நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்
தே.சி.க. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தே.சி.க. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21.8.16

புதிய கல்விக் கொள்கை மிக அவசியம்!


இன்றைய சூழலில் புதிய கல்விக் கொள்கை மிக அவசியம்
அண்ணா பல்கலைக்கழக 
முன்னாள் துணைவேந்தர்
ஏ.கலாநிதி திட்டவட்டம்


 
சென்னையில் நடந்த தேசிய கல்விக் கொள்கை -2016 குறித்த கருத்தரங்கில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஏ.கலாநிதி பேசுகிறார்


சென்னை, ஆக. 20: இன்றைய சூழலில் புதிய கல்விக் கொள்கை மிக அவசியம் என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஏ.கலாநிதி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி), வித்யா பாரதி, சம்ஸ்க்ருத பாரதி, காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி ஆராய்ச்சி மையம், தேசிய சிந்தனைக் கழகம் ஆகிய அமைப்புகளின் சார்பில், தேசிய கல்விக் கொள்கை -2016 குறித்த கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில் அண்ணா பல் கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், காமன்வெல்த் அறிவியல் தொழில்நுட்பக் கல்வி ஆராய்ச்சி மைய இயக்கு நருமான ஏ.கலாநிதி பேசியதாவது:

பண்டைய கல்விமுறையை ஒழித்தால்தான் இந்தியர்களை அடிமைகளாக்க முடியும் என்று கருதி, 1835-ம் ஆண்டு மெக்காலே வேறொரு கல்விக் கொள்கையை உருவாக்கினார். அதைத்தான் நாம், மாற்றியும் திருத்தியும் பின்பற்றி வருகிறோம். அதைக் கைவிட வேண்டிய நேரம் வந்துள்ளது.

இன்றைய சூழலில் புதிய கல்விக் கொள்கை மிகவும் அவசியமானது. 8-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெறலாம் என்பதை 5-ம் வகுப்பு வரை என்று மாற்றுவது நல்ல விஷயம். பொறியியல் கல்வி கற்பவர்களில் 87 சதவீதம் பேர்தான் வேலைக்கு செல்வதற்கு தகுதியான அளவுக்கு உள்ளனர். இதற்கு காரணம் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இல்லாததுதான். மாணவர்களுக்கு சிறந்த பண்பு நலன்களையும் கற்றுத்தர வேண்டும்.

-இவ்வாறு கலாநிதி கூறினார்.

வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன்:

இந்தியாவில் 35 கோடிக்கும் அதிகமானோர் படிக்கும் வயதில் உள்ளனர். எனவே, இந்தியாவுக்கு கல்வி என்பது மிக முக்கியமானது. பள்ளிக் கல்வி என்ற அஸ்திவாரம் சரியாக இருந்தால்தான் உயர்கல்வி தரமானதாக இருக்கும். ஆனால், நம் நாட்டில் பள்ளிக் கல்வி குறிப்பாக அரசுப் பள்ளிகள் கவலை அளிக்கும் வகையிலேயே செயல்படுகின்றன.

உலக அளவில் பள்ளிக் கல்வியில் சிறந்து விளங்கும் தென்கொரியா, பின்லாந்து நாடுகளில் வகுப்பறைகள் டிஜிட்டல் மயமாகிவிட்டன. வை-பை இணையதள வசதி இல்லாத வகுப்பறைகளே இல்லை என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில் அரசுப் பள்ளிகளில் நாற்காலிகள், தண்ணீர், கழிவறை, சுற்றுச்சுவர் போன்ற அடிப்படை வசதிகள்கூட இல்லை. கல்விக்காக அரசு அதிகமாக செலவு செய்ய வேண்டும். அப்போதுதான் பொதுமக்கள் கல்விக்காக செலவு செய்வது குறையும்.

நம் நாட்டில் ஒரு பல்கலைக்கழகத்தின் கீழ் நூற்றுக்கணக்கான கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் உயர் கல்வியின் தரம் குறைகிறது. பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி கற்பிக்கப்பட்டால்தான் தரமும், ஆராய்ச் சியும் அதிகரிக்கும். பல்கலைக்கழகங் கள் இல்லாவிட்டாலும் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அதிகாரமாவது வழங்க வேண்டும்.

அரசுப் பள்ளிகள், பள்ளிக் கல்வி, கல்லூரி கல்வியில் இருக்கும் பல்வேறு குறைபாடுகள் தேசிய கல்விக் கொள் கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. 8-ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி என்பது 5-ம் வகுப்பாக குறைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் மட்டுமே இருக்க நினைப்பவர்களுக்கு சமச்சீர் கல்வி இருக்கலாம், ஆனால், வெளிமாநிலங்கள், வெளிநாட்டுக்கு செல்ல வேண்டுமானால் சிபிஎஸ்இ போன்ற கல்வித் திட்டங்கள் வேண்டும்.

பின்லாந்து போன்ற நாடுகளில் கல்விக் கொள்கையில் தொடர்ச்சி இருக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சியுடன் கலந்து ஆலோசித்த பிறகே கல்விக் கொள்கையை உருவாக்குகிறார்கள். தரமான பள்ளிக் கல்வி, பல்கலைக்கழக கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும்.

ஐஐடி நுழைவுத் தேர்வு போன்ற அகில இந்திய நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள முடியாத நிலைக்கு தமிழக மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

கல்வி என்பது வெறும் படிப்பு, அறிவுக்காக மட்டுமாக இல்லாமல் நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாணவர்களை தயார்படுத்துவதாக இருக்க வேண்டும். அதற்கேற்ற மாற்றங்களுடன் புதிய கல்விக் கொள்கை இருக்க வேண்டும்.

மூத்த பத்திரிகையாளர் மாலன்:


புதிய கல்விக் கொள்கைக்கான எதிர்ப்புகள் அரசியல் தளத்தில் இருந்துதான் வருகிறது. அறிவார்ந்த தளத்தில் இருந்து வரவில்லை. கேள்வியே கேட்காமல் கீழ்படியச் செய்வது புதிய கல்விக் கொள்கையின் நோக்கம் என்று எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர். மாணவர்களை படைப்பாற்றல் மிக்கவர்களாகவும், கண்டுபிடிப்புகளை நிகழ்த்துபவர்களாகவும் உருவாக்க வேண்டும் என்பது புதிய கல்விக் கொள்கைக்கான நோக்கம் என்று கூறப்பட்டுள்ளது.

8-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்பதால் போட்டி மனப்பான்மை குறைந்துள்ளது. புதிய கல்விக் கொள்கைக்கான பரிந்துரையில், வேண்டுமென்றால் சமஸ்கிருதத்தை 3-வது மொழியாக கற்கலாம் என்று ஒரே ஒரு இடத்தில்தான் கூறப்பட்டுள்ளது. 10 லட்சம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்று பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது. அதை 50 லட்சம் மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

சென்னை விவேகானந்தா கல்லூரி தேர்வுகள் கட்டுப்பாட்டாளர் பேராசிரியர் ஆர்.ராமசந்திரன்:

புதிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதத்தைத் திணிப்பதாக எல்லோரும் கூறுகின்றனர். சமஸ்கிருதம் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்பது தவறான கருத்து. சமஸ்கிருதத்தில் 5 சதவீதம் அளவுக்குதான் ஆன்மிகக் கருத்துகள் உள்ளன. புதிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதத்தையும் படிக்கலாம் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.

விவேகானந்தா வித்யாலயா பள்ளியின் முதல்வர் பிரேமா மகாதேவன்:

தரமான கல்வியின் மூலமே இந்தியா சிறந்த நாடாக மாற முடியும். மெக்காலே கல்விக் கொள்கையின் தொடர்ச்சியாகவே தற்போதைய கல்விக் கொள்கை உள்ளது. மாணவர்கள் ஆசிரியர்களைத் தேடிச் சென்ற காலம் மாறி, தற்போது மாணவர்களைத் தேடி ஆசிரியர்கள் செல்கின்றனர். இந்தக் கல்வி முறை நிச்சயம் மாற்றப்பட வேண்டும்.

புதிய கல்விக் கொள்கை பற்றி பலரும் நிறை குறைகளைச் சொல்கின்றனர். அதில் எந்தக் குறையும் இல்லை. மனிதனை முழு மனிதனாக்கக் கூடிய அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன.

 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்வியியல் துறை முன்னாள் இயக்குநர் சதானந்தன், ஏபிவிபி துணைத் தலைவர் எஸ்.சுப்பையா, சாஸ்த்ரா பல்கலைக்கழக டீன் எஸ்.வைத்திய சுப்பிரமணியம், பேராசிரியர் பி.கனகசபாபதி உள்ளிட் டோரும் பேசினர். 

நன்றி: தி இந்து (21.08.2016)
.

19.12.14

தே.சி.க. மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம்



 மாநில  துணைத்தலைவர்  .திரு.சா.சிவானந்தம்,அகில பாரத அமைப்பாளர் திரு. பேரா.சதானந்த சப்ரே, மாநிலத் தலைவர்  திரு ம.வே.பசுபதி, மாநில துணைத் தலைவர் திரு.தஞ்சை வெ.கோபாலன்   ஆகியோர் அமர்ந்திருக்கும் காட்சி .

தமிழத்தில் தேசிய, தெய்வீக சிந்தனைகளைப் பரப்பும் பணியில் சங்க குடும்ப அமைப்புகளில் ஒன்றான 'தேசிய சிந்தனை கழகம்' செயல்பட்டு வருகிறது. தேசிய சிந்தனைக்  கழகத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் கடந்த கார்த்திகை மாதம் 28-ம் தேதி (2014, டிசம்பர் 14) ஞாயிற்றுக் கிழமை அன்று  சென்னை, சேத்துப்பட்டு, மகரிஷி வித்யாமந்திர் பள்ளி அரங்கில் நடைபெற்றது.

10.10.14

தமிழமுது பருக வாருங்கள்!







 திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
200-வது ஜெயந்தி சொற்பொழிவு 


அன்பு சகோதரர்களுக்கு வணக்கம்!    

 தமிழகத்தின் தலைசிறந்த தமிழறிஞர்களில்  ஒருவரான ‘மகாவித்வான்‘ திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் 200-வது பிறந்த ஆண்டையொட்டி,  நமது  தேசிய சிந்தனைக் கழகம்  சொற்பொழிவு நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. 

கீழ்க்கண்ட நிகழ்ச்சிநிரலின்படி நடைபெறும்  இந்நிகழ்வில் தாங்களும் தங்கள் நண்பர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். 


                                 நிகழ்ச்சி நிரல் 

நாள்  :  ஸ்ரீ  ஜய  வருஷம்,  புரட்டாசி 25
              (12.10.2014)  ஞாயிற்றுக்கிழமை.
நேரம் :  மாலை  05.30 மணி.
இடம்  :  12, எம்.வி.நாயுடு தெரு, 
                 சேத்துப்பட்டு (அஞ்சல் ) 
                பழைய  ஆர்.டி .ஓ. அலுவலகம்  அருகில்,   
                சென்னை-31.

உரை:  பேராசிரியர்  ம. வே. பசுபதி  அவர்கள் 
               முதல்வர் (பணிநிறைவு),   
               திருப்பனந்தாள்  தமிழ்க்  கல்லூரி. 


அனைவரையும்  நிகழ்ச்சிக்கு  அகமகிழ்வுடன்   அழைக்கின்றோம்!  

.

16.4.14

தேர்தலில் செலுத்தப்படும் வாக்கு... தேசத்திற்கான மாற்று!






தேசிய சிந்தனைக் கழகத்தின்
மக்களவைத் தேர்தல் வேண்டுகோள்

***


ரும் தேர்தல் நம் முன்னே  ஒரு மாபெரும் சவாலை  வைத்திருக்கிறது. அது என்ன?
புதிதாக வாக்குகளைப் பதிவு செய்யப் போகும் இளைய தலைமுறையினருக்கு நாம் சொல்லப் போகும் செய்தியும் வழிகாட்டுதலும் தான்  அவை !
வாழ்க்கையில் சாதிக்கவும்,  வெற்றி பெறவும்  துடிக்கும் இளைஞர்களுக்கு  எத்தகைய பாதையை,  களத்தை  நாம்  நம் வாக்கின் மூலம் அமைக்கப் போகிறோம்?  
கல்வியில்,  பொருளாதாரத்தில், அறிவியலில், ஆட்சியில், பல்வேறு துறைகளில் தங்களது சாதனைகளைப்  படைக்க  நம்பிக்கையுடன்  போராடும் இளைய தலைமுறையினருக்கு நாம்  நம்பிக்கையூட்டும் ஆட்சியைத் தானே தர வேண்டும்?
ஆம், அதற்கான  அருமையான வாய்ப்பே இப்போது நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 16-வது மக்களவைத் தேர்தல்.
இனிவரும் காலம்  இந்தியர்களின்  கைகளில். தேசிய சிந்தனைக் கழகம் இந்தச் சவாலைச்  சந்திக்க உங்களை அன்புடன் அழைக்கிறது.
இதுதொடர்பாக உங்களுடன் ஓர் உளமார்ந்த பகிர்வு இது...

         * * * 

நமது நாட்டின் சிறப்பு:

ல்லாயிரம் ஆண்டுகாலப் பாரம்பரியம் கொண்டது நமது நாடு. இன்று உலகின் வல்லரசுகளாகக் கருதப்படும் நாடுகள் உருவாகாத காலகட்டத்திலேயே, உலகின் நாகரிகத் தொட்டிலாக விளங்கியது பாரதம். 19-ஆம் நூற்றாண்டுத் துவக்கம் வரையிலும் உலகப் பொருளாதாரத்தின் மைய விசையாக இருந்தது பாரதம் தான் என்கின்றனர் மேலை அறிஞர்கள். 

நமது நாட்டின் பழமைக்கு உதாரணங்களாக இதிகாசங்களான ராமாயணமும் மகாபாரதமும் விளங்குகின்றன. மிகத் தொன்மையான இலக்கியங்களாக நமது நாட்டின் வேதங்களும் உபநிடதங்களும் மதிக்கப்படுகின்றன. இவற்றின் காலம் சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கருதப்படுகிறது. 

தமிழகத்தின் தொன்மையான நூல்களாக ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியமும் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் விளங்குகின்றன. தமிழில் உருவான திருக்குறளும், சமஸ்கிருதத்தில் உருவான அர்த்தசாஸ்திரமும் நமது சமூக அறக் கோட்பாடுகளை வெளிப்படுத்துகின்றன. 

பௌத்தம், சமணம், சீக்கியம் ஆகிய மதங்கள் உருவான கழனி பாரதம். நாட்டின் தொன்மையான வழிபாட்டுமுறைகள் ஒருங்கிணைந்த இந்துமதம், சகிப்புத் தன்மையை உலகிற்கு போதிக்கும் மதமாகத் திகழ்கிறது. உலகில் தோன்றிய அனைத்து சமயங்களைச் சார்ந்தவர்களும் வாழும் நாடாகவும் ஒளிர்வது நமது தேசம். 

உடலையும் மனதையும் ஒருங்குவிக்கும் யோகக்கலை, ஆன்மநேயத்தை உருவாக்கும் தியானம், ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் பின்விளைவுகளற்ற ஆயுர்வேத, சித்த மருத்துவ முறைகள், ஏழு சுரங்களில் இசையைக் கட்டுக்குள் கொண்டுவந்த மேன்மை, பாரம்பரியச் சிறப்புமிகு பரத நாட்டியம், குச்சிப்புடி, கதகளி உள்ளிட்ட நடன வகைகள், அறுசுவைகளில் உணவையே மருந்தாகக் கொண்ட நேர்த்தி, வாழ்வை ரசிப்பதற்கு இலக்கணமான விதவிதமான உணவு, ஆடை வகைகள், சிற்பங்களின் தொகுப்பான ஆயிரக் கணக்கான பெருங்கோவில்கள்,... 

எதனைச் சொல்வது? எதனை விடுவது?

நமது தாய்நாட்டின் சிறப்புகளை நினைக்குந்தோறும் பெருமிதம் மிகுகிறது.  ‘செப்புமொழி பதினெட்டுடையாள்என்று மகாகவி பாரதியால் பாடப்பட்ட இங்கு, பலமொழிகள் பேசும் மக்கள் கூட்டம் எல்லா மாநிலங்களிலும் கலந்து பரவி இருக்கிறது. பல்வேறு இனமக்கள், பலவித பழக்கவழக்கங்கள், நில அமைப்பிலும் தட்பவெப்பத்திலும் பலவாறாக மாறுபட்ட தன்மை என, இந்தியா ஒரு மாபெரும் மானுட நாற்றங்காலாகவே தரிசனம் தருகிறது.

இவற்றையெல்லாம் இங்கு இப்போது கூற வேண்டிய தேவை என்ன? 

இந்தக் கேள்விக்கு பதில், நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 16-ஆவது மக்களவைத் தேர்தல் தான். 

மக்களாட்சி முறையில் முதலிடம்:

நமது நாட்டின் மொத்த மக்கள்தொகை தற்போது 130 கோடியை நெருங்கிவிட்டது. மக்கள்வளத்தில் உலகிலேயே இரண்டாவது இடம் வகிக்கும் நாம் தான் இந்த ஜனநாயக யுகத்தில் மாபெரும் மக்களாட்சி அரசாகச் செயல்படுகிறோம் என்பது உங்களுக்கு தெரியுமா?

உலகின் வல்லரசான அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளில் நடத்தப்படும் தேர்தலுடன் ஒப்பிட்டால், நமது தேர்தல் பல மடங்கு பெரியது. சீனா வல்லரசாக இருந்தாலும் அங்கு மக்களாட்சி நிலவவில்லை. பல ஐரோப்பிய நாட்டுகளின் தேசிய அளவிலான தேர்தலை, நமது பல மாநிலங்களில் நடத்தப்படும் சட்டசபைத் தேர்தலுடன் கூட ஒப்பிட முடியாது. 

ஆனால், நமது நாட்டில் 81.45 கோடி மக்கள் வாக்களிக்கும் மாபெரும் மக்களவைத் தேர்தல், ஐந்தாண்டு இடைவெளியில் ஆர்ப்பாட்டமின்றி நடத்தப்பட்டு அரசியல் மாற்றங்கள் இங்கு இயல்பாக நிகழ்த்தப்படுகின்றன. இந்தியாவுடன் சுதந்திரம் பெற்ற பல நாடுகளிலும் அரசியல்நிலை மோசமாக மாறியுள்ளபோது, இந்தியா மட்டும் ஒவ்வொரு தேர்தலிலும் தனது ஜனநாயகத்தை மேம்படுத்தி வருகிறது. 

நமது மக்களாட்சி முறையில் குறைகள் இல்லாமல் இல்லை. ஆனால், உலகு தழுவிய அளவில் எந்த அராஜகமும் இன்றி ஆட்சி மாற்றம் நிகழ வாய்ப்புள்ள மாபெரும் ஜனநாயக நாடாக இந்தியா மட்டுமே உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பலகோடி மக்கள் உள்ள நாட்டில் அவர்களது விருப்பங்களும் தேர்வுகளும் பலவிதமாகவே இருக்கும். அவற்றில் இணக்கம் கண்டு அமைவதே தேசிய மைய அரசாக இருக்க முடியும். இங்கு மட்டுமே சமூகத்தின் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள ஒருவரும் கூட விரும்பினால் அதிகார மைய அரசியலுக்கு வர முடியும். 

மக்கள் குழுக்கள் தங்கள் பிரதிநிதித்துவத்தால் தங்களுக்குத் தேவையான சட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளவும், நடைமுறையில் திருத்தங்கள் செய்யவும் மக்களாட்சி முறை வழிவகுக்கிறது. இதனை உலக அளவில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வரும் நாடு பாரதமே என்று நிச்சயமாகச் சொல்ல முடியும்.

கூட்டாட்சியும், குடிமகனும்:

நமது நாட்டின் ஆட்சி நிர்வாக முறை, மத்திய அரசு, மாநில அரசுகள், உள்ளாட்சி நிவாகங்கள் என மூன்றடுக்கு முறையைக் கொண்டது. இத்தகைய அற்புதமான தேர்தல் அமைப்பு முறை வேறெந்த நாட்டிலும் கிடையாது. 

நாட்டின் சிறு அலகான கிராமத்தில் வாழும் மக்களை நிர்வகிக்க, உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. மாநில அளவிலான நிர்வாகத்திற்கு சட்டசபைத் தேர்தல்களும், மத்திய அளவிலான தேசிய நிர்வாகத்திற்கு மக்களவைத் தேர்தலும் நடத்தப்படுகின்றன. 

மக்களாட்சி முறையில் மக்களே எஜமானர்கள். மக்களுக்காக, மக்களே மக்களை ஆள்வது தான் ஜனநாயகம். இதனை நாட்டின் சிறுமூலையிலிருந்து நாட்டின் மையம் வரை ஒரே சீராக கொண்டுசேர்த்திருப்பதே, நமது சுதந்திரம் நமக்களித்த சிறப்புகளில் பெரியது எனலாம்.

அதேசமயம், மக்களாட்சி முறைக்கே உரித்தான முக்கிய குறைபாடான ஊழலால் நமது நாடு தத்தளிக்கிறது. மக்கள் நல்ல ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்தால், ஊழல் நிகழாமல், வளர்ச்சி பெருகும். மாறாக, பல்வேறு பிராந்திய, மத, மொழி அடிப்படையிலான சுயநலக் கண்ணோட்டத்துடன் வாக்காளர்களின் வாக்குகள் திசைதிருப்பப்படும்போது, இம்மாதிரியான தவறான விளைவுகளும் ஏற்படுகின்றன.

ஊழல், குடிமகனின் வாழ்வில் அனைத்து நிலையிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. நல்லாட்சிக்கு ஊறு விளைவிக்கும் ஊழலால், நமது பாதுகாப்புத் துறை தடுமாறுகிறது;  விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமல் செய்கிறது; பதுக்கல் பேர்வழிகளை ஊக்குவித்து விலைவாசியை உயர்த்த வழிவகுக்கிறது; நாட்டில் சமச்சீரான வளர்ச்சி குன்றி பொருளாதார வீக்கமும் வர்க்க வேறுபாடுகளும் ஏற்படுகின்றன.

சமச்சீரற்ற வளர்சி காரணமாக, பிரிவினைக் கோரிக்கைகள், மத தீவிரவாதம், நக்சலிஸ ஆபத்துக்களை நாம் எதிர்கொண்டு வருகிறோம். தவிர எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் நாடு தவிக்கிறது. ஆதிக்க உணர்வுள்ள சில அண்டைநாடுகள் நம் நாட்டில் நிகழ்த்தும் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தும் துணிவின்றி அரசு வேடிக்கை பார்க்கிறது.

இதற்கெல்லாம் தீர்வு என்ன?

முற்காலத்தில் மன்னராட்சிக் காலகட்டத்தில், மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி (யதா ராஜா ததா பிரஜா) என்று கூறப்பட்டது. இப்போது ஜனநாயக யுகத்தில் இதுவே, மக்கள் எவ்வழியோ மன்னன் அவ்வழி என்று அதிகாரம் திசை திரும்பி இருக்கிறது. 

அதாவது, இந்த நாட்டின் அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது. மக்கள் நல்ல தேர்வைச் செய்தால் நல்லரசு அமையும். மக்கள் தேர்வு தவறானால், மக்கள் பிரதிநிதியும் மோசமானவராகவே இருப்பார். இதை நன்குணர்ந்த குடிமகனே மக்களாட்சி முறையின் நாயகன்.

நமது நாடு எத்தனையோ பாரம்பரியச் சிறப்புகளைப் பெற்றிருந்தும், நமது ஜனநாயகம் உலகிலேயே மிகப் பெரியது என்ற பெருமை பெற்றிருந்தும், ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடுகளால் மக்களாட்சி முறை மீது விரக்தி ஏற்படுகிறது. இது இயற்கையே. 

ஆனால், இதற்கு காரணம் குடிமக்களான நாமே தான் என்பதை நம்மில் எத்தனை நம்மில் பேர் உணர்ந்துள்ளோம்?

கடந்த சில ஆண்டுகளில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஊழல்கள் வெளியாகி மக்களை நிலைகுலையச் செய்திருக்கின்றன. விலைவாசியின் ஏறுமுகத்தால் சாமானிய மனிதன் வாழ்வதே கேள்விக்குறியாகிவிட்டது. கலாச்சாரச் சீர்கேடுகளால் சமூக அமைதியின்மையும் பாதுகாப்பின்மையும் அதிகரித்து, நாட்டில் குழப்பம் பெருகி வருகிறது. இவை நம்மைப் பீடிக்கும் நோய்கள். 

நல்ல மண்ணில் தான் நற்பயிர் விளையும். வயல் முழுவதும் முள்ளும் களையும் பரவிக் கிடந்தால் அங்கு விளைச்சல் எங்ஙனம் கிடைக்கும்? இதுதான் நமது ஜனநாயகத்தின் நோய்க்குக் காரணம். ஜனநாயக வயலின் நோயைத் தீர்ப்பது எங்ஙனம்?

இதனைத் தீர்க்கும் மருந்தும் நம்மிடம் தான் உள்ளது. அதுவே நமது வாக்குரிமை.

வாக்குரிமை என்ற மந்திரம்:

குடிமகனே நாட்டின் ஆதாரம். அவனது ஒற்றை வாக்குரிமையால் என்ன சாதனை நிகழ்ந்துவிடும்? என்ற கேள்வி எழலாம். குடிமக்கள் சேர்ந்து தேசம் ஆவது போலவே, குடிமக்களின் வாக்குகள் இணைந்து மாபெரும் ஆற்றலாக வெளிப்பட்டு, தனது பிரதிநிதிகளைத் தேர்வு செய்யும். 

ஆகவே, நமது நாட்டின் பழமையான சிறப்பில் பெருமிதம் கொள்ளும் நாம், தற்போதைய தார்மிக வீழ்ச்சியால் வருத்தமுறும் நாம், இதனை எதிர்கால சந்ததியினருக்கு சீர்திருத்திக் கொடுத்தாக வேண்டிய கடமையில் உள்ளோம் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

நமது முன்னோர் திருத்தியமைத்த பாதையில் எளிதாகப் பயணிக்கிறோம். அவர்கள் பாடுபட்டுப் பெற்றுத் தந்த சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோம். இந்த சுதந்திரத்தையும் வளர்ச்சியையும் நமது சந்ததியினரிடம் பத்திரமாக ஒப்படைத்துச் செல்வது நமது கடமை அல்லவா?

ஆகவே, தான் வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. வாய்ப்புகள் வரும்போது சோம்பித் தூங்கிவிட்டு, பிறகு துயிலெழுந்து புலம்பிப் பயனில்லை. மக்களாட்சி முறையில் ஒவ்வொருமுறை நடத்தப்படும் தேர்தலும் மாற்றத்திற்கான அறைகூவலே.

ஆகவே, இந்த நாட்டை மறுமலர்ச்சி காணச் செய்ய விரும்பும் எவரும், வாக்குரிமையின் சிறப்பை அனைவர் மனதிலும் பதியச் செய்ய வேண்டும்; நமது வாக்குரிமையை நூறு சதவிகிதம் பயன்படுத்தி, முழுமையான மாற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும். இந்த நாட்டின் மீட்சி, ஒவ்வொரு குடிமகனும் தவறாது வாக்களிக்கும்போது தான் சாத்தியமாகும்.

நமது புனிதக் கடமை:

எனவே, வரும் ஏப்ரல் 24-ல் தமிழகத்தில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் அனைத்துப் பகுதிகளிலும் நூறு சதவிகித வாக்குப்பதிவை உறுதிப்படுத்த முயற்சிப்போம்! 

அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை இழந்தவர்களுக்காக இம்முறை ‘நோட்டாஎன்ற பொத்தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் எந்த வேட்பாளரும் பிடிக்காவிட்டால், வாக்காளர் இதனைத் தேர்வு செய்யலாம். 

‘நோட்டாவுக்கு விழும் வாக்குகள் நமது ஜனநாயக நடைமுறை மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கான ஒரு எச்சரிக்கை வடிகால். இதுவும் நமது மக்களாட்சி முறையைச் சீர்திருத்த உதவும் ஒரு கருவியே.

“வாக்குரிமை ஒரு புனிதமான கடமை. அது நாம் நாட்டுக்கு செலுத்த வேண்டிய ஒரு முக்கியமான பொறுப்பும் கூட. எனவே, வாக்குரிமையைப் பயன்படுத்துவது என்பது நீங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டிய செயலாக இருக்க வேண்டும். நீங்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்’’ என்கிறார் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.

நாட்டின் தென்கோடியில் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்த அவர், தனக்கு நாடு அளித்த அனைத்து வாய்ப்புகளையும் நேரிய முறையில் பயன்படுத்திக் கொண்டதால் நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்தார். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்பவனே புத்திசாலி. நமது நாட்டைச் சீரமைக்க விரும்பும் எவருக்கும் கிடைத்துள்ள அரிய வாய்ப்பு இந்தத் தேர்தல்.

ஆகவே, விரக்தியில் வாக்களிக்காமல் தவிர்ப்பதைவிட, உறுதியுடன் வாக்களிப்பது மேலானது என்பதை உணர்வோம். இதனை நம்மைச் சுற்றியுள்ள அனைவரிடமும் பரப்புவோம். அதன்மூலமாக நூறு சதவிகித வாக்குப் பதிவை உறுதிப்படுத்துவோம்!

நமது பிரதிநிதியாக மக்களவையில் இயங்க உள்ள வேட்பாளர் யாராக இருக்க வேண்டும் என்பதையும், அவர்தம் தகுதியையும், தனிப்பட்ட வாழ்வில் ஒழுக்கம், நேர்மை, வாக்குறுதிகள், அவர் சார்ந்த அரசியல் கட்சியின் நிலைப்பாடுகள் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் சீர்தூக்கிப் பார்த்து ஆராய்ந்து முடிவெடுப்போம்! வாக்குகளை விலைபேசும் எத்தர்களையும் புறக்கணிப்போம்! 

இது நமது நாடு; இந்த நாட்டை நமது வாக்குரிமையால் நாமே ஆள்கிறோம் என்ற பெருமிதத்துடன், நாட்டை ஆளத் தகுதியான நல்லோரைத் தேர்வு செய்வோம்! 

நம்மை ஆளுபவர்கள் அல்லது  நாம் தேர்ந்தெடுக்கும்  பிரதிநிதிகள்  தகுதியும் திறமையும் உடையவர்களாக  மட்டுமல்லாமல் ஆளுமைத்திறனும் அதிகாரத்திற்கும் பொருளுக்கும் ஆசைப்படாதவர்களாகவும், விலைக்கு வாங்கப்பட முடியாத  வைராக்கியம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் 
.
நம் பண்பாட்டின் மீதும், தான்  வரித்துக்கொண்ட லட்சியத்தின் மீதும்  அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களாகவும் நமது பிரதிநிதிகள் இருத்தல் அவசியம் இதனையும் கருத்தில் கொள்வோம்! 

தேர்தல் என்பது ஜனநாயகத்தின் திருவிழா. இவ்விழாவில் தான் நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. நாடு என்பது நாமே என்பதால், நமது எதிர்காலம் இப்போது நம் கையில் தான் உள்ளது. எனவே, வரும் தேர்தலில், நாட்டின் எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் நல்லோரை நாயகராகத் தேர்ந்தெடுப்போம்! 

வாக்குச்சாவடிக்குச் செல்லும் பாதையும் புனிதப்பயணம் போன்றதே. 

வாக்களிப்பதென்பது நமது புனிதக் கடமை. 

நமது வாக்கை நல்லவர்களுக்கு அளிக்கும்போது நாடு உயரும். நமது சிறப்புகளும் அப்போது தான் மிளிரும்!
பாரத அன்னை வெல்க!

-கவிஞர் குழலேந்தி
 
* * * * * * * * * * * * * 

தொடர்புக்கு:

ம.கொ.சி.ராஜேந்திரன்,
மாநில அமைப்பாளர்,
தேசிய சிந்தனைக் கழகம்,
1, சக்தி, எம்.வி. தெரு,
பஞ்சவடி, சேத்துப்பட்டு,
சென்னை- 600 031.

அலைபேசி: 90031 40968
மின்னஞ்சல்: makochirajendran@gmail.com, kuzhalendhi@gmail.com



வாக்களிப்பது நம் உரிமை!

 மாற்றம் காண்பது நம் கடமை!