நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

11.9.12

மகாகவி புதுவைக்குப் போன சூழ்நிலை

 
சரித்திரம் 
மகாகவி பாரதியாரின் வாழ்க்கையில் ஓர் திருப்புமுனையாக அமைந்தது, அவர் புதுச்சேரிக்குக் குடிபெயர்ந்த நிகழ்ச்சி. அங்குதான் அவருக்கு அரவிந்தர், வ.வெ.சு. ஐயர் போன்ற பெரியோர்களின் தொடர்பு கிடைத்தது. அங்குதான் அவருடைய 'முப்பெரும் பாடல்கள்' உள்ளிட்ட பல அமரத்துவம் வாய்ந்த பாடல்கள் உருவாயின. அங்குதான் பாரதியின் பெருமை உலகத்துக்குத் தெரியத் தொடங்கியது. அவருடைய உயிரைக் காத்த குவளைக் கண்ணனின் தொடர்பும் அங்குதான் கிடைத்தது.

 'இந்தியா' பத்திரிகையைத் தொடங்கி சென்னையில் நடத்திய மண்டையம் ஸ்ரீநிவாசாச்சாரியார் தனது பத்திரிகையை புதுச்சேரிக்கே கொண்டு சென்று, அதன் மூலம் பாரதியின் குரல் உலகம் முழுவதும் கேட்கும்படி செய்யும் வாய்ப்பும் ஏற்பட்டது. அவர் குறிப்பறிந்து உதவ பல உத்தமர்கள் கிடைத்தார்கள். ஆகையால், பாரதி புதுவைக்குக் குடியேறியது அவர் வாழ்வில் மறக்க முடியாத, முக்கியமான சம்பவமாக அமைந்துவிட்டது.

 மகாகவி பாரதி சென்னையில் சுதேசமித்திரனில் பணிக்கு அமர்ந்து பின்னர் அங்கிருந்து மண்டையம் ஸ்ரீநிவாசாச்சாரியார் தொடங்கிய "இந்தியா' பத்திரிகையில் பணிபுரிந்த சமயம் அது.

 "இந்தியா' பத்திரிகைக்கு ஆசிரியர் பணி முழுவதையும் பாரதியே செய்து வந்தார். என்றாலும் என்.ஸ்ரீநிவாசன் என்பவர் பெயர்தான் ஆசிரியர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவர் பத்திரிகை முதலாளியுடைய உறவினர். 1908-ஆம் வருஷம் அந்தப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் ஆங்கில அரசின் கோபத்தைக் கிளறுவதாக அமைந்திருந்தன. ஆகவே அரசாங்கம் 'இந்தியா' பத்திரிகை ஆசிரியரைக் கைது செய்ய உத்தரவிட்டது. சந்தர்ப்பங்கள் அதன் 'ஆசிரியர்' என்று குறிப்பிட்டிருந்த ஸ்ரீநிவாசனின் கைதில் போய் முடிந்தது.

 உண்மையில் அரசாங்கம் கைது செய்ய நினைத்தது பாரதியாரைத்தான். அன்று நடந்தது என்னவென்றால் அலுவலக நேரம் முடிந்து பாரதி வீட்டுக்குச் செல்ல மாடிப்படி இறங்கி வந்தார். அப்போது வாயிலில் சிலர் வந்து 'ஆசிரியர் இருக்கிறாரா?' என்றனர். ஸ்ரீநிவாசனைத் தேடித்தான் வந்திருக்கிறார்கள் என்று நினைத்து பாரதி 'அவர் மாடியில் இருக்கிறார்' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். வந்தவர்கள் சாதாரண உடையில் வந்த போலீசார். ஆசிரியரின் கைது இப்படித்தான் நடந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியைச் சிலர் வேறு விதமாகக் கதை திரித்தும் விட்டனர்.

 ஆசிரியர் ஸ்ரீநிவாசன் கைது செய்யப்பட்டுவிட்டார். ஆனால், அரசு தேடுவதோ பாரதியாரை என்று அறிந்துகொண்ட அவரது நண்பர்கள் வக்கீல் துரைசாமி ஐயர் உள்பட பலர் பாரதியார் கைது செய்யப்பட்டுவிட்டால் சிறைக் கொடுமைகளைத் தாங்கிக் கொள்ளும் சக்தி அவருக்குக் கிடையாது என்பதை உணர்ந்தார்கள். பாரதியாருக்கு மிகவும் வேண்டியவர்களான வ.உ.சிதம்பரம் பிள்ளையும், சுப்பிரமணிய சிவாவும் சிறையில் படும் கஷ்டங்களை பாரதி மட்டுமல்ல, நண்பர்களும் அறிந்தே இருந்தார்கள். ஆனாலும் அந்தச் சிறைக் கொடுமைகளுக்குப் பாரதி பயப்படவில்லை. ஆனால், நண்பர்கள் மன வருத்தம் அடைந்தார்கள்.

 "பாரதி மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். எந்தச் சூழ்நிலையிலும் இருந்து தாக்குப்பிடிக்கக் கூடியவர். வயிறு நிரம்ப உணவு உண்ணும் பழக்கமும் அவரிடம் கிடையாது. கிடைத்தால் உண்பார், இல்லையேல், பட்டினியாகப் படுத்து உறங்கி விடுவார். எந்தச் செயற்கையான கட்டுப்பாட்டுக்குள்ளும் அடங்காதவர் பாரதி''. இப்படித் தன்னுடைய கட்டுரையொன்றில் கூறுபவர் மண்டையம் ஸ்ரீநிவாசாச்சாரியார்.

 பாரதியின் நண்பர்களான வக்கீல் துரைசாமி ஐயர் முதலானோர், பாரதியால் சிறைக் கொடுமைகளைத் தாங்க முடியுமா, அவர் ஒரு சுதந்திரப் பறவையாயிற்றே? அவரைப்போய் ஒரு கூண்டில் அடைத்தால் அவரால் தாக்குப்பிடிக்க முடியுமா? அங்கு சட்டதிட்டங்கள் மிகக் கடுமையானவைகளாக இருக்குமே? அவர்கள் கொடுக்கும் உடல் உழைப்பைக் கண்டிப்பாகச் செய்து முடிக்க வேண்டுமென்று வற்புறுத்துவார்களே, அவற்றை இவரால் செய்ய முடியுமா என்றெல்லாம் கவலைப்பட்டார்கள்.

 நண்பர்கள் பாரதியை வற்புறுத்தினார்கள். "பாரதி, உனக்காக இல்லாவிட்டாலும், உன் குடும்பத்தின் நலனுக்காக யோசித்துப் பார். நீ சிறையில் அடைபட்டு வருந்துவதனால் என்ன ஆகிவிடப் போகிறது. உன் எழுத்துகள் முடக்கப்படும். உன் குடும்பத்தார் சிரமங்களுக்கு ஆளாவார்கள். சிறைக்கொடுமை உன் உயிருக்கும் ஆபத்தாக முடியலாம். பிரிட்டிஷ் ஆதிக்கத்திலுள்ள சென்னையிலிருந்து, பிரெஞ்சு ஆதிக்கத்திலுள்ள புதுச்சேரிக்கு நீ போய்விடுவாயானால், அங்கு உனக்கு எல்லா உதவிகளையும் செய்து கொடுக்க முடியும். நீயும் சுதந்திரப் பறவையாக இருந்து எழுதிக்கொண்டு, சுதந்திர வேள்வியில் உன் பங்கைச் செலுத்த முடியும். நாடும் மக்களும் பயன்பெறுவர், என்ன சொல்கிறாய்? உடனே புறப்படு" என்று சொல்லி அவரைத் தன் காரில் ஏற்றிக்கொண்டு பாரதியை சைதாப்பேட்டை ரயில் நிலையம் அழைத்துச்சென்று புதுச்சேரிக்கு ரயிலேற்றி அனுப்பி வைத்தார் துரைசாமி ஐயர் என்று வரலாற்று ஆய்வாளர்கள் எழுதுகிறார்கள்.

 புதுச்சேரி சென்றடைந்த பாரதியின் கையில் நண்பர் ஒருவர் "சிட்டி குப்புசாமி ஐயங்கார்' என்பவருக்குக் கொடுத்திருந்த அறிமுகக் கடிதம் ஒன்றுதான் இருந்தது. எங்கு செல்வது? எங்கு தங்குவது? பிழைப்புக்கு என்ன வழி என்றெல்லாம் குழப்பம் நிலவியது பாரதியின் மனத்தில். புதுச்சேரி ஊரும் பாரதிக்குப் புதிது. கடன் வாங்கிவிட்டுத் திரும்பக்கொடுக்க முடியாதவர்கள் தப்பிச்சென்று தலைமறைவாக இருக்கப் பயன்பட்ட ஊர்தான் புதுச்சேரி என்று ஒரு செய்தி உண்டு. அவர் அப்படியெல்லாம் கடன் வாங்கித் தலைமறைவாக வந்தவர் இல்லையே? இந்த பாரத புண்ணிய பூமியின் சுதந்திரத்துக்காக ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக எழுதிய குற்றத்துக்காக சிறையில் தள்ள நினைப்பவர்களின் கொடுமைகளிலிருந்து தப்பியல்லவா இங்கு வர நேர்ந்தது. ஆனால், பாரதி அங்கு சென்ற நேரமோ என்னவோ, கடன் வாங்கியோரின் புகலிடம் எனும் கெட்ட பெயர் புதுச்சேரிக்கு மாறிப் போய்விட்டது.  இந்திய தேசபக்தர்களின் புகலிடம் என்ற நல்ல பெயர் கிடைத்து விட்டது.

 பாரதி சென்ற பிறகல்லவா மகான் அரவிந்தர் அங்கு வந்தார். வ.வெ.சு.ஐயர் வந்தார், நெல்லை மாடசாமி பிள்ளை வந்தார். இப்படி தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் தேசபக்தர்கள் இவர்களைப் பார்ப்பதற்காக வந்து செல்லும் இடமாக அல்லவா புதுச்சேரி மாறிவிட்டது. இந்திய சுதந்திரத்துக்கு உதவிசெய்த சிறப்பும் இவ்வூருக்கு ஏற்பட்டுவிட்டது.

 'இந்தியா' பத்திரிகையின் ஆசிரியர் சென்னையிலிருந்து புதுச்சேரி சென்றுவிட்டார் என்கிற செய்தி சென்னையிலிருந்த ஆங்கில அரசாங்கத்தின் போலீசாருக்குச் சில நாள்கள் கழிந்த பின்னர்தான் தெரியவந்தது. ஆனால், நீதிமன்றத்தில் 'இந்தியா' ஆசிரியர் மீது வழக்கு நடந்து கொண்டிருந்தபோதும், அவர் புதுச்சேரி சென்றுவிட்டார் என்ற செய்தியை போலீஸôர் மறைத்துவிட்டார்கள். ஏன் தெரியுமா? ஆங்கில அரசாங்கப் போலீஸிடமிருந்து தப்பிக்க இப்படியொரு வழி இருக்கிறதென்று எல்லா சுதந்திரப் போராட்ட வீரர்களும் தெரிந்து கொண்டுவிட்டால் பின்னர் ஆபத்து அல்லவா அதனால்தான்.

 பாரதி, பெயர் தெரியாத பேர்வழி அல்லவே. அவரைத் தமிழகம் முழுவதும் அறிந்து வைத்திருக்கிறதே. செய்தி வெளிவராமல் இருக்குமா? மக்களுக்கும் தெரிந்துவிட்டது. பிரிட்டிஷ் போலீஸôரின் கைது நடவடிக்கையிலிருந்து பாரதி தப்பிப் புதுச்சேரி சென்றுவிட்டார் என்பதை மக்கள் தெரிந்துகொண்டு விட்டனர்.

 பாரதியார் புதுச்சேரி சென்றடைந்து அறிமுகக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சிட்டி குப்புசாமி ஐயங்கார் வீட்டை விசாரித்துக்கொண்டு அங்கு போய்ச் சேர்ந்தார். அங்கு சென்றடைந்ததும் பயணக் களைப்பு போகும்வரை அங்கு தூங்கினார். அவர் வீட்டில் இரண்டு நாள்கள் கழித்தார். எப்படியும் சென்னைப் போலீசார் தன்னைத் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டுபோக புதுச்சேரி வருவார்கள் என்ற நினைவும் பாரதிக்கு இருந்தது. அவர் எதிர்பார்த்தது போலவே சென்னைப் போலீஸôரின் வேவுபார்ப்பவர்கள் புதுவைக்கு வந்து இவரை நோட்டமிடத் தொடங்கினார்கள்.

 பாரதியாரையும் மற்ற தேசபக்தர்களையும் வேவு பார்ப்பதற்காகவே சென்னை மாகாண சர்க்கர் ஒரு வேவுகாரப் படையை புதுச்சேரியில் அமைத்திருந்தார்கள். இந்த வேவுப் படையினரால் பாரதி பட்ட தொல்லைகள் ஏராளம். பலவிதமான வேடங்களைத் தரித்துக் கொண்டு வருவார்கள். நல்லவர்கள்போல நடிப்பார்கள். இவர் வாயைக் கிளறி ஏதாவது தகவல் கிடைக்குமா என்று பார்ப்பார்கள். இவர்கள் எல்லோரையும் பாரதி விழுங்கி ஏப்பமிட்டுவிட்டார் என்று சொல்லலாம். இவர்கள் விரித்த வலையில் பாரதி சிக்கவேயில்லை.

 பாரதியைத் தங்க வைத்திருந்த சிட்டி குப்புசாமி ஐயங்காரை உளவுக்காரர்கள் விட்டுவைக்கவில்லை. அவரை அச்சுறுத்திப் பார்த்தார்கள். 'பாரதி ஒரு பயங்கரவாதி, அவருக்கு இடம் கொடுத்தால் ஐயங்காரும் சிறைக்குச் செல்ல நேரிடும்' என்றெல்லாம் சொல்லி மிரட்டினார்கள். பிரெஞ்சு போலீஸ் அதிகாரிகளும் அவர்களுடைய கையாள்களாக இருந்துகொண்டு இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள்.

 குப்புசாமி ஐயங்கார் அரசியல் அறிந்தவருமல்ல, பெரும் செல்வந்தருமல்ல. அவர் ஒரு வியாபாரியிடம் கணக்கு எழுதிக் கொண்டிருந்தவர். அவரைப்பற்றி மண்டையம் ஸ்ரீநிவாசாச்சாரியார் சொல்கிறார்: "அவர் சங்கீதத்தில் ஞானமுள்ளவர், நன்றாகப் பாடவும் செய்வார். வைதீக ஆசாரசீலர். அவருக்குத் தமிழ் தவிர, பிரெஞ்சு மொழியும், ஆங்கிலமும் தெரியும். பயந்த சுபாவம் உடையவர். போலீஸ் என்று சொன்னால் பயம்''.

 அப்படிப்பட்டவரிடம் ஆங்கில, பிரெஞ்சு போலீசார் போய் மிரட்டினால் பாவம் அவர் என்ன செய்வார்? நமக்கு ஏன் இந்த வம்பு என்று மிரண்டு போய்விட்டார். அவரிடம் போலீசார், "பாரதியை எப்படித் தெரியும்? அவரை ஏன் வீட்டில் தங்க வைத்திருக்கிறீர்?'' என்று மிரட்டியதில் அவர் பாரதியைத் தனக்குத் தெரியாதென்றும், ஒரு நண்பர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவரை வீட்டில் தங்க வைத்ததாகவும் சொல்லிவிட்டார்.

 'பாரதியார் ஆங்கில சர்க்காருக்கு எதிரானவர். சென்னையில் புரட்சியைத் தூண்டிவிட்டுவிட்டு இங்கு வந்து ஒளிந்து கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட புரட்சிக்காரருக்கு இடம் கொடுத்தால் உமக்குத்தான் வம்பு. அதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் அவரை உடனடியாக வெளியே அனுப்பிவிடுவது நல்லது' என்று யோசனை சொன்னார்கள். குப்புசாமி ஐயங்காருக்கு தர்ம சங்கடம். பாரதியாரோ மரியாதைக்குரியவர். தகுந்த அறிமுகத்துடன் வந்திருப்பவர். வெளியே போகச்சொன்னால் எங்கே போவார்? ஐயங்காருக்கு போலீஸிடம் பயம், பாரதியாரை வெளியேபோகச் சொல்லவும் தயக்கம்.

 பாரதியாரிடம் மெல்ல விஷயத்தைச் சொன்னார். தனக்கு ஒரே குழப்பமாக இருப்பதாகவும் என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றும், முடிந்தால் பாரதியாரை வேறு இடம் பார்த்துக் கொள்ளும்படியும் தயங்கியபடி சொன்னார்.

 பாரதியின் குணத்தை மண்டையம் மிகத் துல்லியமாக எடைபோட்டு வைத்திருக்கிறார். அவர் சொல்கிறார், ஏதாவது சிக்கல் என்றால் பாரதி முதலில் சிறிது கவலைப்படுவாராம், பிறகு ஆழ்ந்து யோசித்தபின் உறுதியோடு செயல்படுவாராம். பிறகு எந்தவிதத் தயக்கத்துக்கும் இடம் கொடுக்க மாட்டாராம். முதலில் அந்த குறைந்த நேரத்தில் அவர்படும் மனவேதனை சொல்லி முடியாது என்கிறார்.

 தன் சொந்த நாட்டுக்குச் சுதந்திரம் வேண்டி போராடுகின்ற காரணத்தால், அடுத்த நாட்டுக்குச் சொந்தமான ஊரிலும் இடமில்லாமலா போய்விடும்? தனக்கு ஏற்பட்ட இந்தச் சிக்கலை எண்ணி மிக அதிகமாக மனவேதனைபட்டாராம் பாரதி. என்றாலும் உடனடியாக குப்புசாமி ஐயங்காருக்குப் பதில் சொல்ல மனமில்லை. இன்னும் ஓரிரண்டு நாள்களில் ஏதாவது ஏற்பாடு செய்துகொண்டு வெளியேறி விடுகிறேன் என்று பதில் சொல்லிவிட்டார்.

 சொன்னபடி அடுத்த இரண்டு நாள்களும் அவர் பட்ட வேதனை, மனக்கஷ்டம் சொல்லி மாளாது. ஊர் புதிது. என்ன செய்வது? யாரைப் போய்க் கேட்பது என்ற தயக்கம். தெரிந்தவர் என்று சொல்லிக்கொள்ள ஒருவரும் கிடையாது. குப்புசாமி ஐயங்கார் தன்னிடம் கடுமையாக நடந்து கொள்வதுபோல பாரதி நினைத்தார். தம்மை யாருக்காவது பிடிக்கவில்லை என்று தெரிந்தால் அடுத்த நொடி அங்கிருந்து போய்விடும் குணம் உள்ள பாரதிக்கு இக்கட்டான நிலை. பெரிய பெரிய மனிதர்களைக்கூட தூக்கி எறிந்துவிட்டு வந்தவர் பாரதி.

    இங்கு வந்து இப்படி வாழும் நிலை வந்ததை எண்ணி மனம் புழுங்கினார். கோபம் வந்தாலும் அடக்கிக்கொண்டு, 'இப்போது கோபம் முக்கியமல்ல, இருக்க ஒரு இடம் வேண்டும். அதுதான் முக்கியம்' என்று எண்ணினார்.

  இந்த நிலையில் போலீஸ் குப்புசாமி ஐயங்காரைக் கூப்பிட்டு மறுபடி மிரட்டியது. மிரண்டுபோய் வீடு திரும்பிய ஐயங்காரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது பாரதியாருக்கு. தமிழகத்தில் தம்மைத் தெரிந்தவர் பலர் இருக்க, இங்கு வந்து இப்படி யாரையும் தெரியாமல் அல்லல்பட நேர்ந்ததே, 'இந்தியா' பத்திரிகை வாங்கிப் படிக்கும் பழக்கம் உள்ளவர் யாராவது இங்கு இருந்தால் நல்லது. அப்படிப்பட்டவர்கள் யார் இங்கு இருக்கிறார்கள் என்பதுகூட தெரியவில்லையே? அப்படி யாராவது இந்தியா பத்திரிகை சந்தாதாரர் இருந்தால் நலமாக இருக்குமே என்று சிந்தித்தார். இந்தச் சிந்தனையோடு அன்றிரவு வீட்டின் வெளித்திண்ணையில் கவலை தோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருந்தார்.

 அந்த நேரம் குப்புசாமி ஐயங்காரின் வீட்டுக்கு அருகில் இருந்த தனது சகோதரியின் வீட்டுக்கு வந்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த குவளை கிருஷ்ணமாச்சாரியார் என்பவரின் கண்களில் அடுத்த வீட்டுத் திண்ணையில் ஒரு புதிய மனிதர் உட்கார்ந்து கொண்டிருப்பது தெரிந்தது. யார் அந்தப் புதியவர் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் குவளை அவரிடம் சென்று, "சுவாமி, தாங்கள் யார்? அடுத்த வீட்டில் என் சகோதரி இருக்கிறாள். அவளைப் பார்க்க வந்துவிட்டுத் திரும்பும்போது, தங்களைக் கவனித்தேன். புதியவராக இருப்பதால் யார் என்று தெரிந்து கொள்ளலாம் என்று வந்தேன்'' என்றார்.

 பாரதிக்குப் புத்துயிர் வந்ததுபோல் இருந்தது. 'ஆகா, இறைவன் வழிகாட்டிவிட்டான். இந்தக்  குள்ள மனிதன் நிச்சயம் தனக்கு உதவி செய்வான்' என்று தோன்றியது. என்றாலும் தான் யார், என்ன என்பதைப் பற்றியெல்லாம் பாரதி வாய் திறக்கவில்லை. குவளையிடம் கேட்டார், "இங்கு இந்தியா பத்திரிகை வாங்கிப் படிப்பவர் யாரையாவது உமக்குத் தெரியுமா?'' என்று.

 குவளைக் கண்ணன் சிறிது யோசித்துவிட்டுச் சொன்னார், "ஆமாம், சுந்தரேச ஐயர் என்று ஒருவர். அவருக்கு இந்தியா பத்திரிகை வருகிறது. அவர் படித்ததும் நான் வாங்கிக்கொண்டு போய் படிப்பது வழக்கம்'' என்றார்.

 "அப்படியா நல்லது. அந்த சுந்தரேச ஐயரிடம் என்னை அழைத்துக் கொண்டு போக முடியுமா'' என்று கேட்டார் பாரதியார்.

 குவளைக் கண்ணன் பாரதியாரை அழைத்துக் கொண்டு போய் சுந்தரேச ஐயரிடம் கொண்டு விட்டுவிட்டு, அவரை யார் என்று தெரிந்து கொள்ளாமலேயே, அவரைப் பிறகு சந்திப்பதாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

 சுந்தரேச ஐயரின் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் தன்னை யார் என்று அறிமுகம் செய்து கொண்டதும் அவருக்கு மகிழ்ச்சி. அவர் மூலம் வேறொருவர் வீட்டில் பாரதியார் தங்க இடம் ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு புதிய இடத்தில் பாரதியார் தங்கத் தொடங்கிய சில நாட்களில் மண்டையம் ஸ்ரீநிவாசாச்சாரியாரும் சென்னையிலிருந்து புதுச்சேரி வந்து, அங்கு பாரதியாரோடு சில நாள்கள் தங்கினார். மண்டையம் ஸ்ரீநிவாசாச்சாரி சிறுவயதில் புதுவையில் படித்தவர். அங்கு அவருக்குப் பலரைத் தெரியும். இந்தச் சூழ்நிலையில் பாரதியாருக்குப் புதிய தெம்பு கிடைத்தது. சரியான துணை கிடைத்துவிட்டது. இனி சமாளித்துக் கொள்ளலாம் என்று தைரியம் அடைந்தார்.

 இந்தச் சந்தர்ப்பத்தில் சென்னையில் ராஜத்துவேஷ வழக்கில் கைதாகி சிறையில் இருந்த, 'இந்து', "சுதேசமித்திரன்' பத்திரிகைகளைத் தொடங்கியவரும், மகாகவி பாரதியாரை சென்னைக்கு அழைத்து வந்து தனது பத்திரிகையில் சேர்த்து உலகத்துக்கு அறிமுகம் செய்தவருமான ஜி.சுப்பிரமணிய ஐயர் சிலரது தலையீடு காரணமாக விடுதலை பெற்றிருந்தார். அதைப் போலவே பாரதியாருக்கும் விடுதலை வாங்கி விடவேண்டுமென்று பாரதியின் மைத்துனர் அப்பாத்துரை விரும்பினார். ஆனால் பாரதிக்கு அதில் சம்மதமில்லை. அப்படிப்பட்ட கேவலம் எனக்குத் தேவையில்லை என்று மறுத்து விட்டார்.

 பாரதியார் புதுச்சேரி வந்து சேர்ந்த ஒரு மாதத்திற்குள் 'இந்தியா' பத்திரிகையின் உரிமையாளர் ந.திருமலாச்சாரியார் அங்கு வந்து சேர்ந்தார். சென்னையில் நடத்தி வந்த இந்தியா பத்திரிகையை இனி புதுச்சேரியிலிருந்து நடத்துவது எனும் எண்ணத்தோடு வந்திருந்தார். அங்கு சென்னையில் பிரிட்டிஷ் ஆட்சியினரின் அடக்குமுறையை எதிர்த்துக் கொண்டு எத்தனை நாட்கள்தான் தாக்குப் பிடிக்க முடியும், இங்கிருந்து நடத்தினால் பாரதியாரும் இங்கு இருப்பதால் சிறப்பாக, தொல்லை இல்லாமல் நடத்த முடியும் என்று கருதினார். தனது கருத்தை பாரதியாரிடம் சொல்ல, அவரும் அதற்கு ஒப்புக் கொண்டார். "இந்தியா' புதுவையிலிருந்து வரத் தொடங்கியது.

 பாரதியாரின் புரட்சிக் கனல் பறக்கும் எழுத்துகள் 'இந்தியா'வில் வெளிவந்தன. சென்னையிலிருந்து மண்டையம் குடும்பத்தைச் சேர்ந்த எம்.பி.டி.ஆச்சார்யா என்பவரும் புதுச்சேரி வந்து சேர்ந்தார். இவர் பின்னர் ஐரோப்பாவுக்குச் சென்று அங்கு பெரும் புரட்சிக்காரராக மாறி, பல சாகசங்களைச் செய்துவிட்டு, பல நாடுகளில் நடந்த புரட்சிக்குத் துணை நின்ற பிறகு இந்தியா திரும்பி வெறுப்புற்று மும்பையில் தனித்து வாழ்ந்து இறந்தார். இந்த எம்.பி.டி.ஆச்சார்யா, திருமலாச்சாரியாரின் தம்பி முறை ஆகும். இவர் புதுவையிலிருந்து கொழும்பு வழியாக இங்கிலாந்து செல்வதற்காக இங்கு வந்திருந்தார்.

 திருமலாச்சாரியார் புதுச்சேரியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கு "இந்தியா' பத்திரிகை அலுவலகத்தைத் தொடங்கினார். பாரதியாருக்கு மீண்டும் பத்திரிகை வரத் தொடங்கிய பிறகுதான் மனதில் அமைதி தோன்றியது. அது தொடங்கி "இந்தியா' பத்திரிகை செய்த அதிசயங்கள், முதன் முதலாக கேலிச்சித்திரங்களை அறிமுகப்படுத்தியது, பின்னர், அரசாங்கம் பத்திரிகைகளைப் பறிமுதல் செய்தது போன்ற பல நிகழ்ச்சிகள் நடந்தாலும், பாரதி எனும் தேசபக்தன், பெரும் கவிஞனாக உருவெடுத்து முப்பெரும் பாடல்களைப் படைத்து வரலாற்றில் இடம் பிடித்து பத்து ஆண்டுகள் அந்தப் புதுவை மண்ணில் வாழ்ந்தார் எனும் செய்தியை அவருடைய இந்த நினைவு நாளில் சிந்தித்துப் பார்ப்போம்.

(இன்று பாரதியார் நினைவு தினம்)

- வெ.கோபாலன் 

நன்றி: தினமணி (11.09.2012 )

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக