நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

28.6.12

ரஜத் குப்தாவின் வீழ்ச்சி!

சிந்தனைக்களம்

 
ரஜத் குப்தா

ரஜத் குப்தா என்னும் பெயர் இப்போது பல நாட்டு ஊடகங்களிலும் பேசப்படுகிறது. ஜூன் 15-ஆம் தேதி முதல் அமெரிக்க ஊடகங்களில் அவரைப் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்கப்படுகிறது. உலகின் முக்கியமான பொருளாதாரப் பத்திரிகைகளில் அவரைப் பற்றிய விவரங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

அவரைப் பற்றி மற்றவர்களைவிடவும் நாம் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், அவர் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். தனது திறமையாலும் உழைப்பாலும் உலக அளவில் பல மிகப்பெரிய நிறுவனங்களிலும் அமைப்புகளிலும் முக்கிய பொறுப்புகளை வகித்தவர். நமது நாட்டின் முன்னேற்றத்தில் ஈடுபாடு கொண்டவர்.

அமெரிக்காவில் மிகவும் மதிப்புக்குரியவராக விளங்கி வந்தவரான அவர், அந்நாட்டு நீதிமன்றத்தால் உள் வணிகக் குற்றத்தில் சம்பந்தப்பட்டதற்காகக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு தண்டனைக்கு உரியவராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதன் மூலம் இதுவரை அமெரிக்காவில் நடந்த, படித்து பொறுப்பிலிருப்பவர்கள் ஈடுபடக்கூடிய வெள்ளைக் காலர் குற்றங்கள் ஒன்றில் முக்கியமானதாக அவரது வழக்கு கருதப்படுகிறது.

தற்போது 63 வயதாகும் ரஜத் குப்தா கொல்கத்தாவில் பிறந்தவர். அவரது அப்பா சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். பத்திரிகையாளர். அம்மா பள்ளி ஆசிரியை. அவரது சிறு வயதிலேயே குடும்பம் தில்லிக்கு மாறியது. குப்தாவுக்கு பதினாறு வயது ஆகும்போது அப்பா காலமானார். இரண்டு ஆண்டு கழித்து அம்மாவும் இறந்துவிட்டார். தனது பதினெட்டு வயதில் அனாதையானார். கூடப்பிறந்தவர்கள் மூன்று பேர். பிறருடைய உதவியை நாடாமல் தாங்களே வாழ்க்கையை நடத்தத் துணிந்தனர்.

இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான நுழைவுத் தேர்வில் அகில இந்திய அளவில் பதினைந்தாவது இடத்தைப் பெற்றார். தில்லி ஐ.ஐ..டியில் சேர்ந்து பி.டெக் படித்தார். கிடைத்த வேலையை உதறி விட்டு அமெரிக்காவில் உள்ள பிரபலமான ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் மேலாண்மைத் துறையில் எம்.பி.ஏ பட்டம் பெற்றார். பின்னர் 1973-ஆம் ஆண்டு அமெரிக்காவில் மெக்கென்சி அண்ட் கம்பெனி என்னும் உலகின் முன்னணி மேலாண்மை ஆலோசனை நிறுவனத்தில் பணியமர்ந்தார். பின்னர் 1994-ஆம் ஆண்டு அதே நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பான மேலாண்மை இயக்குநராகத் தேர்வு செய்யப்பட்டார்.

அந்தப் பொறுப்புக்கு, அமெரிக்காவில் பிறக்காத ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவது அதுவே முதல் முறையாகும். மேலும் அதன் மூலம் ஒரு பன்னாட்டு நிறுவனத்துக்கு முதன் முதலாகத் தலைமைப் பொறுப்பேற்ற இந்தியராக ஆனார்.

இருபது ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்கர்கள் ஆதிக்கம் செலுத்திய கன்சல்டிங் துறையில் உலக அளவில் ஒரு பெரிய நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பு என்பது மிகப் பெரிய விஷயமாகும்.

அப்பொறுப்புக்குத் தொடர்ந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒன்பது ஆண்டுகள் இருந்துவிட்டு 2003-ஆம் ஆண்டு பணியை நிறைவு செய்தார். அந்நிறுவன விதிகளின்படி ஒருவர் அதிகபட்சமாக அவ்வளவு காலம்தான் பணியாற்ற முடியும். பின்னர் அந்நிறுவனத்திலேயே மூத்த பங்குதாரராகத் தொடர்ந்தார்.

2007 முதல் அந்நிறுவனம் அவரைப் பணியிலிருந்து மாண்புடன் விடுவிக்கப்பட்ட மூத்த பங்குதாரராகக் கெüரவப்படுத்தி அவருக்குச் சம்பளம் உள்பட அலுவலகத்தையும் கொடுத்து வைத்திருந்தது.

மெக்கென்சி நிறுவனத்தின் முழுநேரப் பணியில் இருந்து ஓய்வு பெற்றபின் உலகின் பெரிய நிறுவனங்கள் மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பல அமைப்புகளில் தலைவர், இயக்குநர், குழு உறுப்பினர் மற்றும் ஆலோசகர் என பல பொறுப்புகளை வகிக்கிறார். உலகின் முன்னணி மூலதன நிறுவனமான கோல்டுமேன் சாக்ஸ் மற்றும் நுகர்பொருள்கள் துறையில் முக்கியமான ப்ராக்டர் அண்ட் கேம்பிள் ஆகிய பன்னாட்டு நிறுவனங்களில் இயக்குநர் குழுவில் சேர்ந்தார். மேலும் பில்கேட்ஸ் குடும்பத்தினரால் ஆரம்பிக்கப்பட்டு உலகின் பல நாடுகளில் செயல்பட்டு வரும் பெரிய அமைப்பான கேட்ஸ் பவுண்டேஷன் அமைப்பில் பொறுப்பேற்றுள்ளாôர்.

முக்கியமான சர்வதேச அமைப்புகளிலும் பதவிகள் அவரை நாடி வருகின்றன. உலகின் பல நாடுகளிலுள்ள தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பான சர்வதேசத் தொழில் அமைப்பின் (இன்டர்நேஷனல் சேம்பர் ஆப் காமர்ஸ்) தலைவராக இருக்கிறார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலருக்கு மேலாண்மைச் சீர்திருத்தங்கள் சம்பந்தமான சிறப்பு ஆலோசகராகச் செயல்படுகிறார்.

உலகின் முன்னணி மேலாண்மை நிறுவங்களான ஹார்வர்டு, எம்.ஐ.டி மற்றும் கெல்லாக் நிறுவனங்களின் இயக்குநர் குழுக்கள் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் குழு உள்ளிட்டவற்றில் பொறுப்பு வகிக்கிறார். மேலும் அவரே கம்பெனிகள், கல்வி நிறுவனம் மற்றும் பொதுச்சேவைக்கான அமைப்பு ஆகியவற்றை நிறுவுகிறார்.

இவ்வாறு தொழில், கல்வி, வியாபாரம், பொதுச்சேவைகள் சம்பந்தப்பட்ட பல முக்கியமான அமைப்புகளில் அமெரிக்காவில் மட்டுமன்றி, சர்வதேச அளவிலும் பொறுப்பு வகிக்கிறார். அவற்றையெல்லாம் ஒருவரே பெறுவது என்பது அசாத்தியமான காரியமாகும். அயல்நாட்டுக்குப் படிக்கச் சென்று வேலைக்கு அமர்ந்த ஓர் இந்தியர் உலக அளவில் அதிகபட்சமான பொறுப்புகளை வகித்தது அண்மைக்காலங்களில் இவராகத்தான் இருக்கக் கூடும்.

கூடவே, பிறந்த நாடான இந்தியாவுக்கும் அவர் தனது பங்கினை அளிக்கிறார். ஹைதராபாதிலுள்ள சர்வதேசத் தரம் வாய்ந்த இந்தியன் பிசினஸ் ஸ்கூல் அவருடன் மெக்கென்சியில் உயர் அதிகாரியாகப் பணிபுரிந்த அனில் குமாருடன் சேர்ந்து ஆரம்பித்த மேலாண்மை நிறுவனமாகும். அவரே அதன் தலைவராகவும் பொறுப்பேற்கிறார்.

இந்தியாவில் சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களைத் துரிதப்படுத்துவதற்காக அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன் என்னும் அரசு சார்பற்ற அமைப்பை ஆரம்பித்தார். ஐந்து கோடி டாலர்களுக்கு மேல் பணம் திரட்டி இந்தியாவின் வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் அமெரிக்காவிலிருந்து செயல்படும் பெரிய அமைப்புகளில் ஒன்றாக அது விளங்குகிறது. மேலும் இந்தியப் பிரதமரின் ஆலோசனைக் குழுவிலும் இடம்பெறுகிறார்.

தன்னுடைய உழைப்பாலும் முயற்சியாலும் இவ்வளவு சாதனைகளைப் புரிந்த அவர் வெளி நாடுகளில் இருந்து சென்று அமெரிக்காவில் குடியேறும் மக்கள் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். அப்படிப்பட்டவர் சென்ற ஜூன் 15-ஆம் தேதியன்று நியூயார்க்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார். அதனால்தான் தீர்ப்பு சொல்லும்போது அந்தக் குழுவிலிருந்த இரண்டு பேர் கண்ணீர் விட்டனர். மாணவப் பருவத்தில் அனாதையாக ஆக்கப்பட்ட ஒரு மகத்தான சாதனையாளர், சமுதாயத்தின் உயர்ந்த நிலையை அடைந்தவர், தனது பிற்காலத்தில் தண்டனைக்குள்ளாவது என்பது வருத்தத்தை அளிக்கும் விஷயமாகும்.

அவர் மேலுள்ள குற்றங்கள் மேல்முறையீட்டிலும் உறுதி செய்யப்படும்போது தண்டனை அதிகபட்சமாக இருபது ஆண்டு வரைக்கும்கூட கொடுக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.

அதேசமயம் அவருடைய கடந்தகால வாழ்க்கை, செய்து வந்த சேவைகள் மற்றும் தனது தவறுகளின் மூலம் நேரடியாகப் பயன் பெறாதது ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு தண்டனை வெகுவாகக் குறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிகிறது.

ரஜத் குப்தா மேலுள்ள குற்றச்சாட்டுகள் என்ன? கோல்டுமேன் சேக்ஸ் கம்பெனியில் அவர் இயக்குநர் குழுவில் இருந்தபோது அந்தக் கம்பெனி சம்பந்தமான விஷயங்களை, அவை முறையாக வெளியாவதற்கு முன்னரே தனது நண்பரான ராஜ் ராஜரத்தினம் என்பவருக்கு ரகசியமாகச் சொல்லிவிட்டார் என்பதுதான் முக்கியமான குற்றச்சாட்டாகும். அதன் மூலம் அவற்றைப் பயன்படுத்தி ராஜரத்தினம் லாபம் சம்பாதிக்க அவர் காரணமாக இருந்து விட்டார்.

55 வயதான இந்த ராஜரத்தினம் இலங்கையில் பிறந்த தமிழர். இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் படித்துப் பின்னர் அமெரிக்காவில் கேலியன் குரூப் என்ற மூலதன நிறுவனத்தை ஆரம்பித்து நடத்தினார். அது உலகின் பெரிய ஹெட்ஜ் பண்ட் நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது. அதனால் அவரது சொத்தின் நிகர மதிப்பு மட்டும் இன்றைய மதிப்பில் சுமார் ஒன்பதாயிரம் கோடிக்கு மேல் இருந்தது. எனவே அவர் 2009-ஆம் ஆண்டில் இலங்கையில் பிறந்த மக்களில் உலகிலேயே பெரிய பணக்காரராக இருந்தார்.

தனது வியாபார நடவடிக்கைகளுக்காகப் பல கம்பெனிகள் சம்பந்தமான விஷயங்களை, அவை பற்றித் தெரிந்தவர்களிடம் ரகசியமாகப் பெற்று அவற்றைப் பயன்படுத்தி பங்குச் சந்தை மூலம் லாபமடைந்தார் என அவர் 2009-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

அதற்காக சென்ற ஆண்டு அவருக்கு பதினொரு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஐநூறு கோடி ரூபாய்க்கு மேல் குடிமையியல் அபராதமும் விதிக்கப்பட்டது. எனவே, தற்போது சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார்.

ராஜரத்தினத்தின் உள்வணிக நடவடிக்கைகளுக்கு உதவி புரிந்ததற்காக அவரது நண்பரான அனில்குமார் என்ற அமெரிக்கவாழ் இந்தியர் 2009-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு அரசுத் தரப்பிலான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.

54 வயதாகும் இவர் மும்பை ஐ.ஐ.டி மற்றும் அமெரிக்காவின் பிரபலமான வார்ட்டன் மேலாண்மை நிறுவனம் ஆகியவற்றில் படித்தவர். மெக்கென்சி கம்பெனியில் ரஜத் குப்தாவுடன் சிறப்பாகப் பணிபுரிந்தவர். அங்கேயே மூத்த பங்குதாரராகவும் இயக்குநராகவும் உயர்ந்தார். அவுட் சோர்சிங் துறைக்கு மூலகாரணமாக விளங்கியவர். இந்தியாவின் பெரிய தொழில் அமைப்பான சி.ஐ.ஐ.யின் அமெரிக்கத் தலைவராகவும் சமூகத்தில் நல்ல நிலையிலும் இருந்தவர்.

மேற்குறிப்பிட்ட மூவருமே தலைசிறந்த கல்விக்கூடங்களில் நன்கு படித்தவர்கள். கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்கள். பெரிய வீடுகளையும் சகலவிதமான செüகரியங்களையும் பெற்றவர்கள். ரஜத் குப்தாவின் சொத்துகள் இந்திய மதிப்பில் 650 கோடி ரூபாய்களுக்கு மேல் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனில் குமாருக்கும் பல கோடிக்கணக்கான ரூபாய்களில் சொத்துகள் உள்ளதாகத் தெரிகிறது. மேலும் ரஜத் குப்தா மற்றும் அனில் குமார் ஆகியோர் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் உடையவர்கள். இவ்வளவும் இருந்து இவர்கள் ஏன் குற்றம் புரிகிறார்கள்?

ராஜ ரத்தினம் மிகப்பெரிய நிறுவனத்தை நடத்தி அதில் அதிகமாகச் சம்பாதித்த பின்னரும் மேலும் மேலும் சம்பாதிக்க வேண்டும் என்று உந்தப்பட்டார். அதற்காகத் தவறான வழிகளைத் தேர்ந்தெடுத்து அதற்கு ஒத்துழைக்கக் கூடிய வகையில் தனது தொடர்புகளை வலையில் விழ வைத்தார்.

அப்படித்தான் வார்ட்டனில் படிக்கும்போது அறிமுகமான அனில் குமார் மூலம் அவர் கோல்டுமேன் சேக்ஸ் கம்பெனியில் பணியிலிருந்த காலத்தில் ரகசியமான விவரங்களைப் பெறுகிறார். ஆனால், அதற்காக அனில் குமாருக்குக் கிடைத்த தொகை மிகவும் குறைவு. ஆனாலும் தெரிந்தே தவறு செய்தார். ராஜரத்தினத்தை அவரது பேராசை அலைக்கழிக்க, கூடா நட்பின் மூலம் ஏற்பட்ட சபலம் அனில் குமாரை ஆட்கொள்கிறது.

குப்தாவைப் பொருத்தவரையில் தனது நடவடிக்கைகள் மூலம் அவர் எந்த விதமான பலனையும் பெறவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆயினும் அவர் ஏன் சட்டத்தை மீறி தவறு செய்யத் துணிந்தார் என்பது உறுதியாகத் தெரியவில்லை. பெரிய கம்பெனியை நடத்தி ராஜரத்தினம் அதிக அளவில் சொத்துகளை வைத்திருந்ததால் எதிர்காலத்தில் அவரது உதவியை எதிர்பார்த்து குப்தா அந்தத் தவறுகளைச் செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

எதிர்காலம் பற்றி ஏதேதோ கணக்குகளைப் போட்டு சட்டத்தை மீறிய தனது நடத்தைகள் மூலம் தனக்கிருந்த மரியாதை அனைத்தையும் குப்தா இழந்து விட்டார். வகித்து வந்த பெரிய பொறுப்புகள் அவரைவிட்டுப் போயின. தன்னுடைய கடந்த கால உழைப்பு மற்றும் நடவடிக்கைகள் மூலம் கிடைத்த அங்கீகாரங்கள் மற்றும் நற்பெயர் என எல்லாவும் போய் விட்டன. வாழ்க்கையின் உச்சத்துக்குச் சென்றவர்கள் தலை கவிழ்ந்து கீழே பயணிக்கிறார்கள்.

இவர்கள் அவமானப்படுவதும், தண்டனைக்கு உள்ளாவதும் ஒருபுறம் இருக்கட்டும். இந்தியாவின் நற்பெயருக்கும், இந்தியர்களின் நம்பகத்தன்மைக்கும், நாணயத்துக்கும் அல்லவா களங்கம் கற்பித்திருக்கிறார்கள். பணமும், படிப்பும், புத்திசாலித்தனமும், நேர்மையும், நாணயமும், ஒழுக்கமும் இல்லாமல் போனால் அதனால் என்ன பயன்?

உழைப்புக்கு இளைஞர் சமுதாயம் முன்னுதாரணமாகக் கருதிய நபர்கள் இப்போது தவறான முன்னுதாரணமாக தேசத்துக்கே தலைகுனிவை ஏற்படுத்தி விட்டார்களே என்பதுதான் வேதனை அளிக்கிறது.

மாணவப் பருவத்தில் அனாதையாக ஆக்கப்பட்ட ஒரு மகத்தான சாதனையாளர், சமுதாயத்தின் உயர்ந்த நிலையை அடைந்தவர், தனது பிற்காலத்தில் தண்டனைக்குள்ளாவது என்பது வருத்தத்தை அளிக்கும் விஷயமாகும்.

- பேரா. ப. கனகசபாபதி,
இயக்குநர், தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனம்
கோவை.


நன்றி: தினமணி (28.06.2012)
காண்க: ரஜத்  குப்தா (wiki)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக