நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

30.6.13

பணம் தேவையில்லை; மனம் தான் தேவை!

முதியோர் இல்லத்தில் உள்ள ஒரு மூதாட்டியுடன் ஈரநெஞ்சம் மகேந்திரன்.
முதியோர் இல்லத்தில் உள்ள ஒரு மூதாட்டியுடன் ஈரநெஞ்சம் மகேந்திரன்.

மதுரை
யைச் சேர்ந்தவர் முத்துகுமார் (28). வீட்டில் ஏதோ பிரச்னை; கோபித்துக் கொண்டு வெளியேறிவிட்டார். இவருக்கு மறதிநோயும் உண்டு. வீடு திரும்பத் தெரியாமல் எங்கெங்கோ அலைந்து கடைசியில் கோவை வந்து சேர்ந்தார். கண்கள் மிரள, சவரம் செய்யப்படாத பல மாதத் தாடியுடன், கந்தல் உடையுடன் தெருக்களில் பைத்தியமாக அலைந்துகொண்டிருந்தார்…
திருவள்ளூரைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (80); ரயிலில் பழவியாபாரம் செய்து வந்தவரை மடக்கிய சிலர் அவரது நகைகளைப் பறித்துக்கொண்டு துரத்திவிட்டனர். இதில் மனநிலை பாதிக்கப்பட்ட ராஜம்மாள் மனம் போன போக்கில் அலைந்து கோவை வந்தார்; நகரத் தெருக்களில் பிச்சைக்காரியாகத் திரிந்துகொண்டிருந்தார்…
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் அசோகன் (42); 18 ஆண்டுகளுக்கு முன் மனநிலை பிறழ்ந்து வீட்டைவிட்டுப் போனவர். இறந்துவிட்டதாக குடும்பத்தினரே மறந்திருந்த வேளை. கோவையில் பரிதாபமான தோற்றத்தில் பேருந்து நிறுத்தத்தில் கிடந்தார்…
கோவை, சரவணம்பட்டியைச் சேர்ந்தவர் நிர்மலா (29), மனநிலை பாதிக்கப்பட்டவர்; யாரிடமும் பேசமாட்டார். 4 ஆண்டுகளுக்கு முன் வீட்டைவிட்டு வெளியேறியவரை குடும்பத்தினர் தேடி அலுத்துவிட்டனர். அலங்கோலமான ஆடைகளுடன் பூங்கா அருகே படுத்துக் கிடந்தார்…
- நீங்களும் இத்தகைய பரிதாபத்திற்குரிய மனிதர்களை தெருவில் சந்தித்திருக்கலாம். பார்த்தவுடன் ஒரு நிமிடம் மனம் துணுக்குறலாம். அடுத்த நிமிடம் சுதாரித்துக் கொண்டு, அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவோம். கொஞ்சம் இரக்கம் உள்ளவராக இருந்தால் சில்லறைக் காசுகளைப் போட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடையைக் கட்டுவோம். அவரவர் வேலையே அவரவருக்கு பெரும் சுமை.  இது ஒரு பொதுவான மனநிலை.
eeranenjam08
ஆனால், கோவை, காந்திபுரத்தில் குடியிருக்கும் மகேந்திரனுக்கு இத்தகைய மனிதர்களை மீட்பதே வாழ்க்கை லட்சியம். தெருவில் திரியும் ஆதரவற்ற, மனநிலை பிறழ்ந்த மனிதர்களை மீட்டு, முடி வெட்டி, அவர்களைக் குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து, அருகிலுள்ள காப்பகங்களில் சேர்ப்பதை தனது கடமையாகவே செய்து வருகிறார்.
.
அதுமட்டுமல்ல, கோவையிலுள்ள 15 ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் அவ்வப்போது சென்று அங்குள்ள ஆதரவற்றோருடன் கனிவுடன் உரையாடி, நகம் வெட்டி, உணவு வழங்கி, தோழமை காட்டுவதும் இவரது பணி.
.
இவருடன் ஒரு இளைஞர் பட்டாளமே பணிபுரிவது மகிழ்ச்சி அளிக்கும் கூடுதல் தகவல்.அவ்வாறு நட்புடன் பழகி, அவர்கள் அளிக்கும் தகவல்களை முகநூலிலும் வலைப்பூக்களிலும் படத்துடன் வெளியிட்டு, பாதிக்கப்பட்ட பலரை அவர்களது குடும்பத்துடன் சேர்த்துவைத்திருக்கிறார்கள். முத்துகுமார், ராஜம்மாள், அசோகன், நிர்மலா ஆகியோர், அவ்வாறு பிரிந்த குடும்பத்தில் சேர்த்து வைக்கப்பட்டவர்கள் தான்.
eeranenjam07
கோவையில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களிலும் காவல் நிலையங்களிலும் ‘ஈரநெஞ்சம் மகி’ என்றால் தெரியாதவர் இருக்க முடியாது. சுமார் ஐந்தாண்டுகளாக இந்த சேவைப்பணியில் மகேந்திரன் ஈடுபட்டிருக்கிறார். இதற்கென, ஒத்த கருத்துள்ள பரிமளா வாகீசன், சுரேஷ் கணபதி, தபசுராஜ், குமார் கணேஷ் ஆகியோருடன் இணைந்து ஈரநெஞ்சம் அறக்கட்டளையைத் துவக்கி இருக்கிறார். ‘ஈகை விலக்கேல்’ என்பது இவர்களது அமைப்பின் முத்திரை வாக்கியம்.
இவர்களது சேவையால் இதுவரை கோவை தெருக்களில் திரிந்த நூற்றுக்கு மேற்பட்ட மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர்கள் மீட்கப்பட்டு காப்பகங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்; காப்பகங்களில் இருந்து 25க்கு மேற்பட்டவர்கள் தங்கள் குடும்பத்துடன் இணையவும் ஈரநெஞ்சம் உதவி இருக்கிறது. அதுமட்டுமல்ல, தெருக்களில் திரியும் நோயாளிகளை அரசு மருத்துவமனையில் சேர்ப்பதும், அநாதையாக இறப்போரின் சடலங்களுக்கு இறுதிச்சடங்கு செய்வதும் இவர்களின் அற்புதமான பணிகளில் சில.
eeranenjam09
இத்தனைக்கும் மகேந்திரன் (35) வசதியானவர் அல்ல; ஆட்டோ உதிரி பாகங்களைத் தயாரிக்கும் குறுந்தொழிலதிபர் மட்டுமே. மனைவி, மகள் என்று சிறு குடும்பம். வரும் வருமானத்தில் ஒரு பகுதியை சேவைக்கெனவே ஒதுக்கிவிடுகிறார். குடும்பமும் அவருக்கு ஒத்துழைக்கிறது. அவரது தொழில் தொடர்புள்ள நிறுவனங்களும் மனமுவந்து ஆதரவளிக்கின்றன. நல்லது செய்ய முன்வருவோருக்கு உதவ நல்ல உள்ளங்களும் இருக்கவே செய்கிறார்கள்.
இவ்வாறு சேவை செய்யும் ஆர்வம் எப்படி வந்தது? சொந்தக் குழந்தை மலஜலம் கழித்தால் கூட மனைவியைக் கூப்பிடும் கணவர்கள் மிகுந்த உலகத்தில், முகமறியாத பலருக்கு முடிவெட்டி, குளிப்பாட்டி சேவை செய்யும் மனம் எங்கிருந்து வந்தது?
eeranenjam05
இதோ மகேந்திரனே பேசுகிறார்…
நானும் நடுத்தரவர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவன் தான். மனநிலை பாதிப்பின் கொடுமை எனக்கு அனுபவப்பூர்வமாகவே தெரியும். எனது சகோதரியின் மனநிலைப் பிறழ்வால் அவர் அடைந்த கஷ்டங்கள் கொஞ்சமல்ல. அப்போதே, இதுபோல பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்துவிட்டேன்.
தெருவில் திரியும் பைத்தியகாரர்களைக் கண்டு நாம் பொதுவாக மிரள்கிறோம். ஆனால், அவர்கள் தான் நம்மைக் கண்டு அஞ்சுகிறார்கள். தெருக்களில் பலவாறாக அலைக்கழிக்கப்பட்ட அவர்களின் துயரக் கதைகளைக் கேட்டால் நெஞ்சம் வெடித்துவிடும்.
மனநிலைப் பிறழ்வுக்கு காரணங்கள் பல இருக்கலாம். அவர்கள் அப்படி இருக்க வேண்டும் என்று விரும்பி வந்தவர்களல்ல. அவர்களின் விதி அப்படி ஆக்கியிருக்கிறது. நம்மால் முடிந்தால் அந்த விதியில் சிறிது மாற்றம் செய்ய முடியும்.
காப்பகங்களில் எங்கோ வெறித்தபடி வாழ்க்கையே சுமையாக இருக்கும் மனிதர்களுக்கு நம்மாலான சிறு உதவி ஆறுதலான பணிவிடைகள் தான். இதற்கு பெரிய அளவில் பணம் தேவையில்லை; மனம் தான் தேவை. எங்களைப் பொருத்த வரை, நாங்கள் ஆதரவற்றோருக்கு உதவ முற்படும்போது, சம்பந்தமில்லாத பலர் எங்களுடன் கைகோர்த்துப் பணிபுரிவதைக் கண்டிருக்கிறேன். சமுதாயத்தில் ஈரநெஞ்சம் இல்லாமல் போய்விடவில்லை.
நமது குழந்தை அழுதுகொண்டிருக்கும்போது நம்மால் நிம்மதியாகச் சாப்பிட முடியுமா? மனநிலை பாதிக்கப்பட்ட இவர்கள் இறைவனின் குழந்தைகள். இவர்களுக்கு நாங்கள் செய்வது சேவையல்ல; கடமை. ஓர் உயிரை, ஒரு மனிதரின் வாழ்க்கையைக் காப்பதைவிட திருப்தி அளிக்கும் பணி வேறென்ன?
இந்த வேலையில் இறங்குவதால் சுயதொழிலில் சாதனை படைக்க முடியாமல் போகலாம். இன்று எங்களுக்குக் கிடைப்பது குறைவாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு கிடைக்கும் மனநிம்மதி அளவற்றது…
- சொல்லிக்கொண்டே போகிறார் ஈரநெஞ்சம் மகேந்திரன்.
eeranenjam03
வீட்டைவிட்டு வெளியேறி பைத்தியமான நிர்மலா யாரிடமும் பேசாமல் இருந்தவர், மகேந்திரனின் முயற்சியால் குடும்பத்துடன் சேர்க்கப்பட்டபோது கண்ட உருக்கமான காட்சி மகத்தானது. 4 ஆண்டுகளாகப் பேசாமல் இருந்த நிர்மலா குடும்பத்தாருடன் சேர்ந்த ஆனந்த அதிர்ச்சியில் பேசத் துவங்கிவிட்டார்; இப்போது நலமாக இருக்கிறார்.
ஒரு நிர்மலா காப்பாற்றப்பட்டுவிட்டார். இன்னும் பல நிர்மலமான ஜீவன்கள் தெருக்களில் அலைந்துகொண்டிருக்கிறார்கள். உங்களிடமும் இருக்கிறதா இந்த ஈரநெஞ்சமும் துடிப்பும்?
- தினமணி- ஞாயிறு கொண்டாட்டம் (30.06.2013)
.
தொடர்புக்கு:  
P.மகேந்திரன்,
நிர்வாக அறங்காவலர்,
ஈரநெஞ்சம் (பதிவு எண்: BK4 193/2012)
406, ஏழாவது வீதி, காந்திபுரம்,
கோயம்புத்தூர்- 641 012.
.
அலைபேசி: 90801 31500
மின்னஞ்சல்: eeram.magi@gmail.com
இணையதளம்: http://www.eeranenjam.org
.

16.5.13

சமமான கல்வி அல்ல; தரமான கல்வி

-செ.மாதவன்
சிந்தனைக்களம்



இந்தியத் திருநாட்டில் பல்வேறு மொழிகளைத் தாய் மொழிகளாகக் கொண்டவர்கள் வாழ்கின்றனர். பல்வேறு மொழிகள் மாநில ஆட்சி மொழிகளாக உள்ளன. உலகம் முழுவதும் பரவி வாழ்கின்ற தமிழர்கள் உள்ளனர். பல்வேறு நாடுகளுக்குச் சென்று உழைப்பால் ஊதியம் தேடி வாழ்வை வளமாக்கிக்கொள்ள விரும்புவார்கள் நமது நாட்டு மக்கள்.

அறிவியல் துறை வளர்ச்சி பெற்ற தொழில் வளம் மிகுந்த நாடுகளுக்குச் சென்று அறிவியல் துறையில் முன்னேற்றமடைய விரும்பும் இளைய தலைமுறையினர் நிறைந்தது நமது நாடு.

மேற்கண்ட சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டு தமிழ்நாட்டில் கல்விக்கூடங்கள் தொடங்கி நடத்திட ஏற்றவாறு கல்விக் கொள்கைகளை வகுத்திட வேண்டும். மாணவர்கள் விரும்பும் பாடத் திட்டங்களைப் படித்திட வாய்ப்புத் தர வேண்டும். மாணவர்கள் விரும்பும் பயிற்சி மொழியில் படித்திடத் தேவையான வழிமுறைகளை வகுத்திட வேண்டும்.

தமிழ்நாட்டில் பல்வேறு மொழிகளைத் தங்கள் தாய் மொழிகளாகக் கொண்டவர்கள் வாழ்கின்றார்கள். அவரவர் தாய் மொழிகளில் கல்வி கற்றிட வாய்ப்புகள் தமிழகத்தில் தரப்படுகின்றன. ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள் தொடரப்பட்டு இன்றும் நடத்தப்படுகின்றன.

மத்திய அரசின் கல்வித் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த, அதற்குத் தேவையான புத்தகங்களை அச்சிட்டு வெளியிட "என்.சி.இ.ஆர்.டி' என்ற அமைப்பு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. அந்த அமைப்பின் வழிமுறைகளைப் பின்பற்றி "சி.பி.எஸ்.இ.' என்ற மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் நாடு முழுவதும் தொடங்கப்பட்டு சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டு மாணவர்களும் ஆர்வத்தோடு கல்வி பயின்று வருகிறார்கள்.

ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளைப்போல் ஆங்கிலத்தைப் பயிற்சி மொழியாகக் கொண்ட "மெட்ரிகுலேஷன்' பள்ளிகளும் தொடங்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் நகரங்களிலும், கிராமங்களிலும் பரவி வளர்ந்து வருகின்றன.

தமிழ் மொழிப் பற்றுள்ள மக்களும் ஆங்கிலத்தில் கல்வி பயின்றால்தான், கல்லூரிகளில் அறிவியல் துறையில் பட்டங்களைப் பெற்று உலகம் முழுவதும் சென்று வாழ்வாதாரங்களைப் பெருக்கி வாழ்ந்திட முடியும் என்று தமிழக இளைஞர் சமுதாயம் நம்புகிறது. அறிவியல் பாடங்களை ஆங்கிலத்திலேயே படித்தால்தான் கல்லூரிகளில் மேல்படிப்புக்குச் சென்று கல்வி கற்றிட எளிதாக இருக்கும் என்று மாணவர்கள் கருதுகிறார்கள். இதனால் தமிழ்ப் பற்று இல்லை என்றோ, ஆங்கில மோகம் என்றோ கூறுவதில் பயனில்லை.

மாநில அரசின் கொள்கைகளால் பயிற்சி மொழியும், பாடத் திட்டங்களும் மாற்றப்பட்டு கல்வித்தரம் குறைந்துவிடுமோ என்ற அச்சமும் பரவி வருகின்றது. இதனால் மத்திய அரசின் பாடத் திட்டத்தைப் பின்பற்றி ஆங்கிலத்தைப் பயிற்சி மொழியாகக் கொண்ட சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தமிழ்நாட்டில் ஏராளமாகப் பெருகி வருகின்றன.

தாய்மொழியாம் தமிழ் மொழியில் கல்வி கற்றிட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு, தமிழக அரசு கொள்கைகளை வகுத்து, "அரசுப் பள்ளிகள்' என்றும், "அரசு உதவிபெறும் பள்ளிகள்' என்றும் தொடங்கச் செய்து, கல்வித் துறையில் பெரும் முன்னேற்றத்தை உருவாக்கியுள்ளது. ஆங்கில வழிப் பள்ளிகளான "மெட்ரிகுலேஷன்' பள்ளிகளையும் தொடங்கிட தமிழக அரசு விதிமுறைகள் வகுத்துள்ளது.

உலகத்தில் அறிவியல் துறையில், தொழில் துறையில் வளர்ச்சி பெற்றுள்ள நாடுகளில் பின்பற்றப்படும் கல்விப் பயிற்சி முறைகளில் தமிழ்நாட்டிலும் பயின்றிட வேண்டும் என்று ஆர்வமுள்ள மாணவர்கள் பெருகி வருகின்றனர். இதன் விளைவாக, "இன்டர்நேஷனல்' பள்ளிகள், "சி.பி.எஸ்.இ. பள்ளிகள்' மத்திய அரசின் அனுமதிபெற்று தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளன.

கிராமங்கள்தோறும் அரசின் சார்பில் தொடக்கக் கல்வி வழங்கும் பள்ளிகள் தொடங்கப்பட்டு, அனைத்து மக்களும் கல்வி அறிவுபெறத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

1969-ஆம் ஆண்டு தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை 500 கோடி ரூபாயில் தாக்கல் செய்யப்பட்டது. கல்வித் துறைக்கு 70 கோடியில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டன. இன்று பல்லாயிரம் கோடிகளில் நிதிநிலை அறிக்கை வெளிவருகிறது. ஆனால், இன்னும் மாணவர்கள் விரும்பும் வசதிகள் நிறைந்த, தரமான கல்வியை வழங்கும் கல்விக்கூடங்கள் அரசின் சார்பில் நடக்கவில்லையே என்ற ஆதங்கம் மக்களிடையே நிலவுகின்றது.

மக்கள் அனைவரும் கல்விபெற வேண்டும் என்று எண்ணிய வள்ளல் அழகப்ப செட்டியார் போன்றவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்தார்கள். அழகப்ப செட்டியார் தன்னுடைய சொத்துகள் அனைத்தையும் அவர் காரைக்குடியில் நிறுவிய கல்விக் கூடங்களுக்கே அர்ப்பணித்தார்.

அவர் நாள்தோறும் மாணவர்களைச் சந்தித்துப்பேசி, கற்பதில் ஆர்வம் ஊட்டிய காட்சிகள் என் நினைவில் நிற்கின்றன. அவர் மறைந்த பிறகு அவருடைய மகள் உமையாள் ஆச்சி, அழகப்ப செட்டியாரின் கல்லூரிகளை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று கூறினார்கள். எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காது கல்லூரிகளை அரசிடம் ஒப்படைக்க முன்வந்த பெருந்தன்மை மகிழ்ச்சி அளித்தது. அந்தச் செய்தியை நான் படித்த அழகப்பா கலைக் கல்லூரி விழாவில் பேசும்போது நான் அறிவித்தவுடன் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்த காட்சிகள் நினைவில் நிற்கின்றன. இன்று அழகப்பா பல்கலைக் கழகமாக வளர்ந்து வள்ளலின் பெருந்தன்மையை நிலைநாட்டியுள்ளது.

ஆனால், இன்று லாப நோக்கத்தோடு பள்ளிகளை, கல்லூரிகளைத் தொடங்கும் நிலை தோன்றி வளர்கிறது. ஆங்கிலத்தில் கல்வி கற்றிட வேண்டும் என்ற விருப்பம், வசதிகள் உள்ள கல்விக் கூடங்கள், கல்வி கற்பிப்பதில் நவீனமான முறைகள் பின்பற்றப்படும் பள்ளிகள், அதிக மதிப்பெண்கள் பெறத் தேவையான வழிமுறைகளைப் பின்பற்றும் பள்ளிகளை மாணவர்கள், பெற்றோர்கள் விரும்பும் நிலை வளர்கிறது.

ஆங்கிலத்தைப் பயிற்சி மொழியாகக் கொண்ட பள்ளிகள் பெருகி வருகின்றன. பெற்றோர்களும், மாணவர்களும் இப்பள்ளிகளை விரும்புகின்றனர். சிறிய கிராமங்களிலும் இப்பள்ளிகள் செயல்படத் தொடங்கியுள்ளன. இப்பள்ளிகளை நடத்திட நிதி ஆதாரங்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றன. கல்விக் கூடங்களை வியாபார நோக்கத்தில் லாபம் பெற நடத்திட முதலீட்டாளர்கள் முன் வருகின்றனர்.

பள்ளிகளுக்குத் தேவையான பாடப் புத்தகங்களைப் பள்ளிகளுக்கு வாங்கிட அரசு அங்கீகாரம் வழங்கும் முறை இருந்தது. 1969-ஆம் ஆண்டு இந்த முறையில் அரசு அனுமதியைப் பெற்றிட புத்தகப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் செல்வாக்குள்ளவர்களின் பரிந்துரைகளோடு அரசை அணுகும் நிலையைக் கண்டேன். இத்தகைய வியாபார நோக்கத்தைத் தடுத்திட பாடப் புத்தகங்களை தமிழக அரசே தயாரித்து வழங்கிட தமிழ்நாடு பாடப் புத்தகங்கள் நிறுவனத்தைத் தொடங்கிய சரித்திர நிகழ்ச்சி நினைவில் நிற்கிறது. இன்று இந்த நிறுவனம் சிறப்பாகச் செயல்படுவது கண்டு மகிழ்ச்சி ஏற்படுகிறது.

வியாபார நோக்கம் இல்லாத, வசதிகள் நிறைந்த, உலகத் தரம் வாய்ந்த கல்வி கற்பிக்கும் கல்வி நிலையங்கள் எதிர்கால மாணவர் சமுதாயத்திற்குப் பயனுள்ளதாக நடந்திட வேண்டும். கல்விக் கட்டணக் கட்டுப்பாடு தவறுகளைத்தான் ஊக்குவிக்கும். மாறாக மாணவர்களுக்குத் தேவையான வசதிகளை அளித்திட, ஆசிரியர்களுக்குத் தேவையான சம்பளத்தை வழங்கிடத் தேவையான கட்டணங்கள் மட்டும் வசூலித்திட விதிமுறைகளை வகுத்திட வேண்டும். மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணத் தொகை பள்ளியின் தேவைகளுக்கே செலவிடப்படுகிறதா என்று அரசின் தணிக்கைத் துறை கண்காணித்து நடவடிக்கை எடுத்திட விதிமுறைகள் வகுத்திட வேண்டும்.

பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கும் அரசு, உதவிபெறும் பள்ளிகளை ஊக்குவித்தால் கல்வி வியாபாரத்தைத் தவிர்த்திட முடியும்.

பெற்றோர்களும், மாணவர்களும் விரும்பும் கல்வித் தரம் மிகுந்த கல்விக்கூடங்களை அரசே நடத்தினால் யாரும் தனியார் கல்வி நிறுவனங்களை நோக்கிச் செல்ல மாட்டார்கள். அனைவருக்கும் சமமான கல்வி என்பதைவிட, அனைவருக்கும் தரமான கல்வி கிடைத்திட வேண்டும் என்பதுதான் ஒரு அரசின் கொள்கையாக இருக்க வேண்டும்.


(கட்டுரையாளர், தமிழக முன்னாள் அமைச்சர்)
நன்றி: தினமணி (16.05.2013)


19.4.13

நிவேதனம் நூல் வெளியீடு


 தேசிய சிந்தனைக் கழகம் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று நிவேதனம் நூல் வெளியிடப்பட்டுள்ளது.

48 பக்கங்கள் கொண்ட இந்த நூலில், நமது நாட்டின் ஆன்றோர் பெருமக்களின் திருநட்சத்திரங்களும், அவதார தினங்களும் தொகுக்கப்பட்டுள்ளன அதேபோல நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வீரர்கள், சமூக சீர்திருத்தவாதிகள், விஞ்ஞானிகள் உள்ளிட்ட சான்றோரின் பிறந்த, நினைவு தினங்களும் தொகுக்கப்பட்டுள்ளன.

மேலும், சுவாமி விவேகானந்தரின் வாழ்வில் நடைபெற்ற நிகழ்வுகள் தேதி வாரியாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. இதனை நண்பர் திரு. செங்கோட்டை ஸ்ரீராம் தொகுத்திருக்கிறார்.

இவை மட்டுமல்லாது, சுவாமி விவேகானந்தரின்  150வது ஜெயந்தியை முன்னிட்டு, சுவாமிஜி குறித்த நான்கு கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.

ஆய்வாளர் திரு. அரவிந்தன் நீலகண்டன் எழுதிய "சுவாமி விவேகானந்தரும் அம்பேத்கரும்'  என்ற கட்டுரை, பேராசிரியர் திரு. ப.கனக சபாபதி எழுதிய 'சுவாமி விவேகானந்தரின் இன்றைய அவசியம்' கட்டுரை, பத்திரிகையாளர் திரு.வ.மு.முரளி எழுதிய 'ஒரு பாறையின் மகத்தான சரித்திரம்' கட்டுரை, தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில அமைப்பாளர் திரு. ம.கொ.சி.ராஜேந்திரன் எழுதிய 'விவேகானந்த சுடரை நாடெங்கும் ஏற்றுவோம்' கட்டுரை ஆகியவை இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

இந்நூலுக்கு மதுரை ராமகிருஷ்ன மடத்தின் தலைவர் பூஜ்யஸ்ரீ சுவாமி கமலாத்மானந்தர், கோவை ராமகிருஷ்ண  வித்யாலயத்தின் செயலாளர் பூஜ்யஸ்ரீ சுவாமி அபிராமானந்தர், வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமத்தின் தலைவர் பூஜ்யஸ்ரீ சுவாமி சைதன்யானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் பத்திரிகையின் ஆசிரியர் பூஜ்யஸ்ரீ சுவாமி விமூர்த்தானந்தர், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூத்த தலைவர் திரு. சூரிய நாராயண ராவ் ஆகியோர் ஆசியுரை வழங்கி உள்ளனர்.

இந்நூலின் விலை: ரூ. 15.00

இந்த நூலைப் பெற
திரு. ம.கொ.சி.ராஜேந்திரன் (90031 40968)
அவர்களை தொடர்பு கொள்ளவும்.




1.4.13

காங்கிரஸைக் கலைக்க காந்திஜி விரும்பினாரா?

சிந்தனைக் களம்               -லா.சு.ரங்கராஜன்

மகாத்மா காந்தி பிராணத் தியாகம் புரிவதற்கு முந்தைய தினம் (29-1-1948) பிற்பகலில் அவசர அவசரமாக ஒரு சாசனம் எழுதினார். "இன்று வரையிலுள்ள அகில இந்திய காங்கிரஸ் ஸ்தாபனத்தைக் கலைத்துவிட்டு, 'லோக் சேவக் சங்கம்' என்ற பெயரில் அதனைப் புதிதாய் மலரச் செய்ய வேண்டும். அப்புதிய அமைப்புக்கான விதி முறைகளாவன...''

இந்த அறிமுக வாக்கியத்தின் விளைவாகத் தான், "காங்கிரஸின் ஒரே நோக்கமாம் இந்திய பூரண சுதந்திரம் கிட்டிவிட்டதால், காங்கிரஸ் ஸ்தாபனத்தை ஒட்டுமொத்தமாகக் கலைத்துவிட்டு, அரசியலை அறவே தவிர்த்து 'லோக் சேவக் சங்கம்' என்ற புதுப்பெயரில் சமூக ரீதியில் மக்கள் சேவையில் ஈடுபட வேண்டும் என்பதே காந்திஜியின் கடைசி விருப்பம்'' என்று பெரும்பாலான ஆய்வாளர்களும் காந்திய அறிஞர்களும் கூறி வருகிறார்கள். இது தவறான கருத்து என்பது அண்ணல் காந்தி இறுதி நாள்களில் ஆற்றிய பேச்சுகளிலிருந்தும் எழுதிய கட்டுரைகளிலிருந்தும் தெள்ளத் தெளிவாகத் தெரியவருகிறது.

அந்த இறுதி சாசனத்தை எழுதுகையில், "எனக்குத் தலை சுற்றுகிறது; இருப்பினும் இதை இன்றே எழுதி முடித்தாக வேண்டும். அதற்காக இரவு வெகுநேரம் விழித்திருக்க நேரிடும்'' என்று தமது பெண் உதவியாளர் 'அபா'விடம் காந்திஜி கூறியதாக, அவரது அந்தரங்கச் செயலர் பியாரி லால், 'அரிஜன்' இதழில் பின்னர் வெளியான கட்டுரையில் பதித்துள்ளார்.

மறுநாள் (30 ஜனவரி 1948) காலை, காந்திஜி அந்த முன்வரைவு சாசனத்தைப் பியாரி லாலிடம் கொடுத்து, ''இதனைக் கவனமாகப் படித்து, ஆவன திருத்தங்கள் செய்து, விட்டுப்போன விஷயங்களையும் சேர்த்துத் திருத்தமாய் அமைத்துத் தயார் செய்; நான் இதை மிகக் களைப்புடன் சிரமப்பட்டு எழுதியுள்ளேன்; ஆகையால் மேலும் திருத்தமாய் அமைக்க வேண்டிவரும்'' என்று பணித்தார். பியாரிலால் அவ்வாறே அதைப் படித்து, சில வாசகங்களைத் திருத்தி, அன்று நடுப்பகலிலேயே காங்கிரஸ் பொதுக் காரியதரிசி ஆசார்ய ஜுகல் கிஷோரிடம் கொடுத்தார். அவர் அதை காந்திஜியின் மறைவுக்குப் பிறகு பத்திரிகைகளில் பிரசுரத்திற்கு அனுப்பி வைத்தார். 
 ('கலக்டட் வொர்க்ஸ் ஆஃப் மகாத்மா காந்தி' நூல் 90, பக்கம் 526 - 528).

ஜவாஹர்லால் நேரு, 1934-இல் ஃபெயிஸ்பூர் காங்கிரஸ் வருடாந்திர மாநாட்டில் பேசுகையில், "காந்திஜி காங்கிரஸில் இருக்கிறாரோ இல்லையோ, எதுவாயினும் அவர்தான் காங்கிரஸின் நிரந்தர சூப்பர் அக்கிராசனர்'' என்று புகழ்ந்துரைத்தார்.

(தமது முழு கவனத்தையும் அகில இந்திய கிராமிய கைத்தொழில் அபிவிருத்திக் கழகத்திற்கும் அரிஜன சேவைக்கும் செலவழிக்கும் பொருட்டு காந்திஜி 1934-இல் காங்கிரஸிலிருந்து ராஜிநாமா செய்தார்).

1920 முதற்கொண்டு தாம் பேணி வளர்த்து, சுதந்திரப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி வழிநடத்திய 'சூப்பர் பிரசிடண்ட்' மகாத்மா, அப் பழம்பெரும் தேசிய ஸ்தாபனத்திற்கு முடிவுகட்டத் திட்டமிடுவாரா என்பதே கேள்வி.

''காங்கிரûஸக் கலைக்க வேண்டும்'' என்ற சொற்களை காந்திஜி அதன் நேரடி அர்த்தத்தில் கூறவில்லை என்பது அன்னார் அதற்கு இரண்டே நாள்களுக்கு முன் (ஜனவரி 27 அன்று) எழுதி, 'அரிஜன்'' (பிப்ரவரி 1, 1948) இதழில் வெளியான அவரது கடைசியோ கடைசி கட்டுரையிலிருந்து தெளிவுறத் தெரிய வருகிறது. அதன் வாசகம் பின்வருமாறு:

"இந்திய தேசிய காங்கிரஸ் நம் நாட்டின் தொன்மை வாய்ந்த தேசிய அரசியல் ஸ்தாபனமாகும். அது அகிம்சை வழியில் பல தேசிய போராட்டங்களை வெற்றிகரமாக நடத்தி, நாட்டிற்குச் சுதந்திரம் பெற்றுத் தந்துள்ளது. அந்த மகத்தான அமைப்பு மடிந்துபோவதை எவரும் அனுமதிக்க முடியாது. இந்த தேசமே அழியும்போதுதான் காங்கிரஸும் மாண்டு போகக்கூடும். அத்தகைய உயிர்ப்பான ஸ்தாபனம் தொடர்ந்து வளர்ந்துகொண்டே போகுமே தவிர, ஒருபோதும் ஒடுங்கி மடிந்து போகாது.

காங்கிரஸ் நமக்குச் சுதந்திரம் பெற்றுத் தந்துள்ளது. ஆயினும், பொருளாதாரச் சுதந்திரம், சமூக மற்றும் தார்மிக சுதந்திரங்களையும் ஈட்டித்தரக் கடமைப்பட்டுள்ளது. இச் சுதந்திரங்கள் விடுதலைப் போராட்டம் போன்று அவ்வளவு எழுச்சிகரமானவையோ காட்சிப் பகட்டானவையோ அல்ல என்பது என்னவோ உண்மையே. இருப்பினும் இவை அரசியல் சுதந்திரத்தைக் காட்டிலும் அகல விரிவானவை, அத்தியாவசியமானவை, ஆக்கப்பூர்வமானவை. அச் சுதந்திரங்களைப் பெற கோடானுகோடி மக்கள் அனைவரையும் காங்கிரஸ் அரவணைத்து ஊக்குவிக்க வேண்டும்.

அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்கள் என்ற பட்டியல் பதிவேடுகள் தேவையில்லை. இப்போது ஒரு கோடி உறுப்பினர்கள் பட்டியலில் இருக்கக்கூடும். அவர்கள் யார் யார் என்று யாருக்கும் தெரியாது! அவர்களைத் தவிர எத்தனையோ கோடி ஆண் - பெண்களும் காங்கிரஸ் ஆர்வலர்கள், அபிமானிகள்தாம். இருப்பினும், மக்கள் நலத்தில் ஈடுபாடுள்ள காங்கிரஸ் ஊழியர்கள் என்ற தனிப்பட்டியல் தயாரிக்கலாம். அத்தகையோர், காங்கிரஸ் கமிட்டி இடும் நிர்மாணப் பணிகளை ஏற்றுச் செயல்படக் கூடியவர்களாக இருத்தல் வேண்டும். எனக்கு மட்டும் நேரமும் போதிய உடல் நலமும் இருந்தால், அச் சேவகர்களும் தலைவர்களும் தன்னலமற்ற சமூகப் பணிகளால் பொது மக்களின் ஆதரவுக்கும் மதிப்புக்கும் எவ்வாறு பாத்திரமாக்கிக் கொள்ள முடியும் என்பதைப் பற்றியெல்லாம் மென்மேலும் விரிவாகப் பேசி, எழுதி, விவாதிக்க விரும்புகிறேன்'' ('அரிஜன்' - 1-2-1948).

இதன் பின்னணியிலே தான் காங்கிரஸ் சாசனத்தைத் திருத்தியமைப்பதற்கான தமது 1948, ஜனவரி 29 தேதியிட்ட பூர்வாங்கத் திட்ட வரைவில் அதற்கான விதிமுறைகளை வகுத்தளித்தார். அவற்றின் படு சுருக்கம் இதுதான்: "ஒவ்வொரு கிராமத்திலும் அக் கிராமத்தார்கள் அல்லது கிராம முன்னேற்ற மனப்பான்மை கொண்ட ஆண் - பெண் ஐந்து பேர் பஞ்சாயத் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவர். அடுத்தடுத்த இரு பஞ்சாயத்துகள் இணைந்து ஒரு செயற்குழுவையும் தலைவரையும் தேர்ந்தெடுப்பர். இவ்வாறு நூறு பஞ்சாயத்துகள் ஒருங்கிணைந்து ஒரு முதல்மட்டத் தலைவரையும், இரண்டாம் மட்டத் தலைவரையும் தேர்வு செய்வர். இவ்வாறு மாகாணவாரியாக இந்தியா பூராவும் மக்களின் மதிப்பைப் பெற்ற 'லோக் சேவக் சங்க'த் தலைவர்கள் செயல்படுவார்கள். தவிர, கிராமங்களிலும் நகர்ப்புறங்களிலும் சேவக- சேவகிகள் நியமனம் பெறுவர். அவர்களுக்கும், ஏனைய தலைவர்களுக்குமான தகுதிகளாவன: வழக்கமாகக் கதர் அணிபவராக இருக்க வேண்டும்; மது - லாகிரி வஸ்துகள் அருந்தலாகாது; மத நல்லிணக்கம் பேண வேண்டும். இந்துவாக இருந்தால் எந்த வடிவிலும் தீண்டாமை பாராட்டலாகாது போன்றவை'.

1947 டிசம்பர் 11 மற்றும் 12-ஆம் தேதிகளில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்மாணத்திட்டக் குழுவினருடன் கலந்துரையாடியபோது காந்திஜி இவ்வாறு பட்டவர்த்தனமாகக் கூறினார்:

"இன்று அரசியலில் ஊழல் ஊடுருவிவிட்டது. அரசியலில் எவர் புகுந்தாலும் தூய்மைகெட்டுக் கறைபடுகிறார். நிர்மாணத் திட்ட ஊழியர்களான நாம் அரசியலினின்றும் அறவே விலகியே நிற்க வேண்டும். அப்போதுதான் நமது செல்வாக்கு உயரும். நமது அகத்தூய்மை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகரிக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு எவ்வித முயற்சியுமின்றி நாம் மக்களை நம் வசமாக்கிக்கொள்ள முடியும்.

வயது வந்தோர் அனைவருக்கும் வோட்டுரிமை கிடைத்துள்ள இன்றைய சூழலில் நாம் மட்டும் சமூகநலத் திட்டங்களில் கண்ணுங்கருத்தும் செலுத்தி நேர்மையுடன் நடந்து மக்களின் நன்மதிப்பைப் பெற்றோமானால் நாம் எவரை வேட்பாளராக நிறுத்தி வைக்கிறோமோ அல்லது ஆதரிக்கிறோமோ, அவரே தேர்தலில் அமோக வெற்றி பெறுவார்''.

காந்திஜி மேலும் கூறினார்: "பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து நடத்திய விடுதலைப் போராட்டத்தின்போது நாம் பின்பற்றியது பெயரளவில்தான் அகிம்சை வழிமுறை என்பதை இப்போதுதான் உணர்கிறேன். உண்மையில் அது அகிம்சை வழி அல்ல. கடவுள் அப்போது என் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற்போல் ஆக்கிவிட்டார். நடக்க வேண்டியதை என் மூலம் நிகழ்வித்தார். காரியம் நடந்தேறிய பிறகு இப்போது என் கண்களைத் திறந்துவிட்டார். விரிந்த கண்களுடன் 'இனி செய்யவேண்டியது என்ன?' என்பதைத் தெளிவாகக் காண்கிறேன். லஞ்ச ஊழலை, நடைச் சீரழிவை, அவை எங்கிருந்தாலும் சரி, ஒழித்துக்கட்டக் கங்கணம் கட்டிக்கொள்ள வேண்டும். அதன் பொருட்டு நீங்கள் எந்தக் கமிட்டியிலும் சேர வேண்டியதில்லை; ஆட்சி அதிகாரத்தில் பங்குகொள்ள வேண்டியதில்லை. பாமர மக்களிடையேதான் உங்கள் பணி காத்துக் கிடக்கிறது'' ('கலக்டட் வொர்க்ஸ் ஆஃப் மகாத்மா காந்தி' நூல் 90, பக்கம் 215 - 221).

கடைசி உண்ணாவிரதத்தின் மூன்றாம் நாள் (1948 ஜனவரி 16 அன்று) ஆசிரமவாசி ஒருவருக்குக் காந்திஜி எழுதிய நீண்ட கடிதத்தில், "காங்கிரஸ் இப்போதும் ஓர் மகத்தான தேசிய அரசியல் ஸ்தாபனமே ஆகும். வருங்காலத்திலும் அது அவ்வாறே இருந்துவரும். ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் அமரும்போது அது அரசியல் கட்சிகளில் ஒன்றாக ஆகிவிடுகிறது'' என்று கூறியுள்ளார். ('கலக்டட் வொர்க்ஸ் ஆஃப் மகாத்மா காந்தி' நூல் 90, பக்கம் 434).

காந்திஜியின் வாசகங்களிலிருந்து ஒன்று தெளிவாகத் தெரிகிறது: "இந்தியர்கள் அனைவரையும் நிபந்தனைகளின்றி காங்கிரஸ் உறுப்பினர்களாக அரவணைத்துக் காங்கிரஸின் அடித்தளத்தை விரிவுபடுத்த வேண்டும். இருப்பினும், கள ஊழியர்கள், பலமட்டத் தலைவர்கள் அடங்கிய "லோக் சேவக் சங்க' காங்கிரஸ் கிளையினர், நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்களாகவும், நேர்மையும் நாணயமும் வாய்ந்தவர்களாகவும் இருத்தல் அவசியம். அவர்களில் எவரும் ஆதிக்க அதிகாரத்திற்கு ஆசைப்படாமல், அன்பின் ஆற்றலில் நம்பிக்கை கொள்ள வேண்டும். அவர்களுள் அரசியல் ஆர்வம் கொண்ட அப்பழுக்கற்ற காங்கிரஸ்காரர்கள் / காரிகள், லோக் சேவக் சங்கத்தின் ஆதரவுடன் சட்டசபைத் தேர்தலில் வேட்பாளர்களாகக் களமிறக்கப்படுவர்'.

இதன் அடிப்படையில், வேறு கட்சியைச் சார்ந்த அல்லது சுயேச்சையாளர்கள் தகுதி நிறைந்தவராகவும் குணசீலராகவும் இருப்பின் அவர்களுக்குத் தேர்தலில் போட்டியின்றி காங்கிரஸ் ஆதரவு அளிக்கக்கூடும் என்றும் ஊகிக்க இடமுள்ளது.

இவ்வாறு, மகாத்மா காந்தி 1947 டிசம்பர் 12 அன்று புதுதில்லியில் காங்கிரஸ் ஊழியர்கள் கூட்டத்தில் சுட்டிக்காட்டியதுபோல, "காங்கிரஸ் ஸ்தாபனம் மத்திய அரசின் ஓர் கண்காணிப்பு அமைச்சகம் போன்று செயல்படும்'' இதுவே அவரது கடைசி சாசனத்தின் நோக்கம்.
- தினமணி (06.03.2013)

2.2.13

மனித ஆன்ம உணர்வே சக்திவாய்ந்தது

-டாக்டர்  ராதாகிருஷ்ணன்


காந்திஜியின் பெயரை நாம் உதட்டில் கொண்டிருக்கிறோம், ஆனால் உள்ளத்தில் கொள்ளவில்லை. எந்தக் காரியத்திற்கும் அவர் பெயரைப் பயன்படுத்த நாம் தவறுவதில்லை. ஆனால் குறிப்பிட்ட நிலைமைகளில், சூழ்நிலையில், அவர் எப்படி நடந்திருப்பார் என்பது பற்றி நாம் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

  அவர் தம் நாட்டின் மீது மட்டும் பற்றுக் கொண்டிருக்கவில்லை. ஒட்டுமொத்த மனித இனத்திடமே அன்புகொண்டிருந்தார் என்பது தான் அவர் வாழ்வின் சிறப்பான அம்சம்.

  இருள் சூழ்ந்த உலகில், சத்தியம், அன்பு ஆகிய குறிக்கோள்களைப் போற்றி ஒளி வீசிய உயிர்ச் சோதியாய் அவர் விளங்கினார்.

 தம்மைச் சுற்றியிருந்த சூழ்நிலைச் சார்புகளை எதிர்த்து, தாம் வாழ்ந்த கால நிலையை எதிர்த்துப் போராடிய மனிதரை -அப்போராட்டத்தில் புண்பட்ட போதிலும் முறிந்து வீழ்ந்துவிடாமல், தோல்வியுற்ற போதிலும் தம் போராட்டத்தின் இறுதி நேர்மையில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்த வீரரை - காந்திஜியிடம் நாம் காண்கிறோம்.

  வருங்கால உலக மனித சமுதாயத்தின் முன்னோடி காந்திஜி. அவர் விஸ்வமானுஷ்யர்; உலகக் குடிமகனார்.   அவர் வாழ்க்கை, புதியதோர் உலகுக்கான போராட்டம். அவரது இலட்சியத்தின் அடிப்படை, தேசிய அரசு அன்று; அனைத்துலகுதான் அடிப்படை.

 எல்லா நாடுகளும் மனித சமுதாய நலன் என்ற அடிப்படையில் சிந்திக்க முன்வந்தால் ஒழிய, இன்று ஏற்பட்டுள்ள விஞ்ஞான முன்னேற்றங்கள் ஆபத்தாகவும் மனித முயற்சியின் விரயமாகவும் முடியும். உலகப் போரை நாம் தடுக்க விரும்பினால், நமக்கு உலக நாடுகளின் கூட்டுறவும் ஒத்துழைப்பும் தேவை.

 நம்மை எதிர்நோக்கி நிற்கும் புதிய உலகில் வாழ்வதற்கு, நாம் நம்மை ஆயத்தம் செய்துகொள்ள வேண்டும். பூகோள அமைப்பில் இன்று ஒற்றுமை உருவாகிவருகிறது. அறிவுத்துறையில் ஒருமித்த கருத்து வளர்ந்து வருகிறது.

 பொருளாதார கூட்டுறவு மூலமாக, மக்கள் அனைவருக்கும் உணவும் உடையும் குடியிருக்க இடமும் அளிக்க முடியும். ஆன்ம உறவையும், ஒருமையையும் நாம் மக்களிடையே பயன்படுத்த வேண்டும்.

 அஹிம்சையை அடிப்படையாகக் கொண்ட சமுதாய அமைப்பை நம் நாட்டில் நிலைநாட்டி, அதன் மூலம் உலகுக்குத் தொண்டாற்ற முடியும் என்ற நம்பிக்கையில்தான் காந்திஜி நமக்குச் சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தார். போர் மூளாத ஓர் உலகை நிலைநாட்ட அவர் பாடுபட்டார்.  நம் நாட்டை அவர் சரியான பாதைக்கு அழைத்துச் சென்றார் என்பதற்கு, ஆயுதக்களைவு பற்றி ஐ.நா.வில் ஏகமனதாய் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சான்றாகும்.

  நம் இதயத்தில் உள்ள வெறிகளால்தான், நம்முடைய கண்மூடித்தனமான, கட்டுக்கடங்காத, கண்ணியமற்ற பேராசையினால்தான் போர்கள் மூளுகின்றன. நாம் ஒவ்வொருவரும் நமக்குள்ளாகவே போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது.

 குருக்ஷேத்திரம் நம் அகத்தில் உள்ளது. உலகைக் காக்கும் அன்புநெறி, அதை அழிக்கும் பகைமைப் பாதை ஆகிய இந்த இரண்டில் ஒன்றை நாம் ஒவ்வொருவரும் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது.  இந்தப் போராட்டத்தில், நாம் நம்முடைய முயற்சியால் நம்மைத் தூய்மைப்படுத்திக்கொண்டு, நம் செயல்களால் பிறரையும் காக்க வேண்டும்.

 உபவாசம், வழிபாடு, நோன்புகள் ஆகியவற்றைக் கடைப்பிடித்து சத்தியத்தை வழிபடுவோர் பெறும் இணையற்ற தூய்மையையும் வலிமையையும் காந்திஜி பெற்றார்.  மனித சமுதாயத்தின் ஆன்ம வளர்ச்சிப் பரிணாமத்தில் காந்திஜி மிக முக்கியதொரு இடத்தைப் பெற்றுள்ளார்.

  இரட்சிப்பு பெற்றவர்களுக்குக் கிடைக்கும் லட்சிய பூமி பற்றி, சத்யசோதனையின் இறுதிக் குறிக்கோள் பற்றி அவர் பேசுகிறார். அப்பூமியில் அடிவைக்க நம்முள் சிலருக்கு வாய்ப்பில்லாது போகலாம்; ஆயினும், அதை எய்த, நாம் உழைத்துப் பாடுபட வேண்டும். தொலைவில் இருந்தாவது அதைப் போற்றி வணங்க வேண்டும்.

 காந்திஜியை நாம் எண்ணும்போதெல்லாம், சக்திமிக்க குண்டைக் காட்டிலும் மனித ஆன்ம உணர்வே அதிக சக்தி வாய்ந்தது என்ற உண்மையை நாம் நினைவில் போற்றுவோமாக!

மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிக்கானீர் நகரில் 1959 அக்டோபர் 31-ஆம் தேதி, காந்தி சிலையைத் திறந்து வைத்து நிகழ்த்திய உரையின் தமிழாக்கம் இது.

பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டுள்ள 'டாக்டர் இராதாகிருஷ்ணன் பேருரை (தமிழாக்கம்: கா. திரவியம்) தொகுதி-2'இல் இக்கட்டுரை இடம்பெற்றுள்ளது.

நன்றி: தினமணி (01.02.2013)