நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

26.10.11

நாம் எல்லோரும் கிருஷ்ணன் தானே?


கவிதை

நாடு முழுவதும் நரகாசுரர்கள்!
எத்தனை கொடியோர், எத்தனை வடிவில்?
நரகாசுரரை ஒழித்திடும் வீர
நாயகர் யாரோ? சிந்தித்திடுவோம்!
 
ஊழல் செய்து வயிறு வளர்க்கும்
உழைப்பே இல்லா உண்ணிகள் ஆட்டம்!
லஞ்சப் பேயை லாவகம் ஆக்கி
லாபம் பார்க்கும் சுயநலக் கூட்டம்!
 
பகுத்தறி வென்ற பெயரினில் நாட்டின்
பாரம்பரியம் இகழ்ந்திடும் துஷ்டர்!
முற்போக் கென்று சொல்லிக் கொண்டே
முன்னேறாமல் தடுக்கும் கயவர்!
 
ஏழை, செல்வர் பிளவு பெருக்கி
ஏய்க்கும் எண்ணம் நெஞ்சில் கொண்டோர்!
பசியால் வாடும் ஏழைகளின் பால்
பரிவினைக் காட்டும் பண்பினை அற்றோர்!
 
கோயிலுக் குள்ளே குண்டு வெடிக்கும்
குரூர மான பயங்கர வெறியர்!
மதப்பிரி வினையால் நாட்டைப் பிளந்தும்
மனமடங் காத மமதை கொண்டோர்!
 
சாதிக ளுக்குள் சங்கடம் வளர்த்து
சண்டைகள் மூட்டும் சகுனி குலத்தோர்!
சேவை என்ற பெயரினில் நாட்டை
கூறாய் ஆக்கும் ஐந்தாம் படையோர்!
 
ஆட்சியைப் பிடிக்க எதையும் செய்யும்
ஆணவம் மிக்க அரசியல் தலைவர்!
நம்பிய வர்களின் கழுத்தை அறுத்து
தன்னலம் பேணும் தந்திரக் காரர்!
 
அந்நிய நாட்டு சித்தாந் தங்கள்
அமுதம் என்று சொல்லித் திரிவோர்!
பண்பா டொழிக்க முயற்சிக் கின்ற
பதர்களுக் குதவும் பாவ மனத்தோர்!
 
மத மாற்றத்தால் நாட்டைக் குலைக்கும்
மதியிலி செயலை வளர்க்கும் தீயோர்!
காட்டிக் கொடுக்கும் துரோகத் தனத்தால்
நாட்டைக் கெடுக்கும் நாணய மற்றோர்!
 
ஒற்றுமை விதையில் அமிலம் ஊற்றி
ஒழிக்க நினைக்கும் அண்டை நாட்டோர்!
தினமும் படுகொலை செய்து மகிழும்
தீமையின் உருவாய் வாழும் பகைவர்!
 
எத்தனை வடிவம் எடுத்திடும் போதும்
எத்தர்கள் உருவம் ஒன்றே யன்றோ?
இத்தனை தெரிந்தும் இனிமேல் நாமும்
இழிவைத் தாங்கிப் பொறுப்பது நன்றோ?
 
நாடு என்பது நாமென்று உணர்ந்தால்
நாம் எல்லோரும் கிருஷ்ணன் தானே?
நாம் எல்லோரும் இணைந்து எழுந்தால்
நரகா சுரர்கள் அற்பம் தானே?


- வ.மு.முரளி
காண்க:
 எழுத்தாளர் ஜெயமோகனின் கட்டுரை
அனைவருக்கும் இனிய 
தீபாவளி நல்வாழ்த்துக்கள்! 
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக