நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்
நற்செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நற்செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22.6.14

தமிழில்தான் பேசுவோம் எனச் சூளுரைப்போம்!

தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் பேச்சு 



சென்னை, ஜூன் 21: தமிழில் பேசுவோம், தமிழில்தான் பேசுவோம் எனத் தமிழர்கள் சூளுரைப்போம் என்றார் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தினமணி, சென்னைப் பல்கலைக்கழகம் சார்பில் சனிக்கிழமை (ஜூன் 21) காலை நடைபெற்ற இரு நாள் இலக்கியத் திருவிழாவின் தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியது:

இலக்கிய அமைப்புகளை ஒருங்கிணைப்பதாலோ, தீர்மானங்கள் போடுவதாலோ, போராட்டம் நடத்துவதாலோ எதையுமே சாதித்துவிட முடியாது. முதலில் நாம் தமிழை வளர்ப்பதிலும், பாதுகாப்பதிலும் அக்கறை செலுத்துகிறோமா என்பதை, நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.

தமிழைப் பாடமொழியாகக் கொண்ட பள்ளிகளுக்கு எத்தனை பேர் தங்கள் குழந்தைகளை அனுப்புகின்றனர்? நமது குழந்தைகள் நம்மை அப்பா, அம்மா என அழைக்காமல், டாடி, மம்மி என அழைப்பதில் பெருமைப்படுகிறவர்கள்தான் அதிகம். அப்படி யார் வீட்டிலாவது குழந்தைகள் அழைத்தால், அப்பா, அம்மா என அழைக்க வேண்டும் எனச் சம்பந்தப்பட்ட பெற்றோர்களுக்கு வழிகாட்ட நம்மில் எத்தனை பேர் முன் வருகிறோம்?

அப்பா, அம்மா மட்டுமா சித்தி, சித்தப்பா, மாமன், மாமி, அத்தை என ஒவ்வொரு உறவுக்கும் ஒரு பெயர் சூட்டி மகிழ்ந்த சமூகம் அல்லவா நமது இந்திய சமூகம். இப்போது யாரைப் பார்த்தாலும் அங்கிள், ஆன்ட்டி என்றாகிவிட்டது.

செல்பேசி எண் என்ன எனக் கேட்டால், நம்மில் எத்தனை பேர் தமிழில் எண்களைக் கூறுகிறோம் ?

இதனால், என்ன ஆபத்து எனக் கேட்கலாம். எந்தவொரு மொழியும் வழக்கொழிந்து போவதற்கு மூல முதல் காரணம், அளவுக்கு அதிகமான அன்னிய மொழிக் கலப்புதான். சற்று யோசித்துப் பார்த்தால் இன்னொரு உண்மையும் புரியும்.

இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வடமொழி இருந்திருக்கிறது. 1100 ஆண்டுகளாக உருது இங்கே பேசப்பட்டு வருகிறது. 700 ஆண்டுகளாக தெலுங்கு பரவலாகவே வழக்கத்தில் இருந்து வருகிறது. 500 ஆண்டுகளாக மராட்டியம் தமிழகத்தில் நுழைந்து அரசவை மொழியாகவே இருந்திருக்கிறது.

ஆனால், இந்தக் காலகட்டத்தில் தமிழ் அழிந்துவிடவில்லை. மாறாகத் தழைத்தோங்கி இருக்கிறது. சமய இலக்கியங்கள், தோன்றின. சிலம்பும், மேகலையும், சீவக சிந்தாமணியும், ராமகாதையும், வில்லி பாரதமும், அருணகிரியாரும், குமரகுருபரரும் இயற்றிய அற்புதமான படைப்புகளும் இந்தக் காலகட்டத்தில்தான் தமிழுக்கு உரமூட்டின.

வெறும் 250 ஆண்டுகள்தான் ஆங்கிலேயர் நம்மை ஆண்டனர். தமிழ் தன் அடையாளத்தையே இழந்துவிட்டது. வடமொழிக் கலப்பில்லாத, உருது கலப்பில்லாத, தெலுங்கின் தாக்கமில்லாத, மராட்டியத்தின் வாடையே இல்லாத தமிழை நாம் பேசிவிட முடியும். ஆங்கிலக் கலப்பில்லாத தமிழை நம்மில் எத்தனை பேரால் பேச முடியும்? இந்த உண்மைதான் பயமுறுத்துகிறது. இப்படிப்பட்ட மொழிக் கலப்புதான் மெல்ல, மெல்லப் புற்றுநோயாகத் தமிழை அழித்து அடையாளம் தெரியாமல் சிதைத்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

ஆங்கில வழிக் கல்வி கூடாது என்பதல்ல நமது கருத்து. ஆனால், தமிழின் அழிவில் ஆங்கில வழிக் கல்வி தேவையில்லை என்பதுதான் நமது வாதம். உலகமே வியக்கும் வகையில் விஞ்ஞான சாதனை படைத்திருக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தாய்மொழியில் தமது பள்ளிக் கல்வியைப் பயின்றவர். தாய் மொழிக் கல்விதான் அவரது அறிவியல் மேல்படிப்புக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது என்பதே உண்மை.

ஆங்கிலேயர்களும், அமெரிக்கர்களும் அறிவியல் சாதனைகளைப் படைத்திருக்கின்றனர் என்றால் அவர்கள் அவர்களுடைய தாய்மொழியிலான ஆங்கிலத்தில் பயில்கின்றனர். சாதனை படைக்கின்றனர். ஜெர்மானியர்கள், ஜப்பானியர்கள், பிரெஞ்சு நாட்டவர், ரஷியர்கள் என யாரை எடுத்துக் கொண்டாலும், அவர்களும் அமெரிக்காவுக்கு நிகரான முன்னேற்றம் கண்டவர்கள்தான். காரணம், அவர்கள் தாய் மொழியில்தான் படிக்கின்றனர்.

சின்ன நாடான சிங்கப்பூரில் பாட மொழியாக ஆங்கிலம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, சீனப் பெற்றோர்கள் அதற்கு எதிராகப் போராடி வெற்றி கண்டனர். அடிப்படைக் கல்வி சீன மொழியில்தான் இருக்க வேண்டும் என்றும், எங்களது குழந்தைகள் தாய்மொழியான சீனம் தெரியாத குழந்தைகளாக வளரக்கூடாது எனவும் பிடிவாதமாக இருந்தனர்.

இங்கே தமிழில் பேசினால் தரக்குறைவு, அவமானம் எனக் கருதும் மனநிலை மாற வேண்டும், மாற்றப்பட வேண்டும். மொழியை வளர்ப்பது பத்திரிகைகளின் கடமை. தமிழ் வாழ்ந்தால்தான் தமிழ்ப் பத்திரிகைகள் வளர முடியும். ஊடகங்கள்தான் ஒரு மொழியின் வளர்ச்சிக்கும், மொழியின் சிதைவுக்கும் காரணமாக அமையும். ஊடகங்கள் மொழியைக் கொச்சைப்படுத்தினால், அதுவே மொழியின் வீழ்ச்சிக்கு மேலதிகமான காரணமாகிவிடும். இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் அதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

கலப்படத் தமிழை நல்ல தமிழாக மாற்றியாக வேண்டும். அதற்காகத்தான் இந்த விழா. தமிழில் பேசுவோம். தமிழில்தான் பேசுவோம் எனச் சூளுரைப்போம். இந்த விழாவில் பங்கேற்றுச் செல்லும் ஒவ்வொருவரும் தமிழில்தான் பேசுவோம் என்ற இயக்கத்தை அந்தந்த ஊருக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றார் வைத்தியநாதன்.

நன்றி: தினமணி (22.06.2014)

17.6.14

ரத்த தானத்தில் சதமடித்த சீனிவாச தாதம்- 65 வயதில் 146 முறை தானம்



ஜூன் 14-ம் தேதி உலக ரத்த தான தினம். இந்த தினத்தைக் கொண்டாடியவர்கள் இனி நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு பிரமுகர் திருச்சியில் இருக்கிறார். 

ரத்த தானம் செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தை இவர் மனதில் உருவாக்கியவர் ஒரு சிறுமி. திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த சீனிவாச தாதத்துக்கு 25 வயது இருக்கும்போது அவர் வீட்டின் அருகே வசிக்கும் ஒரு சிறுமி கீழே விழுந்து படுகாயம் அடைந்து அதிக ரத்த இழப்பால் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்தக் குழந்தையைக் காப்பாற்ற ரத்தம் தேவை, உடனே ஏ ஒன் பாசிட்டிவ் குரூப் ரத்தம் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றார் மருத்துவர். அந்தக் குழந்தையின் நெருங்கிய உறவினர்கள்கூட ரத்த தானம் என்கிற வார்த்தையைக் கேட்டதும் தெறித்து ஓடினர். 

ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற நாம் ஏன் ரத்தம் வழங்கக் கூடாது என யோசித்தார் தாதம். உடனே முடிவெடுத்து ரத்தம் வழங்கி அந்த குழந்தையைக் காப்பாற்ற உதவினார். இது நடந்தது 1975-ம் ஆண்டில்.
 .
பிறகு 3 மாதங்களுக்கு ஒரு முறை (ரத்த தானம் வழங்க மருத்துவ உலகம் சொல்லும் இடைவெளி விட்டு) தொடர்ந்து ரத்த தானம் வழங்கி பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார். இப்போது தாதத்துக்கு வயது 65. மருத்துவ உலகம் 65 வயதுக்கு மேல் ரத்ததானம் செய்வது உகந்தது அல்ல என தெரிவித்துள்ளதால் கடந்த 6 மாதத்துக்கு முன்பு கடைசியாக 146-வது முறை ரத்த தானத்துடன் தனது ரத்த தான பயணத்தை நிறைவு செய்தார். 

தற்போது திருச்சி சங்கம் ஹோட்டலில் நிர்வாகப் பிரிவு அலுவலராக இருக்கும் தாதம் வாய்ப்பு கிடைக்கும்போது சந்திக்கிற நபர்களிடம் ரத்த தானம் செய்வதன் அவசியத்தை வலியுறுத்த மறப்பதே இல்லை.
 .
“என்னால் செய்ய இயலா ததை என்னைப் போன்றவர்களைக் கொண்டு செய்ய வைப்பேன்” என்பதை லட்சியமாகக் கொண்டு இயங்கி வருகிறார் தாதம். கல்லூரிகள், தொண்டு நிறுவனங் கள், சமூக நல அமைப்புகள், ரசிகர் மன்றத்தினரைச் சந்தித்து ரத்த தானம் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார். 

இவரால் திருச்சியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு தோற்று விக்கப்பட்ட தன்னார்வ ரத்த தானம் வழங்குவோர் சங்கம் பல ஆயிரம் உயிர்களைக் காப்பாற்றி யிருக்கிறது. பல நூறு தன்னார்வ ரத்த தான வழங்குநர்களை உருவாக்கியுள்ளது. தொடரட்டும் இந்த அரிய பணி. 
- அ.சாதிக் பாட்சா

நன்றி: தி இந்து (14.06.2014)

20.11.13

கல்லூரி ஆசிரியர் கருத்தரங்கு - படத்தொகுப்பு

ஈரோடு மாவட்டம், துடுப்பதியில் உள்ள ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் கடந்த 16.11.2013, சனிக்கிழமை, காலை 9.00 மணி முதல் மதியம் 2.30 மணி வரை கல்லூரி ஆசிரியர் கருத்தரங்கு நடைபெற்றது. சுவாமி விவேகானந்தர் 150 ஜெயந்தியை முன்னிட்டு,  தேசிய சிந்தனைக் கழகமும் ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியும் இணைந்து இக்கருத்தரங்கை நடத்தின.

அதன் புகைப்படப் பதிவுகள் இங்கே...

1Kuththuvilakku1
கருத்தரங்கை குத்துவிளக்கேற்றி துவங்கிவைக்கிறார் கோவை ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயத்தின் உதவி செயலாளர் பூஜ்யஸ்ரீ சுவாமி நிர்மலேஸானந்தர்.
2Kuththuvilakku 2
குத்துவிளக்கேற்றுகிறார் தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில அமைப்பாளர் திரு. ம.கொ.சி.ராஜேந்திரன்
3Kuththuvilakku 3
குத்துவிளக்கேற்றுகிறார் ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியின் செயலாளர் திரு. சா.சிவானந்தன்.
5Principal ravichandran
வரவேற்புரை வழங்குகிறார் ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியின் முதல்வர் திரு. ஆ.த.ரவிசந்திரன்.
6Secy Shivanandhan
வாழ்த்துரை வழங்குகிறார் ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியின் செயலாளர் திரு. சா.சிவானந்தன்.
7Swami Nirmaleshananda
கருத்தரஙகைத் துவங்கிவைத்து, ‘விவேகானந்தரும் இளைஞர்களும்’ என்ற தலைப்பில் உரையாற்றி, ஆசியுரை வழங்குகிறார் பூஜ்யஸ்ரீ சுவாமி நிர்மலேஸானந்தர்.
8Audiance 2
கருத்தரங்கில் பங்கேற்றவர்களில் ஒரு பகுதி.
9Kuzalenthi
'விவேகானந்தர் விரும்பிய பாரதம்’ என்ற தலைப்பில் தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளர் கவிஞர் திரு. குழலேந்தி உரையாற்றுகிறார்.
10Pramodhkumar
'பாரதம் உலகிற்கு அளித்த நன்கொடைகள்’ என்ற தலைப்பில், கோவை அமிர்தா பல்கலைக்கழக உதவி பேராசிரியர் திரு.மா.பிரமோத்குமார் உரையாற்றுகிறார்.
11Prof Kanagasabapathi
’இனிவரும் காலம் இந்தியாவின் கைகளில்’ என்ற தலைப்பில் கோவை- தமிழ்நாடு நகரியல் கல்வி மையத்தின் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் திரு. ப.கனகசபாபதி உரையாற்றுகிறார்.
12Prof Kumarasamy
’விவேகானந்தரின் இன்றைய அவசியம்’ என்ர தலைப்பில், சேலம்- பெரியார் பல்கலைக்கழக- விவேகானந்தா கல்வி மையத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினர் பேராசிரியர் திரு.க.குமாரசாமி உரையாற்றுகிறார்.
13RPrabakar
நன்றி நவில்கிறார், தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலக் குழு உறுப்பினர் திரு. சேலம் இரா.பிரபாகரன்.
14Audiance 1
கருத்தரங்கில் பங்கேற்றோரில் ஒரு பகுதி.
இந்நிகழ்வில், பெருந்துறை மருத்துவக் கல்லூரியின் பேராசிரியரும் கண் மருத்துவருமான  டாகடர் திரு.எம்.எல்.ராஜா, ‘விவேகானந்தரும் விஞ்ஞானமும்’ என்ற தலைப்பில் பேசினார்.

கருத்தரங்கில் 6 கல்லூரிகளிலிருந்து 150-க்கு மேற்பட்ட ஆசிரிரியர்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர். தேசிய கீதத்துடன் கருத்தரங்கம் இனிதே நிறைவடைந்தது.
.

30.6.13

பணம் தேவையில்லை; மனம் தான் தேவை!

முதியோர் இல்லத்தில் உள்ள ஒரு மூதாட்டியுடன் ஈரநெஞ்சம் மகேந்திரன்.
முதியோர் இல்லத்தில் உள்ள ஒரு மூதாட்டியுடன் ஈரநெஞ்சம் மகேந்திரன்.

மதுரை
யைச் சேர்ந்தவர் முத்துகுமார் (28). வீட்டில் ஏதோ பிரச்னை; கோபித்துக் கொண்டு வெளியேறிவிட்டார். இவருக்கு மறதிநோயும் உண்டு. வீடு திரும்பத் தெரியாமல் எங்கெங்கோ அலைந்து கடைசியில் கோவை வந்து சேர்ந்தார். கண்கள் மிரள, சவரம் செய்யப்படாத பல மாதத் தாடியுடன், கந்தல் உடையுடன் தெருக்களில் பைத்தியமாக அலைந்துகொண்டிருந்தார்…
திருவள்ளூரைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (80); ரயிலில் பழவியாபாரம் செய்து வந்தவரை மடக்கிய சிலர் அவரது நகைகளைப் பறித்துக்கொண்டு துரத்திவிட்டனர். இதில் மனநிலை பாதிக்கப்பட்ட ராஜம்மாள் மனம் போன போக்கில் அலைந்து கோவை வந்தார்; நகரத் தெருக்களில் பிச்சைக்காரியாகத் திரிந்துகொண்டிருந்தார்…
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் அசோகன் (42); 18 ஆண்டுகளுக்கு முன் மனநிலை பிறழ்ந்து வீட்டைவிட்டுப் போனவர். இறந்துவிட்டதாக குடும்பத்தினரே மறந்திருந்த வேளை. கோவையில் பரிதாபமான தோற்றத்தில் பேருந்து நிறுத்தத்தில் கிடந்தார்…
கோவை, சரவணம்பட்டியைச் சேர்ந்தவர் நிர்மலா (29), மனநிலை பாதிக்கப்பட்டவர்; யாரிடமும் பேசமாட்டார். 4 ஆண்டுகளுக்கு முன் வீட்டைவிட்டு வெளியேறியவரை குடும்பத்தினர் தேடி அலுத்துவிட்டனர். அலங்கோலமான ஆடைகளுடன் பூங்கா அருகே படுத்துக் கிடந்தார்…
- நீங்களும் இத்தகைய பரிதாபத்திற்குரிய மனிதர்களை தெருவில் சந்தித்திருக்கலாம். பார்த்தவுடன் ஒரு நிமிடம் மனம் துணுக்குறலாம். அடுத்த நிமிடம் சுதாரித்துக் கொண்டு, அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவோம். கொஞ்சம் இரக்கம் உள்ளவராக இருந்தால் சில்லறைக் காசுகளைப் போட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடையைக் கட்டுவோம். அவரவர் வேலையே அவரவருக்கு பெரும் சுமை.  இது ஒரு பொதுவான மனநிலை.
eeranenjam08
ஆனால், கோவை, காந்திபுரத்தில் குடியிருக்கும் மகேந்திரனுக்கு இத்தகைய மனிதர்களை மீட்பதே வாழ்க்கை லட்சியம். தெருவில் திரியும் ஆதரவற்ற, மனநிலை பிறழ்ந்த மனிதர்களை மீட்டு, முடி வெட்டி, அவர்களைக் குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து, அருகிலுள்ள காப்பகங்களில் சேர்ப்பதை தனது கடமையாகவே செய்து வருகிறார்.
.
அதுமட்டுமல்ல, கோவையிலுள்ள 15 ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் அவ்வப்போது சென்று அங்குள்ள ஆதரவற்றோருடன் கனிவுடன் உரையாடி, நகம் வெட்டி, உணவு வழங்கி, தோழமை காட்டுவதும் இவரது பணி.
.
இவருடன் ஒரு இளைஞர் பட்டாளமே பணிபுரிவது மகிழ்ச்சி அளிக்கும் கூடுதல் தகவல்.அவ்வாறு நட்புடன் பழகி, அவர்கள் அளிக்கும் தகவல்களை முகநூலிலும் வலைப்பூக்களிலும் படத்துடன் வெளியிட்டு, பாதிக்கப்பட்ட பலரை அவர்களது குடும்பத்துடன் சேர்த்துவைத்திருக்கிறார்கள். முத்துகுமார், ராஜம்மாள், அசோகன், நிர்மலா ஆகியோர், அவ்வாறு பிரிந்த குடும்பத்தில் சேர்த்து வைக்கப்பட்டவர்கள் தான்.
eeranenjam07
கோவையில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களிலும் காவல் நிலையங்களிலும் ‘ஈரநெஞ்சம் மகி’ என்றால் தெரியாதவர் இருக்க முடியாது. சுமார் ஐந்தாண்டுகளாக இந்த சேவைப்பணியில் மகேந்திரன் ஈடுபட்டிருக்கிறார். இதற்கென, ஒத்த கருத்துள்ள பரிமளா வாகீசன், சுரேஷ் கணபதி, தபசுராஜ், குமார் கணேஷ் ஆகியோருடன் இணைந்து ஈரநெஞ்சம் அறக்கட்டளையைத் துவக்கி இருக்கிறார். ‘ஈகை விலக்கேல்’ என்பது இவர்களது அமைப்பின் முத்திரை வாக்கியம்.
இவர்களது சேவையால் இதுவரை கோவை தெருக்களில் திரிந்த நூற்றுக்கு மேற்பட்ட மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர்கள் மீட்கப்பட்டு காப்பகங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்; காப்பகங்களில் இருந்து 25க்கு மேற்பட்டவர்கள் தங்கள் குடும்பத்துடன் இணையவும் ஈரநெஞ்சம் உதவி இருக்கிறது. அதுமட்டுமல்ல, தெருக்களில் திரியும் நோயாளிகளை அரசு மருத்துவமனையில் சேர்ப்பதும், அநாதையாக இறப்போரின் சடலங்களுக்கு இறுதிச்சடங்கு செய்வதும் இவர்களின் அற்புதமான பணிகளில் சில.
eeranenjam09
இத்தனைக்கும் மகேந்திரன் (35) வசதியானவர் அல்ல; ஆட்டோ உதிரி பாகங்களைத் தயாரிக்கும் குறுந்தொழிலதிபர் மட்டுமே. மனைவி, மகள் என்று சிறு குடும்பம். வரும் வருமானத்தில் ஒரு பகுதியை சேவைக்கெனவே ஒதுக்கிவிடுகிறார். குடும்பமும் அவருக்கு ஒத்துழைக்கிறது. அவரது தொழில் தொடர்புள்ள நிறுவனங்களும் மனமுவந்து ஆதரவளிக்கின்றன. நல்லது செய்ய முன்வருவோருக்கு உதவ நல்ல உள்ளங்களும் இருக்கவே செய்கிறார்கள்.
இவ்வாறு சேவை செய்யும் ஆர்வம் எப்படி வந்தது? சொந்தக் குழந்தை மலஜலம் கழித்தால் கூட மனைவியைக் கூப்பிடும் கணவர்கள் மிகுந்த உலகத்தில், முகமறியாத பலருக்கு முடிவெட்டி, குளிப்பாட்டி சேவை செய்யும் மனம் எங்கிருந்து வந்தது?
eeranenjam05
இதோ மகேந்திரனே பேசுகிறார்…
நானும் நடுத்தரவர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவன் தான். மனநிலை பாதிப்பின் கொடுமை எனக்கு அனுபவப்பூர்வமாகவே தெரியும். எனது சகோதரியின் மனநிலைப் பிறழ்வால் அவர் அடைந்த கஷ்டங்கள் கொஞ்சமல்ல. அப்போதே, இதுபோல பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்துவிட்டேன்.
தெருவில் திரியும் பைத்தியகாரர்களைக் கண்டு நாம் பொதுவாக மிரள்கிறோம். ஆனால், அவர்கள் தான் நம்மைக் கண்டு அஞ்சுகிறார்கள். தெருக்களில் பலவாறாக அலைக்கழிக்கப்பட்ட அவர்களின் துயரக் கதைகளைக் கேட்டால் நெஞ்சம் வெடித்துவிடும்.
மனநிலைப் பிறழ்வுக்கு காரணங்கள் பல இருக்கலாம். அவர்கள் அப்படி இருக்க வேண்டும் என்று விரும்பி வந்தவர்களல்ல. அவர்களின் விதி அப்படி ஆக்கியிருக்கிறது. நம்மால் முடிந்தால் அந்த விதியில் சிறிது மாற்றம் செய்ய முடியும்.
காப்பகங்களில் எங்கோ வெறித்தபடி வாழ்க்கையே சுமையாக இருக்கும் மனிதர்களுக்கு நம்மாலான சிறு உதவி ஆறுதலான பணிவிடைகள் தான். இதற்கு பெரிய அளவில் பணம் தேவையில்லை; மனம் தான் தேவை. எங்களைப் பொருத்த வரை, நாங்கள் ஆதரவற்றோருக்கு உதவ முற்படும்போது, சம்பந்தமில்லாத பலர் எங்களுடன் கைகோர்த்துப் பணிபுரிவதைக் கண்டிருக்கிறேன். சமுதாயத்தில் ஈரநெஞ்சம் இல்லாமல் போய்விடவில்லை.
நமது குழந்தை அழுதுகொண்டிருக்கும்போது நம்மால் நிம்மதியாகச் சாப்பிட முடியுமா? மனநிலை பாதிக்கப்பட்ட இவர்கள் இறைவனின் குழந்தைகள். இவர்களுக்கு நாங்கள் செய்வது சேவையல்ல; கடமை. ஓர் உயிரை, ஒரு மனிதரின் வாழ்க்கையைக் காப்பதைவிட திருப்தி அளிக்கும் பணி வேறென்ன?
இந்த வேலையில் இறங்குவதால் சுயதொழிலில் சாதனை படைக்க முடியாமல் போகலாம். இன்று எங்களுக்குக் கிடைப்பது குறைவாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு கிடைக்கும் மனநிம்மதி அளவற்றது…
- சொல்லிக்கொண்டே போகிறார் ஈரநெஞ்சம் மகேந்திரன்.
eeranenjam03
வீட்டைவிட்டு வெளியேறி பைத்தியமான நிர்மலா யாரிடமும் பேசாமல் இருந்தவர், மகேந்திரனின் முயற்சியால் குடும்பத்துடன் சேர்க்கப்பட்டபோது கண்ட உருக்கமான காட்சி மகத்தானது. 4 ஆண்டுகளாகப் பேசாமல் இருந்த நிர்மலா குடும்பத்தாருடன் சேர்ந்த ஆனந்த அதிர்ச்சியில் பேசத் துவங்கிவிட்டார்; இப்போது நலமாக இருக்கிறார்.
ஒரு நிர்மலா காப்பாற்றப்பட்டுவிட்டார். இன்னும் பல நிர்மலமான ஜீவன்கள் தெருக்களில் அலைந்துகொண்டிருக்கிறார்கள். உங்களிடமும் இருக்கிறதா இந்த ஈரநெஞ்சமும் துடிப்பும்?
- தினமணி- ஞாயிறு கொண்டாட்டம் (30.06.2013)
.
தொடர்புக்கு:  
P.மகேந்திரன்,
நிர்வாக அறங்காவலர்,
ஈரநெஞ்சம் (பதிவு எண்: BK4 193/2012)
406, ஏழாவது வீதி, காந்திபுரம்,
கோயம்புத்தூர்- 641 012.
.
அலைபேசி: 90801 31500
மின்னஞ்சல்: eeram.magi@gmail.com
இணையதளம்: http://www.eeranenjam.org
.

30.8.12

12 மணிநேரம் நடைபெற்ற சுதந்திர தினத் திருவிழா

தேசிய சிந்தனைக் கழகம் திருப்பூரில் உள்ள பல்வேறு அன்மைப்புகளுடன் இணைந்து இந்த ஆண்டு சுதந்திர தினத் திருவிழாவை சிறப்பாக கொண்டாடியது.

இந்நிகழ்வில் தேசிய சிந்தனைக் கழகத்தின் திருப்பூர்  நகரத் தலைவர் திரு. அரிமா எம் ராமகிருஷ்ணன் அவர்களும் ஆலோசகர் குழலேந்தியும் பங்கேற்றனர்.

இவ்விழா குறித்த செய்தித் தொகுப்பு இது.... 

(நன்றி: IDCC அமைப்பின் 'சுதந்திரம் காப்போம்' வலைப்பூ)


------------------------------------------------------
சுதந்திர தினத் திருவிழாவில் பேசுகிறார் தேசிய கல்விக் கழகத்தின் முன்னாள் செயலர் திரு. கிருஷ்ண ஜெகநாதன்.

 சுதந்திர தின விழாவை சம்பிரதாயமான விழாவாகக் கொண்டாடாமல், புத்துணர்ச்சி ஊட்டும் வகையிலும் ஆக்கப்பூர்வமாகவும் கொண்டாட திருப்பூர் சுதந்திர தினத் திருவிழா ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்தது. இதற்கென 50க்கு மேற்பட்ட பொதுநல அமைப்புகள் தொடர்பு கொள்ளப்பட்டன. அனைவரது உதவி, ஒத்துழைப்புடன் சுதந்திர தினத் திருவிழா ஆக. 15 ,  புதன்கிழமை, திருப்பூர், டவுன்ஹாலில் சிறப்பாக நடந்தேறியது. அந்த விழாவின்  நிகழ்வுகளின் சுருக்கமான தொகுப்பு இது:

தேசியக் கொடியேற்றம்:

காலை 9 மணியளவில் டவுன்ஹாலில் அமைக்கப்பட்டிருந்த 30 அடி உயர கொடிக்கம்பத்தில் தேசியக் கொடியேற்றும் நிகழ்வுடன் விழா துவங்கியது. இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தியாளர சங்கத்தின் தலைவர் K.P.G. கோவிந்தசாமி தலைமை வகித்தார்.

D.K.T. கல்வி நிறுவனங்களின் தலைவரும் தொழிலதிபருமான 'லிங்க்ஸ்' D.சவுகத் அலி, காந்திய மக்கள் இயக்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் A. ராதாகிருஷ்ணன், திருப்பூர் டம்பிள் டிரையர் சங்கத்தின் தலைவர் தாமு.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருப்பூரைச் சேர்ந்த முதுபெரும் சுதந்திரப் போராட்ட வீரரும் (வயது: 88) அனைத்திந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் சமிதியின் செயல் தலைவருமான தியாகி G.முத்துசாமி அய்யா தேசியக் கொடியேற்றி வைத்தார்.

அடுத்து டவுன்ஹாலில் விழா துவக்க நிகழ்ச்சி நடந்தது. செங்கோட்டையில் பட்டொளி வீசிப் பறக்கும் தேசியக் கொடி மேடையின் பின்புறத்தை அலங்கரித்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்கள் தங்கள் சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

தொழிலும் பொருளாதாரமும்- கருத்தரங்கம்:

அடுத்து காலை 9.30 மணியளவில் முதல் கருத்தரங்கம் துவங்கியது. திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் M.P.முத்துரத்தினம் தலைமை வகித்தார். திருப்பூர் சாய ஆலை  உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் S.முருகசாமி முன்னிலை வகித்தார். திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவின் செயலாளர் T.R. விஜயகுமார், தொழிலதிபர் ஆர்ம்ஸ்டிராங் பழனிசாமி ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரியின் தலைவரும் வார்சா ஏற்றுமதி நிறுவனத் தலைவருமான ராஜா சண்முகம், கோவையில் உள்ள தழ்நாடு நகரில் பயிற்சி மையத்தின் இயக்குனர் பேராசிரியர் ப.கனகசபாபதி ஆகியோர் கருத்துரை வழங்கினர். கருத்தரங்கின் இறுதியில் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு இருவரும் பதில் அளித்தனர்.

காண்க:

1 . பனியன் தொழிலில் உள்முகக் கோளாறுகளை சரி செய்ய வேண்டும்- ராஜா சண்முகம்.

2 . கலாசாரம் சார்ந்த பொருளாதாரத்தால்  இந்தியா முன்னேறி வருகிறது- பேராசிரியர் ப. கனகசபாபதி


இளம் சிறுவனின் இனிய இசை நிகழ்ச்சி:

அடுத்து 'வளரும் செல்வன்' சு.மகிழன் பரிதி குழுவினரின் தேசபக்திப் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. மூன்றாம் வகுப்பு படிக்கும் மகிழன் பரிதி தனது மழலை கலந்த இனிய பாடல்களால் அனைவரையும் வசீகரித்தான். இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் சண்முகானந்த சங்கீத சபாவின் தலைவர் வழக்குரைஞர் V.வீரராகவன் தலைமை வகித்தார். திருப்பூர் குர்பானி அறக்கட்டளை செயலாளர்  M. அகமது பைசல் முன்னிலை வகித்தார். 

இதனிடையே, மேகலா குழும நிறுவனங்கள் அனைவருக்கும் தேநீர் வழங்கினர்.

இயற்கை வளங்களும் சுகாதாரமும் - கருத்தரங்கம்:

அடுத்து பகல் 12 மணியளவில் இரண்டாவது கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவின் தலைவர் R. அண்ணாதுரை தலைமை வகித்தார். கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவர் N.S.பழனிசாமி முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில், ஈரோட்டைச் சேர்ந்த தமிழக பசுமை இயக்கத் தலைவர் டாக்டர் வெ. ஜீவானந்தம், திருமானூரைச் சேர்ந்த இயற்கை வாழ்வியல் இயக்கத்தின் தலைவர் டாக்டர் அ.காசிப்பிச்சை ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

அடுத்து திருப்பூர் - தென் இந்திய பின்னலாடை உற்பத்தியாளர் சங்கம் அனைவருக்கும் மதிய உணவு வழங்கியது.

காண்க:

'இயற்கையைச் சார்ந்து வாழ்வதே சுகாதாரம்'


கண்கவர்ந்த கலைநிகழ்ச்சிகள்:

உணவு இடைவேளைக்குப் பிறகு, மதியம் 2.15 மணியளவில், பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  இந்நிகழ்வுக்கு தமிழ்நாடு அரசு ஹோமியோபதி மருத்துவர் சங்கத்தின் தலைவர் டாக்டர் K.கிங் நார்சியஸ் தலைமை வகித்தார்.  திருப்பூர் இன்னர்வீல் சங்கத்தின் முன்னாள் தலைவர் ராஜாத்தி சந்தானகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

முதல் அரை மணி நேரம் வானவில் அகாடெமி, சிருஷ்டி அகாடெமி ஆகியவற்றின் மாணவர்கள் இசை நிழ்ச்சிகளை  நடத்தினர். அடுத்து K. செட்டிபாளையம் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி  மாணவ மாணவியரின் நாட்டிய நிகழ்ச்சிகள் அரைமணி நேரம் நடைபெற்றன. இந்நிகழ்வுகள் பார்வையாளர்கள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தன.


அரசியலும் நிர்வாகமும்- கருத்தரங்கம்:

அடுத்து பிற்பகல் 3 .15 மணியளவில் மூன்றாவது கருத்தரங்கம் துவங்கியது. இந்நிகழ்வுக்கு  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர் சங்கத்தின் திருப்பூர் பகுதி தலைவர் R. ஈஸ்வரன் தலைமை வகித்தார். தொழிலதிபர்  ஓகே டெக்ஸ்டைல்ஸ் M.கந்தசாமி முன்னிலை வகித்தார்.

திருப்பூர்  தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் , மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவருமான K. தங்கவேலு கருத்தரங்கில் முதலில் பேசினார். அடுத்து கோவையைச் சேர்ந்த வழக்குரைஞரும், AICCTU தொழிற்சங்கத் தலைவருமான R. லட்சுமண நாராயணன் உரையாற்றினார். பார்வையாளர்களின் கேள்விகளுக்கு இருவரும் கருத்தரங்கின் இறுதியில் பதில் அளித்தனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது.


கல்வியும் பண்பாடும்- கருத்தரங்கம்:

அடுத்து மாலை 5 மணியளவில், நான்காவது கருத்தரங்கம் நடைபெற்றது. திருப்பூர் பார்க் கல்வி நிறுவனங்களின் தலைவர் P.V.ரவி தலைமை வகித்தார். திருப்பூர், K. செட்டிபாளையம் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளியின் செயலாளர் எக்ஸ்லான் K. ராமசாமி முன்னிலை வகித்தார்.

தேசிய கல்விக் கழகத்தின் முன்னாள் நிர்வாகியான சிந்தனையாளர் கிருஷ்ண.ஜெகநாதன், கன்னியாகுமரி- விவேகானந்த கேந்திராவில் பணிபுரியும் ஆராய்ச்சியாளரும் எழுத்தாளருமான அரவிந்தன் நீலகண்டன் ஆகியோர் கருத்தரங்கில் பேசினர்.


சேவை உள்ளங்களுக்கு பாராட்டு விழா:

அடுத்து திருப்பூர் வட்டாரத்தில் செயல்படும் சேவை அமைப்புக்களை பாராட்டும் நிகழ்வு இரவு 7 மணியளவில் நடைபெற்றது. திருப்பூரைச் சேர்ந்த பல்வேறு சமூக சேவை அமைப்புகளுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு, திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் S.குணசேகரன் தலைமை வகித்தார். மேகலா நிறுவனங்களின் தலைவர் C.சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.

 இதில், அன்பு இல்லம் (திருமுருகன்பூண்டி), வள்ளலார் இயற்கை நலவாழ்வு அறக்கட்டளை முதியோர் இல்லம் (கரடிவாவி), பாரதி குரு குலம் (அலகுமலை), மகாத்மா காந்தி கருணை இல்லம் (அமராவதிபாளையம்), குர்பானி அறக்கட்டளை, முயற்சி மக்கள் அமைப்பு (திருப்பூர்), காதுகேளாதோர் பள்ளி (முருகம்பாளையம்) ஆகிய சமூக சேவை அமைப்புகளை கௌரவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

சுதந்திர தின விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தென்னிந்திய பின்னலாடை உரிமையாளர் சங்க செயலாளர் எம்பரர் V.பொன்னுசாமி பரிசுகளை வழங்கினார்.

காண்க:

1 .சுதந்திர தின விழாவில் சேவை அமைப்புகளுக்குப் பாராட்டு

2 . போட்டிகளில் வென்ற மாணவ மணிகள் பட்டியல்


நாட்டிய நாடகம்:

அடுத்து இரவு 7 .30 மணியளவில், அருள்புரம் ஜெயந்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளின் நாட்டிய நாடகம் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தேசிய சிந்தனைக் கழகத்தின் திருப்பூர் பகுதி தலைவர் அரிமா M ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். முன்னாள் ராணுவ வீரர் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்டத் தலைவர் அருள்நிதி T R முரளிதரன் முன்னிலை வகித்தார்.

புறநானூற்று தமிழ்ப் பெண்ணின் வீரத்தையும் தன்மானத்தையும் விளக்கும் 'வீரத்தாய்' நாட்டிய நாடகம் பார்வையாளர்களால் கரகோஷத்துடன் வரவேற்கப்பட்டது.


விழா நிறைவு நிகழ்ச்சி:

இரவு 7 .50 மணியளவில் சுதந்திர தினத் திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சி துவங்கியது. தி சென்னை சில்க்ஸ் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் K.பரஞ்சோதி தலைமை வகித்தார். திருப்பூர் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சக்தி M.சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில், ஈரோடு பாரதி வாசகர் வட்டத்தின் செயலாளர் சு.சண்முகவேல் எழுதிய 'விவசாயிகளைப் பாதுகாப்போம்' என்ற நூல் வெளியிடப்பட்டது. திருப்பூர் நேஷனல் சில்க்ஸ் உரிமையாளர் N.அருணாசலம் நூலை வெளியிட, சக்தி M.சுப்பிரமணியம் அதைப் பெற்றுக் கொண்டார். திருப்பூர்  இளைஞர் T.A.ஷான் தயாரித்த 'தேசபக்திப் பாடல்கள்' குறுந்தகடும் இந்நிழ்வில் வெளியிடப்பட்டது.

விழா நிறைவாக, 'தினமணி' நாளிதழின் ஆசிரியர் K. வைத்தியநாதன் விழா பேருரையாற்றினார். முன்னதாக, சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி முத்துசாமி- அவரது மனைவி மயிலம்மாள் தம்பதியினரை தினமணி ஆசிரியர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

காண்க:
 

அடிமை மனோ நிலையிலிருந்து விடுபட வேண்டும்! - 'தினமணி' ஆசிரியர்


      தேசிய கீதத்துடன் விழா இரவு 9.15 மணியளவில் இனிதே நிறைவடைந்தது.


காலை முதல் இரவு வரை சுமார் 12 மணிநேரம் நடைபெற்ற இவ்விழாவில் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த மக்களும், பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தோரும் திரளாகக் கலந்துகொண்டனர். இவ்விழா சிறக்க உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், அமைப்புகளுக்கும் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

2.6.12

நிகரற்ற சாம்பியன் ஆனந்த்!



உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இஸ்ரேலின் போரீஸ் கெல்ஃபான்டை வீழ்த்தி 5-வது முறையாக பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் செஸ் உலகின் முடிசூடா மன்னனான விஸ்வநாதன் ஆனந்த்.

தனது 6-வது வயதில் செஸ் பயணத்தைத் தொடங்கிய ஆனந்த், கடந்த 20 ஆண்டுகளாக உலக செஸ் போட்டியில் கோலோச்சி வருகிறார். அவர் 42 வயதை எட்டியிருந்தாலும், அவருடைய ஆட்டத்தின் வேகத்துக்கு மட்டும் இளமை குறையவில்லை. 24 வயதில் விளையாடியதைப் போன்றே இப்போதும் விரைவாக காய்களை நகர்த்தி வெற்றியைத் தொடர்ந்து வருகிறார்.

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற உலக செஸ் போட்டியின் டை பிரேக்கர் சுற்றில் கெல்ஃபான்டுக்கு எதிராக அபாரமாக காயை நகர்த்திய ஆனந்தின் உத்வேகம், அந்தப் போட்டியை பார்த்த அனைவருக்குமே தெரிந்திருக்கும். பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் இடையே நடைபெற்ற படுவேக டைபிரேக்கர் சுற்றில் எவ்வித பதற்றமுமின்றி, லாவகமாக காய்களை நகர்த்தி முன்னணி வீரரான கெல்ஃபான்டை தோற்கடித்தார் ஆனந்த்.

தமிழகத்தின் மயிலாடுதுறையில் பிறந்த ஆனந்த், தன்னுடைய தாயார் சுசீலாவிடமும், குடும்ப நண்பரான தீபா ராமகிருஷ்ணனிடமும்தான் செஸ் விளையாடக் கற்றுக்கொண்டார். செஸ் மீதான தீராத காதலால் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு அடுத்த சில ஆண்டுகளில் உயர்ந்தார்.

5 முறை உலகச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியவரான ஆனந்த், இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டரும்கூட. டோர்னமென்ட், மேட்ச், ரேபிட், நாக் அவுட் ஆகிய முறைகளில் நடத்தப்பட்ட உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பட்டம் வென்ற ஒரே வீரர் என்ற பெருமையும் ஆனந்தையே சேரும். 2007-ல் இருந்து தொடர்ச்சியாக 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். தனது அபரிமிதமான சாதனைக்காக 18-வது வயதிலேயே பத்மஸ்ரீ விருது வாங்கியவர். இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்மவிபூஷன் விருதைப் பெற்ற முதல் விளையாட்டு வீரர்.

இந்த விருது அவருக்கு 2007-ல் வழங்கப்பட்டது. ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருதைப் பெற்ற முதல் வீரரும்கூட. சிறந்த விளையாட்டு வீரருக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதையும் பெற்றுள்ளார்.

செஸ் போட்டியில் ஒரு காலத்தில் ரஷியர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தியதோடு, பல்வேறு சாதனைகளையும் படைத்து வந்தனர். செஸ் என்றால் ரஷியர்கள்தான் என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் கோலோச்சினர். ஆனால் தொடர்ச்சியாக 4 முறை பட்டம் வென்றதன் மூலம் வரலாற்றை மாற்றியுள்ளார் ஆனந்த்.

கௌரவம்

2010, நவம்பரில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வந்தபோது, பிரதமர் மன்மோகன் சிங் அவருக்கு விருந்து கொடுத்தார். அதற்கு அழைக்கப்பட்ட ஒரே விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமே.

கடந்து வந்த பாதை

1983-ம் ஆண்டு தேசிய அளவிலான சப்-ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றார் ஆனந்த். இதுதான் தேசிய அளவிலான போட்டிகளில் அவர் பெற்ற முதல் வெற்றி.

1984-ம் ஆண்டு தனது 15-வது வயதில் சர்வதேச மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் பட்டம் வென்ற இந்தியாவின் இளம் செஸ் வீரர் என்ற பெருமைக்குரியவரானார்.

தனது 16-வது வயதில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றார்.

1987-ல் உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் வெற்றி கண்டார். இதில் வெற்றி கண்ட முதல் இந்தியர் ஆனந்த்.

1988-ல் கோவையில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் வெற்றி கண்டு இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் ஆனார்.

1991-ம் ஆண்டு உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முதல்முறையாக தகுதிபெற்றார். அந்தப் போட்டியின் முதல் சுற்றில் ரஷியாவின் அலெக்ஸீ கிரீவை வென்ற ஆனந்த், காலிறுதிச் சுற்றில் ரஷியாவின் அனடோலி கார்போவிடம் வீழ்ந்தார்.

1995: ஃபிடே உலக செஸ் போட்டியின் அரையிறுதியில் அமெரிக்காவின் கதா காம்ஸ்கியிடம் வீழ்ந்தார்.

பிசிஏ உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் ரஷியாவின் கேரி காஸ்பரோவிடம் தோல்வி கண்டார்.

1997: ஸ்விட்சர்லாந்தின் லாசன்னே நகரில் நடைபெற்ற ஃபிடே உலக செஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் ரஷியாவின் கார்போவிடம் தோல்வி கண்டார்.

2000: ரஷியாவின் அலெக்ஸீ ஷிரோவை வீழ்த்தி முதல் முறையாக உலக செஸ் சாம்பியன் ஆனார்.

2001: உலக செஸ் போட்டியின் அரையிறுதியில் உக்ரைனின் இவான் சுக்கிடம் தோல்வி கண்டார்.

2005: அமெரிக்காவின் சான் லூயிஸில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில் பல்கேரியாவின் வேஸிலின் டோபாலோவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

2007: மெக்ஸிகோவில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில் 2-வது முறையாக சாம்பியன் ஆனார்.

2008: ஜெர்மனியில் நடைபெற் உலக செஸ் போட்டியில் ரஷியாவின் விளாதிமிர் கிராம்னிக்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

2010: பல்கேரியாவின் தலைநகர் சோபியாவில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில் உள்ளூர் நாயகனான வேஸலின் டோபாலோவை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

2012: ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில் இஸ்ரேலின் போரீஸ் கெல்ஃபான்டை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

கிராம்னிக்

ஆனந்த் குறித்து ரஷியாவின் முன்னணி வீரரான விளாதிமிர் கிராம்னிக் கூறுகையில், "ஒட்டுமொத்த செஸ் வரலாற்றில் அசாத்திய திறமை கொண்ட வீரர்களில் ஆனந்தும் ஒருவர். அவர் நிகரற்ற சாம்பியன். செஸ் உலகின் ஜாம்பவான் காஸ்பரோவைவிட ஆனந்த் எந்தவகையிலும் பலவீனமான வீரர் அல்ல' என்று குறிப்பிட்டுள்ளார்.

காரில் சென்று சாதித்த ஆனந்த்

2010-ம் ஆண்டு உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி பல்கேரியாவின் தலைநகர் சோபியாவில் நடைபெற்றது. ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் இருந்து விமானம் மூலம் சோபியாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார் ஆனந்த். ஆனால் அந்த நேரத்தில் எரிமலை வெடிப்பின் காரணமாக காற்றில் பறந்த சாம்பல் துகள்களால், அங்கிருந்து புறப்படவிருந்த அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து 40 மணி நேரம் காரில் பயணம் செய்து பல நாடுகள் வழியாக சுமார் 1,700 கி.மீ. தூரத்தைக் கடந்து சோபியாவை அடைந்தார் ஆனந்த். 40 மணி நேரம் பயணம் செய்தபோதிலும் அயராத ஆனந்த், சோதனையைத் தாண்டி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.


- ஏ.வி.பெருமாள்
- நன்றி: தினமணி (01.06.2012)
.
காண்க:  

விஸ்வநாதன் ஆனந்த் (விக்கி)

VISWANATHAN ANAND



24.3.12

அறுபடாத நூல்

 
 
காந்திய வழியில் சமூக மேம்பாட்டிற்காக தன் வாழ்வை முழுமையாக அர்பணித்த அந்த 74 வயது தீதியை பார்க்க அருகாமை கிராமங்களிலிருந்து தினமும் பெண்களும் குழந்தைகளும் ஜயாக் காந்தி ஆசிரமத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர். தன்னைக் காண வரும் விருந்தினர்களை மெல்லிய புன்முறுவலோடும் உள்ளமெல்லாம் அன்போடும் உபசரிக்கிறார், குமாரி. ஜர்ணா தாரா சௌத்ரி.
.
சுமார் 25,000 ஏழை குடும்பங்களுக்கு வாழ்வாதாரங்களை அமைத்துக் கொடுத்து அவர்களுக்கு வளமான வாழ்வை உறுதி செய்த பெருமை அவரையே சென்று சேரும் .ஜமன்லால் பஜாஜ் அமைப்பு, 'இந்தியாவிற்கு அப்பாலுள்ள இந்தியரல்லாத சிறந்த காந்தியவாதி' என்ற வகையில் 1998 ஆம் ஆண்டு அவருக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளது.. 2010 ஆம் ஆண்டு அவருக்கு மேற்கு வங்க கவர்னரால் இந்திய அரசு வழங்கும் காந்தி புரஸ்கார் விருது வழங்கப்பட்டிருக்கிறது.

இவரைப் பற்றிய முழு கட்டுரை:
'காந்தி இன்று'  இணையதளத்தில்... 
.
 

14.3.12

காந்தி பற்றிய அஞ்சல் வழி படிப்பு


 ஏப்ரல் 20 -க்குள் விண்ணப்பியுங்கள்!
 
மகாத்மா காந்தி பற்றிய அஞ்சல் வழி சான்றிதழ் படிப்பில் சேர விரும்புவோர்
ஏப்ரல் 20-ம் தேதிக்குள் பதிவுக் கட்டணம் செலுத்தலாம் என்று காந்தி கல்வி நிலையம் அறிவித்துள்ளது.

 இது தொடர்பாக, காந்தி கல்வி நிலைய இயக்குநர் அ.அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தி:

 இந்தத் தேர்வை வீட்டிலிருந்தே எழுதலாம். கல்வித் தகுதியோ, வயது வரம்போ கிடையாது. தமிழிலும்,  ஆங்கிலத்திலும்  பாடத்திட்டம் உண்டு.  பதிவுக் கட்டணம் ரூ.200.  வேறு எந்தக் கட்டணமும் கிடையாது.

இந்தப் படிப்பில் சேருவோருக்கு அருகிலுள்ள நகரங்களில் நேரடித் தொடர்பு வகுப்பும் நடைபெறும். தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படும்.

 எந்த மொழி வாயிலாகப் பயில விரும்புகிறார்கள் என்பதைக் குறிப்பிட்டு காசோலை மூலமாகவோ, வரைவு காசோலை (டிமாண்ட் டிராப்ட்) மூலமாகவோ,  இயக்குநர்,  காந்தி கல்வி நிலையம்,  58,  வெங்கட் நாராயணா சாலை,  தியாகராய நகர்,  சென்னை -17 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தொலைபேசி: 044-2434 0607, 2434 6549.

நன்றி: தினமணி 



.

18.8.11

ஹசாரே கரத்தை வலுப்படுத்துவோம்!

தேசிய சிந்தனைக் கழகம்
தமிழ்நாடு
5/3 , லேக் ஏரியா, மூன்றாவது வீதி, வள்ளுவர் கோட்டம் அருகில்,
நுங்கம்பாக்கம், சென்னை- 600 034. தொடர்புக்கு: 98423 08521

18.08.2011
 


அண்ணா ஹசாரேவை ஆதரிப்போம்!
ஊழலுக்கு விடை கொடுப்போம்!


    ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் சட்டம் இயற்ற வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்துவரும் சமூக சேவகர் அண்ணா ஹசாரேவுக்கு தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலக் குழு நன்றியும் வணக்கமும் தெரிவிக்கிறது. அவருடன் இப்பணியில் இணைந்து செயல்படும் தேசபக்தர்கள் அனைவருக்கும் இறைவன் மேலும் வலிமையை வழங்க தேசிய சிந்தனைக் கழகம் பிரார்த்திக்கிறது.

    சுதந்திர இந்தியாவில் இதுவரை காணாத வகையில் ஊழல் பெருக்கெடுத்து நாட்டு மக்களை வேதனைப்படுத்தி வருகிறது. அமைச்சர்களே ஊழல்புகாரில் சிக்கி சிறைக்கு செல்லும் நிலையில், நாட்டு மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பிலுள்ள மத்திய அரசோ, சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை மறைமுகமாகக் காத்து வருகிறது.

    இதற்கு மாற்றாக, பொதுப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் அதிகாரிகளை கட்டுப்படுத்த வல்ல ‘லோக்பால் சட்டம்’ காலத்தின் தேவையாக உணரப்பட்டுள்ளது. இச்சட்டம் மூலமாக ஊழல் கறை படியும் உயரதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் உடனடியாகத் தண்டிக்க முடியும் என்பதே, இதன் முக்கியத்துவத்தை அதிகரிக்கிறது.

    இதற்கு, ‘லோக்பால் சட்டத்தில் பிரதமர் உள்ளிட்ட உயரதிகார பீடங்களையும் உட்படுத்துவதே தீர்வு’ என்று சமூக சேவகர் அண்ணா ஹசாரே கூறி வருகிறார். அவரது தலைமையிலான குழு உருவாக்கிய ஜன லோக்பால் சட்டத்தை மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது. இது எதிர்பார்க்கப்பட்டதே.

    தனது கோரிக்கையை வலியுறுத்தி அண்ணா ஹசாரே ஆக. 16 முதல் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்திருந்த நிலையில், அவரை கைது செய்து சிறையில் அடைத்த மத்திய அரசு, இப்போது அவரது போராட்டத்தை முனைமழுங்கச் செய்ய பல வகைகளில் முயன்று வருகிறது.

    மத்திய அரசின் தவறான செயல்பாடுகளை தேசிய சிந்தனைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. அண்ணா ஹசாரே குழுவினர் மீது அவதூறு பிரசாரம் மேற்கொள்ளும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களையும் கண்டிக்கிறோம்.

    மத்திய அரசு, தனது தவறுகளை இப்போதேனும் உணர்ந்து, ஹசாரேவை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். அவர் வலியுறுத்தும் வகையில், வலுவான, ஒட்டைகளற்ற லோக்பால் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

    ஹசாரேவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்திலும் நாடு நெடுகிலும் ஆதரவளித்த அரசியல் கட்சிகளும் பாராட்டிற்குரியவர்கள். ‘லோக்பால் சட்டம்’ விஷயத்தில் பிற அரசியல் கட்சிகளும் ஹசாரேவின் முயற்சிகளுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என்று நாடே எதிர்பார்க்கிறது.

     ஹசாரே உண்ணாவிரதம் இருந்துவரும் நிலையில் அவருக்கு ஆதரவான போராட்டங்களில் தேசிய சிந்தனைக் கழகமும் தன்னை இணைத்துக் கொள்கிறது. இது தொடர்பாக, மாநிலம் முழுவதிலும் ஆங்காங்கு நடைபெறும் போராட்டங்களில் தே.சி.கழக உறுப்பினர்கள் பங்கேற்பார்கள்.

    ஊழலுக்கு எதிரான ஹசாரே அவர்களின் போராட்டம் வெல்லட்டும்!

    பாரத அன்னை வெல்க!

இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள,
ம.கொ.சி.ராஜேந்திரன்.
(மாநில அமைப்பாளர்)

காண்க:
 
 
 
.

13.8.11

என்கடன் பணிசெய்து கிடப்பதே- 1


மனைவி பழனியம்மாளுடன் திரு. எஸ்.ஏ.சுப்பிரமணியம்.

தள்ளாத வயதிலும் கல்விச் சேவை புரியும் பெரியவர்!

கோவை, ஆக. 11:  கை, கால்கள் தளர்ந்துவிட்டன; கண் பார்வை மங்கிவிட்டது. ஊன்றுகோலே இவருக்கு மற்றொரு கால். கேட்கும் திறனும் குறைந்துவிட்டது. ஆனாலும், தனது 88 வயதிலும் பள்ளி மாணவர்களுக்கு சொந்தக் காசில் நிதியுதவி அளித்து வருகிறார் இந்தப் பெரியவர்.

யாரிடமும் கை ஏந்தாமல், தன்னுடைய ஒய்வூதியப் பணத்தில் ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வியுதவி புரிந்து வருகிறார். எவ்வித விளம்பரமும் இல்லாமல், சத்தமில்லாமல் சமூகத்துக்கு கல்விச்சேவை புரிந்து வருகிறார், கோவை- சூலூரைச் சேர்ந்த "எஸ்.ஏ.எஸ்' என்று அழைக்கப்படும் எஸ்.ஏ.சுப்பிரமணியம்.

1996-ல் "அருந்தவப் பசு எஸ்.ஏ.எஸ்' என்ற அறக்கட்டளை தொடங்கி, அதில் கிடைக்கும் வட்டிப் பணம் மூலமாக, இதுவரை 5,000 மாணவர்களுக்கு சுமார் ரூ. 30 லட்சம் நிதிஉதவி புரிந்திருக்கிறார்; தொடர்ந்து உதவி செய்து கொண்டிருக்கிறார்.

கோவையை அடுத்த சூலூரில் எளிய குடும்பத்தில் 2-வது மகனாகப் பிறந்த எஸ்.ஏ.சுப்பிரமணியம், கடன் வாங்கி படிப்பை முடித்தார். பட்டதாரி ஆசிரியராகப் பணியைத் தொடங்கியவர், தலைமை ஆசிரியராகவும், மாவட்ட கல்வி அலுவலராகவும், முதன்மைக் கல்வி அலுவலராகவும், பள்ளிக்கல்வி இணை இயக்குநராகவும், கூடுதல் இயக்குநராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.

ஓய்வு பெற்றதை அடுத்து, கல்விக்குழு அமைத்து பல மாணவர்களுக்கு உதவி வந்த எஸ்.ஏ.சுப்பிரமணியம், தனக்கு கிடைத்த ஒய்வூதியப் பணமான ரூ. ஒரு லட்சம் பணத்தைக் கொண்டு "அருந்தவப் பசு' என்ற பெயரில் அறக்கட்டளையைத் தொடங்கினார். இந்த அறக்கட்டளையின் நிதி இப்போது ரூ. 52 லட்சமாக உயர்ந்துள்ளது.

அறக்கட்டளை நிதி மூலம் கிடைக்கும் வட்டிப் பணத்தைக் கொண்டு அரசு
பள்ளிகளில் நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறார்.

இந்த ஆண்டு பிளஸ் 2-வில் 85 சதவீத மதிப்பெண்கள் பெற்ற கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 40-க்கு மேற்பட்டோருக்கு, ரூ. 4.30 லட்சம் நிதியுதவி வழங்க உள்ளார். இதற்கான விழா சூலூரில் செப். 4-ம் தேதி நடைபெற உள்ளது.

தளராத வயதிலும் கல்விக்காக நிதியுதவி செய்து வருவது குறித்து கேட்டபோது, எஸ்.ஏ.சுப்பிரமணியம் கூறியது:

கடந்த 1934-ல் சூலூருக்கு வந்த மகாத்மா காந்தியைச் சந்திக்க பள்ளிப் பருவ மாணவர்கள் 6 பேர் முயற்சி செய்தோம். நாங்கள் கஷ்டப்பட்டு 5 ரூபாயைச் சேர்த்து, மகாத்மா காந்தியைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பைப் பெற்றோம்.

அப்போது காந்தியை அணுகி, ""உயர்வு என்றால் என்ன?'' என்று கேட்டேன். அவர், ""சமூகத்தில் கஷ்டப்படும் ஏழைகளுக்கு உதவுவதே மகோன்னதமான காரியமாகும்'' என்றார். அது, என் நெஞ்சில் வைரமாகப் பதிவாகிவிட்டது.

அதேபோல பூமிதான இயக்கத் தலைவர் வினோபாஜி, கோவை வந்தபோது அவருடன் தங்கி அவருக்குப் பணிவிடை செய்துள்ளேன். இத்தகையவர்களது தொடர்பு எனக்கு ஊக்க சக்தியாக இருந்தது.

எளிய குடும்பத்தில் பிறந்து ஆசிரியராகப் பணியைத் துவக்கிய நான், பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளேன். அந்தத் தருணங்களிலேயே பலருக்கு நான் உதவியுள்ளேன்.

1996-ல் அறக்கட்டளை தொடங்கி இதுவரை பலருக்கு உதவி செய்துள்ளேன். எனக்குக் கிடைக்கும் ஒய்வூதியப் பணம் ரூ. 46,000 மற்றும் வீட்டு வாடகை ரூ. 12 ஆயிரத்தை மாதந்தோறும் சேமிக்கிறேன். ஆண்டுக்கு சுமார் ரூ. 7 லட்சம் அளவுக்கு நிதியை அறக்கட்டளையில் சேமித்து, அதன்மூலம் கிடைக்கும் வட்டிப் பணத்தில் மாணவர்களுக்கு நிதியுதவி செய்து வருகிறேன்.

ஒவ்வோர் ஆண்டும் மாணவர்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறோம். கடந்த ஆண்டில் ரூ. 3 லட்சம் நிதி வழங்கினோம். இந்த ஆண்டு சூலூரில் செப். 4-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் 40-க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு ரூ. 4.30 லட்சம் நிதியுதவி வழங்க உள்ளோம்.

என்னிடம் படித்து பல்வேறு பதவிகளில் இருக்கும் மாணவர்கள், நண்பர்கள் உள்ளிட்ட 50-க்கு மேற்பட்டோருக்கு சிறப்புச் செய்ய உள்ளோம். பணிஓய்வுக்குப் பிறகு, சுமார் 60 மாணவர்கள் பி.இ, எம்.பி.பி.எஸ். படிப்புகளில் சேர நிதியுதவி செய்துள்ளேன் என்றார்.

88 வயதானாலும் நல்ல ஞாபகச் சக்தியுடன் பழைய சம்பவங்களை நினைவுகூர்கிறார், எஸ்.ஏ.எஸ். பத்திரிகைச் செய்திகளைப் பார்த்து, நாட்டு நடப்புகளைத் தெரிந்து கொள்கிறார். எங்கு செல்வதானாலும் கைத்தாங்கலாக அழைத்துச் செல்கிறார், மனைவி எஸ்.ஏ.பழனியம்மாள். இவரும் ஓய்வுபெற்ற ஆசிரியர்.

மாணவ மாணவியருக்கு உதவுவதையே வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்ட இவர், காக்கை, குருவிகளின் தாகம் தீர்க்க வீட்டு சுற்றுச்சுவர் மீது தினந்தோறும் பாத்திரத்தில் தண்ணீர் வைப்பது வியப்பளிக்கவில்லை. இவர் தனது கண்களையும் தேகத்தையும் தானம் செய்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

உயிருடன் இருக்கும்போதே அறக்கட்டளை நிதியை ரூ. ஒரு கோடியாக்கி, அதன் மூலம் கிடைக்கும் வட்டிப் பணத்தில் அதிகமான மாணவர்களுக்கு தொடர்ந்து நிதியுதவி செய்ய வேண்டும் என்பதே லட்சியம் என்கிறார், 89 வயதை நெருங்கும் எஸ்.ஏ.சுப்பிரமணியம்!

- ஆர்.ஆதித்தன்

நன்றி: தினமணி (12.07.2011) கோவை பதிப்பு.