நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

18.6.12

மகத்தான மாமனிதர்

பி. கக்கன்
(பிறந்த தினம்: ஜூன் 18)

மதுரை
மாவட்டம், தும்பைப்பட்டி எனும் சிற்றூரில் பூசாரி கக்கன் - பெரும்பி அம்மாள் தம்பதிக்கு 1909 ஜூன் 18ம் நாள் கக்கன் பிறந்தார்.

கோயில் பூசாரியாகவும், அரசு துப்புரவு தொழிலாளியாகவும் பணியாற்றிய தந்தையார், தன் மகனை லட்சியவாதியாக வளர்த்தார். தந்தையின் விருப்பப்படியே எஸ்.எஸ்.எல்.சி. தேறி, ஆசிரியர் பயிற்சியை முடித்து, சேரிப்பகுதிகளில் இரவுப் பாடசாலைகளை ஏற்படுத்தி, மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தார்.

அரிஜன சேவா சங்கத்தின் தலைவர் வைத்தியநாத அய்யரும் கக்கன்ஜியும் சமுதாயப் பணியிலும், தேசப்பணியிலும் இணைந்தே செயல்பட்டனர். 1939 ஆகஸ்ட் 8இல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் ஹரிஜன சமுதாயத்தினர் நுழைய வைத்தியநாத அய்யர் தலைமையில், கக்கன்ஜியும் போராடினார். பவண மீனாட்சி கோயிலிலும், கேரள ஆலயங்களிலும் கக்கன்ஜியினால் ஹரிஜன மக்கள் ஆண்டவனை தரிசிக்க முடிந்தது.

மக்களில் ஒருவராய்...

சென்னை அரசு பொது மருத்துவமனை. ஒரு முதியவரான நோயாளி மருத்துவமனையில் சேர்வதற்காகச் சென்றார். அவருக்கான வார்டில் படுக்கைகள் நிரம்பி வழிந்ததால், மருத்துவமனை ஊழியர் தரையில் பாய் விரித்து படுக்கச் சொன்னார். ஒருநாள், ‘முதலமைச்சர் வருகிறார் எழுந்து உட்காருங்கள்’ என்று ஊழியர்கள் சொன்னபோதும், அந்த முதிய நோயாளியின் உடல்நிலை ஒத்துழைக்க மறுத்தது.

முதலமைச்சர் எம்.ஜி. ராமசந்திரன் மருத்துவமனையை பார்வையிட்டுக் கொண்டே வந்தார். அந்த முதிய நோயாளியை கடந்து சென்றவர், சட்டென்று திரும்பி அருகில் அமர்ந்து, அவரின் முகத்தையே கூர்ந்து நோக்கினார். அதிர்ச்சியடைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் முதியவரை கட்டி அணைத்து கண்ணீர் சிந்தினார். முதியவருக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் உடனடியாக நடைமுறைப்படுத்தச் செய்தார். அந்த முதியவர்தான் கக்கன். இந்த செய்தி கேட்ட தமிழகமே நெகிழ்ந்தது.

தியாகத் தழும்பு

கர்மவீரர் காமராஜரின் நேரடிச் சீடரான கக்கன்ஜி ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் போராடியதால் சிறை சென்றார். சிறையில் கக்கன்ஜியை கம்பத்தில் கட்டி,  குருதி கொட்ட தடியாலடித்த போதும், ''காந்தியார் வாழ்க", ''காமராஜர் வாழ்க"
என்றே முழக்கமிட்டார். கக்கன்ஜி மண்ணோடு மறையும் வரை அந்த வீரத்தழும்புகள் அவரது தியாகத்தை கூறிக்கொண்டிருந்தன.

எளிமையின் சிகரம்

தமிழ்நாட்டில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் ஆட்சி இழந்தது. கக்கன்ஜி அமைச்சருக்காக அளிக்கப்பட்டிருந்த அறையில் கோப்புகளையும், அவருடைய பதவிக்காக கொடுக்கப்பட்டிருந்த வாகனமான காரையும் ஒப்படைத்துவிட்டு வெறுங்கையுடன் வெளியேறினார்.

தலைமைச் செயலகத்திற்கு அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்து, மாநகரப் பேருந்தில் சாதாரண பொதுமக்களில் ஒருவராய் பயணித்தார். எளிமைக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்த தியாகி கக்கன்ஜி 1981 டிசம்பர் 28ம் நாள் மறைந்தார்.

நன்றி: விஜயபாரதம்

காண்க: தியாகத் திருவிளக்கு 



17.6.12

தன்னைத் தந்து நம்மை உணர்த்தியவன்

வீரன் வாஞ்சிநாதன்
(பலிதானம்: ஜூன் 17)

'இந்திய
சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர்கள்' ' என்று ஒரு நீண்ட பட்டியல் உண்டு. இந்தப் பட்டியலில் உள்ளவர்களில் ஒருவராகத் தான் வாஞ்சிநாதன் சித்தரிக்கப் பட்டிருக்கிறார். உண்மையில் இவர் இதற்கும் மிக மேலே. இவர் வரலாற்று நாயகன். ஆனால், அவரது தீரச் செயலின் கன பரிமாணம் தனித்தன்மை வரலாற்று முக்கியத்துவம் சரியாக உணரப்படவில்லை.

1. இவர்தான் ஆங்கிலேயரிடம் கணக்குத் தீர்த்தவர்.

ஆங்கிலேயர்கள் நாடு விட்டு நாடு வந்து இந்த மண்ணை ஆக்கிரமித்து இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்களையே அடிமைப் படுத்திக் கொண்டவர்கள். தமிழகத்தில் தங்களை எதிர்த்துப் போராடிய புலித்தேவன், சின்னமலை, கட்டபொம்மன், ஊமைத்துரை, அழகு முத்துக்கோன், மருது சகோதரர்கள் ஆகியோரை இந்த மண்ணிலேயே தூக்கிலிட்டுக் கொன்றவர்கள்.

கட்டபொம்மன் வாழ்ந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைத் தகர்த்து தரைமட்டம் ஆக்கியதுடன் அந்த மண்ணில் தங்களுக்கு எதிராக மீண்டும் ஒரு போராட்டம் உருவாகிவிடக் கூடாது என்பதற்காக அந்த ஊரையே ஏர் கொண்டு உழுது விட்டார்கள்.
வேலூர்ப் புரட்சியின் முடிவில் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட பின் அவர்களது வாரிசுகள் மீண்டும் தங்களுக்கு எதிராகத் தலை எடுத்து விடக் கூடாது என்பதற்காக இளம் சிறார்களாயிருந்த அவர்களது மகன்களையும் மருதுபாண்டி யருக்குத் துணை நின்ற புரட்சிக் காரர்களையும் மலேயாவுக்கு நாடு கடத்தி அங்குள்ள சிறையில் அடைத்தவர்கள்.

பிற்காலத்தில் ஆஷ்துரை கூடத் தன் பங்கிற்குத் தூத்துக்குடியில் ஊர்வலமாக வந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் சிலரைச் சுட்டு வீழ்த்தியிருக்கிறார். இத்தகைய கொடுமைக்கார ஆங்கிலேயரை எதிர்த்துப் பிற்காலத்தில் தமிழகத்தில் தமிழர்கள் கொடி பிடித்திருக் கிறார்கள். சிறை சென்றிருக்கிறார்கள். சிறை சென்றிருக்கிறார்களே தவிர, யாரும் ஆயுதம் ஏந்தவில்லை 1806 இல் குறுநில மன்னர்களும் பாளையக்காரர்களும் நடத்திய வேலூர்ப் புரட்சிக்குப் பின் 105 ஆண்டுகள் கழித்து அந்தக் குறையைப் போக்கி அவர்களிடம் கணக்குத் தீர்த்தவர் வாஞ்சிநாதன் தான்.

2.  இவர் தான் தனது தீரச் செயலின் மூலம் இங்கிலாந்து நாடாளுமன்றத்திலும் பேசப் பட்டவர்.


இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் ஆங்கிலேய அரசை எதிர்த்து தமிழகத்தில் நடந்த போராட்டங்களின் பாதிப்புகள் எல்லாம் தமிழக எல்லையைத் தாண்டவில்லை. ஆனால், வாஞ்சிநாதன் நிகழ்த்திய தீரச் செயல்தான் இந்திய எல்லையையும் தாண்டி நம்மைப் பாதித்துக் கொண்டிருந்த இங்கிலாந்து நாட்டையே உலுக்கியது. ஆங்கிலேயரிடம் பாதிப்பை ஏற்படுத்தியது. தகவல் தொடர்பு, போக்குவரத்து ஆகிய துறைகளில் மிகவும் பின் தங்கியிருந்த அக்காலத்திலேயே வாஞ்சிநாதன் 1911, ஜுன் 17 ல் ஆங்கிலேயப் பேரரசின் பிரதிநிதியான கலெக்டர் ஆஷ்துரையைச் சுட்டது பற்றி 1911 ஜுன் 19 ம் தேதி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

3. இவர் தான் வெளிநாட்டுப் பத்திரிகையின் தலையங்கத்தில் புகழப் பட்டவர்.


இந்திய விடுதலையில் மிகவும் அக்கறை கொண்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுக்குப் பக்கபலமாகத் திகழ்ந்த மேடம் காமா அவர்கள் அப்போது பாரீஸ் நகரிலிருந்து வெளியான தனது 'வந்தே மாதரம்' பத்திரிகையின் தலையங்கத்தில் வாஞ்சிநாதன் தீரச் செயலைப் புகழ்ந்து இவ்வாறு எழுதினார்:  "திருநெல்வேலி கலெக்டர் ராபர்ட் வில்லியம் டி எஸ்கார்ட் ஆஷ் என்பவரை வாஞ்சிநாதன் என்ற இளைஞர் பட்டப் பகலில் சுட்டுக் கொன்ற நிகழ்ச்சி இந்திய மக்கள் உறங்கவில்லை என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. வடக்கோ, தெற்கோ, கிழக்கோ இந்தியாவின் எந்தப் பகுதியுமே இனிமேல் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குப் பாதுகாப்பான பகுதிகள் இல்லை என்பதை எச்சரிக்கும் அபாயச் சங்கு ஊதப்பட்டு விட்டது. இதுவரை மிதவாத அரசியலின் தொட்டிலாக விளங்கி வந்த தென்னாட்டிலும் புரட்சிக் கனல் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கி விட்டது. இனிமேல் இந்தியாவில் பணியாற்ற வரும் பிரிட்டிஷ் அதிகாரிகள் இங்கிலாந்திலிருந்து புறப்படும்போதே தங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தான் வர வேண்டியிருக்கும்''.

வாஞ்சிநாதனும் வ.உ.சியும்:

வ.உ.சி. மென்மையான மேன்மையான பண்புக்குச் சொந்தக்காரர். ஈ, எறும்புக்குக் கூடத் துன்பம் விளைவிக்காதவர். இத்தகைய வ.உ.சியே கூட, சிறையிலிருந்த தன்னிடம் சிறைக்காவலன் கலெக்டர் ஆஷ்துரையை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்ற செய்தியைக் கூறியதும், ஆஷ்துரை கொல்லப் பட்டதற்காகக் கொஞ்சமும் இரக்கப்பட வில்லை. மாறாக, "நல்ல செய்தியைச் சொன்னாய். நீ நலம் பெறுவாய்'' என்று அவனை வாழ்த்தினார். அத்துடன் அவனிடம் தான் சிறைவாசம் அனுபவிப்பதற்கும், தனது கப்பல் கம்பெனி நசிந்து போனதற்கும் இந்த ஆஷ்துரைதான் காரணம் என்றும் விளக்கினார்.

ஆங்கிலேயர் காலத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களின் சிறைவாசம் என்பது கடுமையானது; கொடுமையானது. இந்தச் சூழ்நிலையில், "இங்கிலாந்து சக்கரவர்த்தியின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு சிறைக் கைதிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் தண்டனைக் குறைப்பு இந்த ஆண்டு வ.உ.சிக்கு கிடையாது'' என்று அந்த சிறைக் காவலன் கூறிய போது, "இப்பொழுது மட்டுமல்ல, இனி எப பொழுதுமே எனக்கு விடுதலை இல்லா விட்டாலும் கூடப் பரவாயில்லை'' என்று அலட்சியமாக அவர் பதில் கூறினார் என்றால், ஆஷ்துரை கொல்லப்பட்டது அவருக்கு எத்தகைய மகிழ்ச்சியை அளித்திருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

முத்துராமலிங்கத் தேவர் வாஞ்சிநாதனிடம் கொண்டிருந்த மரியாதை. "சூரரைப் போற்று'' என்பார் பாரதி. யாருக்கும் தலைவணங்காத தன்மானச் சிங்கம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். இவர் ஒவவோர்  ஆண்டும் தீபாவளிக்குச் சில நாட்களுக்கு முன் அப்போது சென்னையில் வசித்து வந்த வாஞ்சிநாதனின் மனைவி பொன்னம்மாள் அம்மையாரைச் சந்தித்து அவருடைய காலில் விழுந்து வணங்கி அவருக்கு ஒரு புடவை வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். இது அவர் வாஞ்சிநாதனிடம் கொண்டிருந்த மரியா தைக்கு ஒரு எடுத்துக்காட்டு.



.
 


11.6.12

கடவுளுக்குத்தான் வெளிச்சம்...

சிந்தனைக்களம்  



பொறுப்பான பதவிகளில் தகுதியானவர்கள் அமரும்போதுதான் அந்தப் பதவிக்குப் பெருமை. பதவியால் அலங்கரிக்கப்படுபவர்களைவிட, யாரால் அந்தப் பதவி அலங்கரிக்கப்படுகிறது என்பதைப் பொருத்துத்தான் மரியாதை. அரசியல் சட்ட அமைப்புகளான குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற நீதிபதி, தலைமைத் தேர்தல் ஆணையர், தலைமைத் தணிக்கை ஆணையர், தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர், ஆளுநர்கள் போன்ற எல்லாப் பதவிகளுமே சரியானவர்கள் பதவியில் இருந்தால் மட்டுமே அந்தப் பதவிக்கும் பெருமை, தேசத்துக்கும் பெருமை.

 குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரவிருக்கிறது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி, தேசத்தின் மிக உயர்ந்த பதவி குடியரசுத் தலைவர் பதவிதான். அந்தப் பதவியை வகிப்பவர்தான் தேசத்தின் முதல் குடிமகன் எனும்போது சர்வதேச அளவில் நமது நாட்டு மக்களின் தராதரத்திற்கு உதாரணமாகக் குடியரசுத் தலைவரைத்தான் அடையாளமாகக் கருதுவார்கள்.

 வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தல், அந்தப் பதவியை அலங்கரித்த மாமனிதர்களையும், அந்தப் பதவிக்கே களங்கம் கற்பித்த தவறான தேர்வுகளையும், குடியரசுத் தலைவர் பதவியின் மகத்துவம் உயர்ந்து மரியாதைக்குரியதாக இருந்த காலகட்டத்தையும், தரம் தாழ்ந்து நம்மைத் தலைகுனிய வைத்த சம்பவங்களையும் மீள்பார்வை பார்க்க வைக்கிறது.

 குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்தியாவின் முதல் குடிமகனாக அமர்வதற்கு 35 வயதுக்கு மேற்பட்ட இந்தியக் குடிமகனாக இருந்தால் மட்டும் போதுமா என்றால் "ஆமாம்' என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியவில்லை. கையெழுத்துப் போடத் தெரிந்தவராக, அரசியல் சட்டம் தெரிந்தவராக, தேசப்பற்று மிக்கவராக, சமைக்கத் தெரிந்தவராக, ஆமாம் சாமி போடத் தெரிந்தவராக என்று வெவ்வேறு விதமான தகுதிகள் கொண்டவர்களாக வெவ்வேறு காலகட்டத்தில் குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரித்தவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதுதான் நடைமுறை அனுபவம்.

 சுதந்திர இந்தியாவின் முதல் மூன்று குடியரசுத் தலைவர்களாகப் பதவியை அலங்கரித்த பாபு ராஜேந்திரப் பிரசாத், டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், டாக்டர் ஜாகீர் ஹுசைன் ஆகிய மூவரும் 1950 முதல் 1969 வரை அவர்கள் வகித்த பதவிக்குப் பெருமை சேர்த்தவர்கள். அவர்களால் பதவி பெருமை பெற்றது என்பதுடன், இந்தியக் குடியரசு அவர்களை முதல் குடிமகன்களாகத் தேர்ந்தெடுத்ததில் பெருமிதம் அடைந்தது.

 ஜாகீர் ஹுசைனின் அகால மரணத்தைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் பதவியின் கெüரவமும், அதை அலங்கரித்தவர்களின் தகுதியும் அதல பாதாளத்தில் வீழ்ந்தன. அடுத்த 15 ஆண்டுகள் குடியரசுத் தலைவர் மாளிகையின் இருண்ட காலம் என்று சொன்னால்கூடத் தவறில்லை. தேசத்தின் முதல் குடிமகனுக்கான அடிப்படைத் தகுதியே பிரதமரின் விரலசைப்புக்குத் தலையாட்டுவது என்று சட்டத்திருத்தம் கொண்டு வராத குறையாக அந்தப் பதவி தரம் தாழ்த்தப்பட்டது என்பதுதான் வரலாற்று உண்மை.

 காங்கிரஸ் கட்சியில் 1969-இல் ஏற்பட்ட பிளவு, குடியரசுத் தலைவர் பதவி தரம் தாழ்ந்து போனதற்கும் காரணமாக அமைந்துவிட்டது. குடியரசுத் தலைவர் பதவிக்கான காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக நீலம் சஞ்சீவ ரெட்டி அறிவிக்கப்பட்டார். அவரது வேட்புமனுவில் சஞ்சீவ ரெட்டியின் பெயரை முன்மொழிந்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கையெழுத்தும் இட்டார்.

 சஞ்சீவ ரெட்டியையும், தனது கட்சித் தலைமையையும் முதுகில் குத்தும் நம்பிக்கைத் துரோகத்தை இந்திரா காந்தி அரங்கேற்றியதுதான், குடியரசுத் தலைவர் பதவிக்கு ஏற்படுத்தப்பட்ட முதல் அவமரியாதை. தனது அதிகார பலத்தையும், நயவஞ்சகத்தையும் முழுமையாகப் பயன்படுத்தித் தான் சார்ந்த கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளரைத் தோற்கடித்து, எதிர்க்கட்சிகளின் சுயேச்சை வேட்பாளரான வி.வி. கிரியைக் குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்க வைத்தார் அவர்.

 இந்திரா காந்தி அனுப்பும் உத்தரவு எதுவாக இருந்தாலும் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்துப் போடுவதுதான் குடியரசுத் தலைவர் பதவியின் முழுமுதற் கடமை என்று செயல்பட்டதால் பெருமைக்குரிய "ரப்பர் ஸ்டாம்ப்' குடியரசுத் தலைவர் என்கிற கேலிப் பெயருக்கு ஆளானதைப் பெருமையாகக் கருதிச் செயல்பட்ட குடியரசுத் தலைவர் வி.வி. கிரி. வி.வி. கிரியும் சரி, அவரைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரித்த பக்ருதீன் அலி அகமதும் சரி, ஆளும் கட்சியின் கைப்பாவைகளாகவும், பிரதமர் அலுவலகம் அனுப்பும் அத்தனை உத்தரவுகளிலும் படித்துப் பார்க்காமல் கையொப்பமிடும் இயந்திரங்களாகவும் செயல்பட்ட அவலம் நிகழ்ந்தது.

 ஜூன் 25, 1975! சுதந்திர இந்தியச் சரித்திரத்தில் மறக்க முடியாத நாள் அது. அன்றுதான் இந்திரா காந்தி அரசால் அவசரநிலைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. பாவம், குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது நள்ளிரவில் தட்டி எழுப்பப்பட்டார். அவர்முன் நீட்டப்பட்ட அவசரநிலைச் சட்டப் பிரகடனத்தில், எந்தவிதக் கேள்வியும் எழுப்பாமல் கையெழுத்திட்டுத் தனது இந்திரா விசுவாசத்தைப் பிரகடனப்படுத்திய மகிழ்ச்சியில் நிம்மதியாகத் தூங்கப் போனார்.

 விடிந்தபோதுதான் இந்தியாவே இருண்டுவிட்டது வெளிப்பட்டது. செய்திகளே இல்லாமல் பத்திரிகைகள் வெளியாகின. விமர்சனத்துக்கு வழியே இல்லாமல் எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அடுத்த இரண்டு ஆண்டுகள் இந்தியத் திருநாடே அவசரநிலைச் சட்டத்துக்கும், அடக்குமுறைக்கும் ஆளாகித் தவித்தது. கேள்வி எதுவும் கேட்காமல் அவசரநிலையைப் பிரகடனம் செய்த பக்ருதீன் அலி அகமது குடியரசுத் தலைவர் பதவிக்கு ஏற்படுத்திய களங்கத்தின் கறை காலத்தால் அழியக்கூடியதா என்ன?

 1977-இல் இந்திரா காந்தியின் அடக்குமுறை அரசு தோற்கடிக்கப்பட்டு, ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தபோது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் நீலம் சஞ்சீவ ரெட்டி. அவரால் பதவியின் இழந்த பெருமை மீட்கப்பட்டதா என்றால் இல்லை. 1982-ல் கியானி ஜெயில் சிங் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, கொஞ்சம் நஞ்சம் இருந்த நம்பிக்கையும் போயிற்று. மீண்டும் கிரி - அலி நாள்களுக்குத் தாழ்ந்தது குடியரசுத் தலைவர் பதவியின் மதிப்பும் மரியாதையும்!

 இந்திரா காந்தியின் அகால மரணமும், ராஜீவ் காந்தியின் வெற்றியும் அன்றைய குடியரசுத் தலைவர் ஜெயில் சிங் சற்றும் எதிர்பாராதவை. தான் மீண்டும் இன்னொரு முறை குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படப் போவதில்லை என்பதை அறிந்தவுடன் அரசியல்வாதியான கியானி ஜெயில் சிங் தான் வகிக்கும் பதவியின் கௌரவத்தைக் கூடப் பொருள்படுத்தாமல் தரம் தாழ்ந்து அரசியல்வாதி போலச் செயல்படத் துணிந்தார்.

 ராஜீவ் காந்தியைப் பதவி நீக்கம் செய்து இன்னொரு ஆட்சியைப் பதவியில் அமர்த்தினால் என்ன என்பது வரை குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்தபடி சதித்திட்டம் தீட்டத் தொடங்கிய ஜெயில் சிங் மறந்துவிட்ட ஒரு எதார்த்த உண்மை என்ன தெரியுமா? ராஜீவ் காந்தி அரசுக்கு அன்றைய மக்களவையில் ஐந்தில் நான்கு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது என்பதுதான்.

 தரம் தாழ்ந்தவர்களைத் தகுதிக்கு மீறிய பெரிய பதவிகளில் தராதரம் தெரியாமல் அமர்த்துவதால் வரும் சோதனைகள் இவை. ஜெயில் சிங்கின் சிறுபிள்ளைத்தனமான (சில்லறைத்தனமான) செய்கைகளை நமது பத்திரிகைகள் குடியரசுத் தலைவரின் சுதந்திரப் போக்கு என்று வர்ணித்ததுதான் அதைவிட விசித்திரம்.

 பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் பதவி தனது இழந்த மரியாதையையும், பெருமையையும் மீண்டும் பெற்றது ஆர். வெங்கட்ராமன் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோதுதான். சுதந்திர இந்திய சரித்திரத்தில் மிகவும் இக்கட்டான, பிரச்னைக்குரிய காலகட்டத்தில் குடியரசுத் தலைவராக ஆர். வெங்கட்ராமன் தேர்ந்தெடுக்கப்பட்டதால்தான், கூட்டணி அரசுகள் அமையும்போது குடியரசுத் தலைவராக இருப்பவர் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் நெறிமுறைகளாக நிலை பெற்றன.

 எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், ஒரு குடியரசுத் தலைவர் எவ்வாறு செயல்பட வேண்டும், எப்படிப்பட்ட நிலைப்பாடைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்கு அவர் வழிகாட்டியாகத் திகழ்ந்ததால்தான், "விதிமுறைகளை நிலைநாட்டிய குடியரசுத் தலைவர்' (ரூல்புக் பிரசிடென்ட்) என்று ஆர். வெங்கட்ராமன் சரித்திரத்தில் இடம் பெற்றார். 1989-இல் தனிப்பெரும்பான்மை இல்லாத ஆனால், தனிப்பெரும் கட்சியாக 9 } வது மக்களவையில் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்தச் சூழ்நிலையில் யாரை முதலில் ஆட்சி அமைக்க அழைப்பது, கூட்டணி அமையுமானால் அதை எப்படி அனுமதிப்பது போன்ற சிக்கலான அரசியல் சட்டப் பிரச்னைகளுக்குத் தேர்ந்த முடிவுகளை எடுத்து, வரைமுறைகளை ஏற்படுத்தி, நடைமுறைப்படுத்திய வரலாற்றுப் பெருமை அன்றைய குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமனையே சாரும்.

 ஆர். வெங்கட்ராமனைத் தொடர்ந்து சங்கர் தயாள் சர்மாவும், ஆர்.கே. நாராயணனும் அந்த உயர்ந்த பதவியின் மரியாதையைக் காப்பாற்றியதுடன் மரியாதைக்குரிய குடியரசுத் தலைவர்களாகத் தங்களது செயல்பாடுகளால் மதிக்கப்பட்டவர்கள். தொடர்ந்து அரசியல் தொடர்புள்ளவர்களே குடியரசுத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்படும் மரபு மாற்றப்பட்டது அ.ப.ஜெ. அப்துல்கலாம் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோதுதான். குடியரசுத் தலைவர் பதவிக்கு அதுவரை இல்லாத மதிப்பும், மரியாதையும், மக்கள் செல்வாக்கும் ஏற்பட்டதும் அவரது பதவிக்காலத்தில்தான்!

 அப்துல் கலாமைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டதே ஒரு வித்தியாசமான அனுபவம். தான் தேசிய முற்போக்குக் கூட்டணி அரசால் குடியரசுத் தலைவர் பதவி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவோம் என்பதே கூட அப்துல் கலாமுக்குத் தெரியாது. அன்றைய பிரதமர் வாஜ்பாயி, "எங்கே இருக்கிறார் அப்துல் கலாம்?' என்று விசாரிக்கச் சொன்னபோது, அவர் தமிழகத்திலுள்ள ஒரு கிராமத்தில் பிளஸ் டூ மாணவ - மாணவியருடன் உரையாடிக் கொண்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது. அவரைப் பிரதமர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, குடியரசுத் தலைவர் பதவி வேட்பாளராகப் போட்டியிடச் சம்மதிக்க வைக்க வேண்டி வந்தது.

 தகைசால் சான்றோர் பட்டம், பதவிக்காக விண்ணப்பிப்பது வழக்கமல்ல என்பது அப்துல் கலாம் விஷயத்தில் நிரூபணமாகியது. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்கும்படி பாபு ராஜேந்திரப் பிரசாதை எல்லோரும் வற்புறுத்தி ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டியிருந்தது. கவர்னர் ஜெனரலாக இருந்து ஓய்வுபெற்ற ராஜாஜியை, வல்லபபாய் பட்டேலின் மறைவுக்குப் பிறகு காணப்பட்ட பதற்றமான சூழ்நிலையில் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் வேண்டுகோளுக்கு இணங்க மத்திய உள்துறை அமைச்சராகவும், 1952-இல் சென்னை ராஜதானியில் காங்கிரஸ் கட்சிக்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு. காமராஜின் வேண்டுகோளுக்கு இணங்க முதலமைச்சராகவும் பதவி ஏற்றுக் கொள்ளச் செய்ய வற்புறுத்த வேண்டி வந்தது.

 வேறு சிலர் பெரிய பதவிகள் அவர்களைத் தேடி வந்தும், சற்றும் பொருள்படுத்தாமல் தாங்கள் கொண்ட கொள்கையிலும், செயல்திட்டங்களிலும் தொடர்ந்து நடை போட்டனர். உதாரணமாக, சுதந்திர இந்தியாவின் துணைப் பிரதமராக இருக்கும்படி பண்டித ஜவாஹர்லால் நேருவே வற்புறுத்தியும் அதை நிராகரித்தவர் ஜெயப்பிரகாஷ் நாராயண். முதலிலேயே குறிப்பிட்டதுபோல, பதவிகள் அந்தப் பதவிகளை அலங்கரிப்பவர்களால்தான் பெருமை அடைகின்றன. தகுதியற்றவர்கள் மரியாதைக்குரிய பதவிகளில் அமர்த்தப்படும்போது மதிக்கப்படுவதில்லை, சகிக்கப்படுகிறார்கள், அவ்வளவே!

 1987-இல் மீட்டெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவர் பதவியின் கெüரவம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2007-இல் மீண்டும் அதல பாதாளத்துக்குத் தள்ளப்பட்டது. பிரதிபா தேவிசிங் பாட்டீல் குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணி என்ன? அதற்கு அவருக்கு இருந்த தகுதிதான் என்ன? விடை தெரியாமல் புதிராக இருந்த இந்தக் கேள்விகளுக்கு ராஜஸ்தான் மாநில அமைச்சர் ஒருவர் காங்கிரஸ் தொண்டர்களுக்கு மத்தியில் உரையாற்றியபோது விடையளித்தார்.

 ""நமது மாநில ஆளுநராக இருந்த பிரதிபா பாட்டீல் நேரு குடும்பத்துக்கு ஆற்றிய சேவைக்கும், விசுவாசத்துக்கும் கிடைத்த பரிசுதான் குடியரசுத் தலைவர் பதவி. நேரு குடும்பத்தில் சமைப்பது, வரும் பார்வையாளர்களுக்கு டீ, காபி கொடுப்பது, பாத்திரங்களைக் கழுவுவது என்று கெüரவம் பார்க்காமல் சேவை செய்திருக்கிறார். இதையெல்லாம் ஏன் கூறுகிறேன் என்றால், நாம் அப்படியெல்லாம் நேரு குடும்பத்துக்குக் காட்டும் நன்றி விசுவாசத்திற்குப் பலனில்லாமல் போகாது என்பதை உங்களுக்கு உணர்த்துவதற்காகத்தான்'' என்று ரகசியத்தைப் போட்டு உடைத்து விட்டார் அவர்.

 பத்துப் பாத்திரம் தேய்த்த நன்றி விசுவாசத்துக்குக் கொடுக்கப்பட்ட பதவிக்கு, காங்கிரஸ் கட்சி மக்கள் மன்றத்தில் தந்த விளக்கமே வேறு. முதன் முறையாக ஒரு பெண்மணியைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கிறோம் என்று காரணம் கூறினார்களே, பிரதிபா பாட்டீலைவிடத் தகுதியான பெண்மணிகள் யாருமே காங்கிரஸ் கட்சியில் இல்லையா, இல்லை சோனியா காந்தியின் கண்களில் தட்டுப்படவில்லையா? ஒருவேளை, அவரைத் தவிர வேறு யாரும் நேரு குடும்பத்துச் சமையல் அறையில் வேலை செய்யவோ, பத்துப் பாத்திரம் தேய்த்துத் தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தவோ முயற்சிக்கவில்லையோ என்னவோ...

 இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரவிருக்கிறது. ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்கிற பொறுப்பை 2007 போலவே மீண்டும் சோனியா காந்தியிடம் ஒப்படைத்திருக்கிறது காங்கிரஸ் கட்சி. சோனியாவின் தேர்வு என்று சொன்னால், அது நிச்சயமாக அப்துல் கலாம் போன்ற தகுதியும் தரமும் வாய்ந்த, பதவிக்குப் பெருமை சேர்க்கும் ஒருவராக இருக்க வழியில்லை. நேரு குடும்பத்திற்குச் சேவகம் செய்யும், பத்துப் பாத்திரம் தேய்க்கும், வீட்டைப் பெருக்கி மெழுகும், தோட்டத்தைப் பராமரிக்க உதவும் இத்தியாதி இத்தியாதி சேவகம் செய்யும் ஒருவராக இருப்பதற்கான வாய்ப்புதான் அதிகம்.

 இப்போதைக்கு பிரணாப் முகர்ஜி, மீராகுமார், பி.ஏ. சங்மா, ஹமீத் அன்சாரி போன்றவர்களின் பெயர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. பிரணாப் முகர்ஜி அப்படி ஒரு வாய்ப்புக் கிட்டுவதை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பார் என்பது நிச்சயம். அவரது எண்ணம் புரிந்து கொள்ளக் கூடியதும்தான்.

 இன்றைய மத்திய அமைச்சரவையிலேயே அதிகமான பணிச்சுமையைத் தாங்குபவர் பிரணாப்தான். வயதுக்கு மீறிய வேலைப்பளுவால் துவண்டு போயிருக்கிறார் மனிதர். இரண்டாவதாக, தன்னை ஒருகாலமும் பிரதமராக்க சோனியா காந்தி சம்மதிக்க மாட்டார் என்று அவருக்குத் தெரியும். மூன்றாவதாக, இன்றைக்கு இருக்கும் நிதிநிலைமையில், இருபது ஆண்டு கால தாராளமயமாக்கலின் தாக்கத்தால் தளர்ந்தும் துவண்டும்போய்த் தள்ளாடும் இந்தியப் பொருளாதாரச் சூழலில் தன்னால் ஒன்றும் செய்துவிட முடியாது என்பது கூடவா அவருக்குத் தெரியாது.

 இதிலிருந்தெல்லாம் தப்பித்துக் கொண்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் தஞ்சம் அடைந்துவிடப் பிரணாப் முகர்ஜி நினைப்பதில் தவறில்லை. ஆனால், சோனியா காந்தி அதற்கு அனுமதிப்பாரா? கடவுளுக்குத்தான் வெளிச்சம்!

 சோனியா காந்தி ஒரு வெளிநாட்டுக்காரர் என்கிற உண்மையை உரக்கச் சொன்னதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விட்டார் சங்மா. அதனால் அவரைக் குடியரசுத் தலைவராக்க சோனியா காந்தி ஒப்புக் கொள்வாரா? கடவுளுக்குத்தான் வெளிச்சம்!

 சரி, மீரா குமார்? வேறு ஏதாவது வீட்டு வேலை நன்றாகச் செய்யும் ஊழியர்? கடவுளுக்குத்தான் வெளிச்சம்!

-எஸ்.குருமூர்த்தி 

நன்றி: தினமணி (09.06.2012)


.

4.6.12

பலர் அறியாத 'தியாகதீபம்'


 சேலம் டாக்டர் வரதராஜுலு நாயுடு
 (பிறப்பு: ஜூன் 4 )

 சுதந்திரப் போராட்டத்தில் தமிழகம் ஆற்றிய பங்களிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல. தென்னிந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தில் முன்னிலை வகித்தது தமிழகம் என்பது மட்டுமல்ல, தன்னிகரற்ற பல தலைவர்களை விடுதலை வேள்விக்கு அளித்ததும் தமிழகம்தான். தமிழக சுதந்திரப் போராட்ட வரலாற்றிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஆரம்பகால வரலாற்றிலும் தனித்துவமான தடம் பதித்த தலைவர்களில் ஒருவர் சேலம் டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு.

அக்காலத்தில் சேலத்தை அடுத்த ராசிபுரத்தில் 1887 ஜூன் 4 ஆம் தேதி பெருமாள் நாயுடு-குப்பம்மாள் தம்பதியருக்கு பிறந்த வரதராஜுலு நாயுடுவின் முன்னோர்கள் கிருஷ்ணதேவராயர் காலத்தில் விஜயநகர சேனைப்படையுடன் தமிழ்நாட்டில் குடியேறியவர்கள் என்பது சரித்திரம்.

வரதராஜுலு நாயுடு தமது பத்தொன்பதாம் வயதில் தீவிர அரசியல் வயப்பட்டார். மாணவப் பருவத்திலேயே விதேசிப்பொருள்களை வெறுத்து ஒதுக்குதல், அன்னியத் துணிகளை எரித்தல் போன்ற தீவிர நடவடிக்கைகள் அவரைக் கவர்ந்தன.

வங்காளப் பிரிவினையைத் தொடர்ந்து எழுந்த தேசிய எழுச்சி அவரைப் பெரிதும் ஈர்த்தது. சுதந்திரத்துக்கான போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கத் துணிந்தார் வரதராஜுலு நாயுடு. கல்வி அதிகாரிகளும், காவல் அதிகாரிகளும் அவரது நடவடிக்கைகளைக் கண்கொத்திப் பாம்பாகக் கவனித்து வந்தனர்.

சித்த மருத்துவம், ஆயுர்வேதம் ஆகிய இரண்டு இந்திய மருத்துவத் துறைகளிலும் படிப்பறிவும் பட்டறிவும் ஏற்பட்டு முழுநேர மருத்துவராகத் தொழில் புரிந்துவந்தார் அவர். 1908 ஆம் ஆண்டிலேயே தனது 21-வது வயதில் சுப்பிரமணிய பாரதியாரின் முன்னிலையில் புதுச்சேரியில் சுயராஜ்ய சபதம் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு விடுதலை வேட்கை கொண்டவராக இருந்தார்.

தொண்டறத்தின் மீதுள்ள தாகமும் அரசியல் ஆர்வமும் மேலோங்க அக்காலத்தில் ரூ. 2,000 மாத வருவாய் வந்துகொண்டிருந்த மருத்துவத் தொழிலைக் கைவிட்டு 1917 இல் இந்திய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். டாக்டர் அன்னி பெசன்ட் தொடங்கிய ஹோம் ரூல் இயக்கத்தில் பங்குபெற்றார். படிப்படியாக உயர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரானார்.

மகாத்மா காந்தி வரிகொடா இயக்கம் தொடங்கியபோது வரதராஜுலு நாயுடு அவ்வியக்கத்தில் பெரிதும் ஈடுபாடு காட்டினார். அரசுக்கு வரி கட்டவில்லை. கட்டவேண்டிய வரிக்கு ஈடாக அவருடைய காரை ஆங்கில அரசு பறிமுதல் செய்ய உத்தரவிட்டது. ஆனால், காரை ஓட்டிச்செல்ல எவரும் முன்வரவில்லை. கடைசியில், மாவட்ட ஆட்சியரே அந்தக் காரை ஓட்டிச்செல்ல வேண்டியதாயிற்று.

பலமுறை சிறைத்தண்டனையும் பற்பல அடக்குமுறை வழக்குகளையும் சந்தித்துப் பொதுவாழ்வில் புடம்போடப்பட்டவர் வரதராஜுலு நாயுடு. தொழிலாளர்கள், விவசாயிகள், இலங்கை பர்மா தமிழர்கள் என பொதுமக்கள் பிரச்னைகளுக்குப் போராடி அவர்களுக்குப் பல உரிமைகளை, சலுகைகளை வாங்கித் தந்தவர் அவர்.

வரதராஜுலு நாயுடுவின் அரசியல் வரலாறு வெறும் பதவிகளின் வரலாறு அன்று. தியாகங்களின் வரலாறு அது. 1918 இல் மதுரை ஹார்வி மில் தொழிலாளர் வேலைநிறுத்தத்தை ஊக்குவிக்கும் விதமாகப் பேசினார் என்னும் குற்றச்சாட்டுக்கு ஆளாகி வழக்குப் போடப்பட்டு அரசு நிந்தனை புரிந்த குற்றத்துக்காக 18 மாதம் கடுங்காவலுக்குள்ளானார்.

வரதராஜுலு நாயுடுவுக்காக ராஜாஜியே நேரில் வாதாடினார். மேல்முறையீட்டில் ராஜாஜியின் வாதத்திறமையால் அவருக்கு விடுதலை கிடைத்தது. அந்த விடுதலை நீண்டநாள் நீடிக்கவில்லை. அவரை வெளியே உலவ விடக்கூடாது என்பதில் பிரிட்டிஷ் அரசு தீவிரமாக இருந்தது.

1919 இல் தமிழ்நாடு இதழில் எழுதிய இரண்டு அரசியல் கட்டுரைகள் ராஜ துரோகமானவை எனப் புதிய குற்றச்சாட்டை எழுப்பி அவரைக் கைது செய்தது ஆங்கிலேய அரசு. விளைவு: ஒன்பது மாத சிறைத்தண்டனை அவருக்குக் கிடைத்தது.

வெளியில் வந்து சில மாதங்கள்தான் கடந்தன. மீண்டும், 1923 இல் பெரியகுளம் மாநாட்டில் தடை உத்தரவை மீறிப்பேசியமைக்காக 6 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர், அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர், இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர், தமிழக மேல்சபை உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஆகிய பல பொறுப்புகளை வகித்து சாதனை புரிந்தவர் வரதராஜுலு நாயுடு. காந்தி, சி.ஆர்.தாஸ் போன்றவர்களால் மதிக்கப்பட்டவர்.

சேலம், திருப்பூர் வருகையின்போது காந்தியடிகள் வரதராஜுலு வீட்டில்தான் தங்கினார். அதனால் சேலத்தில் வரதராஜுலு நாயுடுவின் வீடு இருந்த சாலைக்கே காந்தி சாலை என்னும் பெயர் வழங்கலாயிற்று.

1925 இல் வ.வே.சு. அய்யர் நடத்திவந்த சேரன்மாதேவி குருகுலத்தில் பிராமணர் அல்லாத மாணவர்களுக்குத் தனிப்பந்தி அனுசரிக்கப்படுவதை எதிர்த்து சீர்திருத்தப்போர் ஆரம்பித்தது. பெரியார் ஈ.வெ.ரா., திரு.வி.க., ஆகியோருடன் வரதராஜுலு நாயுடுவும் அதில் ஈடுபட்டார். மகாத்மா காந்தியிடம் பிரச்னை கொண்டுசெல்லப்பட்டது. பின்னர் காங்கிரஸ் கமிட்டியில் இத்தகைய குலப்பிரிவினைக்கு எதிராக எஸ்.ராமநாதன் முன்மொழிந்த ஒரு தீர்மானமும் ஏற்கப்பட்டது.

வரதராஜுலு நாயுடுவின் சொற்பொழிவுகளால் ஈர்க்கப்பட்டு சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் தீவிரப் பங்கெடுத்தவர் காமராஜ் என்பது இன்னொரு சுவையான செய்தி.

பெரியார் காங்கிரஸ் கட்சியைவிட்டு நீங்கிய நிலையில் நீதிக்கட்சியினர் தொடர்பு பலப்பட்டு பின்னாளில் அக்கட்சியைப் பகுத்தறிவாளர் கட்சியாக திராவிடர் கழகமாகப் பரிணாமம் எடுத்த பின்னணியில் வரதராஜுலு நாயுடு நீதிக்கட்சியை எக்காலத்திலும் ஆதரிக்கவில்லை என்பதுடன் அதன் எதிர் முகாமிலேயே நின்றார் என்பது இங்கே குறிப்பிடப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சிக்குள்ளும் சமுதாய முற்போக்குக் கொள்கையை முன்னிறுத்த வேண்டும் என்பதிலும் பெரியார் ஈ.வெ.ரா.வும் வரதராஜுலு நாயுடுவும்

ஒருங்கிணைந்து செயல்பட்டனர். ஆனால், பெரியார் ஈ.வெ.ரா. அரசியல் விடுதலையை வலியுறுத்த மறுத்தபோது, வரதராஜுலு நாயுடு அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

காங்கிரஸ் பேரியக்கத்திலும் காந்தியடிகளின் தலைமையிலும் அத்தனை நம்பிக்கை வைத்திருந்த வரதராஜுலு நாயுடு பின்னாளில் காந்தியடிகள் (1930-32) நடத்திய உப்பு

சத்தியாகிரகத்திலும் சட்டமறுப்பு இயக்கத்திலும் பங்கேற்காமல் போனதுடன் அவற்றை முழுமூச்சாக எதிர்த்தது மிகப்பெரிய அரசியல் புதிராகத் தொடர்கிறது. முன்பு வரிகொடா இயக்கத்தில் முனைந்துநின்ற வரதராஜுலு நாயுடு அரசுக்கு எதிரான பின்னாள் அறவழிப் போராட்ட முடிவுகளை ஏன் கண்டிக்க வேண்டும் என்னும் கேள்விக்குப் பதில் கிடைக்கவில்லை.

தாழ்த்தப்பட்டோர் ஆலயப்பிரவேச உரிமை இயக்கம் தலையெடுத்தபோது அதில் வரதராஜுலு நாயுடு மும்முரமாகப் பணியாற்றினார். 1925 இல் தமிழ்நாடு என்னும் செய்திப்பத்திரிகை (வார இதழ்) தொடங்கி இதழாளராகவும் பரிமளித்தார். தமிழ்நாடு இதழ் வெற்றிகரமாக இயங்க "அக்ரகாரத்து அதிசய மனிதர்' என அண்ணாவால் வர்ணிக்கப்பட்ட முற்போக்குச் சிந்தனையாளர் எழுத்தாளர் வ.ரா. என்னும் வ.ராமசாமி அய்யங்கார் வரதராஜுலு நாயுடுவுக்குத் துணையாக இருந்தார்.

அதேபோல் பிற்காலத்தில் பெரும்புகழ் பெற்ற "தினமணி' நாளிதழின் நிறுவன ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கமும் வரதராஜுலு நாயுடுவின் தமிழ்நாடு இதழின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினார்.

1932 இல் ஆங்கில இதழ் தொடங்கும் எண்ணம் ஏற்பட்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழை (5 செப்டம்பர் 1932) ஆரம்பித்தார். தமிழ்நாடு இதழ் அலுவலகத்திலிருந்தே அதை அச்சடித்து விநியோகம் செய்துவந்தார். தொடங்கிய ஒரே வருடத்தில் நிதிப்பற்றாக்குறை ஏற்பட அதை "ப்ரீ ப்ரெஸ் ஜர்னல்' ஆசிரியரான எஸ். சதானந்தத்திற்கு விற்றுவிட்டார். பிறகு அது சுதந்திரப் போராட்ட வீரரான ராம்நாத் கோயங்காவுக்குக் கைமாறியது. கோயங்காவின் கைக்கு வந்ததும் அரசு நிர்வாக எந்திரத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாத சுதந்திர இதழான அதன் குணாம்சமும் வீச்சும் மேலும் தீவிரம் கண்டன என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரம் பிள்ளை 1934 இல் வரதராஜுலு நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை "தேசிய சங்கநாதம்' என்னும் தலைப்பில் எழுதி நூல்வடிவில் கொணர்ந்தார். 1933 வரையிலான அவரது வாழ்வின் பகுதிகள் அதில் ஓரளவு விவரமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்து பத்திரிகையின் நிறுவனர் ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய அய்யரைப்போல் வரதராஜுலு நாயுடுவும் இதழுலகில் தனிச்சுடராக விளங்கினார் என வ.உ.சி.யே பாராட்டி இருக்கிறார்.

வ.உ.சி.யின் நன்மதிப்பைப் பெற்று அவரால் "தென்னாட்டுத் திலகர்' என்னும் பாராட்டும் பெறவேண்டுமானால் வரதராஜுலு நாயுடு எத்தனை பெரிய மனிதராக விளங்கியிருக்க வேண்டும் என இன்றைய இளைய தலைமுறை வாசகர்கள் யூகித்துக் கொள்ளலாம்.

வ.உ.சி. எழுதிய வரதராஜுலு நாயுடுவின் வாழ்க்கை சரிதத்தின் ஆங்கில வடிவம் நீலகண்ட பிரம்மச்சாரியால் எழுதப்பட்டு வெளிவந்தது. பிறகு அதில் திருத்தம் செய்யப்பட்டு 1948 இல் புதிய பதிப்பு வெளியாயிற்று. 1955 இல் வெளியான அவரது பிறந்தநாள் மலரில் மேலும் சில விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ""இவை அனைத்துமே போதுமான தகவல்களை உள்ளடக்கிய முழு வரலாறு என்று சொல்லிவிட முடியாது. எனவே, அவரைப் பற்றி முழுமையாகவும் விரிவாகவும் ஒரு வாழ்க்கை வரலாறு எழுதப்படவேண்டும் என பெ.சு.மணி கருத்து வெளியிட்டுள்ளார்.

வரதராஜுலு நாயுடுவின் குடும்பத்தினர், சந்ததிகள், நட்பு வட்டத்தின் இந்நாள் பிரதிநிதிகள், தேசிய இயக்க வரலாற்று மாணவர்கள் ஒன்றுபட்டு முயன்றால் வரதராஜுலு நாயுடுவின் முழுமையான சரிதையை வெளிக்கொணர முடியும்.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தமிழகம் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. குறிப்பாக, டாக்டர். வரதராஜுலு நாயுடு போன்றவர்களின் பங்களிப்பும் தியாகமும் வெளிக்கொணரப்படாமல் மறைக்கப்பட்டு விட்டன. இத்தனைக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், தமிழகத் தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடியாகவும் விளங்கிய பெருமகனார் வரதராஜுலு நாயுடு.

சுதந்திர இந்தியா சுயநல அரசியல்வாதிகளின் ஒட்டுமொத்தக் குத்தகையாகி விட்டதன் விளைவாக, வரதராஜுலு நாயுடு போன்ற உண்மையான தியாகிகளின் பங்களிப்பு பேசப்படாமல் இருக்கும் அவலம் ஏற்பட்டுவிட்டது. வெளிச்சத்திற்கு வரவேண்டிய வரலாறுகளில் ஒன்று வரதராஜுலு நாயுடுவின் தியாக வரலாறு!

(இன்று அன்னாரது 125-வது பிறந்ததினம்)

-கல்பனாதாசன் 
நன்றி: தினமணி (04.06.2012)

காண்க: 

பெ. வரதராஜுலு நாயுடு (விக்கி)

Perumal Varadarajulu Naidu

'தேசிய சங்​க​நா​தம்' டாக்​டர் பி.வர​த​ரா​ஜுலு நாயுடு

டாக்டர் வரதராஜுலு நாயுடு குருகுலப் போராட்ட வீரர் (காலச்சுவடு)

டாக்டர் வரதராஜுலு நாயுடு- தஞ்சை வெ.கோபாலன்

 .




2.6.12

நிகரற்ற சாம்பியன் ஆனந்த்!



உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இஸ்ரேலின் போரீஸ் கெல்ஃபான்டை வீழ்த்தி 5-வது முறையாக பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் செஸ் உலகின் முடிசூடா மன்னனான விஸ்வநாதன் ஆனந்த்.

தனது 6-வது வயதில் செஸ் பயணத்தைத் தொடங்கிய ஆனந்த், கடந்த 20 ஆண்டுகளாக உலக செஸ் போட்டியில் கோலோச்சி வருகிறார். அவர் 42 வயதை எட்டியிருந்தாலும், அவருடைய ஆட்டத்தின் வேகத்துக்கு மட்டும் இளமை குறையவில்லை. 24 வயதில் விளையாடியதைப் போன்றே இப்போதும் விரைவாக காய்களை நகர்த்தி வெற்றியைத் தொடர்ந்து வருகிறார்.

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற உலக செஸ் போட்டியின் டை பிரேக்கர் சுற்றில் கெல்ஃபான்டுக்கு எதிராக அபாரமாக காயை நகர்த்திய ஆனந்தின் உத்வேகம், அந்தப் போட்டியை பார்த்த அனைவருக்குமே தெரிந்திருக்கும். பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் இடையே நடைபெற்ற படுவேக டைபிரேக்கர் சுற்றில் எவ்வித பதற்றமுமின்றி, லாவகமாக காய்களை நகர்த்தி முன்னணி வீரரான கெல்ஃபான்டை தோற்கடித்தார் ஆனந்த்.

தமிழகத்தின் மயிலாடுதுறையில் பிறந்த ஆனந்த், தன்னுடைய தாயார் சுசீலாவிடமும், குடும்ப நண்பரான தீபா ராமகிருஷ்ணனிடமும்தான் செஸ் விளையாடக் கற்றுக்கொண்டார். செஸ் மீதான தீராத காதலால் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு அடுத்த சில ஆண்டுகளில் உயர்ந்தார்.

5 முறை உலகச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியவரான ஆனந்த், இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டரும்கூட. டோர்னமென்ட், மேட்ச், ரேபிட், நாக் அவுட் ஆகிய முறைகளில் நடத்தப்பட்ட உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பட்டம் வென்ற ஒரே வீரர் என்ற பெருமையும் ஆனந்தையே சேரும். 2007-ல் இருந்து தொடர்ச்சியாக 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். தனது அபரிமிதமான சாதனைக்காக 18-வது வயதிலேயே பத்மஸ்ரீ விருது வாங்கியவர். இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்மவிபூஷன் விருதைப் பெற்ற முதல் விளையாட்டு வீரர்.

இந்த விருது அவருக்கு 2007-ல் வழங்கப்பட்டது. ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருதைப் பெற்ற முதல் வீரரும்கூட. சிறந்த விளையாட்டு வீரருக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதையும் பெற்றுள்ளார்.

செஸ் போட்டியில் ஒரு காலத்தில் ரஷியர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தியதோடு, பல்வேறு சாதனைகளையும் படைத்து வந்தனர். செஸ் என்றால் ரஷியர்கள்தான் என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் கோலோச்சினர். ஆனால் தொடர்ச்சியாக 4 முறை பட்டம் வென்றதன் மூலம் வரலாற்றை மாற்றியுள்ளார் ஆனந்த்.

கௌரவம்

2010, நவம்பரில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வந்தபோது, பிரதமர் மன்மோகன் சிங் அவருக்கு விருந்து கொடுத்தார். அதற்கு அழைக்கப்பட்ட ஒரே விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமே.

கடந்து வந்த பாதை

1983-ம் ஆண்டு தேசிய அளவிலான சப்-ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றார் ஆனந்த். இதுதான் தேசிய அளவிலான போட்டிகளில் அவர் பெற்ற முதல் வெற்றி.

1984-ம் ஆண்டு தனது 15-வது வயதில் சர்வதேச மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் பட்டம் வென்ற இந்தியாவின் இளம் செஸ் வீரர் என்ற பெருமைக்குரியவரானார்.

தனது 16-வது வயதில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றார்.

1987-ல் உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் வெற்றி கண்டார். இதில் வெற்றி கண்ட முதல் இந்தியர் ஆனந்த்.

1988-ல் கோவையில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் வெற்றி கண்டு இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் ஆனார்.

1991-ம் ஆண்டு உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முதல்முறையாக தகுதிபெற்றார். அந்தப் போட்டியின் முதல் சுற்றில் ரஷியாவின் அலெக்ஸீ கிரீவை வென்ற ஆனந்த், காலிறுதிச் சுற்றில் ரஷியாவின் அனடோலி கார்போவிடம் வீழ்ந்தார்.

1995: ஃபிடே உலக செஸ் போட்டியின் அரையிறுதியில் அமெரிக்காவின் கதா காம்ஸ்கியிடம் வீழ்ந்தார்.

பிசிஏ உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் ரஷியாவின் கேரி காஸ்பரோவிடம் தோல்வி கண்டார்.

1997: ஸ்விட்சர்லாந்தின் லாசன்னே நகரில் நடைபெற்ற ஃபிடே உலக செஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் ரஷியாவின் கார்போவிடம் தோல்வி கண்டார்.

2000: ரஷியாவின் அலெக்ஸீ ஷிரோவை வீழ்த்தி முதல் முறையாக உலக செஸ் சாம்பியன் ஆனார்.

2001: உலக செஸ் போட்டியின் அரையிறுதியில் உக்ரைனின் இவான் சுக்கிடம் தோல்வி கண்டார்.

2005: அமெரிக்காவின் சான் லூயிஸில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில் பல்கேரியாவின் வேஸிலின் டோபாலோவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

2007: மெக்ஸிகோவில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில் 2-வது முறையாக சாம்பியன் ஆனார்.

2008: ஜெர்மனியில் நடைபெற் உலக செஸ் போட்டியில் ரஷியாவின் விளாதிமிர் கிராம்னிக்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

2010: பல்கேரியாவின் தலைநகர் சோபியாவில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில் உள்ளூர் நாயகனான வேஸலின் டோபாலோவை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

2012: ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில் இஸ்ரேலின் போரீஸ் கெல்ஃபான்டை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

கிராம்னிக்

ஆனந்த் குறித்து ரஷியாவின் முன்னணி வீரரான விளாதிமிர் கிராம்னிக் கூறுகையில், "ஒட்டுமொத்த செஸ் வரலாற்றில் அசாத்திய திறமை கொண்ட வீரர்களில் ஆனந்தும் ஒருவர். அவர் நிகரற்ற சாம்பியன். செஸ் உலகின் ஜாம்பவான் காஸ்பரோவைவிட ஆனந்த் எந்தவகையிலும் பலவீனமான வீரர் அல்ல' என்று குறிப்பிட்டுள்ளார்.

காரில் சென்று சாதித்த ஆனந்த்

2010-ம் ஆண்டு உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி பல்கேரியாவின் தலைநகர் சோபியாவில் நடைபெற்றது. ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் இருந்து விமானம் மூலம் சோபியாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார் ஆனந்த். ஆனால் அந்த நேரத்தில் எரிமலை வெடிப்பின் காரணமாக காற்றில் பறந்த சாம்பல் துகள்களால், அங்கிருந்து புறப்படவிருந்த அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து 40 மணி நேரம் காரில் பயணம் செய்து பல நாடுகள் வழியாக சுமார் 1,700 கி.மீ. தூரத்தைக் கடந்து சோபியாவை அடைந்தார் ஆனந்த். 40 மணி நேரம் பயணம் செய்தபோதிலும் அயராத ஆனந்த், சோதனையைத் தாண்டி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.


- ஏ.வி.பெருமாள்
- நன்றி: தினமணி (01.06.2012)
.
காண்க:  

விஸ்வநாதன் ஆனந்த் (விக்கி)

VISWANATHAN ANAND