2014 ஜூலை மாதம் 24, 25-ம் தேதிகளில் மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழன் பேரரசராக முடிசூடிய ஆயிரமாவது ஆண்டையும், அவர் பிறந்த ஆடி மாதத்துத் திருவாதிரை நாளையும் ‘கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம்’ மிகச் சிறப்பாகக் கொண்டாடி உலகத் தமிழ் மக்களையும் வரலாற்று ஆர்வலர்களின் கவனத்தையும் கங்கை கொண்ட சோழ புரத்தின்பால் ஈர்த்தனர்.
விழா நடந்து முடிந்த பிறகு, சில வரலாற்று ஆர்வலர்கள் ‘சோழர் வரலாறு’என்ற நூலை எழுதிய கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியும், ‘பிற்காலச் சோழர் வரலாறு’ என்ற நூலை எழுதிய சதாசிவப் பண்டாரத்தாரும் முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் மார்கழி மாதத்து ஆதிரை என்று கூறியிருக்கும்போது, இவர்கள் எப்படி ஆடி மாதத்துத் திருவாதிரை நாளை அவருடைய பிறந்த நாள் விழாவாகக் கொண்டாடலாம் எனக் குற்றம் கூறுவதோடு, அது வரலாற்றுப் பிழை என்றும் சாட முற்பட்டுள்ளனர்.
வரலாறு என்பது எழுதி முடிக்கப்பெற்ற ஒன்று அல்ல. இந்தியத் தொல்லியல் துறையால் படி எடுத்துப் பதிவு செய்யப்பட்ட கல்வெட்டுகள் அத்தனையும் இதுவரை அச்சில் வெளிவரவில்லை. மேலும், ஆண்டுதோறும் பல நூற்றுக் கணக்கான கல்வெட்டுச் சாசனங்களும் சில செப்பேட்டுச் சாசனங்களும் கண்டுபிடிக்கப்பட்டு வெளிவந்துகொண்டிருக்கின்றன. புதிய தரவுகள் கிடைக்கும்போது பழைய கருத்துக்களும் முடிவுகளும் நிச்சயம் மாற்றம் பெறும்.