நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

26.6.11

தேசியம் காத்த தமிழர்


ம.பொ.சிவஞானம்

(பிறப்பு: ஜூன் 26)

தமிழகத்தில் தேசியத்திற்கு எதிராக மொழிவாரி பிரிவினைக் குரல்கள் எழுந்தபோது, அதே மொழிப் பற்றை ஆதாரமாகக் கொண்டே தேசிய ஒருமைப்பாட்டிற்குக் குரல் கொடுத்தவர் ம.பொ.சிவஞானம். தமிழகத்தின் தற்போதைய பல பகுதிகள் நிலைத்திருக்கக் காரணமான ம.பொ.சி, பாரதத்தின் அங்கமே தமிழகம் என்பதை தனது ஆணித்தரமான பேச்சாற்றலாலும்,  எழுத்துக்களாலும், இலக்கிய அறிவாலும் நிரூபித்தவர்.

சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில், பொன்னுசாமி கிராமணியார்- சிவகாமி அம்மாள் தம்பதியாருக்கு  மகவாக 1906, ஜூன் 26 ல் பிறந்தார் சிவஞானம். பிற்காலத்தில் மயிலாப்பூரில் வாழ்ந்தபோது, மயிலாப்பூர்   பொன்னுசாமி சிவஞானம் என்பதே சுருக்கமாக ம.பொ.சி. என்று அனைவராலும் அழைக்கப்பட்ட பிரபலமான பெயராயிற்று.

மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்த சிவஞானம், மூன்றாம் வகுப்போடு பள்ளிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிவந்தது. குலத் தொழிலான நெசவுத்  தொழிலில் குழந்தையாக இருந்தபோதே ஈடுபட்ட அவர், பிற்பாடு  அச்சுக்  கோர்க்கும் தொழில் ஈடுபட்டார். டாக்டர் பி.வரதராஜுலு நாயுடுவின் 'தமிழ்நாடு' பத்திரிகையில் தான் அவரது அச்சுப்பணி (1927-1934) துவங்கியது. அதுவே அவரது இலக்கிய தாகத்திற்கும்,  தேசிய  வேகத்திற்கும்  ஊற்றாக அமைந்தது.

31  வயதில் திருமணம் நடந்தது; ஒரு மகன், இரு மகள்கள் பிறந்த நிலையில்,  நாட்டு விடுதலைப் போரில்  சிவஞானமும் ஈர்க்கப்பட்டார். அவரது அரசியல் ஈடுபாடு காங்கிரசில் அவரைச் சேர்த்தது. மகாத்மா காந்தியின் ஹரிஜன முன்னேற்றப் பணிகளில் ம.பொ.சி. இணைந்தார். சென்னை ஹரிஜன சேவா சங்கத்தின் பிரசாரகராகவும் செயலாளராகவும் (1934) பணியாற்றிய ம.பொ.சி, சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் துணை செயலாளர் ஆனார் (1936). 1947 ல் அதன் செயலாளராக உயர்ந்தார். 1928  முதல் 1947  வரை, பல முறை விடுதலைப்போராட்டங்களில் பங்கேற்ற ம.பொ.சி, ஆறு முறை  சிறைவாசம் அனுபவித்தார்.

700  நாட்களுக்கு மேல் சிறையில் இருந்துள்ள ம.பொ.சி, தனது சிறைக்காலத்தை  தமிழின் முதல்பெரும் காப்பியமான சிலப்பதிகாரத்தைக் கற்பதில் செலவிட்டார். அந்த அனுபவமே 'சிலம்புச்செல்வர்' என்ற பட்டப்பெயர் கிடைக்கும் வகையில் அவரை உயர்த்தியது. இந்தப் பட்டத்தை  ம.பொ.சி.க்கு வழங்கியவர்  சொல்லின் செல்வர் ரா.பி.சேது பிள்ளை!  சிலப்பதிகாரத்தைக் கொண்டே,  தனித்தமிழ்நாடு கோரிய பிரிவினைவாதிகளை தனது அறிவுத்திறமான வாதத்தால் முடக்கியவர் ம.பொ.சி.

தேசிய இயக்கமான காங்கிரசில் இருந்தபோதும், தமிழகத்தின் உயர்வே ம.பொ.சி.க்கு நோக்கமாக இருந்தது. இது தனது மொழி மீதான பற்றின் காரணமாக விளைந்தது. அதன் காரணமாக 1946  ல் 'தமிழரசுக் கழகம்' என்ற அமைப்பை நிறுவினார். அதன் வாயிலாக, மொழியின் அடிப்படையில் தமிழகம் தனி மாநிலமாக வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினார். அப்போது தென் மாநிலங்கள் இணைந்து சென்னை மாகாணமாக  இருந்தது.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது எல்லைப் பிரச்னைகள் ஏற்பட்டன. அப்போது திருப்பதியை தமிழகத்தில் இணைக்கப் போராடிய ம.பொ.சி.க்கு வெற்றி கிடைக்கவில்லை; ஆயினும் திருத்தணி தமிழகத்தில் சேர அவரது போராட்டம் வழி வகுத்தது. திருப்பதி ஆந்திராவில் இணைந்தது. அதேபோல, குமரி மாவட்டம், பீர்மேடு, செங்கோட்டை, தேவிகுளம் பகுதிகள் கேரளாவில் சேராமல் தமிழகத்தில் இணைய பாடுபட்டார். கவிமணி தேசிக விநாயகம்  பிள்ளை, நேசமணி, டி.வி.ராம சுப்பையர், தாணுலிங்க நாடார் ஆகியோருடன் இணைந்து அதற்காக குரல் கொடுத்தார்.  இப்போராட்டத்தால் குமரி மாவட்டத்தையும் செங்கோட்டை பகுதிகளையும் மட்டுமே பெற முடிந்தது. ஆயினும் ம.பொ.சி.யின் போராட்டம் காரணமாக தமிழ் பேசும் பல பகுதிகள் தமிழகத்திற்கே கிடைத்தன.

தவிர, சென்னை நகருக்கு ஆந்திரா தலைவர்கள் உரிமை கொண்டாடிய போது,  'தலையைக்  கொடுத்தேனும் தலைநகரைக்  காப்போம்' என்று சென்னை மாநகராட்சியில் தீர்மானம் செய்யவைத்து, சென்னை தமிழக  தலைநகராகத்  தொடரக் காரணமானார்.  புதிய மாநிலத்திற்கு 'தமிழ்நாடு' என பெயர்சூட்ட வேண்டும் என்றும்  ம.பொ.சி. வலியுறுத்தி போராடினார். இந்தக் கோரிக்கை 1969 ல், தியாகி சங்கரலிங்கனாரின் உயிர்த்தியாகத்தால் நிறைவேறியது.

இடைக்காலத்தில் கட்சிக்குள் ஏற்பட்ட வேறுபாட்டால், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார் (1954) ம.பொ.சி. ஆயினும் தனது தமிழரசுக் கழகம் மூலமாக அரசியல் பணிகளைத் தொடர்ந்தார். அக்காலத்தில் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்திய திராவிடர் கழகம் உமிழ்ந்த வெறுப்பூட்டும் தேசவிரோத, சமயவிரோத பிரசாரங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

காங்கிரஸ் ஆட்சியை இழந்து  திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில், தேசிய ஒருமைப்பாட்டிற்கான ம.பொ.சி.யின் குரல் ஓங்கி ஒலித்தது. தனது வாழ்வின் இறுதிவரை, தமிழ் மொழி  தேசியத்தின் ஓர் அங்கமே என்று அவர் முழங்கி வந்தார். மாநிலங்கள் தேசிய உணர்வுடன் வலிமையாக தேசமாகப் பிணைந்திருக்க மாநில சுயஆட்சி வழங்கப்பட வேண்டும் என்று ம.பொ.சி. குரல் கொடுத்து வந்தார்.

சிறந்த மேடைப் பேச்சாளரான ம.பொ.சி. சிலப்பதிகாரம் குறித்து மணிக் கணக்கில் பேச வல்லவர். பேச்சாளராக மட்டுமல்லாது சிறந்த  எழுத்தாளராகவும்  அவர் விளங்கினார். தவிர தேர்ந்த பத்திரிகையாளராகவும் அவர் பணிபுரிந்திருக்கிறார். மாதமிருமுறை இதழான 'கிராமணி குலம்' (1934-1937),  தமிழக எழுத்தாளர் சங்கத்தின் மாத இதழான 'பாரதி' (1955-1956), 'தமிழ் முரசு' (1946-1951), 'தமிழன் குரல்' (1954-1955), வார இதழான 'செங்கோல்' (1950-1995) ஆகிய பத்திகைகளின் ஆசிரியராக திறம்பட இயங்கிய ம.பொ.சி, அவற்றில் எழுதிய கட்டுரைகள் ஒவ்வொன்றும் மதிப்பற்றவை.

அவரது எழுத்துகள்  பல நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. தவிர தனியே பல நூல்களையும் ம.பொ.சி. எழுதியுள்ளார். 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்ற அவரது நூல், சாஹித்ய அகாதமி விருது (1966) பெற்றது. வ.உ.சி,  கட்டபொம்மன்,  பாரதி,  சிங்காரவேலர்   போன்றவர்களது  வாழ்க்கை வரலாறுகளை   எழுதியுள்ள ம.பொ.சி,  'விடுதலைப்போரில் தமிழகம்' , 'விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு', 'எனது போராட்டம்' ஆகிய நூல்களின் வாயிலாக விடுதலைப்போரில் தமிழகத்தின் பங்களிப்பை அரிய ஆவணமாகப் பதிவு செய்தார். தனது வாழ்நாளில் 140 க்கு மேற்பட்ட நூல்களை ம.பொ.சி. எழுதினார்.

- இவ்வாறு இலக்கிய உலகிலும் எழுத்துலகிலும் முத்திரை பதித்த ம.பொ.சி,  கல்விப்பணிகளிலும் சமூகப் பணிகளிலும், தொழிலாளர் சங்கப் பணிகளிலும்  இடையறாத   ஆர்வத்துடன் ஈடுபட்டார். சென்னை, மதுரை, தஞ்சை, சிதம்பரம் பல்கலைக்கழகங்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்த ம.பொ.சி, நூலக ஆணைக்குழுவுக்கென தமிழகத்தில் தனித்துறை நிறுவவும் காரணமானார்.

இத்தனைக்கும் அவர் படித்தது மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே. தனது தொடர்ச்சியான இலக்கிய நாட்டத்தாலும், பட்டறிவாலும், தன்னைத் தானே பட்டை தீட்டிக்கொண்ட ம.பொ.சி, தனது அனுபவங்கள் எதிர்கால தலைமுறையும் பெற வேண்டியே அற்புதமான நூல்களை ஆக்கித் தந்துள்ளார். அவரது பல நூல்கள் பள்ளி, கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

தமிழிசையைப்  பரப்புவதிலும் ம.பொ.சி. முன்னின்றார்; 1982 -83 ல் மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழாவை விழாக்குழுத் தலைமையேற்று திறம்பட நடத்தினார். சென்னை மாநகராட்சியின் மாநகரத் தந்தை (1948-1955), சட்ட மேலவை உறுப்பினர் (1952-1954 மற்றும் 1978-1986), சட்டமன்ற உறுப்பினர் (1972-1978) ஆகிய பதவிகளில் மக்கள் பிரதிநிதியாகவும் ம.பொ.சி. விளங்கினார். தமிழக சட்ட மேலவையின் தலைவராக (1978-1986) ம.பொ.சி. இருந்த காலகட்டம், மேலவையின் பொன்னான காலம் என்று போற்றப்படுகிறது. 1986 ல் மேலவை அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ராமசந்திரனால் கலைக்கப்பட்டது.

தனது வாழ்வின் இறுதிக்காலகட்டத்தில், அரசியல்ரீதியாக துறவு மேற்கொண்ட ம.பொ.சி, 1995, அக்டோபர் 3 ல் மண்ணுலகை நீத்தார்.

பாரதத்தின் அடித்தள ஒற்றுமையில் தமிழின் பங்களிப்பையும் தமிழர்களின் ஒத்துழைப்பையும் பதிவு செய்ததே ம.பொ.சி.யின் மகத்தான சாதனை. தமிழும் தேசியமும் தனது இரு கண்கள் என்று வாழ்ந்து மறைந்த அன்னாரின் பிறந்த நாளான இன்று அவரது அமரத்துவமான வாழ்வை நினைவுகூர்வோம்.

- குழலேந்தி

காண்க:

சிலம்புச்செல்வர் ம.பொ.சி.

ம.பொ.சிவஞானம் (விக்கி)

MA.PO.SI

இலக்கியத்தின் எதிரிகள்- ம.பொ.சி. கட்டுரை (ஈகரை)

சென்னை மீட்ட வரலாறு - பரமேஸ்வரி

ம.பொ.சி.யின் ஈழம் குறித்த கருத்து (கூட்டாஞ்சோறு)

ம.பொ.சி.யின் நூல்கள் (கீற்று)

..
.பொ.சி. படைத்த நூல்கள்:
தன் வரலாறு
1. எனது போராட்டம் 1974
சிறுகதை
வைகுந்தம் பிறந்தது (சிறுகதைத் தொகுப்பு) - 1980
பயண நூல்கள்
1. மலேசியாவில் ஒரு மாதம் - 1965
2. மாஸ்கோவிலிருந்து லண்டன் வரை - 1972
3. மொரிசியஸ் தீவில் ஒரு வாரம் - 1987
4. அமெரிக்காவில் மூன்று வாரம் - 1987
வாழ்க்கை வரலாறுகள்
1. கப்பலோட்டிய தமிழன் - 1944
2. வீரபாண்டிய கட்டபொம்மன் - 1949
3. கயத்தாற்றில் கட்டபொம்மன் - 1950
4. தளபதி சிதம்பரனார் 1950
5. சுதந்திர வீரன் கட்டபொம்மன் - 1950
6. கப்பலோட்டிய சிதம்பரனார் (விரிவானபதிப்பு) - 1972
7. தோழர் சிங்காரவேலர் வீர வாழ்க்கை - 1985
8. நாடகப் பேராசிரியர் - சதாவதானி கிருஷ்ணசாமிப் பாவலர் வாழ்க்கை வரலாறு - 1988
9. முப்பெரும் ஞானியர் - 1989
வள்ளலார் பற்றிய நூல்கள்
1. வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு - 1963
2. வள்ளலாரும் பாரதியும் - 1965
3. வள்ளலார் வளர்த்த தமிழ் - 1966
4. வள்ளலார் வகுத்த வழி - 1970
5. வள்ளலார் கண்ட சாகாக் கலை - 1970
6. வானொலியில் வள்ளலார் - 1976
7. வள்ளலாரும் காந்தியடிகளும் - 1977
8. வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (பள்ளிப் பதிப்பு) - 1978
பாரதியார் பற்றிய நூல்கள்
1. எங்கள் கவி பாரதி - 1953
2. பாரதியாரும் ஆங்கிலமும் - 1961
3. பாரதி கண்ட ஒருமைப்பாடு - 1962
4. உலக மகாகவி பாரதி - 1966
5. பாரதியார் பாதையிலே - 1974
6. பாரதியார் போர்க்குரல் - 1979
7. பாரதியார் பற்றிய ம.பொ.சி. பேருரை - 1983
காந்தியடிகள் பற்றிய நூல்கள்
1. தமிழர் கண்ட காந்தி - 1949
2. காந்தியடிகளும் ஆங்கிலமும் - 1961
3. காந்தியடிகளும் சோசலிசமும் - 1971
4. மகாத்மாவும் மதுவிலக்கும் - 1979
5. காந்தியடிகளைச் சந்தித்தேன் - 1979
6. பயங்கரவாதமும் காந்திய சகாப்தமும் - 1994
திருவள்ளுவர் பற்றிய நூல்கள்
1. வள்ளுவர் வகுத்த வழி - 1952
2. திருவள்ளுவரும் கார்ல்மார்க்சும் - 1960
கம்பர் பற்றிய நூல்கள்
1. கம்பர் கவியின்பம் - 1966
2. கம்பரிடம் யான் கற்ற அரசியல் - 1979
3. கம்பரும் காந்தியடிகளும் - 1981
4. கம்பரின் சமயக் கொள்கை - 1983
சிலப்பதிகாரம் பற்றிய நூல்கள்
1. சிலப்பதிகாரமும் தமிழரும் - 1947
2. கண்ணகி வழிபாடு - 1950
3. இளங்கோவின் சிலம்பு - 1953
4. வீரக்கண்ணகி - 1958
5. நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் (உரை) - 1961
6. மாதவியின் மாண்பு - 1968
7. கோவலன் குற்றவாளியா? - 1971
8. சிலப்பதிகாரத் திறனாய்வு - 1973
9. சிலப்பதிகார யாத்திரை - 1977
10. சிலப்பதிகார ஆய்வுரை - 1979
11. சிலப்பதிகார உரையாசிரியர்கள் உரை - 1980
12. சிலப்பதிகாரத்தில் யாழும் இசையும் - 1990
13. சிலம்பில் ஈடுபட்டதெப்படி? - 1994
மாநில சுயாட்சிப் பிரசார நூல்கள்
1. தமிழகத்தில் தமிழரசு - 1946
2. தமிழருக்குச் சுயநிர்ணயம் -1946
3. புதிய தமிழகம் - 1946
4. தமிழரும் பிரிட்டிஷ் திட்டமும் - 1946
5. தமிழரசுக் கழக முதலாவது மாநில மாநாட்டுத் தலைமையுரை - 1947
6. தமிழன் குரல் - 1947
7. சுயாட்சித் தமிழகம் - 1949
8. பிரிவினை வரலாறு - 1950
9. திராவிடத்தாரின் திருவிளையாடல்கள் - 1950
10. திராவிடர் கழகமே, வேங்கடத்திற்கு வெளியே போ - 1951
11. தமிழரசா திராவிடஸ்தானா? - 1952
12. தமிழரசுக் கழக இரண்டாவது மாநில மாநாட்டுத் தலைமை உரை - 1952
13. வடக்கெல்லைப் போர் - 1953
14. முரசு முழங்குகிறது - 1955
15. தி.மு.க.வின் கொள்கை மாற்றம் - 1957
16. சுயாட்சியா, பிரிவினையா? - 1959
17. மொழிச் சிக்கலும் மாநில சுயாட்சியும் - 1968
18. மாநில சுயாட்சிக் கிளர்ச்சியின் வரலாறு - 1973
19. சட்ட மன்றத்தில் சுயாட்சிக் குரல் - 1974
20. புதிய தமிழகம் படைத்த வரலாறு - 1986
மொழிச் சிந்தனைகள் பற்றிய நூல்கள்
1. தமிழும் கலப்படமும் - 1960
2. தமிழா? ஆங்கிலமா? - 1961
3. இன்பத் தமிழா? இந்தி - ஆங்கிலமா? -1963
4. ஆங்கில ஆதிக்க எதிர்ப்பு வரலாறு - 1964
5. தமிழை வளர்க்கக் கோரி ஆளுநர்க்கு விண்ணப்பம் - 1976
6. நாடகத் தமிழ் - 1976
7. கல்வி மொழி தமிழா? ஆங்கிலமா? (ம.இரா. இளங்கோவன் தொகுத்தது) - 1981
8. சென்னை பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாப் பேருரை - 1981
9. ஆங்கிலம் வளர்த்த மூட நம்பிக்கை - 1982
10. தமிழும் சமஸ்கிருதமும் - 1984
11. ஆங்கில ஆதிக்கம் அகல பத்துக் கட்டளைகள் –
விடுதலைப் போராட்டம் பற்றிய நூல்கள்
1. சுதந்திரப் போரில் தமிழகம் - 1948
2. முதல் முழக்கம் - 1968
3. விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு - 1970
4. காந்தியடிகளுக்கு முற்பட்ட காலத்தில் விடுதலைப் போர் - 1974
5. வந்தேமாதரம் வரலாறு - 1977
6. விடுதலைக்குப் பின் தமிழ் வளர்ந்த வரலாறு - 1978
7. சுதந்திரப் போர்க்களம் - 1980
8. விடுதலைப் போரில் தமிழகம் (2 தொகுதிகள்) - 1982
9. இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது - 1986
10. வேதாரணியத்திலிருந்து டில்லி ராஜ்காட்வரை - 1988
இனவழி ஆராய்ச்சி நூல்கள்
1. கலிங்கத்துப் பரணி திறனாய்வு - 1975
2. தமிழகத்தில் பிறமொழியினர் - 1976
3. இலக்கியங்களில் இன வளர்ச்சி - 1978
4. வில்லிபாரதத்தில் தமிழுணர்ச்சி - 1981
5. இலக்கியங்களில் இனவுணர்ச்சி - 1985
பேச்சுக்கலை பற்றிய நூல்கள்
1. பேச்சுக்கலை - 1950
2. மேடைப் பேச்சும் பொதுக்கூட்டமும் - 1951
கட்டுரை நூல்கள்
1. ஏன் வேண்டும் எதிரணி - 1946
2. ஆத்திரப் பொங்கல் - 1947
3. கம்யூனிஸ்டுகள் முடிவை மாற்ற முயல்வார்களா? - 1947
4. வானொலியில் ம.பொ.சி. - 1947
5. மே தினப்புரட்சி - 1949
6. சீர்திருத்தப் போலிகள் - 1950
7. தமிழர் திருநாள் - 1951
8. இலக்கியத்தின் எதிரிகள் - 1953
9. இலக்கியச் செல்வம் - 1955
10. ம.பொ.சி. கூறுகிறார் - 1955
11. பொம்மன் புகழிலும் போட்டியா? - 1956
12. கட்டுரைக் களஞ்சியம் - 1956
13. இன்பத்தமிழகம் - 1956
14. ம.பொ.சி. பேசுகிறார் (பர்மா சொற்பொழிவு) - 1956
15. சிந்தனை அலைகள் - 1964
16. இலக்கியத்தில் சோசலிசம் - 1965
17. தமிழிசை வரலாறு - 1966
18. ஒளவை - யார்? - 1967
19. சான்றோரின் சாதனைகள் - 1970
20. ஆன்ம நேய ஒருமைப்பாடு - 1970
21. திருக்குறளில் கலைபற்றிக் கூறாததேன்? - 1974
22. தமிழிசை வாழ்க - 1978
23. கல்வி நெறிக் காவலர் (திரு.நெ.து. சுந்தர வடிவேலு மணிவிழாச் சொற்பொழிவு) -1974
24. தொல்காப்பியரிலிருந்து பாரதியார் வரை - 1979
25. ஆன்மீகமும் அரசியலும் - 1980
26. நவபாரதத்தை நோக்கி - 1982
27. சிலம்புச் செல்வரின் பல்கலைப் பேருரை -1984
28. இலக்கியங்களில் புத்திர சோகம் - 1986
29. நானறிந்த ராஜாஜி - 1987
30. இராமன் சீதாபிராட்டி வாக்குவாதம் - 1989
31. எனது பார்வையில் நாமக்கல் கவிஞர் - 1989
32. நேருஜி என் ஆசான் - 1989
33. தமிழர் திருமணம் - 1990
34. எனது பார்வையில் பாவேந்தர் - 1991
35. ஈழத் தமிழரும் நானும் - 1992
36. எம்.ஜி.ஆருடன் எனக்கிருந்த தொடர்பு - 1995
37. எழுத்துச் சீர்திருத்தம் - 1995
பதிப்பித்த நூல்
1. ஒளவையார் அருளிச்செய்த கல்வியொழுக்கம்  மூலமும் திரு.ஜே.எஸ். அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பும் - 1980

1 கருத்து:

தமிழச்சி சொன்னது…

வணக்கம்.
பயனுள்ள வலை தளம். வாழ்த்துகள்!
தங்களை இணையத்தில் தொடர்வது எப்படி?

அன்புடன்,
சு.சிவலிங்கம்

கருத்துரையிடுக