நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

4.9.12

தேவை நிதானம், ஆத்திரமல்ல!

சிந்தனைக்களம்



இலங்கையைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள் இந்திய சுங்கத் துறை கால்பந்து அணியுடன் நட்புரீதியில் விளையாடுவதற்கு அனுமதி தந்த ஜவாஹர்லால் நேரு விளையாட்டு அரங்க அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்கு இலங்கை ராணுவம் அநீதி இழைக்கிறது என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க வழியில்லை. இலங்கை அரசின் மீதான நமது  கோபம் நியாயமானது. ஆனால், இலங்கையைச் சேர்ந்த, கேள்விப்படாத ஒரு கால்பந்து அணி விளையாடக்கூடாது என்று சொல்வதும், அந்த அணியை அனுமதித்த அதிகாரியைப் பணியிடை நீக்கம் செய்வதும் அரசியல் எதிர்வினைகளாக இருக்க முடியுமே தவிர, சரியான ராஜதந்திர நடவடிக்கையாக இருக்க முடியாது.

இலங்கைத் தமிழர் மீது மிக வன்மையான தாக்குதல் நடைபெற்ற நாளில், இலங்கை கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் விளையாடியது. அவர்களைத் திருப்பி அனுப்பவில்லை. இந்திய அணி இலங்கையில் விளையாடியது. தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இந்த ஆட்டத்தில் பங்கேற்கக்கூடாது என்று நாம் கேட்கவும் இல்லை. இந்திய-இலங்கை அணியின் கிரிக்கெட் விளையாட்டைத் தமிழ்நாட்டிலுள்ள தொலைக்காட்சிச் சேனல்கள் ஒளிபரப்பக்கூடாது என்று தடை விதிக்கவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மிகவாதிகள், திரைப்பட நட்சத்திரங்கள் டி.எம். கிருஷ்ணா உள்ளிட்ட கர்நாடக சங்கீதக் கலைஞர்கள் இலங்கைக்குச் சென்று வந்ததை யாரும் தவறாகக் கருதவில்லை. அப்படியிருக்கும்போது, யாருமே கேள்விப்படாத கால்பந்து அணிக்கு மட்டும் ஏன் இத்தகைய எதிர்வினை?

இத்தகைய தேவையற்ற எதிர்வினைகளால் நாம் இலங்கைத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் ஒருசேரத் துன்பத்தைக் கூட்டிக்கொண்டிருக்கிறோம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

இலங்கை ராணுவத்தினருக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்க வேண்டாம் என்று கேட்கிறோம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்குமே பயிற்சி அளிக்கக் கூடாது என்கிறோம். இதனால் நாம் பெறும் பயன் என்ன? ஒன்றுமில்லை. தமிழக மீனவர்களைத் தாக்கத்தான் இந்தப் பயிற்சி பயன்படும் என்று இங்குள்ள சில சிறிய அமைப்புகள் சொல்கின்றன. நாம் வேண்டாம் என்று சொன்னால், இலங்கை ராணுவ வீரர்கள், பெய்ஜீங் போவார்கள். இந்தியர்களைத் தாக்க மிகச் சிறப்பான பயிற்சியை சீனா வழங்கும். தமிழர்களை வெறியுடன் இலங்கை ராணுவம் தாக்கும். பரவாயில்லையா? இதுதான் நமது ராஜதந்திரமா?

 இந்தியாவில் பயிற்சி அளிக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு, பிறகு அவர்களுடன் எப்படி பேச்சு நடத்துவது? ராஜீய உறவுகளுக்கு என்ன அர்த்தம்? இலங்கைக் கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களை மீட்டுவர, விடுவித்துவர வேண்டுமானால் இலங்கையில் உள்ள இந்தியத் தூதர்தான் போய் நின்றாக வேண்டும். ஒரு ராணுவப் பயிற்சிக்கான ராஜிய உறவுகளைக் கூட சகித்துக்கொள்ள முடியாவிட்டால், இலங்கைவாழ் தமிழர்களின் பிரச்னைக்கும் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னைக்கும் எவ்வாறு தீர்வு காண்பது?

இலங்கையுடன் அனைத்து உறவுகளையும் துண்டித்துக்கொள்வது என்பது சாத்தியமே இல்லை. எல்லையில் சுரங்கப்பாதை அமைத்தும், கடல் வழியாக தீவிரவாதிகளை நமது எல்லைக்குள் நுழைத்தும், இணையத்தின் வழியாகப் பீதியையும் கிளப்பும் பாகிஸ்தானிடம்கூட இந்தியா நட்புடன்தான் இருந்தாக வேண்டும்.

அருணாசலப் பிரதேசம் எங்களுக்குத்தான் சொந்தம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் சீனாவுடன் இந்தியா அடுத்த ஆண்டு கூட்டு ராணுவப் பயிற்சி நடத்தவுள்ளது. ராஜீய உறவுகளைத் தக்கவைக்க இதைச் செய்தாக வேண்டியுள்ளது. அதே நிலைமைதான் இலங்கை அரசுடனான இந்திய அரசின் உறவும். இவை ராஜீய உறவுகள். இதை உணர்வுபூர்வமாகப் பார்ப்பது தவறு.

 ராஜபட்ச குடும்பத்தினர் திருப்பதி கோயிலுக்கு வந்தால், அவர்களை அனுமதித்த ஆந்திர அரசு மீது நாம் ஆத்திரப்படவா முடியும்? ராஜபட்ச உறவுகள் இங்கே ராமநாதபுரம் வந்தாலும் பாதுகாப்புடன் தரிசனம் செய்ய அனுமதிப்பதுதானே பண்பாடு. அதுதானே ராஜிய உறவுகளை மேம்படுத்தும் வழிமுறை.

ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்பு என்பது ஒருபுறம் இருக்கட்டும். திருச்சி, கலைக்காவிரி கல்லூரியில் நடனத்துக்காக வந்த இலங்கை மாணவர்களைத் திரும்பிப் போ என்று ஓர் அமைப்பு குரல் கொடுக்கிறது. பூண்டி மாதாக்கோவில் விழாவுக்கு வந்த சிங்களர்கள் வெளியேற வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்கிறது.

அப்படியானால் இலங்கைத் தமிழரைத் தவிர வேறு யாரும் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரக்கூடாதா? பயிற்சிக்காக இலங்கை மருத்துவர்கள் இங்கே வரக்கூடாது. சிகிச்சைக்காக சிங்களத்தவர் வரக்கூடாது. படிப்புக்காக மாணவர்கள் வரக்கூடாது. விளையாட வரக்கூடாது. சாமி கும்பிட வரக்கூடாது. புத்தகயாவில் சிங்களவர் நுழையத் தடை விதிக்க வேண்டும். ஆனால், ஈழத்தமிழர்களின் வாழ்வைக் குலைத்த ராஜபட்சயும் அவரது குடும்பத்தினரும் சிங்கள அதிகாரிகளும் பாதுகாப்புடன் வந்து செல்லலாம், அப்படித்தானே?

முன்பாகிலும் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கவும், எதிர்த்துப் போராடவும் வலுவாக இருந்தது. இப்போது ஒரு வெற்றிடம் நிலவுகிறது. நாம் திருப்பி அனுப்பினால் அவர்கள் திருப்பி அடிப்பார்கள். அடிவாங்கப் போவது இங்கே ஆர்ப்பாட்டம் நடத்தும் சிறு அமைப்புகளோ அல்லது அரசியல் தலைவர்களோ அல்ல; சாதாரண இலங்கைத் தமிழனும், தமிழக மீனவனும்தான் என்பதை மறந்துவிடக்கூடாது.

சர்வதேச அரசியலில் உணர்ச்சிக்கு இடமில்லை. நிதானமாகச் செயல்பட்டு நமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். ராஜபட்சக்குத் தெரிந்திருக்கும் இந்த உண்மை நமக்குத் தெரியாமல் இருப்பது ஏன்? இன்றைய தேவை, நிதானம். ஆத்திரமும், அவசரமும், அரசியலும் அல்ல!

 
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக