நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

13.8.11

என்கடன் பணிசெய்து கிடப்பதே- 1


மனைவி பழனியம்மாளுடன் திரு. எஸ்.ஏ.சுப்பிரமணியம்.

தள்ளாத வயதிலும் கல்விச் சேவை புரியும் பெரியவர்!

கோவை, ஆக. 11:  கை, கால்கள் தளர்ந்துவிட்டன; கண் பார்வை மங்கிவிட்டது. ஊன்றுகோலே இவருக்கு மற்றொரு கால். கேட்கும் திறனும் குறைந்துவிட்டது. ஆனாலும், தனது 88 வயதிலும் பள்ளி மாணவர்களுக்கு சொந்தக் காசில் நிதியுதவி அளித்து வருகிறார் இந்தப் பெரியவர்.

யாரிடமும் கை ஏந்தாமல், தன்னுடைய ஒய்வூதியப் பணத்தில் ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வியுதவி புரிந்து வருகிறார். எவ்வித விளம்பரமும் இல்லாமல், சத்தமில்லாமல் சமூகத்துக்கு கல்விச்சேவை புரிந்து வருகிறார், கோவை- சூலூரைச் சேர்ந்த "எஸ்.ஏ.எஸ்' என்று அழைக்கப்படும் எஸ்.ஏ.சுப்பிரமணியம்.

1996-ல் "அருந்தவப் பசு எஸ்.ஏ.எஸ்' என்ற அறக்கட்டளை தொடங்கி, அதில் கிடைக்கும் வட்டிப் பணம் மூலமாக, இதுவரை 5,000 மாணவர்களுக்கு சுமார் ரூ. 30 லட்சம் நிதிஉதவி புரிந்திருக்கிறார்; தொடர்ந்து உதவி செய்து கொண்டிருக்கிறார்.

கோவையை அடுத்த சூலூரில் எளிய குடும்பத்தில் 2-வது மகனாகப் பிறந்த எஸ்.ஏ.சுப்பிரமணியம், கடன் வாங்கி படிப்பை முடித்தார். பட்டதாரி ஆசிரியராகப் பணியைத் தொடங்கியவர், தலைமை ஆசிரியராகவும், மாவட்ட கல்வி அலுவலராகவும், முதன்மைக் கல்வி அலுவலராகவும், பள்ளிக்கல்வி இணை இயக்குநராகவும், கூடுதல் இயக்குநராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.

ஓய்வு பெற்றதை அடுத்து, கல்விக்குழு அமைத்து பல மாணவர்களுக்கு உதவி வந்த எஸ்.ஏ.சுப்பிரமணியம், தனக்கு கிடைத்த ஒய்வூதியப் பணமான ரூ. ஒரு லட்சம் பணத்தைக் கொண்டு "அருந்தவப் பசு' என்ற பெயரில் அறக்கட்டளையைத் தொடங்கினார். இந்த அறக்கட்டளையின் நிதி இப்போது ரூ. 52 லட்சமாக உயர்ந்துள்ளது.

அறக்கட்டளை நிதி மூலம் கிடைக்கும் வட்டிப் பணத்தைக் கொண்டு அரசு
பள்ளிகளில் நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறார்.

இந்த ஆண்டு பிளஸ் 2-வில் 85 சதவீத மதிப்பெண்கள் பெற்ற கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 40-க்கு மேற்பட்டோருக்கு, ரூ. 4.30 லட்சம் நிதியுதவி வழங்க உள்ளார். இதற்கான விழா சூலூரில் செப். 4-ம் தேதி நடைபெற உள்ளது.

தளராத வயதிலும் கல்விக்காக நிதியுதவி செய்து வருவது குறித்து கேட்டபோது, எஸ்.ஏ.சுப்பிரமணியம் கூறியது:

கடந்த 1934-ல் சூலூருக்கு வந்த மகாத்மா காந்தியைச் சந்திக்க பள்ளிப் பருவ மாணவர்கள் 6 பேர் முயற்சி செய்தோம். நாங்கள் கஷ்டப்பட்டு 5 ரூபாயைச் சேர்த்து, மகாத்மா காந்தியைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பைப் பெற்றோம்.

அப்போது காந்தியை அணுகி, ""உயர்வு என்றால் என்ன?'' என்று கேட்டேன். அவர், ""சமூகத்தில் கஷ்டப்படும் ஏழைகளுக்கு உதவுவதே மகோன்னதமான காரியமாகும்'' என்றார். அது, என் நெஞ்சில் வைரமாகப் பதிவாகிவிட்டது.

அதேபோல பூமிதான இயக்கத் தலைவர் வினோபாஜி, கோவை வந்தபோது அவருடன் தங்கி அவருக்குப் பணிவிடை செய்துள்ளேன். இத்தகையவர்களது தொடர்பு எனக்கு ஊக்க சக்தியாக இருந்தது.

எளிய குடும்பத்தில் பிறந்து ஆசிரியராகப் பணியைத் துவக்கிய நான், பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளேன். அந்தத் தருணங்களிலேயே பலருக்கு நான் உதவியுள்ளேன்.

1996-ல் அறக்கட்டளை தொடங்கி இதுவரை பலருக்கு உதவி செய்துள்ளேன். எனக்குக் கிடைக்கும் ஒய்வூதியப் பணம் ரூ. 46,000 மற்றும் வீட்டு வாடகை ரூ. 12 ஆயிரத்தை மாதந்தோறும் சேமிக்கிறேன். ஆண்டுக்கு சுமார் ரூ. 7 லட்சம் அளவுக்கு நிதியை அறக்கட்டளையில் சேமித்து, அதன்மூலம் கிடைக்கும் வட்டிப் பணத்தில் மாணவர்களுக்கு நிதியுதவி செய்து வருகிறேன்.

ஒவ்வோர் ஆண்டும் மாணவர்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறோம். கடந்த ஆண்டில் ரூ. 3 லட்சம் நிதி வழங்கினோம். இந்த ஆண்டு சூலூரில் செப். 4-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் 40-க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு ரூ. 4.30 லட்சம் நிதியுதவி வழங்க உள்ளோம்.

என்னிடம் படித்து பல்வேறு பதவிகளில் இருக்கும் மாணவர்கள், நண்பர்கள் உள்ளிட்ட 50-க்கு மேற்பட்டோருக்கு சிறப்புச் செய்ய உள்ளோம். பணிஓய்வுக்குப் பிறகு, சுமார் 60 மாணவர்கள் பி.இ, எம்.பி.பி.எஸ். படிப்புகளில் சேர நிதியுதவி செய்துள்ளேன் என்றார்.

88 வயதானாலும் நல்ல ஞாபகச் சக்தியுடன் பழைய சம்பவங்களை நினைவுகூர்கிறார், எஸ்.ஏ.எஸ். பத்திரிகைச் செய்திகளைப் பார்த்து, நாட்டு நடப்புகளைத் தெரிந்து கொள்கிறார். எங்கு செல்வதானாலும் கைத்தாங்கலாக அழைத்துச் செல்கிறார், மனைவி எஸ்.ஏ.பழனியம்மாள். இவரும் ஓய்வுபெற்ற ஆசிரியர்.

மாணவ மாணவியருக்கு உதவுவதையே வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்ட இவர், காக்கை, குருவிகளின் தாகம் தீர்க்க வீட்டு சுற்றுச்சுவர் மீது தினந்தோறும் பாத்திரத்தில் தண்ணீர் வைப்பது வியப்பளிக்கவில்லை. இவர் தனது கண்களையும் தேகத்தையும் தானம் செய்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

உயிருடன் இருக்கும்போதே அறக்கட்டளை நிதியை ரூ. ஒரு கோடியாக்கி, அதன் மூலம் கிடைக்கும் வட்டிப் பணத்தில் அதிகமான மாணவர்களுக்கு தொடர்ந்து நிதியுதவி செய்ய வேண்டும் என்பதே லட்சியம் என்கிறார், 89 வயதை நெருங்கும் எஸ்.ஏ.சுப்பிரமணியம்!

- ஆர்.ஆதித்தன்

நன்றி: தினமணி (12.07.2011) கோவை பதிப்பு.

இனிய சகோதரத்துவ தின வாழ்த்துக்கள்!


இன்று பாரதம் முழுவதும் சகோதரத்துவ திருவிழாவான ரக்ஷா பந்தன் விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஒருவருக்கொருவர் 'ராக்கி' எனப்படும் ரக்ஷைகளை கட்டுவதன் மூலமாக, அனைவரும் சகோதரர் என்ற உணர்வு வலுப்படுகிறது.

மகாபாரத காலம் முதற்கொண்டே 'ராக்கி' அணிவிப்பது பழக்கத்தில் இருந்திருக்கிறது. ஆரம்ப காலத்தில் சகோதரிகள் தங்களைக் காக்கும் வீரமுள்ள ஆண்களை சகோதரர்களாக உருவகித்து 'ராக்கி' அணிவித்து பரிசு பெறுவது வழக்கமாக இருந்திருக்கிறது. கண்ணனின் திருக்கரத்தில் பாஞ்சாலி 'ராக்கி' அணிவித்ததாக கதை உண்டு. ராஜபுத்திர பெண்கள் தங்கள் மன்னன் கரத்தில் 'ராக்கி' அணிவித்ததற்கு சரித்திரச் சான்றுகள் உள்ளன.

அரிய நற்செயல்களை துவங்கும் முன் அது நிறைவேறுவதற்காக 'கங்கணம்' பூணுவதும் நமது பண்பாடு. அந்த வகையிலும் 'ராக்கி' அணிவிக்கப்படுவதுண்டு. சிவாஜி மகாராஜாவும், ராணா பிரதாப சிம்மனும் போருக்குக் கிளம்பும் முன் அணிந்ததும் ராக்கிக் கயிறு தான்.

பல மதங்கள், பல மொழிகள், பலவித பழக்க வழக்கங்கள், பருவநிலைகளில் பெரும் வேற்றுமை கொண்ட நிலப்பகுதிகள், பல இனங்கள் என பன்முகங்களைக் கொண்ட நமது நாட்டை பிணைக்க வல்ல கயிறாக இந்த 'ராக்கி' விளங்குகிறது. இந்நன்னாளில், நாமும் ஒருவருக்கொருவர் 'ராக்கி' அணிவித்து நமது சகோதர பந்தத்தை உறுதிப்படுத்துவோம்! நமது நாட்டின் சிறப்பை மேம்படுத்த கங்கணம் பூணுவோம்!


காண்க:



 

7.8.11

விழித்தெழுக என் தேசம்!


ரவீந்திரநாத் தாகூர்
(மறைவு: ஆக. 7)
 
இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ,

எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ,

சிறைவாசமின்றி அறிவு வளர்ச்சிக்கு

எங்கே பூரண விடுதலை உள்ளதோ,

குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால்

வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே

உடைபட்டு துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ,

வாய்ச் சொற்கள் எங்கே

மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து

வெளிப்படையாய் வருகின்றனவோ,

விடாமுயற்சி எங்கே தளர்ச்சியின்றி

பூரணத்துவம் நோக்கி

தனது கரங்களை நீட்டுகிறதோ,

அடிப்படை தேடிச் செல்லும்

தெளிந்த அறிவோட்டம் எங்கே

பாழடைந்த பழக்கம் என்னும்

பாலை மணலில்

வழி தவறிப் போய்விட வில்லையோ,

நோக்கம் விரியவும்,

ஆக்கப் பணி புரியவும்

இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ,

அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில்

எந்தன் பிதாவே!

விழித்தெழுக என் தேசம்!
 
- ரவீந்திரநாத் தாகூர் (கீதாஞ்சலி)

 
காண்க:

.

3.8.11

தீரன் சின்னமலை கும்மிப் பாட்டு


தீரன் சின்னமலை

(பலிதானம்: ஆடிப் பதினெட்டு)
(ஆக.  3) 


கட்டுத் தடிக்காரர் முன்னடக்க-உடன்
கருப்பசேர்வையும் பின்னடக்க
வட்டப் பொட்டுக்காரச் சின்னமலை
யதோ வார சவுரியம் பாடுங்கடி

பட்டத்துக் கத்தி பளபளெனச் செல்லும்
பாளையத்துக் காரர்கள் முன்னடக்க
வெட்டுந்துரை மகன் சின்ன மலை
வரும் வேடிக்கை தன்னையும் பாருங்கடி

பூனைக் குலமென வெள்ளைப்படையோடப்
பூரித்து வீரப் புலி போலச்
சேனைக் கதிபதி சின்னமலை
வரும் தீரத்தை வந்துமே பாருங்கடி

கச்சைகட்டுந் தடிக்காரர்களே- வெள்ளைக்
காரர்களையெங்கு கண்டாலும்
காலையொடித்துத் துரத்துங்கள் என்றுமே
கட்டளையிட்டானாம் சின்னமலை

கும்மியடிப் பெண்ணே, பெண்ணே கும்மியடி
கொங்கைகள் குலுங்கிட கும்மியடி
எங்கும் புகழ்மிக்க சின்ன மலையதோ
வார ஒய்யாரம் பாருங்கடி…..

 
காண்க:
 

2.8.11

ஆண்டவனை தமிழால் ஆண்டவள்


ஆண்டாள் நாச்சியார்  
திருநட்சத்திரம்: ஆடிப்பூரம்
(ஆடி -17;  ஆக. 2)


ஆடிப்பூர நன்னாளில் அவதரித்தாள் ஆண்டாள். பக்தியால், இறைவனை அடையலாம் என்பதை எடுத்துக்காட்ட, பொறுமையின் சின்னமான பூமாதேவி, ஆண்டாளாக இந்த பூமியில் அவதரித்து, வாழ்ந்து காட்டினாள்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் முகுந்தபட்டர், பத்மவல்லி தம்பதியர் வசித்து வந்தனர். இவர்கள் தங்கள் ஊரிலுள்ள வடபத்ரசாயி (ஆண்டாள்) கோவிலில் வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு கருடாழ்வாரின் அம்சமாக, ஐந்தாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு, 'விஷ்ணு சித்தர்’ என்று பெயரிட்டனர். இவரும் பெருமாள் மீது தீராத பக்தி கொண்டிருந்தார். இவர் பெரியாழ்வார் என்று வைணவர்களால் போற்றப்படுகிறார்.  பெருமாளின் துணைவியான பூமாதேவி, இவருக்கு வளர்ப்பு மகளாக ஐந்து வயது குழந்தையாக துளசித்தோட்டம் ஒன்றில் அவதரித்தாள். அவளுக்கு, 'கோதை’ என்று பெயர் சூட்டப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் மூலவரான வடபத்ரசாயிக்கு, விஷ்ணு சித்தர் தினமும் மாலை கட்டி சூட்டுவார். அந்தப் பெருமாள் மீது ஆண்டாள் காதல் கொண்டாள். தன்னை அவரது மனைவியாகவே கருதி, அவருக்கு சூட்டும் மாலையை தன் கழுத்தில் போட்டு, அழகு பார்த்து, அனுப்பி விடுவாள். இதையறியாத விஷ்ணு சித்தர், பெருமாளுக்கு அதை அணிவித்து வந்தார். ஒருநாள், கூந்தல் முடி ஒன்று மாலையில் இருக்கவே, அதிர்ந்து போன ஆழ்வார், அது எவ்வாறு வந்தது என நோட்டமிட ஆரம்பித்தார். தன் மகளே அதைச்சூட்டி அனுப்புகிறாள் என்பதை அறிந்து, மகளைக் கடிந்து கொண்டார்.

மறுநாள் மாலையைக் கொண்டு சென்ற போது, அதை ஏற்க பெருமாள் மறுத்துவிட்டார். “கோதை சூடியதையே நான் சூடுவேன். மலரால் மட்டுமல்ல, மனதாலும் என்னை ஆண்டாள் உம் பெண்…’' என்று குரல் எழுந்தது. அன்று முதல் கோதைக்கு, 'ஆண்டாள்’ எனும் திருநாமம் ஏற்பட்டது. பின்னர், பெருமாளுடன் அவள் கலந்தாள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் ராஜகோபுரம், தமிழக அரசின் சின்னமாக உள்ளது. 11 நிலை, 11 கலசங்களுடன் இருக்கும் இதன் உயரம், 196 அடி. இக்கோபுரத்தை பற்றி கம்பர்,”திருக்கோபுரத்துக்கு இணை அம்பொன் மேரு சிகரம்…’ என, அழகான பொன்னிறமுடைய மேருமலை சிகரத்திற்கு ஒப்பாக பாடியுள்ளார்.

உலகிலுள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் அதிகாலையில் நடைதிறப்பின் போது, பெரியாழ்வார் பாடிய திருப்பல்லாண்டும், ஆண்டாள் பாடிய திருப்பாவையும் பாடப்படுகிறது. இதனால் ஆண்டாள் பிறந்த ஸ்ரீவில்லிபுத்தூர், உலகெங்கும் பெருமை பெற்றதாக உள்ளது.

இந்தக் கோவிலில் நடை திறக்கும் போது, அர்ச்சகர்கள் முதலில், ஆண்டாளைப் பார்ப்பதில்லை. அவளுக்கு வலப்புறத்தில் இருக்கும் கண்ணாடியைப் பார்க்கின்றனர். ஆண்டாள் கண்ணாடி பார்த்து, தன்னை அழகுபடுத்திக் கொள்வாளாம். அதனடிப்படையில், இவ்வாறு செய்வது ஐதீகம். அந்தக் கண்ணாடியை, 'தட்டொளி’ என்பர். பின்பு சன்னதியில் தீபம் ஏற்றப்படும். இந்தச் சடங்கைச் செய்யும்போது திரை போடப்பட்டிருக்கும். திரையை விலக்கியதும், பக்தர்கள் கண்ணில் முதலில் ஆண்டாள் படுவாள். பின்பே அர்ச்சகர்கள் ஆண்டாளைப் பார்ப்பர்.

ஆடிப்பூரத்தன்று, அவள் பெருமாளுடன் தேரில் பவனி வருவாள். தமிழகத்திலுள்ள பெரிய தேர்களில் இதுவும் ஒன்று. பக்தியால், இறைவனையே துணைவனாக அடைந்த பெருமைக்குரியவள் தமிழுக்கு இறவாப்புகழுடைய திருப்பாவையை நல்கியவள் ஆண்டாள்.


காண்க:









ஆண்டாள்- ஓர் அறிமுகம் (தர்மா)












.