எழுச்சி அவரைப் பெரிதும் ஈர்த்தது. சுதந்திரத்துக்கான போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கத் துணிந்தார் வரதராஜுலு நாயுடு. கல்வி அதிகாரிகளும், காவல் அதிகாரிகளும் அவரது நடவடிக்கைகளைக் கண்கொத்திப் பாம்பாகக் கவனித்து வந்தனர்.

சித்த மருத்துவம், ஆயுர்வேதம் ஆகிய இரண்டு இந்திய மருத்துவத் துறைகளிலும் படிப்பறிவும் பட்டறிவும் ஏற்பட்டு முழுநேர மருத்துவராகத் தொழில் புரிந்துவந்தார் அவர். 1908 ஆம் ஆண்டிலேயே தனது 21-வது வயதில் சுப்பிரமணிய பாரதியாரின் முன்னிலையில் புதுச்சேரியில் சுயராஜ்ய சபதம் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு விடுதலை வேட்கை கொண்டவராக இருந்தார்.

தொண்டறத்தின் மீதுள்ள தாகமும் அரசியல் ஆர்வமும் மேலோங்க அக்காலத்தில் ரூ. 2,000 மாத வருவாய் வந்துகொண்டிருந்த மருத்துவத் தொழிலைக் கைவிட்டு 1917 இல் இந்திய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். டாக்டர் அன்னி பெசன்ட் தொடங்கிய ஹோம் ரூல் இயக்கத்தில் பங்குபெற்றார். படிப்படியாக உயர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரானார்.

மகாத்மா காந்தி வரிகொடா இயக்கம் தொடங்கியபோது வரதராஜுலு நாயுடு அவ்வியக்கத்தில் பெரிதும் ஈடுபாடு காட்டினார். அரசுக்கு வரி கட்டவில்லை. கட்டவேண்டிய வரிக்கு ஈடாக அவருடைய காரை ஆங்கில அரசு பறிமுதல் செய்ய உத்தரவிட்டது. ஆனால், காரை ஓட்டிச்செல்ல எவரும் முன்வரவில்லை. கடைசியில், மாவட்ட ஆட்சியரே அந்தக் காரை ஓட்டிச்செல்ல வேண்டியதாயிற்று.

பலமுறை சிறைத்தண்டனையும் பற்பல அடக்குமுறை வழக்குகளையும் சந்தித்துப் பொதுவாழ்வில் புடம்போடப்பட்டவர் வரதராஜுலு நாயுடு. தொழிலாளர்கள், விவசாயிகள், இலங்கை பர்மா தமிழர்கள் என பொதுமக்கள் பிரச்னைகளுக்குப் போராடி அவர்களுக்குப் பல உரிமைகளை, சலுகைகளை வாங்கித் தந்தவர் அவர்.

வரதராஜுலு நாயுடுவின் அரசியல் வரலாறு வெறும் பதவிகளின் வரலாறு அன்று. தியாகங்களின் வரலாறு அது. 1918 இல் மதுரை ஹார்வி மில் தொழிலாளர் வேலைநிறுத்தத்தை ஊக்குவிக்கும் விதமாகப் பேசினார் என்னும் குற்றச்சாட்டுக்கு ஆளாகி வழக்குப் போடப்பட்டு அரசு நிந்தனை புரிந்த குற்றத்துக்காக 18 மாதம் கடுங்காவலுக்குள்ளானார்.

வரதராஜுலு நாயுடுவுக்காக ராஜாஜியே நேரில் வாதாடினார். மேல்முறையீட்டில் ராஜாஜியின் வாதத்திறமையால் அவருக்கு விடுதலை கிடைத்தது. அந்த விடுதலை நீண்டநாள் நீடிக்கவில்லை. அவரை வெளியே உலவ விடக்கூடாது என்பதில் பிரிட்டிஷ் அரசு தீவிரமாக இருந்தது.

1919 இல் தமிழ்நாடு இதழில் எழுதிய இரண்டு அரசியல் கட்டுரைகள் ராஜ துரோகமானவை எனப் புதிய குற்றச்சாட்டை எழுப்பி அவரைக் கைது செய்தது ஆங்கிலேய அரசு. விளைவு: ஒன்பது மாத சிறைத்தண்டனை அவருக்குக் கிடைத்தது.

வெளியில் வந்து சில மாதங்கள்தான் கடந்தன. மீண்டும், 1923 இல் பெரியகுளம் மாநாட்டில் தடை உத்தரவை மீறிப்பேசியமைக்காக 6 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர், அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர், இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர், தமிழக மேல்சபை உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஆகிய பல பொறுப்புகளை வகித்து சாதனை புரிந்தவர் வரதராஜுலு நாயுடு. காந்தி, சி.ஆர்.தாஸ் போன்றவர்களால் மதிக்கப்பட்டவர்.

சேலம், திருப்பூர் வருகையின்போது காந்தியடிகள் வரதராஜுலு வீட்டில்தான் தங்கினார். அதனால் சேலத்தில் வரதராஜுலு நாயுடுவின் வீடு இருந்த சாலைக்கே காந்தி சாலை என்னும் பெயர் வழங்கலாயிற்று.

1925 இல் வ.வே.சு. அய்யர் நடத்திவந்த சேரன்மாதேவி குருகுலத்தில் பிராமணர் அல்லாத மாணவர்களுக்குத் தனிப்பந்தி அனுசரிக்கப்படுவதை எதிர்த்து சீர்திருத்தப்போர் ஆரம்பித்தது. பெரியார் ஈ.வெ.ரா., திரு.வி.க., ஆகியோருடன் வரதராஜுலு நாயுடுவும் அதில் ஈடுபட்டார். மகாத்மா காந்தியிடம் பிரச்னை கொண்டுசெல்லப்பட்டது. பின்னர் காங்கிரஸ் கமிட்டியில் இத்தகைய குலப்பிரிவினைக்கு எதிராக எஸ்.ராமநாதன் முன்மொழிந்த ஒரு தீர்மானமும் ஏற்கப்பட்டது.

வரதராஜுலு நாயுடுவின் சொற்பொழிவுகளால் ஈர்க்கப்பட்டு சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் தீவிரப் பங்கெடுத்தவர் காமராஜ் என்பது இன்னொரு சுவையான செய்தி.

பெரியார் காங்கிரஸ் கட்சியைவிட்டு நீங்கிய நிலையில் நீதிக்கட்சியினர் தொடர்பு பலப்பட்டு பின்னாளில் அக்கட்சியைப் பகுத்தறிவாளர் கட்சியாக திராவிடர் கழகமாகப் பரிணாமம் எடுத்த பின்னணியில் வரதராஜுலு நாயுடு நீதிக்கட்சியை எக்காலத்திலும் ஆதரிக்கவில்லை என்பதுடன் அதன் எதிர் முகாமிலேயே நின்றார் என்பது இங்கே குறிப்பிடப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சிக்குள்ளும் சமுதாய முற்போக்குக் கொள்கையை முன்னிறுத்த வேண்டும் என்பதிலும் பெரியார் ஈ.வெ.ரா.வும் வரதராஜுலு நாயுடுவும்

ஒருங்கிணைந்து செயல்பட்டனர். ஆனால், பெரியார் ஈ.வெ.ரா. அரசியல் விடுதலையை வலியுறுத்த மறுத்தபோது, வரதராஜுலு நாயுடு அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

காங்கிரஸ் பேரியக்கத்திலும் காந்தியடிகளின் தலைமையிலும் அத்தனை நம்பிக்கை வைத்திருந்த வரதராஜுலு நாயுடு பின்னாளில் காந்தியடிகள் (1930-32) நடத்திய உப்பு

சத்தியாகிரகத்திலும் சட்டமறுப்பு இயக்கத்திலும் பங்கேற்காமல் போனதுடன் அவற்றை முழுமூச்சாக எதிர்த்தது மிகப்பெரிய அரசியல் புதிராகத் தொடர்கிறது. முன்பு வரிகொடா இயக்கத்தில் முனைந்துநின்ற வரதராஜுலு நாயுடு அரசுக்கு எதிரான பின்னாள் அறவழிப் போராட்ட முடிவுகளை ஏன் கண்டிக்க வேண்டும் என்னும் கேள்விக்குப் பதில் கிடைக்கவில்லை.

தாழ்த்தப்பட்டோர் ஆலயப்பிரவேச உரிமை இயக்கம் தலையெடுத்தபோது அதில் வரதராஜுலு நாயுடு மும்முரமாகப் பணியாற்றினார். 1925 இல் தமிழ்நாடு என்னும் செய்திப்பத்திரிகை (வார இதழ்) தொடங்கி இதழாளராகவும் பரிமளித்தார். தமிழ்நாடு இதழ் வெற்றிகரமாக இயங்க "அக்ரகாரத்து அதிசய மனிதர்' என அண்ணாவால் வர்ணிக்கப்பட்ட முற்போக்குச் சிந்தனையாளர் எழுத்தாளர் வ.ரா. என்னும் வ.ராமசாமி அய்யங்கார் வரதராஜுலு நாயுடுவுக்குத் துணையாக இருந்தார்.

அதேபோல் பிற்காலத்தில் பெரும்புகழ் பெற்ற "தினமணி' நாளிதழின் நிறுவன ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கமும் வரதராஜுலு நாயுடுவின் தமிழ்நாடு இதழின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினார்.

1932 இல் ஆங்கில இதழ் தொடங்கும் எண்ணம் ஏற்பட்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழை (5 செப்டம்பர் 1932) ஆரம்பித்தார். தமிழ்நாடு இதழ் அலுவலகத்திலிருந்தே அதை அச்சடித்து விநியோகம் செய்துவந்தார். தொடங்கிய ஒரே வருடத்தில் நிதிப்பற்றாக்குறை ஏற்பட அதை "ப்ரீ ப்ரெஸ் ஜர்னல்' ஆசிரியரான எஸ். சதானந்தத்திற்கு விற்றுவிட்டார். பிறகு அது சுதந்திரப் போராட்ட வீரரான ராம்நாத் கோயங்காவுக்குக் கைமாறியது. கோயங்காவின் கைக்கு வந்ததும் அரசு நிர்வாக எந்திரத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாத சுதந்திர இதழான அதன் குணாம்சமும் வீச்சும் மேலும் தீவிரம் கண்டன என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரம் பிள்ளை 1934 இல் வரதராஜுலு நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை "தேசிய சங்கநாதம்' என்னும் தலைப்பில் எழுதி நூல்வடிவில் கொணர்ந்தார். 1933 வரையிலான அவரது வாழ்வின் பகுதிகள் அதில் ஓரளவு விவரமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்து பத்திரிகையின் நிறுவனர் ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய அய்யரைப்போல் வரதராஜுலு நாயுடுவும் இதழுலகில் தனிச்சுடராக விளங்கினார் என வ.உ.சி.யே பாராட்டி இருக்கிறார்.

வ.உ.சி.யின் நன்மதிப்பைப் பெற்று அவரால் "தென்னாட்டுத் திலகர்' என்னும் பாராட்டும் பெறவேண்டுமானால் வரதராஜுலு நாயுடு எத்தனை பெரிய மனிதராக விளங்கியிருக்க வேண்டும் என இன்றைய இளைய தலைமுறை வாசகர்கள் யூகித்துக் கொள்ளலாம்.

வ.உ.சி. எழுதிய வரதராஜுலு நாயுடுவின் வாழ்க்கை சரிதத்தின் ஆங்கில வடிவம் நீலகண்ட பிரம்மச்சாரியால் எழுதப்பட்டு வெளிவந்தது. பிறகு அதில் திருத்தம் செய்யப்பட்டு 1948 இல் புதிய பதிப்பு வெளியாயிற்று. 1955 இல் வெளியான அவரது பிறந்தநாள் மலரில் மேலும் சில விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ""இவை அனைத்துமே போதுமான தகவல்களை உள்ளடக்கிய முழு வரலாறு என்று சொல்லிவிட முடியாது. எனவே, அவரைப் பற்றி முழுமையாகவும் விரிவாகவும் ஒரு வாழ்க்கை வரலாறு எழுதப்படவேண்டும் என பெ.சு.மணி கருத்து வெளியிட்டுள்ளார்.

வரதராஜுலு நாயுடுவின் குடும்பத்தினர், சந்ததிகள், நட்பு வட்டத்தின் இந்நாள் பிரதிநிதிகள், தேசிய இயக்க வரலாற்று மாணவர்கள் ஒன்றுபட்டு முயன்றால் வரதராஜுலு நாயுடுவின் முழுமையான சரிதையை வெளிக்கொணர முடியும்.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தமிழகம் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. குறிப்பாக, டாக்டர். வரதராஜுலு நாயுடு போன்றவர்களின் பங்களிப்பும் தியாகமும் வெளிக்கொணரப்படாமல் மறைக்கப்பட்டு விட்டன. இத்தனைக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், தமிழகத் தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடியாகவும் விளங்கிய பெருமகனார் வரதராஜுலு நாயுடு.

சுதந்திர இந்தியா சுயநல அரசியல்வாதிகளின் ஒட்டுமொத்தக் குத்தகையாகி விட்டதன் விளைவாக, வரதராஜுலு நாயுடு போன்ற உண்மையான தியாகிகளின் பங்களிப்பு பேசப்படாமல் இருக்கும் அவலம் ஏற்பட்டுவிட்டது. வெளிச்சத்திற்கு வரவேண்டிய வரலாறுகளில் ஒன்று வரதராஜுலு நாயுடுவின் தியாக வரலாறு!

(இன்று அன்னாரது 125-வது பிறந்ததினம்)

-கல்பனாதாசன் 
நன்றி: தினமணி (04.06.2012)

காண்க: 

பெ. வரதராஜுலு நாயுடு (விக்கி)

Perumal Varadarajulu Naidu

'தேசிய சங்​க​நா​தம்' டாக்​டர் பி.வர​த​ரா​ஜுலு நாயுடு

டாக்டர் வரதராஜுலு நாயுடு குருகுலப் போராட்ட வீரர் (காலச்சுவடு)

டாக்டர் வரதராஜுலு நாயுடு- தஞ்சை வெ.கோபாலன்

 .




25.2.12

பாரதத்தின் ஆன்மிக ஜோதி!


ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் 

(பிறப்பு: பிப்.  20)

சமீப காலத்தில் இந்தியாவில் தோன்றிய சமய மறுமலர்ச்சியில் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் (1836 - 1886) ஆன்மிக சிந்தனையும், நீதிக் குட்டிக்கதைகள் வாயிலாக அவர் அளித்த அறிவுரைகளின் தாக்கமும் மகத்தானவை.

உண்மையான இந்துவின் நோக்கைப் போல, ""அனைத்து மதங்களும் ஒரே மரத்தின் வெவ்வேறு கிளைகள் போன்றவை. ஆன்மிக சாம்ராஜ்யத்தில் தனித்த வேறுபாடுகளுக்கு இடமுண்டு'' என்றார். இக்கருத்துக்களை அவர் வெறும் புத்திபூர்வமான போதனைகளாக வழங்கவில்லை. அவை அனுபவ பூர்வமானவை.

ஹத யோகம், பரவசநிலை, நிர்விகல்ப சமாதி போன்ற கடும் ஆன்ம சாதனைகளுக்கு தம்மை உட்படுத்திக்கொண்டது மட்டுமின்றி, சுஃபி இஸ்லாமிய ஞானியரின் யோக சாதனா முறைகளையும் மேற்கொண்டார். பண்டைய கிறித்துவ தியான வழிபாட்டில் ஆழ்ந்து அமிழ்ந்து தேவ தூதனின் பிரகாசம் கண்டார். உச்ச உயர் இறையுணர்வு ஒன்றேயன்றி வேறல்ல என விளக்கினார்.

"இந்தியாவைப் பொறுத்தவரை சமூக சீர்திருத்தமும், சமூகத்தில் புரையோடிவிட்ட தப்பெண்ணங்களையும் மூடப் பழக்க வழக்கங்களையும் களைந்தெறிவது அவசியம்தான். ஆயினும் வெறும் சீர்திருத்தங்கள் மட்டும் போதாது; சமயம் சார்ந்த ஆன்மிக உணர்வு பெருக்கெடுத்தால்தான் சமூகம் தூய்மை பெறும். ஆண்களும் பெண்களும் தார்மிக -ஆன்மிக ரீதியில் வளம் பெற முடியும். அந்நிலையில் தீமைகள் பல தாமாகவே விலகும்'' என்பதே ராமகிருஷ்ணரின் அடிப்படை அறிவுரை.

அம்மகானின் சீடர் சுவாமி விவேகானந்தரும் இதையேதான் அடிக்கடி வலியுறுத்தி, தமது இந்தியப் புனருத்தாரண திட்டங்கள் யாவற்றிலும் செயல்படுத்த விழைந்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணர் தமது சீடர்களுக்கு அருளிய வாக்குகளை, பதில்களை,  தெள்ளிய ஆன்மிக செல்வத்தை அமுதமொழிகளில் உபமான - உபமேய நீதிக்கதைகள் மூலம் பொழிந்த வண்ணமிருந்தார்.

திட்டமிட்ட நீண்ட சொற்பொழிவு ஏதும் ஆற்றியதில்லை. அறநூல்கள் எழுதவில்லை. அந்த அளவுக்கு அவருக்கு படிப்பறிவு கிடையாது. தமது தெள்ளிய, எளிய போதனைகளுக்கான சமாச்சாரங்களை, அனைவரும் அறிந்த புராணக் கதைகள், உப கதைகள், மரபு வழி புனைவுகள்,கிராமியப் பழமொழிகள் ஆகியவற்றிலிருந்து எடுத்து, புதிய மெருகூட்டித் தமக்கே உரித்தான எளிய பாணியில் விளக்கம் அளித்தார். தலைமுறை தலைமுறையாக வழக்கிலுள்ள இறைமை சார்ந்த ஆய்வுரைகளின் பொழிப்பாகச் சுருக்கி, குட்டி நீதிக் கதைகளாக வார்த்தெடுத்து வாரி வழங்கலானார்.

தாம் முன்பு கடைபிடித்த கடும் சாதனா முறைகளை அவர் தமது சீடர்களுக்கு சிபாரிசு செய்யவில்லை. குடும்பஸ்தனான ஒரு சீடர், ஒரு சமயம், சன்னியாசம் மேற்கொள்ள விரும்பியபோது, ஸ்ரீராமகிருஷ்ணர் அன்பே உருவாய்ப் பகர்ந்தார்: "உலகைத் துறப்பதால் உமக்கென்ன லாபம்? குடும்ப வாழ்க்கை கற்கோட்டை போன்றது. அக்கோட்டைக்குள் பத்திரமாக இருந்துகொண்டு உமது எதிரிகளாம் தீமைகளை எதிர்த்துப் போராடலாம். தாக்குப் பிடிக்கலாம். வெளியே வந்தாலோ எதிரிகள் உம்மை சுலபமாகச் சூழ்ந்துகொள்வார்கள். வீழ்த்துவார்கள். கடவுள் மீதான உமது நாட்டம் முக்கால்வாசியாவது நிரம்பிய பிறகு வேண்டுமானால் நீர் துறவு பற்றி யோசிக்கலாம்'' என்றார்.

வேறொரு தருணம் "வெளி உலகை முற்றிலும் துறப்பதற்கு அவசியம் என்ன? உலகாயதப் பற்றை மட்டும் துறந்து தாமரை இலைத் தண்ணீர் போல் பட்டும் படாமலும் வாழ்க்கை நடத்தலாமே?'' என்று அறிவுறுத்தினார்."

நான் எப்போது விடுதலை பெற்று ஆன்ம சாட்சாத்காரம் பெறுவேன்?'' என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், "நீர் எப்போதும் ஆன்ம சொரூபியாகத்தான் உள்ளாய். மாயா வினோதம்தான் உமது அகக்கண்ணை மறைக்கிறது. இந்தக் கதை தெரியுமா? ஒரு சிங்கம் தனது குட்டியை ஈன்றுவிட்டு இறந்துவிட்டது.  தாயை இழந்த சிங்கக்குட்டி தனது உண்மையான சொரூபத்தை அறியாமல் ஆட்டு மந்தைகளோடு சேர்ந்து புல் மேய்ந்து ஓர் ஆடு போல் வாழ்ந்து வந்தது. மிருகங்களைக் கண்டு மிரண்டு ஓடுகிற ஆடுகளோடு சேர்ந்து பயந்து தானும் ஓடிக்கொண்டிருந்தது. அதன் பரிதாப நிலையை மற்றொரு சிங்கம் கவனித்தது. சிங்கக் குட்டியைப் பிடித்து ஒரு நீரோடைக்கு இழுத்துச் சென்று தண்ணீரில் அதன் உருவத்தைப் பார்க்கச் செய்தது. அதன் வாயில் சிறிது மாமிசத் துண்டைத் திணித்தது. "புல்லைத் தின்னும் ஓர் அற்ப ஆடு அல்ல நீ; என்னைப் போன்ற ஒரு சிங்கம்' என உணர வைத்தது. கர்ஜித்துத் துள்ளிக் குதித்தது சிங்கக்குட்டி. தான் சிங்கம் என உணர்ந்ததும் புல் மேய்தல், பயந்தோடுதல் போன்ற பொய்யான மனப் பிராந்திகள் சட்டென மறைந்து போயின. அதுபோல, நீர் உமது யதார்த்த சொரூபத்தை உணர்ந்ததும், பொய்யான ஆசைகள், புலன் உணர்வுகள் படுத்தும் பாடுகள் யாவும் விடுபட்டுப்போம்'' - இவ்வாறு உவமைக் கதையுடன் விளக்கினார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

"இறையுணர்வில் ஒன்றிட சமய வழிபாடுகள், சடங்குகள், ஆசார அனுஷ்டானங்கள் அவசியம் தானா? அவை யாவும் அரிசியின் உமி போன்றவை தானே?'' என்ற வினாவுக்கு விடையளிக்கையில், "ஆம்! ஆனால் உமி இல்லையேல் வயலில் நெல் விளையாது. நீ உண்பது அரிசி. விதைப்பதோ உமியோடு இழைந்த நெல்'' என்று புன்னகைத்தார் பகவான் ராமகிருஷ்ணர். தொடர்ந்து, "பலாப்பழத்தை அறுத்துப் பிசினை விலக்கிப் பலாச்சுளை எடுப்பதற்காகக் கைகளில் எண்ணெய் தடவிக்கொள்ள வேண்டியுள்ளது. முட்புதர்கள் நிறைந்த தரையில் நடக்கச் செருப்பு அணிகிறோம். அதே போன்று, அரசியல் அல்லது சமூக சேவைகளைத் தொடங்குவதற்கு முன்பாகக் கடவுளை ஆன்மார்த்தமாகக் கண் கசிந்து, நேசித்து, அவனைச் சரணடைந்த பின் காரியத்தை மேற்கொண்டால்தான் சுயநலமின்றி, லஞ்ச லாவண்யங்களை அறவே தவிர்த்து சீரிய தொண்டு புரிய முடியும்'' என்றருளினார்.

தமது குருநாதரைப் பற்றி சுவாமி விவேகானந்தர் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் பதித்துள்ளது போல், "ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் எந்தப் புதுமையான உண்மையையும் போதிக்கவில்லை; எதையும் மறுக்கவோ, அழிக்கவோ அல்லது நிறைவு செய்யவே அவர் தோன்றவில்லை. பழமை நீதிகளை புதுமெருகுப் பொலிவுடன் எளிய சொற்களில் எடுத்துரைத்துப் புரிய வைத்தார். வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால் பாரதத்தின் பண்டைய சமய சித்தாந்தங்களின் புறவடிவப் பிழம்பாகப் பிரகாசித்தார்''.


- லா.சு.ரங்கராஜன் 

நன்றி: தினமணி -  வெள்ளிமணி (24.02.2012 )

குறிப்பு: ஸ்ரீ ராமகிருஷ்ணரின் 175 வது ஜெயந்தி உற்சவம் அவரது பக்தர்களால், பிப். 22 முதல் பிப். 26 வரை, சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.

காண்க: 

 
.


5.11.11

நமது வேரைக் காட்டிய மாதரசி

 
அன்னிபெசன்ட் அம்மையார்  
(பிறப்பு: அக். 1 - மறைவு: செப். 20) 
 
‘இன்று உலகின் எந்தப் பகுதியை நோக்கினாலும் அங்கெல்லாம் தனியரசு காணவேண்டுமென்கிற தவிப்பும்  துடிப்பும் அதற்கான போராட்டங்களும் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன. எந்த நாடும், அது எவ்வளவு சிறிதானாலும் இன்னொருவரின் ஆதிக்கத்தின்கீழ் இருக்க விரும்பாமல், உள்ள உரம் பெற்று, தங்கள் நாட்டின் பரப்புக் குறைவையோ  பலத்தின் மெலிவையோ எண்ணி ஏங்கிக்கொண்டிராமல், உறுதியுடன் போராடி வெற்றியும் பெற்று வருகின்றன.

அப்படி அன்னியரின் ஆதிக்கத்தை எதிர்த்து விடுதலைப்போர் நடத்தி, வெற்றி கண்டு, உலகிற்கே வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்கிறது இந்தியத் திருநாடு.  நம்மைத் தொடர்ந்தே பற்பல நாடுகளும் தங்களைப் பிறரின் அதிகாரப் பிடியிலிருந்தும் அடிமைத்தளையிலிருந்தும் விடுவித்துக் கொண்டன  தொடர்ச்சியான கிளர்ச்சிகளால்!

இந்திய விடுதலைக்காகத் தங்கள் வாழ்வைத் தியாகம் செய்துகொண்ட, உழைப்பையும் உதிரத்தையும், ஏன் தங்களின் இன்னுயிரையும் ஈந்த வீரர்கள் எத்தனை எத்தனை பேர்!  இந்தியர்கள் தங்கள் சொந்த நாட்டின் விடுதலைக்காகக் களமிறங்கிப் போராடியதில் வியப்பில்லை. அது அவர்களின் கடமை; தேவை; கட்டாயம்!  ஆனால் எங்கிருந்தோ அன்னிய மண்ணிலிருந்து இங்கே வந்து குடியேறி, சுதந்திரக் காற்றை சுவாசிக்க இயலாமல் அடிமை இருளில் அவதிப்பட்டுக் கிடந்த நமது மக்களை, ஆங்கிலேயரின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கவும், அவர்களின் குடைகவிழ்ந்து, கோல் சாய்ந்து, கொடியும் வீழ்ந்து, கோட்டை கொத்தளங்களை விட்டுத் தங்கள் குடிபடைகளோடு நாட்டைவிட்டு வெளியேறச் செய்த போராளிகளும் உண்டு.

அப்படி அயர்லாந்து நாட்டிலிருந்து இந்திய மக்களுக்குத் தொண்டு செய்ய வந்து, நமது நாட்டு விடுதலைக்கும், இந்தியப் பெண்களின் வீட்டு விடுதலைக்கும் துணைநின்ற மாதரசிகளில் ஒருவர்  அன்னிபெசன்ட் அம்மையார்!

அன்னி பிறந்தது லண்டனில், 1.10.1847  ல்! ‘‘நான் முக்கால் ஐரிஷ்காரி, கால்வாசி இங்கிலீஷ்காரி’’ என்பார்.  தாய் ஐரிஷ்;  தந்தையைப் பெற்ற பாட்டி ஐரிஷ். தந்தை இங்கிலீஷ்காரர். முன்னோர்களில் ஒருவர் மந்திரியாகவும், இன்னொருவர் லண்டன் மேயராகவும் இருந்திருக்கிறார்கள்.

ஏழைகளுக்குக் கட்டணமில்லாமல் வழக்காடி வந்த வக்கீல் ராபர்ட்ஸ், ‘‘ஏழைகளே வேலை செய்யும் தேனீக்கள். செல்வத்தை உற்பத்தி செய்கிறவர்கள். நியாயம் கோர அவர்களுக்கு உரிமை உண்டு. கருணையின்பேரில் தானம் தரவேண்டியதில்லை’’ என்று சொல்லிவந்த உபதேசம், இளம் வயதிலேயே அன்னியின் மனதில் ஆழப் பதிந்தது.

ஏழைகளுக்கு எவ்வழியிலேனும் தொண்டாற்றத் துடித்த அன்னியை, அவரது அழகில் மயங்கிய பிராஸ்பர்ட் பெசன்ட் என்ற பாதிரியார் காதலித்தார். பாதிரியின் மனைவியானால் அவர் துணையோடு எளியோர்க்கு சேவை செய்ய நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்றார்கள். அன்னியும் அவரை மணக்கச் சம்மதித்தார்.

ஆனால், மணவாழ்க்கையோ அவரது சொந்த வாழ்க்கையிலும் சோகத்தை நிரப்பியது. அன்னிக்கு ஒரு மகனும், மகளும் பிறந்தார்கள்.  மகள், கக்குவான் என்கிற தொடர் இருமலால் துவண்டாள். எத்தனையோ மருத்துவங்கள் செய்தும் குழந்தைக்கு அந்த நோய் குணமானபாடில்லை. மகள்படும் அவதியைக் கண்டு அன்னி தினம் தினம் ரத்தக் கண்ணீர் வடித்தார்.

‘குழந்தை என்ன பாவம் செய்தது? ஏன் இந்தத் துன்பம்? கடவுள் இந்தக் கொடுமையைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாரா? அப்படியானால் அவருக்குக் கருணை என்பதே இல்லையா? ஒருவேளை கடவுள் என்பதெல்லாம் நமது கற்பனைதானா? அப்படி ஒருவர் கிடையவே கிடையாதா?’ _ இப்படியெல்லாம் எண்ண அலைகள் அவர் இதயத்தில் ஆர்ப்பரித்தன. உள்ளம் கடவுள் சிந்தனையில் ஒருமுகப்பட மறுத்தது.

இந்தத் துன்பங்களோடு ஒருநாள் கணவனின் தூஷணையும் துணைசேர்ந்தது. விரக்தியும், வெறுப்பும் அன்னியை வாழ்க்கையின் விளிம்பிற்கே விரட்டின... உடம்பிலிருந்து உயிருக்கு விடுதலை... அது ஒன்றுதான் இந்த உலகியல் துன்பங்களிலிருந்து நிரந்தரமாக விடுபட ஒரேவழி என்கிற விபரீத முடிவிற்கு வந்தார் அன்னி! ஆம்... தற்கொலைக்குத் துணிந்தார்!

கொடிய தூக்க மருந்தான குளோரோஃபார்ம் சீசாவை எடுத்தார். அதை முகர்ந்து முழுதாக மூச்சை இரண்டுமுறை உள்ளிழுத்தால் போதும்... மீளாத் தூக்கம் தூக்கம்தான்...

சீசாவையும் திறந்துவிட்டார்... ஆனால் அவரது அந்தராத்மா இடித்துரைத்தது. ‘அன்னி! ஏனிந்த கோழைத்தனம்! உனது சொந்தத் துன்பத்தைத் தாங்கிக்கொள்ள நெஞ்சில் உரமற்ற நீயா, ஏழைகளின் துன்பத்தைத் துடைக்க ஆசைப்பட்டாய்? முடியுமா உன்னால்...?’ எள்ளலும் ஏகடியமுமாக அவரை ஏசியது அந்த மனக்குரல்.

சீசாவை வீசி எறிந்தார் வெளியே! வாழ்க்கைப் பாதையில் இனி தன் பயணத்தைப் பாதியில் நிறுத்துவதில்லை என்று உறுதிகொண்டார்.

ஆனாலும் இத்தனை நாள் கொண்டிருந்த இறை நம்பிக்கையின் மீது அவருக்கு சந்தேகம் மேலும் மேலும் வலுத்தது...  கிறிஸ்தவ மதத்தில் தனக்கு ஏற்பட்ட அவநம்பிக்கையை புத்தகமாக எழுதினார். அச்சிட்டு வெளியிட்டார். ஆனால் அதில் தனது பெயரைப் போட்டுக்கொள்ளவில்லை.

புத்தகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லண்டன் நகர பாதிரியார்கள் பதறினர்... ‘யார் செய்த வேலை இது?’ என்று ஆளைத் தேடும் முயற்சியில் அலைந்தனர்.  இறுதியில் இது அன்னியின் கைங்கர்யம்தான் என்பதைக் கண்டுபிடித்தபோது, கணவரான பாதிரியார் வெகுண்டார். ‘‘வீட்டை விட்டு வெளியே போ’’ என்று அன்னியை விரட்டினார்...

தன் இரு குழந்தைகளோடு வெளியேறிய அன்னி, குடும்பம் நடத்தவும் குழந்தைகளை வளர்க்கவும் படாதபாடுபட்டார்.  கைப்பொருளை விற்றார். தையல் வேலை செய்தார்... சமையல்காரியாக இருந்தார்... ஒரு மருத்துவமனையில் தாதியாகப் பணிபுரிந்தார். அப்போது அவருக்கு வயது 26தான்.

பல புத்தகங்களை அவர் எழுதியும், அடிமை நாடுகளுக்கு இங்கிலாந்து அரசு சுதந்திரம் வழங்க வேண்டும் என்று பேசியும் வந்த நாட்களில், ‘நேஷனல் ரீஃபார்மர்’ என்ற பத்திரிகையிலும் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போதுதான் பிரம்மஞான சங்கத்தின் தலைவி பிளாவட்ஸ்கி அம்மையாரின் அறிமுகம் கிடைத்தது. அந்த சங்கத்தில் சேர்ந்து, பின்னாளில் அந்த இயக்கத்தின் தலைமைப்பொறுப்பையும் அன்னி ஏற்றார்.

1893  ல் அவர் இந்தியாவுக்கு முதன்முதலாக வந்தபோது, ‘‘புண்ணிய பூமிக்கு வந்தேன்’’ என்றார்.  கங்கையில் நீராடி, தனது ஐரோப்பிய உடையைத் துறந்துவிட்டு, அன்று முதல் புடவை உடுத்தலானார். ‘‘பழைய வேதத்தையும், இந்து மதக் கோட்பாடுகளையும் மீண்டும் இந்திய மக்கள் மதித்துக் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் இந்தியா பழைய மகோன்னத நிலையை அடையும்’’ என்றார் இந்த ஐரோப்பியப் பெண்மணி.

அன்னி ஈடுபட்ட நான்கு துறைகள்: மதம், மதத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வி,  சமூக சீர்திருத்தம்,  அரசியல்.

1898  ல் காசியில் அவர் துவக்கிய மத்திய ஹிந்து கல்லூரிக்கு காசி மன்னர் மனை வழங்கினார். 1904 ல் பெண்கள் பள்ளியைத் துவக்கினார். சென்னை அடையாறு உள்பட நாடெங்கும் பல ஊர்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் பள்ளிகளை ஆரம்பித்தார்.

பிரம்மஞான சபையைச் சேர்ந்தவர்கள் (பிரம்மஞானிகள்), ‘ஜாதி வேறுபாடு பார்க்க மாட்டேன். பெண் குழந்தைக்கும் மனைவிக்கும் கல்வி போதிப்பேன். பெண்களுக்கு 21 வயதுக்குள் திருமணம் செய்துவைக்கமாட்டேன். விதவை மறுமணத்தை ஆதரிப்பேன்’ ஆகிய விதிகளை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டுக் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனைவிதித்தார்.

இந்தியாவுக்கு பிரிட்டிஷ் காமன்வெல்த்துக்குள் சுயாட்சி வேண்டும் என்று கிளர்ச்சி நடத்தினார். அதற்காக ‘ஹோம் ரூல் லீக்’ என்ற இயக்கத்தைத் தொடங்கி, தனது ஆங்கில நாளேடு ‘நியூ இந்தியா’வில் காரசாரமாக எழுதி வந்தார்.

இது ஆங்கிலேய அதிகாரிகளை ஆத்திரமூட்டியது. இதன் விளைவாக, ‘உதகையை விட்டு வெளியேறக் கூடாது’ என்று அன்னிக்கு உத்தரவிட்டார்கள் 1917 ல்!

அப்போதைய நீதிபதி மணி ஐயர், ‘‘இந்த அநீதியைக் கண்டிக்க உலகில் யாருமில்லையா?’’ என்று அமெரிக்க ஜனாதிபதி வில்சனுக்குக் கடிதம் எழுதினார்.

வில்சன், பிரிட்டன் பிரதம மந்திரியை இது சம்பந்தமாகக் கேட்க, அவர் அதிகாரிகளைக் கூப்பிட்டு, அன்னி மீதிருந்த தடை உத்தரவை நீக்க உத்தரவிட்டார்.

அடுத்த ஆண்டில் நடந்த கல்கத்தா காங்கிரசுக்கு அன்னிபெசன்ட் தான் தலைமை ஏற்றார்.

மகாத்மா காந்தியும் நேருவும் ஒத்துழையாமை போராட்டத்தைத் தொடங்கியபோது, அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டு அன்னிபெசன்ட் காங்கிரசிலிருந்து வெளியேறினார். ‘பரிபூரண சுதந்திரம் என்பது மாயை!  கானல்நீர்!  பரஸ்பர ஒத்துழைப்பும் கூட்டுறவுமே நாட்டு வளர்ச்சிக்கு நல்லது’ என்றார். அவர் விருப்பம்போலவே இந்தியா இப்போதும் காமன்வெல்த் அமைப்பில் அங்கம் வகிக்கிறது.

ஐம்பது ஆண்டுகள் இந்திய மக்களுக்காகவே உழைத்த அன்னிபெசன்ட், 20.9.1933 அன்று இயற்கை எய்தினார்.  ஒரு தீர்க்கதரிசியைப் போல அவர் சொல்லிய பல திட்டங்கள் இன்று அமலில் உள்ளதைக் காண்கிறோம்.

ஏழைக் குழந்தைகளுக்கு பள்ளியிலேயே இலவச உணவு அளித்து மருத்துவ வசதியும் செய்துதர வேண்டும். பசித்த குழந்தைகளுக்கு பாடம் மட்டும் சொல்லித்தருவது பயனற்றது. வயிற்றுக்கும் சோறிடல் வேண்டும்’ என்று வலியுறுத்தியது அவர்தான்.  ஆனால் அவர் மறைந்து பல ஆண்டுகள் கழித்துத்தான் பள்ளியில் மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது.

கிராமப் பஞ்சாயத்துகள் தோன்றி, பள்ளிகள், கிராமத் தொழிற்கூடங்கள், துப்புரவு, மருத்துவம், சிவில் துறைகளில் நீதி வழங்குவது போன்றவற்றை அவை நிர்வகிக்க வேண்டும் என்று அவர் அன்று வலியுறுத்திப் பிரசாரம் செய்தார். பின்னாளில் கிராமப் பஞ்சாயத்து போர்டுகள் தொடங்கப்பட்டன.

அன்னிபெசன்ட் மறைந்தபோது மகாத்மா காந்தி...

‘‘1888 க்குப் பிறகு, நான் லண்டனில் படித்துக்கொண்டிருந்தபோது, மற்ற பலரைப்போல நானும் பிராட்லாவையும் அன்னிபெசன்ட்டையும் போற்றிப் புகழ்ந்தேன். அப்போது நான் யாருக்குமே தெரியாத சாதாரணப் பையன். பிளாவட்ஸ்கி, அன்னிபெசன்ட் ஆகியோரின் பக்கத்தில் நான் நிற்பதையே பெரும் பாக்கியமாகக் கருதியிருந்தேன்.  அவர் இந்தியா வந்து இந்திய மக்களின் இதயங்களில் இடம்பெற்றதும் அவரை அடிக்கடி சந்தித்து உரையாடினேன். எங்களுக்குள் அரசியல் வேற்றுமைகள் இருந்தபோதிலும்கூட அவரிடம் எனக்கிருந்த மரியாதை ஒருபோதும் குறைந்ததில்லை’’ என்றார்.

நன்றி: Erodeit.com
காண்க:

அன்னிபெசன்ட் அம்மையார் (விக்கி)

Annie  Besant 

Indian Home Rule Movement 

The Theosophical Network

Dr. Annie  Besant  (I Love India)

The Theosopical Society  - Adayar
.
Theosophical  Society 

 
 

26.9.11

ஏலம் போன நவாபின் காலணி


ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
(பிறப்பு: செப். 26)  


மேற்குவங்கத்தின் மாபெரும் சமூகப் புரட்சியாளர் ஈஸ்வர சந்திர வித்யாசாகர். இவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தை அமைப்பதற்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டார். தன் நண்பர்களோடு சேர்ந்து பலரிடமும் நன்கொடைகளை திரட்டுவதற்காக பக்கத்து மாநிலங்களுக்கும் பயணத்தை மேற்கொண்டுவந்தார்.


செல்வாக்குமிக்க நவாப் ஒருவரைச் சந்தித்து நன்கொடை வேண்டி நின்றார் வித்யாசாகர். மக்களின் அறியாமையை அகற்றி கல்விக்கண் திறக்கும் நோக்கோடு, பல்கலைக் கழகம் அமைக்க நன்கொடை வேண்டும் வித்யாசாகரின் முயற்சியைப் பாராட்டாமல், ஆணவத்தோடு தன்னுடைய ஷூ ஒன்றை கழற்றி அவரின் பையில் போட்டார் அந்த நவாப்.

நவாப்பின் இச்செயலால் அதிர்ச்சியோ, மனத்தளர்ச்சியோ அடையாத ஈஸ்வர சந்திர வித்யாசாகர் அவர்கள் புன்முறுவலோடு நவாப்பிற்கு நன்றி தெரிவித்துவிட்டு அந்த ஷூவை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.

அடுத்த நாள் நவாப்பின் அரண்மனைக்குச் சற்றுதூரம் தள்ளி ஒரு ஏலவிற்பனைக்கு ஏற்பாடு செய்தார் வித்யாசாகர். ”பெருமதிப்பு மிக்க நவாப் அவர்களின் ஒற்றை ஷூ ஒன்று ஏலத்திற்கு வந்துள்ளது. ஏலம் கேட்பவர்கள் கேட்கலாம்” என்று கூறியவுடன் நவாப்பின் ஷூ பெருந் தொகைக்கு ஏலம் போனது. இந்தச் செய்தி உடனடியாக நவாப்பின் காதுகளுக்கும் எட்டியது.

தன் ஷூ ஏலத்தில் விடப்பட்டதை அறிந்து அதிர்ச்சியும், வியப்பும் அடைந்த நவாப் உடனடி யாக வித்யாசாகரை தன் அரண்மனைக்கு வரவழைத்தார்.

தான் அவமானப்படுத்திய போதும் அதை பொருட்படுத்தாமல் அதையே வெகுமானமாக்கிய’ வித்யாசாகரின் செயலைப் பாராட்டி விட்டு அந்த ஷூ ஏலம்போன தொகையளவிற்கு நன்கொடையும் கொடுத்தனுப்பினார்.

துளையிடுதலை பொறுத்துக் கொள்ளும் மூங்கில்தான், புல்லாங்குழலாகி இதழ்களோடு உறவாடி, இனிய இசைதந்து காற்றின்வழி காதுகளை வருடி நம் மனங்களை கொள்ளை கொள்கிறது.

- ருக்மணி பன்னீர்செல்வம்


காண்க:


Ishwar Chandra Vidyasagar

வித்யாசாகர் வாழ்வில் (முத்துக்கமலம்)

பிரபலங்கள் வாழ்வில் (ஈகரை)

banglapedia.org

Ishwar Chandra (Encyclopædia Britannica)

5.9.11

கப்பலோட்டிய தமிழர்


வ.உ.சிதம்பரம் பிள்ளை
(பிறப்பு: செப். 5)


வ.உ.சிதம்பரனாரின் பிரசங்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்''. இது 1908-ம் ஆண்டு வ.உ.சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்து வெள்ளைய நீதிபதி ஃபின்ஹே தீர்ப்பில் எழுதியுள்ள வரிகள்... இதுபோன்று எந்தவொரு இந்தியரும்கூட வ.உ.சி.யின் விடுதலை வேட்கைக்கும், வேகத்துக்கும் சிறந்த அங்கீகாரத்தையும் தந்துவிட முடியாது.

வ.உ.சி. தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் 1872-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி பிறந்தார். தொடக்கக்கல்வியை ஒட்டப்பிடாரத்திலும், உயர்நிலைக் கல்வியை தூத்துக்குடியிலும், சட்டக்கல்வியைத் திருச்சியிலும் பயின்று 1895-ம் ஆண்டு வழக்குரைஞரானார்.

வணிக நோக்கில் வந்த வெள்ளையர்கள் இங்கு நிலவிய சிறு, சிறு பாளையங்களாக ஆட்சிபுரிந்து வந்த மன்னர்களின் ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி, தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டினர். இதனை எண்ணிய வ.உ.சி. வணிகம் மூலமாக நாட்டுக்குள் நுழைந்த வெள்ளையர்களை வணிக ரீதியாகவே விரட்ட வேண்டும் என, 1906-ம் ஆண்டு "சுதேசி நாவாய்ச் சங்கம்' என்ற சங்கத்தை நிறுவி அதன் செயலர் ஆனார்.

வாணிபம் என்பது தமிழர்களுக்குப் புதிது இல்லை. சங்க இலங்கியங்களில்கூட, தமிழர்கள் திரைகடல்ஓடி திரவியம் தேடியுள்ளனர். சேர, சோழ, பாண்டியர் காலத்தில் பல நாடுகளில் கடல் வாணிபம் செய்த பெருமை தமிழர்களுக்கு உண்டு. எனவே, ஒட்டுமொத்த இந்தியர்களுக்கு எடுத்துக்காட்டாக வெள்ளையர்களின் கிழக்கிந்தியக் கம்பெனியுடன் வாணிபப் போட்டியில் ஈடுபட்டார்.

காலியா, லாவோ என இரு கப்பல்களை வங்கக்கடலில் விட்டு, கொழும்பு நகரத்துடன் வாணிபத்தைத் தொடங்கினார். அவரின் செயலைக் கண்டு மும்பை கடற்கரைக் கூட்டத்தில் லோகமான்ய பாலகங்காதர திலகர் பேசும்போது, ""திருநெல்வேலியில் உத்தம தேசாபிமானி ஆகிய வ.உ.சி. தூத்துக்குடி - சிலோனுக்கு சுதேசிக் கப்பல் போக்குவரத்து ஸ்தாபித்திருப்பது சுதேசியத்துக்கு அவர் செய்திருக்கும் பெரும் பணிவிடையாகும்'' என்று பேசியுள்ளார்.

வ.உ.சி. பல இடங்களுக்குச் சென்று விடுதலை குறித்து மக்களிடையே பிரசங்கத்திலும் ஈடுபட்டார். இதனால் கோபம் கொண்ட வெள்ளையர்கள் வ.உ.சி.யின் மீது வழக்குத் தொடுத்து 40 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தனர்.

கோவைச் சிறையில் ஆங்கிலயர்கள் வ.உ.சி.யைக் கல்லுடைக்க வைத்துள்ளனர். அதில் அவரின் கையில் கொப்புளங்கள் ஏற்பட்ட நிலையிலும், துன்புறுத்துவதற்காக செக்கிழுக்க வைத்துள்ளனர்.

கொடுமைப்படுத்தப்பட்ட வ.உ.சி.யின் நிலையைக் கண்டு, அவரின் துணைவியார் மீனாட்சி அம்மையார் ஆங்கிலேய அரசருக்கு எழுதிய மடலில், ""சிறையதிகாரிகள் என் கணவரைச் செக்கிழுக்கவும், கல்லுடைக்கவும் வைத்துத் துன்புறுத்துகின்றனர். இதைத் தடுக்க வேண்டும். இல்லையென்றால், இக்கணமே அவரைக் கண்மறைவாக அந்தமான் தீவுக்கு அனுப்பி விடுதல் நலம்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரத்துக்காக மட்டும் அல்லாமல், தீண்டாமைக்கு எதிராகவும் போராடிய வ.உ.சி., சகஜாநந்தா என்ற பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரை தம் வீட்டில் தங்க வைத்து போதித்து, தமிழறிவு ஊட்டி தீண்டாமை ஒழிப்பு இயக்கத்துக்குத் திலகமாகியுள்ளார்.

அதுபோல், விருதுநகர் இராமையா தேசிகர் என்ற ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிறவிக் குருடரையும் தம் இல்லத்தில் தங்க வைத்து ஆதரித்துள்ளார். விதவை மறுமணம், கலப்புத் திருமணம் போன்ற முற்போக்குச் சீர்திருத்தங்களை ஆதரித்துள்ளார்.

கையூட்டில் ஈடுபட்ட ஏகாம்பரம் என்ற துணை நீதிபதியையும், பஞ்சாபிகேசவராவ், வாசுதேவராவ் என்ற அதிகாரிகளையும் கோர்ட்டில் நிறுத்தி, அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

தண்டனை முடிந்து சிறையில் இருந்து வெளியே வந்த வ.உ.சி. 1936-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி இறந்தார். வ.உ.சி. இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களின் விடுதலைக்கும் உழைத்த வரலாறு இன்றும் போற்றப்படத்தக்கதாக இருக்கிறது. இவர் போன்ற மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களை நம்மவர்கள் ஜாதிப் பிரிவுக்குள் அடக்கி, விடுதலைப் போராட்டத் தலைவர்கள் அனைவரையும் ஜாதிச் சங்கத் தலைவர்களாக்க முயற்சிக்கிறார்கள். இதனால், அவர்களின் வரலாற்றை வருங்காலச் சந்ததியினர் அறிய முடியாமல் போகும்.

அப்படி அறிய முடியவில்லையென்றால், சுதந்திரத்துக்காக உழைத்த மாபெரும் தலைவர்களின் வரலாறுகளை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். அனைத்துத் தரப்பு மக்களும், வளரும் தலைமுறையினருக்கு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு தலைவரின் வரலாறுகளை எடுத்துக்கூறி, அவர்களைப் பின்பற்றச் செய்ய வேண்டும். அதுகுறித்து வ.உ.சி. பிறந்த இந்நாளில் ஒவ்வொருவரும் பின்பற்ற உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே இந்தியனின் நனவாக இருக்க வேண்டும்.

-மா.வீரபாண்டியன்
நன்றி: தினமணி

காண்க:

வ.உ.சிதம்பரம் பிள்ளை (விக்கி)

V.O.C.CHIDHAMBARAM PILLAI

Indian Post Stamp
 
கப்பல் ஓட்டிய தமிழர் (யாழ்)
 
வ.உ.சி எழுதிய பாடல் திரட்டு
 
தேசபக்த வீரர் வ.உ.சி. (தமிழ் ஹிந்து)
 
வ. உ.சி.யின் இலக்கிய, சமுதாயப் பணிகள் (தமிழ் மரபு அறக்கட்டளை)
.

16.8.11

அவதார புருஷர்


ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
(மறைவு: ஆக. 16)
 
விவேகானந்தர் உட்பட பல சாதுக்களின் குருவாகவும், மெய்யறிவு பெற்ற ஞானியாகவும் விளங்கியவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். அவர் தட்சிணேசுவரத்தில் உள்ள காளி கோயிலில் பூசாரியாகப் பணியாற்றி வந்த காலம். அப்போது அவ்வாலயத்தின் நிர்வாகியாக ராணி ராசமணி தேவியின் மருமகன் மதுர்பாபு இருந்து வந்தார். அவர், பரமஹம்சரைக் கடவுள் அவதாரமாகவே கருதி வணங்கி வந்தார்.

ஒரு நாள் ராமகிருஷ்ணர் தனது அறையின் முன் உள்ள வராந்தாவில் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்தார். அவர் நடைபயிலுவதை தூரத்தில் தன் அறையில் இருந்தவாறே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் மதுர்பாபு. அப்போது திடீரென அங்கே பரமஹம்சரின் உருவத்துக்குப் பதில் காளியின் உருவம் நடமாடுவது தெரிந்தது. நம்பமுடியாமல் கண்களைக் கசக்கிவிட்டுப் பார்த்தார் மதுர்பாபு. ஆம், அங்கே காளிதான் நடமாடிக் கொண்டிருந்தார். மறுகோடிக்குச் சென்று திரும்பியதும் காளி உருவம் மறைந்தது. சிவன் உருவம் தோன்றியது. பகவான் ராமகிருஷ்ணர் காளியாகவும் சிவனாகவும் மாறிமாறி நடமாடிக் கொண்டிருந்தார். மதுர்பாபு அளவிலா ஆச்சரியம் அடைந்தார். தான் பார்ப்பது உண்மைதானா அல்லது கனவா என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டது. அறைக்கு வெளியே வந்து மீண்டும் உற்றுப் பார்த்தார். அங்கே சிவனும் சக்தியும் மாறிமாறி நடமாடிக் கொண்டிருந்தனர். பகவான் ராமகிருஷ்ணர் அங்கே சிவசக்தி சொரூபமாய்க் காட்சி அளித்தார்.

சற்று நேரம் கழித்து ராமகிருஷ்ணர் அறைக்குத் திரும்பியவுடன் தான் கண்ட காட்சியைப் பற்றி எடுத்துரைத்தார் மதுர்பாபு. குருதேவர் அதனை ‘ஆம்’ என்று ஒப்புக்கொள்ளவுமில்லை. ‘இல்லை’ என்று மறுக்கவுமில்லை. ‘எனக்கு ஏதும் தெரியாது!, எல்லாம் பகவான் செயல்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார். தான் கண்ட உண்மையைப் பலரிடமும் கூறி ஆச்சர்யப்பட்டார் மதுர்பாபு.

‘ராமனாகவும் கிருஷ்ணனாகவும் வந்தவன் எவனோ, அவனே ராமகிருஷ்ணனாக வந்திருக்கிறான்!’ என்று விவேகானந்தருக்குத் தமது அவதார ரகசியத்தை வெளியிட்ட மகா புருஷர் அல்லவா அவர்.
 
 

15.8.11

மகரிஷியின் அருள்வாக்கு


மகரிஷி அரவிந்தர்
(பிறப்பு: ஆக. 15)

எந்த தேசத்தின் இளைஞர்கள் மனதில்
கடந்தகாலம் குறித்த பெருமிதம்,
நிகழ்காலம் குறித்த வேதனை,
எதிர்காலம் குறித்த போர்கனவுகள் நிறைந்துள்ளதோ,
அந்த தேசம்தான் முன்னேற்றமடையும்.

-மகரிஷி அரவிந்தர்

காண்க: