நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

19.12.10

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்...


காலைநேரம். பத்திரிகை ஒன்றை புரட்டிக் கொண்டிருந்தேன். பரபரப்பும் விறுவிறுப்பும் கொண்ட செய்திகளாக ஊழலும்,  மழையால் ஏற்பட்ட சேதமும் ஆக்கிரமித்திருந்தன.

எல்லா செய்திகளையும்  விட ஒரு செய்தி என்னுள் பல கேள்விகளை எழுப்பியது. அந்தச் செய்தி:

 “தமிழகத்தில் அண்மையில் பெய்த கனமழையால் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.  மழைக்கு 250க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். லட்சக் கணக்கான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மழை சீரமைப்புப் பணிகளுக்காக முதல் கட்டமாக ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டது. பாதித்த மாவட்டங்களைப் பார்வையிட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம். பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1,600 கோடி அளிக்க கோரிக்கை...” 

- என்று செய்தி தொடர்கிறது.

வருண பகவான் பருவந்தோறும் வருகிறான்,  கை வண்ணத்தைக்  காட்டுகிறான். ஏதோ தன் கடமையை சரியா செய்வதாய் நினைத்துக்கொண்டு. ஆனால், நாமோ, நமது அரசு நிர்வாகமோ.... ஒவ்வொரு முறையும் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் தான்...

'கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்...' என்பது பழமொழி. கோயிலிருந்தால், அதன் அருகில் குளம் இருக்கும். குளம் இருந்தால் ஊருக்குள் வளம் இருக்கும். ஆக, கோயில் நல்ல உள்ளத்திற்கும், குளம் நல்ல வளத்திற்கும் அடையாளங்களாகத் திகழ்ந்தன.

ஆனால், இன்று இவையிரண்டும் தன் பெருமைகளை இழந்து நம்மாலும், அரசியல்வாதிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.

ஏரிகள், குளங்கள் தூர்வாரப்படாமையாலும், கால்வாய்கள், மதகுகள் முறையாகப் பராமரிக்கப்­படாததாலும்,  புதிய அணைகள், ஏரிகள், குளங்கள் உருவாக்காததாலும், மழைநீர் வெள்ளமாய் ஊருக்குள் புகுந்து தன் கைவரிசையைக் காட்டுகிறது.

வள்ளுவன், “ஊருக்கு நடுவிலுள்ள குளம் போல், உயர்ந்த குணமுள்ளோரின் செல்வம் மக்களுக்கு பயன்படும்” என்று ஒரு குறளில் சொல்வான்:

'ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்
பேரறிவாளன் திரு'
-  குறள் (215)

ஆனால் தற்போது, மழைக்காலங்களில் குளத்தின் நடுவில் ஊர் இருக்க யார் காரணம்?

ஆமாம், மேலே சொன்ன குறளில் வள்ளுவன் சொன்ன செல்வம் எது?  பணமா? இல்லை... பெரியோர்கள் சொன்ன 16 செல்வங்களா?

கேள்வியைக் கேட்டுவிட்டேன். கருத்துக்கள் உங்களிடமிருந்து,  நமக்காக....

- ம.கொ.சி.ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக