நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

7.5.11

இயற்கையை நேசித்த காவியக் கவிஞர்


மகாகவி ரவீந்திரநாத் தாகூர்
(பிறப்பு: மே 7)
தாகூர் 150 வது ஆண்டு

காலைப் பசும்புல்லில் காணும் பனித்துளி
அப்போது தான் துளிர்க்கும் புதிய இலைகள்
மனதை மெல்லியதாக்கும் தென்றல் காற்று
நறுமணத்தைப் பரப்பி நாற்றிசை கமழும் பூக்கள்
சாரலாய் விழுந்து மண் நனைக்கும் மழை...
- என்றெல்லாம் இயற்கையழகை தனது கவிதைகளினூடேவைப்பதில் வல்லவர் நம் தேசத்து மகாகவி ரவீந்திரநாத் தாகூர்.
இலக்கியத்தின் மீது ஈடுபாடு கொண்டவராக மட்டுமல்லாது, குழந்தைகள்மீது மிகுந்த நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் கொண்டவராகத் திகழ்ந்தவர்.
தாய்மொழிதான் குழந்தை-கள் மனதில் வளமான சிந்தனைகளை விதைக்கும், கற்பனை ஊற்றை விளைவிக்கும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்.
இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழ குழந்தைகளுக்கு கற்றுத்தர விரும்பியவர். மரப்பலகையில் உட்கார்ந்து எந்திரம் போல் கற்காமல் விருப்பம் போல் ஆடிப்பாடி அவர்கள் அறிவுப்பசியை தீர்த்துக் கொள்ளும் வாய்ப்பை குழந்தைகளுக்கு தர வேண்டுமென்பதில் உறுதியாய் இருந்தவர்.
பண்டைய கால பாரத தேசத்து ஆசிரமங்களைப் போல ‘போல்பூர் பிரம்மச்சரிய ஆசிரமம்’ ஒன்றை மலையடிவார பூமியான சாந்தி நிகேதனில் ஆரம்பித்தார். தாகூரே மாணவர்களுக்குக் கற்பித்தார்; அவர்களுடன் விளையாடினார்; கதைகள் சொல்லி மகிழ்வித்தார்.
படிக்க வந்த மாணவர்களில் ‘மாடர்ன் வியூ’ பத்திரிகை ஆசிரியரான ராமனந்த சாட்டர்ஜியின் மகனும் ஒருவன். அவர் பள்ளியை பார்த்துவர சென்றபோது, மரத்தடியில் தாகூர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றி பத்து, பதினைந்து பிள்ளைகள் உட்கார்ந்திருந்தார்கள். பிள்ளைகள் பாடம் படித்துக் கொண்டிருக்கிறார்கள். என்றெண்ணியபடியே அருகே சென்ற ராமானந்தர் அதிர்ச்சியடைந்தார். அங்கே கீழே மரத்தடியில் உட்கார்ந்திருந்த பிள்ளைகளை விட, மரத்தின்மீது உட்கார்ந்திருந்த பிள்ளைகள் அதிகமாக இருந்ததுதான் அதிர்ச்சிக்குக் காரணம்.
“குரங்குகளைப் போல மரத்தின் மேல் ஏறி உட்கார பிள்ளைகளை ஏன் அனுமதித்தீர்கள்?” என்ற கேள்வியை எழுப்பினார் சாட்டர்ஜி.
தாகூர் பதிலளித்தார்: “தரையில் அமர்ந்து படிக்கும் குழந்தைகளை பார்க்கும்போது எனக்கு பரிதாபமாக இருக்கிறது. மரத்திலுள்ள காய்கள் பழுத்து வருகின்றன. அவற்றின் இனிய மணத்தை காற்று எல்லா திசைகளிலும் எடுத்து செல்கிறது. மரத்தின் அழைப்பு இது. கனிமரத்தின் அழைப்பை குழந்தைகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் யார்தான் ஏற்றுக்கொள்வது? மரத்தின் கீழ் அமர்ந்து படிக்கும் குழந்தைகள் இப்போதே முதியவர்கள் ஆகிவிட்டார்கள். மரத்தின் அழைப்பு அவர்களை சென்றடையவில்லை. இதுதான் எனக்கு கவலையாக இருக்கிறது.”
இப்பதிலிலிருந்து தாகூரின் அன்பும், கனிவும் கண்டு சாட்டர்ஜி நெகிழ்ந்து போனார்.
ஏராளமான கட்டிடங்களும், பொருட்களும், வசதிகளும் மட்டுமே வாழ்விற்கு கல்வியை, மகிழ்வை கற்றுத்தராது. இயற்கையோடு இணைந்த வாழ்க்கையே அமைதி தரும் என்று அறிவுறுத்தியவர் ரவீந்திரநாத் தாகூர்.
பள்ளிக்கூடங்கள் நகரங்களுக்கு இடையேவிட காடுகளுக்கு இடையே அமைய வேண்டும் என்பதே கவிஞரின் கொள்கை.    
-ம.கொ.சி. ராஜேந்திரன்
காண்க:







.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக