நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

16.4.14

தேர்தலில் செலுத்தப்படும் வாக்கு... தேசத்திற்கான மாற்று!






தேசிய சிந்தனைக் கழகத்தின்
மக்களவைத் தேர்தல் வேண்டுகோள்

***


ரும் தேர்தல் நம் முன்னே  ஒரு மாபெரும் சவாலை  வைத்திருக்கிறது. அது என்ன?
புதிதாக வாக்குகளைப் பதிவு செய்யப் போகும் இளைய தலைமுறையினருக்கு நாம் சொல்லப் போகும் செய்தியும் வழிகாட்டுதலும் தான்  அவை !
வாழ்க்கையில் சாதிக்கவும்,  வெற்றி பெறவும்  துடிக்கும் இளைஞர்களுக்கு  எத்தகைய பாதையை,  களத்தை  நாம்  நம் வாக்கின் மூலம் அமைக்கப் போகிறோம்?  
கல்வியில்,  பொருளாதாரத்தில், அறிவியலில், ஆட்சியில், பல்வேறு துறைகளில் தங்களது சாதனைகளைப்  படைக்க  நம்பிக்கையுடன்  போராடும் இளைய தலைமுறையினருக்கு நாம்  நம்பிக்கையூட்டும் ஆட்சியைத் தானே தர வேண்டும்?
ஆம், அதற்கான  அருமையான வாய்ப்பே இப்போது நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 16-வது மக்களவைத் தேர்தல்.
இனிவரும் காலம்  இந்தியர்களின்  கைகளில். தேசிய சிந்தனைக் கழகம் இந்தச் சவாலைச்  சந்திக்க உங்களை அன்புடன் அழைக்கிறது.
இதுதொடர்பாக உங்களுடன் ஓர் உளமார்ந்த பகிர்வு இது...

         * * * 

நமது நாட்டின் சிறப்பு:

ல்லாயிரம் ஆண்டுகாலப் பாரம்பரியம் கொண்டது நமது நாடு. இன்று உலகின் வல்லரசுகளாகக் கருதப்படும் நாடுகள் உருவாகாத காலகட்டத்திலேயே, உலகின் நாகரிகத் தொட்டிலாக விளங்கியது பாரதம். 19-ஆம் நூற்றாண்டுத் துவக்கம் வரையிலும் உலகப் பொருளாதாரத்தின் மைய விசையாக இருந்தது பாரதம் தான் என்கின்றனர் மேலை அறிஞர்கள். 

நமது நாட்டின் பழமைக்கு உதாரணங்களாக இதிகாசங்களான ராமாயணமும் மகாபாரதமும் விளங்குகின்றன. மிகத் தொன்மையான இலக்கியங்களாக நமது நாட்டின் வேதங்களும் உபநிடதங்களும் மதிக்கப்படுகின்றன. இவற்றின் காலம் சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கருதப்படுகிறது. 

தமிழகத்தின் தொன்மையான நூல்களாக ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியமும் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் விளங்குகின்றன. தமிழில் உருவான திருக்குறளும், சமஸ்கிருதத்தில் உருவான அர்த்தசாஸ்திரமும் நமது சமூக அறக் கோட்பாடுகளை வெளிப்படுத்துகின்றன. 

பௌத்தம், சமணம், சீக்கியம் ஆகிய மதங்கள் உருவான கழனி பாரதம். நாட்டின் தொன்மையான வழிபாட்டுமுறைகள் ஒருங்கிணைந்த இந்துமதம், சகிப்புத் தன்மையை உலகிற்கு போதிக்கும் மதமாகத் திகழ்கிறது. உலகில் தோன்றிய அனைத்து சமயங்களைச் சார்ந்தவர்களும் வாழும் நாடாகவும் ஒளிர்வது நமது தேசம். 

உடலையும் மனதையும் ஒருங்குவிக்கும் யோகக்கலை, ஆன்மநேயத்தை உருவாக்கும் தியானம், ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் பின்விளைவுகளற்ற ஆயுர்வேத, சித்த மருத்துவ முறைகள், ஏழு சுரங்களில் இசையைக் கட்டுக்குள் கொண்டுவந்த மேன்மை, பாரம்பரியச் சிறப்புமிகு பரத நாட்டியம், குச்சிப்புடி, கதகளி உள்ளிட்ட நடன வகைகள், அறுசுவைகளில் உணவையே மருந்தாகக் கொண்ட நேர்த்தி, வாழ்வை ரசிப்பதற்கு இலக்கணமான விதவிதமான உணவு, ஆடை வகைகள், சிற்பங்களின் தொகுப்பான ஆயிரக் கணக்கான பெருங்கோவில்கள்,... 

எதனைச் சொல்வது? எதனை விடுவது?

நமது தாய்நாட்டின் சிறப்புகளை நினைக்குந்தோறும் பெருமிதம் மிகுகிறது.  ‘செப்புமொழி பதினெட்டுடையாள்என்று மகாகவி பாரதியால் பாடப்பட்ட இங்கு, பலமொழிகள் பேசும் மக்கள் கூட்டம் எல்லா மாநிலங்களிலும் கலந்து பரவி இருக்கிறது. பல்வேறு இனமக்கள், பலவித பழக்கவழக்கங்கள், நில அமைப்பிலும் தட்பவெப்பத்திலும் பலவாறாக மாறுபட்ட தன்மை என, இந்தியா ஒரு மாபெரும் மானுட நாற்றங்காலாகவே தரிசனம் தருகிறது.

இவற்றையெல்லாம் இங்கு இப்போது கூற வேண்டிய தேவை என்ன? 

இந்தக் கேள்விக்கு பதில், நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 16-ஆவது மக்களவைத் தேர்தல் தான். 

மக்களாட்சி முறையில் முதலிடம்:

நமது நாட்டின் மொத்த மக்கள்தொகை தற்போது 130 கோடியை நெருங்கிவிட்டது. மக்கள்வளத்தில் உலகிலேயே இரண்டாவது இடம் வகிக்கும் நாம் தான் இந்த ஜனநாயக யுகத்தில் மாபெரும் மக்களாட்சி அரசாகச் செயல்படுகிறோம் என்பது உங்களுக்கு தெரியுமா?

உலகின் வல்லரசான அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளில் நடத்தப்படும் தேர்தலுடன் ஒப்பிட்டால், நமது தேர்தல் பல மடங்கு பெரியது. சீனா வல்லரசாக இருந்தாலும் அங்கு மக்களாட்சி நிலவவில்லை. பல ஐரோப்பிய நாட்டுகளின் தேசிய அளவிலான தேர்தலை, நமது பல மாநிலங்களில் நடத்தப்படும் சட்டசபைத் தேர்தலுடன் கூட ஒப்பிட முடியாது. 

ஆனால், நமது நாட்டில் 81.45 கோடி மக்கள் வாக்களிக்கும் மாபெரும் மக்களவைத் தேர்தல், ஐந்தாண்டு இடைவெளியில் ஆர்ப்பாட்டமின்றி நடத்தப்பட்டு அரசியல் மாற்றங்கள் இங்கு இயல்பாக நிகழ்த்தப்படுகின்றன. இந்தியாவுடன் சுதந்திரம் பெற்ற பல நாடுகளிலும் அரசியல்நிலை மோசமாக மாறியுள்ளபோது, இந்தியா மட்டும் ஒவ்வொரு தேர்தலிலும் தனது ஜனநாயகத்தை மேம்படுத்தி வருகிறது. 

நமது மக்களாட்சி முறையில் குறைகள் இல்லாமல் இல்லை. ஆனால், உலகு தழுவிய அளவில் எந்த அராஜகமும் இன்றி ஆட்சி மாற்றம் நிகழ வாய்ப்புள்ள மாபெரும் ஜனநாயக நாடாக இந்தியா மட்டுமே உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பலகோடி மக்கள் உள்ள நாட்டில் அவர்களது விருப்பங்களும் தேர்வுகளும் பலவிதமாகவே இருக்கும். அவற்றில் இணக்கம் கண்டு அமைவதே தேசிய மைய அரசாக இருக்க முடியும். இங்கு மட்டுமே சமூகத்தின் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள ஒருவரும் கூட விரும்பினால் அதிகார மைய அரசியலுக்கு வர முடியும். 

மக்கள் குழுக்கள் தங்கள் பிரதிநிதித்துவத்தால் தங்களுக்குத் தேவையான சட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளவும், நடைமுறையில் திருத்தங்கள் செய்யவும் மக்களாட்சி முறை வழிவகுக்கிறது. இதனை உலக அளவில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வரும் நாடு பாரதமே என்று நிச்சயமாகச் சொல்ல முடியும்.

கூட்டாட்சியும், குடிமகனும்:

நமது நாட்டின் ஆட்சி நிர்வாக முறை, மத்திய அரசு, மாநில அரசுகள், உள்ளாட்சி நிவாகங்கள் என மூன்றடுக்கு முறையைக் கொண்டது. இத்தகைய அற்புதமான தேர்தல் அமைப்பு முறை வேறெந்த நாட்டிலும் கிடையாது. 

நாட்டின் சிறு அலகான கிராமத்தில் வாழும் மக்களை நிர்வகிக்க, உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. மாநில அளவிலான நிர்வாகத்திற்கு சட்டசபைத் தேர்தல்களும், மத்திய அளவிலான தேசிய நிர்வாகத்திற்கு மக்களவைத் தேர்தலும் நடத்தப்படுகின்றன. 

மக்களாட்சி முறையில் மக்களே எஜமானர்கள். மக்களுக்காக, மக்களே மக்களை ஆள்வது தான் ஜனநாயகம். இதனை நாட்டின் சிறுமூலையிலிருந்து நாட்டின் மையம் வரை ஒரே சீராக கொண்டுசேர்த்திருப்பதே, நமது சுதந்திரம் நமக்களித்த சிறப்புகளில் பெரியது எனலாம்.

அதேசமயம், மக்களாட்சி முறைக்கே உரித்தான முக்கிய குறைபாடான ஊழலால் நமது நாடு தத்தளிக்கிறது. மக்கள் நல்ல ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்தால், ஊழல் நிகழாமல், வளர்ச்சி பெருகும். மாறாக, பல்வேறு பிராந்திய, மத, மொழி அடிப்படையிலான சுயநலக் கண்ணோட்டத்துடன் வாக்காளர்களின் வாக்குகள் திசைதிருப்பப்படும்போது, இம்மாதிரியான தவறான விளைவுகளும் ஏற்படுகின்றன.

ஊழல், குடிமகனின் வாழ்வில் அனைத்து நிலையிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. நல்லாட்சிக்கு ஊறு விளைவிக்கும் ஊழலால், நமது பாதுகாப்புத் துறை தடுமாறுகிறது;  விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமல் செய்கிறது; பதுக்கல் பேர்வழிகளை ஊக்குவித்து விலைவாசியை உயர்த்த வழிவகுக்கிறது; நாட்டில் சமச்சீரான வளர்ச்சி குன்றி பொருளாதார வீக்கமும் வர்க்க வேறுபாடுகளும் ஏற்படுகின்றன.

சமச்சீரற்ற வளர்சி காரணமாக, பிரிவினைக் கோரிக்கைகள், மத தீவிரவாதம், நக்சலிஸ ஆபத்துக்களை நாம் எதிர்கொண்டு வருகிறோம். தவிர எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் நாடு தவிக்கிறது. ஆதிக்க உணர்வுள்ள சில அண்டைநாடுகள் நம் நாட்டில் நிகழ்த்தும் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தும் துணிவின்றி அரசு வேடிக்கை பார்க்கிறது.

இதற்கெல்லாம் தீர்வு என்ன?

முற்காலத்தில் மன்னராட்சிக் காலகட்டத்தில், மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி (யதா ராஜா ததா பிரஜா) என்று கூறப்பட்டது. இப்போது ஜனநாயக யுகத்தில் இதுவே, மக்கள் எவ்வழியோ மன்னன் அவ்வழி என்று அதிகாரம் திசை திரும்பி இருக்கிறது. 

அதாவது, இந்த நாட்டின் அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது. மக்கள் நல்ல தேர்வைச் செய்தால் நல்லரசு அமையும். மக்கள் தேர்வு தவறானால், மக்கள் பிரதிநிதியும் மோசமானவராகவே இருப்பார். இதை நன்குணர்ந்த குடிமகனே மக்களாட்சி முறையின் நாயகன்.

நமது நாடு எத்தனையோ பாரம்பரியச் சிறப்புகளைப் பெற்றிருந்தும், நமது ஜனநாயகம் உலகிலேயே மிகப் பெரியது என்ற பெருமை பெற்றிருந்தும், ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடுகளால் மக்களாட்சி முறை மீது விரக்தி ஏற்படுகிறது. இது இயற்கையே. 

ஆனால், இதற்கு காரணம் குடிமக்களான நாமே தான் என்பதை நம்மில் எத்தனை நம்மில் பேர் உணர்ந்துள்ளோம்?

கடந்த சில ஆண்டுகளில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஊழல்கள் வெளியாகி மக்களை நிலைகுலையச் செய்திருக்கின்றன. விலைவாசியின் ஏறுமுகத்தால் சாமானிய மனிதன் வாழ்வதே கேள்விக்குறியாகிவிட்டது. கலாச்சாரச் சீர்கேடுகளால் சமூக அமைதியின்மையும் பாதுகாப்பின்மையும் அதிகரித்து, நாட்டில் குழப்பம் பெருகி வருகிறது. இவை நம்மைப் பீடிக்கும் நோய்கள். 

நல்ல மண்ணில் தான் நற்பயிர் விளையும். வயல் முழுவதும் முள்ளும் களையும் பரவிக் கிடந்தால் அங்கு விளைச்சல் எங்ஙனம் கிடைக்கும்? இதுதான் நமது ஜனநாயகத்தின் நோய்க்குக் காரணம். ஜனநாயக வயலின் நோயைத் தீர்ப்பது எங்ஙனம்?

இதனைத் தீர்க்கும் மருந்தும் நம்மிடம் தான் உள்ளது. அதுவே நமது வாக்குரிமை.

வாக்குரிமை என்ற மந்திரம்:

குடிமகனே நாட்டின் ஆதாரம். அவனது ஒற்றை வாக்குரிமையால் என்ன சாதனை நிகழ்ந்துவிடும்? என்ற கேள்வி எழலாம். குடிமக்கள் சேர்ந்து தேசம் ஆவது போலவே, குடிமக்களின் வாக்குகள் இணைந்து மாபெரும் ஆற்றலாக வெளிப்பட்டு, தனது பிரதிநிதிகளைத் தேர்வு செய்யும். 

ஆகவே, நமது நாட்டின் பழமையான சிறப்பில் பெருமிதம் கொள்ளும் நாம், தற்போதைய தார்மிக வீழ்ச்சியால் வருத்தமுறும் நாம், இதனை எதிர்கால சந்ததியினருக்கு சீர்திருத்திக் கொடுத்தாக வேண்டிய கடமையில் உள்ளோம் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

நமது முன்னோர் திருத்தியமைத்த பாதையில் எளிதாகப் பயணிக்கிறோம். அவர்கள் பாடுபட்டுப் பெற்றுத் தந்த சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோம். இந்த சுதந்திரத்தையும் வளர்ச்சியையும் நமது சந்ததியினரிடம் பத்திரமாக ஒப்படைத்துச் செல்வது நமது கடமை அல்லவா?

ஆகவே, தான் வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. வாய்ப்புகள் வரும்போது சோம்பித் தூங்கிவிட்டு, பிறகு துயிலெழுந்து புலம்பிப் பயனில்லை. மக்களாட்சி முறையில் ஒவ்வொருமுறை நடத்தப்படும் தேர்தலும் மாற்றத்திற்கான அறைகூவலே.

ஆகவே, இந்த நாட்டை மறுமலர்ச்சி காணச் செய்ய விரும்பும் எவரும், வாக்குரிமையின் சிறப்பை அனைவர் மனதிலும் பதியச் செய்ய வேண்டும்; நமது வாக்குரிமையை நூறு சதவிகிதம் பயன்படுத்தி, முழுமையான மாற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும். இந்த நாட்டின் மீட்சி, ஒவ்வொரு குடிமகனும் தவறாது வாக்களிக்கும்போது தான் சாத்தியமாகும்.

நமது புனிதக் கடமை:

எனவே, வரும் ஏப்ரல் 24-ல் தமிழகத்தில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் அனைத்துப் பகுதிகளிலும் நூறு சதவிகித வாக்குப்பதிவை உறுதிப்படுத்த முயற்சிப்போம்! 

அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை இழந்தவர்களுக்காக இம்முறை ‘நோட்டாஎன்ற பொத்தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் எந்த வேட்பாளரும் பிடிக்காவிட்டால், வாக்காளர் இதனைத் தேர்வு செய்யலாம். 

‘நோட்டாவுக்கு விழும் வாக்குகள் நமது ஜனநாயக நடைமுறை மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கான ஒரு எச்சரிக்கை வடிகால். இதுவும் நமது மக்களாட்சி முறையைச் சீர்திருத்த உதவும் ஒரு கருவியே.

“வாக்குரிமை ஒரு புனிதமான கடமை. அது நாம் நாட்டுக்கு செலுத்த வேண்டிய ஒரு முக்கியமான பொறுப்பும் கூட. எனவே, வாக்குரிமையைப் பயன்படுத்துவது என்பது நீங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டிய செயலாக இருக்க வேண்டும். நீங்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்’’ என்கிறார் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.

நாட்டின் தென்கோடியில் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்த அவர், தனக்கு நாடு அளித்த அனைத்து வாய்ப்புகளையும் நேரிய முறையில் பயன்படுத்திக் கொண்டதால் நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்தார். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்பவனே புத்திசாலி. நமது நாட்டைச் சீரமைக்க விரும்பும் எவருக்கும் கிடைத்துள்ள அரிய வாய்ப்பு இந்தத் தேர்தல்.

ஆகவே, விரக்தியில் வாக்களிக்காமல் தவிர்ப்பதைவிட, உறுதியுடன் வாக்களிப்பது மேலானது என்பதை உணர்வோம். இதனை நம்மைச் சுற்றியுள்ள அனைவரிடமும் பரப்புவோம். அதன்மூலமாக நூறு சதவிகித வாக்குப் பதிவை உறுதிப்படுத்துவோம்!

நமது பிரதிநிதியாக மக்களவையில் இயங்க உள்ள வேட்பாளர் யாராக இருக்க வேண்டும் என்பதையும், அவர்தம் தகுதியையும், தனிப்பட்ட வாழ்வில் ஒழுக்கம், நேர்மை, வாக்குறுதிகள், அவர் சார்ந்த அரசியல் கட்சியின் நிலைப்பாடுகள் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் சீர்தூக்கிப் பார்த்து ஆராய்ந்து முடிவெடுப்போம்! வாக்குகளை விலைபேசும் எத்தர்களையும் புறக்கணிப்போம்! 

இது நமது நாடு; இந்த நாட்டை நமது வாக்குரிமையால் நாமே ஆள்கிறோம் என்ற பெருமிதத்துடன், நாட்டை ஆளத் தகுதியான நல்லோரைத் தேர்வு செய்வோம்! 

நம்மை ஆளுபவர்கள் அல்லது  நாம் தேர்ந்தெடுக்கும்  பிரதிநிதிகள்  தகுதியும் திறமையும் உடையவர்களாக  மட்டுமல்லாமல் ஆளுமைத்திறனும் அதிகாரத்திற்கும் பொருளுக்கும் ஆசைப்படாதவர்களாகவும், விலைக்கு வாங்கப்பட முடியாத  வைராக்கியம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் 
.
நம் பண்பாட்டின் மீதும், தான்  வரித்துக்கொண்ட லட்சியத்தின் மீதும்  அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களாகவும் நமது பிரதிநிதிகள் இருத்தல் அவசியம் இதனையும் கருத்தில் கொள்வோம்! 

தேர்தல் என்பது ஜனநாயகத்தின் திருவிழா. இவ்விழாவில் தான் நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. நாடு என்பது நாமே என்பதால், நமது எதிர்காலம் இப்போது நம் கையில் தான் உள்ளது. எனவே, வரும் தேர்தலில், நாட்டின் எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் நல்லோரை நாயகராகத் தேர்ந்தெடுப்போம்! 

வாக்குச்சாவடிக்குச் செல்லும் பாதையும் புனிதப்பயணம் போன்றதே. 

வாக்களிப்பதென்பது நமது புனிதக் கடமை. 

நமது வாக்கை நல்லவர்களுக்கு அளிக்கும்போது நாடு உயரும். நமது சிறப்புகளும் அப்போது தான் மிளிரும்!
பாரத அன்னை வெல்க!

-கவிஞர் குழலேந்தி
 
* * * * * * * * * * * * * 

தொடர்புக்கு:

ம.கொ.சி.ராஜேந்திரன்,
மாநில அமைப்பாளர்,
தேசிய சிந்தனைக் கழகம்,
1, சக்தி, எம்.வி. தெரு,
பஞ்சவடி, சேத்துப்பட்டு,
சென்னை- 600 031.

அலைபேசி: 90031 40968
மின்னஞ்சல்: makochirajendran@gmail.com, kuzhalendhi@gmail.com



வாக்களிப்பது நம் உரிமை!

 மாற்றம் காண்பது நம் கடமை!

13.4.14

புத்தாண்டு கணக்கீட்டில் வானியல் கண்ணோட்டம்




தினமணியில் வெளியான பத்திரிகையாளர் வ.மு.முரளியின் கட்டுரை, தமிழ்ப் புத்தாணடை ஒட்டி இங்கு மீள்பிரசுரம் செய்யப்படுகிறது.

***

உலகம் முழுவதிலுமே புத்தாண்டுக் கொண்டாட்டங்களை அனுசரிப்பது வழக்கமாக உள்ளது. இதில் பலவித காலக் கணக்கீடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக காலனி ஆதிக்கம் மூலமாக உலகம் முழுவதும் பரவலான ரோமானிய காலண்டர் முறை பொதுவான காலமுறையாகக் கருதப்படுகிறது.

இதற்கு மாறாக, இயற்கையோடு இயைந்ததாக இந்து காலக் கணக்கீடு முறை காணப்படுகிறது. பெரும்பாலான ஆசிய நாடுகளில் இதன் தாக்கம் உள்ளது. தவிர, இந்தியாவின் வானியல் கோட்பாடுகளே, கிழமைகள், மாதங்களை உலகம் முழுவதும் பரவலாக்கின என்பதை மேலைநாட்டு அறிஞர்களே ஒப்புக்கொள்கின்றனர்.

இந்தியாவில் தான் காலத்தின் மிகச் சிறிய கூறான  ‘மாத்திரை’ முதற்கொண்டு, மிகப் பெரும் அளவான  ‘கல்பம்’ வரை கணக்கிடப்பட்டு முறைப்படுத்தப்பட்டுள்ளன. நாம் வாழும் உலகம் மாபெரும் பிரபஞ்சத்தின் சிறிய அலகே என்பது நமது முன்னோரின் நம்பிக்கை. காலவெள்ளத்தில் பல்வேறு யுகங்கள், மன்வந்திரங்களைக் கடந்து பிரபஞ்சம் உயிர்த்திருக்கிறது.

இவ்வாறிருக்கையில் ஓராண்டின் துவக்கம் இதுதான் என்று எதன் அடிப்படையில் கூறுவது? மாபெரும் காலச்சுழலில் சிறு அலகான ஆண்டை எப்படிக் கணக்கிடுவது? இதில் தான் நமது முன்னோரின் கணித ஞானமும் வானியல் அறிவும் நம்மை வியக்கச் செய்கின்றன.

தலைமுறைகள் தாண்டி வாழும் மனிதன், தான் வாழும் உலகில் நியதிகளை உருவாக்கத் துவங்கியபோது முதலில் கவனத்தில் கொண்டது காலக் கணக்கீடே. ஏனெனில் பருவச் சுழற்சியே வாழ்வின் ஆதாரமாக இருப்பதால், அதனை பக்குவமாகப் பயன்படுத்த காலக் கணக்கீடு தேவையானது. அதற்காக உருவாக்கப்பட்டதே, பாரதத்தின் பாரம்பரிய ஞானக் கருவூலமான பஞ்சாங்கம்.

இப்பூவுலகின் அடிப்படை சூரியனே என்பதில் நமது முன்னோருக்கு தெளிவான பார்வை இருந்தது. எனவே தான் தமிழின் முதன்மைக் காப்பியமான சிலப்பதிகாரம் 'ஞாயிறு போற்றுதும்’ என்று துவங்கியது. நமது வாரத் துவக்கம் ஞாயிற்றுக் கிழமையாக அமைந்ததும் தற்செயல் அல்ல.

ஆகவே, சூரியனின் பயணத்தை பூமியின் தளத்தில் இருந்தபடி கிரகித்து, வான மண்டலத்தை தலா 30 பாகைகள் கொண்ட 12 ராசிகளாக நமது முன்னோர் பிரித்தனர். சூரிய மண்டலத்திலுள்ள பிற கோள்களின் இயக்கத்தையும் இந்த அடிப்படையில் தான் அவர்கள் கணக்கிட்டனர்.

இந்த ராசி மண்டலம், பூமியிலிருந்து பார்க்கும்போது வானில் தென்படும் விண்மீன்களின் தொகுப்புகளின் வடிவங்களின் அடிப்படையில் பெயரிடப்பட்டது. உதாரணமாக, ஆட்டின் தலை வடிவில் உள்ள விண்மீன் கூட்டத் தொகுப்பு மேஷம் (ஆடு) எனப்பட்டது. இதுவே ரோம காலக்கணிதத்தில் “ஏரிஸ்’ எனப்படுகிறது. இதுபோலவே, ரிஷபம் (எருமைத்தலை), மிதுனம் (இரட்டையர்), கடகம் (நண்டு), சிம்மம் (சிங்கத் தலை), கன்னி (பெண்), துலாம் (தராசு), விருச்சிகம் (தேள்), தனுசு (வில்), மகரம் (முதலை), கும்பம் (பானை), மீனம் (மீன்) ஆகிய ராசிகள் உருவாக்கப்பட்டன.

பூமி சூரியனைச் சுற்றிவர ஆகும் கால அளவு தோராயமாக 365.25 நாட்கள். இதனை எந்த நவீனக் கருவியும் இல்லாத 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே நமது முன்னோர் துல்லியமாகக் கணித்துள்ளனர். இதையே ஓர் ஆண்டு என்று குறிப்பிட்டனர். வான மண்டலத்தில் கற்பனையாகப் பகுக்கப்பட்ட 12 ராசிகளில் ஒவ்வொரு ராசியிலும் சூரியன் கடந்து செல்லும் கால அளவை 12 மாதங்களாகப் பகுத்தனர்.

இந்தக் கணக்கீடுகள் அனைத்தும் 'சூரியமானம்’ என்ற முறையில் அமைந்தவை. பிற்காலத்தில் இம்மாதங்களுக்கு சித்திரை முதலாய் பங்குனி வரையிலான பெயர்கள் சூட்டப்பட்டன. அதற்கு  ‘சந்திரமானம்’ என்ற மற்றொரு முறை காரணமானது.

வானிலுள்ள நட்சத்திரத் தொகுப்புகளை 27 ஆகப் பகுப்பது வானியல் மரபு. அஸ்வினி முதலாக ரேவதி வரையிலான 27 நட்சத்திரக் கூட்டங்களே 12 ராசிகளாகவும் பிரிக்கப்பட்டன. தவிர, பூமியின் துணைக் கோளான சந்திரனும் பூமியின் இயக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதை நமது முன்னோர் அறிந்திருந்தனர். சந்திரன் பூமியைச் சுற்றிவர 30 நாட்கள் ஆகின்றன. இதில் சந்திரனின் தேய்பிறை நாட்கள் 15; வளர்பிறை நாட்கள் 15. இவையே திதிகள் எனப்படுகின்றன.

ஒவ்வொரு மாதமும் சந்திரன் முழுமையாக மறையும் அமாவாசையும், முழுமையாக வெளிப்படும் பெüர்ணமியும் ஒருமுறை வருகின்றன. இதில் பெüர்ணமி எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரிலேயே மாதங்களுக்கு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. சித்திரை நட்சத்திரத்தில் பெüர்ணமி வரும் மாதமே சித்திரை மாதமாகியது. விசாக நட்சத்திரத்தில் பெüர்ணமி வரும் மாதமே வைகாசி ஆகியது. இவ்வாறே 12 மாதங்களும் பெயர் பெற்றன.

பூமி சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றுவதையும் நமது முன்னோர் கணித்துள்ளனர். அதன் காரணமாக, ஒவ்வொரு ராசியிலும் சூரியன் இருக்கும் காலம் மாறுபட்டு, மாதங்களின் மொத்த நாட்களை நிர்ணயிக்கின்றன. உதாரணமாக, சித்திரை, புரட்டாசி, பங்குனி மாதங்களின் நாட்கள் 30; வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி மாதங்களின் நாட்கள் 31; ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி மாதங்களின் நாட்கள் 29. உலகம் முழுவதும் புழக்கத்தில் உள்ள ரோமானிய ஆங்கில காலண்டர் முறையில் மாதங்களின் நாள் பகுப்பை ஒப்பிட்டால் நமது முன்னோரின் வானியல் அறிவு பிரமிப்பூட்டும்.

இவ்வாறு காலத்தை மாதங்களாகப் பிரித்த நமது முன்னோர், சூரியனுக்கு முதன்மை அளித்து, சூரியன் முதலில் கடந்துசெல்லும் மேஷ ராசியை முதல் மாதமாகக் கணக்கிட்டனர். அதுவே சித்திரை மாதமாக வழங்கப்படுகிறது.

சதுர் மகாயுகம் துவங்கியபோது அனைத்து கோள்களும் மேஷ ராசியில் பூஜ்ஜிய பாகையில் நிலைபெற்றிருந்தன என்பதே சோதிடக் கணக்காகும். அதுவே யுகாதி ஆகும்.  கால வெள்ளத்தில் கோள்களும் நட்சத்திரங்களும் சுழற்சி வேகத்தால் மாறி அமைந்தன.

இருப்பினும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வியாழன் கோள் பழைய நிலைக்கு வருகிறது. சனிக் கோள் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை பழைய நிலைக்கு வருகிறது. பூமியின் இயக்கத்திலும் மாந்தரின் வாழ்விலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் இக்கோள்கள் இரண்டும் ஒரே நேரத்தில் பழைய நிலைக்கு வர 60 ஆண்டுகள் ஆகின்றன. இந்த அடிப்படையில் தான் 'பிரபவ’ முதலாக 'துன்முகி’ வரையிலான 60 தமிழ் ஆண்டுகள் உருவாக்கப்பட்டன.

உலக உயிர்களை வாழ்விப்பவன் ஒளியும் வெம்மையும் நல்கும் சூரியன் தான். எனவே தான் கோடைக்காலம் துவங்கும் சித்திரையை தலைமாதமாகக் கொண்டு புத்தாண்டை நமது முன்னோர் அனுசரித்தனர். கோடைப் பருவம் 4 மாதங்களைத் தொடர்ந்து மழைப்பருவம் 4 மாதங்களும், பனிப்பருவம் 4 மாதங்களும் வருகின்றன. இந்தச் சுழற்சி தொடர்ந்து கொண்டே இருக்கும்.


நன்றி: தினமணி (சென்னை- 14.04.2013)
.
***

புத்தாண்டு வாழ்த்துக்கள்!


அனைவருக்கும் வணக்கம்!
வரும் ஜய வருடப் புத்தாண்டுக்காக,  நல்வாழ்த்துக்களை மகிழ்வுடன் தேசிய சிந்தனைக் கழகம் தெரிவித்துக் கொள்கிறது.

"இனி வரும் காலம் இந்திய இளைஞர்களின் கைகளில்" என்ற வாக்கினை மெய்ப்பிக்கும் வகையில், நமது வாக்கினை வருகின்ற தேர்தலில் நேர்மையும், ஆளுமைத்திறனும், தனிப்பட்ட வாழ்வில் ஒழுக்கமும் கொண்ட பிரதிநிதிகளுக்கு அளித்து நம் நாட்டு ஜனநாயகத்தை வலுபடுத்த தேசிய சிந்தனைக் கழகம் அன்புடன் வேண்டுகிறது.

-ம.கொ.சி.ராஜேந்திரன்,
மாநில அமைப்பாளர், தே.சி.க.

7.3.14

வரலாற்றில் வாழும் வள்ளியம்மை

 -லா.சு.ரங்கராஜன்




 தில்லையாடி வள்ளியம்மை
(பிப்ரவரி 22, 1898 - பிப்ரவரி 22, 1914)

தென்னாப்பிரிக்க இந்தியர்களின் நலனுக்காக பாரிஸ்டர் மோகன்தாஸ் காந்தி அந்நாட்டின் வெள்ளையர் அரசுக்கு எதிராக நடத்திய அகிம்சாபூர்வமான சத்தியாக்கிரகங்கள் மூன்று கட்டங்களாக நிகழ்ந்தன.
அவ்வறப் போராட்டத்தில் உயிரைத் தியாகம் செய்தவர்கள் பற்பலர். ஆனாலும், இளம் வீராங்கனை வள்ளியம்மை போன்று அண்ணல் காந்தியின் உள்ளத்தை உருக்கியவர்கள் ஒரு சிலரே.

அரசு சட்ட விதிகளின்படி நடைபெற்ற திருமணங்கள் மற்றும் கிறிஸ்தவ திருமணங்கள் மட்டுமே செல்லுபடியாகும் என்று தென்னாப்பிரிக்க உச்சநீதிமன்றம் மார்ச் 13, 1913 அன்று தீர்ப்பளித்தது. அதன்படி, இந்தியாவிலோ தென்னாப்பிரிக்காவிலோ இந்து, முஸ்லிம், பார்ஸி முறைப்படி நடந்தேறிய திருமணங்கள் ஏதும் சட்டப்படி செல்லாது என்றானது.

மற்ற அநீதிகளுடன் இந்தத் தீர்ப்பையும் எதிர்த்து இறுதிக்கட்ட சத்தியாக்கிரகம் முடுக்கிவிடப்பட்டது. அதில் பெண்களும் பங்கேற்க வேண்டுமென காந்திஜி கூறினார்.

அதன்படி, அக்டோபர் 1913 இறுதியில் ஜோஹன்னஸ்பர்க் நகரிலிருந்து நியூகாஸிலுக்கு புறப்பட்ட பெண்கள் பேரணியில், வள்ளியம்மையும் அவரது தாயாரும் சேர்ந்து கொண்டனர். பெண்கள் கைது செய்யப்படாததால் அந்த அணி சட்டவிரோதமாக டிரான்ஸ்வால் மாகாணத்தை நோக்கிச் சென்றது. அதன் எல்லையில் அவர்கள் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டு டிசம்பர் 22, 1913 அன்று கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு மூன்று மாத கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அவர்கள் மாரிட்ஸ்பர்க் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறையில் படுமோசமான உணவு, கடுமையான வேலைகள், ஜெயில் துணிமணிகளை துவைத்தல், கட்டாந்தரையில் படுக்கை. அதனால் சிறையில் இருந்தபோதே வள்ளியம்மை நோய்வாய்ப்பட்டார். பின்னர், பாரிஸ்டர் காந்திக்கும் அரசு உள்விவகார மந்திரி ஜெனரல் ஸ்மட்ஸுக்கும் ஏற்பட்ட சமரச உடன்பாட்டிற்குப் பிறகு, தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாகவே (பிப்ரவரி 11, 1914இல்) பெண் சத்தியாக்கிரகிகள் விடுவிக்கப்பட்டனர்.

வள்ளியம்மையின் தந்தை ஆர். முனிசாமி முதலியாரின் பூர்வீகம் பாண்டிச்சேரி. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக குடியேறிய சிலருள் இவரும் ஒருவர். பாரிஸ்டர் காந்தியின் சாத்வீக எதிர்ப்பு இயக்கங்களில் கலந்துகொண்டு சிறை சென்றவர். உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருந்ததால் இவரால் 1913-இல் நடந்த இறுதிக்கட்டப் போராட்டத்தில் கலந்துகொள்ள இயலவில்லை.

இவரது மனைவி ஜானகியம்மை அன்றைய தஞ்சை ஜில்லாவின் (இப்போது நாகை மாவட்டம்) தில்லையாடி கிராமத்தைச் சேர்ந்தவர். மகள் வள்ளியம்மை பிறந்தது (1898) வளர்ந்தது எல்லாமே தென்னாப்பிரிக்காவில் தான். அரசுப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி. 1913 போராட்டத்தின்போது அவருக்கு வயது பதினாறு.

சிறை சென்ற அன்றே வள்ளியம்மையின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. சிறைச்சாலையில் படுத்த படுக்கையாகவே இருந்தார். பிப்ரவரி 11, 1914 அன்று விடுதலையானபோது அவருக்கு கடும் டைபாய்டு காய்ச்சல். விடுதலையான இடத்திலேயே சில நாள்கள் தங்கி சிகிச்சை பெற
நேர்ந்தது.

அண்ணல் காந்தி, தமது ஆங்கிலேய நண்பர் போலக்குடன் அங்கு சென்று பார்த்தார். எலும்பும் தோலுமாக படுத்துக்கிடந்த அப்பெண்ணைக் காண காந்திஜிக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது. அவர்களுக்கிடையே நடந்த குறுகிய உரையாடலை காந்திஜி தமது சுயசரிதையில் இவ்வாறு பதிந்துள்ளார்:

"வள்ளியம்மா, நீ ஜெயிலுக்குப் போனதற்காக வருந்துகிறாயா?' என்று கேட்டேன்.

"வருத்தமா? இப்போது என்னைக் கைது செய்தாலும் திரும்பவும் ஜெயிலுக்குப் போகத் தயாராக இருக்கிறேன்' என்றாள் ஈனக்குரலில்.

"ஆனால் அப்படிப் போனால் உனக்கு மரணமும் நேரிடலாமே?' என்றேன்.

"அதனால் என்ன? தாய் நாட்டிற்காக உயிரையும் தியாகம் செய்ய யாரேனும் தயங்குவார்களா?' என்று பதிலிறுத்தினாள். 

அதற்குச் சில நாட்களுக்குப் பின் (பிப்ரவரி 22, 1914 அன்று) வள்ளியம்மை இறந்து போய்விட்டார்' 

(சுயசரிதம், அத்தியாயம் 40).

வள்ளியம்மையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பாரிஸ்டர் காந்தி தமது  ‘இந்தியன் ஒபீனியன்' வார இதழில் (25-2-1914) வெளியிட்ட செய்தியில், "அவ்விளம் பெண்ணின் (வள்ளியம்மை) எதிர்பாரா திடீர் மரணம் ஓர் கடுந்துயர் நிகழ்வு. இந்தியாவின் மேதக்க உத்தம புத்திரியின் அகால மறைவு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டது. ஏன், எதற்கு என்றெல்லாம் கேள்வி எழுப்பாமல் அப்பெண் தனது கடமையைச் செய்தாள். மகளிர்க்குரிய மன உரம், பெருமிதம், சீரிய பண்பு ஆகியவற்றின் எடுத்துக்காட்டாகத் திகழும் அவளது நினைவை இந்திய சமூகத்தினர் அனைவரும் மனதில் பதிக்க வேண்டும். அவளது குடும்பத்தினர்க்கு எங்களது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என்று குறிப்பிட்டார். இவ்விரங்கல் செய்தியை அடுத்து வள்ளியம்மையின் வாழ்க்கைக் குறிப்பையும் காந்திஜி அவ்விதழில் வெளியிட்டார்.

காந்திஜியின் மூத்த சகோதரர் லக்ஷ்மிதாஸ் காந்தி மார்ச் 9, 1914 அன்று இந்தியாவில் காலமானார் என்ற செய்தி வந்தது. அதையொட்டி காந்திஜிக்கு தென்னாப்பிரிக்காவின் பல இடங்களிலிருந்து ஏராளமான அனுதாபத் தந்திகள் வந்து குவிந்தன.

அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் காந்திஜி  ‘இந்தியன் ஒபீனியன்' (18-3-1914) இதழில் இவ்வாறு எழுதினார்: "மறைந்த என் தமையனார் தான் தந்தையின் ஸ்தானத்திலிருந்து எனக்கு வாழ்வளித்தார். நான் லண்டனில் பாரிஸ்டர் படிப்பதற்கு பண உதவி புரிந்தார். அவர் மறைவு எனக்கு உண்மையிலேயே பேரிழப்பு. அவ்வாறாயினும், வள்ளியம்மையின் அகால மரணம் என் தமையனின் மறைவைக் காட்டிலும் எனக்குப் பேரிடியான செய்தி என்றே தோன்றுகிறது..”

தில்லையாடி வள்ளியம்மையின் அஞ்சா நெஞ்சத்தையும் தியாகத்தையும் நினைவுகூர்ந்து தென்னாப்பிரிக்காவில் பல்வேறு பொதுக்கூட்டங்களில் காந்திஜி மனமுருகிப் பேசியுள்ளார். 

இந்தியாவுக்கு திரும்பவிருந்த காந்திஜிக்கும் கஸ்தூர்பாவுக்கும் ஜோஹன்னஸ்பர்க் நகரில் 1914 ஜூலை அன்று கூட்டப்பட்ட ஓர் மாபெரும் பிரிவுபசாரப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் காந்திஜி உணர்ச்சி பொங்க, "இந்நகர், வள்ளியம்மாளை அர்ப்பணித்துப் பெருமை சேர்த்துள்ளது. ஓ, அந்த இளம் பெண்! நான் இப்போது பேசும்போது அவளது உருவம் என் கண்முன் நிற்கிறது. சத்தியத்துக்காக உயிர் நீத்தவள் அவள். தன்னம்பிக்கையே அவளது ஆயுதம். எனக்கிருக்கும் கல்வியறிவு அவளுக்கில்லைதான். சத்தியாக்கிரகம் என்பதன் தாத்பரியம்கூட அவளுக்குத் தெரிந்திருக்காது. சாத்விகப் போராட்டத்தினால் தென்னாப்பிரிக்க இந்தியர்களுக்கு என்ன நன்மை ஏற்படும் என்பதையும் அவள் அறியாள். ஆயினும், தனது நாட்டு மக்களுக்காக அவள் உத்வேகத்துடன் சிறை சென்றாள். பின்னர் தன் உடல்நலம் முற்றிலும் பாதிக்கப்பட்டு வெளியே வந்தாள். சில நாட்களில் இறந்து போனாள்...” என்று கூறினார்/
(‘இந்தியன் ஒபீனியன்' கோல்டன் நம்பர், 1914).

ஜோஹன்னஸ்பர்க்கில், ஜூலை 15, 1914 அன்று வள்ளியம்மைக்கும் நாகப்பனுக்கும் ஒரு நினைவுச் சின்னம் திறந்து வைக்கப்பட்டபோது பேசிய காந்திஜி, "வள்ளியம்மாவின் முகத்தைப் போன்று நாகப்பனின் முகம் எனக்கு அவ்வளவு தெளிவாக ஞாபகம் இல்லை (தென்னாப்பிரிக்க சாத்வீகப் போராட்டத்தில் சிறை சென்றவர்களில் நாகப்பனும் ஒருவர்; இளைஞன். கடுங்காவல் சிறைவாசத்தின்போது சரியான உணவும் கம்பளி உடையும் தராமல் சிறைக்காவலர்கள் அவரைத் திறந்த வெளியில் புல்வெட்டும் வேலை வாங்கியதால், நிமோனியாவால் பீடிக்கப்பட்டு ஜூலை 6, 1902 அன்று மரணமடைந்தார்). அவ்விருவரிடத்தும் துன்பங்களைச் சகித்துக்கொள்ளும் மன உறுதியும், பொறுமையும், நாட்டுப் பற்றும், சாவுக்கும் அஞ்சாத மனத் திண்ணமும் இருந்தன. இவற்றைவிட ஒரு மனிதனுக்கு வேறு என்னதான் வேண்டும்?' என்று புகழஞ்சலி செலுத்தினார்.

வள்ளியம்மையின் உயிர்த் தியாகத்தைப் போற்றும் வகையில்  ‘வள்ளியம்மாள் மண்டபம்' ஒன்றை தென்னாப்பிரிக்க இந்தியர்கள் நிறுவினர்.

இதுகுறித்து தனது  ‘தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம்' என்ற நூலில் காந்திஜி எழுதியதாவது: "வள்ளியம்மா அவளுடைய சேவையைக் கொண்டு ஓர் ஆலயத்தையே நிர்மாணித்துக் கொண்டு விட்டாள். அவளது கீர்த்தி மிகு புனித உருவம் அநேகர் உள்ளங்களில் இன்றுகூடப் பதிந்து நிற்கும். இந்தியா வாழும்வரை தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரக வரலாற்றில் வள்ளியம்மாளின் பெயரும் நிலைத்து நிற்கும்'.

ஆம்! அவர் மறைந்து நூறாண்டு கடந்த பின்பும் அது நிலைத்து நிற்கத்தான் செய்கிறது.

.

குறிப்பு: கட்டுரையாளர், காந்திய அறிஞர்.
இந்த ஆண்டு தில்லையாடி வள்ளியம்மையின் நூறாவது நினைவு ஆண்டு.

நன்றி: தினமணி (22.02.2014)

காண்க: தில்லையாடி வள்ளியம்மை (விக்கி)

இதையும் காண்க: காந்தியைக் காத்த தமிழ்ப்பெண் (தேசமே தெய்வம்)

 .

8.1.14

ஜெயமோகனின் வெண்முரசு!


தமிழின் முன்னணி எழுத்தாளர் திரு. ஜெயமோகன், தனது இணையதளத்தில் ஜனவரி 1 முதல் மகாபாரதத்தை புதுவடிவில் ‘வெண்முரசு’ என்ற தொடராக எழுதி வருகிறார். தொடர்ந்து பத்தாண்டுகள் இதனை எழுதி, மாபெரும் தொகுப்பாக வெளியிடவும் திரு.ஜெயமோகன் திட்டமிட்டுள்ளார்.

மகாபாரதம் இயல்பிலேயே மாபெரும் இலக்கியம். பாரதத்தின் பண்பாட்டு உருவாக்கத்தில் பேரிடம் வகிக்கும் மகாபாரதம் நம் ஒவ்வொருவரின் நாடியிலும் கலந்துள்ளது. இதனை பின்நவீனத்துவத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில்; நவீன வடிவில்  மீளுருவாக்க திரு.ஜெயமோகன் எடுத்துள்ள முயற்சி மிகவும் போற்றுதலுக்குரியது. இறைவன் அவருக்கு அதற்கான முழு ஆற்றலையும் அளிக்க பிரார்த்திக்கிறோம்.

இந்தத் தொடரை கீழ்க்கண்ட இணையதளங்களில் தினசரி படிக்கலாம். தனது தொடர் குறித்த விவாதங்களையும் திரு. ஜெயமோகன் வரவேற்றுள்ளார்.


...வெண்முரசு தொடரைப் படிக்க, 
கீழ்க்கண்ட தளங்களை அணுகவும்:
.






3.12.13

ஈரோடு வேளாளர் கல்லூரியில் கருத்தரங்கம்- அழைப்பிதழ்

ஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், வரும் 21.12.2013, சனிக்கிழமை காலை9.30 மணி முதல், மதியம் 3.00 மணி வரை, சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தியை முன்னிட்டு, கல்லூரி ஆசிரியர்களுக்கான கருத்தரங்கம் நடைபெறுகிறது.

ஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியுடன் தேசிய சிந்தனைக் கழகம் இணைந்து நடத்தும் இக்கருத்தரங்கின் அழைப்பிதழ் கீழே….


inv_01
 
inv_02

படத்தின் மீது சொடுக்கினால் பெரிதாக்கிப் படிக்கலாம்.
அனைவரும் வருக!