நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

1.4.13

காங்கிரஸைக் கலைக்க காந்திஜி விரும்பினாரா?

சிந்தனைக் களம்               -லா.சு.ரங்கராஜன்

மகாத்மா காந்தி பிராணத் தியாகம் புரிவதற்கு முந்தைய தினம் (29-1-1948) பிற்பகலில் அவசர அவசரமாக ஒரு சாசனம் எழுதினார். "இன்று வரையிலுள்ள அகில இந்திய காங்கிரஸ் ஸ்தாபனத்தைக் கலைத்துவிட்டு, 'லோக் சேவக் சங்கம்' என்ற பெயரில் அதனைப் புதிதாய் மலரச் செய்ய வேண்டும். அப்புதிய அமைப்புக்கான விதி முறைகளாவன...''

இந்த அறிமுக வாக்கியத்தின் விளைவாகத் தான், "காங்கிரஸின் ஒரே நோக்கமாம் இந்திய பூரண சுதந்திரம் கிட்டிவிட்டதால், காங்கிரஸ் ஸ்தாபனத்தை ஒட்டுமொத்தமாகக் கலைத்துவிட்டு, அரசியலை அறவே தவிர்த்து 'லோக் சேவக் சங்கம்' என்ற புதுப்பெயரில் சமூக ரீதியில் மக்கள் சேவையில் ஈடுபட வேண்டும் என்பதே காந்திஜியின் கடைசி விருப்பம்'' என்று பெரும்பாலான ஆய்வாளர்களும் காந்திய அறிஞர்களும் கூறி வருகிறார்கள். இது தவறான கருத்து என்பது அண்ணல் காந்தி இறுதி நாள்களில் ஆற்றிய பேச்சுகளிலிருந்தும் எழுதிய கட்டுரைகளிலிருந்தும் தெள்ளத் தெளிவாகத் தெரியவருகிறது.

அந்த இறுதி சாசனத்தை எழுதுகையில், "எனக்குத் தலை சுற்றுகிறது; இருப்பினும் இதை இன்றே எழுதி முடித்தாக வேண்டும். அதற்காக இரவு வெகுநேரம் விழித்திருக்க நேரிடும்'' என்று தமது பெண் உதவியாளர் 'அபா'விடம் காந்திஜி கூறியதாக, அவரது அந்தரங்கச் செயலர் பியாரி லால், 'அரிஜன்' இதழில் பின்னர் வெளியான கட்டுரையில் பதித்துள்ளார்.

மறுநாள் (30 ஜனவரி 1948) காலை, காந்திஜி அந்த முன்வரைவு சாசனத்தைப் பியாரி லாலிடம் கொடுத்து, ''இதனைக் கவனமாகப் படித்து, ஆவன திருத்தங்கள் செய்து, விட்டுப்போன விஷயங்களையும் சேர்த்துத் திருத்தமாய் அமைத்துத் தயார் செய்; நான் இதை மிகக் களைப்புடன் சிரமப்பட்டு எழுதியுள்ளேன்; ஆகையால் மேலும் திருத்தமாய் அமைக்க வேண்டிவரும்'' என்று பணித்தார். பியாரிலால் அவ்வாறே அதைப் படித்து, சில வாசகங்களைத் திருத்தி, அன்று நடுப்பகலிலேயே காங்கிரஸ் பொதுக் காரியதரிசி ஆசார்ய ஜுகல் கிஷோரிடம் கொடுத்தார். அவர் அதை காந்திஜியின் மறைவுக்குப் பிறகு பத்திரிகைகளில் பிரசுரத்திற்கு அனுப்பி வைத்தார். 
 ('கலக்டட் வொர்க்ஸ் ஆஃப் மகாத்மா காந்தி' நூல் 90, பக்கம் 526 - 528).

ஜவாஹர்லால் நேரு, 1934-இல் ஃபெயிஸ்பூர் காங்கிரஸ் வருடாந்திர மாநாட்டில் பேசுகையில், "காந்திஜி காங்கிரஸில் இருக்கிறாரோ இல்லையோ, எதுவாயினும் அவர்தான் காங்கிரஸின் நிரந்தர சூப்பர் அக்கிராசனர்'' என்று புகழ்ந்துரைத்தார்.

(தமது முழு கவனத்தையும் அகில இந்திய கிராமிய கைத்தொழில் அபிவிருத்திக் கழகத்திற்கும் அரிஜன சேவைக்கும் செலவழிக்கும் பொருட்டு காந்திஜி 1934-இல் காங்கிரஸிலிருந்து ராஜிநாமா செய்தார்).

1920 முதற்கொண்டு தாம் பேணி வளர்த்து, சுதந்திரப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி வழிநடத்திய 'சூப்பர் பிரசிடண்ட்' மகாத்மா, அப் பழம்பெரும் தேசிய ஸ்தாபனத்திற்கு முடிவுகட்டத் திட்டமிடுவாரா என்பதே கேள்வி.

''காங்கிரûஸக் கலைக்க வேண்டும்'' என்ற சொற்களை காந்திஜி அதன் நேரடி அர்த்தத்தில் கூறவில்லை என்பது அன்னார் அதற்கு இரண்டே நாள்களுக்கு முன் (ஜனவரி 27 அன்று) எழுதி, 'அரிஜன்'' (பிப்ரவரி 1, 1948) இதழில் வெளியான அவரது கடைசியோ கடைசி கட்டுரையிலிருந்து தெளிவுறத் தெரிய வருகிறது. அதன் வாசகம் பின்வருமாறு:

"இந்திய தேசிய காங்கிரஸ் நம் நாட்டின் தொன்மை வாய்ந்த தேசிய அரசியல் ஸ்தாபனமாகும். அது அகிம்சை வழியில் பல தேசிய போராட்டங்களை வெற்றிகரமாக நடத்தி, நாட்டிற்குச் சுதந்திரம் பெற்றுத் தந்துள்ளது. அந்த மகத்தான அமைப்பு மடிந்துபோவதை எவரும் அனுமதிக்க முடியாது. இந்த தேசமே அழியும்போதுதான் காங்கிரஸும் மாண்டு போகக்கூடும். அத்தகைய உயிர்ப்பான ஸ்தாபனம் தொடர்ந்து வளர்ந்துகொண்டே போகுமே தவிர, ஒருபோதும் ஒடுங்கி மடிந்து போகாது.

காங்கிரஸ் நமக்குச் சுதந்திரம் பெற்றுத் தந்துள்ளது. ஆயினும், பொருளாதாரச் சுதந்திரம், சமூக மற்றும் தார்மிக சுதந்திரங்களையும் ஈட்டித்தரக் கடமைப்பட்டுள்ளது. இச் சுதந்திரங்கள் விடுதலைப் போராட்டம் போன்று அவ்வளவு எழுச்சிகரமானவையோ காட்சிப் பகட்டானவையோ அல்ல என்பது என்னவோ உண்மையே. இருப்பினும் இவை அரசியல் சுதந்திரத்தைக் காட்டிலும் அகல விரிவானவை, அத்தியாவசியமானவை, ஆக்கப்பூர்வமானவை. அச் சுதந்திரங்களைப் பெற கோடானுகோடி மக்கள் அனைவரையும் காங்கிரஸ் அரவணைத்து ஊக்குவிக்க வேண்டும்.

அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்கள் என்ற பட்டியல் பதிவேடுகள் தேவையில்லை. இப்போது ஒரு கோடி உறுப்பினர்கள் பட்டியலில் இருக்கக்கூடும். அவர்கள் யார் யார் என்று யாருக்கும் தெரியாது! அவர்களைத் தவிர எத்தனையோ கோடி ஆண் - பெண்களும் காங்கிரஸ் ஆர்வலர்கள், அபிமானிகள்தாம். இருப்பினும், மக்கள் நலத்தில் ஈடுபாடுள்ள காங்கிரஸ் ஊழியர்கள் என்ற தனிப்பட்டியல் தயாரிக்கலாம். அத்தகையோர், காங்கிரஸ் கமிட்டி இடும் நிர்மாணப் பணிகளை ஏற்றுச் செயல்படக் கூடியவர்களாக இருத்தல் வேண்டும். எனக்கு மட்டும் நேரமும் போதிய உடல் நலமும் இருந்தால், அச் சேவகர்களும் தலைவர்களும் தன்னலமற்ற சமூகப் பணிகளால் பொது மக்களின் ஆதரவுக்கும் மதிப்புக்கும் எவ்வாறு பாத்திரமாக்கிக் கொள்ள முடியும் என்பதைப் பற்றியெல்லாம் மென்மேலும் விரிவாகப் பேசி, எழுதி, விவாதிக்க விரும்புகிறேன்'' ('அரிஜன்' - 1-2-1948).

இதன் பின்னணியிலே தான் காங்கிரஸ் சாசனத்தைத் திருத்தியமைப்பதற்கான தமது 1948, ஜனவரி 29 தேதியிட்ட பூர்வாங்கத் திட்ட வரைவில் அதற்கான விதிமுறைகளை வகுத்தளித்தார். அவற்றின் படு சுருக்கம் இதுதான்: "ஒவ்வொரு கிராமத்திலும் அக் கிராமத்தார்கள் அல்லது கிராம முன்னேற்ற மனப்பான்மை கொண்ட ஆண் - பெண் ஐந்து பேர் பஞ்சாயத் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவர். அடுத்தடுத்த இரு பஞ்சாயத்துகள் இணைந்து ஒரு செயற்குழுவையும் தலைவரையும் தேர்ந்தெடுப்பர். இவ்வாறு நூறு பஞ்சாயத்துகள் ஒருங்கிணைந்து ஒரு முதல்மட்டத் தலைவரையும், இரண்டாம் மட்டத் தலைவரையும் தேர்வு செய்வர். இவ்வாறு மாகாணவாரியாக இந்தியா பூராவும் மக்களின் மதிப்பைப் பெற்ற 'லோக் சேவக் சங்க'த் தலைவர்கள் செயல்படுவார்கள். தவிர, கிராமங்களிலும் நகர்ப்புறங்களிலும் சேவக- சேவகிகள் நியமனம் பெறுவர். அவர்களுக்கும், ஏனைய தலைவர்களுக்குமான தகுதிகளாவன: வழக்கமாகக் கதர் அணிபவராக இருக்க வேண்டும்; மது - லாகிரி வஸ்துகள் அருந்தலாகாது; மத நல்லிணக்கம் பேண வேண்டும். இந்துவாக இருந்தால் எந்த வடிவிலும் தீண்டாமை பாராட்டலாகாது போன்றவை'.

1947 டிசம்பர் 11 மற்றும் 12-ஆம் தேதிகளில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்மாணத்திட்டக் குழுவினருடன் கலந்துரையாடியபோது காந்திஜி இவ்வாறு பட்டவர்த்தனமாகக் கூறினார்:

"இன்று அரசியலில் ஊழல் ஊடுருவிவிட்டது. அரசியலில் எவர் புகுந்தாலும் தூய்மைகெட்டுக் கறைபடுகிறார். நிர்மாணத் திட்ட ஊழியர்களான நாம் அரசியலினின்றும் அறவே விலகியே நிற்க வேண்டும். அப்போதுதான் நமது செல்வாக்கு உயரும். நமது அகத்தூய்மை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகரிக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு எவ்வித முயற்சியுமின்றி நாம் மக்களை நம் வசமாக்கிக்கொள்ள முடியும்.

வயது வந்தோர் அனைவருக்கும் வோட்டுரிமை கிடைத்துள்ள இன்றைய சூழலில் நாம் மட்டும் சமூகநலத் திட்டங்களில் கண்ணுங்கருத்தும் செலுத்தி நேர்மையுடன் நடந்து மக்களின் நன்மதிப்பைப் பெற்றோமானால் நாம் எவரை வேட்பாளராக நிறுத்தி வைக்கிறோமோ அல்லது ஆதரிக்கிறோமோ, அவரே தேர்தலில் அமோக வெற்றி பெறுவார்''.

காந்திஜி மேலும் கூறினார்: "பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து நடத்திய விடுதலைப் போராட்டத்தின்போது நாம் பின்பற்றியது பெயரளவில்தான் அகிம்சை வழிமுறை என்பதை இப்போதுதான் உணர்கிறேன். உண்மையில் அது அகிம்சை வழி அல்ல. கடவுள் அப்போது என் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற்போல் ஆக்கிவிட்டார். நடக்க வேண்டியதை என் மூலம் நிகழ்வித்தார். காரியம் நடந்தேறிய பிறகு இப்போது என் கண்களைத் திறந்துவிட்டார். விரிந்த கண்களுடன் 'இனி செய்யவேண்டியது என்ன?' என்பதைத் தெளிவாகக் காண்கிறேன். லஞ்ச ஊழலை, நடைச் சீரழிவை, அவை எங்கிருந்தாலும் சரி, ஒழித்துக்கட்டக் கங்கணம் கட்டிக்கொள்ள வேண்டும். அதன் பொருட்டு நீங்கள் எந்தக் கமிட்டியிலும் சேர வேண்டியதில்லை; ஆட்சி அதிகாரத்தில் பங்குகொள்ள வேண்டியதில்லை. பாமர மக்களிடையேதான் உங்கள் பணி காத்துக் கிடக்கிறது'' ('கலக்டட் வொர்க்ஸ் ஆஃப் மகாத்மா காந்தி' நூல் 90, பக்கம் 215 - 221).

கடைசி உண்ணாவிரதத்தின் மூன்றாம் நாள் (1948 ஜனவரி 16 அன்று) ஆசிரமவாசி ஒருவருக்குக் காந்திஜி எழுதிய நீண்ட கடிதத்தில், "காங்கிரஸ் இப்போதும் ஓர் மகத்தான தேசிய அரசியல் ஸ்தாபனமே ஆகும். வருங்காலத்திலும் அது அவ்வாறே இருந்துவரும். ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் அமரும்போது அது அரசியல் கட்சிகளில் ஒன்றாக ஆகிவிடுகிறது'' என்று கூறியுள்ளார். ('கலக்டட் வொர்க்ஸ் ஆஃப் மகாத்மா காந்தி' நூல் 90, பக்கம் 434).

காந்திஜியின் வாசகங்களிலிருந்து ஒன்று தெளிவாகத் தெரிகிறது: "இந்தியர்கள் அனைவரையும் நிபந்தனைகளின்றி காங்கிரஸ் உறுப்பினர்களாக அரவணைத்துக் காங்கிரஸின் அடித்தளத்தை விரிவுபடுத்த வேண்டும். இருப்பினும், கள ஊழியர்கள், பலமட்டத் தலைவர்கள் அடங்கிய "லோக் சேவக் சங்க' காங்கிரஸ் கிளையினர், நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்களாகவும், நேர்மையும் நாணயமும் வாய்ந்தவர்களாகவும் இருத்தல் அவசியம். அவர்களில் எவரும் ஆதிக்க அதிகாரத்திற்கு ஆசைப்படாமல், அன்பின் ஆற்றலில் நம்பிக்கை கொள்ள வேண்டும். அவர்களுள் அரசியல் ஆர்வம் கொண்ட அப்பழுக்கற்ற காங்கிரஸ்காரர்கள் / காரிகள், லோக் சேவக் சங்கத்தின் ஆதரவுடன் சட்டசபைத் தேர்தலில் வேட்பாளர்களாகக் களமிறக்கப்படுவர்'.

இதன் அடிப்படையில், வேறு கட்சியைச் சார்ந்த அல்லது சுயேச்சையாளர்கள் தகுதி நிறைந்தவராகவும் குணசீலராகவும் இருப்பின் அவர்களுக்குத் தேர்தலில் போட்டியின்றி காங்கிரஸ் ஆதரவு அளிக்கக்கூடும் என்றும் ஊகிக்க இடமுள்ளது.

இவ்வாறு, மகாத்மா காந்தி 1947 டிசம்பர் 12 அன்று புதுதில்லியில் காங்கிரஸ் ஊழியர்கள் கூட்டத்தில் சுட்டிக்காட்டியதுபோல, "காங்கிரஸ் ஸ்தாபனம் மத்திய அரசின் ஓர் கண்காணிப்பு அமைச்சகம் போன்று செயல்படும்'' இதுவே அவரது கடைசி சாசனத்தின் நோக்கம்.
- தினமணி (06.03.2013)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக