நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

18.4.11

ஊடக உலகின் ஒளிவிளக்கு

 
 
ராம்நாத் கோயங்கா
 
பிறப்பு: ஏப். 18
 
காலவெள்ளம் இழுத்துச் செல்லும் வழிகளில் எல்லாம் போராடிச் சென்று முழுகாமல் தப்பிக்கிறவர்கள் சாமானியர்கள்; அந்த வெள்ளத்திலேயே எதிர் நீச்சல் அடித்து சாதனை படைப்பவர்கள் மாமனிதர்கள். அப்படிப்பட்டவர்களின்  வாழ்க்கையைப் பார்த்தால் துணிச்சல், உழைப்பு, தியாகம் என்ற மூன்றும் அவர்களுடைய குணாம்சங்களாகக் கட்டாயம் இருக்கும். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக் குழுமத்தின் நிறுவனர் - தலைவரான ராம்நாத் கோயங்கா அத்தகைய மாமனிதர்.
 

நாட்டின் முதலாவது சுதந்திரப் போரில் பிரிட்டிஷாருக்கு எதிராகப் போரிட்ட ஆயிரக்கணக்கான தொண்டர்களில் ஒருவராகவும் இந்திரா காந்தி காலத்தில் கொண்டுவரப்பட்ட நெருக்கடி நிலைக்கு எதிராக நடந்த இரண்டாவது சுதந்திரப் போரில் பத்திரிகைத் துறைக்கே ஒரு வழிகாட்டியாகவும், மூத்த தளபதியாகவும் திகழ்ந்தவர் ராம்நாத் கோயங்கா.
 

பிகார் மாநிலத்தின் வட பகுதியில் உள்ள தர்பங்காவில் 1904-ல் பிறந்த கோயங்கா, படிப்பை முடித்ததும் மாதச் சம்பள வேலை கிடைக்கும் என்று எவர் கையையும் எதிர்பாராமல் வியாபாரத்தில் ஈடுபடத் தீர்மானித்தார். வியாபாரத்தின் அடிப்படைகளையும் நெளிவு சுளிவுகளையும் தெரிந்துகொள்ள கோல்கத்தா நகருக்குச் சென்றார். அங்கு சிறிது காலம் பயிற்சி எடுத்த பிறகு மிகப்பெரிய நிறுவனம் ஒன்றின் வர்த்தகப் பிரதிநிதியாகச் சென்னைக்கு வந்தார்.
 

சென்னைக்கு வந்தவர் தன்னுடைய வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு சுகபோகமாக வாழ்ந்திருக்கலாம். ஆனால், நாட்டின் எல்லோர் மனதிலும் வீசிக் கொண்டிருந்த சுதந்திர வேட்கை அவரையும் விட்டுவைக்கவில்லை. சென்னை மாநகரின் மேல்தட்டு மக்களிலிருந்து சாமானியர் வரை அனைவரிடமும் நன்றாகக் கலந்து பழகினார். அதன் விளைவாக, சமூகத்தின் கட்டமைப்பையும் அதன் பிரச்னைகளையும் தேவைகளையும் நன்கு தெரிந்துகொண்டார்.
 

சென்னைக்கு வந்த சில மாதங்களிலேயே அதன் சுக துக்கங்களில் முழு ஈடுபாடு காட்ட ஆரம்பித்த அந்த இளைஞரின் துடிப்பால் கவரப்பட்ட சென்னை அரசு நிர்வாகிகளால் சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அரசாங்கம் நியமித்த பதவியை ஏற்றுக்கொண்டாலும் அதை மக்களுடைய நன்மைக்காகவே முழுக்க முழுக்கப் பயன்படுத்தினார் கோயங்கா.
 

பதவி கொடுத்துவிட்டதே அரசாங்கம் என்று அதற்குத் துதி பாடிக் கொண்டிருக்காமல், அரசின் தவறுகளையும் குறைகளையும் தயங்காமல் சுட்டிக்காட்டி அவையில் சண்டமாருதம் செய்தார். இதனால் அரசு மட்டுமல்ல, மேல்தட்டு மக்களும் அவரைக் கூர்ந்து நோக்க ஆரம்பித்தனர். தேசிய இயக்கத்தார் அவரைச் சுவீகரித்துக் கொண்டனர்.
 

மேலவை உறுப்பினர்கள் சிலர் சேர்ந்து தொடங்கிய 'இன்டிபென்டன்ட் பார்ட்டி' என்ற கதம்பக் குழுவுக்கு அவரையே செயலராக நியமித்தனர். தத்தளிக்கும் பல நிறுவனங்களைக் கைதூக்கிவிடும் காவலராக அவர் உருவெடுத்தார். நிதி உதவியும் இதர ஆலோசனைகளும் தேவைப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகளுக்குத் தன்னுடைய வியாபாரத் தொடர்புகளைப் பயன்படுத்தினார். தேசிய எழுச்சி கொண்ட பத்திரிகைகளுக்கு உதவுவதைத் தன்னுடைய கடமையாகவே கருதினார்.
 

அந்த வகையில்தான் டி. பிரகாசத்தின் 'ஸ்வராஜ்யா'வுக்கும் எஸ். சதானந்தத்தின் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கும் உதவிகளைச் செய்துவந்தார். 1936-ம் ஆண்டு அக். 26-ம் தேதி 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்', 'தினமணி' ஆகிய நாளேடுகளின் பெரும்பான்மைப் பங்குதாரராகவும் உரிமையாளராகவும் ஆனார் ராம்நாத் கோயங்கா.
 

அரசியல் கட்சிகள், அதிகார மையங்கள், வியாபாரக் குழுமங்கள், நண்பர்கள் வட்டம் என்று எதன் பிடியிலும் சிக்காமல் சுதந்திரமாகப் பத்திரிகை வெளிவர வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இந்தியாவின் நலன்தான் தனது பத்திரிகையின் லட்சியம் என்பதையும் அவர் அப்போதே தீர்மானித்துவிட்டார்.
 

அரசியல் தலைவர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், அறச் சிந்தனையாளர்கள், சமூக சேவகர்கள், மதத் தலைவர்கள், ஆன்மிகவாதிகள் என்று அனைத்துத் தரப்பினரும் அவருக்கு வேண்டியவர்களாக இருந்தனர். எனவே, அனைத்துத் தரப்பாரையும் இணைக்கும் இணைப்புக் கயிறாக அவரால் செயல்பட முடிந்தது. மற்றவர்களுடனான உறவும், நட்பும் எப்படி இருந்தாலும் பத்திரிகையைப் பொறுத்தவரை அதற்கு எது நல்லது என்பதைத் தீர்மானிப்பதில் அவர் சுதந்திரமாகச் செயல்பட்டார். அதில் தலையிடும் உரிமையையோ, சலுகையையோ யாருக்கும் அவர் அளிக்கவில்லை.
 

'இந்தியன் எக்ஸ்பிரஸ்', "தினமணி' ஆகிய பத்திரிகைகளின் எதிர்காலம் குறித்து சிந்திக்கவும் செயல்படவும் அவர் ஒருவர் மட்டும்தான் இருந்தார் என்பது பெரிய குறைதான் என்றாலும், அப்படியிருந்த ஒரு தனி மனிதர் ஏராளமான மனிதர்கள் ஒரு குழுவாக இருந்தாலும் வெளிக்காட்ட முடியாத ஆற்றலும், வேகமும் கொண்டவராக இருந்ததால் பத்திரிகைக்கு அதுவே மிகப்பெரிய பலமாக அமைந்துவிட்டது.
 

பத்திரிகைக்கு நல்ல ஆசிரியர்களை நியமித்தார். அவர்களைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தார். அரசின் விளம்பரங்களுக்காக மட்டுமல்ல, பத்திரிகை என்பதைச் செயலில் காட்டினார். அரசு விளம்பரம் தராவிட்டாலும் மக்களின் பிரச்னைகளை எடுத்து எழுதினால் பத்திரிகைக்கு வாசகர்களின் ஆதரவும், விளம்பரதாரர்களின் ஆதரவும் இருந்தால் போதும் என்பதைச் செயலில் நிரூபித்தார்.
 

தமிழில் 'தினமணி'க்கு இருந்த வரவேற்பைப் பார்த்துப் பிரமித்த கோயங்கா, பிற இந்திய மொழிகளிலும் பத்திரிகை தொடங்க விருப்பம் கொண்டு தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகளில் பத்திரிகைகளைத் தொடங்கி நடத்தினார். அனைத்திலும் அவரது பத்திரிக்கை குழுமம் வெற்றிநடை இட்டது. நாட்டின் அரசியலில் கலக்கும் ஊழலுக்கு எதிரான போர்க்குரல் எழுப்புவதில்  என்றுமே எக்ஸ்பிரஸ் பத்திரிகை குழுமம் முன்னிற்கிறது.
 

அதிகாரமும், பதவியும் உள்ளவர்கள் எத்தனைதான் அச்சுறுத்தினாலும் தான் நினைப்பது சரியென்று பட்டுவிட்டால் அதைச் செய்து முடிக்காமல் அவர் இருந்ததில்லை.  பத்திரிகை உலகின் கம்பீரத்திற்கு சான்றாக வாழ்ந்த ராம்நாத் கோயங்கா 1991 , அக். 5  ல் மறைந்தார்.
 
நவீன இந்தியாவை வடிவமைத்த சிற்பிகளில் கோயங்காவுக்கு  என்றும் இடம் உண்டு. பத்திரிகை நடத்துவது லாபத்துக்காக மட்டுமே என்று எந்த நாளும் நினைத்தவர் அல்லர் அவர். அதனாலேயே அவர் இன்னமும் இந்தியப் பத்திரிகை அதிபர்களுக்குத் துருவ நட்சத்திரமாகத் திகழ்கிறார்.
 
இந்திய ஊடகத் துறை தடுமாறியும் தடம் மாறியும் நிற்கும் இந்த வேளையில், ராம்நாத் கோயங்கா அவர்களுக்கு இருளில் ஒளிவிளக்காக வழி காட்டுகிறார்.
 
கட்டுரை ஆதாரம்: தினமணி (18.04.2011)
 
காண்க:
 
 
 
 
 
 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக