நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

4.6.12

பலர் அறியாத 'தியாகதீபம்'


 சேலம் டாக்டர் வரதராஜுலு நாயுடு
 (பிறப்பு: ஜூன் 4 )

 சுதந்திரப் போராட்டத்தில் தமிழகம் ஆற்றிய பங்களிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல. தென்னிந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தில் முன்னிலை வகித்தது தமிழகம் என்பது மட்டுமல்ல, தன்னிகரற்ற பல தலைவர்களை விடுதலை வேள்விக்கு அளித்ததும் தமிழகம்தான். தமிழக சுதந்திரப் போராட்ட வரலாற்றிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஆரம்பகால வரலாற்றிலும் தனித்துவமான தடம் பதித்த தலைவர்களில் ஒருவர் சேலம் டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு.

அக்காலத்தில் சேலத்தை அடுத்த ராசிபுரத்தில் 1887 ஜூன் 4 ஆம் தேதி பெருமாள் நாயுடு-குப்பம்மாள் தம்பதியருக்கு பிறந்த வரதராஜுலு நாயுடுவின் முன்னோர்கள் கிருஷ்ணதேவராயர் காலத்தில் விஜயநகர சேனைப்படையுடன் தமிழ்நாட்டில் குடியேறியவர்கள் என்பது சரித்திரம்.

வரதராஜுலு நாயுடு தமது பத்தொன்பதாம் வயதில் தீவிர அரசியல் வயப்பட்டார். மாணவப் பருவத்திலேயே விதேசிப்பொருள்களை வெறுத்து ஒதுக்குதல், அன்னியத் துணிகளை எரித்தல் போன்ற தீவிர நடவடிக்கைகள் அவரைக் கவர்ந்தன.

வங்காளப் பிரிவினையைத் தொடர்ந்து எழுந்த தேசிய எழுச்சி அவரைப் பெரிதும் ஈர்த்தது. சுதந்திரத்துக்கான போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கத் துணிந்தார் வரதராஜுலு நாயுடு. கல்வி அதிகாரிகளும், காவல் அதிகாரிகளும் அவரது நடவடிக்கைகளைக் கண்கொத்திப் பாம்பாகக் கவனித்து வந்தனர்.

சித்த மருத்துவம், ஆயுர்வேதம் ஆகிய இரண்டு இந்திய மருத்துவத் துறைகளிலும் படிப்பறிவும் பட்டறிவும் ஏற்பட்டு முழுநேர மருத்துவராகத் தொழில் புரிந்துவந்தார் அவர். 1908 ஆம் ஆண்டிலேயே தனது 21-வது வயதில் சுப்பிரமணிய பாரதியாரின் முன்னிலையில் புதுச்சேரியில் சுயராஜ்ய சபதம் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு விடுதலை வேட்கை கொண்டவராக இருந்தார்.

தொண்டறத்தின் மீதுள்ள தாகமும் அரசியல் ஆர்வமும் மேலோங்க அக்காலத்தில் ரூ. 2,000 மாத வருவாய் வந்துகொண்டிருந்த மருத்துவத் தொழிலைக் கைவிட்டு 1917 இல் இந்திய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். டாக்டர் அன்னி பெசன்ட் தொடங்கிய ஹோம் ரூல் இயக்கத்தில் பங்குபெற்றார். படிப்படியாக உயர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரானார்.

மகாத்மா காந்தி வரிகொடா இயக்கம் தொடங்கியபோது வரதராஜுலு நாயுடு அவ்வியக்கத்தில் பெரிதும் ஈடுபாடு காட்டினார். அரசுக்கு வரி கட்டவில்லை. கட்டவேண்டிய வரிக்கு ஈடாக அவருடைய காரை ஆங்கில அரசு பறிமுதல் செய்ய உத்தரவிட்டது. ஆனால், காரை ஓட்டிச்செல்ல எவரும் முன்வரவில்லை. கடைசியில், மாவட்ட ஆட்சியரே அந்தக் காரை ஓட்டிச்செல்ல வேண்டியதாயிற்று.

பலமுறை சிறைத்தண்டனையும் பற்பல அடக்குமுறை வழக்குகளையும் சந்தித்துப் பொதுவாழ்வில் புடம்போடப்பட்டவர் வரதராஜுலு நாயுடு. தொழிலாளர்கள், விவசாயிகள், இலங்கை பர்மா தமிழர்கள் என பொதுமக்கள் பிரச்னைகளுக்குப் போராடி அவர்களுக்குப் பல உரிமைகளை, சலுகைகளை வாங்கித் தந்தவர் அவர்.

வரதராஜுலு நாயுடுவின் அரசியல் வரலாறு வெறும் பதவிகளின் வரலாறு அன்று. தியாகங்களின் வரலாறு அது. 1918 இல் மதுரை ஹார்வி மில் தொழிலாளர் வேலைநிறுத்தத்தை ஊக்குவிக்கும் விதமாகப் பேசினார் என்னும் குற்றச்சாட்டுக்கு ஆளாகி வழக்குப் போடப்பட்டு அரசு நிந்தனை புரிந்த குற்றத்துக்காக 18 மாதம் கடுங்காவலுக்குள்ளானார்.

வரதராஜுலு நாயுடுவுக்காக ராஜாஜியே நேரில் வாதாடினார். மேல்முறையீட்டில் ராஜாஜியின் வாதத்திறமையால் அவருக்கு விடுதலை கிடைத்தது. அந்த விடுதலை நீண்டநாள் நீடிக்கவில்லை. அவரை வெளியே உலவ விடக்கூடாது என்பதில் பிரிட்டிஷ் அரசு தீவிரமாக இருந்தது.

1919 இல் தமிழ்நாடு இதழில் எழுதிய இரண்டு அரசியல் கட்டுரைகள் ராஜ துரோகமானவை எனப் புதிய குற்றச்சாட்டை எழுப்பி அவரைக் கைது செய்தது ஆங்கிலேய அரசு. விளைவு: ஒன்பது மாத சிறைத்தண்டனை அவருக்குக் கிடைத்தது.

வெளியில் வந்து சில மாதங்கள்தான் கடந்தன. மீண்டும், 1923 இல் பெரியகுளம் மாநாட்டில் தடை உத்தரவை மீறிப்பேசியமைக்காக 6 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர், அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர், இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர், தமிழக மேல்சபை உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஆகிய பல பொறுப்புகளை வகித்து சாதனை புரிந்தவர் வரதராஜுலு நாயுடு. காந்தி, சி.ஆர்.தாஸ் போன்றவர்களால் மதிக்கப்பட்டவர்.

சேலம், திருப்பூர் வருகையின்போது காந்தியடிகள் வரதராஜுலு வீட்டில்தான் தங்கினார். அதனால் சேலத்தில் வரதராஜுலு நாயுடுவின் வீடு இருந்த சாலைக்கே காந்தி சாலை என்னும் பெயர் வழங்கலாயிற்று.

1925 இல் வ.வே.சு. அய்யர் நடத்திவந்த சேரன்மாதேவி குருகுலத்தில் பிராமணர் அல்லாத மாணவர்களுக்குத் தனிப்பந்தி அனுசரிக்கப்படுவதை எதிர்த்து சீர்திருத்தப்போர் ஆரம்பித்தது. பெரியார் ஈ.வெ.ரா., திரு.வி.க., ஆகியோருடன் வரதராஜுலு நாயுடுவும் அதில் ஈடுபட்டார். மகாத்மா காந்தியிடம் பிரச்னை கொண்டுசெல்லப்பட்டது. பின்னர் காங்கிரஸ் கமிட்டியில் இத்தகைய குலப்பிரிவினைக்கு எதிராக எஸ்.ராமநாதன் முன்மொழிந்த ஒரு தீர்மானமும் ஏற்கப்பட்டது.

வரதராஜுலு நாயுடுவின் சொற்பொழிவுகளால் ஈர்க்கப்பட்டு சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் தீவிரப் பங்கெடுத்தவர் காமராஜ் என்பது இன்னொரு சுவையான செய்தி.

பெரியார் காங்கிரஸ் கட்சியைவிட்டு நீங்கிய நிலையில் நீதிக்கட்சியினர் தொடர்பு பலப்பட்டு பின்னாளில் அக்கட்சியைப் பகுத்தறிவாளர் கட்சியாக திராவிடர் கழகமாகப் பரிணாமம் எடுத்த பின்னணியில் வரதராஜுலு நாயுடு நீதிக்கட்சியை எக்காலத்திலும் ஆதரிக்கவில்லை என்பதுடன் அதன் எதிர் முகாமிலேயே நின்றார் என்பது இங்கே குறிப்பிடப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சிக்குள்ளும் சமுதாய முற்போக்குக் கொள்கையை முன்னிறுத்த வேண்டும் என்பதிலும் பெரியார் ஈ.வெ.ரா.வும் வரதராஜுலு நாயுடுவும்

ஒருங்கிணைந்து செயல்பட்டனர். ஆனால், பெரியார் ஈ.வெ.ரா. அரசியல் விடுதலையை வலியுறுத்த மறுத்தபோது, வரதராஜுலு நாயுடு அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

காங்கிரஸ் பேரியக்கத்திலும் காந்தியடிகளின் தலைமையிலும் அத்தனை நம்பிக்கை வைத்திருந்த வரதராஜுலு நாயுடு பின்னாளில் காந்தியடிகள் (1930-32) நடத்திய உப்பு

சத்தியாகிரகத்திலும் சட்டமறுப்பு இயக்கத்திலும் பங்கேற்காமல் போனதுடன் அவற்றை முழுமூச்சாக எதிர்த்தது மிகப்பெரிய அரசியல் புதிராகத் தொடர்கிறது. முன்பு வரிகொடா இயக்கத்தில் முனைந்துநின்ற வரதராஜுலு நாயுடு அரசுக்கு எதிரான பின்னாள் அறவழிப் போராட்ட முடிவுகளை ஏன் கண்டிக்க வேண்டும் என்னும் கேள்விக்குப் பதில் கிடைக்கவில்லை.

தாழ்த்தப்பட்டோர் ஆலயப்பிரவேச உரிமை இயக்கம் தலையெடுத்தபோது அதில் வரதராஜுலு நாயுடு மும்முரமாகப் பணியாற்றினார். 1925 இல் தமிழ்நாடு என்னும் செய்திப்பத்திரிகை (வார இதழ்) தொடங்கி இதழாளராகவும் பரிமளித்தார். தமிழ்நாடு இதழ் வெற்றிகரமாக இயங்க "அக்ரகாரத்து அதிசய மனிதர்' என அண்ணாவால் வர்ணிக்கப்பட்ட முற்போக்குச் சிந்தனையாளர் எழுத்தாளர் வ.ரா. என்னும் வ.ராமசாமி அய்யங்கார் வரதராஜுலு நாயுடுவுக்குத் துணையாக இருந்தார்.

அதேபோல் பிற்காலத்தில் பெரும்புகழ் பெற்ற "தினமணி' நாளிதழின் நிறுவன ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கமும் வரதராஜுலு நாயுடுவின் தமிழ்நாடு இதழின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினார்.

1932 இல் ஆங்கில இதழ் தொடங்கும் எண்ணம் ஏற்பட்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழை (5 செப்டம்பர் 1932) ஆரம்பித்தார். தமிழ்நாடு இதழ் அலுவலகத்திலிருந்தே அதை அச்சடித்து விநியோகம் செய்துவந்தார். தொடங்கிய ஒரே வருடத்தில் நிதிப்பற்றாக்குறை ஏற்பட அதை "ப்ரீ ப்ரெஸ் ஜர்னல்' ஆசிரியரான எஸ். சதானந்தத்திற்கு விற்றுவிட்டார். பிறகு அது சுதந்திரப் போராட்ட வீரரான ராம்நாத் கோயங்காவுக்குக் கைமாறியது. கோயங்காவின் கைக்கு வந்ததும் அரசு நிர்வாக எந்திரத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாத சுதந்திர இதழான அதன் குணாம்சமும் வீச்சும் மேலும் தீவிரம் கண்டன என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரம் பிள்ளை 1934 இல் வரதராஜுலு நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை "தேசிய சங்கநாதம்' என்னும் தலைப்பில் எழுதி நூல்வடிவில் கொணர்ந்தார். 1933 வரையிலான அவரது வாழ்வின் பகுதிகள் அதில் ஓரளவு விவரமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்து பத்திரிகையின் நிறுவனர் ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய அய்யரைப்போல் வரதராஜுலு நாயுடுவும் இதழுலகில் தனிச்சுடராக விளங்கினார் என வ.உ.சி.யே பாராட்டி இருக்கிறார்.

வ.உ.சி.யின் நன்மதிப்பைப் பெற்று அவரால் "தென்னாட்டுத் திலகர்' என்னும் பாராட்டும் பெறவேண்டுமானால் வரதராஜுலு நாயுடு எத்தனை பெரிய மனிதராக விளங்கியிருக்க வேண்டும் என இன்றைய இளைய தலைமுறை வாசகர்கள் யூகித்துக் கொள்ளலாம்.

வ.உ.சி. எழுதிய வரதராஜுலு நாயுடுவின் வாழ்க்கை சரிதத்தின் ஆங்கில வடிவம் நீலகண்ட பிரம்மச்சாரியால் எழுதப்பட்டு வெளிவந்தது. பிறகு அதில் திருத்தம் செய்யப்பட்டு 1948 இல் புதிய பதிப்பு வெளியாயிற்று. 1955 இல் வெளியான அவரது பிறந்தநாள் மலரில் மேலும் சில விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ""இவை அனைத்துமே போதுமான தகவல்களை உள்ளடக்கிய முழு வரலாறு என்று சொல்லிவிட முடியாது. எனவே, அவரைப் பற்றி முழுமையாகவும் விரிவாகவும் ஒரு வாழ்க்கை வரலாறு எழுதப்படவேண்டும் என பெ.சு.மணி கருத்து வெளியிட்டுள்ளார்.

வரதராஜுலு நாயுடுவின் குடும்பத்தினர், சந்ததிகள், நட்பு வட்டத்தின் இந்நாள் பிரதிநிதிகள், தேசிய இயக்க வரலாற்று மாணவர்கள் ஒன்றுபட்டு முயன்றால் வரதராஜுலு நாயுடுவின் முழுமையான சரிதையை வெளிக்கொணர முடியும்.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தமிழகம் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. குறிப்பாக, டாக்டர். வரதராஜுலு நாயுடு போன்றவர்களின் பங்களிப்பும் தியாகமும் வெளிக்கொணரப்படாமல் மறைக்கப்பட்டு விட்டன. இத்தனைக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், தமிழகத் தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடியாகவும் விளங்கிய பெருமகனார் வரதராஜுலு நாயுடு.

சுதந்திர இந்தியா சுயநல அரசியல்வாதிகளின் ஒட்டுமொத்தக் குத்தகையாகி விட்டதன் விளைவாக, வரதராஜுலு நாயுடு போன்ற உண்மையான தியாகிகளின் பங்களிப்பு பேசப்படாமல் இருக்கும் அவலம் ஏற்பட்டுவிட்டது. வெளிச்சத்திற்கு வரவேண்டிய வரலாறுகளில் ஒன்று வரதராஜுலு நாயுடுவின் தியாக வரலாறு!

(இன்று அன்னாரது 125-வது பிறந்ததினம்)

-கல்பனாதாசன் 
நன்றி: தினமணி (04.06.2012)

காண்க: 

பெ. வரதராஜுலு நாயுடு (விக்கி)

Perumal Varadarajulu Naidu

'தேசிய சங்​க​நா​தம்' டாக்​டர் பி.வர​த​ரா​ஜுலு நாயுடு

டாக்டர் வரதராஜுலு நாயுடு குருகுலப் போராட்ட வீரர் (காலச்சுவடு)

டாக்டர் வரதராஜுலு நாயுடு- தஞ்சை வெ.கோபாலன்

 .




2.6.12

நிகரற்ற சாம்பியன் ஆனந்த்!



உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இஸ்ரேலின் போரீஸ் கெல்ஃபான்டை வீழ்த்தி 5-வது முறையாக பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் செஸ் உலகின் முடிசூடா மன்னனான விஸ்வநாதன் ஆனந்த்.

தனது 6-வது வயதில் செஸ் பயணத்தைத் தொடங்கிய ஆனந்த், கடந்த 20 ஆண்டுகளாக உலக செஸ் போட்டியில் கோலோச்சி வருகிறார். அவர் 42 வயதை எட்டியிருந்தாலும், அவருடைய ஆட்டத்தின் வேகத்துக்கு மட்டும் இளமை குறையவில்லை. 24 வயதில் விளையாடியதைப் போன்றே இப்போதும் விரைவாக காய்களை நகர்த்தி வெற்றியைத் தொடர்ந்து வருகிறார்.

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற உலக செஸ் போட்டியின் டை பிரேக்கர் சுற்றில் கெல்ஃபான்டுக்கு எதிராக அபாரமாக காயை நகர்த்திய ஆனந்தின் உத்வேகம், அந்தப் போட்டியை பார்த்த அனைவருக்குமே தெரிந்திருக்கும். பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் இடையே நடைபெற்ற படுவேக டைபிரேக்கர் சுற்றில் எவ்வித பதற்றமுமின்றி, லாவகமாக காய்களை நகர்த்தி முன்னணி வீரரான கெல்ஃபான்டை தோற்கடித்தார் ஆனந்த்.

தமிழகத்தின் மயிலாடுதுறையில் பிறந்த ஆனந்த், தன்னுடைய தாயார் சுசீலாவிடமும், குடும்ப நண்பரான தீபா ராமகிருஷ்ணனிடமும்தான் செஸ் விளையாடக் கற்றுக்கொண்டார். செஸ் மீதான தீராத காதலால் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு அடுத்த சில ஆண்டுகளில் உயர்ந்தார்.

5 முறை உலகச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியவரான ஆனந்த், இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டரும்கூட. டோர்னமென்ட், மேட்ச், ரேபிட், நாக் அவுட் ஆகிய முறைகளில் நடத்தப்பட்ட உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பட்டம் வென்ற ஒரே வீரர் என்ற பெருமையும் ஆனந்தையே சேரும். 2007-ல் இருந்து தொடர்ச்சியாக 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். தனது அபரிமிதமான சாதனைக்காக 18-வது வயதிலேயே பத்மஸ்ரீ விருது வாங்கியவர். இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்மவிபூஷன் விருதைப் பெற்ற முதல் விளையாட்டு வீரர்.

இந்த விருது அவருக்கு 2007-ல் வழங்கப்பட்டது. ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருதைப் பெற்ற முதல் வீரரும்கூட. சிறந்த விளையாட்டு வீரருக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதையும் பெற்றுள்ளார்.

செஸ் போட்டியில் ஒரு காலத்தில் ரஷியர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தியதோடு, பல்வேறு சாதனைகளையும் படைத்து வந்தனர். செஸ் என்றால் ரஷியர்கள்தான் என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் கோலோச்சினர். ஆனால் தொடர்ச்சியாக 4 முறை பட்டம் வென்றதன் மூலம் வரலாற்றை மாற்றியுள்ளார் ஆனந்த்.

கௌரவம்

2010, நவம்பரில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வந்தபோது, பிரதமர் மன்மோகன் சிங் அவருக்கு விருந்து கொடுத்தார். அதற்கு அழைக்கப்பட்ட ஒரே விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமே.

கடந்து வந்த பாதை

1983-ம் ஆண்டு தேசிய அளவிலான சப்-ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றார் ஆனந்த். இதுதான் தேசிய அளவிலான போட்டிகளில் அவர் பெற்ற முதல் வெற்றி.

1984-ம் ஆண்டு தனது 15-வது வயதில் சர்வதேச மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் பட்டம் வென்ற இந்தியாவின் இளம் செஸ் வீரர் என்ற பெருமைக்குரியவரானார்.

தனது 16-வது வயதில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றார்.

1987-ல் உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் வெற்றி கண்டார். இதில் வெற்றி கண்ட முதல் இந்தியர் ஆனந்த்.

1988-ல் கோவையில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் வெற்றி கண்டு இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் ஆனார்.

1991-ம் ஆண்டு உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முதல்முறையாக தகுதிபெற்றார். அந்தப் போட்டியின் முதல் சுற்றில் ரஷியாவின் அலெக்ஸீ கிரீவை வென்ற ஆனந்த், காலிறுதிச் சுற்றில் ரஷியாவின் அனடோலி கார்போவிடம் வீழ்ந்தார்.

1995: ஃபிடே உலக செஸ் போட்டியின் அரையிறுதியில் அமெரிக்காவின் கதா காம்ஸ்கியிடம் வீழ்ந்தார்.

பிசிஏ உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் ரஷியாவின் கேரி காஸ்பரோவிடம் தோல்வி கண்டார்.

1997: ஸ்விட்சர்லாந்தின் லாசன்னே நகரில் நடைபெற்ற ஃபிடே உலக செஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் ரஷியாவின் கார்போவிடம் தோல்வி கண்டார்.

2000: ரஷியாவின் அலெக்ஸீ ஷிரோவை வீழ்த்தி முதல் முறையாக உலக செஸ் சாம்பியன் ஆனார்.

2001: உலக செஸ் போட்டியின் அரையிறுதியில் உக்ரைனின் இவான் சுக்கிடம் தோல்வி கண்டார்.

2005: அமெரிக்காவின் சான் லூயிஸில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில் பல்கேரியாவின் வேஸிலின் டோபாலோவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

2007: மெக்ஸிகோவில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில் 2-வது முறையாக சாம்பியன் ஆனார்.

2008: ஜெர்மனியில் நடைபெற் உலக செஸ் போட்டியில் ரஷியாவின் விளாதிமிர் கிராம்னிக்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

2010: பல்கேரியாவின் தலைநகர் சோபியாவில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில் உள்ளூர் நாயகனான வேஸலின் டோபாலோவை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

2012: ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில் இஸ்ரேலின் போரீஸ் கெல்ஃபான்டை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

கிராம்னிக்

ஆனந்த் குறித்து ரஷியாவின் முன்னணி வீரரான விளாதிமிர் கிராம்னிக் கூறுகையில், "ஒட்டுமொத்த செஸ் வரலாற்றில் அசாத்திய திறமை கொண்ட வீரர்களில் ஆனந்தும் ஒருவர். அவர் நிகரற்ற சாம்பியன். செஸ் உலகின் ஜாம்பவான் காஸ்பரோவைவிட ஆனந்த் எந்தவகையிலும் பலவீனமான வீரர் அல்ல' என்று குறிப்பிட்டுள்ளார்.

காரில் சென்று சாதித்த ஆனந்த்

2010-ம் ஆண்டு உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி பல்கேரியாவின் தலைநகர் சோபியாவில் நடைபெற்றது. ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் இருந்து விமானம் மூலம் சோபியாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார் ஆனந்த். ஆனால் அந்த நேரத்தில் எரிமலை வெடிப்பின் காரணமாக காற்றில் பறந்த சாம்பல் துகள்களால், அங்கிருந்து புறப்படவிருந்த அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து 40 மணி நேரம் காரில் பயணம் செய்து பல நாடுகள் வழியாக சுமார் 1,700 கி.மீ. தூரத்தைக் கடந்து சோபியாவை அடைந்தார் ஆனந்த். 40 மணி நேரம் பயணம் செய்தபோதிலும் அயராத ஆனந்த், சோதனையைத் தாண்டி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.


- ஏ.வி.பெருமாள்
- நன்றி: தினமணி (01.06.2012)
.
காண்க:  

விஸ்வநாதன் ஆனந்த் (விக்கி)

VISWANATHAN ANAND



31.5.12

ஏற்றமும் ஏமாற்றமும்!


 சிந்தனைக்களம் 

பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ள 9 மாணவ, மாணவியரும் நாமக்கல் மாவட்டத்தின் பள்ளிகளில் பயின்றவர்கள். இது நாமக்கல் மாவட்டத்துக்கு நிச்சயமாகப் பெருமை சேர்க்கும்.

 இந்த வெற்றிக்காக அந்தக் கல்வி நிறுவனங்களின் உழைப்பு கொஞ்சமல்ல என்பதும், இதற்காக சிறந்த ஆசிரியர்களை அமர்த்தி, கல்லூரி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை அவர்கள் தயக்கம் இல்லாமல் தருகிறார்கள் என்பதையும், இலக்கு மட்டுமே குறியாகக் கொண்டு மாணவர்களுடன் தாங்களும் சேர்ந்து நடக்கிறார்கள் என்பதும்தான் நாமக்கல் மாவட்டக் கல்வி நிறுவனங்களின் வெற்றி ரகசியம்.

 தேர்வை எப்படி அணுகுவது, எப்படி பதில் எழுதுவது, எந்த அளவுக்கு எழுத வேண்டும் என்பதையெல்லாம் மிகச் சரியாகத் திட்டமிட்டு மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து, திரும்பத் திரும்ப அவர்களை எழுத வைத்து, அதைத் திருத்திக் கொடுத்து, கேள்விக்கான விடை எழுதுதலை ஓர் அனிச்சைச் செயலாக மாற்றிவிடும் கல்விமுறையின் வெற்றியாகத்தான் இதைப் பார்க்க முடிகிறது. இந்தப் பள்ளிகளில் படித்தால் நிச்சயம் 90% மதிப்பெண் கிடைக்கும், கட்-ஆப் அதிகமாகும், நிச்சயமாக நல்ல பொறியியல் கல்லூரியில் அல்லது மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்ற எண்ணத்தில்தான் பெற்றோர் பலரும், தமிழகத்தின் பல திசைகளிலிருந்தும் நாமக்கல் நோக்கி வருகின்றார்கள். இனி மேலதிகமாகப் படையெடுப்பார்கள்.

 ஒரு சிறந்த மருத்துவக் கல்லூரி அல்லது பொறியியல் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் தனது குழந்தையைச் சேர்க்க வேண்டும் என்றால் குறைந்தது ரூ.10 லட்சம் செலவிட்டாக வேண்டும். வெளிநாடு வாழ் இந்தியர் என்றால், ரூ.30 லட்சம் செலவாகும். இது போன்ற பள்ளிக்கூடங்களில் சில லட்சம் ரூபாய் செலவில் தனது குழந்தைக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைத்துக் கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டால், பல லட்சம் மிச்சம்தானே? சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடிக்கும் வாழ்க்கையின் உத்திகளில் பெற்றோர் சிக்கித் தவிக்கும் காலத்தில், இதைச் சரி என்று சொல்லவும் முடியவில்லை, தவறு என்று மறுக்கவும் முடியவில்லை.

 இந்த வெற்றிக்காக நாமக்கல் மாவட்டத்தின் தனியார் பள்ளிகளைப் பாராட்டும் அதே வேளையில், இவர்களது வெற்றி ஒரு சிறந்த ஓட்டலின் எல்லாக் கிளைகளிலும் உணவில் ஒரே சுவை கிடைக்கச் செய்யும் செய்நேர்த்திக்கு ஒப்பானது என்பதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. இதே நாமக்கல் பார்முலா-வை எல்லா மாவட்டங்களிலும் உள்ள தனியார் பள்ளிகள் நடைமுறைப்படுத்தும். இங்கு பணிபுரியும் ஆசிரியர்களை அதிக விலைக்கு வாங்கிவந்து பள்ளியை நடத்தும். படிப்படியாக உருவாக இருக்கும் நடைமுறை அதுவாகத்தான் இருக்கும். அதற்குப் பெற்றோர்களின் வரவேற்பும் இருக்கும்.

 பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 134 மாணவர்களின் பட்டியலைக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள மாணவர்கள் படித்துள்ள பள்ளிகள் அனைத்தும் தனியார் பள்ளிகள். இந்தப் பள்ளிகளில் சில ஏழைகள் படிக்கக்கூடும். ஆனால் இவை ஏழைகளுக்கான பள்ளிகள் அல்ல.

 இந்த 134 பேரில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 91 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 13 பேர், ஆதிதிராவிடர் 5 பேர், சீர்மரபினர் 2 பேர், பொதுப்பிரிவினர் 23 பேர். கிரிமீ லேயர் என்ற பாகுபாடு இல்லாத நிலையில், ஏழை மாணவர்கள் குறைந்த மதிப்பெண்ணுடன் இடஒதுக்கீட்டில் சேர்வதுகூட இயலாத நிலை ஏற்பட்டிருக்கிறது. பிறப்பால் முன்னுரிமை என்பது போய்ப் பணத்தால் முன்னுரிமை என்கிற நிலைமை ஏற்பட்டிருப்பதன் அடையாளம்தான் இது. அது தவறு என்றால் இது அதைவிடத் தவறு.

 தமிழகத்தில் பொது நுழைவுத் தேர்வு மூலம் கிடைக்கும் கட்-ஆப் மதிப்பெண், தேர்வு மதிப்பெண் மூலம் கிடைக்கும் கட்ஆப் இரண்டையும் கூட்டி, கலந்தாய்வு நடத்தப்பட்டபோது, மதிப்பெண் பந்தய ஓட்டம் இல்லை. பொது நுழைவுத் தேர்வு நடத்தினால் கிராமப்புற மாணவர்கள் பயன்பெற முடியவில்லை என்று அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டது. ஆனால் இந்த மதிப்பெண் பந்தயத்தில், எந்தவொரு ஏழை கிராமப்புற மாணவனும் நல்ல கல்லூரியில் இடம்பெற முடியாத நிலைமை தற்போது உருவாகியுள்ளதே, இதை எப்படி சரி செய்யப்போகிறோம்?

 ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கான அரசுப் பள்ளிகள் மிக மோசமாக செயல்பட்டுள்ளன என்பது வெளிப்படை. சென்ற ஆண்டை விட 0.8% தேர்ச்சி விகிதம் அதிகம் என்று கல்வித்துறை சொல்லிக் கொள்ளலாம். 60% மதிப்பெண் பெற்றவர்கள் சென்ற ஆண்டைக் காட்டிலும் 29,417 பேர் அதிகம் என்று ஆசிரியர்கள் சொல்லிக்கொள்ளலாம். இவை யாவும் தனியார் பள்ளி, அரசுப் பள்ளி இரண்டுக்கும் சேர்த்துப்போட்ட கணக்கு என்பதை மறந்துவிடக்கூடாது.

 ஆண்டுதோறும், தனியார், அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் குறித்துத் தனித்தனியாகப் புள்ளிவிவரம் தரும் நடைமுறையைக் கல்வித்துறை இந்த ஆண்டு செய்யவில்லையே, ஏன்?

அரசுப் பள்ளிகளும், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளும் அந்த அளவுக்கு சீர்கெட்டுள்ளதா?

அதற்காக வெட்கப்பட்டுத்தான் இதை மறைத்தார்களா?

 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளுக்கு சவால்விட்டுக் களத்தில் இறங்குவார்கள் என்கிற நம்பிக்கையை முற்றிலுமாக இழந்து நிற்கிறோம். அதிக சம்பளம், அதிக சலுகை கேட்கும் அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களே தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளியில் சேர்க்கும் நிலையில் அரசுப் பள்ளிகள் தரமான கல்வியை சாமானியக் குடிமகனுக்கு வழங்கும் என்கிற நம்பிக்கை தகர்கிறதே, இதைப்பற்றி யாராவது கவலைப்படுகிறோமா?

தனியார் பள்ளிகளுக்கு நிகராகவும், மேலாகவும் கற்றுக்கொடுக்க முயலாதவர்கள் மக்கள் வரிப்பணத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களாக ஏன் தொடரவேண்டும் என்று யாராவது கேள்வி எழுப்புகிறோமா?

இந்த மதிப்பெண் ஓட்டம் இருப்பவன், இல்லாதவனுக்கு இடையில் மிகப்பெரிய, மோசமான இடைவெளியை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. இதைப்பற்றி அரசும், அரசுப் பள்ளி ஆசிரியர்களும், பொதுஜனங்களான நாமும் கவலையே படாமல் சுரணை கெட்டவர்களாக இருக்கிறோம் என்பதுதான் வேதனை!


- தினமணி தலையங்கம் (24.05.2011)
.

21.5.12

ஊற்று வற்றாத மண்



சிறுகதை:  கே.பி.பத்மநாபன் 


பெங்களூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் கோவை ரயிலில் தன் பெற்றோருடன் ஏறி இருக்கையில் அமர்ந்த ராஜேஷ், தனது எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவரைப் பார்த்தான். மெஜஸ்டிக் ரயில் நிலையத்திலேயே ஏறி அமர்ந்திருப்பார் போலும். தழையத் தழைய வேட்டி கட்டிய, ஏறக்குறைய முப்பது வயதுக்கு மேற்பட்ட இளைஞர், எதிர் சீட்டில் சன்னலோரத்தில் உட்கார்ந்திருந்தார். கையில் ஒரு புத்தகம், மூன்றுபேர் அமர்வதற்கான அந்த இருக்கையில் அவர் மட்டுமே இருந்தார். மற்ற இருக்கைகளில் யாரேனும் ஓசூரில் ஏறலாம் அல்லது காலியாகவே இருக்கவும் சாத்தியமென்பதால், ராஜேஷ் தன் பெற்றோரை அவர்களது இருக்கையில் அமரச் செய்து, அவன் மட்டும் எதிரில் காலியாக இருந்த இருக்கையில், அந்த இளைஞரின் அருகிலமர்ந்தபடி மடியில் 'லாப்டாப்' பை வைத்துப் பார்க்க ஆரம்பித்தான்.

 அந்த வயதானவர்களின் முகங்களில் இறுக்கமும் சோகமும் இழையோடுவதைப் போலத் தோன்றியதைக் கண்ட அந்த இளைஞருக்கு அவர்களிடம் பேச வேண்டும் போலத் தோன்றினாலும், ராஜேஷின் ஆணைப்படி அவர்கள் நடப்பதுபோல் தோற்றமளித்ததால், அந்த இளைஞர் அவர்களிடம் பேச்சுக் கொடுப்பதைத் தவிர்க்கும் கட்டாயத்தால், ஒரு புன்னகையுடன் நிறுத்திக் கொண்டு, தன்னுடைய புத்தக வாசிப்பில் கவனத்தைச் செலுத்தலானார்.

 ரயிலில் விற்ற இட்லி வடைப் பொட்டலத்தை அவர்களுக்கு ராஜேஷ் வாங்கிக் கொடுத்து, அவர்கள் அதை உண்பதைப் பார்த்த இந்த இளைஞர், தனது பையிலிருந்து இரண்டு ரொட்டித் துண்டுகளை எடுத்துத் தானும் உண்டார்.

 அந்த முதியவர்கள் யாரிடமும் பேசாமலேயே கண்களை மூடியபடி, உறங்குவதைப் போலவே அமர்ந்தபடியிருந்ததைக் கவனித்த அந்த இளைஞருக்கு, அவர்கள் ஏதொவொரு தாங்கொணா வருத்தத்திலிருப்பதாகத் தோன்றியதால், அவரும் மெüனமாகவே பயணத்தைத் தொடர வேண்டி இருந்தது. ராஜேஷ் மும்முரமாக அவனது கணினியிலிருந்து பார்வையை விலக்காமலேயே பயணம் செய்தான்.

 மதியம் ஒரு மணிக்கு கோவை ரயில் நிலையத்துக்குள் வண்டி நுழையும்போதே அம்மூவரும் எழுந்து படியருகில் சென்றுவிட்டனர். ஆனால் அந்த இளைஞர் வண்டி நிற்கும் வரை எழுந்திருக்காமல் அமர்ந்திருந்தார்.



                                            ••••••



 'நம்மவீடு' என்ற அந்த முதியோர் இல்லம் ஒரு சிறு கிராமத்தின் அருகே இருந்தது. இல்லமும் அதைச் சுற்றியருந்த ஆரோக்கியமான சூழலும் மனதுக்கு மிக இதமும் இனிமையுமளிப்பனவாக இருந்தன.

 மாலை நான்கு மணியளவில் அந்த இல்லத்துள் நுழைந்த டாக்சியிலிருந்து ராஜேஷும் பெற்றோரும் இறங்கினர்.

 வரவேற்பறையிலிருந்து ஓர் இளைஞர் அவர்களை வரவேற்று அமரச் செய்து விசாரிக்கலானார்.

 ராஜேஷ் அவரிடம், "இவர்களை இந்த இல்லத்தில் சேர்க்க வந்திருக்கிறேன். உங்கள் இல்லம் சிறப்பாகச் செயல்படுகிறதென்று கேள்விப்பட்டிருப்பதால், பெங்களூரிலிலிருந்து இங்கே வந்திருக்கிறோம். நான் ஏற்கனவே சென்ற மாதம் இது பற்றிக் கடிதம் அனுப்பியிருந்தேன்'' என்றான்.

 அந்த இளைஞர், "நான் இராமலிங்கம், இந்த இல்லத்தின் மேனேஜர். உங்கள் கடிதம் பற்றி எனக்குத் தெரியும். எங்கள் இல்லத் தலைவர் ஐந்து மணிக்கு வருவார். அதுவரை சற்றுக் காத்திருக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்'' என்றார்.

 ""அதுவரை இந்த இல்லத்தின் வசதிகளைச் சுற்றிப் பார்த்தறிய முடியுமா?'' என்று ராஜேஷ் கேட்டவுடன், ""ஓ, நிச்சயமாக'' என்றபடி, இராமலிங்கம் அவர்களை அழைத்துச் சென்றபடியே விளக்க ஆரம்பித்தார்.

 "எங்கள் இல்லத்தலைவர் ஆனந்தன் பிறவியிலேயே பெற்றோரை இழந்தவர். அநாதை இல்லத்தில் வளர்ந்து படித்து, கணினிப் பொறியியலில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேறிய போது, அவருக்குச் சுவீடன் நாட்டிலிருந்து, அவருடைய திறமையை மதித்து, மாதம் இரண்டு லட்சம் ரூபாய் வருமானத்துடன் கூடிய வேலைக்கான உத்தரவும் கிடைத்தது. வேலையில் சேருவதற்கான பயணத்தைத் துவங்குவதற்கு முதல் நாள் கோவிலுக்குச் சென்றபோது, பெற்ற மக்களும் வசதிகளுமிருந்தும், கோவில் வாசலில் கையேந்தி நிற்கும் ஒரு பெற்றோர் இணையரைக் கண்டதில் மனம் வருந்தி, கிடைத்த வேலையை உதறி, உடனே இந்த இல்லத்தை அமைக்க உறுதி பூண்டு, கடந்த பத்து வருடங்களாக நடத்தி வருகிறார்.

 இது பிரேயர் ஹால். காலையிலும் மாலையிலும் பஜனை உண்டு. இது நூலகம். பல நல்ல புத்தகங்களைச் சேர்த்து வைத்திருக்கிறோம். இது இசை அறை. இனிய இசைக் குறுந் தகடுகளை வாங்கி வைத்திருக்கிறோம். வேண்டியவர்கள் வேண்டியதைப் போட்டு, கேட்டு மகிழலாம்.

 இது சமையலறை மற்றும் டைனிங் ஹால். இல்லத்தைச் சுற்றியுள்ள தோட்டத்தில் விளைவிக்கும் காய், கீரை, கனிகளைக் கொண்டு, சிறந்த உணவு அளிக்கப்படுகிறது. தோட்டத்தில் என்னைப் போன்ற, இங்கு பணிபுரியும் அனைத்து இளைஞர்களும் வேலை செய்வார்கள். இங்கு தங்கும் முதியோர்களில், விருப்பமும் ஆரோக்கியமான உடல் நிலையும் உள்ளவர்கள் சிலர் எங்களுடன் துணைக்கு வருவதுமுண்டு.

 அடிப்படை மருத்துவ வசதியுமுண்டு. இரண்டு இளம் டாக்டர்களும், நான்கு நர்ஸ்களும் இருக்கிறார்கள். அவசரத்துக்கு ஓர் ஆம்புலன்ஸ் வண்டியும் வைத்திருக்கிறோம்''

 ராஜேஷுக்கு எல்லாம் திருப்தியாக இருந்தது. தன்னுடைய பெற்றோரைப் பற்றிய கவலையை அவன் மறக்குமளவுக்கு இந்த இல்லத்தில் வசதிகள். பெங்களூரிலிருந்து மாதமொருமுறை வந்து பார்த்துவிட்டுப் போகலாம். அவன் இராமலிங்கத்திடம் கேட்டான்:

 "நீங்கள் எத்தனை பேர் இங்கே வேலை செய்கிறீர்கள்? இங்கே எத்தனை பேர் தங்கியிருக்கிறார்கள்? எல்லாரிடத்தும் ஒரே மாதிரிக் கட்டணம்தான் வசூலிக்கிறீர்களா?''

 இராமலிங்கம் புன்னகை நிறைந்த முகத்துடன், "இங்கே தற்போது ஏறக்குறைய அறுபது முதியவர்கள் இருக்கின்றனர். அவர்களுக்குச் சேவை செய்ய ஆண்களும், பெண்களுமாக, மருத்துவர்கள் உட்பட, இருபது பேர் இருக்கிறோம். இங்கு சேவை செய்யும் நாங்களனைவரும் அப்பா, அம்மா முகமறியாது அனாதை இல்லங்களில் வளர்ந்தவர்கள், இங்கே சேவையில் ஈடுபட அது ஒன்று மட்டும்தான் தகுதி. ஏனெனில் பெற்றவர்களையே கண்டறியாத எங்களுக்குத் தான் பெற்றோர்களின் அருமை பெருமையைப் பற்றி நன்குணர்ந்து அவர்களைப் போற்ற முடியுமென்பது எங்கள் இல்லத் தலைவரின் உறுதியான கருத்து. அவர் இந்தச் சேவையைத் தொடங்குவதற்காகத்தான் கிடைத்த வேலையை ஒப்புக் கொள்ளவில்லை என்றறிந்த அந்த சுவீடன் நிறுவனம், அவருக்கு அவருடைய புராஜக்ட் வேலையை இங்கிருந்தபடியே செய்யும்படியான விதிவிலக்குடன் கூடிய அனுமதி கொடுத்ததுடன், மாதச் சம்பளத்தையும், பதவி உயர்வையும் கூடக் கொடுத்து ஆதரித்து வருகிறது. அவரது மொத்த ஊதியமும், வேறு பல நல்ல உள்ளங்களின் ஆதரவிலும் தான் ,இந்த இனிய இல்லம் வளர்கிறது''

 ராஜேஷ், ""ஆனால் காப்புத் தொகையும், மாதாந்திரக் கட்டணமும் உண்டென்று எனக்கு நீங்கள் அனுப்பிய கடிதத்தில் இருந்ததே'' என்று கேட்டான்.

 இராமலிங்கம், "பெற்றவர்களைக் காப்பாற்றும் வசதியிருந்தும், காப்பாற்ற மனமில்லாதவர்களிடம் மட்டும்தான் கட்டணம் வசூலிக்கிறோம். வசதியிருந்தும் மனமில்லாதவர்களுக்கு எல்லாம் பெற்றோர் உண்டு. ஆனால் எங்களைப் போன்ற மனமிருந்தும் வசதியில்லாதவர்களுக்குத்தான் பெற்றோர்கள் இல்லை'' என்றதும், ராஜேஷுக்குச் சாட்டையடி கிடைத்ததைப் போல இருந்தது.

 இராமலிங்கம் தொடர்ந்து, "இங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஓர் அனாதைச் சிறுவர் இல்லக் குழந்தைகளை, ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் இங்கு வரவழைத்து, முதியவர்களிடம் சேர்ந்து பழகச் செய்கிறோம். அதனால், தாத்தா, பாட்டி உறவுகளும், பேரன் பேத்தி உறவுகளுமாக இங்கு ஆனந்தமாக இருப்பார்கள். அந்த இரண்டு நாட்களின் குழந்தைகளுக்கான செலவையும் நாங்களே ஏற்றுக் கொள்கிறோம்'' என்றார்.

 அவர்கள் திரும்பவும் வரவேற்பறைக்கு வந்து சேர்ந்த சில நிமிடங்களில் அந்த இல்லத் தலைவர் வருவதைக் கண்டதும், ராஜேஷுக்கும் அவனுடைய பெற்றோருக்கும் பெரியதோர் அதிர்ச்சி ஏற்பட்டது. அந்த இல்லத் தலைவர் கூட சிறிது அதிர்ச்சியுற்றார் எனலாம். இரயிலில் ஒன்றாகப் பயணம் செய்தவர்.

 அவருடைய வருகையைக் கவனித்த ராஜேஷ், இராமலிங்கத்திடம் "இவர்... இவருக்கு...'' என்று இழுத்தான்.

 "ஆமாம். இவர்தான் இல்லத் தலைவர். பிறந்தது முதலே இருகால்களும் இல்லாதவர்''

 அப்போதுதான் ராஜேஷ் நினைத்துப் பார்த்தான். இரயிலில் அவர் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவே இல்லை. மட்டுமல்ல, அவர் இறங்கும் முன்னரே அவர் அமர்ந்திருந்ததாலும், அவரை நண்பர்கள் பெங்களூரில் தூக்கி அமர வைத்ததையோ, கோவையில் அவரைத் தூக்கிச் சக்கர நாற்காலியில் வைத்ததையோ அவனால் காண முடியாமல் போய்விட்டது.

 சங்கர நாற்காலியில் புன்னகையுடன் கை கூப்பியபடி வந்த ஆனந்தன், "வாருங்கள்'' என்றழைத்தபடி வரவேற்று, இராமலிங்கத்திடம், "இவர்களுக்கு இந்த இல்லம் பற்றியெல்லாம் கூறிவிட்டீர்களா?'' என்று கேட்டபடி, ராஜேஷிடம், "உங்களுக்குத் திருப்தியாக உள்ளதா? '' என்று கேட்டார்.

 அதிர்ச்சியிலிருந்து விடுபடாத நிலையில், ராஜேஷ் தலையை மட்டும் அசைத்தான். "ஒரு கம்ப்யூட்டர் ஜீனியஸ். மாநிலத்தின் முதல் மாணவன். உயர்ந்த வேலையை ஒதுக்கித் தள்ளி எத்தனை முதியோர்களைத் தன் பெற்றோர்களாக நேசித்துச் சேவை செய்கிறான்? ஓடியாடி நடக்கவியலாதவன், இத்தனை பேரைக் காப்பாற்றும்போது, எல்லாம் இருந்தும் சொந்தப் பெற்றோரை வைத்துக் காப்பாற்றாத இழிவான என்னை என்ன செய்வது? இந்த மகத்தான மனிதனால் என் கர்வம் அடங்கி, மனமும் தெளிந்தது' என்று தன்னை உணர்ந்தவனாகச் சற்றுநேரம் மெüனமாக இருந்தான்.

 ஆனந்தனின் குரல் அவனைத் தட்டி எழுப்பியது. "உங்களுக்குத் திருப்தியென்றால், மேற்கொண்டு ஆவன செய்யலாம்''

 ராஜேஷ் ஆனந்தனிடம், "என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். உங்களையும் உங்கள் சேவையையும் நேரில் கண்டதில், இன்று என் மனம் நன்றாகத் தெளிந்துவிட்டது. இத்தனை பெற்றோர்களைக் காப்பாற்றுகின்ற உங்களிடம் என் பெற்றோரையும் காப்பாற்றும் பொறுப்பை நான் ஒப்படைக்கப் போவதில்லை. எல்லாம் இருந்தும், என் பெற்றோரைக் காப்பாற்றாமல் இனிமேலும் நான் வாழ்ந்தால், அதைவிட இழிவு இந்த உலகத்தில் வேறில்லை. இங்கே இந்தக் கணம், நான் புதிதாகப் பிறந்துவிட்டேன். எனவே எல்லா மாதமும் இதே தேதியில் இங்கு ஏற்படும் ஒருநாள் செலவை முழுவதுமாக நான் ஏற்றுக் கொள்ள முடிவு செய்துவிட்டேன். தயவு செய்து நீங்கள் அதற்கு ஒப்புக் கொள்ள வேண்டும் '' என்றான்.

 ராஜேஷின் மனமாற்றத்தை நன்கு புரிந்துணர்ந்து கொண்ட ஆனந்தன், "நன்றி நண்பரே, அடிப்படையில் நமது இந்தியமண், கருணையெனும் ஊற்று வற்றாத மண், இங்கு பிறந்தவர்கள் அனைவரும் கருணை மனதோடு மட்டுமே பிறந்தவர்கள், அந்நிய மோகமும், நாகரிக மோகமும் சேர்ந்து ஆங்காங்கே சில ஊற்றுக் கண்களைத்

 தற்காலிகமாக மூடி வைத்திருக்கின்றன. அவ்வளவே. எங்களைப் போன்றவர்களின் சிறிய சேவையால் அந்த ஊற்றுக் கண்கள் அனைத்தும் திறக்கப்படுமாயின், இந்நாட்டில் கருணை வெள்ளம் வற்றாத நதியாக ஓடி, முதியோரில்லம் என்ற ஒன்று இல்லாமலேயே போகும். உங்கள் நல்லெண்ணத்துக்கு நான் ஒரு சிறு கருவியாக அமைந்தது எனது உயர்பேறு'' என்றபடி அவர்களுக்கு விடைகொடுத்தபோது, அந்தப் பெற்றோரின் கண்களில் ஒளிர்ந்த ஆனந்தத்தில் இந்த மண்ணின் ஜீவ ஒளியைக் கண்டு மகிழ்ந்தான்.

நன்றி: தினமணி கதிர் (20.05.2012)




18.5.12

பிரகதீஸ்வரம் - ஒரு விஸ்வரூபம்


 சிந்தனைக் களம் 

- பாலகுமாரன்-


அந்த
க் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை, சொறிகல் என்ற பூராங்கல் இல்லை, மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும் போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு.

இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி( Heat Treatment) தெரிந்திருக்க வேண்டுமே. இரும்பை சூடாக்கி எதில் முக்கினர், தண்ணீரிலா, எண்ணெயிலா, நெருப்பில் கனிந்த இரும்பை எண்ணெயில் முக்கும் கலை(Oil quenching) ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உண்டா.

எத்தனை பேருக்கு எவ்வளவு சாப்பாடு. அரிசி, காய்கறி எங்கிருந்து, சமையல் பாத்திரம் எத்தனை. படுத்துறங்க எங்கு வசதி, மறைவு வசதிகளுக்கு நீர்த்துறை எது, மனிதருக்கு உதவியாய், யானைகள், மாடுகள், குதிரைகள், கழுதைகள் உண்டெனில், அதற்கு உணவும், அவற்றைப் பழக்கி உபயோகப்படுத்துவோரும் எத்தனைப் பேர்.

அத்தனைப் பேரும் ஆண்கள்தானா, கோவில் கட்டுவதில் பெண்களுக்கு பங்குண்டா. தரை பெருக்கி, மண் சுமந்து, பளு தூக்குவோருக்கு மோர் கொடுத்து விசிறி விட்டு, இரவு ஆட்டம் ஆடி, நாடகம் போட்டு, பாட்டு பாடி, அவர்களும் தங்கள் பங்கை வழங்கியிருப்பரோ?
இத்தனை நடவடிக்கையில், உழைப்பாளிகளுக்கு காயம் படாதிருந்திருக்குமா, ஆமெனில், என்ன வைத்தியம், எத்தனை பேருக்கு, எவ்வளவு வைத்தியர். இத்தனை செலவுக்கும், கணக்கு வழக்கென்ன, பணப்பரிமாற்றம் எப்படி, பொன்னா, வெள்ளியா, செப்புகாசா. ஒரு காசுக்கு எத்தனை வாழைப்பழம். என்னவித பொருளாதாரம். உணவுக்கு எண்ணெய், நெய், பால், பருப்பு, மாமிசம், உப்பு, துணிமணி, வாசனை அணிகலன்கள் இருந்திருக்குமா.

பாதுகாப்பு வீரர்கள் உண்டா, வேலை ஆட்களுக்குள் பிரச்சனையெனில், பஞ்சாயத்து உண்டா, என்ன வகை சட்டம். எவர் நீதிபதி. இவை அத்தனையும், ஒரு தனி மனிதன், ஒரு அரசன் நிர்வகித்தானா, அவன் பெயர் தான் அருண்மொழி என்ற ராஜராஜனா?
யோசிக்க யோசிக்க, மனம் மிகப் பெரியதாய் விரிவடைகிறது. இது கோவிலா, வழிபாட்டுத் தலமா. வெறும் சைவ சமயத்துக்குண்டான கற்றளியா?

இல்லை.

இது ஒரு ஆற்றங்கரை நாகரீகத்தின் வரலாற்றுப் பதிவு. திராவிடம் என்று வடமொழியில் அழைக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவுத் திறமைக்கு, கற்களால் கட்டப்பட்டத் திரை. காலம் அழிக்க முடியாத சான்றிதழ். காவிரிக்கரை மனிதர்களின் சூட்சம குணத்தின் வெளிப்பாடு. விதவிதமான கலைகளின் மனித நுட்பத்தின் மனத் திண்மையின் ஒருமித்த சின்னம்.

முப்பத்தாறு அடி உயர ஒற்றைக்கல், இருவர் கட்டிப் பிடிக்க முடியாத அகலம். இதுபோல பல கற்கள், முன்பக்க கோபுரங்களிலும் தாங்கு பகுதியாக இருக்கிறது. திருச்சிக்கு சற்று தெற்கே உள்ள கீரனூர் தாண்டி இருக்கிற நார்த்தாமலையிருந்து வந்திருக்கிறது. கிட்டதட்ட அறுபது கிலோ மீட்டர். எப்படி கொண்டு வந்தனர். இவ்வளவு பெரிய கற்பாறைகளை. பல்சகடப் பெரு வண்டிகள். பல சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டிகள், மாடுகள் இழுத்தும், யானைகள் நெட்டித் தள்ளியும் வந்திருக்கின்றன.

அந்த வழியில் ஒரு ஆறு கூட இல்லை. மலை தாண்ட வேண்டாம். மணல் பகுதி இல்லை. சரியான, சமமான பாதை. வழியெல்லாம் மரங்கள். அந்த நார்த்தாமலையில், ஆயிரம் வருடத்துக் கோவிலும் இருக்கிறது. வெட்டிய இடத்திலேயே வேண்டிக் கொள்ள கோவில் கட்டியிருக்கின்றனர்.

எப்படி மேலே போயிற்று, இத்தனை உயரம், விமானம் கட்ட கட்ட, வண்டிப்பாதையை கெட்டியான மண்ணால் அமைத்திருக்கின்றனர். இரண்டு யானைகள் எதிரும், புதிருமாய் போவதற்கான அகலத்தில் கற்பலகைகள், மனிதர்களாலும், மிருகங்களாலும் மேலே அந்த சுழல் பாதையில் அனுப்பப்பட்டன. உச்சிக்கவசம் வரை வண்டிப்பாதை நீண்டது. அதாவது, கலசம் பொருந்தும் போது விமானம் வெறும் களிமண் குன்றாய் இருந்திருக்கும்.

பிறகு...?

மெல்ல மெல்ல மண் அகற்றப்பட்டிருக்கும். ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் மண் அகற்றி, தொலைதூரம் போய் குவித்திருக்கின்றனர். குவிக்கப்பட்ட இடம் இப்போது இருக்கிறது. “சாரப்பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் அமைத்து” என்று சொல்கின்றனரே..வாய்ப்பே இல்லை. அத்தனை உயரம் சாரம், கற்பாறைகளைத் தாங்கும் கனத்தோடு கட்டப்பட்டிருக்காது. சாத்தியமே கிடையாது. நொறுங்கி விழுந்திருக்கும்.

அப்படியானால் சாரப்பள்ளம்.

சாரம் போட, அதாவது மண் பாதை போட மண் தோண்டப்பட்ட இடம் பள்ளமாயிற்று. சாரம் போட தோண்டப்பட்ட போது உண்டான பள்ளம் சாரப்பள்ளம்.

இத்தனை மனிதர்கள் எப்படி? உழைப்பாளிகள் எங்கிருந்து? வேறெதற்கு போர்?

பாண்டிய தேசம், சேர தேசம், இலங்கை, கீழைச் சாளுக்கியம், மேலைச் சாளுக்கியம் என்று பரவி, எல்லா இடத்திலிருந்தும், மனிதர்களும், மிருகங்களும், பொன்னும், மணியும், மற்ற உலோகங்களும், அதற்குண்டான கைவினைஞர்களும் இங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர். கோவில் கட்ட போரா; போர் செய்து ஜெயித்ததால் கோவிலா; இரண்டும் தான். சோழர்கள் போர் செய்யப் போகவில்லை எனில், பாண்டியர்கள், மேலைச் சாளுக்கியர்கள் போர் துவக்கி ஜெயித்திருப்பர்(வெகு காலம் கழித்து ஜெயித்தனர்).

எனவே, எதிரியை அடக்கியது போலவும் ஆயிற்று, இறைபணி செய்தது போலவும் ஆயிற்று.

இது சோழ தேசத்து அரசியல் சாணக்கியம்.

கல் செதுக்க விதவிதமான சிற்பிகள், மேல் பகுதி நீக்க சிலர், தூண், வெறும் பலகை, அடுக்குப்பாறை செய்ய சிலர், அளவு பார்த்து அடுக்க சில்ர, கருவறைக் கடவுள் சிலைகள் செய்ய சிலர் என்று பலவகையினர் உண்டு.

உளிகள், நல்ல எகு இரும்பால் ஆனவை. பெரிய கல்தொட்டியில் எண்ணெய் ஊற்றி, பழுக்க காய்ச்சிய உளிகளை சட்டென்று எண்ணெயில் இறக்க, இரும்பு இறுகும். கல் செதுக்கும் கோவிலுக்குள், இப்படிப்பட்ட கல்தொட்டி இன்னும் இருக்கிறது. கயிறு, கம்பிகள் சிறிதளவே பயன்பட்டன. உயரப் பலகைகள் போட மண் உபயோகப்பட்டது.

எல்லா ஊரிலிருந்தும், தஞ்சைக்கு உணவு தானியங்கள் வந்திருக்க வேண்டும். ஆடுகள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆடுகள் வளர்ப்பது ஒரு கலையாக, கடமையாக இருந்திருக்கிறது. ‘சாவா மூவா பேராடுகள்’ என்ற வாக்கியம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. தொன்னூற்றாறு ஆடுகள் இருப்பினும், அந்த ஆட்டுக் கூட்டம் குறையாது. குட்டி போட்டு வளரும். வளர்க்கப்பட வேண்டும்.

நல்ல மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. விதவிதமான மருந்துப் பெயர்கல் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அறுவை சிகிச்சை தெரிந்தவர்கள் இருந்திருக்கின்றனர். மருத்துவமனை சார்ந்த தொழிலாளர்கள் உண்டு. மருந்துக்கிடங்கு உண்டு. மூலிகை தேடி சேகரிப்போர் உண்டு. நீர் உற்றுபவர் உண்டு.

கணக்கு வழக்குகள், ஓலைச் சுவடிகளில் பதிவு பெற்றிருக்கின்றன, துல்லியமான கணக்கு வைக்கப்பட்டிருக்கிறது. தானங்கள் கல்வெட்டாய், குன்றிமணி தங்கம் கூட பிசகாமல் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதைச் சொல்ல ஒரு ஆள். செதுக்க ஒரு ஆள். நேர் பார்க்க ஒரு ஆள். வீரர்களுக்குள் சண்டை நடந்ததெனில், பஞ்சாயத்து நடந்ததற்க்கான கல்வெட்டுகள் உண்டு. மாமன்னர் ராஜராஜன் கண்ட விற்போர் உண்டு. ஒண்டிக்கு ஒண்டி சண்டை செய்ய விட்டிருக்கின்றனர்.(Duel). இதில் ஒருவன் தப்பாட்டம் ஆடி இருவருமே இறந்தால், இருவரின் மனக்கேதமும் தீர்க்க, கோவில் விளக்கெரிக்க வேண்டி, யார் மனஸ்தாபத்திற்குக் காரணமோ, அவர்களுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். 96 ஆடுகள் அபராதம். அதாவது, சாவா மூவா பேராடுகள். தஞ்சையிலுள்ள இரு கோவிலில் இக்கல்வெட்டு இருக்கிறது.

கோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார், யார். அவருக்கென்று வீடு ஓதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி, பெயர் எழுதி கல்வெட்டாய் வெட்டியிருக்கிறது. ‘இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்கு ஒன்றும், இடது சிறகு நான்காம் வீட்டு எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும் ‘என்று பல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.

வீணை வாசிக்கும் ஆதிச்சன் இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பணியில் உள்ள எல்லா தொழிலாளர்களும் பெயரும், தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, கோவிலுக்கு யார் தானம் தந்தனரோ, அவர்கள் தந்தது சிறு தொகையானாலும், பெரிய தொகையானாலும், தங்க ஆபரணமானாலும், கல்லில் வெட்டப்பட்டிருக்கிறது.

முதல் தானம் ராஜராஜனுடையது.
‘நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்’ என்று கல்வெட்டு துவங்குகிறது. தான் மட்டும் இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை.

கோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர். கொஞ்சம் தெரிய வருகிறது.

விமானத்தினுள்ளே உயிர் ஓவியங்கள் உள்ளன. சட்டை அணிந்த தளபதிகள், பூணூல் அணிந்த அந்தணர்கள், இடுப்பில் பாவாடையும், மேல் போர்வையும் அணிந்த அரசிகள், இடது பக்க பெரிய கொண்டையோடு மாமன்னர் ராஜராஜன், அலங்காரமான,மிக அழகான கறுப்பு, இச்வப்பு, மாநிறம் கொண்ட தேவரடியர்கள் என்று அழைக்கப்பட்ட நடனமாதர்கள், சிதம்பரம் கோவில் நடராஜர், விதவிதமான முகங்கள், ஒன்று போல் ஒன்று இல்லை, உயிர் ததும்பும் முகபாவங்கள். தட்டை ஓவியங்கள். ஆனால், தெளிவாக்த் தெரியும் ஒரு உலோகம்.

மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எது. போரா, கலைஞர்கள் செய்திறனா. இல்லை பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல். கோபுர வாசலில் உள்ள சுவர்களில் சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன.

கண்ணப்பநாயனார். பூசலார், கண்டேஸ்வரர், மன்மத தகனம் என்று முக்கால் அடி உயர பதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர். அடுத்த விநாடி குழந்தை பிறக்கும் என்ற தாயின் உருவம், மன்னர் முகங்கள், புராண காட்சிகள் எல்லாம், கோவில் கோபுரங்களில் உண்டு.

இது என்ன வித கோவில்?

விமானம் உயரம். மிக உயரம். கோபுரங்கள் சிறியவை. இது ஆகமவிதியா. புதிய சிற்ப சாஸ்திரமா. உள்ளே நுழைந்ததும் நந்தியை மனதால் அகற்றிவிடுங்கள். எதிரே உள்ள விமானம் தான் சிவலிங்கம். வான்ம ஒரு சிவலிங்கம். விமாத்திற்குள் உள்ள வெளி ஒரு சிவலிங்கம். வெளிக்கு நடுவே கருவறையில் கருங்கல் சிவலிங்கம். எல்லாம் சிவமயம்.

இந்த விமானத்திற்கு மாமன்னர் ராஜராஜன் வைத்த பெயர், ‘தென்திசை மேரு’ உள்ளே கடவுள் பெயர் பிரகதீஸ்வரர். தமிழில் பெரு உடையார். வடக்கே உள்ள கைலாயத்தின் மீது காதல், கைலாயம் போகவில்லை. கைலாயத்தை இங்கே கொண்டு வந்து விட்ட உடையார் பெரிய உடையார்.

இது போதுமா கடவுளைச் சொல்ல?

ரொம்ப பெரிசு ஐயா கடவுள்.

கருவறைக்கு அருகே உள்ள துவாரபாலகர் காட்டுகிறார். பதினேழு அடி உயரம். அவர் காலுக்கு அருகில் கதை, கதையைச் சுற்றி மலைப்பாம்பு, மலைப்பாம்பு வாயில் பெரிய யானை. அதாவது, யானையை விழுங்கும் பாம்பு. பாம்பு சுற்றிய கதை. கதையில் கால் வைத்த துவாரபாலகர். அவர் கை ‘விஸ்மயம்’ என்ற முத்திரை காட்டுகிறது. உள்ளே இருப்பதை விவரிக்க முடியாது என்று கை விரிக்கிறது.

விவரிக்கவே முடியாத சக்திக்கு, கடவுளுக்கு, தன்னாலான அடையாளம் காட்டியிருக்கிறார் மாமன்னர் ராஜராஜன்.

அதுவே பிரகதீஸ்வரம்.
அதுவும் விஸ்வரூபம்.
இன்றளவும்.

தகவல்: வி.ஸ்ரீனிவாசன்


காண்க: http://balakumaranpesukirar.blogspot.com/2010/09/blog-post_23.html