நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

26.4.12

குருவிடம் கேட்ட வரம்!


 ஸ்ரீ சங்கர ஜெயந்தி: ஏப். 26 



கங்கைக் கரையில் பிரம்ம நிஷ்டையில் இருந்தார் ஸ்ரீசங்கர பகவத் பாதர். திடீரென அவரது தியானம் கலைந்தது. கண்களைத் திறந்து பார்த்தால், எதிரே ஒருவர் நின்றுகொண்டிருந்தார். பார்த்ததும் அவருக்குத் தெரிந்தது, அவர்தான் கெளட பாதர் என்பது.

உடனே ஆசனத்தில் இருந்து எழுந்தார். அவர் பாதம் பணிந்து அவரைப் போற்றி ஒரு துதியைச் சொன்னார்.

"சிவந்த மேனி கொண்டவர். தமது இடக்கையில், கவிழ்த்த வெண்தாமரை மொட்டுப் போன்று தோன்றும் கமண்டலத்தையும், வலக்கையில் கருவண்டுகள் போன்ற ருத்ராட்சத்தால் ஆன ஜெப மாலையையும் வைத்திருக்கிறார். வலக்கை கட்டை விரலால் ருத்ராட்சத்தை உருட்டிக் கொண்டிருக்கிறார். இது, கருவண்டுகள் அவரது கைகளாகிய தாமரை மலரைச் சூழ்ந்து கொண்டிருப்பதுபோல தோன்றுகிறது'' என்று கூறித் துதித்தார்.

கெளட பாதர், ஸ்ரீசங்கரரின் குருவான கோவிந்த பகவத்பாதருக்கும் குருவானவர். இருவரும் நல்ல ஞானம் பெற்றவர்கள். இருப்பினும், குரு-சிஷ்யன் என்ற முறையில், கௌட பாதர் சங்கரரிடம், "காமம் போன்ற விரோதிகளைக் களைந்தீர்களா, சாதனா சந்துஷ்டியை உணர்ந்தீர்களா, அஷ்டாங்க யோக சித்தி பெற்றீர்களா?'' என்றெல்லாம் கேள்விகளைக் கேட்கிறார்.

அதற்கு சங்கரர் அடக்கத்துடன், "வியாஸமுனியின் புதல்வரான சுகாசாரியரிடம் உபதேசம் பெற்ற உங்களது பாத தரிசனம் எனக்குக் கிடைத்ததே பெரும் பேறு. உங்களை ஒரு முறை தரிசித்தாலேயே வாய் பேச இயலாதவன் பேசவும், மூடன் அறிவாளியாகவும், பாவம் செய்தவன் தனது பாவங்கள் கழுவப் பெற்று தூயவனாகவும் ஆகிடுவர். எனவே உங்கள் தரிசனம் மூலம் இவை எல்லாவற்றையும் சிறிது காலத்தில் நான் அடைந்திடுவேன்'' என்று கூறி வணங்கினார்.

இந்த பதிலைக் கேட்ட கௌடபாதர் மிகவும் மகிழ்ந்து, ""உன் உயர்ந்த குணம், உனது பேச்சு மற்றும் பணிவின் மூலம் தெரிகிறது. உயர்ந்த விளக்கவுரைகளைச் செய்தும், நான் எழுதிய மாண்டூக்ய உபநிஷத விளக்கத்தை எளிமைப்படுத்தியதற்கும் உனக்கு ஆசி வழங்குகிறேன், ஏதேனும் வரம் கேள்'' என்றார்.

அதற்கு ஸ்ரீசங்கரர், "கலியுகம் மட்டுமல்லாது மற்ற மூன்று யுகங்களிலும் அவதாரம் செய்த பாக்யத்தை இன்று உங்கள் தரிசனத்தால் பெற்றேன். இதைவிடச் சிறந்ததாக நான் அடையவேண்டியது ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும் நான் வேண்டுவது ஒன்றுதான். அது, என் சித்தம் எப்போதும் பிரம்மத்திலேயே நிலைத்திருக்க அருள வேண்டும்'' என்றார்.

-ராமண்ணா 
நன்றி: வெள்ளிமணி - தினமணி (20.04.2012)
.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக