நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

23.7.12

வரலாற்று இரவு


 சிந்தனைக்களம்

வரலாறு மட்டும் பாடமல்ல; வரலாற்று நிகழ்வுகளை நடந்ததை நடந்தவாறு எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் என இலக்கணம் வகுக்கும் வரலாற்று வரைவியலும் ஒரு பாடமாகும்.

 மனிதகுலம் தோன்றிப் பயணித்த நீண்ட நெடிய காலப் பிரவாகத்தில், ஆறாயிரம் ஆண்டுகளை உள்ளடக்கிய ஆவணப்படுத்தப்பட்ட வரலாறே நம்மிடம் உள்ளது. இந்த வரலாற்றிலும் கூட சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவங்கள் குறித்த தடயங்களோ ஆவணங்களோ நம்மிடம் இல்லை. நாம் அறிந்திராத நமக்கு புலப்படாத இந்த நிலையை 'வரலாற்று இரவு'' என அழைக்கிறோம்.

 தடயங்களும் ஆவணங்களும் இருந்தும்கூட நூறு அல்லது இருநூறு ஆண்டுகளுக்கு முன் சில இடங்களில் நடந்த சம்பவங்களைச் சரியான முறையில் பதிவு செய்யாத, செய்ய விரும்பாதவர்கள் இழைத்த வரலாற்றுப் பிழையை என்னவென்று அழைப்பது?

 உதாரணமாக தென்னிந்தியாவில் தோன்றிய விடுதலைப் போராட்ட வீரர்களின் சேவை, தியாகம் இவர்கள் வாழ்வில் சந்தித்த இன்னல்கள், சோகங்கள், சுருக்கமாக இவர்களின் வீரவரலாறு சரியான முறையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா? இல்லை எனில் ஏன் இவ்வாறு நிகழ்ந்தது? இவர்களின் பங்களிப்பு வரலாற்று இரவாக்கப்பட்டிருப்பது ஒரு தற்செயல் நிகழ்வா அல்லது இதற்கு ஏதேனும் பின்னணி உள்ளதா என பல ஐயங்கள் நம் மனதில் தோன்றுகின்றன.

 நடந்த சம்பவங்களிலிருந்தும் விளைவுகளிலிருந்தும் காரணங்கள் அல்லது வினாக்கள் நோக்கிச் செல்வது சமூகவியலின் தன்மை. காரணங்கள் அல்லது வினாக்களிலிருந்து சம்பவங்கள் அல்லது விளைவுகள் நோக்கிப் பயணிப்பது வரலாறு. இங்கே வைக்கப்படும் விவாதம் வரலாறு பற்றியதாக இருந்தாலும் சமூகவியல் நோக்கில் சில வினாக்களை முன்னிறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

 எத்தனையோ இந்திய விடுதலை இயக்க வீரர்களின் வாழ்வு நமக்கெல்லாம் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது. இதயம் கனக்க கண்கள் கலங்க தொண்டையில் சோகப்பந்து உருள்வதைப் போன்ற உணர்வோடு பகத்சிங்கையும், உதம்சிங்கையும் நாம் படிக்கவில்லையா?

 சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன் என்ற திலகரின் சூளுரையைக்கேட்டு படித்தவர் மட்டுமல்ல, பாமரரும் பரவசமடையவில்லையா?

 லாலா லஜபதிராய், பாலகங்காதர திலகர், பிபின் சந்திரபால் ஆகிய மூவரை "லால், பால், பால்' என்று கொண்டாடவில்லையா? இதற்கெல்லாம் காரணம் மொழி, பண்பாடு மற்றும் வரலாறு போன்ற பன்முகத்தன்மைகளின் வேற்றுமைகளிலும் ஒற்றுமை பாராட்டிய நமது அருங்குணமேயாகும்.

 ஆனால், தென்னிந்தியாவில் சுதந்திரப் போராட்டத்துக்காக வாழ்வை அர்ப்பணித்தவர்களின் வரலாறு பெரிதாக எழுதப்படாததன் காரணம் என்ன? வடஇந்திய மூவரான லால், பால், பால் போல தமிழகத்தின் மூவர் சுப்பிரமணிய பாரதியார், வ. உ. சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா போற்றப்படாததன் காரணம் என்ன? தண்டி யாத்திரை முக்கியத்துவம் பெற்ற அளவுக்கு வேதாரண்ய உப்பு சத்தியாகிரகம் வரலாற்றில் இடம்பெற்றதா?

 பாரதியாரின் வாழ்க்கையை எடுத்துக்கொள்வோம். நாட்டுப்பற்றை எழுச்சிமிக்க பாடல்களால் உணர்த்திய கவிஞராக அறிமுகப்படுத்திய அளவுக்கு, விடுதலை இயக்க வீரராக அவரின் பங்களிப்பை எத்தனை வரலாற்றுப் புத்தகங்கள் பதிவு செய்திருக்கின்றன?

 ஒரு பத்திரிகையாளராக ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அவர் துணிச்சலுடன் போராடியதை இளைய தலைமுறையினருக்கு வரலாற்றுப் பதிவுகள் கொண்டு சேர்த்திருக்கின்றனவா? வரலாற்றுப் பேராசிரியர் பி.பி.கோபாலகிருஷ்ணனின் ஆய்வுக் கட்டுரை ஒன்றில் பாரதியார் பத்திரிகையாளராக நாட்டு விடுதலைக்குப் பங்களிப்பு செய்ததை நாம் அறிகிறோம்.

 'இந்தியா' எனும் இதழ் மூலமாக நாட்டு விடுதலைக்கான செய்திகளைக் கருத்துப்படங்களுடன் எடுத்துரைத்த பாரதியார் தொடர்பான இக்கட்டுரையின் தலைப்பு "இந்தியாவும் விடுதலை இயக்கமும்' என்பதாகும். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இக்கட்டுரையில் சுதேசமித்திரனில் பணியாற்றிய பாரதியார் தனது விடுதலை வேட்கைக்கான சரியான வடிகால் 'இந்தியா' இதழே என முடிவெடுத்து அதில் பணியமர்வதை அறிகிறோம். எழுச்சிமிக்க கட்டுரைகள் மூலம் தேசப்பற்றை ஊட்டி வளர்த்த பாரதியார் குறித்த சம்பவங்கள் தேசிய அளவில் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் வரலாறு பயிலும் மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளதா?

 எஸ்.என். திருமலாச்சாரி என்பவரால் தொடங்கப்பட்டு சென்னை பிராட்வேயிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த இந்த வார இதழ் ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிரான புரட்சிகரமான செய்திகளையும் கருத்துப்படங்களையும் வெளியிட்டு வந்தது. முதல் இதழிலிருந்தே பாலகங்காதர திலகர் மற்றும் விடுதலை இயக்கத்தில் தீவிர உணர்வு கொண்டவர்களின் கருத்துகளைத் தாங்கிவந்த 'இந்தியா' பிபின் சந்திரபால் 1907-இல் சென்னை வந்தபோது, அது தொடர்பான செய்திகளை விரிவாக வெளியிட்டதாக பேராசிரியர் கோபாலகிருஷ்ணன் தெரிவிக்கிறார்.

 விடுதலைப் போராட்டத்தின் முகத்தையும் முகவரியையும் சுட்டும் அடையாளங்களுள் ஒன்றாக என்றேனும் 'இந்தியா' எனும் இதழ் இனம் காணப்பட்டதா? இந்த இதழ் பற்றிய விளக்கம் மாணவர்களுக்குப் போதிக்கப்படும் வரலாற்றில் விரிவாக இடம் பெற்றிருக்கிறதா?

 அன்னியர்களுக்கு எதிரான அரசியல் போராட்டத்தில் அல்லும் பகலும் பாடுபட்டு அல்லலுற்ற பாரதியின் துயரங்களை 'பாரதிக்குத் தடை' எனும் புத்தகத்தின் வாயிலாக வரலாற்றுப் பேராசிரியரும் ஆய்வாளருமான முனைவர். வி.வெங்கட்ராமன் விளக்குகிறார். தேசிய மற்றும் மாநில ஆவணக்காப்பகங்களில் உள்ள அக்காலத்திய அரிய ஆவணங்கள் மற்றும் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை மேற்கோள்காட்டும் இந்த முழுமையான ஆய்வு நூலில் ஆங்கிலேய அரசுக்கு எதிரான அரசியல் வாழ்வில் பாரதி அடைந்த இன்னல்களைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்கிறோம்.

 பாரதி இயற்கை எய்தி ஆறு ஆண்டுகள் கழித்து அவரது புத்தகங்களை ஆங்கிலேய அரசு தடை செய்தது. இதைக் கண்டித்து சென்னை மாகாண சட்டமன்றத்தில் சத்தியமூர்த்தி குரலெழுப்பினார்.

 மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள், ரெüலட் சட்டம் இவற்றுக்கு எதிராக 1919-ஆம் ஆண்டு கூட்டு நாடாளுமன்றக் கமிட்டியின் பிரதிநிதியாக 32 வயதே நிரம்பிய சத்தியமூர்த்தி இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 சுதேசி இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்ட சத்தியமூர்த்தி 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின்போது தனி நபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் கைது செய்யப்பட்டு நாக்பூரில் உள்ள அமராவதி சிறையில் அடைக்கப்பட்டார். அச்சமயம் பயணத்தின்போது அவருக்கு தண்டு வடத்தில் அடிபட்டது. சென்னை பொது மருத்துவமனையில் காயங்கள் குணமாகாமல் 1943-ஆம் ஆண்டு தனது 56-வது வயதில் இன்னுயிரை நீத்த சத்தியமூர்த்தியை, 'இந்திய தேசிய இயக்கத்தின் குரல்' என புகழப்பட்டவரை எத்தனை வரலாற்றுப் புத்தகங்கள் நினைவு கூர்கின்றன?

 இந்தியாவின் வடக்குப் பகுதிகளில் இந்தியச் சுதந்திரப் போர் தொடங்குவதற்கு 60 ஆண்டுகளுக்கு முன்னரே ஆங்கிலேயரை எதிர்த்த முன்னோடி கட்டபொம்மன் என்ற கருத்து முன்னெடுத்துச் செல்லப்பட்டிருக்கிறதா?

 ஸ்ரீரங்கப்பட்டினம், சித்தேஸ்வரம் போன்ற பகுதிகளில் திப்புசுல்தான் ஆங்கிலேயருக்கு எதிராகப் பெற்ற வெற்றியில் பெரும் பங்காற்றிய தீரன் சின்னமலையின் வாழ்க்கை குறித்து இந்தியாவின் பிற பகுதிகளில் பயிலும் வரலாற்று மாணவர்கள் அறிவார்களா?

 வீரத்திலும் நிர்வாகத்திலும் சிறந்து விளங்கிய மருது சகோதரர்களையும் அவர்களின் வீர வரலாற்றையும் இந்தியர்களில் எத்தனை பேர் அறிவார்கள்?

 ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் தோன்றிய மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை, கட்டபொம்மன் போன்றோரின் வீரதீரச் செயல்களும் பல்வேறு காலகட்டங்களில் ஆங்கிலேய அரசை எதிர்த்துச் செயல்பட்ட தமிழகத்தின் விடுதலை இயக்க முன்னோடிகளின் தியாக வாழ்வும் இந்திய பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் பாடமாக அறிமுகமாகவில்லை எனில் கற்பிக்கப்படும் வரலாற்றுப் பாடத்தை முழுமையானதாக ஏற்றுக்கொள்ள முடியுமா?

 இந்தியாவின் விடுதலை வேள்வியில் தென்னிந்தியர்களின் பங்களிப்பு போதுமானதாக இல்லை எனும் மாயை உருவாக்கப்படுமேயானால், அதுவே உண்மை என எதிர்காலச் சந்ததியினரும், வெளிநாட்டினரும் நம்புவார்களேயாயின் அந்த வரலாற்றுப் பிழைக்குப் பொறுப்பேற்பது யார்? அந்தக் குறையைச் சரி செய்வது யார்?

 நடந்ததை நடந்தவாறு கூறாமல்போன இந்த நிலையை வலிந்து உருவாக்கப்பட்ட 'வரலாற்று இரவு' என அழைக்காமல் வேறு என்னென்பது?

- ஆர். கண்ணன்


நன்றி: தினமணி (21.07.2012)
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக