நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

5.1.12

தந்தையின் தியாகம்...தனயனின் தீரம்

குரு கோவிந்த சிம்மன்

மொகலாயச் சக்கரவர்த்தி அவுரங்கசீப்பின் கொடுமையிலிருந்து லட்சக்கணக்கானக் குடிமக்களைக் காப்பதற்காகத் தன் இன்னுயிரைத் தியாகம் செய்த மகாத்மா சீக்கியர்களின் மதகுரு தேக் பகதூர். அவர் குரு நானக்கிற்குப் பிறகு ஒன்பதாவது குருவாக வந்தவர். சொல்லொணாக் கொடுமையைச் சாத்வீக எதிர்ப்பு. அகிம்சை, மனமுவந்து தானே துன்பத்தை ஏற்ற சகிப்புத் தன்மை ஆகியவற்றால் எதிர்கொண்டு ஆன்ம பலத்தின் பெருமையை உலக்கு உணர்த்திய ஒப்பற்ற மகான் அவர்.

கி.பி.1622-ஆம் ஆண்டு சீக்கியர்களின் ஆறாவது குரு ஹர் கோவிந்தின் கடைசிப் புதல்வராக அம்ருதசரசில் தேக் பகதூர் பிறந்தார். தேக் பகதூர் என்றால் நலிந்தவரின் ஊன்றுகோல் அல்லது நண்பன் என்று பொருள்படும். ஹர் கோவிந்தின் மூத்த மகன் பாபா குர்திதா அவருக்கு முன்னாலேயே இறந்து விட்டபடியால் குர்திதாவின் மகனான ஹர்ராயை அடுத்த குருவாக நியமித்தார் குரு. ஆனால் அவரும் தனது முப்பதாவது வயதில் இறக்கவே, அவரது ஐந்துவயது மகன் ஹர்கிஷன் அடுத்த குரு ஆனார். ஆனால் குரு ஹர்கிஷன் எட்டு வயதில் இறக்கவே. அவருக்கு அடுத்த ஒன்பதாவது குரு ஆனார். தேக் பகதூர் ஹர்கிஷனுடைய தாத்தாவின் இளைய சகோதரர் தேக் பகதூர்.

அப்போது நடந்த ஒரு சுவையான நிகழ்ச்சியில் தேக் பகதூர் கண்டு பிடிக்கப்பட்டு ஒன்பதாவது குருவானார். மகன்ஷா என்ற பஞ்சாபி வணிகர் ஒரு சீக்கியர். கடலில் அவரது சரக்குக் கப்பல் முழ்கும் அபாயத்தில் இருந்தது. அப்போது குருவை வேண்டி, புயலிலிருது தப்பிக் கப்பல் கரை வந்து சேர்ந்தால். குருவுக்கு ஐநூறு பொன் மோகராக்கனை காணிக்கையாகச் செலுத்துவதாக நேர்ந்து கொண்டார், அவர்.

கப்பலும் குருவருளால் கரை சேர்ந்தது. குருவை காணப் பஞ்சாப் வந்து சேர்ந்த போது ஹரி கிஷனது மரணச் செய்தியையும் அடுத்த குரு பக்கலா கிராமத்தில் இருக்கிறார் என்றும் கேள்விப்பட்டார். அந்த வணிகர். அங்கே பலர் தாங்களே குரு என்று ஏழை எளியவர்களிடம் பணம் பிடுங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு, உண்மையான குருவை கண்டுபிடிக்க ஒரு வழியை கையாண்டார். குருவெனக் சொல்லிக் கொள்ளும் ஒவ்வொரு சாதுவுக்கும் ஒரு மோகரா கொடுத்தார். யாரும் மீதம் 449 மோகராக்களைக் கேட்கவில்லை. வேறு யாராவது பாபா உண்டா என்று தேடிய போது தியானத்திலேயே பொழுதைக் கழிக்கும் தேக் பகதூரிடம் வந்து சேர்ந்தார். அவருக்கும் ஒரு தங்க மோகராவைக் கொடுத்தார்.

தேக் பகதூர் புன்சிரிப்புடன் ""நேர்ந்து கொண்ட காணிக்கை ஐநூறு மோகராக்களல்லவா?'' என்று கேட்டார். மகன்ஷா மிகுந்த பக்தியோடும் மகிழ்ச்சியோடும் தேக் பகதூரின் பாதங்களைப் பற்றிக் கொண்டார். பிறகு பாக்கி தொகையைக் கொடுத்துவிட்டு மொட்டைமாடியில் ஏறி நின்றுகொண்டு குரு லடோ ரே (குருவை கண்டு பிடித்து விட்டேன்'") என்று பலமுறை உரக்கக் கூவினார். உடனேயே ஊர் கூடிவிட்டது. அனைவரும் குருவின் பாதங்களினல் விழுந்து வணங்கிப் பின் அவரைக் குரு பீடத்தில் அமர்த்தினார்கள். அவரது தந்தை குரு ஹர்கோவிந்த் இறந்தபோது, தேக் பகதூரின் வயது 23. தந்தை விருப்பப்படி குகாரி என்ற பெண்னை மணந்தார்.

ஹர்கோவிந்தின் ஆணையை ஏற்று தன் தாய் நான்கியோடும் மனைவியோடும் பத்தொன்பதாண்டுகள் பக்காலாவில் அமைதியாக தியானம் ஜபம், தவத்தில் ஈடுபட்டு 1664-ல் தனது 42வது வயதில் சீக்கியர்களின் ஒன்பதாவது குருவாக ஆனார். பதினொரு ஆண்டுகள் ஒப்பற்ற குருவாக விளங்கினார். 1675-ஆம் ஆண்டு அவுரங்கசீபின் கொடுமையை எதிர்த்துத் தன் உயிரையே மக்களுக்காகத் தியாகம் செய்தார். அவரது வாழ்க்கை ஒரு வீரக்கதை ஆனால் நம் நெஞ்சை நிறைக்கும் சோகக் கதையும் கூட.

சீக்கியர்களுக்கு குருநானக்கிலிருந்து குரு கோவிந்த சிம்மன் வரை பத்து குருக்கள், ஐந்து வயதில் குருவாகி, எட்டு வயதில் மறைந்த குரு ஹரிகிஷனைத் தவிர, பிற குருக்களின் சேவை மகத்தானது. ஜாதி மத பேதமற்ற தெய்வத் தேடலை லட்சியமாகக் கொண்ட ஒரு மதத்தை ஸ்தாபித்தார். நானக். குரு அஙகத் குருமுகி லிபியை ஆக்கியவர். குரு அமர்தாஸ் பொது உணவுக் கூடத்தை அமைத்தார். குரு ராமதாஸ் அம்குருதசரஸ் குளத்தை வெட்டினார். குரு அர்ஜுன் தேவ் ஆதி கிரந்தத்தைத் தொகுத்தார். குரு ஹர்கோவிந்த் சாதுக்களைப் போர்வீரர்களாக்கினார். குரு தேக் பகதூர் தர்மத்தைக் காக்கக் தன் உயிரையே தியாகம் செய்தார். குரு கோவிந்த சிம்மன் கல்சாவைத் துவக்கி, மக்களைத் தெய்வ பக்தர்களாகவும், தேசத்திற்காக ஒரு நொடியில் தங்கள் உயிரைக் கொடுக்கச் சித்தமான வீரர்களாகவும் செய்தார்.

குருவான உடன் முதற்காரியமாக அவர் ஆற்றிய பணி கிரத்பூருக்கு வெளியில் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் கலூர் ராஜா அளித்த ஒரு பரந்த நிலத்தில் அனந்தபூர் என்ற புதிய நகரத்தை உருவாக்கியது. குரு ஆற்றிய மற்றொரு பெருந் தொண்டு பஞ்சாபிலுள்ள பல கிராமங்களுக்கு விஜயம் செய்து மக்களிடையே மதஒற்றுமை, சமுதாய நம்பிக்கை முதலியவற்றைப் பரப்பினார். சென்ற இடமெல்லாம் கிணறுகளும் குளங்களும் வெட்டச் செய்தார். வறியவர் பசி தீர்த்திடப் பொது இலவச அன்னதானக் கூடங்கள் (லங்கர்) திறந்து வைத்தார். பிறகு டெல்லி, குருசேத்திரம், ஆக்ரா, பிராயகை, காசி, கயா, பாட்னா சென்று தங்கினார்.

பாட்னாவில் தனக்கு மகன் பிறந்ததும் அங்கு சென்று சில காலம் தங்கினார். பிறகு அனந்தப்பூருக்குத் திரும்பினார். பாட்னாவிலிருந்து குடும்பத்தையும் அனந்தபூருக்கு அழைத்து வந்து மகன் கோவிந்தராயை நன் வளர்ப்பதில் கவனம் செலுத்தினார். பஞ்சாபிலும் பிற இடங்களிலும் மொகலாயர் கொடுமையும், பலவந்த மத மாற்றங்களும் எல்லை மீறிப் போய்க் கொண்டிருந்தன. குறிப்பாகக் காஷ்மீரில் ஹிந்துக்களின் வாழ்க்கை நரகமாகியது, ஹிந்துக் கோவில்கள் தகர்க்கப்பட்டன அங்கெல்லாம் மசூதிகள் எழுந்தன. அந்தணர்கள் மதம் மாற்றப்பட்டார்கள் காஷ்மீர ஆளுநர் ஷெர்கான் மத மாற்றம் செய்த இந்துக்களின் பூணூல் மட்டும் ஒன்றே கால் மாண்டு எடை அளவு இருந்ததாம்.

காஷ்மீரை முஸ்லிம் நாடாக மாற்றிவிட்டால், இந்தியாவின் பிற பாகங்களும் எளிதில் மாறிவிடும் என்று நினைத்தான் அவுரங்கசீப், ஆனால் அது நடக்கவில்லை. அதனால் சீற்றமுற்ற அவன் மதம் மாறுவதற்கு ஆறு மாதத் தவணையளித்தான். இல்லையெனில் தண்டனை. இந்தச் செய்தியை எடுத்துக் கொண்டு காஷ்மீர் பிராமணப் பிரமுகர்கள் குரு தேக் பகதூரிடம் வந்து முறையிட்டனர். அவர்களது துன்பத்தைக் கேட்டு குருவின் உள்ளம் உருகியது. கோவிந்தராய் நுழைந்து தந்தையின் கவலைக்கு காரணத்தை வினவினான். காஷ்மீர் இந்துக்களுடைய துன்பத்தைக் குரு எடுத்துக் கூறி அவர்களுடைய துன்பம் நீங்க ஒரே வழி ஒரு மகாத்மா அவர்களுக்காக உயிர்த்தியாகம் செய்ய வேண்டும் என்று முடித்தார்.

அப்போது வருங்கால கோவிந்த சிம்மன் ""குருவே பிறர் துன்பம் துடைக்க உயிர்த்தியாகம் செய்யத் தங்களைவிடப் பூரண மனிதன் யாருளர்? என்று கேட்டான். குருவும் தந்தையுமான தேக் பகதூர் முகம் மலர்ந்து கோவிந்த ராயின் சொல்லைத் தெய்வவாக்காக எடுத்துக்கொண்டு உயிரை அர்பணிக்கச் சித்தமானார். மகனிடம் சொன்னார். ''என் உயிர்த் தியாகத்திற்கு பின் நீ ஆன்மிக நெறியைப் போதிப்பாய் அத்துடன் நாடு உயிர்த்தெழ வாள் பிடித்து போரும் செய்வாய் என்பதில் எனக்கு ஐயமில்லை'' என்று.

பிறகு தாயியிடமும் மனையிடமும் பிரியா விடை பெற்றுக் கொண்டு பாய் மட்டி தாஸ் பாஞூ குருதித்த, மற்றும் மூன்று சீடர்களோடு டெல்லிக்கு புறப்பட்டார். காஷ்மீரப் பிராமணர்களை அவரங்கசீபுக்கு. குரு தேக் பகதூர் இஸ்லாமைத் தழுவினால், நாங்கள் அனைவரும் அவரை பின்பற்றுவோம். என்று தெரிவிக்கச் சொன்னார். அதைக் கேட்டு அவுரங்க சீப் மகிழ்ந்தான்.

குரு டெல்லிக்கு வந்ததும், அவரைக் கைது செய்து சிறையில் இட்டான். பிறகு குருவுக்குப் பட்டமும் பதவியும் வேண்டியதெல்லாம் தருவதாகவும் சொல்லிப் பார்த்தான் குரு எதற்கும் மசியவில்லை, பிறகு அச்சமூட்டிப் பார்த்தான் பாய் மட்டி தாஸை ரம்பத்தால் இருபாதிகளாக அறுக்க செய்தான் பாய் சதிதாஸை பஞ்சில் சுற்றி எரிக்கச் செய்தான். குரு அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். முகத்தில் சலனமில்லாமல் அவரையே இரும்புக் கூண்டில் அடைத்து சித்திரவதை செய்தான் பாதுஷா. குரு மனங்கலங்கவில்லை. சிறையிலிருந்தே ஒரு தேங்காய், ஐந்து பைசாக்களை மந்திரம் ஓதி, கோவிந்த சிம்மனுக்கு அனுப்பினார். இச் சடங்கு அடுத்த குரு நியமனத்தை உறுதிப்படுத்தும் ஒன்று. இனி, குரு மனம் மாறமாட்டார் என்பதை உணர்ந்த அவுரங்கசீப், அவருக்கு மரண தண்டனை விதித்தான்.

அப்போது அனந்தபூரிரிலிருந்து வந்த தூதன் பாய் ஜேத்தாவிடம் குரு சொன்னார்: ''என் இறுதி நேரம் வந்து விட்டது. என் தலை துண்டிக்கப்படும்போது அருகிலேயே இரு. என் தலை என் மடியிலே விழும் எதற்கும் அஞ்சாமல் அதை எடுத்துக்கொண்டு அனந்தபூருக்குப் போ. அங்கே என் மகன் அதனை தகனம் செய்வான்"". இரும்புக் கூண்டிலிருந்து வெளியே வந்த குரு குளித்து விட்டு அங்கிருந்த ஆலமரத்தடியில் ஜபம் செய்யத் தொடங்கினார். சமாதி நிலையில் அவர் தலையைத் தாழ்த்திய போது கொலையாளி ஆரம்ஷா அவரது தலையைத் துண்டித்தான். இக்கொடுமையை பார்க்க வெளியே ஒரு பெரிய கூட்டம் கூடியிருந்தது. துண்டிக்கப்பட்ட தலை பாய்ஜேத்தாவின் மடியில் விழுந்தது.

அப்போது அதுவரை டெல்லி கண்டிராத ஒரு புழுதிப் புயல் எழுந்து எங்கும் கவிந்தது. பாய்ஜேத்தா யார் கண்ணிலும் படாமல் அனந்தபூரை நோக்கி விரைந்தான்.

தலையற்ற குருவின் சடலத்தை ஓர் எளிய சீக்கிய வண்டிக்காரன் பஞ்சும் தானியங்களும் ஏற்றபட்டிருந்த வண்டியில் மறைத்துக் கொண்டு டெல்லியிலிருந்து வெளியேறி, ரய்சினாமேட்டில் தங்கள் குடிசை ஒன்றில் வைத்து யாரும் சந்தேகப்படாமல் இருக்கும் பொருட்டுத் தங்கள் குடிசையோடு கொளுத்திவிட்டான். மறுநாள் காலை குருவின் அஸ்தியை ஒரு செப்புத் குடத்திலிட்டு, அங்கேயே புதைத்துவிட்டு, கோவிந்த சிம்மனிடம் சென்று தெரிவித்தான். அந்த இடத்தில் தான் இன்று குருத்வாரா 'ராக்கப் கஞ்ஜ்' நிற்கிறது.

குரு தேக் பகதூர் கொலை செய்யப்பட்ட நேரம் மாசி மாதம், சுக்லபட்ச பஞ்சமி ததி வியாழக்கிழமை, பிற்பகல் நவம்பர் 11, 1675 அப்போது அவருக்கு வயது 53. தெய்வ சிந்தனையைத் தவிர வேறெதற்கும் இதயத்தில் இடங்கொடாத உத்தம ஞானி தேக் பகதூர். இறைவனைப் பாடிய இன்னிசைக் கவிஞர். இறைவன் நம்முள்ளேயே இருக்கிறான் அவனை அங்கேயே காணலாம் என்று ஒரு பாடல்:

"உள்ளும் புறமும் உறையும் அவனை
எங்கே தேடிச் செல்லுகிறாய்?
எள்ளுக்குள்ளே எண்ணெயைப் போல்
மலருக்குள்ளே மணத்தைப் போல்
இதயத்துள்ளே இருப்பவனை
எங்கே தேடிச் செல்லுகிறாய்?
நானக் அருளிய நல்மொழியை
நன்றாய் அறிந்து நலம் பெறுவாய்!

உலகைப் படைத்துக் காக்கும் இறைவனது வழிகளை நாம் முற்றிலுமாகப் புரிந்து கொள்ள முடியாது. நாம் செய்யக் கூடியதும் செய்ய வேண்டியதும் அவனது பதமலர் பற்றி அவனிடம் பூரண நம்பிக்கையுடன் வாழ்வதே.

" கடவுளின் வழிகளைக் கண்டவர் யார்?
தனித்து வாழும் தவசியும் ஞானியும்
தரணியில் எவரும் அறியார் அவன் செயல்
பிரபுவாய் ஆக்குவான் பிச்சைக்காரனை
அரசனை ஆண்டியாய் ஆக்குவான் கணத்துள்
அனைத்தும் அவனது வழிகள் அன்றோ,
உலகைப் படைத்த உயர்ந்தவன் அவனே!
என்றும் அதனைக் காப்பதும் அவனே
ஆயிரமாயிரம் அளவிட முடியா
வடிவமும் பற்பல வண்ணமும் உடையான்
ஆயினும் அனைத்துக்கும் அப்பால் நிற்பவன்
மாயமும் மயக்கமும் தந்ததும் அவனே
மயக்கம் தெளிந்தவன் மலரடி பற்றி
மாண்புற வாழென நானக் சொல்கிறான்''

இந்த உலகம் ஒரு கணவு ஒரு மணல் வீடு,
நொடிப்பொழுதில் சரிந்து விழும்.
இறைவனின் திருப்பெயர் ஒன்றே சதம் என்கிறார். தேக் பகதூர்:

"உண்மையை உணர்வாய் உலகொரு கனவே
விழித்தெழு விடுபடு,
மணல் வீடு கட்டி வாழ்வது எப்படி?
நாலே நாட்களில் நசித்து வீழந்திடும்.
இன்பங்கள் உலகினில் இத்தகையனவே
இவற்றில் வீழும் இழிநிலை வேண்டாம்.
இறைவன் நாமத்தை இதயத்தில் இருத்தி
இடைறாது ஜபித்து ஏற்றம் பெறுவாய்
முயன்று முன்னோர் கண்ட வழிஇது.
நானக் காட்டும் நல்வழி இதுவே!'


(குறிப்பு: பாடல்கள் இயற்றிய சீக்கிய குருக்கள் யாராயினும் நானக்கின் பெயரிலேயே பாடினார்கள்)
மரணத்தைச் சந்திக்கும் முன் குரு தேக் பகதூர் பாடிய இறுதிப்பாடல்:

"இறைவன் நாமத்துக் கிணையாக
எதுவும் உண்டோ இப்புவியில்
துயரமும் குறைகளும் எல்லாமே
தொலைந்து மறையும் அச்சொல்லால்
இறைவன் தரிசனம் கிட்டிவிடும்
இதனினும் இன்பம் வேறுள்ளதோ?

பத்தாவது குருவும் அவரது மகனுமான குரு கோவிந்த சிம்மன் பாடிய பாடல்:

" உடலெனும் சட்டியை அவுரங்கசீப்
பாதுஷாவின் தலையில் உடைத்துவிட்டு,
அவர் பரலோகம் சென்றார்.
தேக்  பகதூரின் தியாகத்திற்கு
இணையாக உலகில் வேறெவரும் இல்லை.
குருவின் மரணத்திற்காக
மண்ணுலகில் ஓலக்குரல், அழுமை,
ஆனால் விண்ணுலகிலோ
பேருவகை, பெருமகிழ்ச்சி..''


பாடல்களின் தமிழ் வடிவமும், கட்டுரையும்: மு.ஸ்ரீனிவாஸன்

நன்றி: தினமலர்

குறிப்பு:

சீக்கியர்களின்  பத்தாவது குருவான குரு 
கோவிந்த சிம்மன்,  ஆங்கிலத் தேதிப்படி டிச. 22 ,1666 -ல் பிறந்தவர். எனினும், சீக்கியர் பஞ்சாங்கப்படி அவரது பிறந்த நாள் விழா ஜனவரி 5 -ல் வந்துள்ளது.
குரு கோவிந்த் நினைவாக, அவரது தந்தை பற்றிய கட்டுரை இங்கு பதிவிடப்பட்டுள்ளது.

காண்க:

குரு கோவிந்த சிம்மன் (விக்கி)

GURU GOBIND SINGH

SIKHISM

Guru Gobind Singh Jeyanthi

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக