நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

14.8.12

காந்தியடிகளும் திரு.வி.க.வும்

திரு.வி.க
 சிந்தனைக்களம்

திரு.வி.க.வின் உள்ளத்தில் காந்தியடிகளுக்கென்று ஒரு தனி இடம் உண்டு. 'போலக்' என்பவர் சென்னையில் ஒரு முறை காந்தியடிகளைப் பற்றி ஒரு சொற்பொழிவு செய்தார். அவரது பேச்சு திரு.வி.க.வின் உள்ளத்தில் காந்திய விதையை விதைத்தது. அவர் படித்த அற நூல்களின் பொருளாக காந்தியடிகள் விளங்கினார். மகாத்மா காந்தியை 'காந்தியடிகள்' என்று முதன் முதலில் அழைத்தது திரு.வி.க.தான்!

 'மகாத்மா' என்ற சொல்லுக்கு 'அடிகள்' என்று பொருள் என்கிறார் திரு.வி.க. அவர் உள்ளம் முழுவதும் காந்தியடிகளே நிறைந்திருந்தார். அவரின் பேச்சும் மூச்சும் காந்தியமே. காந்தியடிகளின் கொள்கைகளின்படி வாழ்ந்த பெருந்தகையாளர் "தமிழ்த் தென்றல்' திரு.வி.க.

 எளிய உணவு, எளிய உடை, எளிய வாழ்க்கை, தூய உள்ளம், தொண்டாற்ற விழையும் நெஞ்சம், இன்சொல் கூறல், நாட்டுப்பற்று, அழுக்காறு இல்லாத, அவா இல்லாத, கோபம் இல்லாத தூய வாழ்க்கை இவை எல்லாமே திரு.வி.க. காந்தியத்திலிருந்து பெற்றதுதான். அப் பெருந்தகை எழுதிய நூல்களிலேயே அவர் உள்ளத்துக்கு நிறைவானதும் அவர் மனதை மிகவும் கவர்ந்ததுமான நூல் ஒன்று உண்டென்றால் அஃது 'மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்' என்ற நூல்தான். காந்தியடிகளின் திருவருள் நோக்கையும் அப் பெருமானின் மாசிலா மனதில் ஓர் இடத்தையும் பெற்ற பெரும்பேறு திரு.வி.க.விற்கு உண்டு.

 திரு.வி.க.வின் ஒரே குறிக்கோள் நாடு விடுதலை அடைய வேண்டும் என்பதே. ஓர் இடத்தில் திரு.வி.க. இப்படி எழுதியுள்ளார், "நாட்டில் எல்லாம் நடைபெறலாம். அடிப்படையில் விடுதலை நோக்கிருக்க வேண்டும். தேசத்துக்காகவோ பதவி மோகமோ இருத்தல் கூடாது. அவர் கொண்ட அந்த எண்ணத்தை நிறைவேற்றி வைப்பவர் காந்தியடிகள் ஒருவரே'' என்று உறுதியாக நம்பினார்.

 நாட்டில் காந்தியடிகள் தலைமையில் மிகவும் வேகமாக விடுதலைப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டு இருந்தது. சுதந்திர வேள்விக்காக மக்களை அவர் தயார் செய்து கொண்டிருந்தார். அப் பணியில் அவர் ஓயாது உழைத்தார்.

 தமிழ் நாட்டில் திரு.வி.க.வும் 'தேசபக்தன்' வாயிலாகவும் கூட்டங்கள் வாயிலாகவும் சுதந்திரப் போராட்டப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப் பணி நிமித்தமாக அவர் சேலம் சென்றிருந்தார். அங்கே நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது, "நான் அரக்கோணத்தில் காந்தியடிகளைச் சந்திப்பேன்'' என்று கூறினார். காங்கிரஸ் கட்சியில் மிகப்பெரிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய சேலம் விஜயராகவாச்சாரியார் திரு.வி.க.விடம் "நான் ஒரு கடிதம் தருகிறேன். அதை காந்தியடிகளிடம் கொடுங்கள்'' என்று கூறி, அக் கடிதத்தில் திரு.வி.க.வைப் பற்றியும் அறிமுகமாக சிறிது எழுதியிருந்தார்.

 அக் கடிதத்துடன் திரு.வி.க. சேலத்தில் இருந்து புறப்பட்டு, 18.3.1919 அன்று அரக்கோணம் சென்றார். ரயில் நிலையத்தில் காந்தியடிகள் வரும் வண்டியை நோக்கி நின்றார். அடுத்து என்ன நடந்தது என்று திரு.வி.க.வே எழுதுகிறார் பாருங்கள்.

 "பம்பாய் மெயில் ஓடி வந்தது. ஆருயிர் காந்தியடிகளைத் தேடிக் கண்டேன். வணக்கம் செய்தேன். முடங்கலை நீட்டினேன். அடிகளை அரிச்சந்திரனோ, புத்தரோ, திருவள்ளுவரோ என்று மனம் நினைந்தது'' உரையாடல் ஆரம்பமானது.

 "தேசபக்தன் எம் மொழிப் பத்திரிகை?'' - காந்தியடிகள்.

 "தமிழ்ப் பத்திரிகை'' - திரு.வி.க.

 "நீங்கள் பட்டதாரியா?'' - காந்தியடிகள்

 "யான் பட்டதாரி அல்லன். மெட்ரிகுலேஷன் வரை ஆங்கிலம் பயின்றவன். தமிழாசிரியனாக இருந்தவன். என்னால் நன்றாக மொழிபெயர்க்கத் தெரியும். தொழிற்சங்கக் கூட்டங்களில் வாடியா, அன்னிபெசன்ட் அம்மையாரின் பேச்சுகளை நான்தான் மொழி பெயர்ப்பேன்'' - திரு.வி.க.

 "என் பேச்சை மொழிபெயர்ப்பீரா?''

 "தொழிலாளர் கூடும் கூட்டத்தில் நானே மொழி பெயர்ப்பாளனாக இருப்பேன். மற்ற கூட்டங்களில் எப்படியோ?''

 "நீங்கள் மொழிபெயர்ப்பாளர்''

 காந்தியடிகளுக்கும் திரு.வி.க.வுக்குமான உரையாடல் இவ்வாறு அமைந்தது.

 அதுமுதற்கொண்டு திரு.வி.கவை காந்தியடிகள் காணும் போதெல்லாம், "என்ன மொழிபெயர்ப்பாளரே!'' என்றே அழைத்து வந்தார்.

 சில ஆண்டுகள் கழித்து சென்னையில் காந்தியடிகள் திரு.வி.க.வைக் கண்டபோது, "நீங்கள் மொழிபெயர்ப்பாளர் அல்லவா?'' என்று கூறிப் புன்முறுவல் பூத்தார். திரு.வி.க. தான் பிறந்த பயனை அடைந்தார்.

 சென்னைக்கு காந்தியடிகள் வந்தபோது "தேசபக்தன்' அலுவலகத்திற்கு அருகில் இருந்த 'திலகர் பவனம்' என்ற கட்டடத்தில் தங்கினார். அச்சமயம் காந்தியடிகளை அடிக்கடி கண்டு உரையாடும் பேறு திரு.வி.க.விற்குக் கிடைத்தது.

 சென்னையில் காந்தியடிகள் திலகர் பவனத்தில் திரண்டிருந்த கூட்டத்திலும், கடற்கரைக் கூட்டத்திலும் பேசினார். காந்தியடிகளின் பேச்சை திரு.வி.க.வே மொழிபெயர்த்தார்.

 'இந்து' பத்திரிகையின் ஆசிரியர் கஸ்தூரிரங்க ஐயங்கார். திரு.வி.க. உள்ளிட்ட ஒருசில பிரமுகர்களிடம் காந்தியடிகள், "சத்தியாகிரகி என்றொரு பத்திரிகை என்னால் வெளியிடப்படும். அதே பெயரில் அப்பத்திரிகை இங்கும் (தமிழில்) வெளிவருதல் வேண்டும். அப் பணிக்கு ஒரு கூட்டம் தேவை'' என்றார். காந்தியடிகள் கூறிய அக் கூட்டத்தில் திரு.வி.க.வும் இருந்தார்.

 (காந்தியடிகளின் விருப்பப்படியே 'சத்தியாகிரகி' தமிழில் வந்தது. வெளிவந்த நாள் 14.4.1919. எஸ்.கஸ்தூரிரங்க ஐயங்கார் வெளியிட்டார். ஆசிரியர் குழுவினர் டி.பி.வெங்கடராம ஐயர், ஜார்ஜ் ஜோசப், கொண்டா வேங்கடப்பய்யா. வெளியீட்டின் பின்னணியில் நின்றவர் திரு.வி.க.)

 "தமிழ்த் தென்றல்' திரு.வி.க.வின் 'மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்' என்ற நூல் திரு.வி.க.வின் வாழ்நாளிலேயே ஆறு பதிப்புகள் கண்டது. அந்நூலில் திரு.வி.க., "இன்று என் மன அமுதாகக் காந்தியடிகளை யான் காண்கிறேன். அக் காட்சியான் எனது உள்ளத்துற்ற மாறுதல் எனக்கே தெரியும்'' என்கிறார்.

 'தமிழ்த் தென்றல்' திரு.வி.க.வின் சொந்த வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் அவர் சந்தித்த சோதனைகளாலும் துன்ப, துயரங்களாலும் அவர் சோர்ந்து விடாதவாறு அவரைக் காப்பாற்றி, தொடர்ந்து தொண்டாற்றும்படி செய்தது அவர் கண்ட காந்தியமே ஆகும்.

 'தமிழ்த் தென்றல்' திரு.வி.க.வின் வாழ்வு காந்தியமாகவே இருந்தது.
-க.துரியானந்தம்

நன்றி: தினமணி (14.08.2012)
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக