நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

10.4.11

சிவத்தொண்டர் குறை தீர்த்தவர்

கணநாத நாயனார்
திருநட்சத்திரம்:
பங்குனி - 27 - திருவாதிரை
(ஏப். 10)

சோழநாட்டில் உள்ள சீர்காழியில் தோன்றியவர் கணநாதர். இவர் வேதிய குலத்தைச் சேர்ந்தவர். இல்லற வாழ்க்கையை ஏற்றுக் கொண்டவர். திருத்தோணி சிவபெருமானுக்கு திருத்தொண்டு செய்து வருபவர்.

திருநந்தவனப் பணி செய்வோர், மலர் கொய்வோர், திருமாலை கட்டுவோர்., திருமஞ்சனம் எடுப்போர், திரு அலகிடுவோர், திருமெழுகிடுவோர், திருவிளக்கேற்றுவோர், திருமறை எழுதுவோர், ஓதுவோர் முதலிய திருத்தொண்டர்களுக்கு குறைகள் ஏற்பட்டால் அவற்றை நீக்குவார்.

இத்தகைய திருத்தொண்டுகளில் மக்களை ஈடுபடுத்தி அவர்களையும் திருத்தொண்டர்களாக்குவார். மேலும், இவர் திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகளை எப்பொழுதும் பேரன்போடு வழிபட்டு வந்தார். அதனால் இவர் திருக்கயிலையை அடைந்து சிவகணங்களுக்குத் தலைவரானார். அன்று முதல் இவர், கணநாத நாயனார் என்றே அழைக்கப்படுகிறார்.

-அம்பை சிவன்.

காண்க:









நம்முடன் வாழும் காந்தி


அண்ணா  ஹசாரே
பிறப்பு: ஜன. 15 (1940)

 ஊழலை ஒழிப்பதற்காக லோக்பால் மசோதா கொண்டுவர பாடுபட்டு வருபவர்;  தகவல் அறியும் உரிமைச் சட்டம் வர காரணமாய் இருந்தவர்;   ராலேகான் சிந்தி என்ற வறண்ட கிராமத்தைச் செழிக்கச் செய்தவர்... இப்படி பல சாதனைகளை செய்தும், செய்துகொண்டும் இருப்பவர்,  72 வயதான அண்ணா ஹசாரே.
இவர் பிறந்தது ஒரு சிறு கிராமம், ராலேகான் சிந்தி; இது மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ளது. ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் 7 குழந்தைகளுடன் ஒருவராய் 1940ல் பிறந்தார் அண்ணா ஹசாரே;  7ம் வகுப்புவரையே படித்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக மும்பை செய்றார்.
அங்கு ஒரு சிறுதொழில் செய்ய ஆரம்பித்தார். சற்று பணம் வர ஆரம்பிக்கவே, சில தீய நண்பர்களும் வந்து சேர்ந்தனர். அதனால் இவர் தான் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் அவர்களுக்கும் சேர்த்து செலவு செய்யவேண்டிய நிலை இருந்தது. தானும் சில கெட்ட பழக்கங்களை பழகினார்.
1961ல் அத் தீயப் பழக்கங்களிலிருந்து மீண்டார். ராணுவத்தில் சேர்ந்தார். தான் அந்த தீய பழக்கங்களிலிருந்து விடுபட உதவியது  தன்னிடம் இருந்த பிரம்மச்சரிய விரதமே என்று குறிப்பிடும் இவர், தான் அதிலிருந்து விடுபட்டது கடவுளின் கிருபை என்றும் குறிப்பிட்டார்.
ராணுவத்தில் இவருக்கு வழங்கப்பட்ட கடும் பயிற்சி, இவர் இந்த பழக்கத்திலிருந்து வெளிவர பெரிதும் உதவியது.  அப்போது இவரது மனம் மனித வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியது. இவரது சிந்தனைக்கு ஒரு தெளிவும், வழியும்பிடிமானமும் கிடைக்கவில்லை, அதனால் மனிதனாய்ப் பிறந்து வாழ்வதில் ஒரு மகத்துவமும் இல்லைஎன்ற முடிவுக்கு வந்தார்.
அதன்படி இந்த அர்த்தமற்ற வாழ்க்கையை சுமப்பதைவிட முடித்துக் கொள்கிறேன், நான் என் சுய இச்சையோடு என் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன். இதற்கு வேறு யாரும் பொறுப்பல்லஎன்று எழுதினார். ஆனால் அந்த சமயத்தில் இவரின் தங்கைக்கு திருமணம் நடப்பதாக  இருந்ததால் தனது தற்கொலை எண்ணத்தை ஒரு மாதம் தள்ளிப்போட்டார்.
இந்த சமயத்தில் ஹசாரே  தில்லி ரயில்வே ஸ்டேஷனில் சுவாமி விவேகானந்தரின் படத்துடன் கூடிய  புத்தகத்தைக் பார்த்தார். அப்புத்தகம் அவரைக் கவர்ந்தது. அதில் மனிதப் பிறவியின்  மகத்தான லட்சியம், இப் பிறப்பிலேயே ஜீவன் முக்தி அடைவதுதான்என்ற சுவாமி விவேகானந்தரின் சொற்கள் ஹசாரேவுக்கு   மிகப் பெரிய  விழிப்புணர்வை ஏற்படுத்தியது; தன் தற்கொலை எண்ணத்தை கைவிட்டார்.
அர்த்தமில்லாத தேவதைகளின் பின்னால் ஓடாதே. நோயாளி, ஆதரவற்றவன், ஏழை, துன்பத்தில் பீடிக்கப்பட்டவன், இவர்கள் தான் உனது கடவுள். அவர்களுக்குச் சேவை செய். இதுதான் முக்தியடைய உண்மையான வழிஎன்ற விவேகானந்தரின் வரிகள், ஹசாரேவின்  உடம்பெங்கும் பரவி, தான் செய்ய வேண்டிய வேலைக்கு வழிகாட்டியதாகவே உணர்ந்தார்.  தொடர்ந்து ஆன்மீக இலக்கியங்கள் பலவற்றைப்  படிக்கலானார்.
1965 யுத்தத்தில் உடன் பணியாற்றிய பல நண்பர்களை குண்டு மழையில் இழந்தார். சில நண்பர்கள் ஊனமானார்கள். இவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார். இது கடவுளின் கருணையே என்று நினைத்தார், தான் கடவுள் சேவையில் ஈடுபடவேண்டும் என்று விரும்பினார். 
1975 போருக்குப் பின் ஹசாரே  வேலையை விட்டு கடவுள் தொண்டிலும், கிராம சேவையிலும் ஈடுபடத்  தீர்மானித்து ஊர் திரும்பினார். அப்போது ராலேகான் சிந்தி வறண்ட பூமி. பிரதான தொழில் சாராயம் காய்ச்சுவது.  மழை குறைவு;  சுகாதாரமான குடிநீர் கிடையாது;  மக்கள் பல நோய்களில் அவதிபட்டு வந்தனர்.
ஹசாரே தனது கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்களை அழைத்து, கிராமத்தை முன்னேற்ற தான் வைத்துள்ள திட்டங்களைச் சொல்லி அந்த இளைஞர்களின் சிந்தனையைத் தூண்டி இளைஞர்களின் மனதில் எழுச்சியை ஏற்படச் செய்தார்.
முதலில் அங்கிருந்த மக்களிடம்  ஈடுபாட்டை ஏற்படுத்த அங்கிருந்த கோயிலை புனர் நிர்மாணம் செய்வது என முடிவெடுத்துமக்களுடன் இணைந்து  வேலையைத் தொடங்கினார். இதற்காக தான் ஓய்வு பெற்றபோது வந்த பணம் ரூ. 19,000த்தை  செலவு செய்தார். இதன் பின் மக்களே முன்வந்து மரமாகவும்பணமாகவும்உடல் உழைப்பாகவும் செய்யகிராம மக்களிடையே உற்சாகம் ஏற்பட்டு  கூட்டு முயற்சியில் நம்பிக்கை ஏற்பட்டது.
மக்களின் உற்சாகத்தையும் அவர்களின் ஆதரவையும் கொண்டுகள்ளச்சாராயத்தின் தீமைகளை மக்களிடம் விளக்கினார். அவர்கள் முழுமனதுடன் மது அரக்கனை ஒழிக்க சங்கல்பம் செய்தனர். பல்வேறு வழிவகைகளைக் கையாண்டு அந்த ஊரிலிருந்து கள்ளச் சாராயத்தை ஒழித்தனர். அதில் நேரிட்ட இடைஞ்சல்களை மக்களின் அன்பால் வென்றார் ஹசாரே.
அதன் பின் மக்களிடம் எழுச்சி ஏற்பட்டது.  தினசரி மக்கள் கோயில் வேலைகளிலும் பூஜையிலும் ஈடுபட்டு, பஜனை போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டர். 'கிராமம் முழுவதும் ஒரு குடும்பம்' என்ற உணர்வு அவர்களிடம் ஏற்பட்டது. மக்களின் ஒற்றுமையும் இளைஞர்களின் சக்தியையும் கொண்டு தீண்டாமை அரக்கனை ஒழித்துக் கட்டினார்.
கிராமே கூடி விவசாயம் செய்தனர்;   கிணறுகள் வெட்டினர். பின்தங்கிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு உதவினர். அவர்களுக்கு ஏற்பட்ட கடன்களை அடைத்தனர். மாணவர் விடுதி  ஏற்படுத்தினர். ராலேகான்  சிந்தி, தீண்டாமை ஒழிப்பில் மாவட்டத்தின் முதல் பரிசு பெற்றது.
மழைநீரை சேமிக்க குளங்கள் வெட்டினர்.  அங்கு இப்போது விவசாயம் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. சாண எரிவாயு இயந்திரங்கள் மூலம் எரிவாயுவும், உரங்களும் பெறுகின்றனர். மரங்கள் நட்டனர்;  பசு வளர்ப்பில் கவனம் கொடுத்தனர். கோழிவளர்ப்பு, தையல் வேலை என்று அனைத்துத் துறைகளிலும் கவனம் கொடுத்தனர்.
கிராம மக்களின் தானத்தின் மூலமும் உழைப்பின் மூலமும் பள்ளி ஆரம்பிக்கப்பட்டு பின்பு அரசு உதவி கிடைத்தது. தற்போது மற்ற ஊர்களுக்கும் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உற்பத்தியைப் பெருக்குவதில்  வெற்றி பெற்றிருக்கிறார்கள் ராலேகான் சிந்தி கிராம மக்கள். இவர்களின் வெற்றி மற்ற கிராமங்களையும் தொற்றி அவர்களுக்கும் உற்சாகம் பெற்றுள்ளனர்.
ராலேகான் சிந்தி ஒரு முன்மாதிரியான கிராமம். இப்படிப்பட்ட நிலையை நாட்டுக்கும் கொண்டுவர தற்போது அண்ணா ஹசாரே பாடுபட்டு வருகிறார். இவருக்கு பத்மஸ்ரீ (1990), பத்மபூஷன் (1992) விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அண்மையில் ஏப். 5  முதல் ஏப், 8  வரை தில்லியில் இவர் நடத்திய தொடர் உண்ணாவிரதத்திற்கு மத்திய அரசு பணிந்தது. லோக்பால் சட்டம் குறித்து ஹசாரே கூறுவதை ஏற்க அரசு முன்வந்தது. இப்போது அதற்கான வரைவுக் குழுவில் ஹசாரே உள்பட பொதுநல விரும்பிகள் ஐவரும் அரசு பிரதிகள் ஐவருடன் இணையாக இடம் பெற்றுள்ளனர். இதன் வெற்றி இனிமேல் தான் தெரிய வரும்.
முன்பு எப்படி மாலேகான் சிந்தியில் கள்ளச்சாராயத்தை ஒழித்தாரோ அதேபோல, நாட்டில் ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதாவுக்காக இப்போது போராடி வருகிறார், ஹசாரே.
இவரே இன்றைய மகாத்மா.
- என்.டி.என்.பிரபு
காண்க:
.

4.4.11

தேசமே தெய்வம் என்றவர்

டாக்டர் ஹெட்கேவார்
பிறப்பு: யுகாதி
(ஏப். 4)
                                              
            "கோயிலைப் போலே  உடல்கள் புனிதம்
             மாந்தர் அனைவரும் உபகாரி !
             சிங்கத்துடனே விளையாடிடுவோம்
             ஆவினம் எங்கள் அன்புத்தாய்....''
.
              - என்ற அற்புதமான, அர்த்தமுள்ள வரிகளை சுமந்துகொண்டு வந்தது அந்தப் பாட்டு. இனிமையான குரலுடன் மனதையும் அறிவையும் கிறங்க வைத்த பாடல் வந்த திசை நோக்கி தானாக நடந்தது எனது கால்கள்.
               
                  பதினைந்து முதல் முப்பதுக்கும் இடைப்பட்ட வயதுள்ள சுமார் 20 இளைஞர்கள் வட்டமாக அமர்ந்திருந்தனர்;  ஒருவர் பாட, மற்றவர்கள் திருப்பிப்  பாடும் இந்த கூட்டுப் பாடலில் தான் எத்தனை ஆழமான பொருள்! தொடர்ந்தது பாடல்.....

                  "சிறுமியரெல்லாம் தேவியின் வடிவம்
                  சிறுவர் அனைவரும் ராமனே
                  சிறுவர் அனைவரும் ராமனே!....

                   சந்தனம் எங்கள் நாட்டின் புழுதி;
                   கிராமம் அனைத்தும் தவ பூமி!...'' 
                    எனும் பாடல் வரிகளில் இழைந்தோடிய, தேசபக்தியும் தெளிந்த நீரோடையாய் விளங்கிய நம் மண்ணின் ஞானசக்தியும் என்னுள் ஒரு பரவச உணர்வை ஏற்படுத்தியது.

                  யார் இந்த இளைஞர்கள்?  எதற்காக இங்கு அமர்ந்து, இப்படியொரு அருமையான பொருள் பொதிந்த பாடலைப் படுகிறார்கள் ? பொறுத்திருந்தேன் விடை காண.

                 பாடல் முடிந்தது . சான்றோர் ஒருவரின் பொன்மொழியும், திருக்குறளிலிருந்து "அருமை உடைத்தென்று ..." என்ற குரலும் வாசிக்கப்பட்டது.  பின் வரலாற்றிலிருந்து சாணக்கியரின் வாழ்க்கைச் சம்பவம் ஒன்று சுவையான கதை போல்    சொல்லப்பட்டது.  பின் அனைவரும் எழுந்தனர்; மூன்று வருஷங்களில் அணிவகுத்து நின்றனர்;  பிரார்த்தனைப் பாடல் பாடப்பட்டது.

                " கட்டுப்பாட்டுடன் கூடிய செயல்திறன், கட்டளைக்கு கீழ்ப்படியும் கடமையுணர்வு, ஏற்றுக் கொண்ட லட்சியத்துக்காக எல்லாவற்றையும் அர்ப்பணிக்கும் தியாக மனப்பான்மை.. இத்தகைய வீரம் செறிந்த இளைஞர்களை உருவாக்குகின்ற பணிவினை செய்யும் 'ஆர்.எஸ்.எஸ்' என்றழைக்கப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் ஒருகிளையினை தான் நீங்கள் இப்பொழுது பார்த்தீர்கள்!"  என்றார், அந்தக் கிளையின் பொறுப்பாளர் ஒருவர்.

                 தொலைக்காட்சிகளிலும், பாலியல் விவகாரங்களிலும், போதை,  கிரிக்கெட்,  திரைப்பட கனவுகளில் தங்கள் சக்தியை கரைத்துக் கொண்டிருக்கும் இன்றைய இந்திய தேசத்தின் இளைஞர்களிடையே இப்படிப்பட்ட இளைஞர்களை உருவாக்கும் ஆர்.எஸ்.எஸ்.சின்  தலைவர் யார் ? தெரிந்துகொள்ள ஆவல் தோன்றியது.

                 பிரகாசமாய் எரிந்து வெளிச்சத்தை தரும் அகல்விளக்குக்கு கீழே நிழல் இருப்பது போல ஆர்.எஸ்.எஸ். ஐ துவக்கிய டாக்டர்  கேசவ பலிராம் ஹெட்கேவார் தன்னை முன்னிறுத்தவில்லை; தனது புகழைப் பாடவும் விரும்பவில்லை.

                1925, விஜயதசமியில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். - உலகமெங்கும் தேசபக்திக்காகவும் தன்னலமற்ற தொண்டுகளுக்காகவும் அறியப்பட்ட இயக்கம்; " உலகமெங்கும் உள்ள தன்னார்வுத் தொண்டு அமைப்புகளில் மிகப் பெரிய அமைப்பாக ஆர்.எஸ்.எஸ்-ஐ லண்டனில் உள்ள பிபிசி  அங்கீகாரம் செய்தது அதிசயம் ஒன்றுமில்லை ஆனால் அதைத் துவைக்கிய டாக்டர்  ஹெட்கேவரைப் பற்றி சிலர் மட்டுமே அறிந்திருப்பது அதிசயம் தானே!

               லட்சியத்துக்காக லட்சியமாகவே வாழ்ந்த பெருமகனார்; நோய் தீர்க்கும் மருத்துவப் படிப்பு முடித்த  ஹெட்கேவார், தேசத்தின் நோய்களைப் போக்கவும், ஒற்றுமை உணர்வினை மக்களிடையே வளர்க்கும் மருத்துவராகவே வாழும் வாழ்வென்னும் வேள்வியில் தன்னை ஆகுதி ஆக்கினார்.

               தன்னை முன்னிலைப்படுத்தாது தேசநலனையே முன்னிலைப்படுத்தி அதற்காகவே தங்கள் வாழ்வை அர்ப்பணிக்கும் லட்சக்கணக்கான தொண்டர்களை உருவாக்குவதில் வெற்றி கண்டவர் 'டாக்டர்ஜி' என்று பல கோடி மக்களால் அன்புடன் அழைக்கப்படும் ஹெட்கேவார். இவர் விடுதலைப் போராட்ட வீரர்; சமுதாய சீர்திருத்தச் செம்மல்; இயக்க நிறுவனர் என பல பரிமாணங்களை உடையவர்.

                 புது வருடப்  பிறப்பாம் யுகாதியில் (ஆங்கிலத் தேதி: 01.04.1889) பிறந்து,  இந்த தேசத்து மக்களுக்கு தேசியத்தையும்  தெய்வீகத்தையும்  வலுப்படுத்திட  அருமருந்தாய் ஆர்.எஸ்.எஸ்-ஐ உருவாக்கினார்.
.
                தனது மறைவுக்குள் (21.06.1940) ஆர்.எஸ்.எஸ். அமைப்பை நாடு முழுவதும் பரவலாக்கி,  அதற்கென  அர்ப்பணமயமான    நிர்வாகிகளையும் தொண்டர்களையும்  உருவாக்கிச் சென்ற, தேசபக்தி கொண்டோருக்கு   'வையத்துள் வாழ்வாங்கு வாழும் வீர புருஷனாய்' வழிகாட்டும் டாக்டர் ஹெட்கேவாரை இன்றைய நாளில் நினைவில் கொண்டு அவர்தம் பணியைத்  தொடர்வோமாக!

                    வந்தே மாதரம்!    
- ம.கொ.சி.ராஜேந்திரன்
காண்க:
.
.

3.4.11

சத்ரபதி சிவாஜியின் வீர முழக்கம்

சத்ரபதி சிவாஜி

நினைவு தினம்: ஏப். 3

ஜயஜய பவானி! ஜயஜய பாரதம்!
ஜயஜய மாதா! ஜயஜய துர்க்கா!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
சேனைத் தலைவர்காள்! சிறந்த மந்திரிகாள்!
யானைத் தலைவரும் அருந்திறல் வீரர்காள்!

அதிரத மனர்காள்! துரகத் ததிபர்காள்
எதிரிகள் துணுக்குற இடித்திடு பதாதிகாள்!
வேலெறி படைகாள்! சூலெறி மறவர்காள்!
கால னுருக்க்கொளும் கணைதுரந் திடுவீர்.
மற்றுமா யிரவிதம் பற்றலர் தம்மைச்

செற்றிடுந் திறனுடைத் தீரரத் தினங்காள்!
யாவிரும் வாழிய! யாவிரும் வாழிய!
தேவிநுந் தமக்கெலாம் திருவருள் புரிக!
மாற்றலர் தம்புலை நாற்றமே யறியா
ஆற்றல்கொண் டிருந்ததில் வரும்புகழ் நாடு!

வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்
பாதமும் பொறுப்பளோ பாரத தேவி?
வீரரும் அவரிசை விரித்திடு புலவரும்
பாரெலாம் பெரும்புகழ் பரப்பிய நாடு!
தர்மமே உருவமாத் தழைத்த பே ரரசரும்

நிர்மல முனிவரும் நிறந்த நன் னாடு!
வீரரைப் பெறாத மேன்மைநீர் மங்கையை
ஊரவர் மலடியென் றுரைத்திடு நாடு!
பாரதப் பூமி பழம்பெரும் பூமி;
நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்!

பாரத நாடு பார்க்கெலாம் திலகம்;
நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்!
வானக முட்டும் இமயமால் வரையும்
ஏனைய திசைகளில் இருந்திரைக் கடலும்
காத்திடு நாடு! கங்கையும் சிந்துவும்

தூத்திரை யமுனையும் சுனைகளும் புனல்களும்
இன்னரும் பொழில்களும் இணையிலா வளங்களும்
உன்னத மலைகளும் ஒளிர்தரு நாடு!
பைந்நிறப் பழனம் பசியிலா தளிக்க
மைந்நிற முகில்கள் வழங்கும் பொன்னாடு!

தேவர்கள் வாழ்விடம், திறலுயர் முனிவர்
ஆவலோ டடையும் அரும்புகழ் நாடு!
ஊனமொன்றறியா ஞானமெய் பூமி,
வானவர் விழையும் மாட்சியார் தேயம்!
பாரத நாட்டிசை பகரயான் வல்லனோ?

நீரதன் புதல்வர் நினைவகற் றாதீர்!
தாய்த்திரு நாட்டைத் தறுகண் மிலேச்சர்
பேய்த்தகை கொண்டோ ர் பெருமையும் வன்மையும்
ஞானமும் அறியா நவைபுரி பகைவர்
வானகம் அடக்க வந்திடும் அரக்கர் போல்

இந்நாள் படை கொணர்ந்து இன்னல்செய் கின்றார்!
ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும்
பாலரை விருத்தரைப் பசுக்களை ஒழித்தலும்
மாதர்கற் பழித்தலும் மறைவர் வேள்விக்கு
ஏதமே சூழ்வதும் இயற்றிநிற் கின்றார்!

சாத்திரத் தொகுதங்யைத் தாழ்த்துவைக் கங்ன்றார்
கோத்தங்ர மங்கையர் குலங்கெடுக் கின்றார்
எண்ணில துணைவர்காள்! எமக்கிவர் செயுந்துயர்
கண்ணியம் மறுத்தனர, ஆண்மையுங் கடிந்தனர்,
பொருளினைச் சிதைத்தனர், மருளினை விதைத்தனர்

திண்மையை யழித்துப் பெண்மையிங் களித்தனர்,
பாரதப் பெரும்பெயர் பழிப்பெய ராக்கினர்,
சூரர்தம் மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர்,
வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்
ஆரியர் புலையருக் கடிமைக ளாயினர்.

மற்றிதைப் பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை
வெற்றிகொள் புலையர்தாள் வீழ்ந்துகொல் வாழ்வீர்?
மொக்குகள்தான் தோன்றி முடிவது போல
மக்களாய்ப் பிறந்தோர் மடிவது திண்ணம்.
தாய்த்திரு நாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை

மாய்த்திட விரும்பான் வாழ்வுமோர் வாழ்வுகொல்?
மானமென் றிலாது மாற்றலர் தொழும்பாய்
ஈனமுற் றிருக்க எவன்கொலோ விரும்புவன்?
தாய்பிறன் கைப்படச் சகிப்பவ னாகி
நாயென வாழ்வோன் நமரில்இங் குளனோ?

பிச்சைவாழ் வுகந்து பிறருடைய யாட்சியில்
அச்சமுற் றிருப்போன் ஆரிய னல்லன்,
புன்புலால் யாழ்க்கையைப் போற்றியே தாய்நாட்டு
அன்பிலா திருப்போன் ஆரிய னல்லன்.
மாட்சிதீர் மிலேச்சர் மனப்படி யாளும்

ஆட்சியி லடங்குவோன் ஆரிய னல்லன்.
ஆரியத் தன்மை அற்றிடுஞ் சிறியர்
யாரிவண் உளரவர் யாண்டேனும் ஒழிக!
படைமுகத்து இறந்து பதம்பெற விரும்பாக்
கடைபடு மாக்களென் கண்முனில் லாதீர்!

சோதரர் தம்மைத் துரோகிகள் அழிப்ப
மாதரர் நலத்தின் மகிழ்பவன் மகிழ்க,
நாடெலாம் பிறர்வசம் நண்ணுதல் நினையான்
வீடுசென் றொளிக்க விரும்புவோன் விரும்புக!
தேசமே நலிவொடு தேய்ந்திட மக்களின்

பாசமே பெரிதெனப் பார்ப்பவன் செல்க!
நாட்டுளார் பசியினால் நலிந்திடத் தன்வயிறு
ஊட்டுதல் பெரங்தென உண்ணுவோன் செல்க!
ஆணுருக் கொண்ட பெண்களும் அலிகளும்
வீணில்இங் கிருந்தெனை வெறுத்திடல் விரும்பேன்.

ஆரியர் இருமின்! ஆண்கள்இங்கு இருமின்!
வீரியம் மிகுந்த மேன்மையோர் இருமின்!
மானமே பெரிதென மதிப்பவர் இருமின்!
ஈனமே பொறாத இயல்பினர் இருமின்!
தாய்நாட் டன்புறு தனையர் இங்கு இருமின்!

மாய்நாட் பெருமையின் மாய்பவர் இருமின்!
புலையர்தம் தொழும்பைப் பொறுக்கிலார் இருமின்!
கலையறு மிலேச்சரைக் கடிபவர் இருமின்!
ஊரவர் துயரில்நெஞ் சுருகுவீர் இருமின்!
சோர நெஞ்சங்லாத் தூயவர் இருமின்!

தேவிதாள் பணியுந் தீரர் இங்கு இருமின்!
பாவியர் குருதியைப் பருகுவார் இருமின்!
உடலினைப் போற்றா உத்தமர் இருமின்!
கடல்மடுப் பினும்மனம் கலங்கலர் உதவுமின்!
வம்மினோ துணைவீர்? மருட்சிகொள் ளாதீர்!

நம்மினோ ராற்றலை நாழிகைப் பொழுதெனும்
புல்லிய மாற்றலர் பொறுக்கவல் லார்கொல்?
மெல்லிய திருவடி வீறுடைத் தேவியின்
இன்னருள் நமக்கோர் இருந்துணை யாகும்
பன்னரும் புகழுடைப் பார்த்தனும் கண்ணனும்

வீமனும் துரோணனும் வீட்டுமன் றானும்
ராமனும் வேறுள இருந்திறல் வீரரும்
நற்றுணை புரிவர்; வானக, நாடுறும்!
வெற்றியே யன்றி வேறெதும் பெறுகிலேம்!
பற்றறு முனிவரும் ஆசிகள் பகர்வர்

செற்றினி மிழேச்சரைத் தீர்த்திட வம்மீன்!
ஈட்டியாற் சிரங்களை வீட்டிட எழுமின்!
நீட்டிய வேல்களை நேரிருந்து எறிமின்!
வாளுடை முனையினும் வயந்திகழ் சூலினும்,
ஆளுடைக் கால்க ளடியினுந் தேர்களின்

உருளையி னிடையினும் மாற்றலர் தலைகள்
உருளையிற் கண்டுநெஞ் சுவப்புற வம்மின்!
நம்இதம், பெருவளம் நலிந்திட விரும்பும்
(வன்மியை) வேரறத் தொலைத்தபின் னன்றோ
ஆணெனப் பெறுவோம், அன்றிநாம் இறப்பினும்

வானுறு தேவர் மணியுல கடைவோம்,
வாழ்வமேற் பாரத வான்புகழ்த் தேவியைத்
தாழ்வினின் றுயர்த்திய தடம்புகழ் பெறுவோம்!
போரெனில் இதுபோர், புண்ணியத் திருப்போர்!
பாரினில் இதுபோற் பார்த்திடற் கெளிதோ?

ஆட்டினைக் கொன்று வேள்விகள் இயற்றி
வீட்டினைப் பெறுவான் விரும்புவார் சிலரே
நெஞ்சகக் குருதியை நிலத்திடை வடித்து
வஞ்சக மழிக்கும் மாமகம் புரிவம்யாம்
வேள்வியில்இதுபோல் வேள்வியொன் றில்லை!

தவத்தினில் இதுபோல் தவம்பிறி தில்லை!
முன்னையோர் பார்த்தன் முனைத்திசை நின்று
தன்னெதிர் நின்ற தளத்தினை நோக்கிட
மாதுலர் சோதரர் மைத்துனர் தாதையர்
காதலின் நண்பர் கலைதரு குரவரென்று

இன்னவர் இருத்தல்கண்டு, இதயம்நொந் தோனாய்த்
தன்னருந் தெய்விகச் சாரதி முன்னர்
ஐயனே! இவர்மீ தம்பையோ தொடுப்பேன்?
வையகத் தரசும் வானக ஆட்சியும்
போயினும் இவர்தமைப் போரினில் வீழ்த்தேன்.

மெய்யினில் நடுக்கம் மேவுகின் றதுவால,f
கையினில் வில்லும் கழன்றுவீழ் கின்றது.
வாயுலர் கின்றது; மனம் பதைக்கின்றது,
ஓய்வுறுங் கால்கள, உலைந்தது சிரமமும்,
வெற்றியை விரும்பேன், மேன்மையை விரும்பேன்

சுற்றமிங் கறுத்துச் சுகம்பெறல் விரும்பேன்,
எனையிவர் கொல்லினும் இவரையான் தீண்டேன்,
சினையறுத் திட்டபின் செய்வதோ ஆட்சி?
எனப்பல கூறியவ் விந்திரன் புதல்வன்
கனப்படை வில்லைக் களத்தினில் எறிந்து

சோர்வோடு வீழ்ந்தனன், சுருதியின் முடிவாய்த்
தேர்வயின் நின்றநம் தெய்விகப் பெருமான்
வில்லெறிந் திருந்த வீரனை நோக்கி
புல்லிய அறிவொடு புலம்புகின் றனையால்
அறத்தினைப் பிரிந்த சுயோதனா தியரைச்

செறுத்தினி மாய்ப்பது தீமையென் கின்றாய்,
உண்மையை அறியாய் உறவையே கருதிப்
பெண்மைகொண் டேதோ பிதற்றிநிற் கின்றாய்
வஞ்சகர், தீயர், மனிதரை வருத்துவோர்,
நெஞ்சகத் தருக்குடை நீசர்கள்; இன்னோர்

தம்மொடு பிறந்த சகோதரராயினும்
வெம்மையோ டொறுத்தல் வீரர்தஞ் செயலாம்.
ஆரிய நீதிநீ அறிகிலை போலும்!
பூரியர் போல்மனம் புழுங்குற லாயினை
அரும்புகழ் தேய்ப்பதும் அனாரியத் தகைத்தும்

பெரும்பதத் தடையுமாம் பெண்மையெங் கெய்தினை?
பேடிமை யகற்று! நின் பெருமையை மறந்திடேல்!
ஈடிலாப் புகழினாய்! எழுகவோ எழுக! என்று
மெய்ஞ் ஞானம்நம் இறையவர் கூறக்
குன்றெனும் வயிரக் கொற்றவான் புயத்தோன்

அறமே பெரிதென அறிந்திடு மனத்தனாய்
மறமே உருவுடை மாற்றலர் தம்மைச்
சுற்றமும் நோக்கான் தோழமை மதியான்
பற்றலர் தமையெலாம் பார்க்கிரை யாக்கினன்.
விசயனன் றிருந்த வியன்புகழ் நாட்டில்

இசையுநற் றவத்தால் இன்றுவாழ்ந் திருக்கும்
ஆரிய வீரர்காள்! அவருடை மாற்றலர்,
தேரில்இந் நாட்டினர், செறிவுடை உறவினர்,
நம்மையின் றெதிர்க்கும் நயனிலாப் புல்லோர்,
செம்மைதீர் மிலேச்சர், தேசமும் பிறிதாம்

பிறப்பினில் அன்னியர், பேச்சினில் அன்னியர்
சிறப்புடை யாரியச் சீர்மையை அறியார்.
- மகாகவி பாரதி 

(சத்ரபதி சிவாஜி தனது சைனியத்திற்குக் கூறியது' என்ற தலைப்பில்
 தேசிய கீதங்கள்  பகுப்பில் உள்ள கவிதை.   முற்றுப்பெறாதது).




நினைவில் வாழும் வெற்றித் திருமகன்



பீல்ட் மார்ஷல் மானேக்ஷா
பிறப்பு: ஏப். 3

  40 ஆண்டுகால ராணுவ சேவையில் 5 போர்களைச் சந்தித்தவர். பாகிஸ்தானுடனான போரின்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியுடன் முரண்பட்டபோதும்,  போர்க்குணத்துடன் போராடி பாகிஸ்தானைத்  தோற்கடித்து சரணடையச் செய்தவர். வங்கதேசம் எனும் தனிநாடு உருவாகக் காரணமாகி,  இன்றுவரை அந்த நாட்டினரால் தங்களது தேசத்தின் மீட்பராக நினைவுகூரப்படுபவர். இரும்பு மனிதர் என்று போற்றத்தக்க உறுதி படைத்தவர் சாம் ஹோர்முஸ்ஜி பிரேம்ஜி ஜாம்ஷெட்ஜி மானெக்ஷா   என்ற பீல்டு மார்ஷல் சாம் மானெக்ஷா.

  இந்திய ராணுவத்தில் 2 பேர்தான் 'பீல்டு மார்ஷல்' என்ற தகுதிநிலைக்கு உயர்ந்தவர்கள். ஒருவர்,  பீல்டு மார்ஷல் கரியப்பா, மற்றவர் பீல்டு மார்ஷல் மானெக்ஷா.

  பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் ஹோர்முஸ்ஜி மானெக்ஷா- ஹீராபாய் என்ற பார்சி இன தம்பதியினருக்கு மகனாக ஏப். 3, 1914  ல் பிறந்தார் சாம் மானெக்ஷா.

  பள்ளிப் படிப்பு முடிந்ததும் இங்கிலாந்து சென்று மருத்துவம் படிக்க அனுப்புமாறு தனது தந்தையிடம் கேட்டார் மானெக்ஷா. ஆனால் சிறு வயதாக இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த அவர் டேராடூனில் உள்ள இந்திய ராணுவக் கல்லூரிக்கு விண்ணப்பித்தார். இங்கு படிக்க முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட 40 பேரில் அவரும் ஒருவர்.  1934-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய ராணுவத்தில் இரண்டாம் லெப்டினென்டாக சேவையைத் துவங்கினார் மானெக்ஷா.

  1942-ம் ஆண்டு பர்மாவில் பணியாற்றியபோது இரண்டாம் உலகப் போர் மூண்டது. மூர்க்கத்துடன் வந்த ஜப்பானியப் படைகள் மீது நடத்திய எதிர்த்  தாக்குதலில் ஏராளமான இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அப்போது ஒரு போர்முனையைப் பிடிக்க எடுக்கப்பட்ட எதிர் நடவடிக்கையின்போது அவர் மீது இயந்திரத் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. இதில் பலத்த காயமடைந்தபோதும், அந்த முனையை அவர் பிடித்தார். அப்போதைய ராணுவத் தளபதி டி.டி.கவன், மானெக்ஷாவின் உறுதியையும், துணிந்த நெஞ்சத்தையும் பாராட்டி போர்முனையிலேயே 'மிலிட்டரி கிராஸ்' விருதை அளித்தார்.

  படுகாயமடைந்த பின் உடல்நலம் தேறியதும் குவெட்டாவில் உள்ள பணியாளர் கல்லூரிக்கு பயிற்சியாளராக அனுப்பப்பட்டார். பிறகு மீண்டும் பர்மாவில் போர்முனையில் பணியாற்றச் சென்றபோது மீண்டும் குண்டுக் காயம் அடைந்தார். போர் முடிவடையும் தறுவாயில் 10 ஆயிரம் போர்க் கைதிகளின் மறுவாழ்வுக்காக உதவி செய்தார். பிறகு ஆஸ்திரேலியாவில் 1946-ம் ஆண்டு சுற்றுலா சென்றார்.

  தேசப் பிரிவினைக்குப் பிறகு ராணுவத்தில் ஏராளமான நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொண்டார். இதனால் 1947- 48ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் நடவடிக்கையில் வெற்றி கிடைத்தது. இதன் பிறகு கர்னலாக பதவி உயர்வு பெற்றார். நாகாலாந்தில் ஏற்பட்ட உள்நாட்டு கிளர்ச்சியை வெற்றிகரமாக முறியடித்தார். இதையடுத்து 1968-ம் ஆண்டு 'பத்ம பூஷண்' விருது வழங்கப்பட்டது.

  7 ஜூன், 1969-ம் ஆண்டு சாம் மானெக்ஷா இந்தியாவின் ராணுவத் தளபதியாக பதவியேற்றார். 1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் போரில் தனது ராணுவ அனுபவத்தின் மூலம் இந்தியாவை வெற்றி பெறச் செய்து வங்கதேசம் உருவாகக் காரணமானார்.

  இந்திய ராணுவ வீரர்களை மேலும் மேலும் ஊக்கப்படுத்தி, தன்னம்பிக்கையுடன் போராட வைத்து பாகிஸ்தான் ராணுவத்தை வெறும் 14 நாள்களில் சரணடையச் செய்தார் மானெக்ஷா. இந்த நடவடிக்கையின் போது 93 ஆயிரம் பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் சிவிலியன்களை போர்க் கைதிகளாக இந்தியா சிறைபிடித்தது. இந்திய ராணுவ வரலாற்றில் மிகப் பெரிய வெற்றியாகவும், மிக வேகமான ராணுவ வெற்றியாகவும் இது போற்றப்படுகிறது.  இதையடுத்து  ஏற்பட்ட சிம்லா ஒப்பந்தத்தின் மூலம் வங்கதேசம் உருவாக்கப்பட்டது.

  அவரது சேவையைப் பாராட்டி 1972-ம் ஆண்டு 'பத்ம விபூஷண்' விருது நமது  அரசால் வழங்கப்பட்டது. 1973, ஜன. 1-ம் தேதி அவருக்கு 'பீல்டு மார்ஷல்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.

  ராணுவ சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தமிழ்நாட்டில், நீலகிரி மாவட்டத்தில் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ கன்டோன்மென்டில் தங்கி இருந்தார்.

  இந்திய ராணுவத்தில் ஒப்பற்ற சேவைகளைச் செய்து இந்தியாவின் தங்க மகனாகத் திகழந்த பீல்டு மார்ஷல் சாம் மானெக்ஷா 2008, ஜூன் 27-ம் தேதி காலமானார்.

- க.ரகுநாதன்

காண்க: