நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

24.1.11

பக்தியால் சிவனின் மைந்தனானவர்



சண்டேஸ்வர நாயனார் 
திருநட்சத்திரம்: தை - 10 - உத்திரம் 
(ஜன. 24)
சோழநாட்டில் மணியாற்றங்கரையில் சேய்ஞலூர் என்னும்  ஊரில் அந்தணர் மரபில் எச்சத்தன்,  பவித்திரை எனும் தம்பதிகளுக்கு ஆண்மகவு ஒன்று பிறந்தது. பெற்றோர் அம்மழலைக்கு விசாரசருமா என்று நாமகரணமிட்டு வளர்த்து வந்தனர். ஏழாம் வயதில் அந்தணர்குல மரபின்படி உபநயனம் செய்யப்பட்டது. இறையருளால்  வைராக்கியமும் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்றுணர்ந்து எப்போதும் அவர் சிந்தையிலேயே இருப்பார்.
ஒருநாள்  மழலைப்பட்டாளத்துடன் விசாரசருமர் விளையாடிக் கொண்டிருந்தார். பசுக்கூட்டங்களுடன் மேய்ந்துகொண்டிருந்த அப்போதுதான் கன்றை ஈய்ந்த ஒரு பசு இடையனை கொம்பினால் முட்டப்போயிற்று. வெகுண்டெழுந்த இடையன் தன்கையிலுள்ள கோலால் அப்பசுவை நையப் புடைத்தான். 
விசாரசருமர் இடையனைத் தடுத்து,  ஐயா! பசுக்கள் தம் உடலுறுப்புகளில் தேவர்களையும், முனிவர்க்ளையும்  புண்ணிய தீர்த்தங்களையும் கொண்டுள்ளது. பசுக்களை மேய்ப்பது சிறந்த தொழிலாகும் அதுவே சிவபெருமானை வழிபடும்நெறி என்று எடுத்துத்துரைத்து, அவ்வூர் வேதியரின் இசைவு பெற்று தானே ஆநிரை மேய்த்தலை மேற்கொண்டார்.
நாடோறும் பசுக்களை ஓட்டிச் செல்வார். புற்கள் மிகுந்த இடத்தில் மேய்ப்பார். நீர்நிலைகளுக்கு ஓட்டிச் சென்று நீரளிப்பார். பசுவின் பால் வளமுடன் பெருகிவருவதைக் கண்ட விசாரசருமர் நாம் ஏன் அப்பாலை சிவலிங்கத்திற்குத் திருமஞ்சனம் செய்யக் கூடாது எனச் சிந்தித்தார். சிந்தையில் உதித்ததைச் செயலிலும் செய்தார்.  மணியாற்றின் கரையில் ஒர் மணல் திட்டில் ஆத்திமரத்தின் நிழலில் சிவலிங்கம் ஒன்றை வெம்மண்ணில் சமைத்தார். பசுவின் பாலினால் அபிஷேகம் செய்தார் ஆடினார், பாடினார், அன்பினால் கசிந்து கண்ணீர் விட்டார்.தொடர்ந்து நாள் தோறும் சிவபூஜையும் அபிஷேகமும் நடத்தி வந்தார்.
இது தவறானது என்று ஒருவன் ஊருக்குச் சென்று பசுவின் சொந்தக்காரர்களிடம் விசாரசருமன் பாலை வீணாக்கித் தரையில் கொட்டுகின்றான் எனப் பழி கூறினான். அதுகேட்டு வெகுண்ட அந்தணர்கள் எச்சத்தனிடம் விசாரசருமரைக் கடிந்து கூறினர். அவர் தந்தையார் அவர் பொருட்டு மன்னிப்பு வேண்டி தன் மகனைத் தண்டிப்பதாகக் கூறினார்.
மறுநாள் விசாரசருமரும் பசுக்களை மேய்ப்பதற்குச் சென்றார். வழக்கம் போல மணியாற்றில் நீராடி சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து. மலர்களை வைத்துக் கொய்து மாலையாக் கட்டி குடங்களில் பாலைச் சேர்த்துக் வைத்துக் கொண்டு சிவபூசையைத் தொடங்கினார். பாற்குடங்களை எடுத்து சிவனிற்கு அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்யலானார்.
சற்றுத் தூரத்தில் ஒளிந்துகொண்டு நிகழ்வதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எச்சத்தன் பாலாபிஷேகத்தைக் கண்டவுடன் வேகமாக இறங்கி ஓடி வந்து, தன் கையிலுள்ள கோலால் விசாரசருமரை அடித்து காலால் எட்டி உதைத்தார். கடுஞ்சினம் கொண்ட தகப்பனார் அபிஷேகத்திற்கு வைத்திருந்த பாற்குடங்களை எட்டி உதைத்து கீழே கொட்டினார்.
இடையூறு செய்தவர் தன் தந்தை என்பதை அறிந்தும், அவர் செய்தது சிவநிந்தை என்பதால் அவரது பாதத்தைக் களையவேண்டும் எனக் கருதி தமக்கு முன்னே கிடந்த கோலை எடுத்தார். அது உடன் ஓர் மழுவாயிற்று. அதைக் கொண்டு தன் தந்தையின் கால்களை வெட்டினார்.  எச்சத்தன் உயிர்நீத்தான். முன்போல் அவர் சிவபூஜை செய்ய முனைந்தார்.
விசாரசருமரின் பூஜைக்கு மகிழ்ந்த இறைவன் உமையம்மையோடு காட்சியளித்தார். விசாரசர்மர் அவரைத் தொழுது வணங்கினார். சிவபெருமான் தன் திருக்கரங்களால் அவரை எடுத்து "நம்பொருட்டு பெற்ற தந்தையின் கால்களை வெட்டியெறிந்து இறக்கச்செய்தாய் ஆதலின் இனிமேல் நாமே உமக்குத் தந்தையானேம்" என்றருள் புரிந்து மார்போடு அணைத்து தழுவி உச்சிமோந்தார். எச்சத்தன் சிவபராதம் செய்ததாலும், சண்டேஸ்வர பெருமானால் தண்டிக்கப்பட்ட பாசம் நீங்கப் பெற்று சுற்றத்தோடு சிவலோகம் சென்றார்.
சிவபெருமான் திருக்கரம் தீண்டப்பெற்ற விசாரசருமன் பேரொளியோடு திகழ்ந்தார். அவரைத் தம் தொண்டர்களுக்கெல்லாம் தலைவராக்கினார். "தாமுண்ட அமுதும் பரிவட்டம் மற்றும் மாலைகள் உனக்கே ஆகுக" என்றுரிமையாக்கி "சண்டீசன்" என்ற பதவியையும் தந்து அருள்பாலித்து தம்முடியில் இருந்து கொன்றை மலர்மாலையை எடுத்து விசாரசருமருக்குச் சூட்டினார். விசாரசருமர் "சண்டேஸ்வர நாயனார்" ஆனார். சண்டீச பதவியும் பெற்றார்.
சிவ பக்தியால் தந்தையையும் கொல்லத் துணிந்த சண்டேசருக்கு ஈசனே தந்தையானார் என்பதும், ஒவ்வொரு சிவன் கோயிலிலும் சண்டேசருக்கு தனி இடம் அளித்திருப்பதும் நாம் எண்ணி மகிழ வேண்டியவை.

காண்க:
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக