நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

26.5.11

சோதனைகளை சாதனையாக்கிய சரித்திர நாயகன்



'ஜெய்ஹிந்த்' 
செண்பகராமன் பிள்ளை

நினைவு  நாள்:  மே 26

 " ஜான்சி! கவலைப்பட வேண்டாம் எனக்காக நீ உனது கடமைகளை செய்தாயா?" என்றவாறே தனது வலது கையை மெதுவாக நீட்டி, "எனது லட்சியங்களை நீ நிறைவேற்ற வேண்டும் ! " என தழுதழுத்த குரலில் வேண்டிக்கொண்டான் அந்த வீரன்.

அவனது மனைவியான லட்சுமிபாயும் தனது கைகளால் கணவரின் கையை பிடித்து சத்தியம் செய்வது போல மெதுவாக தட்டியபடி, "கட்டாயம் நிறைவேற்றுவேன்! ஆணையிடுங்கள் " என்றாள்.

தொடர்ந்தான் மாவீரன்:  " பாரத தேசம் சுதந்திரம் அடைந்ததும் அதன் சுதந்திரக் கொடி பட்டொளி வீசிப் பரக்கும் கம்பீரமான யுத்தக்கப்பலில்தான் நான் பாரதம் திரும்புவேன் என்பதே எனக்கு லட்சியமும் சபதமும் ஆகும். ஆனால் இப்பொழுதுள்ள நிலைமையில் சுதந்திர பாரதத்தை காண்பதற்கு முன் இறந்துவிட்டால் எனது அஸ்தியை பத்திரப் படுத்திவை. நமது தேசம் சுதந்திரம் அடைந்த பிறகு, நமது சுதந்திரக் கோடிப் பறக்கும் அதே கப்பலில் எனக்காக நீ போ! நாம் பிறந்த தமிழ்நாட்டின் நாஞ்சில் பகுதியில் எனது தாயாரின் அஸ்தி கரைக்கப்பட்ட அதே கரமனை ஆற்றில் எனது அஸ்தியின் ஒரு பகுதியை கரைத்துவிடு.  மீதியை வளம்மிக்க தமிழ்நாட்டின் வயல்களில் தூவிவிடு.  மேலும் நான் விட்டுச் செல்லும் பாரத சுதந்திரத்துக்கான பணிகளைத் தொடர்ந்து நீ செய்து நாடெங்கும் நமது சுதந்திரக் கொடி பறக்கும் என்னை நீ நினைத்துக்கொள்...

"ஜெய்ஹிந்த்" என்றே கோஷமிட்டு அந்தக் கோடியை வணங்கு!"  இவ்வாறு மூச்சுத் திணறியவாறே சொல்லி முடித்தவுடன் தனது பூதவுடலை விட்டு என்றும் அழியாத புகழுடம்பை எய்திய அந்த மாவீரனுக்கு அப்போது வயது 42. அவனது மனைவி  லட்சுமிபாய்க்கோ வயது 28.

பள்ளிப் பருவத்தில் தனது சக மாணவர்களையும், நண்பர்களையும் இணைத்து "ஸ்ரீ பாரத மாதா வாலிபர் சங்கம்" ஏற்ப்படுத்தி தனது தேச பக்தியை வளத்திக் கொண்டவன்.
திருவனந்தபுரம் பகுதிகளில் மிகுந்த வேதனையும்  கண்ணீருமாக நின்ற கிராமத்து அபலை  மக்களின் பொருட்களை ஆங்கிலேய அதிகாரிகள் வரிகள் என்ற பெயரில் ஜப்தி செய்ய இருந்த போது அம்மக்களிடையே வீர முழக்கமிட்டு வரிகொடா இயக்கத்தை நடத்தியவன். 
கல்லூரி காலங்களிலேயே தனது தாரக மந்திரமாக "ஜெயஹிந்த்" என்ற கோஷத்தை பிரபலமாக்கியவன்.

 17 ஆம் வயதினிலேயே 1908,  செப் 22ல் ஜெர்மனிக்கு புறப்பட்டு பாரத விடுதலைப் புரட்சிக்காக புதிய பாதையை ஐரோப்பிய நாடுகளில் திறந்து வைத்தவன்.
1912 ஜூன் மாதம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜீரிச் நகரிலேயே "சர்வதேச இந்திய ஆதரவு குழு"  அமைப்பை உருவாக்கி "Pro India" என்ற ஆங்கிலப் பத்திரிகையை வெளியிட்டும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கொடுமைகளை அம்பலப்படுத்தியவன்.

ஜெர்மனி  சக்கரவர்த்தி கெய்சருக்கே  ஆலோசனை கூறுபவராக தேசப் பற்றும்  புரட்சிகரமான துணிச்சலையும் பெற்றிருந்த புரட்சிவீரன்.

1914 , செப். 22 ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 9:30 மணிக்கு ஆங்கிலேயச் சென்னை நகரில் குண்டுகளை வீசி அந்நிய அரசை ஆட்டம் காண வைத்த "எம்டன் " நமது மாவீரன்.

1914, செப். 22  இரவு 3:00 மணி புதுவை துறைமுகம்;  பின்பு தெற்கு நோக்கி தூத்துக்குடி துறைமுகம்;  தென்மேற்கில் லட்சத்தீவு;  இறுதியில் திருவனந்தபுரம்,  கொச்சி கடற்க்கரை என "எம்டனில்" பயணித்த பாரத தேசத்து பெரும் வீரன்.

 ஒரு ரத்தின வியாபாரியைப் போல தலையில் பெரிய முண்டாசு தலைபாகை,  பேன்ட், கோட்டுடன் கள்ளிக்கோடு  மன்னர் யமரினை சந்தித்த சாகச வீரன்.
  1915 ,  டிச. 1 புதன்கிழமை,  ஆப்கானிஸ்தானில் தலைநகரான காபூலில் உருவான "இந்தியாவின் சுதந்திர சர்க்கார்" (Provisional Government of India) ஆட்சியில் வெளிநாட்டு அமைச்சராய் அங்கம் வகித்த ஆற்றல் மிகு அரும் வீரன்!
  "ஒடுக்கப் பட்ட மக்கள் சங்கம் " அமெரிக்காவிலும் அமைத்து,  நீக்ரோ மக்களின் உரிமைக்காக 1919 ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சனை வெள்ளை மாளிகையிலேயே வாதாடிய வெற்றி வீரன்.

அறிவு திறமை, துணிச்சல் கவரப்பட்ட பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் உள்ள இளம் பெண்களைப் புறக்கணித்து ,  பாரதப் " பெண்ணையே மணப்பேன்" என்ற உறுதியுடன் வீராங்கனை மேடம் காமாவின் வளர்ப்பு மகள் லட்சுமியை மணந்த பாரத மைந்தன்.
 நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் "இந்திய தேசிய ராணுவம்" (INA) அமைய வழிகாட்டியாகவும், முன்னோடியாகவும் அமைந்த "இந்திய தேசிய தொண்டரணியை "(I .N .V) உருவாக்கிய உலக நாயகன்.
ஜெர்மனி  சர்வாதிகாரியாக இருந்த உலகத்தையே நடுங்க வைத்த ஹிட்லரை, இந்தியாவைப் பற்றி கூறிய தவறான கருத்துக்காக வருத்தத்தையும் மன்னிப்பையும் ஜெர்மனிலேயே கேட்க வைத்த, காலத்தால் அழிக்க முடியாத காவிய நாயகன்.
 1934 ஆம் ஆண்டில் உயிர்நீத்த கணவரின் சபதத்தை - வேட்கையை - லட்சியங்களை. தான் செய்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக  32 ஆண்டுகள் தவம் புரிந்து நிறைவேற்றிய வீராங்கனையான லட்சுமிபாயை மனைவியாகப் பெற்ற மனிதருள் மாணிக்கம்.

யாரிந்த மாவீரன்? புரட்சி வீரன் ? சாகச வீரன்? வெற்றி வீரன்?
யார் அந்த சோதனைகளை சாதனையாக்கிய சரித்திர வீரன்?

அவன் தான் தமிழினமும்,  தமிழகமும் தலை நிமிரச் செய்த ஜெய்ஹிந்த்' செண்பக ராமன் பிள்ளை!

 அவரது நினைவு நாளில் (26-05-1934)  அவர்  செய்த யாகங்களை போற்றிடுவோம் ! ஆற்றல் மிகு இளையசமுதாயத்தை உருவாக்கிடுவோம்! 

ஜெய்ஹிந்த்! வந்தே மாதரம்! பாரத் மாதா கி ஜெய்!          

- ம.கொ.சி.ராஜேந்திரன்

காண்க:








18.5.11

வேதம் தமிழ் செய்த மாறன்


நம்மாழ்வார்

திருநட்சத்திரம்:
வைகாசி - 4 - விசாகம்
(மே 18)

திருமகளின் தலைவனாயும், கருணைக் கடலானவனுமான ஸ்ரீமன் நாராயணன் உலகினோர் உய்யும் பொருட்டு ஆழ்வார்களையும், ஆசார்ய புருஷர்களையும் திரு அவதாரம் செய்விக்கிறான். இத்தகைய பெரியோர்கள்தான் வைணவ சமயத்தின் அஸ்திவாரங்கள், ஆணிவேர்கள். எம்பெருமானின் கல்யாண குணங்களில் ஊறி ஆழ்ந்தவர்கள் என்பதால் இவர்கள் ஆழ்வார்கள் என அழைக்கப்படுகின்றனர். 

இத்தகைய பெருமைமிக்க ஆழ்வார்கள் தமிழ் நாட்டின் புண்ணிய நதி தீரங்களில் அவதரித்திருக்கிறார்கள். அவ்வகையில் வற்றாத வளம் கொழிக்கும் பாண்டிய நாட்டில் தாமிரபரணி நதி தீரத்தின்பால் உள்ள திருக்குருகூர் தலத்தில் அவதரித்தவர்தான் சுவாமி நம்மாழ்வார். 

இந்த அவதாரத் தலம் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்திலுள்ள ஆழ்வார் திருநகர்தான். (கி.பி.9ம் நூற்றாண்டின் முற்பகுதியில்). ஒரு பிரமாதி ஆண்டில் வைகாசித் திங்கள் பன்னிரண்டாம் நாள் வளர்பிறையில், பௌர்ணமி திதியில், வெள்ளிக்கிழமையன்று விசாக நட்சத்திரத்தில் சேனை முதலியார் எனப்படும் விஷ்வக்சேனரின் அம்சமாக அவதரித்தவர். 
 
நால்வேத சாரத்தை நற்றமிழ்ப் பாசுரங்களாக நல்கியருளிய நம்மாழ்வார், ஆழ்வார்களில் முதன்மையானவர். பிறந்தது முதல் இவர் பால் அருந்தவில்லை. அழவில்லை. வேறு உபாதைகளும் இல்லை. கண் திறந்து பார்க்கவும் இல்லை. இருப்பினும் உடல் மெலிந்து வாடவும் இல்லை.
உலக இயல்புக்கு மாறுபட்டும் இருந்தார். ஆக, இவருக்கு 'மாறன்' எனப் பெயரிட்டு குருகூர் ஆலயத்துப் புளியமரத்தில் தொட்டில் கட்டிவிட்டனர் பெற்றோர்கள் 

திருமாலின் ஆணைப்படி ஆதிசேஷனே மிகப் பெரிய பொந்துள்ள புளியமரமாக தோன்றினான் என்பர். இந்த புளிய மரத்தின் பொந்தில் சுமார் பதினாறு ஆண்டுகளுக்கு மேலாக தவத்தில் மூழ்கி இருந்தார். நம்மாழ்வார் என பிற்காலத்தில் அழைக்கப்பட்ட மாறனார் ஆழ்ந்த மோனத்தில் ஆழ்ந்திருந்த அவருக்கு திருமால் கருடசேவை காட்சிதந்து மறைந்தருளினார். 

அத்தரிசனத்தின் பயனாக திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்னும் நான்கு பிரபந்தங்களை இயற்றியருளினார். திருவிருத்தம் என்பது ரிக் வேதத்தின் சாரம் என்றும் திருவாசிரியம் என்பது யஜூர்வேதத்தின் சாரம் என்றும், பெரிய திருவந்தாதி அதர்வண வேதத்தின் சாரம் என்றும், திருவாய்மொழி சாம வேத சாரம் என்றும் பெரியோர்கள் கூறுவர். 

இவரது அமுதத் தமிழ்ப் பாசுரங்களில் ஆழ்ந்த அனைவருமே சமயம், இனம் போன்ற வேறுபாடுகள் இன்றி இவரை அன்புடன் "நம்மவர்' என்று உரிமை பாராட்டிப் போற்றியதால் இவர் "நம்மாழ்வார்'' என நானிலத்தில் அறியப்பட்டார். 

நம்மாழ்வாரின் பாசுரங்களை பட்டோலையாக எழுதியவர் மதுரகவியார் என்னும் ஆழ்வார். இவர் நம்மாழ்வாரின் சீடரானது ஒரு வியப்பூட்டும் சம்பவம்.

யாத்திரையில் இருந்த மதுரகவியார் வானில் காணப்பட்ட ஒரு ஒளியைத் தொடர்ந்து, ஓர் உந்துதலால், ஆழ்வார் திருநகரி வந்தடைந்து சுவாமி நம்மாழ்வாரைத் தரிசித்தார். புளியமரத்தில் மோன நிலையில் களைபொருந்திய ஒளிப் பிரபையுடன் விளங்கிய நம்மாழ்வாரை நோக்கி "செத்தத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?'' என மதுரகவியார் கேள்வி கேட்க, அதற்கு ஆழ்வார் ""அத்தைத் தின்று அங்கேயே கிடக்கும்'' என பதிலுரைத்தாராம்

 (இதன் பொருள்; உயிரற்றதாகிய பிரகிருதியினால் ஆகிய உடம்பில் அணுவடிவாய் உள்ள ஆன்மா வந்து புகுந்தால் எதனை அனுபவித்துக் கொண்டு எவ்விடத்தில் இன்பம் உண்டென்று எண்ணியிருக்கும்? பதில்: அந்த உடலின் தொடர்பினால் ஆகும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் இவ்வைந்தினால் வரும் இன்ப துன்பங்களை அனுபவித்துக் கொண்டு அவ்விடத்திலேயே இன்புற்றேன், இளைத்தேன் என்று சொல்லிக் கொண்டே கிடக்கும்).  

அப்பதிலைக் கேட்ட மதுரகவியார் நம்மாழ்வாரைக் கை கூப்பி வணங்கி அடியேனை ஆட்கொண்டு அருள வேண்டும் என வேண்ட நம்மாழ்வாரும் தம்முடைய பாசுரங்களை எழுதும் பணியை அருளினார். 

நம்மாழ்வாருடைய பாடல்களில் இறையுணர்வு, அன்பு, இன்பம், பொதுமையின் சிறப்பு, கவிதையின் எழில் முதலியன காணப்படும். பரமபதம் உட்பட இவரால் பாடல்பெற்ற திவ்ய தேச தலங்கள் 35 ஆகும். இதன் சிறப்பு என்னவென்றால் இவருடைய பாசுரங்களை வேண்டி அந்தந்த திவ்ய தேச எம்பெருமான்களே இவரைத் தேடி வந்து காட்சி கொடுத்து பாசுரங்களைப் பெற்றனர் என்பதே. நூல் இயற்றப்புகுவோர் முதலில் விநாயகருக்கு வணக்கம் கூறுதலைப் போன்று இவ்வாழ்வாருக்கு வணக்கம் கூறுதல் மரபாயிற்று 

வைணவ சம்பிரதாயத்தில் இவரை அவயவி எனவும், ஏனைய ஆழ்வார்களை இவருக்கு அவயங்கள் (உறுப்புகள்) என கூறும் வழக்கம் உண்டு. அவை முறையே (தலை-பூதத்தாழ்வார், இரண்டு கண்கள்- பொய்கை, பேயாழ்வார், முகம்}பெரியாழ்வார், கழுத்து- திருமழிசையாழ்வார், இரண்டு கைகள்- குலசேகராழ்வார், திருப்பாணாழ்வார், மார்பு}தொண்டரடிப் பொடியாழ்வார், தொப்புள்- திருமங்கையாழ்வார், பாதங்கள்- மதுரகவியாழ்வார்!

எம்பெருமான் திருவடிகளுக்கு மிகவும் அந்தரங்கராக நம்மாழ்வார் இருந்ததால் பெருமானது பாதுகையாக இவர் மதிக்கப்படுகிறார். ஆகவே எம்பெருமான் திருப்பாதுகை இவரது பெயரான ஸ்ரீசடகோபன் என்ற பெயரிலேயே வழங்கப்படுகிறது. இவ்வளவு சிறப்புடைய இந்த ஆழ்வார் இந்த மண்ணுலகில் முப்பத்திரண்டு ஆண்டுகளே உயிர் வாழ்ந்துள்ளார். 

வேதம் தமிழ் செய்த மாறன் என்று புகழப்படும் நம்மாழ்வார், தமிழுக்கு வைணவ பக்தி இலக்கியம் மூலமாக அளித்துள்ள கொடைகள் தமிழின் புத்திளமைக்கு என்றும் சான்றாக விளங்கும் 


காண்க: